உருகும் மனதின் மெழுகுவர்த்திகள்
முடிவிலியென நீளும் இரவில்
மெழுகுவர்த்தியின்
சிறு வெளிச்ச அலைகள்
நினைவுகளை சிதறடித்து செல்கின்றது
மனதின் உறைநிலைகளை
கடந்து செல்லவியலாத தருணங்களை
நிழலென காட்டும்
வெளிச்சக்கீற்று
நினைவடுக்குளின் இருள் ஓரங்களை
கீறி காட்டுகிறது.
எத்தனை தேநீர் சந்திப்புகள்,
எத்தனை விலகி நிற்தல்கள்,
எத்தனை கைக்கோர்ப்புகள்,
எத்தனை கை உதறல்கள்
கடுஞ்சொற்களும், தலையணை விசும்பல்களும்
நினைவுகளை மீறி வெளிப்படும்
பின்னிரவில்
ஒரு எரிநட்சத்திரமென ஒளிர்கிறது
மெழுகுவர்த்தி.
வானம் மீறி எங்கு பறந்தாலும்
இரவில் கூடடையும் பறவை போல்
கைநீட்டி அழைக்கும் இருளுக்குள்
மனச்சிறகுகளை சுருக்கிக்கொண்டு
தஞ்சமடைய விழைகிறது மனம்
இருளைவிட சிறந்ததொரு
இளைப்பாறும் மடியில்லை.
இது தான் சாசுவதமென இருளின்
புகலிடம் தேடும் நொடியில்
தோன்றுகிறது மெழுகுவர்த்தியின்
சிறு வெளிச்சக் கீற்று.
துன்புறுத்தும் மெழுகுவர்த்தியின்
வெளிச்சக்கீற்று
கசிந்துருக்கும் மனதை எவ்விதத்திலும்
ஆற்றுப்படுத்துவதில்லை.
துரோகங்களையும், மனதை கலைத்துப்போடும் மனிதர்களின்
தந்திரங்களையும்,
நட்பெனவும் காதலெனவும்
தோன்றும் காட்சிப்பிழைகளையும்,
குற்றவுணர்ச்சிகளையும்
நம்பிக்கையற்ற நிலைகளையும்
சொற்களற்று ஆழ்ந்திருக்கும் மௌனங்களையும்,
அத்தனையும் நாடகம், அத்தனையும் நாடகம் என கூவும்
உடைந்த கண்ணாடி சில்லுகளாய்
இருக்கும் மனதையும்,
வெளிச்சமிட்டு காட்டும் மனதின் மெழுவர்த்தியை
மிகத் தீவிரமாக வெறுக்கிறேன்
சிலசமயங்களில்
இருளினூடே வழிந்தோடும் சிறு வெளிச்சக்கீற்றுகளும்
தேவையானதாக இருக்கிறது.
இருள் மறைக்கும் பிம்பங்களை
நிழலலென காட்டும் ஒளியில்
புதியதொரு ஆறுதல் பிறக்கிறது
தனித்துவிடப்படவில்லையென.
சிலசமயங்களில்
இருளினூடே வழிந்தோடும் சிறு
வெளிச்சக்கீற்றுகள்
தேவையற்றதாக இருக்கிறது,
மறக்க விரும்பும் நினைவின் சுவடுகளை
நிழலலென காட்டும் ஒளியில்
புதியதொரு பயம் பிறக்கிறது
மீண்டும் தனித்துவிடப்படுவோமென.
இருளும் ஒளியும் கலந்து நிற்கும்
குழப்பமானதொரு தருணத்தில்
மெழுகென கரைந்துருகி கொண்டிருக்கும் என்
மனதின்
மீதொரு மற்றொரு வெளிச்சத்தின்
சாயல் விழுகிறது.
மீண்டும் மீண்டுமென காயங்களை
தாங்கி நிற்கும் மனதிற்கு
மெழுகை போல் உருகி நிற்கும் சாயல்,
அது
மீண்டும் உருகி
மீண்டும் உருகி
மீண்டு நின்று
பின் மீண்டும் உருக தயாராகி இருக்கும்.
மெழுகினை போன்ற மனதிற்கு
இருளும், வெளிச்சமும்
சாசுவதமென விளங்கும் கணம்
அங்கே மெழுகென உருகிக்கொண்டிருந்தது
சர்வநிச்சயமாய்
நான் தான்