Author Topic: தாய்ப்பால்!!!  (Read 1997 times)

Offline Yousuf

தாய்ப்பால்!!!
« on: July 21, 2011, 12:56:23 PM »
குழந்தை பெற்றுக் கொண்டதும் பெரும்பாலான பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை.தங்கள் அழகு கெட்டுவிடும் என்றும், இன்னும் பிற காரணங்களாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தாயையும் குழந்தையையும் எவ்வாறு பாதுகாத்து மேம்படச் செய்கிறது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது:

தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கிறது. தண்ணீர் கொழுப்பு புரதம் சர்க்கரை தாதுப்பொருட்கள் ஆகியவை தாய்ப்பாலில் காணப்படுகிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கால்சியம் விட்டமின்கள் ஆகியவற்றை மார்பகச் சிற்றறைகள் பிரித்து பாலாக மாற்றுகின்றன. ஆகவே எல்லாவித சத்துக்களும் அடங்கிய பால் குழந்தையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. தாய்ப்பால் குடிக்கின்ற குழந்தை களுக்கு தனியாக வேறு எந்தவிதமான சத்துணவையும் தரவேண்டிய அவசியமே இல்லை. பச்சிளங்குழந்தைக்கு கட்டாயமாக தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது அவசியம்.

உடல்நலம் காக்கும் தாய்ப்பால்

தாய்ப் பாலில் அதிசயிக்கத்தக்க ஆற்றல் படைத்த இரசாயனப் பொருள் இருக்கிறது. அது பிறந்த குழந்தையின் செரிமான உறுப்புக்களை பாதுகாக்கவும் குறைகளைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது. இந்த தாதுப் பொருள் குழந்தை பிறந்தவுடன் சில நாட்களுக்குச் சுரக்கின்ற சீம்பாலில் மிக அதிக அளவில் இருக் கிறது. இது குழந்தையின் குடல் பகுதிகளை மற்ற அமிலச்சுரப்பினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் குழந்தை இனிமேல் சாப்பிடப்போகும் உணவுகளை ஏற்றுக் கொள்ளும் விதமாக பக்குவப்படுத்துகிறது. தாய்ப்பால் மற்ற உணவுகளைப் போல் அல்லாமல் முழுவதும் ஜீரணம் ஆகிவிடும்.

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு வலுப்படுகிறது.; மனஅமைதி மகிழ்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. கையில் எடுத்து மார்போடு அணைத்து பால் கொடுப்பதன் மூலமாக குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்ச்சி ஏற்பட்டு அது மனநிறைவோடு காணப்படுகிறது. குழந்தைகள் தாயின் மார்பில் சப்பி பாலைக் குடிப்பதால் அதன் கன்னம் மற்றும் தாடை எலும்புகள் வலுவடைகின்றன. அதிக கால்சியம் சத்து நிறைந்த தாயின் பால் பல் மற்றும் எலும்பு வளர்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் ஆகியவை அரிதாகவே ஏற்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் தொற்றுநோய்கள் எளிதில் ஏற்படுவதில்லை.

தாய்ப்பாலில் மட்டுமே பொலி அன்சேசுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பசும்பாலில் இல்லாத இந்த அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன.

தாய்க்கும் நன்மை உண்டு

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள் இருப்பதைப் போல தாய்க்கும் நன்மைகள் இருக்கின்றன. முதலாவது தாய் கருத்தரிப்பதை இயற்கையாக பெரும்பாலானவர்களுக்கு தள்ளி வைக்கிறது. மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் வருவதை தவிர்க்கமுடியும்.

கர்ப்பகாலங்களில் அதிகமாக சாப்பிட்ட தாயின் உடல் பருமனை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகிறது. கர்ப்பபையை சுருங்கச் செய்து மீண்டும் இயல்பான நிலைமைக்கு கொண்டு வருகிறது.


பசும்பாலைவிட தாய்ப்பால் பலவிதங்களில் சிறந்தது. இதைக் காய்ச்ச வேண்டிய தேவையில்லை. எப்போதும் பயன்படுத்தலாம். குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் சரியான விகிதத்தில் அமைந்திருக்கின்றன. புட்டிப்பாலுக்கு ஆகும் செலவைவிட ஒரு தாய் நல்ல சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட்டு அதன்மூலம் குழந்தைக்குப் பால் கொடுக்கின்றபோது ஆகும் செலவு குறைவானதுதான். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் மனவளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் மிகவும் நன்றாக இருக்கிறது. இவை அனைத்தையும் விட குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் பாசப்பிணைப்பு அதிகமாகிறது.

பால் கொடுத்துக் கொண்டே இருந்தால் தான் பால் அதிகமாக சுரக்கும். ஒவ்வொரு மாதமும் குழந்தையின் தேவைக்கேற்ப பாலில் சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உற்பத்தியாகின்றன.

தாய்ப்பால் அதிகமாக சுரக்க:

பால் கொடுக்கும் முன் தாய் ஓட்ஸ், பிரட்ஃரஸ்க் போன்ற உணவுகளை உட்கொண்டு விட்டு பால் கொடுக்க ஆரம்பித்தால் பால் அதிகமாக சுரக்கும். தாய்க்கும் போதிய சக்தி கிடைக்கும். குறைந்தபட்சம் தண்ணீர்; அருந்தி விட்டு கொடுக்க வேண்டும்.

இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லது… அப்படி முடியவில்லையானாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும்

வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.

மேலும் தாய் தினமும் பசும் பால் உட்கொண்டால் தாய்ப்பால் பற்றாக் குறையே இருக்காது.

அதிக புரத சத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா மற்றும் சிறிய மீன்களும் சாப்பிடலாம்.