யானைக் கட்டி நிலத்தை உழுது,
போரடித்து, போர் புரிந்த
பொன்னாட்டில்
வீரமும் வீட்டு வாசற்படியில்
சம்மணமிட்டு விளையாடும்
வீரமே மானமென கொள்ளும்
எம்குலவேந்தனின் மாண்பென்ன
சிங்கமும், வேங்கையும் காடுகளில் வாழ்வதென சொல்லிச் சென்றவர் யார்
மீசை முறுக்கினில் ஆயிரம் கோடி
வேங்கைகளின் உறுமல்களை
பொதிந்து,
போரென்றால் முன்னிற்கும்
வீரமென்ற குலத்தொழிலை கொண்ட
இப்பெருவேந்தனின் பாங்கென்ன
கடலென திரண்டு நிற்கும் காலாட்படையும்,
அதில் அலையென மேல்ழும்பி நிற்கும்
குதிரைப்படையும்,
கரிய மலைக்குன்றுகளாய்
அணிவகுத்து நிற்கும் யானைபடையுமாய்
என
ஏக இறைவனும் பயம் கொள்ளும்
படை பலம் கொண்டவன்
பொங்கும் அலைகளுக்கும் அடங்காதவன்
பெருகியோடும் காட்டாற்றை போன்றவன்
கண்களின் கூர் பார்வையில்
நூறுகோடி எரிமலை கக்கும் அனல்
கொண்ட கோமகனின் மாட்சிமையென்ன
திருபுறம்பயமும், தக்கோலமும்
காந்தளூரும், வேங்கியும், கலிங்கமும்
ஈழமும், கடாரமும்
வென்று,
பாரில் உயர்ந்து, பனிவரை மேலெழுந்து,
குருதிக் கறையில் சரித்திரம் எழுதும்
இவ்வேளினை தூக்கும்
வீரம் செறிந்த பெருமகனின்
கம்பீர புஜங்களின் ஆகிருதியன்ன
இமயமென்னும் வெற்பை அடக்கி
ஆழி கடந்து கொடி நாட்டி
கடாரத்தை கைக்கொண்டு
பேராண்மையும், பெருவொழுக்கமும் பேணி,
சிறுமை எதிர்த்து,
விழித்த கண் இமைக்காமல் போர் புரிந்து
புறமுதுகு வெறுத்து, விழுப்புண்ணில் மகிழ்ந்து
வீரத்தையும் மானத்தையும்
இருகண் என கொள்ளும்
இப்பெருந்தலைவனின் திண்மைதானென்ன?
திண்ணிய நெஞ்சமும்,
அறநெறியும், போர் ஒழுக்கமும்,
மற உணர்வும்,
அந்நியரிடம் சிரம் தாழாது,
வீரமெனும் விதையென வித்திட்டு
சென்ற வீரமன்னர்கள் வாழ்ந்த
பொற்பூமியில் இன்று,
அநீதிகளும், அக்கிரமங்களும் தலைவிரித்து ஆடும்
அரசியலுக்கு தான் அடிமையாய் போனதென்ன ?
பாலன்றி வீரம் ஊட்டி வளர்த்த
இம்மண்ணின்
மாமன்னர்களின் நெஞ்சுரமும்,
வீரத்தலைவனின் தீரமும்
கோப்பெருமகனின் அஞ்சா திண்மையும்,
முன்வைத்த காலை பின் வைக்காத
மறவர் குல வழி வந்த,
பகைவர் தலைதமை கொய்து
காலடியில் வீழ்த்தும்
வித்து இன்னும் மிச்சமிருக்கும்
வீரமரபினன் தமிழன்
எவனோ ஒருவனின் காலடியில்
வீழ்வானென்று நினைக்காதே!