ஓ
தென்றலே
வந்துவிட்டதே எங்கள் தெருவழியாய்
எங்களுக்கு தேவை உன் கனல் கக்கும்
காற்றல்ல
ஏழைகள் எங்களுக்கு
உன்காற்று கூட ஒரு வேலை உணவு தான்
காற்றை குடித்தும் உயிர் வாழ்பவர்கள்
நாங்கள்
விதியை நினைத்து
நாங்கள்- மதி
வானில் வந்தவுடன்
கட்டும் வயிற்று ஈரத் துணிகூட
கதிரவனை கண்டு தான்
காயும் என்றிருந்தோம்
ஆனால் …….
கட்டிய துணி கூட கருகிவிட்டது
வயிற்றின் வெப்பம் தாங்காமல்
இங்கே
சிந்திய வியர்வைக்கு கூட
சில்லறை சேரவில்லை
அங்கே
செயற்கை குளிர் அறையில்
சேர்த்து வைக்கும் பணமுதலைகள்
உண்பதில் தட்டுப்பாடு
ஒருபுறம் எங்களுக்கு
உண்பதில் கட்டுப்பாடு
மறுபுறம் அவர்களுக்கு
இரண்டுமே இயலாமை தான்
பட்டாடை ஒரு புறம்
கைபட்டால் கிழிந்துவிடும்
கந்தல் ஆடை மறுபுறம்
வேடிக்கை உலகம் இது
தென்றலே
எங்கள் தெருவழியே நீ வந்ததும்
விந்தை தான்
தேர்தலில் போட்டியிட
நீயும் தீர்மானித்து விட்டாயோ
தென்றலே உன்னிடம் சொல்ல
இனி ஒன்றுமில்லை
காலதேவனே
நீ
சமநிலை அடைய
செய்வதெப்போது ?