விழிகளில் காதல் வழிந்தோட
உன் விழியால் என் விழியை
அணைத்து நிற்கும் நீ யாரோ...
தேகமதில் காதல் புரண்டோட
உன் கரத்தால் என் கரத்தை
இறுகப்பற்றி நிற்கும் நீ யாரோ...
ஆதிமனிதன் உணர்ந்த
இனிய காதல் தென்றலை
எனக்குள் மூச்சுக் காற்றாய்
செலுத்தும் நீ,
என் பொன் நட்சத்திரமோ...
ஆதாம் ஏவாள் ரசித்த
அழகிய காதல் மெட்டினை
எனது செவிகளுக்குள் இதமாய்
செலுத்தும் நீ,
என் வண்ண வானவில்லோ...
காத்து நின்றேன் உனக்காக
வாடிய மரத்தடியில்
காதல் ரதத்தில் வந்து நின்றாய்
என் விழி வாசலடியில்...
கண்களில் கண்டதும்
என் பூமியின் வண்ணங்களும்
காதல் வண்ணங்களாகின !
உன் நறுமணம் கொண்டதும்
வாடி நின்ற கிளைகளும்
காதல் மலர்களால்
பூத்துக் குலுங்கின !
வெண்புறாக்கள் காதல்சேதியினை
உலகிற்கு உரக்கச் சொல்ல
மென்மை சிறகடிக்கின்றன...
கட்டாந்தரைகள் செங்கம்பளமாகி
நம் ஜோடித்தடம் பதிய
ஆசையால் காத்துக்கிடக்கின்றன ...
இதைமிஞ்சி வேறு தேசங்கள்
இனிகாண விரும்பவில்லை
என் விழிகள்
உனையன்றி இனியோர் கன்னியை
என்றுமே தீண்டாது
என் இதயம்
தெய்வீகத்திற்கு ஒப்பான
காதல் இது...
காவியத்தில் இடம் பிடிக்கா
காதல் இது...
அன்று அன்னத்திடம்
தன் தூய காதலுக்காய்
தூதுவிட்டாள் தமயந்தி...
அவள் நளன்பால்
கொண்ட காதலையும்
மிஞ்சிவிட்ட நீ என் வஞ்சி...
இடைவெளிகள் நமக்குள்
வேண்டாமடி கண்மணியே !
காற்றும் புகுந்தால் நம் அன்பு கண்டு
பொறாமை கொள்ளுமடி வெண்ணிலவே !
காதல் மனங்கள் உரச
அருகே வா என் கண்ணே...
உன் இதழ்களால் என் இதழ்களில்
காதல் ஓவியம் தீட்டு பெண்ணே...
நிச்சயம் இதில் காமவாசம் இல்லையடி
இது நாம் லயிக்கப்போகும்
"உன்னத காதல்தேசம்"