எதார்தங்கள் கொண்டு தொடரவே விரும்புகிறேன்
உன்னோடான என் அன்பை.
குறைகளுள்ளதை அன்பென சொல்வார்களெனில்
என்னதை பேரன்பென சொல்லிக்கொள்கிறேன்.
எந்த பெயர் சொல்லி அழைத்தாலும்
உன்னோடான எனதன்பு உண்மை மட்டுமே.
என்னை உணர்தலில்
என் உணர்த்தலின் மௌனமும் அறிந்து கொள்.
காரணம் சொல்லாத என் பேரமைதி காணுகையில்
ஏனெனத்தெரியா மனச்சலனம் கொண்டதாய் புரிந்துகொள்.
உன்னை தவிர்த்தல் சாத்யமில்லையென்பது
தெரிந்தாலும் தூரமாய் செல்வதாயோ இல்லை தூரத்தில் நிற்பதாயோ
உனக்கு தோன்றுகையில்
ஒற்றைக் கேள்வி கொண்டென் உள்ளக்கிடக்கை அறியமுயல்,
முடியாது போகையில்
குழப்பங்கள் சூழும்முன்
உன் பேரன்பின் பிணைப்பில் எடுத்தென் முன்நெற்றியில் ஒரு முத்தமிடு..
பின் உன் அருகாமை கொண்டென்னை ஆசிர்வதி.
கவிதைகள் மௌனிக்கும் அப்பொழுதிலும்
உன் காதல் உணர்ந்து கொள்வேன்.
இது எனக்கான ஒரு எடுத்தலின் காலமாகக்கூடும்.
வா! கொடுத்தலிலும் எடுத்தலிலுமாய் தீராக்காதல் செய்வோம்..