Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 212  (Read 5271 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 212
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline thamilan

பெற்றோர்களால் நிச்சயிக்கப் பட்டு
ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்த்து
உறவினர்களின் ஆசிர்வாதத்துடன்
ஒன்றான தம்பதியினர்
இரண்டாக பிரிவது எதனால்

காதலித்து கருத்தொருமித்து
தடைகளை உடைத்து
எதிப்புகளை எதிர்த்து
கை பிடித்த காதல் ஜோடிகளும்
இனிதே வாழ்வதும் எதனால்
இரண்டிலும் இரண்டுமே நடக்கலாம் 

போகும் இடமும்
புகுந்த வீடும் முக்கிய பங்கு வகிக்கின்றன
மணவாழ்க்கைக்கு
அமையும் கணவன்
நல்லவனோ கெட்டவனோ 
அமையும் மாமியார் நல்லதாக அமைந்து விட்டால்
வீட்டுக்கு வரும் மருமகள்
நல்லவளாக அமைந்து விட்டால் 
அந்த திருமண வாழ்வு சொர்கம் தான்

குத்துவிளக்கேற்ற வரும் மருமகளுடன்
குத்துச்சண்டை போடும் மாமியாரும்
மாமியாரை மாமி நீ யார்
எனக் கேற்கும் மருமகளும் அமைந்து விட்டால்
அந்த குடும்பமே நரகம் தான்


மாமியாரை இன்னோரு தாயாகவும்
மருமகளை இன்னொரு  மகளாகவும்
நினைத்திடும் குடும்பத்தில்
இன்பமே அன்றி துன்பமில்லை

மனப்பொருத்தம்
மணமகனுக்கும் மணமகளுக்கும் மட்டும்
இருந்து என்ன பயன்
மாமியாருக்கும் மருமகளுக்கும்
இல்லாவிடில்

நல்ல ஒரு மருமகளும்
நல்ல ஒரு மாமியாரும்
இணைந்த குடும்பம்
இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பம் 
அங்கே அமைதியும் அன்பும்
நிறைந்திருக்கும்
« Last Edit: March 11, 2019, 12:20:20 PM by thamilan »

Offline AvanthiKa

  • Newbie
  • *
  • Posts: 14
  • Total likes: 59
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
மனதில் மகிழம் பூக்க வைத்தாய்
மழலைசிரிப்பினால்..!
மதகு திறந்த நதியைப் போல
மகிழ்ச்சி காட்டினாய்..!

அகலின் ஒளியை அகத்தில் சேர்த்தாய்
அன்பு மொழியினால்..!
அகிலம் ஆளும் அன்னைத் தமிழாய்
என்னை ஆள்கிறாய்..!
 
சின்ன உதட்டசைவில்
சித்திர ஒளியழகில்
அம்மா என அழைத்திடவே ..
சிறுவாணி சுவைகள்
சிந்தையெல்லாம் ஊறுதடி ..!
 
கன்னத்தில் கன்னம் வைத்து
கட்டி அணைக்கும் இந்நொடியில்
எனைக் கட்டி ஆண்ட கவலையெல்லாம்
கல்லறையை தேடுதடி .!.
 
மலடி என்ற எண்ணெழுக்கெய்
சலவை செய்தாயே ..!
குழந்தையல்ல நீ
என் குழ வாழையடி ..!

என் குரலின் எதிரொலியாய்
உன் குரலும் கேட்டிடுமே..!
மகளல்ல நீ
என் மறு தாயடி..! பய அவந்திகா

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
ஒரு பெண் பிறக்கும் போதே
கள்ளிப்பால்  என்ற அரக்கனிடம் சிக்கிக்கொள்கிறாள்
பள்ளி பருவத்தில்
மதிப்பெண்களை காரணம் காட்டும்
சில காமக்கொடூர ஆசிரியர்களிடம் ஆட்டுவிக்கப்படுகிறாள்
பருவவயதில்
நட்பாய் பழகும் ஆண் நண்பனே
விரிக்கும் துரோக பொறியில் தெரியாமல் மாட்டிக்கொள்கிறாள்
எத்தனை தழும்புகள்
எத்தனை வடுக்கள்
அனைத்திலும் எதிர் நீச்சல் போட்டு..

பின்
அதே பெண்
தனக்கென ஒரு வாழ்க்கை வாழ
எக்கச்சக்க கனவுகள்....
அறியாத ஒருவனிடம் அழகான ஒரு வாழ்க்கை
அன்பின் ஆழத்தை பதம் பார்க்க விழிகளை மூடாமல் கனவுகண்டு
தனக்கான மணவாளனுக்காக காத்துகொண்டு
இருக்கும் பெண் உள்ளத்தின் மென்மையை
விவரிக்க சொற்கள் உண்டோ...
பெண்ணுள்ளமோ பெர்முடா முக்கோணம்...
உள்ளே   செல்வதும் சுலபம் அல்ல
வெளியே வருவதும் சாத்தியம் அல்ல…

மனைவி
ஒரு ஆணின் மணவாழ்வில் அச்சாணியாய் இருப்பவள்.....
அவள் இதயம் தொட்ட கணவனை
கண்களால் சிறை எடுப்பாள்
கணவன் தன் காதலை செல்லும் போது
வெட்கத்தில் செக்கச்சிவந்திடுவாள்...
சொந்தங்களை விட்டு கணவனே
சொந்தம் என்று சரணடைந்திடுவாள்

திருமணம்
அற்புதமான மாரடைப்பு...
ஒரு பெண்ணின் ஆழ்மனதை
ஒரு ஆண் புரிந்து கொள்ளும் தருணம்....

இரவில்
இரு உடல்கள் நடத்தும்
நாடகமா திருமணம்
இல்லை…
வாழ்நாள் முழுவதும்
இரு இதயங்கள் பேசும் தேனருவியே
திருமணம்....

திருமணம்
வெறும் ஐந்து எழுத்துச்சொல் அல்ல
அது ஒரு வாக்கியம்
அது ஒரு வாழ்க்கை  .
திருமணத்திற்கு  பிறகு
ஒரு ஆண் தன் கனவுகளோடு
தன் மனைவின் கனவை சுமக்கத்தேவையில்லை
அவள் கனவுகளுக்கு
துணையை இருந்தாலே போதும்....

ஆனால்
சில ஆண்களுக்கு
திருமணம் என்பது இருமனம் சேரும் விழா அல்ல
இரு உடல்கள் சேரும் நுழைவு சீட்டு....
வெறும் சதை வடிவமாய் பார்க்கும் ஆண்களே!
தலை குனிய வேண்டும்....
பெண்களை மதிக்காதவன்...
பிறப்பால் ஆணாக இருந்தாலும்
அவன் மிருகத்துக்கு சமம்...

எதை நோக்கி பயணிக்கிறது இந்த  ஆண் சமூகம்....
எப்படி திருமணத்திற்கு பிறகு
பெண்களை கொண்டாட போகிறோம் ?
உங்கள நம்பி தானே வந்தேன்…
இந்த ஒற்றை வரிக்கு ஆண்கள் 
உண்மையாகவும் 
அன்பாகவும்
இருந்தாலே போதும்....
நாம் ஆண்கள் என்பதில் பெருமை கொள்ளலாம்....

#பொள்ளாச்சி கொடூரம்

உன்னை நம்பி தானே டா வந்தேன்... என்ற கதறல் கேட்கும் போது
பதறும் நெஞ்சம் ....
இந்த ஒற்றை வரிக்குள் எவ்வளவு நம்பிக்கை...
ஒரு பெண்ணின் நம்பிக்கையை சம்பாதிப்பது சுலபமல்ல...
அதை நாசம் செய்த ஆபாச அரக்கர்கள்...
அந்த அரக்கர்களின் ஆண் என்ற அடையாளத்தை அழிக்கும்
சட்டம் வரும் வரை இது ஓய போவது இல்லை

சமத்துவம் பிறந்தால் என்ன
சமூகநீதி பிறந்தால் என்ன
பெண்களை பெண்களாக வாழ இடம் தருவோம்!!!

#respect women
#if she says YES its making LOVE
#if she says NO its a NO
# anything beyond NO is a VIOLENCE
« Last Edit: March 12, 2019, 12:59:41 PM by சாக்ரடீஸ் »

Offline JasHaa

  • Full Member
  • *
  • Posts: 103
  • Total likes: 446
  • Karma: +0/-0
  • நான் வீழ்வேனென்று நினைத்தையோ !!
கல்யாணமாம் கல்யாணம்
ஊரு கூடி தேர் இழுக்கும்
எங்க வீடு கல்யாணம்
ஜாதிசனம் அத்தனையும் கூடி நின்னு
குதூகலிக்கும் கல்யாணம்

பொட்டப்புள்ள பொறந்ததுமே
சேர்த்து வச்ச  தங்க காசு
பத்திரமா எடுத்து வந்து
இதமா பதமா நெருப்பிலிட்டு
பொன்தாலி  செய்வாங்க

பொண்டுபுள்ளைக சேர்த்துக்கிட்டு
ஊருவோலம போவாங்க
வாழ வரும்  மவராசி  கை  நிறைய
வலைப்பூட்டு  பூட்டி  வருவாக
வாழ்வாங்கு வாழவேணுமின்னு

குத்தவச்ச குமரி அவ
அரளிப்பூவா சிவந்து இருப்பாளே !
தாய்  மாமன்  சீருவரிசை கொண்டு வர
அங்கம் நாண  விழிநீர் சொரிவளே !

ராஜாதிராஜன் அவன்
மல்லுவேட்டி காட்டும் சூரன் அவன்
வெட்கத்தில்  கருத்த தேகம்  சிவந்து போக
அல்லியவள் அஞ்சனவிழி  பார்த்து
விரல் தீண்டி தந்திடுவானே சீலைபட்டு

ஆலமர  விழுதாய்  அரசமர கொழுந்தாய்
வாழவேண்டி  பூசை  ஒன்னு  செஞ்சுபுட்டு
கருக்கலில் கண்விழித்து
வஞ்சிமகள் கொளவையிட்டு
வளர்த்திடுவாக அக்னி தாயவளே !

மஞ்ச பூசின மல்லுவேட்டி கட்டி
மரகதவள்ளியவள் மைவிழியில் மயங்கி
சிரிக்கும்  விழியுடன்  கண்ணியவள் 
கரம்பற்ற  காளையவன்  காத்திருக்க ,

மதியெங்கும் மஞ்சள் பூசி
மாமன் தந்த கூறைபட்டுடுத்தி
மேனியெங்கும் தங்கநகை பூட்டி
கார்கூந்தலில் தாழம்பூவும் சூடி
புன்னகையும் மென்னையுமாம்
அன்னமென நாணம் கூடி
அன்னநடையிட்டு வந்த  மங்கையவள் !

முப்பெரும்  தேவர்களும்  மலர்தூவ
மூவுலகும்  வாழ்த்துக்கூற
குலமகள் கோதையவள்
காரிகையின் செங்கழுத்தில்
மங்கலநாண் பூட்டி 
சிறை பூண்டான்
சிங்கமவன் !


Offline JeGaTisH

கல்யாண கோலம் கொண்டு
காதலி அவள் மேடை ஏற

காத்திருந்த என் கண்களோ
அலைமோதுகிறது அவள் அழகைகாண 

பெற்றவர்கள் கண்ணில் ஆனந்த கண்ணீர்
பிறர் வீடு செல்ல போகும் மகளை எண்ணி

என்னிடத்தே அவள் கை கொடுத்து
இனி  உன்னில் பாதியென
உறுதி செய்தாள்  கண்களால்

மேள  வாத்தியங்கள் 
மாங்கல்ய  சங்கீதம் பாட 
ஆசீர்வாத மழையிலே
தாலி கட்ட அவள் தலை குனிந்தாள்

அவள்  ஆனந்தமோ கண்ணீராய்  பெருக்கெடுக்க 
என்னை பற்றிக்கொண்டாள் பாசத்தோடு

பெற்றோர்கள்  பாதம் பணிந்து வணங்கிட
வாழ்த்தின  வாழ்ந்த நெஞ்சங்கள்
16 செல்வமும் பெற்று
பெரு வாழ்வு வாழ்கவென .


அன்புடன் ரோஸ் மில்க் தம்பி ஜெகதீஷ் !!!
« Last Edit: March 14, 2019, 06:38:33 PM by JeGaTisH »

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..


கல்யாண பெண்ணே! கல்யாண பெண்ணே!
காதோடு ஒரு ரகசியம் சொல்கிறேன் கேள் கண்ணே
உன்னோடு இன்று நின்று இருக்கும் என் மகன் !
என் வாழ்வில் ஒளி ஏற்ற வந்த தலை மகன் !

ஆசையாய் தவம் இருந்தும் கரு இல்லாமல்
ஆண்டவனிடம் வரம் பெற்று உரு கொண்டான் !
அன்பில் குளிப்பாட்டி அணைத்து சோறு ஊட்டி
அறிவில் சிறந்து விளங்க வழிகாட்டி

பண்பை வளர்த்து பாசம் விதைத்து
பாங்குடன் வளர்த்து வந்தேன் !
உழைத்து களைத்து வந்த மகனை
ஊக்குவித்து பாதைக்கு அழைத்து வந்தேன்!

காதலித்த உன்னிடமே அவனை இன்று ஒப்படைத்தேன்
கண்முன்னாலே சிரிக்கின்றான் சிறு பிள்ளை போலே !
அடுத்த தாயாய் நீ இருந்து அரவணைக்க வேணும் !
அடுத்த வருடமே நீயும் தாயாக வேணும் !

இருமனம் இணைந்த இந்த திருமணத்தில்
மறுமலர்ச்சி காண வேண்டும் இல்லத்தில் !
அன்பும் காதலும் கூட என்றும் வாழ
எங்கள் அன்பு வாழ்த்துக்களும் ஆசிகளும் கண்ணே !



Offline Dong லீ

திருமணத்தில் இணையா இருமனங்கள்
காற்றில் கலைந்த காவிய காதலர்கள் ரோமியோ ஜூலியட்

விழியழகி இனி விழித்திராள் என்றெண்ணுகையில் இதயம் இருள
 நஞ்சுண்டு உயிர் மாய்த்தான் ரோமியோ
 
இறந்தவளாய் நடிக்க
மயங்கியிருந்த ஜூலியட்
விழித்தெழுந்து அலறினாள்
கத்தியில் பாய்ந்து
 தன்னுயிர் மாய்த்தாள்

உயிரின் உயிராய்
உருகி உருகி காதலித்த
இரு உயிர்கள்
காற்றில் மிதந்து
 காதலின் மூச்சுக்காற்றாய் உலவ
தினம் தினம் பயணம்
கண்டம்விட்டு கண்டம்
நாடுவிட்டு நாடு

நிறைவேறா திருமண ஆசை
நிறைவேற்றிட இப்போழ்து
இயற்கையின் ஆசி

தினம் தினம்
புதுப்புது திருமண விழாக்கள்
புதுப்புது கலாச்சாரங்கள்
மணமக்களின் உயிரில் கலந்து
தினம் தினம்
திருமணம் புரிந்து
மீண்டும் உயிர் பிரிந்து
 அடுத்ததடுத்த திருமணங்களுக்கு பயணமானார்கள்
ரோமியோவும் ஜூலியட்டும்

 (பயணத்தின் ஒரு நாள் -இடம் தமிழ்நாடு ஊரெங்கும் திருமண விழா சுவரொட்டிகள்
 FTC இல்ல திருமண விழா
மணமகன் சாக்ரடீஸ்
மணமகள் திருமதி சாக்ரடீஸ் )

சிறந்த அழகன் மணமகன்
 சிறிதும் தாமதிக்காமல் -அவன்
 உயிரில் கலந்த ரோமியோ
சிறைபிடிக்கும் அழகி
மணமகள் ஜூலியட்டை
புடவையில் காண
பூரிப்பாய் காத்திருந்தான்

சிறிது நேரத்தில்
மண்டபம் எங்கும் பதற்றம்
 மணமகளை காணவில்லையென

எங்கே ஜூலியட்
மணப்பெண்ணை என்ன செய்திருப்பாள்  ஜூலியட்
 குழப்பத்துடன் ரோமியோ
   அங்குமிங்கும் தேட
 இறுதியில் சமையலறையில் கண்டான்
அந்த கோர காட்சியை

மணப்பெண் பிக் பாஸ் ஜூலி
 ஒரு கையில் ஜூலியட்டை பிடித்தவாறு மறுகையில் பொங்கலை பிசைந்தவாறு அமர்ந்திருக்க
ஜூலியட்டை காப்பாற்றி
 ஓட்டம் பிடித்தான் ரோமியோ

நினைவு திரும்பிய சாக்ரடீஸ்
ஜூலியின் சாப்பிடும் அழகை
ரசித்து ருசித்து
 காதலில் உருகி நிற்க
மனதில் ஒரு கவிதையை பதிவிட்டு கொண்டிருந்தார்

" Julie nee eat um alagil antha
   Juliet um thorthe pogum "
 

Offline இளஞ்செழியன்

மனைவி


நாளைய தேவைகள்
என பட்டியலிட்டவளிடம்
இன்றைய இருப்புகள் பற்றி
கேட்டறியவேண்டியது
கட்டாயமாகிறது ...
.
நேற்று வரையிலாய்
கழிந்து போனவைகளை
கூட்டிச்சொல்லும்போதே
சில உபயோகமற்றதாய்
தங்கிவிட்டவைகள் பற்றியும்
இடையே சொருகிக்கொள்வாள்...
.
சேர்த்துவைத்தலின் இலக்கணம்
கேட்டுப்பெற ஆசையற்றுவிடவேண்டும்
கோபித்துக்கொள்வாளென்றல்ல
சேர்த்துவை என கொடுத்ததை
அவ்வப்போது திரும்பப்பெறும்
நீதமற்றவர் நாம்....
.
கசியும் வியர்வையில்
உப்பின் சுவை அதிகம்
எரியும் அடுப்பினின்றும் வீசும்
கரும்புகையில் முகம் துடைப்பாள் அவள்
.
தகப்பனும் பிள்ளைகளும்
தின்று எஞ்சிய மிஞ்சும்
சோற்றையே தின்கிறாள் அவள்
நேற்றைய மிச்சங்கள் கலக்காத
அவளின் அமுதப்பாத்திரம்
இன்றளவும் இருந்ததில்லை....
.
நாளையை பற்றிய கனவை
நீ காண்கிறாய் - நேற்றே
உன் இரவுகளில் எப்போதோ
அதற்கான பதியமிட்டிருப்பாள் அவள்....
.
சுருக்குப்பைகளோ அரிசிப்பானைகளோவல்ல
அவளின் அமுத சுரபிகள்
நீ தொலைத்த உனது
நம்பிக்கைகளே அவளின்
நாளைய நம்பிக்கைகள்....

பிழைகளோடு ஆனவன்...