பற்றுப் போடு… பறக்கும் தலைவலி
வயது 55. ஏறக்குறைய முப்பது ஆண்டுகாலமாக தலைவலியால் அவதிப்படுகிறேன். தலைவலி விட்டுவிட்டு வரும். ஒரு பக்கமாக வலிக்கும். தலையின் பின்புறம் சிலநேரங்களில் வலிக்கும். பலமுறை தலைவலியைத் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளேன். தலைக்குக் குளித்தாலும், குளிர்ந்த பானங்கள் குடித்தாலும், அதிக வெயில், மழைக்காலம் என அனைத்துத் தட்பவெப்பக் காலங்களிலும் தலைவலியால் அவதிப்படுகிறேன். இதை எப்படிக் குணப்படுத்துவது?
தலைவலி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. தலைக்குத் தண்ணீர் விட்டுக் குளித்தவுடன் அல்லது குளிர்ந்த பானங்களைக் குடித்தவுடன் தலைவலி வருவதாக இருந்தால், அது தலையைச் சார்ந்த “தர்ப்பகம்’ எனும் கபதோஷத்தின் சீற்றத்தினால் விளைந்ததாகக் கருதலாம். இந்தக் கபதோஷத்தின் தாக்கம் கூடினால், தலையில் நீர்க்கோர்வை, நீர் முட்டல், கண்ணீர் கசிதல், லேசான காய்ச்சல் போன்றவை தென்படும். அதற்கு ரேவல் சீனிக் கிழங்கு 100 கிராம்,வேப்பம் விதை 40 கிராம், சதகுப்பை 20 கிராம், சோம்பு 20 கிராம், கருஞ்சீரகம் 20 கிராம் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காயவைத்து, ஒன்றாக இடித்துச் சூர்ணம் செய்து, சிறு கண் சல்லடையில் சலித்துக் கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.
சுமார் 1-2 டீ ஸ்பூன் சூரணத்தைத் தண்ணீரில் குழப்பி இரும்பு அல்லது ஸ்டீல் கரண்டியிலிட்டு, இளந்தீயில் சூடாக்கி, பொறுக்கும் சூட்டில் நெற்றி, நெற்றிப் பொட்டு முழுவதும் தோல் மூடும்படியான கனத்திற்குப் பற்றுப் போடவும். ஒரு நாளைக்கு இரண்டு தடவை போடலாம். மண்டை நீரை வற்ற வைத்துத் தலைவலியைக் குறைத்துவிடும்.
அதிக வெயில், ரத்த அழுத்தம் அதிகமிருத்தல், உடல் சூட்டினால் அதிகத் தலைவலி, கடும்காய்ச்சலால் ஏற்படும் தலைவலி, கிறுகிறுப்பினால் ஏற்படும் தலைவலி போன்றவை தனி பித்த தோஷத்தின் கெடுதியினால் ஏற்படுகிறது. அதற்கு நெல்லிக்காய் பச்சையாக இருந்தால் காய்களை நசுக்கிக் கொட்டைகளை நீக்கிவிட்டு மிளகாய் அரைக்காத அம்மியில் துவையல் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் உலர்ந்த வற்றலை (நெல்லிமுள்ளி), நெல்லிக்காய் போல அரைத்தும் பயன்படுத்தலாம். சுமார் ஒரு பெரிய நெல்லிக்கனியளவு எடுத்துக்கொண்டு, அரைத்த சந்தனம் நெல்லித் துவையலில் பாதியளவு சேர்த்து கலந்து கொள்ளவும். நெற்றியிலும், உச்சந்தலையிலும் சுமார் புளியங் கொட்டை கனம் பற்றுப் போடவும். பச்சைக் கற்பூரம் சுமார் 2-3 அரிசி எடை சேர்ப்பது விசேஷம்.
வாயு தோஷத்தின் தனி ஆதிக்கத்தினால் ஏற்படும் தலைவலியில், வாசனைக் கோஷ்டம் அல்லது வெண்கோஷ்டம் சுமார் கட்டைவிரல் கனத்திற்குக் கெட்டியாக ஒரு துண்டம் எடுத்து, கல்லில் வைத்துச் சிறிது தண்ணீர் விட்டரைத்து எடுத்த விழுது இரண்டு மூன்று சுண்டைக்காயளவு, நெற்றிப் பொட்டுப் பக்கத்தில் பற்றுப் போடவும். வாயுதோஷத்தின் தனி ஆதிக்கத்தால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி, மாற்றி மாற்றி, விட்டுவிட்டு ஏற்படும் தலைவலிகளுக்குச் சிறந்த கைகண்ட மருந்து. இதைச் சுடவைத்தும் சுட வைக்காமலும் செüகர்யம்போல் பூசலாம்.
ஆக எந்தெந்த நிலைகளில் தோஷங்களில் சீற்றத்திற்கு ஏற்ப, மேலுள்ள பூச்சு மருந்துகளை உபயோகித்து நீங்கள் குணம் பெறலாம். ஆயுர்வேத மருந்துகளில் தசமூலரஸôயனம், அகஸ்திய ரஸôயனம் போன்ற சிறந்த மருந்துகளில் எது உங்களுக்கு உகந்ததோ, அதை ஆயுர்வேத மருத்துவரின் கூற்றுப்படி இரவில் படுக்கப் போகும் முன்பு சாப்பிடவும்.