காலம் காலமாய்
அடிமைப்பட்ட ஓர் இனத்துக்கு
தலைவனாய் நீ
பட்டம், பதவி, பவிசு, சொத்து சுகமென்று ஒத்தோடியவர்கள் ஓராயிரம் பேரிருக்க,
நீயோ ஈழமே என் சொத்து அதன் சுதந்திரமே என் சுகம் என்று களமிடை தனித்து நடந்தாய்
உன் பெயர் சொல்லிய ஈனர்களெல்லாம் உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் சொத்துச்சேர்க்க,
நீயோ ஈழமே என் இருப்பிடமென்று எம்மோடிருந்தாய்!
தமிழர்க்கு தலைவர் நாமென்று சொன்னோர் தாம் ஈந்த மகவையெல்லாம் வெளிநாடோடவைக்க,
நீயோ நீ ஈன்ற மகவுகளை போர்க்களம் அனுப்பினாய்!
உன் கரம்பற்றி நடந்தோர் உனக்கு துரோகமிழைக்க
உன் தோளில் கைபோட்டவர்கள் உன் முதுகில் குத்த,
உன் அடிபற்றி நடந்தோர் உனை தம் நெஞ்சில் தாங்கினர்!
தமிழென்றால் அமுதென்றார்
உன் வரவின் முன்னே...
தமிழென்றால் வீரமென்றார்
உன் பிறப்பின் பின்னே...
தரணியிலே தமிழுக்கும் புது முகவரியளித்தவன் நீதான்!
போராளிகள் என்ற சொல்
புனிதம் பெற்றதும் உன்னால்தான்!
இன்றுவரை ஒழுக்கம் என்பதை உன்னிடம் கற்றுத்தோற்கிறது உலகம்.
உன்னோடு உன் சந்ததியையே மண்ணிற்காய் தாரை வார்த்தவனே,
நீ சாமான்யன் அல்ல சரித்திர புருசன்!
நீ காட்டிய வழியில்
விடியலை தேடி ஏங்கி
காத்திருக்கின்றோம் நாம்
ஒப்பற்ற தலைவனைப் பெற்றும்
ஓர் இனம் ஒற்றுமையின்மையால்
உலகில் வழக்கொழிந்து போனதென்று
ஓர் வரலாறு எழுதப்படவா நீவீர்
வாழ்வு தொலைத்தீர்?
அதுவரையில் அகதியென்ற பெயரோடு
நாம் நாடோடித்திரிவோம்
சபிக்கப்பட்ட இனமொன்றின் சாபம் இதுவென்று!
அடுத்தவன் வீட்டு அரியணையில்
நாம் சுகமோடில்லை தலைவா!
பஞ்சு மெத்தைகளும் பட்டுத்துணிகளும்
உன் ஈழத்தின் பற்றைக் காடுகளுக்கு நிகராகாது தலைவா!
நாம் மகிழ்வோடில்லை!
எம் சிரிப்பில் உயிர்ப்பில்லை!
ஒப்புக்கு வாழ்கிறோம்!
உயிரற்று அலைகிறோம்....
வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தை இல்லை
தலைவா
கண்ணீர்மல்க காத்திருக்கின்றோம்
ஈழத்துக்காக மட்டும் இல்லை
உன் வருகைக்காகவும் .............
[/color]