என் ஆசை மகளே செல்ல கண்மணி...
என் துயர் உரைக்க கவிஞனாகிறேன் பொன்மணி...
உனக்காகத்தான் அப்பா ஜீவன் வாழ்கிறேனேடி...
உன்னை வாழ வைக்கத்தான் தினம் சாகிறேனடி...
உன் தாயும் நமை விட்டு வேறு வாழ்வு தேடினாளடி...
கூராய் பாயும் சொற்கள் தந்து எமை விட்டு ஓடினாளடி...
பாலூட்டி உன்னை நெற்றி முத்தமிட்டவள்,
இன்று கண்களில் இரத்தம் வரச் செய்தாள்...
சீராட்டி நம்மை மூச்சாய் சுவாசித்தவள்,
இன்று வன்பேச்சினால் இதயம் நெய்தாள்...
ஐந்தடி பெண் மானவள், உணர்வற்ற தூணானாள்!
கண்ணடி சில்லென வீசியவள், கல்லடி முடிவற்று வீசுகிறாள்!
ஆப்பிள் பழமாய் நிதமும் இனித்தவள்,
பாகற்காயாய் நாவிட்கு கசக்கிறாள்...
மழையென குளிராய் பொழிந்தவள்,
எரிமலையென சுட்டு அழிக்கிறாள்...
அக்கறையால் எமை சொக்க வைத்தவள்,
இன்று வேதனையில் சிக்க வைக்கிறாள்...
மல்லிகை வாசம் வீசும் என் காதலும்
அவளை உருக்கவில்லை...
தித்திக்கும் மாம்பழமான உன் பாசமும்
அவளை மயக்கவில்லை...
எவனோ ஒருவனுக்காய் வீடு பிரிந்தாள்...
அவனே உலகம் என போற்றித் திரிந்தாள் ...
பிஞ்சு உன்னை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை...
கல்வி ஞானம் இல்லாததால் நல்ல தொழில் கிடைக்கவில்லை...
உன்னில் அத்தர் மணம் வீசச்செய்ய,
என்னில் புழுதி மணம் பரப்புகிறேன்...
உன்னில் மழலை பசித்தீர்க்க,
என் உதிரத்தை வியர்வையாக்குகிறேன்...
கூலித்தொழிலால் உன் சிணுங்கல்கள் சிதைப்பேன்...
காயங்கள் பல கண்டும் உன்னை சிறப்பாய் வளர்ப்பேன்...
அயராது உழைத்து உன்னை விண்ணளவு உயர்த்துவேன்...
உன்னை பிரிந்த தாய்க்கு நானும் ஓர் தாயுமானவன் என பாடம் புகட்டுவேன்...!!!