காலம் மனிதனுக்கு
மிக நீளமாக காத்திருக்கச் சொல்கின்ற
எல்லாவற்றையுமே
அவனுக்காக அளிப்பதில்லை.
அவனுடைய வாழ்வில்,
அவன் பொத்திப் பிடித்துக் கொண்டு
வாழ்ந்த எத்தனை எத்தனையோ
பிடிமானங்களை, அவனின் கரங்களில் இருந்து வலுக்கட்டாயமாக பறித்துக் கொள்கிறது.
காலம் இரக்கமற்றது...!
அப்படியாய் கடைசி உரசலோடு
விலகிச் சென்ற எத்தனையோ
ஆதர்சக்காதல் விரல்கள்,
இன்னும் தன் கரங்களை
நீட்டியாவாறேதான்
நடுங்கிக் கொண்டிருக்கிறது.
மீண்டும் சேர்ந்து விடாதா?
என்ற ஏக்கப் பெருமூச்சோடு,
லட்சோப மனங்கள்
யாருக்கும் தொந்தரவின்றி,
தனித்தழுது கொண்டு
தன் துயர் துடைக்க,
காலத்தின் மடியில் சதாவும்
விழுந்து கிடக்கத்தான் செய்கின்றன.
தீராத ஆதங்கங்களோடு,
ஆறாத வடுக்களோடு,
கனவாய் கலைந்த வாழ்வொன்றை எண்ணி
அம்மனங்கள் தனக்குள்
விம்மத்தான் செய்கின்றன.
நெஞ்சம் நிரப்பி,
உடல் முழுவதும் ஆழமாய்
வியாபித்துப் போன ஓர் காதலின் விலகலை
அத்துனை எளிதாய்,
சகித்துக் கொள்ள முடிவதேயில்லை.
உன்னதம் ததும்பிய அந்த முகத்தின்
கடைசி பிரிவுச் சிரிப்பு
கண்ணீரால்தான் ஆசீர்வதிக்கப்படுகின்றன.
மீண்டும் வருவாயா?
எங்கேயாவது தற்செயலாக காண்போமா?
ஓர் அழைப்புக்கான காத்திருத்தல் நியாயப்படுமா?
அதே பழைய கொஞ்சல்களும், சிணுங்கள்களும்,
ரசித்தும் தீராது நிற்கும்
பழைய நம் உரையாடல்களும்,
இனி கைகூடுமா?
பேச்சின் நடுவே மேலெழுந்த
உல்லாசத்தன்மையும், அதீத ஆசைகளும்
இனியும் நீங்காது நம்மில் துளிர்க்குமா?
என்ற கேள்விகளோடு
தூரப்படும் நேரங்களை கடப்பது,
அவ்வளவு சாதாரணமானதல்ல.
பிறகேற்படும் ரணங்களை,
வலிகளை,
நினைவுகளை,
சோகங்களை,
விழுங்கிக் கொள்வது
எத்துனை கணம் மிக்கதென்று
எந்தக் காதலினாலும் எழுதிவிட முடியாது...
சில ஆழ்ந்த
மெளனங்களில் வாழும் துயரங்களை,
வார்த்தையில் வர்ணிக்க இயலாது...
அந்தச் சோகமும், துன்பமும்,
மெளனத்தில் வாழ்வதைத்தான்
காலம் சரியென்கிறது...
வாட்டி எடுக்குமே?
பரவாயில்லை என்று நகர்கிறது
பழைய காதல்...
பாவம் மனிதன்!
அவனால் காலத்தை மீறி
எதையும் செய்ய துணிவென்பதே கிடையாது....!
உதிர்ந்த பூக்களை எல்லாம்
பொறுக்கி எடுத்து,
தன் காதலை
அதில் மலர வைக்க
காதலர்களால்தான் முடிகிறது போல.
கடைசியாய் பார்த்த அந்தக் கண்கள்,
கடைசியாய் கேட்ட அந்தக் குரல்,
கடைசியாய் தவித்த அந்த முகம்,
கடைசியாய் உஷ்ணமாய் வழிந்த கண்ணீர்,
எல்லாமுமே அதன் பிறகுள்ள
ஒட்டுமொத்த காலத்திற்குமான
பரிபூரணத் துயரமல்லவா?
அந்த நொடிகள் தந்த தாக்கம்
வாழ்வின் அந்திமம் வரை,
கண்ணீரை துளிர்க்கச் செய்து கொண்டேதான் இருக்கும்.
அதே அழுத கண்ணில்,
அந்த ஆன்மக் காதலும் நீந்தித் தவிக்கும்.... என்றென்றும்❤