பச்சைப்பசேலென்ற பூமித்தளம்,
இன்று இரத்தம் காணும் யுத்தக்களம்!
மாந்தர் உல்லாசமாய் உலவிய ஊர்,
இன்று நித்தம் காண்கிறது கொடிய போர்!
நீர்கொண்ட அழகு கேணிகள்,
குருதி கலந்து செந்நிறமாகின...
பொழியும் பனிமழைத் தூரல்கள்,
அப்பாவிகளின் கண்ணீர்த் துளிகளாகின...
உயிர்களை மாய்க்க வெடிகுண்டுகள்...
வீதிகள் எங்கிலும் உடற்துண்டுகள்...
ஒவ்வொரு நிமிடமும் செத்துப் பிழைக்கும் ஜனங்கள்...
செல்களுக்கு இரையாகின பாவப்பட்டப் பிணங்கள்...
தினம் தினம் மயான வாசங்கள்...
வாழ்வுக்கும் சாவுக்குமிடையை சுவாசங்கள்...
சிரிப்பொலிகள் எல்லாம் கதறல்கள்...
கனவுகள் எல்லாம் இன்று சிதறல்கள்...
பகல் இரவு பாராது உயிர் காக்க
பாடுபடும் இராணுவம் ஒருபுறம்!
அவர் முயற்சிகள் கடந்தும்
உயிர்விடும் ஜீவன்கள் மறுபுறம்!
நெஞ்சை ஆழமாய் நெய்யும்
கோர யுத்தங்கள் போதுமே...!
அரசியல் மனம் வைத்தால்
முடிவுறும் யாவுமே...!
யுத்த விமானங்கள் பறக்கும் விசும்பில்
சமாதான புறாக்கள் பறக்க வேண்டும்...
பகைமை கொண்ட உள்ளங்களில்
கருணைப் புன்னகை தவழ வேண்டும்...
உயிர்களின் மதிப்பை
ஆட்சிகள் உணர்ந்தால் போதும்...
யுத்தமே இல்லா அமைதி பீடமாய்
நாளைய வையகம் மாறும்...!!!!!