கவிதைகள் அன்றாடம் நிகழ்கின்றன
சிலவற்றை மட்டும் கவனிக்கிறேன்.
பணி நிமித்தமாய் வெயிலில் நிற்கும்
பெண் போலிஸ்க்கு அவள் தந்தை
தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த
காட்சியும் அவர் முகத்தில் தோன்றிய
வருத்தம் கலந்த புன்னகையும்
நேர்த்திகளின் நாடகத்தனமின்றி
எவன் பார்த்தால் எனக்கென்ன என்று
கையை ஏனோ தானோவென வீசி நடந்து
செல்லும் பெண்கள் பேரழகு
முட்டிதெரிய நீ அணிந்த ஸ்கர்ட்டில்
எந்த கவர்ச்சியும் இல்லை.
காற்றடிக்கும் போது பறக்காமல்
இருக்க அழுத்திப் பிடிக்கிறாயே!
அதுதான் மனதை வெகுவாகக் கெடுக்கிறது
மழைவருகிறதா என்று பார்க்க
ஜன்னல் வழி கைநீட்டி பார்க்கிறாள்
ஒரு சிறுமி
தன்னைத்தான் கேட்கிறாள் என்று
அவள் விரல்களில் பொழியத்துவங்குகிறது மழை
புதிதாய் பாதி முளைத்த
முன்னிரண்டு பற்களோடு
சிரிக்கும் குழந்தை.
விழுந்த பற்களை தெரிவித்துப் பூரிக்க
அடிக்கடி சிரிக்கும் சிறுமி.
சமஅழகு
பாடல் கேட்டுக்கொண்டு
படம் பார்த்துக்கொண்டு
தூங்கிக்கொண்டு
தூரங்களை கடக்கிறார்கள்...
பயணம் என்பது வாகனத்திற்கு
வெளியே உள்ளது