FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on March 14, 2018, 10:24:41 AM

Title: ★மரணம் பழகும் கவிதை★
Post by: Guest on March 14, 2018, 10:24:41 AM
இம்முறை
என் வீட்டின் முன்னிருந்த
வசந்த மாளிகை காணாமல்
போயிருந்தது

தென்னைமரமேறும் போது
தடுமாறி விழுந்ததில்
சுகவீனப்பட்டு மரணித்து விட்டாராம்
குடும்பத்தை பிரிந்து குடிசையில்
வாழ்ந்த கூலிக்குடிமகன்

இம்முறை
என் வீட்டிற்கு கீழே
கடுமையான உழைப்பாளி
கட்டிலில் சுருண்டுக் கிடக்கிறான்

வெளுத்துப் போன நெஞ்சோடு
இடுப்பிற்கு கீழே உணர்வற்று
தன் சிவப்பணுக்களை தின்றுவிட்ட
புற்றுநோயோடு போராடிக் கொண்டு

இம்முறை
என் வீட்டு மதிலில்
தன் கூட்டிலிருந்து
தன் கூட்டத்தாரால் விரட்டப்பட்ட
கண்களை இழந்த காகமொன்று
தன்னந்தனியாய் தூங்கிக் கொண்டிருக்கிறது

ஒருவேளை
 
அது
தன் கடைசி தூக்கத்தை தான்
தூங்குகிறதோ என்றெண்ணியே
மீண்டும் மீண்டுமெழுந்து
அதன் இருப்பை உறுதி செய்தவாறே
வந்து கொண்டிருக்கும் கண்ணீரை
துடைத்துக் கொண்டிருக்கிறேன்

இம்முறை
எனதிந்த விடுமுறை
மரணதண்டனையாகிறது
Title: Re: ★மரணம் பழகும் கவிதை★
Post by: joker on March 14, 2018, 11:24:37 AM
நீங்கள் பார்த்து உணர்ந்தவைதாரை
எங்கள் கண்முன்னே  நிறுத்தியது உங்கள் கவிதை சகோ

நன்றி