கால சக்கரம்
கடந்து பயணித்தால்
காசை கண்டு பிடித்தவனை
கடவுளாக்கி வரலாம் ..
அவனோடு
ஆயுளுக்கு ஒரு
ஒப்பந்தமும் போட்டு வரலாம்
ஊர் அழிந்து
உருக் குலைந்து போனாலும்
உருகாத தங்கம்
ஒரு கிலோ இருக்க வேண்டும்
கோடி துணி யோடு
கடைசி ஊர்வலம் போனாலும்
கோடீஸ்வரன் பிணம் என்று
ஊரார் புகழ வேண்டும் ..
நான் வாழ
என் மக்கள் வாழ
அவர்தம் சுற்றம் வாழ்
ஆழமாக யோசித்து
ஒரு வரம் அழகாக யாசிக்க வேண்டும்
பரிகாரமாக
ஆண்டுக்கு ஒரு முறை
அழகாக பொங்கலிடுவேன் ..
கனவுதான்
சிறு கற்பனைதான்
மனிதம் விற்று
புனிதம் தின்று
கோடிகளை பார்ப்பதில்
அர்த்தமில்லை
நானும் அற்பம் இல்லை ..
நீ இருந்தாலும்
நின் மதி இல்லை
இல்லையெனினும் நின்மதி இல்லை ..
ஊர் பிரிந்து
உறவு பிரிந்து
கொண்டவள் பிரிந்து
கோபுரம் ஏறி
கோடீஸ்வரன் ஆக
இரும்புப் பறவையில்
இருள் இதயம் கொண்டு
பறந்தவர் நிலையெல்லாம்
பிரிந்தவரை கேடடால் தெரியும் ..
நீ வேண்டும் தான்
அளவோடு ,
நீ வேண்டும் தான்
அவசியதோடு,
நீ வேண்டும் தான்..
உன்னை வைத்து
மண்ணை பெண்ணை ஏன்
உலகையே எடை போடும் வரை
நீ வேண்டும் தான் ,
அந்த கடவுளையே
காட்டுவதட்கும் நீதான்
ஆகவே நீ
வேண்டும் தான் ..
காகிதத்தில்
ஓர்
கலர் கலர் கடவுள் ...