Author Topic: தனிமை  (Read 716 times)

Offline MoGiNi

தனிமை
« on: February 12, 2020, 04:54:39 AM »
இரவுகள்
இன்னும்
உறக்கம் கொள்வதாயில்லை..

அந்தகாரத்தின் ...
தனிமைப் பொழுதுகளை
சுவைத்துச் சுவைத்து
இருதயச் சுவர்களின்
நா வறண்டு கிடக்கிறது ..

மனக்கிடங்கில்
மரணிக்கும் தருவாயில்
உன் நினைவுக் கருக்கள் ..
உயிர் கொடுக்க முனையும்
ஒவ்வொரு தருணங்களிலும்
சில உதாசீனங்கள்
சில கோபங்கள்
சிறு முகத்திருப்பல்கள்
கருக்கலைப்பு செய்து விடுகின்றன ..

உனக்காக
புன்னகைக்க முயலும்
உதடுகளிடம்
விலை கேட்கிறாய்
வார்த்தைகள்
வறண்டு கிடக்கிறது ..

என் கோபங்கள்
என் நேசங்கள்
என் தாபங்கள்
பரிச்சயமானவை
இருந்தும்
பழக்கமற்றவையாக
உன் பரீட்சார்த்தங்களுக்கு
உட்படுத்தப் படுகிறது ..

தனிமைக்கும்
எனக்குமான பந்தம்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை ..
அவை நிரந்தரமானவை
ஜீவித பந்தம் .
மீண்டும்
ஒரு பரீட்சார்த்த முடிவில்
எழுதிச் செல்கிறது
காதல் பொருத்தமில்லாதது

-இப்படிக்கு
தனிமை .