Author Topic: ~ புறநானூறு ~  (Read 71394 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #45 on: February 16, 2013, 11:55:15 PM »
புறநானூறு, 46.(அருளும் பகையும்!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வஞ்சி.
துறை: துணை வஞ்சி.
========================================

நீயோ, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த

புன்தலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கண்நோ வுடையர்
கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே.

அருஞ்சொற்பொருள்:-

அல்லல் = துன்பம்
இடுக்கண் = துன்பம்
மருகன் = வழித்தோன்றல்
புலன் = அறிவு
புன்கண் = துன்பம்
அழூஉம் அழாஅல் = அழுகின்ற அழுகை
மன்று = மன்றம்
மருளல் = வெருளுதல், அஞ்சுதல்
புன்தலைச் சிறாஅர் = சிறிய தலையையுடைய சிறுவர்கள்
விருந்து = புதிது
வேட்டது = விரும்பியது
செய்ம்மே = செய்வாயாக

இதன் பொருள்:-

நீயோ=====> மறந்த

நீயோ, புறாவும் துன்பம் மட்டுமல்லாது மற்ற உயிர்களின் துன்பத்தையும் நீக்கிய சிபியின் வழித்தோன்றல். இவர்களோ, அறிஞர்களின் வறுமைக்கு அஞ்சித், தம்மிடத்து உள்ளவற்றைப் பகிர்ந்து உண்ணும் இரக்க குணமுள்ளவர்களின் மரபினர். யானைகளைக் கண்டு அழாமல், இளமையால் மகிழ்பவர்கள்தான்

புன்தலை=====> செய்ம்மே

இந்தச் சிறிய தலையையுடைய சிறுவர்கள். கூடியிருப்போரைப் புதியவராகக்கண்டு வருந்தும் புதியதோர் வருத்தமும் உடையவர். நான் சொல்வதைக் கேள், ஆனால், பின் உன் விருப்பப்படியே செய்க.

பாடலின் பின்னணி:-

கிள்ளிவளவன், தன் பகைவனாகிய மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலின் கீழே இட்டுக் கொலை செய்ய முயன்றான். அதைக் கண்ட கோவூர் கிழார், சிறுவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க விரும்பி இப்பாடலை இயற்றினார். “நீ, ஒருபுறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே அளித்த சிபியின் வழித்தோன்றல். இவர்கள் புலவர்களுக்குப் பெருமளவில் ஆதரவளித்த மலையமானின் சிறுவர்கள்; இவர்களைத் துன்புறுத்தாமல் விட்டுவிடு. நான் கூற விரும்பியதைக் கூறினேன். நீ உன் விருபபப்ப்டி செய்.” என்று கிள்ளிவளவனிடம் கோவூர் கிழார் முறையிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

மலையமானின் சிறுவர்களைக் கொலை செய்யவிருக்கும் கிள்ளிவளவனிடம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறி கோவூர் கிழார் அவனைச் சமாதானப் படுத்துவதால், இப்பாடல் துணை வஞ்சி என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று.

“புலன் உழுது உண்மார்” என்பது அறிவையே தம் தொழிலாகக் கொண்டவர்கள் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

”புல்” என்னும் சொல்லுக்குச், ”சிறுமை”, ”அற்பம்” என்று பொருள். இங்கு, “புன்தலைச் சிறாஅர்” என்பது அவர்கள் மிகவும் சிறியவர்கள் என்பதை வலியுறுத்துவதற்காகக் கூறப்பட்டுள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #46 on: February 16, 2013, 11:57:19 PM »


புறநானூறு, 47.(புலவரைக் காத்த புலவர்!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நெடுங்கிள்ளி.
திணை : வஞ்சி.
துறை: துணை வஞ்சி.
=======================================

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்தும் சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி

வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே, திறப்பட
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்குஇனிது ஒழுகின் அல்லது ஓங்குபுகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே

அருஞ்சொற்பொருள்:-

வள்ளியோர் = வரையாது கொடுப்போர்
படர்தல் = நினைத்தல்
புள் = பறவை
சுரம் = பாலைவழி
வடியா = தெளிவில்லாத
வடித்தல் = தெளித்தெடுத்தல்
அருத்தல் = உண்பித்தல்
ஓம்புதல் = பாதுகாத்தல்
கூம்பல் = ஊக்கங்குறைதல்
வீசுதல் = வரையாது கொடுத்தல்
வரிசை = சிறப்பு, மரியாதை, பாராட்டு
பரிசில் = கொடை, ஈகை
திறம் = திறமை (அறிவு)
திறப்படல் = கூறுபடல், தேறுதல், சீர்ப்படுதல்
நண்ணார் = பகைவர் (மாறுபட்ட கருத்துடைய மற்ற புலவர்கள்)
செம்மல் = தருக்கு (பெருமிதம்)

இதன் பொருள்:-

வள்ளியோர்=====> கூம்பாது வீசி

வரையாது கொடுக்கும் வள்ளல்களை நினைத்து, நெடிய வழி என்று எண்ணாமல், பாலைவழிகள் பலவற்றைக் கடந்து, பறவைகள் போல் சென்று, தமது தெளிவில்லாத நாவால் தம்மால் இயன்றதைப் பாடிப் பெற்ற பரிசிலைக் கண்டு மகிழ்ந்து, பிற்காலத்துக்கு வேண்டும் என்று எண்ணி, அவற்றைப் பாதுகவாமல் உண்டு, பிறர்க்கும் குறையாது கொடுத்துத் தம்மை ஆதரிப்பவர்கள் தமக்குச் செய்யும் சிறப்புக்காக வருந்துவதுதான் பரிசிலர் வாழ்க்கை.

வரிசைக்கு=====> உடைத்தே

இத்தகைய வாழ்க்கை வாழ்பவர்கள் பிறர்க்குத் தீமை செய்வதை அறிவார்களோ? அவர்கள் பிறர்க்குத் தீமை செய்யமாட்டர்கள். புலவர்கள், கல்வி கேள்விகளால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாணுமாறு செய்து அவர்களை வெற்றிகொண்டு தலை நிமிர்ந்து நடப்பவர்கள். அது மட்டுமல்லாமல், அவர்கள் உயர்ந்த புகழும் உலகாளும் செல்வமும் பெற்ற உன்னைப் போன்றவர்களைப்போல் பெருமிதம் உடையவர்கள்.

பாடலின் பின்னணி:-

சோழன் நலங்கிள்ளியிடமிருந்து இளந்தத்தன் என்னும் புலவன் உரையூருக்குச் சென்றான். உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த நெடுங்கிள்ளி, இளந்தத்தன் ஒருவொற்றன் என்று கருதி அவனைக் கொலை செய்ய முயன்றான். அதைக் கண்ட கோவூர் கிழார், இளந்ததத்தன் ஒற்றன் அல்லன் என்று நெடுங்கிள்ளிக்கு எடுத்துக் கூறி இளந்தத்தனைக் காப்பற்றினார். இப்பாடல் அச்சமயம் இயற்றப்பட்டது.

சிறப்புக் குறிப்பு:-

கோவூர் கிழார் இளந்தத்தனைக் காப்பாற்றுவதற்காக நெடுங்கிள்ளியைச் சமாதானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், இப்பாடல் துணை வஞ்சித்துறையைச் சார்ந்ததாயிற்று.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #47 on: February 16, 2013, 11:59:01 PM »


புறநானூறு, 48.("கண்டனம்" என நினை!)
பாடியவர் : பொய்கையார்.
பாடப்பட்டோன் : சேரமான் கோக்கோதை மார்பன்.
திணை : பாடாண்.
துறை: புலவர் ஆற்றுப்படை.
========================================

கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி;
அஃதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்;

அன்னோர் படர்தி ஆயின் நீயும்
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
அமர்மேம் படூஉங் காலை நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.

அருஞ்சொற்பொருள்:-

கோதை = சேரன், பூமாலை
மா = கரிய
கழி = உப்பங்கழி, கானல் (கடற்கரைச் சோலை)
கள் = மலர்த்தேன்
கானல் = கடற்கரைச் சோலை
படர்தல் = செல்லுதல்
முதுவாய் = முதிய வாய்மையுடைய
அமர் = போர்
மேம்படுதல் = உயர்தல்
மேம்படுநனை = மேம்படுத்துபவனை

இதன் பொருள்:-

கோதை=====> இறைவன்

சேரமான் மார்பில் விளங்கும் மாலையாலும், அந்த சேரமானை மணந்த மகளிர் சூடிய மாலைகளாலும், கரிய நிறமுடைய உப்பங்கழிகளில் மலர்ந்த நெய்தல் மலர்களாலும் தேன்மணம் கமழும் கடற்கரைச் சோலைகளை உடையது தொண்டி நகரம். அது என்னுடைய ஊர். அவ்வூரில் உள்ள சேரன் கோக்கோதை மார்பன் என் அரசன்

அன்னோர்=====> கண்டனம் எனவே

முதிய வாய்மையுடைய இரவலனே! அத்தன்மையுடைய தொண்டி நகரத்திற்கு நீ சென்றால், என்னை நினைவில் கொள்வாயா? ”நீ போரில் வெற்றி அடையும்பொழுது உன் புகழைப் பாராட்டிப் பாடுபவனைக் கண்டேன்” என்று சேரன் கோக்கோதை மார்பனிடம் கூறுவாயாக.

பாடலின் பின்னணி:-

சேரன் கோக்கோதை மார்பனைப் பாடிப் பரிசுபெற்ற புலவர் பொய்கையார், வேறொரு புலவரைச் சேரனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

தலைவனின் இயல்பையும் ஊரையும் கூறி, “ முதுவாய் இரவல எம்முள் உள்ளும்” என்று தன் தலைமை தோன்றுமாறு கூறியதால், இப்பாடல் புலவர் ஆற்றுப்படை என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #48 on: February 17, 2013, 12:00:37 AM »


புறநானூறு, 49.(யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?)
பாடியவர் : பொய்கையார்.
பாடப்பட்டோன் : சேரமான் கோக்கோதை மார்பன்.
திணை : பாடாண்.
துறை: புலவர் ஆற்றுப்படை. இயல்பைக் கூறுவதால் இயன் மொழி எனவும் பாடம்.
========================================

நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின் அயலது
இறங்குகதிர் அலமரு கழனியும்
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ஒருங்கு எழுமே!

அருஞ்சொற்பொருள்:-

நாடு = குறிஞ்சி நிலப்பகுதி
நாடன் = குறிஞ்சி நிலத் தலைவன்
ஊர் = மருத நிலப்பகுதி
ஊரன் = மருதநிலத் தலைவன்
பாடு = ஓசை
இமிழ் = ஆரவாரம்
சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்
ஓங்கு = மேம்பட்ட
ஓங்குதல் = பெருமையுறல்
கோதை = சேரன்
புனவர் = குறிஞ்சி நில மக்கள்
தட்டை = கிளி ஓட்டுங்கருவி
இறங்கு கதிர் = வளைந்த கதிர்
அலமருதல் = சுழல்
பிறங்குதல் = ஒலித்தல், மிகுதி
சேர்ப்பு = கடற்கரை.

இதன் பொருள்:-

தினைப்புனங்காப்போர் தட்டை என்னும் பறையை அடித்துத் ஒலி எழுப்பினால், அப்புனத்திற்கு அருகே, வளைந்த கதிர்களையுடைய வயல்களிலிலும், நீர் மிகுந்த கடற்கரையிலும் உள்ள பறவைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து எழுகின்றனவே. சேரன் கோக்கோதை மார்பனின் நாடு குறிஞ்சி நிலமுடையதால் அவனை நாடன் (குறிஞ்சி நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு மருத நிலமுடையதால் அவனை ஊரன் (மருத நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு ஒலிமிகுந்த குளிர்ந்த கடலை உடையதால் அவனைச் சேர்ப்பன் (நெய்தல் நிலத் தலைவன்) என்பேனா? உயர்ந்த வாளையுடைய கோதையை எப்படிக் கூறுவேன்?

பாடலின் பின்னணி:-

சேரன் கோக்கோதை மார்பனின் நாடு குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நிலவளங்களெல்லாம் அடங்கியது. ஆகவே, அவன் நாடு எத்தகையது என்று எளிதில் கூற முடியாது என்ற கருத்தில் கோதையின் நாட்டைப் புலவர் பொய்கையார் இப்பாடலில் புகழ்ந்து பாடியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

தினைப்புனங்கள் குறிஞ்சி நிலத்திலும், வயல்கள் மருத நிலத்திலும், கடல் சார்ந்த நிலம் நெய்தலிலும் உள்ளவை ஆகையால் கோக்கோதையின் நாடு குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய மூன்று நிலவளங்களும் உடையது என்று புலவர் பொய்கையார் கூறுவது இப்பாடலிலிருந்து தெரிகிறது. புனவர் தட்டை புடைத்தல் குறிஞ்சி நிலத்திலும் முல்லை நிலத்திலும் நிகழ்வதாகையால், நாடன் என்பது குறிஞ்சி மற்றும் முல்லை நிலத் தலைவனையும் குறிப்பதாகக் கொள்ளலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். ஆகவே, கோக்கோதையின் நாடு குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நானில வளமும் உடையது என்ற கருத்தில் புலவர் பொய்கையார் இப்பாடலில் குறிப்பிட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #49 on: February 17, 2013, 12:02:23 AM »


புறநானூறு, 50.(கவரி வீசிய காவலன்!)
பாடியவர் : மோசிகீரனார்.
பாடப்பட்டோன் : சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி.
=========================================

மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை உருகெழு முரசம்

மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்

அதனொடும் அமையாது அணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ
இவண்இசை உடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை

விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசில்நீ ஈங்குஇது செயலே

அருஞ்சொற்பொருள்:-

மாசு = குறை
விசித்தல் = இறுகக் கட்டுதல்
வார்பு = வார்
வள்பு = தோல்
மை = வயிரம்
மருங்குல் = நடுவிடம், பக்கம்
மஞ்ஞை = மயில்
ஒலித்தல் = தழைத்தல் (மிகுதல்)
பீலி = மயில் தோகை
மணி = நீலமணி
தார் = மாலை
பொலம் = பொன்
உழை = பூவிதழ்
உழிஞை = பொன்னிறமான ஒருவகைப் பூ
வேட்கை = விருப்பம்
உரு = அச்சம்
மண்ணுதல் = கழுவுதல்
அளவை = அளவு
சேக்கை = படுக்கை (தங்குமிடம்)
தெறு = சினம்
வாய் = வழி, மூலம்
சாலும் = சான்று
மதன் = வலிமை
முழவு = முரசம்
ஓச்சுதல் = ஓட்டுதல்
வியல் இடம் = அகன்ற இடம்
கமழ = பரக்க
மாறு = இயல்பு, தன்மை
வலம் = வெற்றி
குருசில் = குரிசில் = அரசன்

இதன் பொருள்:-

மாசற=====> முரசம்

குற்றமில்லாமல் வாரால் இறுக்கிக் கட்டப்பட்டு, வயிரங் கொண்ட கரிய மரத்தால் செய்யப்பட்டு, நடுவிடம் அழகாக விளங்குமாறு நெடிய மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு, நீலமணிகளும் பொன்னிறமான உழிஞைப் பூக்களும் அணிந்து, குருதிப்பலியை விரும்பும் அச்சம் தரும் முரசு, நீராட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

மண்ணி வாரா=====> அறிதல்

அவ்வேளையில், எண்ணெய் நுரையை முகந்து வைத்ததுபோல் இருந்த மெல்லிய மலர்க் கட்டிலை முரசுக்கட்டில் என்று அறியாது நான் ஏறிப் படுத்தேன். என் செயலுக்காக என்னைச் சினந்து, இரு கூறாக வெட்டக்கூடிய உன் கூரிய வாளால் வெட்டாமல் விடுத்தாய். நீ தமிழை நன்கு அறிந்தவன் என்பதற்கு அதுவே சான்று.

அதனொடும்=====> இது செயலே

அத்தோடு அமையாமல், என்னை அணுகி, உன்னுடைய வலிய, முரசு போன்ற தோளை வீசிச் சாமரத்தால் குளிர்ச்சி தரும் வகையில் விசிறியவனே! வெற்றி பொருந்திய தலைவ! பரந்த இவ்வுலகத்தில் புகழோடு வாழ்ந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு விண்ணுலகத்தில் வீடு பேறு இல்லை என்பதை நன்கு கேள்விப்பட்டிருந்ததால்தான் நீ இவ்விடத்து இச்செயலைச் செய்தாய் போலும்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், மோசி கீரனார் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றபோது களைப்பு மிகுதியால் அங்கிருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கினார். அக்காலத்தில், முரசுக் கட்டில் புனிதமானதாகக் கருதப்பட்டது. அந்தக் கட்டிலில் யாராவது படுத்தால் அவர்களுக்குக் கடுந்தண்டனை வழங்குவது வழக்கம். அவர்கள் கொலையும் செய்யப்படலாம். ஆனால், புலவர் மோசி கீரனார் முரசுக் கட்டிலில் உறங்குவதைக் கண்ட சேர மன்னன், அவரை உறக்கத்திலிருந்து எழுப்பாமல் அவருக்குக் கவரி வீசினான். மன்னனின் செயலால் மிகவும் வியப்படைந்த புலவர் மோசி கீரனார் அவனைப் பாராட்டும் வகையில் இப்பாடலை இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

சங்க காலத்தில், அரசர்கள் புலவர்களைப் பாராட்டி அவர்களுக்குப் பொன்னும் பொருளும் பரிசாக அளித்தது மட்டுமல்லாமல் அவர்களைப் பெரிதும் மதிப்பிற்குரியவராகக் கருதினர் என்பதற்கு இப்பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #50 on: February 17, 2013, 12:04:09 AM »


புறநானூறு, 51.(கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கற்றனரே)
பாடியவர் : ஐயூர் முடவனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=========================================

நீர்மிகின் சிறையும் இல்லை; தீமிகின்
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளிமிகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,
தண்தமிழ் பொதுஎனப் பொறாஅன் போர்எதிர்ந்து

கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்கஎனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;
அளியரோ அளியர்அவன் அளிஇழந் தோரே;
நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த
செம்புற்று ஈயல் போல
ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே

அருஞ்சொற்பொருள்:-

சிறை = தடை, கட்டுப்பாடு
வளி = காற்று
ஓர் அன்ன = ஒப்ப
கொண்டி = பிறர் பொருள் கொள்ளுதல் (திறை)
அளி = இரக்கம்
அளியர் = இரங்கத் தக்கவர்
அளி இழந்தோர் = இரக்கத்தை இழந்தோர்
சிதலை = கறையான்
உலமறல் = சுழற்சி

இதன் பொருள்:-

நீர்மிகின்=====> போர்எதிர்ந்து

நீர் மிகுந்தால் அதைத் தடுக்கக்கூடிய அரணும் இல்லை; தீ அதிகமானால், உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கக்கூடிய நிழலுமில்லை; காற்று மிகையானால் அதைத் தடுக்கும் வலிமை உடையது எதுவும் இல்லை; நீர், தீ மற்றும் காற்றைப் போல் வலிமைக்குப் புகழ் வாய்ந்த, சினத்தோடு போர் புரியும் வழுதி, தமிழ் நாடு மூவேந்தர்களுக்கும் பொது என்று கூறுவதைப் பொறுக்க மாட்டான். அவனை எதிர்த்தவர்களிடமிருந்து திறை வேண்டுவான்.

கொண்டி=====> உலமரு வோரே

அவன் வேண்டும் திறையைக் ”கொள்க” எனக் கொடுத்த மன்னர்கள் நடுக்கம் தீர்ந்தனர். அவன் அருளை இழந்தவர்கள், பல சிறிய கறையான்கள் கடினமாக உழைத்து உருவாக்கிய சிவந்த நிறமுடைய புற்றிலிருந்து புறப்பட்ட ஈயலைப்போல, ஒரு பகல் பொழுது வாழும் உயிர் வாழ்க்கைக்கு அலைவோராவர். ஆகவே, அவர்கள் மிகவும் இரங்கத் தக்கவர்கள்.

பாடலின் பின்னணி:-

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆட்சி புரிந்த காலத்தில், அவன் ஆணைக்குப் பணிந்து திறை செலுத்தி வாழாமல் அவனுடன் பகைமை கொண்டு போரிட்டவர்களின் வலிமையை அழித்து அவர்கள் நாட்டிலும் தன் ஆட்சியை நிலை நாட்டினான். அவன் வலிமையை இப்பாடலில் ஐயூர் முடவனார் பாராட்டுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #51 on: February 17, 2013, 12:05:44 AM »


புறநானூறு, 52.(ஊன் விரும்பிய புலி!)
பாடியவர் : மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
========================================

அணங்குஉடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்
ஊன்நசை உள்ளம் துரப்ப, இரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு
வடபுல மன்னர் வாட அடல்குறித்து

இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!
இதுநீ கண்ணியது ஆயின் இருநிலத்து
யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
வயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும்

பெருநல் யாணரின் ஒரீஇ இனியே
கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லின் நல்லகம் நிறையப் பல்பொறிக்

கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடை யோரே

அருஞ்சொற்பொருள்:-

அணங்கு = தெய்வத்தன்மை (அச்சம்)
அளை = குகை
முனைஇ = வெறுத்து
முணங்குதல் = சோம்பல் முறித்தல்
ஒருத்தல் = ஆண் புலி (விலங்கேற்றின் பொது)
துரப்புதல் = தேடுதல்
அடல் = கொல்லுதல்
கண்ணுதல் = கருதல்
அளியர் = இரங்கத் தக்கவர்
உழை = இடம், பக்கம்
மருது = மருத மரம்
வாங்கு = வளைந்த
சினை = கிளை
வலக்கும் = சூழும்
யாணர் = புது வருவாய்
ஒரீஇ = நீங்கி, விலகி
இனி = இப்போது, இனிமேல்
கலி = ஆரவாரம் (முழவு ஒலித்தல்)
கந்தம் = தூண்
பொதியில் = அம்பலம் (மன்றம், சபை)
நாய் = சூதாடு கருவி
வல் = சூதாடுங் காய்
வல்லின் நல்லகம் = சூதாடும் இடம்
வாரணம் = காட்டுக் கோழி
விளிதல் = அழிதல்

இதன் பொருள்:-

அணங்குஉடை=====> அடல்குறித்து

அச்சம் தரும் நெடிய சிகரங்களையுடைய மலையிலுள்ள குகையில் இருப்பதை வெறுத்து, சோம்பல் முறித்து எழுந்த வலிமை நிரம்பிய ஆண்புலி, இரையை விரும்பும் உள்ளத்தால் உந்தப்பட்டு, அது வேண்டிய இடத்தே விரும்பிச் சென்றது போல, வட நாட்டு வேந்தரைக் கொல்லுவதை எண்ணி,

இன்னா=====> வலக்கும்

கொடிய போரைச் செய்வதற்கேற்ப நன்கு செய்யப்பட்ட தேரையுடைய வழுதி! நீ கருதியது போர் எனின் உன்னை எதிர்த்து நிற்பவர்கள் அனைவரும் இரங்கத் தக்கவர்கள். முன்பு, உன் பகைவர்களின் நாடுகளில், ஊர்தோறும் மீன் சுடுகின்ற புகையினது புலால் நாற்றம், வயல்களின் அருகே உள்ள மருதமரத்தின் வளைந்த கிளைகளைச் சூழ்ந்து இருக்கும்.

பெருநல்=====> நாடுடை யோரே

அத்தகைய நீர் வளமும், நிலவளமும், புதுவருவாயும் உள்ள ஊர்கள், இப்பொழுது அந்த வளமனைத்தும் இழந்து காணப்படுகின்றன. மற்றும், அந்நாடுகளில் ஆரவாரமான ஒலியுடன் விளங்கிய வழிபாட்டு இடங்களின் தூண்களிலிருந்து தெய்வங்கள் விலகியதால் வழிபாட்டு இடங்கள் இப்பொழுது பாழடைந்த ஊர்ப்பொது இடங்களாயின. அந்தப் பொதுவிடங்களில், நரையுடன் கூடிய முதியவர்கள் சூதாடும் காய்களை உருட்டிச் சூதாடியதால் தோன்றிய குழிகளில், புள்ளிகள் உள்ள காட்டுக் கோழிகள் முட்டையிடுகின்றன. உன் பகைவர்களின் நாடுகள் இவ்வாறு காடகி அழியும்.

சிறப்புக் குறிப்பு:-

வழிபாடு நடைபெறும் இடங்களிலுள்ள தூண்களில் கடவுள் தங்கி இருப்பதாக நம்பிக்கை நிலவியது. உதாரணமாக, “கடவுள் போகிய கருந்தாட் கந்தம்” என்று அகநானூற்றுப் பாடல் 307-இல் கூறப்பட்டிருப்பதைக் காண்க.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #52 on: February 17, 2013, 12:07:18 AM »


புறநானூறு, 53.(செந்நாவும் சேரன் புகழும்!)
பாடியவர் : பொருந்தில் இளங்கீரனார்.
பாடப்பட்டோன் : சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=======================================

முதிர்வார் இப்பி முத்த வார்மணல்,
கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து
இலங்குவளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்குசீர் விளங்கில் விழுமம் கொன்ற
களங்கொள் யானைக் கடுமான் பொறைய!

விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற் றலநின் புகழே என்றும்;
ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே; தாழாது

செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுளன் ஆயின் நன்றுமன் என்றநின்
ஆடுகொள் வரிசைக்கு ஒப்பப்
பாடுவன் மன்னால் பகைவரைக் கடப்பே

அருஞ்சொற்பொருள்:-

வார் = நெடுமையாதல், ஒழுங்கு படுதல்
இப்பி = சிப்பி
பொருதல் = தாக்குதல் (கவருதல்)
இலங்குதல் = விளங்கல்
தெற்றி = திண்ணை
விளங்கில் = ஒரு ஊர்
விழுமம் = இடும்பை ( பகைவரால் வந்த இடும்பை)
மம்மர் = மயக்கம்
ஒருதலை = உறுதி
கைமுற்றுதல் = முடிவு பெறுதல்
தாழாது = விரைந்து
வெறுத்த = மிகுந்த
மன் – கழிவின் கண் வந்த அசைச் சொல்
ஆடு = வெற்றி
வரிசை = சிறப்பு
மன், ஆல் – அசைச் சொற்கள்
கடப்பு = கடத்தல் = வெல்லுதல்

இதன் பொருள்:-

முதிர்வார்=====> பொறைய

முதிர்ந்து நீண்ட சிப்பியில் உள்ள முத்துப் போல் பரவிக் கிடந்த மணலில் ஒளிவிடும் மணிகளால் கண்ணைப் பறிக்கின்ற மாடங்களில், விளங்கும் வளையல்களை அணிந்த மகளிர், திண்ணைகளில் விளையாடும் விளங்கில் என்னும் ஊர்க்குப் பகைவரால் வந்த துன்பங்களைத் தீர்ப்பதற்காகப் போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட யானைப்படையையும் விரைந்து செல்லும் குதிரைப்படையையும் உடைய பொறைய!

விரிப்பின்=====> தாழாது

உன் புகழை விரித்துக் கூறினால் அது நீளும்; சுருக்கமாகத் தொகுத்துக் கூறினால் பல செய்திகள் விடுபட்டுப் போகும். ஆதலால், மயக்கமுறும் நெஞ்சத்தையுடைய எம் போன்றவர்களால் உன் புகழை உறுதியாகக் கூற முடியாது. அதனால், கல்வி கேள்விகளில் சிறந்த பெரியோர்கள் பிறந்த இப்பெரிய உலகத்து வாழ்க்கையை வெறுத்து வாழ மாட்டோம் என்று கூறுவதும் இயலாத செயல். ”விரைவாகப்

செறுத்த=====> கடப்பே

பல பொருள்களையும் அடக்கிய சிறந்த செய்யுட்களை இயற்றும் மிகுந்த கேள்வி அறிவுடைய , புகழ் மிக்க கபிலர் இன்று இருந்தால் நன்றாக இருக்கும்” என்று நீ கூறினாய். உன் வெற்றிச் சிறப்புக்குப் பொருந்தும் முறையில் என்னால் முடிந்தவரை உன் வெற்றியைப் புகழ்ந்து பாடுவேன்.

பாடலின் பின்னணி:-

இச்சேர மன்னனின் நாட்டில் இருந்த விளங்கில் என்னும் ஊரைப் பகைவர்கள் முற்றுகையிட்டு, அங்கிருந்த மக்களைத் துன்புறுத்தினர். இவன் யானைப்படையையும் குதிரைப்படையையும் கொண்டு சென்று பகவர்களை வென்று அவ்வூரில் இருந்த மக்களைக் காப்பாற்றினான். தன் வெற்றியைப் புகழந்து பாடப், பெரும் புலவர் கபிலர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மாந்தரஞ்சேரல் இரும்பொறை கூறினான். அதைக் கேட்ட புலவர் பொருந்தில் இளங்கீரனார், தான் தம்மால் இயன்ற அளவில் அவனைப் புகழ்ந்து பாடுவதாகக் கூறி இப்பாடலை இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

“தெற்றி” என்ற சொல்லுக்குப் பெண்கள் கைகோத்து ஆடும் குரவை ஆட்டம் என்றும் பொருள் கொள்ளலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #53 on: February 17, 2013, 12:08:40 AM »


புறநானூறு, 54.(எளிதும் கடிதும்!)
பாடியவர் : கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சேரமான் குட்டுவன் கோதை.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=========================================

எங்கோன் இருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல இடையின்று குறுகிச்
செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்
எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
இரவலர்க்கு எண்மை அல்லது; புரவுஎதிர்ந்து

வானம் நாண வரையாது சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி

மாசுண் உடுக்கை மடிவாய் இடையன்
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே
வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே

அருஞ்சொற்பொருள்:-

கம்பலை = ஆரவாரம்
இடை = காலம் (சமயம்)
நாளவை = அரசன் வீற்றிருக்கும் அவை (அரசவை)
எண்மை = எளிமை
புரவு = கொடை, பாதுகாப்பு
எதிர்ந்து = ஏற்றுக்கொண்டு
ஆனாது = குறையாது
கடு = விரைவு
மான் = குதிரை
துப்பு = வலிமை
பாசிலை = பச்சிலை
உவலை = தழை
கண்ணி = மாலை
மடிவாய் = சீழ்க்கை ஒலி செய்வதற்கு மடக்கிய வாய்.
ஆயம் = ஆடுகளின் கூட்டம்
துஞ்சுதல் = தங்குதல்

இதன் பொருள்:-

எங்கோன்=====> புரவுஎதிர்ந்து

எமது அரசன் இருந்த ஆரவாரமான பழைய ஊரில், அவ்வூருக்கு உரியவர்கள் போல, காலம் பாராது நெருங்கி, அரசன் வீற்றிருக்கும் அரசவைக்குள் தலைநிமிர்ந்து செல்லுதல் எம் போன்ற இரவலர்க்கு எளிது. அது இரவலர்க்குத்தான் எளிதே அல்லாமல், அவனுடைய பகைவர்களுக்கு எளிதல்ல. கோதை தன் நாட்டின் பாதுகாவலை ஏற்றுக் கொண்டு,

வானம்=====> கண்ணி

மழை பொழியும் வானம் நாணும் வகையில் தன்னிடம் வந்தோர்க்குக் குறைவில்லாது கொடுக்கும் கவிந்த கைகளையுடைய வள்ளல். வலிமை மிகுந்த பெரிய கைகளையுடைய அவன் வலிமையை எதிர்த்து, அவன் நாட்டுக்குள் வந்த வஞ்சின வேந்தரை எண்ணும் பொழுது, அவர்களின் நிலை, பசிய இலைகளால் தொடுக்கப்பட்ட மாலையையும்

மாசுண்=====> நாடே

அழுக்குப் படிந்த உடையையும், சீழ்க்கை அடிக்கும் வாயையும் உடைய இடையன் ஒருவன் சிறிய ஆட்டுக்குட்டிகளுடன், நெருங்க முடியாத ஒருபுலி இருக்கும் பெரிய அகன்ற இடத்துக்குள் நுழைவதைப் போன்றது.

சிறப்புக் குறிப்பு:-

குட்டுவன் கோதையின் கொடைச் சிறப்பையும், ஆட்சிச் சிறப்பையும், அவன் காட்சிக்கு எளியவனாக இருந்ததையும் இப்பாடலில் புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் புகழ்ந்து பாடுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #54 on: March 11, 2013, 06:31:59 PM »


புறநானூறு, 55.(அறநெறி முதற்றே அரசின் கொற்றம்)
பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை : பாடாண்.
துறை: செவியறிவுறூஉ.
======================================

ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல

வேந்து மேம்பட்ட பூந்தார் மாற,
கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்என
நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;

அதனால், நமரெனக் கோல்கோ டாது,
பிறர்எனக் குணங் கொல்லாது,
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும் மூன்றும்

உடையை ஆகி இல்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்
கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!

அருஞ்சொற்பொருள்:-

ஓங்கு = உயர்ந்த
ஞாண் = கயிறு
கொளீஇ = கொண்டு
கணை = அம்பு
எயில் = ஊர், புரம், மதில், அரண்
உடற்றுதல் = அழித்தல்
விறல் = வலிமை
அமரர் = தேவர்
மிடறு = கழுத்து
அண்ணல் = தலைவன், பெரியவன்
காமர் = அழகு
சென்னி = தலை, முடி
மாறன் = பாண்டியன்
கதழ்தல் = விரைதல்
பரிதல் = ஓடுதல்
கலி = செருக்கு
மா = குதிரை
நிமிர் = உயர்ந்த
நெஞ்சு = துணிவு
புகல் = விருப்பம் (போரை விரும்பும்)
மாண்டது = மாண்புடையது
கொற்றம் = அரசியல் (ஆட்சி)
நமர் = நம்முடையவர்
திறல் = வெற்றி, வலிமை
சாயல் = மென்மை
வண்மை = ஈகை
கையறுதல் = இல்லாமற் போதல்
நெடுந்தகை = பெரியோன்
தாழ்நீர் = ஆழமான நீர்
புணரி = அலைகடல்
கடு = விரைவு
வடு = கருமணல்
எக்கர் = மணற்குன்று

இதன் பொருள்:-

ஓங்குமலை=====> ஒருகண் போல

உயர்ந்த மலையைப் பெரிய வில்லாகவும் பாம்பை நாணாகவும் கொண்டு, ஒரே அம்பில் முப்புரங்களையும் (மூன்று அசுரர்களின் பறக்கும் கோட்டைகளையும்) அழித்து, பெரிய வலிமையுடைய தேவர்களுக்கு வெற்றியைக் கொடுத்த, கரிய நிறமுடைய கழுத்தையுடைய சிவபெருமானின் அழகிய திருமுடியின் பக்கத்தில் உள்ள பிறையணிந்த நெற்றியில் உள்ள கண்போல்

வேந்து=====> கொற்றம்

மூவேந்தர்களிலும் மேம்பட்ட மாலையணிந்த நன்மாறனே! கடிய சினத்தையுடைய கொல்லும் யானைப்படை, விரைந்து செல்லும் செருக்குடைய குதிரைப்படை, உயர்ந்த கொடிகளுடைய தேர்ப்படை, நெஞ்சில் வலிமையுடன் போரை விரும்பும் காலாட்படை ஆகிய நான்கு படைகளும் உன்னிடம் சிறப்பாக இருந்தாலும், பெருமைமிக்க அறநெறிதான் உன் ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படையாகும்.

அதனால்=====> மூன்றும்

அதனால், இவர் நம்மவர் என்று நடுவுநிலைமையிலிருந்து தவறாமல், இவர் நமக்கு அயலார் என்று அவர் நற்குணங்களை ஒதுக்கித் தள்ளாமல், கதிரவனைப் போன்ற வீரம், திங்களைப் போன்ற குளிர்ந்த மென்மை, மழையைப் போன்ற வண்மை ஆகிய மூன்றையும்

உடையை=====> பலவே

உடையவனாகி, இல்லை என்பார் இல்லை என்னும்படி நீ நெடுங்காலம் வாழ்க! பெருந்தகையே! ஆழமான நீரையுடைய கடலின் மேல் உள்ள வெண்ணிற அலைகள் மோதும் திருச்செந்தூரில் முருகக் கடவுள் நிலை பெற்றிருக்கும் அழகிய அகன்ற துறையில் பெருங்காற்றால் திரட்டப்பட்ட கருமணலினும், நீ பலகாலம் வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு:-

புலவர் மதுரை மருதன் இளநாகனார் பாண்டிய மன்னனுக்கு “நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” என்றும் ஆண்மையும், மென்மையும், வண்மையும் உடையவனாக அவன் இருத்தல் வேண்டும் என்றும் அறிவுரை கூறுவதால் இப்பாடல் செவியறிவுறூஉத் துறையைச் சார்ந்ததாயிற்று.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #55 on: March 11, 2013, 06:33:42 PM »


புறநானூறு, 56.(கடவுளரும் காவலனும்!)
பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை : பாடாண்.
துறை: பூவை நிலை. மனிதரைத் தேவரோடு ஒப்பிட்டுக் கூறுதல் பூவை நிலை எனப்படும்.
========================================

ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்,
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி

விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என
ஞாலம் காக்கும் கால முன்பின்
தோலா நல்இசை நால்வர் உள்ளும்

கூற்றுஒத் தீயே மாற்றருஞ் சீற்றம்;
வலிஒத் தீயே வாலி யோனைப்;
புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநனை;
முருகுஒத் தீயே முன்னியது முடித்தலின்;
ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்

அரியவும் உளவோ நினக்கே? அதனால்
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து

ஆங்கினிது ஒழுகுமதி, ஓங்குவாள் மாற!
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇயர் உலகமோடு உடனே

அருஞ்சொற்பொருள்:-

ஏறு = காளைமாடு
வலன் = வெற்றி
எரி = ஒளி,நெருப்பு
மருள் - உவமை உருபு
அவிர் = ஒளி
மாற்று = எதிர்
கணிச்சி = சிவனுடைய ஆயுதம்
மணி = நீலமணி
மிடறு = கழுத்து
புரி = முறுக்கு
வளை = சங்கு
புரைதல் = ஒத்தல்
அடல் = கொல்லுதல்
அடல் = கொல்லுதல்
நாஞ்சில் = கலப்பை
மண்ணுதல் = கழுவுதல்
விறல் = வெற்றி
வெய்யோன் = விருப்பம் உடையவன்
மணி = நீலமணி
மாறா = மாறாத
பிணிமுகம் = மயில்
முன்பு = வலிமை
தோலா = தோல்வி காணாத
கூற்று = எமன் (இங்கு சிவனைக் குறிக்கிறது)
வாலி = வெண்ணிறமுடையோன் (பலராமன்)
இகழுநர் = பகைவர்
முன்னுதல் = நினைத்தல்
அருகுதல் = குறைதல்
மடுத்தல் = உண்ணுதல் (ஊட்டுதல்)
குடதிசை = மேற்குத் திசை
நிலைஇயர் = நிலைபெறுவாயாக.

இதன் பொருள்:-

ஏற்றுவலன்=====> புரையும் மேனி

காளைக்கொடியை வெற்றியின் அடையாளமாக உயர்த்திப் பிடித்து, நெருப்புப் போல் ஒளிவிடும் சடையோடும், ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுதத்தோடும், நீலநிறக் கழுத்தோடும் காட்சி அளிப்பவன் சிவபெருமான். கடலில் வளரும் முறுக்கிய சங்கு போன்ற வெண்ணிற மேனியும், கொல்லுதலை விரும்பும் கலப்பையும், பனைக்கொடியும் உடையவன் பலராமன். கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற உடலும்

விண்ணுயர்=====> நால்வர் உள்ளும்

வானளாவ உயர்ந்த கருடக் கொடியும் கொண்டு வெற்றியை விரும்புபவன் திருமால். நீலமணி போன்ற நிறத்தையுடைய மயிற்கொடியும், உறுதியான வெற்றியும், மயிலை ஊர்தியாகவும் (வாகனமாகவும்) கொண்ட ஓளிபொருந்தியவன் முருகன். இந்நான்கு கடவுளரும் உலகம் காக்கும் வலிமையும் அழியாத புகழும் உடையவர்கள்

கூற்றுஒத் தீயே=====> ஒத்தலின் யாங்கும்

இந்த நால்வருள்ளும், உன்னுடைய நீங்காத சினத்தால் நீ அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு ஒப்பானவன்; வலிமையில் பலராமனுக்கு ஒப்பானவன்; புகழில் பகைவரைக் கொல்லும் திருமாலுக்கு ஒப்பானவன்; நினைப்பதை முடிப்பதில் முருகனுக்கு ஒப்பானவன். இவ்வாறு ஆங்காங்கு அந்த அந்தக் கடவுளை ஒத்தவனாக இருப்பதால்

அரியவும்=====> மகிழ்சிறந்து

உன்னால் செய்ய முடியாத செயலும் உண்டோ? அதனால், இரப்போர்க்கு அரிய அணிகலன்களை வழங்கி, யவனர் நல்ல கலங்களில் கொண்டுவந்த, குளிர்ந்த மணமுள்ள மதுவைப் பொன்னால் செய்யப்பட்ட அழகிய கிண்ணங்களில் ஏந்தி வந்து, ஓளிபொருந்திய வளையல் அணிந்த மகளிர் உனக்கு நாள்தோறும் கொடுக்க, அதைக் குடித்து, மகிழ்ச்சியோடு

ஆங்கினிது=====> உலகமோடு உடனே

சிறப்பாக இனிது வாழ்வாயாக. ஓங்கிய வாளையுடைய பாண்டியன் நன்மாறனே! அழகிய ஆகாயத்தில் நிறைந்த இருளை அகற்றும் கதிரவனைப் போலவும் மேற்குத் திசையில் தோன்றும் குளிர்ந்த கதிர்களையுடைய திங்களைப் போலவும் இவ்வுலகத்தோடு நின்று நிலைபெற்று நீ வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், பாண்டியனை சிவன், பலராமன், திருமால் மற்றும் முருகன் ஆகிய கடவுளர்க்கு ஒப்பிடுவதால், இப்பாடல் பூவை நிலையைச் சார்ந்ததாயிற்று.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #56 on: March 11, 2013, 06:35:08 PM »


புறநானூறு, 57.(காவன்மரமும் கட்டுத்தறியும்!)
பாடியவர் : காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை : வஞ்சி.
துறை: துணை வஞ்சி.
=========================================

வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையேன்; என்னெனின்
நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை அவர்நாட்டு

இறங்குகதிர் கழனிநின் இளையரும் கவர்க;
நனந்தலைப் பேரூர் எரியும் நக்க;
மின்னுநிமிர்ந் தன்னநின் ஒளிறுஇலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்புநின்
நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே.

அருஞ்சொற்பொருள்:-

வல்லார் = திறமையற்றவர்
வல்லுநர் = திறமையுள்ளவர்
உரை = சொல்
சாலல் = மிகுதியாதல், மேன்மையுடைத்தாதல்
இறங்குதல் = வளைதல்
கழனி = மருதநிலம் (வயல்)
இளையர் = வேலைக்காரர், வீரர்
கவர்தல் = எடுத்தல் (கொள்ளையடித்தல்)
நனம் = அகற்சி
நக்க = சுடுக
இலங்கல் = விளங்குதல்
ஒன்னார் = பகைவர்
செகுத்தல் = அழித்தல்
என்னதூஉம் = சிறிதும்
கடிமரம் = பகைவர் அணுகாவண்ணம் வளர்த்துக் காக்கப்படும் காவல் மரம்
தடிதல் = வெட்டல்
ஓம்புதல் = தவிர்தல்
கந்து = யானை கட்டும் தறி
ஆற்றுதல் = கூடியதாதல்

இதன் பொருள்:-

வல்லார்=====> அவர்நாட்டு

திறமையற்றவர்களாக இருந்தாலும் திறமையுடையவர்களாக இருந்தாலும், உன்னைப் புகழ்வோர்க்கு அருள் புரிவதில் நீ திருமாலைப் போன்றவன். சொல்லுதற்கரிய புகழ் பொருந்திய மாறனே! நான் உன்னிடம் ஒன்று கூறுவேன். அது என்னவென்றால், நீ பிறர் நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் பொழுது,

இறங்குகதிர்=====> கந்தாற் றாவே

அவர்களின் நாட்டில், வளைந்த கதிர்களையுடய வயல்களை உன்னுடய வீரர்களும் கொள்ளை கொள்ளட்டும்; அகன்ற பெரிய இடங்கள் உள்ள பெரிய ஊர்களைத் தீயால் வேண்டுமானால் எரிப்பாயாக; மின்னலைப் போல் ஒளியுடன் விளங்கும் உன்னுடைய நெடிய வேல், பகைவர்களை அழித்தாலும் அழிக்கட்டும்; அவர்களுடைய காவல் மரங்களை வெட்டுவதை மட்டும் தவிர்ப்பாயாக. ஏனெனில், உன் நெடிய யானைகளுக்கு அம்மரங்கள் கட்டுத் தறியாகும் தகுதி அற்றவை.

சிறப்புக் குறிப்பு:-

காவல் மரங்களை வெட்டினால் போர் முடிவுபெறும். ஆகவே, காவல் மரங்களை வெட்டாமல் இருந்தால், பகைவர்கள் பணிந்து திறை கட்டுவதற்கு உடன்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால், புலவர், காவல்மரங்களை வெட்டுவதைத் தவிர்த்துப் பகைவர்களுடன் சமாதானமாகப் போவதற்கு வழிவகுக்குமாறு இப்பாடலில் பாண்டியனுக்கு அறிவுரை கூறுகிறார். இப்பாடலில், புலவர் சமாதானத்துக்கு வழிகாட்டுவதால், இப்பாடல் துணைவஞ்சி என்னும் துறையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #57 on: March 11, 2013, 06:36:58 PM »


புறநானூறு, 58.(புலியும் கயலும்!)
பாடியவர் : காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும்.
திணை : பாடாண்.
துறை: உடன் நிலை. ஒருங்கே இருக்கும் இருவரைப் பாடுவது உடன் நிலை எனப்படும்.
========================================

நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவனே
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ

இளையது ஆயினும் கிளைஅரா எறியும்
அருநரை உருமின் பெருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே
அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென

வரைய சாந்தமும் திரைய முத்தமும்
இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே!
பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமி யோனும்என்று

இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின்நும் இசைவா ழியவே;
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்

உடனிலை திரியீர் ஆயின் இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
அதனால், நல்ல போலவும் நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறியர் போலவும்

காதல் நெஞ்சின்நும் இடைபுகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்கநும் புணர்ச்சி; வென்றுவென்று
அடுகளத்து உயர்கநும் வேலே; கொடுவரிக்
கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி

நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆகபிறர் குன்றுகெழு நாடே

அருஞ்சொற்பொருள்:-

கிழவன் = உரியவன்
முழுமுதல் = அடிமரம்
கோளி = பூவாது காய்க்கும் மரம்
கொழு நிழல் = குளிர்ந்த நிழல்
சினை = கிளை
வீழ் = மரவிழுது
தொல்லோர் = முன்னோர்
துளங்கல் = கலங்கல்
முதுகுடி = பழங்குடி
நடுக்கு = நடுக்கம் = அச்சம்
தழீஇ = உள்ளடக்கிக் கொண்டு
அரா = பாம்பு
கிளை = மந்தை
அரு = பொறுத்தற்கரிய
உரும் = இடி
நரை = வெண்மை
செரு = போர்
பஞ்சவன் = பாண்டியன்
துஞ்சுதல் = தங்குதல்
உறைந்தை = உறையூர்
பொருநன் = அரசன்
வரை = மலை
சாந்தம் = சந்தனம்
திரை = கடல் அலை
இமிழல் = ஒலித்தல்
குரல் = ஒலி ஓசை
நேமி = கடல்
நேமியோன் = திருமால்
உரு = அச்சம், நடுக்கம்
உட்கு = அச்சம்
இந்நீர் = இத்தன்மை
இசை = புகழ்
ஆற்றுதல் = உதவுதல்
திரிதல் = மாறுதல்
பௌவம் = கடல்
நயத்தல் = அன்புசெய்தல், நட்பு கொள்ளுதல்
அலமரல் = வருந்தல்
கொடு = வளைவு
கோள் = வலி
மா = புலி
குயிற்றல் = பதித்தல்
தொடு = தோண்டப்பட்ட
பொறி = அடையாளம்
கொடுவரி = புலி
கெண்டை = கயல்
குடுமி = சிகரம், உச்சி

இதன் பொருள்:-

நீயே=====> தழீஇ

நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவனோ, பருத்த அடியுள்ள ஆலமரத்தின் அடிமரம் வெட்டப்பட்டு அழிந்தாலும், அதன் நெடிய நிழல் தரும் கிளைகளை விழுதுகள் தாங்குவதைப்போல், முன்னோர்கள் இறந்தாலும், தான் தளராது, நல்ல புகழுள்ள தன் பழங்குடியைத் தடுமாற்றமில்லாமல் காத்துத்,

இளையது=====> எளியவென

தான் சிறிதே ஆயினும் பாம்பைக் கூட்டத்தோடு அழிக்கும் வெண்ணிற இடிபோல் பகவரைக் காணப் பொறாமல் போரில் சிறந்த பாண்டியர்களில் சிங்கம் போன்றவன். நீயோ, அறம் நிலைபெற்ற உறையூரின் தலைவன். இவனோ நெல்லும் நீரும் அனைவருக்கும் எளிதில் கிடைப்பவை என்று கருதி

வரைய=====> நேமி யோனும்என்று

யாவர்க்கும் பெறுதற்கரிய மலையில் விளையும் சந்தனம், கடலில் விளையும் முத்து, முழங்கும் மும்முரசுகள் ஆகியவற்றுடன் தமிழ் பொருந்திய மதுரையில் செங்கோல் செலுத்தும் வேந்தன். பால போன்ற வெண்ணிற மேனியும் பனைக்கொடியும் உடைய பலராமனும் நீல நிற மேனியையுடைய திருமாலும் ஆகிய

இருபெருந் தெய்வமும்=====> இருவீரும்

இரண்டு கடவுளரும் ஒருங்கே கூடி இருந்தாற் போல் அச்சம் பொருந்திய காட்சியொடு நீங்கள் இருவரும் விளங்குவதைவிட இனிய காட்சியும் உண்டோ? உங்கள் புகழ் நெடுங்காலம் வாழ்வதாக! மேலும் கேட்பீராக!நீங்கள் ஒருவர்க்கு ஒருவர் உதவுவீர் ஆகுக. நீங்கள் இருவரும்

உடனிலை=====> நெறியர் போலவும்

கூடியிருக்கும் இந்நிலை மாறாதிருப்பின் கடல் சூழ்ந்த, பயனுள்ள இவ்வுலகம் உங்கள் கைவசமாவது உறுதி; ஆதலால், நல்லவர்களாகவும், நடுவுநிலைமை தவறாதவர்களாகவும், உங்கள் முன்னோர்கள் சென்ற நெறியைப் பின்பற்றி,

காதல்=====> குன்றுகெழு நாடே

அன்போடு இருந்து, உங்களைப் பிரிக்கத் தவிக்கும் பகைவர்களின் சொற்களைக் கேளாமல், இன்று போலவே என்றும் சேர்ந்திருங்கள். போர்க்களத்தில் மேலும் மேலும் வெற்றிகளைப் பெற்று உங்கள் வேல் உயர்வதாகுக; பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #58 on: March 17, 2013, 06:44:09 PM »


புறநானூறு, 59.(பாவலரும் பகைவரும்!)
பாடியவர் : பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.
திணை : பாடாண்.
துறை: பூவை நிலை.
========================================

ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி!
வல்லை மன்ற நீநயந் தளித்தல்!
தேற்றாய் பெரும! பொய்யே; என்றும்
காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்;
திங்கள் அனையை எம்ம னோர்க்கே.

அருஞ்சொற்பொருள்:-

ஆரம் = மாலை
அணி = அழகு
கிளர்தல் = மிகுதல்
தகை = தகுதி
வல்லை = வலிமை உடையவன்
மன்ற = நிச்சயமாக, தெளிவாக
நயந்து அளித்தல் = அருள் செய்தல்
தேற்றல் = அறிவித்தல் (சொல்லுதல்)
காய்தல் = சினத்தல், சுடுதல்
கடல் ஊர்பு = கடலிலிருந்து
அனைய = போன்றாய்

இதன் பொருள்:-

மாலை தவழும் அழகு மிகுந்த மார்பையும், முழங்காலைத் தொடுமளவுக்கு நீண்ட கையையும் உடைய மாட்சிமைக்குரிய வழுதி! நீ யாவரும் மகிழும்படி அவர்களுக்கு அருள் செய்வதில் உண்மையாகவே வல்லவன். நீ என்றும் பொய்யே கூறமாட்டாய். உன் பகைவர்க்கு, நீ என்றும் கடும் வெப்பம் நீங்காமல் கடலிடத்தே இருந்து கிளர்ந்து எழும் ஞாயிறைப் போன்றவன். எம்போன்றவர்களுக்கு, நீ குளிர்ந்த திங்களைப் போன்றவன்.

சிறப்புக் குறிப்பு:-

முழங்கால் அளவுக்குக் கைகள் நீண்டு இருப்பது ஆண்களுக்கு அழகு என்று கருதப்பட்டதால், புலவர், “தாள் தோய் தடக்கை” என்று குறிப்பிடுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #59 on: March 17, 2013, 06:46:11 PM »


புறநானூறு, 60.(மதியும் குடையும்!)
பாடியவர் : உறையூர் மருத்துவன் தாமோதரனார்.
பாடப்பட்டோன் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்.
திணை : பாடாண்.
துறை: குடை மங்கலம்: அரசன் குடையைப் புகழ்ந்து பாடுவது குடை மங்கலம் எனப்படும்.
========================================

முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து

தொழுதனம் அல்லமோ பலவே; கானல்
கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்
வலன்இரங்கு முரசின் வாய்வாள் வளவன்

வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே.

அருஞ்சொற்பொருள்:-

நாப்பண் = நடுவே
திமில் = மரக்கலம்
செம்மீன் = செவ்வாய், திருவாதிரை
மாகம் = மேலிடம்
விசும்பு = ஆகாயம்
உவவு = முழுநிலா (பௌர்ணமி)
கட்சி = காடு
மஞ்ஞை = மயில்
சுரம் = வழி
முதல் = இடம்
வல் = விரைவு
கானல் = கடற்கரை
கழி = உப்பளம்
மடுத்தல் = சேர்த்தல்
ஆரை = ஆரக்கால்
சாகாடு = வண்டி
ஆழ்ச்சி = பதிவு அழுந்துவது
உரன் = வலிமை
நோன் = வலிமை
பகடு = எருது
வலன் = வெற்றி
இரங்கல் = ஒலி
வாய்வாள் = குறி தவறாத

இதன் பொருள்:-

முந்நீர்=====> வல்விரைந்து

கடலின் நடுவே உள்ள மரக்கலங்களிலுள்ள விளக்குப் போல, சிவந்த வீண்மீன் ஒளிறும் ஆகாயத்தின் உச்சியில் முழு நிலவு இருந்தது. அதைக் கண்டு அந்தச் சுரவழியில் வந்து கொண்டிருந்த, மயில் போன்ற, சில வளையல்களே அணிந்த விறலியும் நானும் விரைந்து

தொழுதனம்=====> ஒக்குமால் எனவே

பலமுறை தொழுதோம் அல்லவோ? அது ஏன் தெரியுமா? கடற்கரையிடத்து உப்பங்கழியில் விளைந்த உப்பைச் சுமந்துகொண்டு மலை நாட்டுக்குச் செல்லும் ஆரக்காலையுடைய வண்டியைக் குண்டு குழிகளின் வழியே இழுத்துச் செல்லும் வலிய காளையைப்போன்றவன் எம் தலைவன். அவன் வெற்றியுடன் முழங்கும் முரசையும், குறி தவறாத வாளையுமுடையவன். வெயிலை மறைப்பதற்காக அவன் கொண்ட அச்சம் பொருந்திய சிறந்த மாலை அணிந்த குடையைப் போன்றது அந்த முழு நிலா என்று நினைத்து அவ்வாறு தொழுதோம்.