மனிதம் என்கிற சொல்லுக்கு மிக எளிமையான வரையறை “சக மனிதனை தன் இடத்தில் பொருத்தி பார்ப்பது” என்பது எனது சமீபத்திய புரிதல்
மழைத்தூறலில் ஏசி காரில் போகிற போது, மனைவி மக்களுடன் பைக்கில் நனைந்து பயணிக்கிற சம்சாரிக்கு வழிவிட்டிருக்கிறீர்களா?
காலை பத்து மணிக்கு அவசரஅவசரமாக வீட்டிலிருந்து கட்டிக்கொண்டுவந்த இட்லியை சாப்பிடுற பெட்டிக்கடை அண்ணாச்சிக்கு ஐந்து நிமிஷம் அவகாசம் கொடுத்து காத்திருக்க தயாராக இருந்திருக்கிறீர்களா?
ட்ராஃபிக் சிக்னலில், பச்சை விழுந்த பிறகு முன்னால் நிற்கிற ட்ரை சைக்கிள் முதியவர் தன் வாகனத்தை நகர்த்த திணறுகிற போது உங்கள் ஹார்னை அலறவிடுகிற எண்ணத்தை கட்டுப்படுத்தியிருக்கிறீர்களா?
வாகனத்தை ஓரங்கட்டி, ஒற்றைக்காலை ஊன்றி அலைப்பேசியில் கதைக்கையில், நம்மை கடந்து சக்கரப்பலகையில் மூச்சிரைக்க கைகளால் ரோட்டை தேய்த்து செல்லுகிற யாசகரை கனிவோடு ஒருகணம் கவனித்திருக்கிறீர்களா?
இரவு பத்தரை மணிக்கு ஸொமேட்டோவிலோ, ஸ்விக்கியிலோ நீங்கள் ஆர்டர் செய்த ஆப்பம் ஆட்டுக்கால் பாயாவை கொண்டுவரும் டெலிவரி பாய் - ன் டீஷர்ட் பொத்தலை கவனிக்கையில்... இன்று அவர் வீட்டில் என்ன உணவாக இருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா?
பண்ணிப்பாருங்களேன்... மனது மிக அமைதியாக இருக்கும், மகிழ்ச்சி ஊற்றில் வறட்சியுமிருக்காது, படுத்தால் பட்டென்று உறங்கியும் விடலாம்!
‘மனிதம்’ மனமகிழ்வின் முதல் வித்து.