உணர்வுகள் ஆர்ப்பரித்த ஒரு அதிகாலையில்
என்னை தேடி களைத்திருந்தாய்..
பீறிட்டு கிளம்பிய அன்பை புத்துணர்ச்சி ஊட்டும்
ஒரு அதிகாலை வாழ்த்தோடு தொடர்ந்திட முனைகையில்,
எங்கோ தென்பட்ட ஒரு உதாசீன ரேகை
ஒன்றால் உணர்வுகள் சூறையாடப் பட்டதாய் உணர்ந்து...
தொண்டை அடைக்க இல்லாத ஏதேதோ
காரணம் சொல்லி தூரமாகிறாய்.
உணர்வதும், உணர்த்தலும் சேர்ந்து தானே வாழ்க்கை..
பின்தொடர்ந்து வரும் என்னை,
தெரியும் உனக்கு
என் அன்பும் தெரியும் என்பது உண்மையாகவே இருந்தாலும்
ஒவ்வொரு முறையும் உனக்கான
அன்பை உணர்வுப்பூர்வமாய்
உணர்த்துதல் என்
கடமை தானே!!!.
மன்னித்துக்கொள்!
காத்திருக்கிறேன்...
உன் அருகாமை முன்போல் இதமானதாக இல்லை..
நீ இருப்பதாலேயே உயிர்பெற்ற பல
பொழுதுகள் என் நினைவுகளில் இப்போதும் உண்டு.
உன்னை பிரிவதென்பது வாழ்க்கையின்
ஆகப்பெரிய இழப்பாக இருந்த ஒரு காலம் இருந்தது.
தேடல்கள் காலத்திற்கு உட்பட்டவை..
இறந்த காலங்கள் தேடல்களோடே இறந்து விடுகின்றன.
என் அருகாமை உனக்கு தரக்கூடும்
அசௌகரியம் எனக்கு அயர்ச்சி அளிக்கிறது.
எந்நேரத்திலும் நீ விடைபெறலாம்,
இந்த அருகாமை இதமானது தான்..
ஆனாலும் உன் அருகாமை முன்போல் இதமானதாக இல்லை...
ஏன் சொல்லவே இல்லை
என மாற்றி மாற்றி கேட்டு ஆதங்கம் கொள்கிறோம்....
நிராகரிப்பு நிகழாமலே நிராசையாகி
போன அந்த காலத்தை ஆராய்ந்து, ஆராய்ந்து
ஓய்ந்து போகிறோம்.
உனக்கும் எனக்கும் இடையே நாம்
உருவாக்கிய கையெட்டும் தூர இடைவெளிகளினூடே
வெட்கப்பட்டு, தலை கவிழ்ந்து கடந்து சென்றிருக்க கூடும் காதல்.
நீயும் நானும் உணரவே இல்லை..
வெறுப்பின் நூலாம்படைகள்
சூழாத பேரன்பு உன்னோடானது.
காலமும், தூரமும் சேர்ந்து
உண்டாக்கிய பாதிப்பென்பது அனுதாபத்தையும்,
ஆதங்கத்தையும் கூட்டிப் போயிருக்கிறது என்பது மட்டுமே..
உன்னை வெறுத்தல் சாத்தியமில்லாத
நிலையென்பது உன்னை நேசித்தல் சாத்தியமில்லை
என்பதற்கான ஆறுதலாகி மாறுதலாகி நீளும்.
சுழன்றோடும் காலச்சக்கரம்
நம்மை நசுக்கி போகட்டும், ஆயினும் நம் நேசத்தை
துயில் கொள்ள வைத்தலைத் தாண்டி
ஏதும் செய்திட இயலா..
காலங்கள் தாண்டி எங்கேனும் காணுகையில் சிந்திப்போகும்
ஒரு புன்சிரிப்பில் இயல்பு மாறாமலே உயிர்த்திருக்கும் அது....உண்மை காதலாய்......