எனது அறையில் உறைந்து
உதிர்கின்றது தனிமை - என்னில்
ஆட்கொண்டுள்ளது ஏகாந்தம்
சில பல பொருட்படாத
சப்தங்களின் பிரதிபலிப்பும்.......
அவ்வப்போது திறந்து மூடும்
ஒற்றைக்கதவினூடே வெறுப்புகள்
தாங்கிய ஒரு கவளம் சோறும்
சூரியக்கதிர்களின் எரிச்சலூட்டும்
வெளிச்சமும்.....
என் மனப்பிறழ்சியில்
உறவுகளை இழந்தது நான்
மட்டுமல்ல என் அறையும்தான்
நான் பிரவேசித்தபின் என்
அறையில் மனிதர்கள்
வருவதில்லை......
ஜன்னல் கதவுகளை யார்
மூடினார் என தெரியவில்லை
திறக்கமுடியா வண்ணம்
வலைகளை கட்டியுள்ளன சிலந்திகள்
மனம்பிறழ்ந்தவனாயினும்
நான் கலைக்கமாட்டேன் எனும்
நம்பிக்கை சிலந்திக்கு.....
இருட்டறையில் என்
வாழக்கை புரண்டு
இருண்டுகொண்டிருக்க
யாரோ வெளியே மனங்களின்
வெளிச்சம் பற்றி
பேசக்கேட்கிறேன்.....
யோசித்து யோசித்து
நடக்கிறேன் நான் - என்
அறைகளுக்குள் விழிகளை
திறக்கவேண்டியதில்லை
எனினும் எனை கடந்து
செல்கின்றன எனது
பொருட்படாத உலகும்
மைல்கற்களும்.........
எப்போதாவது கண்களை
என் கதவின் சிறு தூவாரங்களில்
செலுத்துகிறேன் - ஏதோ
பேசிச்செல்லும் மனிதர்களில்
நான் காண்பதென்னவோ
புரிபடாத அவர்களின்
மனப்பிரழ்ச்சிகளை மட்டுமே....
காற்றும் சில்லூறுகளும்
தனித்தனியே ஓசை
தருகின்றன - நான்
தனித்தனியே பதில்
சொல்லிக்கொள்கிறேன்....
யாருமற்ற உலகு
இப்பிரபஞ்சத்தில் ஏராளம்
பரிவும் இரக்கமும்
பஞ்சமாகிப்போனபின்
இப்பிரபஞ்சம் யாருமற்றவர்களால்
அழகாக்கப்படலாம்....