Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 244  (Read 2487 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 244
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline thamilan

காசேதான் கடவுளப்பா
இது மறுக்க முடியாத உண்மை
பணத்தால் முடியாதது என்ன இருக்கிறது
பணம் தாள் தான்
உலகையே நிர்ணயிக்கிறது

பணத்தால் வாங்கமுடியாதது
தாய் தான் என்று சொன்ன காலம் போய்
பணத்தால் வாடகைத்தாயையும் வாங்கலாம்
என்ற நிலைமை இன்று

உயிருள்ள உறவுகளில்
யார் முக்கியம் என்பதை
அவர்களிடம் இருக்கும்
உயிரற்ற பணமே நிர்ணயிக்கிறது

உலகம் இப்போதெல்லாம்
உடம்புக்கு உள்ளேயே இருக்கும்
மனதை பார்ப்பதில்லை
உடம்புக்கு வெளியே பையில் இருக்கும்
பணத்தைத் தான் பார்க்கிறது

பணம் பாவத்தின் திறவுகோல்
பணம் என்ற சொல்லின் பின்னால்
பாவம் என்ற கிரீடத்தை சூடிக்கொண்டிருக்கிறது
இன்றய  உலகம்
ஒவ்வொரு பணத்திலும்
பாவம் என்ற துர்மணம் வீசுகிறது

இறைவன் இருக்கும் இடத்தை
நிர்ணயிப்பதும் பணம் தான்
தட்டில் பணம் விழுந்தால் தான்
கடவுளுக்கு அர்ச்சனையே
பணம் கொடுத்தால் தான் கோவில் பிரசாதமே

இன்று மனிதன்
பணத்தை பார்த்து பழகுவதால்
அவர்கள் குணம் தெரியாமலேயே போய்விடுகிறது
பணம் இன்று வரும் நாளை போய் விடும்
பாசம் நிலையானது
பணத்துக்காக பாசத்தை விற்றுவிடாதீர்கள்
« Last Edit: September 13, 2020, 11:25:15 AM by thamilan »

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
பணத்தின் முன்னே மண்டியிட்டு
வீழ்ந்து உருளும் மானிடனே.

உன்னுடனே நானும் கழித்து உறவாடிய
நாட்களை மறந்துவிட்டாயா மனிதனே..

மனமெனும் அழகிய திரையில் - இவ்வுலகை
அன்பெனும் விழிவழியே பார்த்தவனும் நீயா?

தானியங்களும் ஆநிரைகளுமே மனித செல்வமென
ஊரறிய உலகறிய மொழிந்தவனும் நீயா?
 
மக்களை மாக்களாக மாற்றாமல் மனிதனை     
மனிதனாக மதித்து பொருளீட்டியவனும்  நீயா?

மனிதா நான் யாரென நீயும்
உன் புருவம் நெளிய யோசிக்கின்றாயா?

நன்றாக சிந்தி, உன்னறிவு கண்முன்னே
மறைக்கும்  பணத்தாசை தாண்டி யோசி

அச்சிட்ட காகிதம் உயர் செல்வமென
அதன்பின்னே கைகட்டி ஓடும் மனிதா..

நீயும் சுயநலத்திடம் அறிவினை அடமானம்
வைத்து பணத்திடம் மண்டியிட்டு கிடப்பதேனோ?

பணம் உன் உடலோடு ஒட்டிய தோல்களல்ல 
உன்மானம் காக்கும் ஆடைகள் மட்டுமே..

பணம் உன் நாடி நரம்பெல்லாம் உருண்டோரும்
குருதி என்றெண்ணும் மனிதா..  அதுவுன் பிரமையே..

ஓர் நாள் நீயும் உணர்வாய் - பணத்தினால்
நீ தொலைத்த சந்தோச தருணங்களை..

கடமை கண்ணியம் கட்டுப்பாடுகள் இழந்த மனிதா..
கண்களிருந்தும் குருடனாய் காசினை கடவுளாக்கியவனே..

நீயும் ஓர் நாள் தர்மத்தின் காலடியில்
தலைகுனிந்து மண்டியிடுவாய் மறந்திடாதே..

பணபோதையில் மதியிழந்து தன்னுணர்விழந்த 
மதிகெட்ட மனிதா.... நானே தர்ம தேவதை...


பொருள் :தர்மம் - வாழ்வியல் அறம். 
« Last Edit: September 16, 2020, 10:00:13 PM by TiNu »

Offline MoGiNi

கால சக்கரம்
கடந்து பயணித்தால்
காசை கண்டு பிடித்தவனை
கடவுளாக்கி  வரலாம் ..

அவனோடு
ஆயுளுக்கு ஒரு
ஒப்பந்தமும் போட்டு வரலாம்

ஊர் அழிந்து
உருக் குலைந்து போனாலும்
உருகாத தங்கம்
ஒரு கிலோ இருக்க வேண்டும்
கோடி துணி யோடு
கடைசி ஊர்வலம் போனாலும்
கோடீஸ்வரன் பிணம் என்று
ஊரார் புகழ வேண்டும் ..

நான் வாழ
என் மக்கள் வாழ
அவர்தம் சுற்றம் வாழ்
ஆழமாக யோசித்து
ஒரு வரம் அழகாக யாசிக்க வேண்டும்

பரிகாரமாக
ஆண்டுக்கு ஒரு முறை
அழகாக பொங்கலிடுவேன் ..

கனவுதான்
சிறு கற்பனைதான்
மனிதம் விற்று
புனிதம் தின்று
கோடிகளை பார்ப்பதில்
அர்த்தமில்லை
நானும் அற்பம் இல்லை ..

நீ இருந்தாலும்
நின் மதி இல்லை
இல்லையெனினும் நின்மதி இல்லை ..
ஊர் பிரிந்து
உறவு பிரிந்து
கொண்டவள் பிரிந்து
கோபுரம் ஏறி
கோடீஸ்வரன் ஆக
இரும்புப் பறவையில்
இருள் இதயம் கொண்டு
பறந்தவர் நிலையெல்லாம்
பிரிந்தவரை கேடடால் தெரியும் ..

நீ வேண்டும் தான்
அளவோடு ,
நீ வேண்டும் தான்
அவசியதோடு,
நீ வேண்டும் தான்..
உன்னை வைத்து
மண்ணை பெண்ணை ஏன்
உலகையே எடை போடும் வரை
நீ வேண்டும் தான் ,
அந்த கடவுளையே
காட்டுவதட்கும் நீதான்
ஆகவே நீ
வேண்டும் தான் ..

காகிதத்தில்
ஓர்
கலர் கலர் கடவுள் ...

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பணமில்லாமல் வாழ்வது
முடியாத காரியம் - அது
காலத்தின் கட்டாயம்
மனிதன் மாடாக உழைப்பதே
இந்த பணத்துக்காகத் தான்
இருப்பவனும் உழைக்கிறான்
இல்லாதவனும் உழைக்கிறான்

அதிக பணம் இருந்தால்
நம் மதிப்பு உயரும்
நம் மதிப்பு உயர்ந்தால்
மற்றவரை கட்டுப்படுத்தும் திறமை வரும்
கட்டுப்படுத்தும் திறமை வந்தால்
தலைவனாகும் தகுதி வரும்

இயந்திரங்கள் இயங்க
எண்ணையின் சக்தி வேண்டும்
மனிதன் இயங்க
பணத்தின் சக்தி வேண்டும்
பணமென்றால் பிணமும்
வாய் திறக்கும்
இது முதுமொழி

பணத்துக்கு என்ன சக்தி இருக்கிறது
குடும்பங்கள் பிரிவதும் பணத்தாலேயே
தொழில் சங்கங்கள் போராடுவதும்
பணத்துக்காகவே
அரசியல் ஆட்டம் காண்பதும்
பணத்தாலேயே
தொழில்கள் முடங்குவதும்
பணமின்மையாலே
சிலர் தங்கள் அறிவை விற்றப்பதும்
பணத்துக்காகவே
சொத்து சுகம் சேர்வதும்
பணத்தாலேயே
மொத்தத்தில் உலகம் இயங்குவது
பணத்தாலேயே

நல்ல மருத்துவம்
தரமான படிப்பு
இவையெல்லாம் பணம் இல்லாமல்
எங்கும் கிடைப்பதில்லை
பணமே சமுதாயத்தில் மனிதனுக்கு
உயர்ந்த இடத்தை கொடுக்கிறது 

பணம் பாதாளம் வரை பாயும்
பணம் உள்ளவன் குரலே 
எங்கும் ஓங்கி ஒலிக்கும்

என்றாலும்
அளவோடு இருப்பதே எதிலும் சிறந்தது
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு
பணம் அளவோடு இருந்தால்
பணத்தை நாம் ஆளலாம்
அதிகம் பணமிருந்தால்
பணம் நம்மை ஆளும் 

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !


வெள்ளை தேவதையே வா  ! அழகிய பணமே வா ! !
கண்களை  கவரும் கரன்சி   அழகியே வா  !
மண் மீது உனக்குள்ள மதிப்பு தோரணையே
உன் மீது எனக்கு காதலை வளர காரணம் !

என் ஆசை பணமே வா  ! அற்புத பரிசே வா  !
நீ என்னை எப்போதும் சந்தோசப்படுத்துகிறாய் !
என் வாழ்க்கையை உரசி மெருகேற்றுகிறாய் !
என்னுடன் எப்போதும்  இருந்து உயர செய்கிறாய் !

பிரகாசமான வைரமே வா  !ஜொலிக்கும் தங்கமே வா  !
பகட்டான  பங்களாவும் விலை உயர்ந்த  காரும் ...
பச்சைநிலபுலன்களும்  பசுமை தோட்டங்களும் ....
பிச்சை காரனையும் கோடிஸ்வரன் ஆக்குவாயே !

முத்துமணி ரத்தினமே வா !  மிளிரும் பொக்கிஷமே வா !
அணி மணி நகைகளும் கட்டு கட்டான நோட்டுகளும்..
வங்கியில் உயரும் வரவுகளும் வளமையும்
வற்றாத செல்வமாய் என்னை வாழ வைக்கிறாய் !

என் அக்ஷய பாத்திரமே வா  ! ஆசை நாயகியே  வா  !
என்னைபோலவே நீயும் என்னை மிகவும்  நேசிக்கிறாய்!
என் சுவாச காற்றாய் என்னுள் நீ வளர்கிறாய்!
என் வீட்டில்ஆவலுடன் விரும்பி தங்குகிறாய் !

என் அருமை பணமே வா  ! செழிக்கும்  பணமே வா  !
என் உணர்வில் எப்போதும் பரவசப்படுத்துகிறாய் !
புத்துணர்ச்சியோடு வைப்பதற்கு பாராட்டுக்கள்  !
நாம் இருவரும் சக்தி வாய்ந்த  படைப்பாளிகள் !

பொழியும் பணமே வா  !  தங்கும் தங்க மகளே வா !
நாம் இருவரும் சக்தி வாய்ந்த  படைப்பாளிகள் !
வறுமை இல்லா பூமியையும் ..பொருள் நிறைந்த
புத்தம் புது உலகையும் யும் படைத்து அனைவரையும்
நீங்காத மகிழ்ச்சி  பெற செய்வோம்  வா! வா !

« Last Edit: September 20, 2020, 04:36:41 PM by AgNi »

Offline KoDi

  • Jr. Member
  • *
  • Posts: 70
  • Total likes: 270
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
காசு லட்சுமி என்பான்
அதுவே கடவுள் என்பான்
கருமியாய் காலம் கடத்தி 
கவலையே இல்லையென்பான்

ஒவ்வொரு நாட்டிற்கும்
தனித்தனி  நாணயம்
நழுவிப்  போனது
நம்மவர்களின் நாணயம்

பணமில்லா நாட்களில்
பண்டமாற்று இருந்தது
பசியுற்று இருந்தோர்க்கு
புசிக்கவும் இருந்தது

அப்போது பதுக்கலில்லை
பாதகமாய்  குவித்தலில்லை
மிஞ்சியது கொடுத்து
எஞ்சியது பெற்றான்

அறம்  செழித்திருந்தது
ஆனந்தம் பெருகியிருந்தது
இரப்போர் இன்றி
ஈகை  பரவியிருந்தது

பொருள் ஈட்ட எண்ணி
குடும்பம் பிரிகிறான்
 அச்சிட்ட காகிதத்துக்காக
அலையாய் அலைகிறான்

உற்றாரை நோக்காமல்
ஊர் ஊராய் திரிந்து
பொருள்தேடும் வெறியில்
தீப்பற்றி எரிகின்றான்

உடல்நலம்  விற்று
பைத்தியமாய் உழைக்கின்றான்   
சேர்த்த பணத்தை
வைத்தியத்தில் இழக்கின்றான்

தனம்முன் தாள்பணிந்து
அடிவருடி   திருசேர்கிறான்   
கட்டிய மனைவியை காசுக்கு விற்று
காட்டிக்கொடுத்து  குபேரன் ஆகிறான்

ஏச்சுக்கள் எதுவாயினும்
காதுக்குள் புகுவதில்லை
செருப்பால் அடித்தாலும்
உடம்புக்கு வலிப்பதில்லை

நிலைக்காது என்பதாலேயே
செல்வோம் செல்வமென்றானது
இதை உணர்ந்து மனிதன்
திருந்தும் நாள் எப்போது?
« Last Edit: September 20, 2020, 09:40:39 PM by KoDi »

Offline Raju

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 253
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am the Perfect version of me !!
வாழ்வதற்கும்
வீழ்வதற்கும்
வந்து போகும் மேகம் நீ
நான்
தேர்வதற்கும்
தோற்பதற்கும்
நின்று செய்த
வினையும் நீ .

கடந்து போன காலத்தின்
கறைபடிந்த
புழக்கம் நீ
நடை
பயின்று வரும் காலத்தின்
சொர்க்க வாசல்
கதவும் நீ..

வரும்போதும்
கூட நீ வருவதில்லை
கண்ணே
போகும்போதும்
கூடிச் சேர்வதில்லை..

என்னோடு சிலரை
அந்நியப்படுத்தி
வேண்டாத சிலரை
ஐக்கியப் படுத்தி
எல்லோருடனும்
நீ ஆடும்
சதுரங்கத்தில்
தோற்றவர் பலர்
தோற்றம்
மறந்தவர் பலர்...

யார் வரினும்
யார் போயினும்
என்னே...
நீ இருந்தால்
இறுதி வரை
ஊர் வரும்

கூடவே இருந்து
குழி பறிக்கும்
பணமே
உன் பற்றாக்குறையை
நான் உணருமுன்
ஊன் உருகிடுதல் வேண்டும்.

Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 120
  • Total likes: 481
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
கும்பிட போன தெய்வம்
குறுக்கே வந்தது போல
இன்று பணத்தையே
தெய்வமாக கும்பிடும்
இந்த உலகத்தில்
நடக்கும் அவல
நிலையைப் பாருங்க

என்னய்யா பணம்?
இன்று வரும்...
நாளை போவும்...
உண்மை உழைப்பில் தான்
வரும்
நீ தேடி
செல்லும் பணம்

இதை தேட விரும்பும்
மனிதனின் இதயமோ...
தவியாய் தவிக்கிறது
துடியாய் துடிக்கிறது
அனலாய் எரிகிறது
காலத்தின் கோலத்தின் 
அவல நிலையில் 
சிக்கி தவிக்கிற
மக்களின் எண்ணிக்கை
கோடியோ... கோடி...

அழகிய உலகில்
பாவ கதவின்னுள்
நுழையப்பட்ட
மக்களால்
வந்த பாவத்தின்
சாபம் தான் மரணம்
இன்று உலகை
ஆட்டிப்  படைக்கும்
இந்த
கொரோனா வைரஸ்

எத்தனை உயிரை
எடுத்திருக்கு
எடுத்த உயிரை
யாராவது மீண்டும்
கொடுக்க முடியுமா?
இந்த பணத்தை
கொண்டு தான்
போன உயிரை
வாங்க முடியுமா?

பணம் போனா...
அது வேற ரூபத்தில் வரும்
உயிர் போனா...
அது எப்பவும் வரமுடியாத
ஏட்டில் எழுதப்பட்டடிருக்கும்

இந்த  உலகமோ
இன்று பணம் இல்லா
திண்டாட்டத்தில் இருக்கிறது
எவ்வளோ பெரிய
அவல நிலை
நாட்கள் வாரங்களாகி...
வாரங்கள் மாதங்களாகி...
மாதங்கள் வருஷங்களாக...
முடியும் தருணத்தில்
இருந்தாலும்...
வேலை இல்லைனா...
வாழ பணம் இல்லையே!

எல்லா ஐஸ்வரியங்களும்
தேவனிடத்தில் வருகிறது
கொடுப்பதற்கும்
எடுப்பதற்கும்
உரிமை
அவரிடத்தில் இருக்கிறது
காரியத்தை வாய்க்க
செய்கின்ற தேவனை நோக்கி
இன்று உலகமே...
கண்ணீர் வடித்து கூப்பிடுகிறது

பணம் பணம் என்று 
பணம் தரும் சுகத்தில் 
வாழ்ந்தவர்களை விட 
அதில் வீழ்ந்தவர்களே...
அதிகம்

இந்த கொடூரமான
நெருக்கடியில்
உங்களை அரவணைப்பது
இந்த பணம் இல்லை
நம்மிடம் உள்ள குணமே...

பணத்தை மட்டும்
தேடுவது
உன்
நோக்கமாக  இல்லாமல்
நல்லதையே செய்
நல்லதையே பேசு
நீ
தேடி சென்ற பணம்
இனி
உன்னை தேடி வரும்

பணம் என்றால்....
பிணமே வாயைத் திறக்கும்
இந்த உலகத்தில்...
உன்னால்
பணத்தால் எதையும் 
வெல்ல முடியாது
நீ
காட்டும் அன்பினால் மட்டுமே
இந்த உலகத்தை
ஒரு நொடியில் வென்றிடலாம்
 
பணத்திற்காக உயிரை கொடுத்து 
உயிருள்ள அன்பை
ஒருநாளும் துளைத்து
விடாதே!
« Last Edit: October 02, 2020, 12:35:56 AM by JsB »