பெயரில் என்ன இருக்கிறது
ஆளற்ற நெடுமலையின்
உச்சி சாரலில் ஓராயிரம்
பச்சைக்கிடையே பூக்கும்
ஓர் ஒற்றை ஊதா பூவிற்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
அலைகள் கடந்த பேரமைதி கொண்ட
ஆழியின் மேல் கண்டம் தாண்டி
வலசை செல்லும்
நீலவர்ணப் பறவைக்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
நூற்றாண்டுகளாய்
நிழல் விழும் நிலத்தின் மேல்
அடர் விழுதுகள் தொங்கி நிற்கும் பெருமரத்திற்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
பைம்பூ சூடி நிற்கும்
மெல்லியல் மலர்பெண் இட்ட
பசுஞ்சாண கோலத்திற்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
தெரு விரித்த மஞ்சணத்தி மலர்
படுக்கையில்
கட்டிப் புரண்டு விளையாடும்
சிறு நாய்க்குட்டிகளுக்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
பெருங்கருணை சுரக்கும் தாயின் கண்களை நோக்கி
'ங்க்கா' என குறுஞ்சிரிப்போடு
அமுதம் பொழியும் மழலைக்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
மலைப் பிறப்பெடுத்த நீலம்பொங்கும்
நெடுநதியின் சலசலப்பில்
துள்ளிக் குதிக்கும் ஒரு மீனிற்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
அந்திக்காவலன் ஒளியில்
சலனமின்றி பாதம் தொட்டுச் செல்லும்
சிறு அலைக்கு
பெயெரென்று எதுவும் தேவையில்லை
ஏதோ ஒரு உறவின் நீட்சி போல
ஏதோ ஒன்றில் தொலைந்து மீள்வது போல
ஓர் அணைப்பு தரும் பேரின்பத்தை
ஓர் பிரிவு தரும் பெரும் துயரினை
அறியவென
பெயர் தெரியாத ஒரு வனத்தில்
அன்புடை எனக் கலந்துவிட்ட
உள்ளங்களின் உறவுக்கு
பெயரென்று எதுவும் தேவையில்லை
ஏனெனில்
பெயரில் எதுவுமே இல்லை