Author Topic: மணிமேகலை  (Read 29164 times)

Offline Anu

Re: மணிமேகலை
« Reply #15 on: February 28, 2012, 09:19:23 AM »
15. பாத்திரங் கொண்டு பிச்சை புக்க காதை

(பதினைந்தாவது மணிமேகலை பாத்திரங் கொண்டு பிச்சைக்கும் பெருந்தெரு போய பாட்டு)

அஃதாவது அறவணர்பால் ஆபுத்திரன் வரலாறும் அவன் சிந்தாதேவி அருளிய அமுதசுரபியைப் பெற்று ஆருயிர் ஓம்பியதும் அமுதசுரபியின் மாண்பும் பிறவும் கேட்டறிந்த பின்னர் அமுதசுரபியை அங்கை ஏந்தி அதன்பால் ஆருயிர் மருந்து ஒழிவின்றிச் சுரத்தற் பொருட்டு முதன் முதலாக, பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை யேற்றல் பெருந்தகவுடைத்து என்னும் கொள்கையுடையவளாய்ப் பிக்குணிப் கோலத்தோடு பெருந்தெருவிலே பிச்சை ஏற்றற்குச் சென்ற செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்-ஆபுத்திரனை நாவான் நக்கிப் பாலூட்டி ஏழு நாள்காறும் புறம் போகாமனின்று புரந்த பசு அந் நல்வினைப் பயனாலே சாவக நாட்டிலே மண்முகன் என்னும் மாமுனிவன்பால் எய்திய பொற் கோடும் பொற் குளம்பும் உடைய தாய்க் கண்டோ ரெல்லாம் கைதொழு தேத்தும்படி ஈனா முன்னமே இன்னுயிர்க் கெல்லாம் தான் முலை சுரந்தூட்டி அருளறம் பேணா நின்ற செய்தியும்; அம் மாமுனிவன் அப் பசுவின் வயிற்றிலே பொன் முட்டையிலே மழை வளம் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும் உயிர் காவலன் ஒருவன் வந்து பிறப்பான் என்று தன் இருத்தியால் அறிந்து கூறியதும் ஆகிய இச் செய்திகளையும் அறவணர் மீண்டும் மணிமேகலைக்குக் கூறி, அப் பசுவின் வயிற்றில் புண்ணிய மிகுதியாலே ஆபுத்திரன் பொன் முட்டையினூடே மக்கள் உருவிலே கருவாகி வளர்ந்து பிறத்தலும் ஆபுத்திரன் மீண்டும் பிறந்த அப்பொழுது உலகின்கண் புத்தபிரான் பிறக்கும்போதுண்டாகும் நன்னிமித்தமெல்லாம் நிகழ்ந்த செய்தியும் உலகத் துள்ளோர் வியப்புறுதலும் துறவோர் கந்திற்பாவையின்பாற் சென்று அந் நன்னிமித்தங்கட்குக் காரணம் வினாதலும் அஃது அறவணர்பாற் கேட்டறிமின் என்றதும் அவரெல்லாம் தம்பால் வந்து கேட்ட செய்தியும் கூறி மணிமேகலையை அறஞ்செய்யப் பணித்தலும் அவள் பிச்சை ஏற்கப் பெருந்தெரு அடைந்ததும், காயசண்டிகை ஆதிரை மனையகத்திலே ஏற்க வேண்டும் எனலும் பிறவும் கூறப்படும்.

இன்னும் கேளாய் இளங்கொடி மாதே!
அந் நாள் அவனை ஓம்பிய நல் ஆத்
தண்ணென் சாவகத் தவள மால் வரை
மண்முகன் என்னும் மா முனி இடவயின்
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது
தன் நலம் பிறர் தொழத் தான் சென்று எய்தி
ஈனாமுன்னம் இன் உயிர்க்கு எல்லாம்
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும்
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த
ஆன்ற முனிவன் அதன் வயிற்று அகத்து  15-010

மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும்
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும்
குடர்த் தொடர் மாலை பூண்பான் அல்லன்
அடர்ப் பொன் முட்டை அகவையினான் என
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தற்காத்து அளித்த தகை ஆ அதனை
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின்
ஆங்கு அவ் ஆ வயிற்று அமரர் கணம் உவப்பத்
தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவினுக்கு  15-020

ஒரு தான் ஆகி உலகு தொழத் தோன்றினன்
பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள் நீ
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து
மண்அகம் எல்லாம் மாரி இன்றியும்
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது
போதி மாதவன் பூமியில் தோன்றும்
காலம் அன்றியும் கண்டன சிறப்பு என  15-030

சக்கரவாளக் கோட்டம் வாழும்
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து
கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய
அந்தில் பாவை அருளும் ஆயிடின்
அறிகுவம் என்றே செறி இருள் சேறலும்
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன்
ஆங்கு அவன் தன் திறம் அறவணன் அறியும் என்று
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள்
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும்  15-040

புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி
மக்களை இல்லேன் மாதவன் அருளால்
பெற்றேன் புதல்வனை என்று அவன் வளர்ப்ப
அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின்
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன் தான்
துறக்க வேந்தன் துய்ப்பிலன்கொல்லோ?
அறக் கோல் வேந்தன் அருளிலன்கொல்லோ
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும்
நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம்
அலத்தல்காலை ஆகியது ஆய் இழை!  15-050

 வெண் திரை தந்த அமுதை வானோர்
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு
வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும்
அறன் ஓடு ஒழித்தல் ஆய் இழை! தகாது என
மாதவன் உரைத்தலும் மணிமேகலை தான்
தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு
பிக்குணிக் கோலத்துப் பெருந் தெரு அடைதலும்
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க் குறுமாக்களும்
மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும்  15-060

கொடிக் கோசம்பிக் கோமகன் ஆகிய
வடித் தேர்த் தானை வத்தவன் தன்னை
வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய
உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன்
உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு
பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி
உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த
மதுமலர்க் குழலாள் வந்து தோன்றி
பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது
திப்பியம் என்றே சிந்தை நோய் கூர  15-070

மண மனை மறுகில் மாதவி ஈன்ற
அணி மலர்ப் பூங் கொம்பு அகம் மலி உவகையின்
பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம்
பிச்சை ஏற்றல் பெருந் தகவு உடைத்து எனக்
குளன் அணி தாமரைக் கொழு மலர் நாப்பண்
ஒரு தனிஓங்கிய திருமலர் போன்று
வான் தருகற்பின் மனை உறை மகளிரின்
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ
ஆதிரை நல்லாள்? அவள் மனை இம் மனை
நீ புகல்வேண்டும் நேர் இழை! என்றனள்  15-080

 வட திசை விஞ்சை மா நகர்த் தோன்றித்
தென் திசைப் பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை
மாதவன் தன்னால் வல் வினை உருப்ப
சாவம் பட்டு தனித் துயர் உறூஉம்
வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும்
காயசண்டிகை எனும் காரிகை தான் என்  15-086

உரை

அறவண அடிகள் மணிமேகலைக்கு ஆபுத்திரனைப் புரந்தருளிய ஆன் அந் நல்வினைப்பயனாலே சாவகத்தீவிற்றோன்றினமை கூறுதல்

1-8: இன்னும்..........ஊட்டலும்

(இதன் பொருள்) இளங் கொடி மாதே இன்னும் கேளாய்- இளைய பூங்கொடி போலும் மெல்லியல்புடைய மணிமேகலையே அருளறத்தின் மாண்பினை யுணர்த்தும் செய்திகள் இன்னும் சிலவுள அவற்றையும் கூறுவேம் கேட்பாயாக! அந் நாள் அவனை ஓம்பிய நல் ஆ பண்டு சாலி என்னும் வடமொழியாட்டி ஈன்ற குழவிக் கிரங்களாகிக் கோவலர் சேரி மருங்கிலே ஒரு தோட்டத்திலே போகட்டுப் போன குழவியாகிய அவ்வா புத்திரனைப் பால் சுரந்தூட்டி ஏழு நாள் காறும் புறம் போகாது நின்று பாதுகாத்த அறந்தரு நெஞ்சத்து அந்த நல்ல ஆவானது அவ்வறங் காரணமாக மாறிப் பிறந்த பிறப்பிலே; தண் என் சாவகத்துத் தவளமால் வரை- எப்பொழுதும் தண்ணென்று குளிர்ந்திருக்கின்ற சாவக நாட்டின் கண்ணதாகிய தவள மால் வரை என்னும் மலையிடத்தே தவஞ் செய்திருந்த; மண்முகன் என்னும் மாமுனி இடவயின் தான் சென்று எய்தி- மண்முகன் என்னும் பெயரையுடைய சிறந்த முனிவருடைய தவப்பள்ளியின்; பொன்னின் கோட்டது பொன் குளம்பது தன் நலம் பிறர் தொழ ஆவயிற்றிற் புகுந்து கருவாகி- பொன்னாலியன்ற கோடுகளையும் பொன்னாலியன்ற குளம்புகளையும் உடையதாகத் தனது அழகினைக் கண்ட துணையானே இது தெய்வத்தன்மையுடைய தென்று யாவரும் கை குவித்துத் தொழத்தகுந்ததாக ஆவாகவே பிறப்பெய்தி வளர்ந்து; ஈனா முன்னம்-தான்  கன்றீன்பதற்கு முன்னரே; தான் முலை சுரந்து தன்பால் ஊட்டலும்-தன் அறந்தரு நெஞ்சம் காரணமாகத் தானே தனது முலை சுரக்கப் பெற்றுப் பிலிற்றாநிற்ப தன் தீம்பாலைப் பிறவுயிர்கட்கு ஊட்டா நிற்ப என்க.

(விளக்கம்) யாதானும் ஓர் அறத்தின்கண்  ஆற்றுப் படுத்துபவர் அவ்வறத்தினைப் பல்லாற்றானும் அறிவுறுத்தியவழிக் கேட்போர்க்கு அதன்கண் ஊக்கம் மிகுத லியல்பாதல் பற்றித் தேவர்க்கும் மக்கட்கும் ஒத்த அறங்கூறிய அறவண அடிகளார் மீண்டும் அறப்பயனை அறிவுறுத்துபவர் இத்தகைய நல்லறஞ் செய்த நம்பியாகிய ஆபுத்திரன் மீண்டும் தனது அறந்தரு நெஞ்சத்திற்கேற்பவே நிற்பிறப்பெய்தி மீண்டும் அவ்வற நெறியே பற்றி ஒழுகும் செய்தியைக் கூறத்தொடங்கு பவர் தொடக்கத்தே முற்பிறப்பிலே அவனைப் பாலூட்டிப் பாதுகாத்த ஆவானது மீண்டும் கண்டோர் கைதொழத் தகுந்த வியத்தகு ஆவாகவே தோன்றி ஈனாமுன்னரே பால் சுரந்தூட்டிய செய்தியையும் ஆருயிர்கள் அன்புளஞ் சிறந்தவழி மாறிப் பிறக்கும் பிறப்பினும் அவ்வன்புத் தொடர்பாலே அணுக்கராகவே பிறத்தலுமாகிய இச் செய்திகளை அவள் கேட்டல் அவட்கு ஆக்கமாம் என்னும் கருத்தாலே இன்னும் கேளாய் என்று தொடங்குகின்றனர். இன்னும் கேளாய்! என்றது இவற்றைக் கேட்டல் உனக்கு இன்றியமையாதாம் எனபதுபட நின்றது.

அந்நாள் என்றது ஆபுத்திரன் சாலிவயிற்றிற் பிறந்தபோது அவள் அக்குழவியைத் தோன்றாத்துடவையிலிட்டுச் சென்ற நாளைச் சுட்டிகின்றது

தவளமால் வரை என்றது, தவளமலை என்னும் பெயருடைய மலை என்றவாறாம். இனி, பனிபடர்ந்து வெண்மையாக விளங்குமொரு பெரிய மலை என்பது பொருளாகக் கோடலுமாம். மாமுனி இவ் வயின் சென்றெய்த என்றாரேனும் அம்முனிவனுடைய  நல்லாவின் வயிற்றிற்பிறந்து என்பது கருத்தாகக் கொள்க. என்னை? பொன்னின் கோட்டது பொற் குளம்புடையதாய்ப் பிறர் தொழத்தோன்றி ஈனா முன்ன முலை சுரந்தூட்டலும் எனப் பாட்டிடை வைத்த குறிப்பாலே பசு வயிற்றுப் பிறந்து வளர்ந்து ஈனா முன்னமே பால் சுரந்தூட்டியது என்பது பெற்றாமன்றே

தன் நலம்- தனது அழகு

மண்முக முனிவன் தனது அவதிஞானத்தால் ஆபுத்திரன் அப் பசுவின் வயிற்றில் மக்கள் வடிவுடன் பிறப்பான் என்று முன்னரே அறிந்து கூறுதல்.

9-14: மூன்று...........வயினானென

(இதன் பொருள்) மூன்று காலமும் தோன்ற நன்குணர்ந்த ஆன்ற முனிவன்-இத்தகு பசுவிற்குரியவனும், மூன்று காலத்து நிகழ்ச்சிகளும் தன்னுள்ளே தோன்றும் வண்ணம் மெய்ப் பொருளையுணர்ந்தவனும் ஆன்றவிந்து அடங்கியவனுமாகிய அம் மண்முக முனிவன் அந்த அவதி ஞானத்தாலே உணர்ந்து அதன் வயிற்று அகத்து-அப் பசுவினுடைய திருவயிற்றிலே கருவாகி; மழைவளம் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும் உயிர் காவலன் ஒருவன் வந்து தோன்றும்-இச் சாவக நன்னாட்டிலே மழை தன்னாற் பிறக்கும் வளங்களைச் சுரந்து வழங்குமாறும் ஈண்டு நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாத்தற்கும் ஆருயிர்க் காவலன் ஒருவன் வந்து பிறந்தருளுவன்; குடர்த்தொடர் மாலை பூண்பான் அல்லன் பொன் அடர் முட்டை அகவயினான் என- அவ்வாருயிர்க் காவலன் இப் பசுவின் வயிற்றிலே மகனாகப் பிறக்குங் காலத்தே கன்று பிறத்தல் போலாதல் மகன் பிறத்தல் போலாதல் குடரின் தசைத் தொடராலியன்ற மாலை பூண்டு பிறவான் பொன் தகட்டாலே இயன்றதொரு முட்டையின் அகத்திருப்பவனாகப் பிறந்தருளுவன் என்று முற்படவே பிறர்க்குக் கூறிபடியே என்க.

(விளக்கம்) சாவக நாடு முன்னரே மழை வளங் கரத்தலின் மன்னுயிர் மடிந்து வற்கடமுற்றுக் கிடத்தலாலே இந் நாட்டில் இற்றைக் கிருக்கும் இன்னலெலாம் தீர இப் பசுவின் வயிற்றிலே ஓருயிர் காவலன் வந்து தோன்றுவான் எனவும், இப் பசு ஏனைய பசுக்கள் போலாது பொற்கொம்பும் பொற் குளம்பும் உடையதாகப் பிறந்தாற் போன்று இதன் வயிற்றிற் பிறக்குங் காவலனும் குடர்மாலை பூண்டு பிறவாமல் பொன் முட்டையினூடு உருவாகி வந்து பிறப்பான் எனவும் அம் முற்றுணர்வுடைய முனிவன் முற்படவே கூறினர் என்பது கருத்து. அடர் தகடு.

அகவயினான்- உள்ளிடத்துள்ளான்

ஆபுத்திரன் சாவக நாட்டில் ஆவயிற்றுப் பிறத்தல்

15-21: பிணி........கேணீ

(இதன் பொருள்) பிணி நோய் இன்றியும் பிறந்து அறஞ் செய்ய மணிபல்லவத்திடை மன்னுயிர் நீதோன்- தன்வயமாகப் பிணித்துக் கொண்டு துன்புறுத்துகின்ற நோய் யாதொன்றும் தன்னுடம்பில் இல்லாமல் இருக்கவேயும், ஈதலியையாமை காரணமாக எய்திய மாபெருந்துயர் பெறாமல் உண்ணா நோன்பின் உயிர்பதிப்பெயர்த்து மாறிப் பிறந்தேனும் அறஞ் செய்யக் கருதி மணிபல்லவத் தீவினிடத்தே உடம்பிலே நிலைபெற்றிருந்த தன்னுயிரைத் தறுத்தவனாகிய அவ்வாபுத்திரன்; தன் காத்து அளித்த தகை ஆ அதனை ஒல்கா உள்ளத்து ஒழியானாதலின் கைவிடப்பட்ட குழவியாகிய தன்னை அறந்தரு நெஞ்சத்தோடு அருள் சுரந்தூட்டிப் பாதுகாத்த பெருந்தகைமையுடைய அந்த ஆவின்பால் நன்றியுடைமையால் நினைவு கூர்தலில் ஒரு பொழுதுந் தளர்ந்திலாத நெஞ்சமுடையனாயிருந்தமையாலே; ஆங்கு அவ்ஆவயிற்று -மண்முகமுனிவன் றவப்பள்ளியிலே மாறி ஆவாகவே பிறந்துள்ள அவ்வாவினது திருவயிற்றிலே; தீங்கனி நாவல் ஓங்கும் இத் தீவினுக்கு ஒருதான் ஆகி அமரர்கணம் உவப்ப உலகு தொழத் தோன்றினன்-இனிய கனிகளைடைய நாவன் மரம் ஓங்கிய இந்தப் பெருஞ்சிறப்புடைய தீவகத்திலே வள்ளன்மைக்குத் தான் ஒருவனே தலை சிறந்தவனாகித் தேவர் கூட்டங்கள் பெரிதும் மன மகிழவும் இந்நிலவுலகத்து மாந்தர் எல்லாம் கைகூப்பித் தொழவும் சாலி வயிற்றில் மகனாகப் பிறந்தனன்; பிறந்த பெற்றியை நீ கேள்-அவ் வள்ளற் பெரியோன் சாவக நாட்டில் ஆவயிற்றிற் பிறந்த தன்மையும் கூறுவல் நீ கேட்பாயாக!; என்றார் என்க.

(விளக்கம்) ஏனைய மாந்தரெல்லாம் பிணிப்பட்டு வருந்தி இறப்பதே இயல்பு- மற்று இவன் அவ்வாறிறந்தானல்லன். ஈதற்கிடமின்மையாலே அந்நிலை சாதலினுங்காட்டில் இன்னா நிலையாக இருந்தமையாலே அது பொறாது வடக்கிருந்து தானே உயிரை நீத்தனன். அங்ஙனம் இறந்துழி மாறிப் பிறக்கும் பிறப்பிலேனும் ஈத்துவக்கும் சூழ்நிலை எய்தும் என்னும் கருத்தோடிறந்தானாதலின், அத்தகையதொரு சூழ்நிலையையுடைய நாட்டிலே மகனாகப் பிறந்தான். பண்டு தனக்கு வளர்ப்புத் தாயாகிய ஆவின்பால் பேரன்புடையனாதலின் அதன் வயிற்றிலே அதனை நற்றாயாகவே கொண்டு பிறந்தான் என்றறிவுறுத்த படியாம்.

இதனால் உயிர்கள் மாறிப் பிறக்கும் பொழுது அவ்வவை செய்த வினைகட் கேற்பவும் குறிக்கோளுக்கு ஏற்ற சூழ் நிலையிலேயும் பற்றுடையோர் தொடர்புடையனவாகவே பிறக்கும் என்பதும் பௌத்தர் மெய்க்காட்சி என்பதறியலாம். இக் கொள்கை மறுபிறப்புண்டென்னும் கொள்கையுடைய பிற சமயவாதிகட்கும் ஒத்ததொரு கொள்கையே ஆதலும் அறியற்பாற்று.

ஒற்கா- தளராத ஒருதானாகி-தானே தலைசிறந்தவனாகி நல்லோர் பிறப்பினை அமரரும் மாந்தரும் ஒருசேர உவப்பர் என்பது தோன்ற அமரர் கணம் உவப்ப உலகு தொழத் தோன்றினன் என்றார். பண்டு சாலி வயிற்றிற் றோன்றினன் அப் பெரியோன் இப் பிறப்பில் சாவக நாட்டில் பிறந்த பெற்றியும் கேள் நீ எனச் சுட்டுச் சொல் வருவித்தோதுக.

பெரியோன்- ஆபுத்திரன்; பெற்றி- தன்மை.

சாவகத்திலே ஆபுத்திரன் ஆவயிற் றுதித்தபொழுது உலகில் தோன்றிய அற்புத நிகழ்ச்சிகள்

23-30: இருதிள...............சிறப்பென

(இதன் பொருள்) இருதிள வேனில் எரிகதிர் இடபத்து ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்ற பின்-பருவங்களுள் வைத்துக் காண்டற்கினிய இளவேனிற் பருவத்திலே ஞாயிற்று மண்டிலம் இடபவிராசியிலிருக்கும் வைகாசித் திங்களிலே நாண்மீன்களுள் வைத்துக்கார்த்திகை முதலாகப் பதின்மூன்று மீன்கள் கழிந்தபின்; மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்- நாண் மீன்களுள் வைத்து நடுவு நிற்றலையுடைய விசாக நன்னாளிலே; போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து- புத்தபிரான் பிறந்த நாள் என்னும் புகழோடு பொருந்திய சிறப்புடைய பொழுதிலே; மண்ணகம் எல்லாம் மாரியின்றியும் புண்ணிய நல்நீர் போதொடு சொரிந்தது- நிலவுலகத்திலே எவ்விடத்தும் மழையில்லாதிருக்கவேயும் ஆகாய கங்கையாகிய புண்ணியமுடைய நல்ல நீரானது கற்பக மலர்களோடு விரவி மழை போலப் பொழியா நின்றது; போதி மாதவன் பூமியில் தோன்றும் காலம் அன்றியும் சிறப்புக் கண்டனவென- அரசமரத்தின் நீழலிற் பொருந்தியிருந்து மெய்க்காட்சி எய்திச் சிறந்த தவத்தையுடைய புத்த பெருமான் பிறந்த காலத்தே இங்ஙனம் அற்புதம் தோன்றுவதல்லது  இக்காலத்தும் அவ்வற்புதக் காட்சிகள் நம்மாற் காணப்பட்டன; ஆகவே இதற்குமொரு காரணமுளதாதல் வேண்டுமென்று கருதியவராய் என்க.

(விளக்கம்) இருதிள..............பொருந்தி என்னு மளவும் இந்த மூன்றடிகளும் 11 ஆங் காதையினும் 40-42 ஆம் அடிகளில் முன்னும் இங்ஙனமே வந்தமை நினைக. இந் நூலாசிரியர் பிறாண்டும் முன்பு கூறிய பொருள்களே மீளவுங் கூற நேர்துழி அச் சொற்றொடர்களை மீண்டும் நிலை பிறழாது ஓதும் வழக்கமுடையவராதலைப் பல்வேறிடங்களில் காணலாம். இவ்வடிகட்கு விளக்கம் 11 ஆம் காதா 40-42 ஆம் அடிகட்குக் கூறியவற்றையே கொள்க.

மாரியின்றியும் புண்ணிய நன்னீர் போதொடு மாரி போன்று சொரிந்தது என்றவாறு. புண்ணிய நன்னீர் என்றது ஆகாய கங்கையை போது-கற்பகமலர். ஆகாய கங்கை கற்பகப் போதொடு சொரிந்த அற்புதம் புத்தர்பிரான் பிறந்த பொழுது நிகழ்ந்ததொரு அற்புதம் என்பர். புத்த பெருமான் பிறப்பு நிகழாத இப்பொழுதும் அந்த அற்புதம் காணப்படுதலாலே இதற்குக் காரணமான நிகழ்ச்சி ஒன்று ஏதேனும் நிலவுலகல் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்று ஊகித்து மாதவர் அது பற்றி ஆராயத்தலைப்பட்டனர் என்பது கருத்து.

போதி மாதவன்-புத்தன்.போதி மாதவன் பூமியிற் பன்முறை பிறத்தண்டாகலின் அவன் பிறக்கும்பொழுதெல்லாம் இத்தகு அற்புதம் நிகழும் என்பது பௌத்தர் துணிபு.

சிறப்புக் கண்டன என-என மாறிச் சிறப்புக்கள் காணப்பட்டன என (32) வியந்து என வியையும்.

அறவணர், அற்புத நிகழ்ச்சி பற்றி மாதவர் கந்திற்பாவையை வினவினர் என்றும் அத் தெய்வம் அவரை எல்லாம் என்பாலேவியது என்றும் மணிமேகலைக்கு அறிவித்தல்

31-39: சக்கர.................வருத்தியது

(இதன் பொருள்) சக்கரவாளக் கோட்டம் வாழும் மிக்க மாதவர் வியந்து விரும்பி- இந்நகரத்துச் சக்கரவாளக் கோட்டத்தே யுறை கின்ற பெரிய தவமுடைய துறவோர் எல்லாம் பெரிதும் வியப்பெய்தி அதற்கியன்ற காரணத்தை அறிதற்கு விரும்பி; நெடுநிலைக்கந்து உடை பாவைக் கடவுள் எழுதிய அந்தில் பாவை அருளும் ஆயிடின் அறிகுவம் என்றே-நெடிது நிற்கும் நிலையினையுடைய தூணிலே கடவுள் படிமம் எழுதப்பட்ட அவ்விடத்திலே சென்று அப் பாவை அறிவிக்குமானால் அறிவேம் என்று துணிந்து; செறி இருள் சேறலும்- செறிந்த இருளையுடைய நள்ளிரவிலே அங்குச் சென்றிருப்ப; மணிபல்லவத்திடை மன்னுயிர் நீத்தோன் சாவகத்து தணியா உயிர் உய உதித்தனன்-அவர் கருத்தறிந்த அக் கந்திற்பாவை தானும் அறவோரே கேண்மின் மணிபல்லவத் தீவின்கண் தன்னுடம்பிலே நிலை பெற்ற தன்னுயிரை ஈதலியையாமையில் நீத்தவனாகிய ஆபுத்திரன் சாவக நாட்டிலே பசிப்பிணி தணியப்பெறாது பெரிதும் வருந்தும் உயிர்கள் உய்யும்பொருட்டுப் பிறப்பெய்தினன் அவ்வறவோன் பிறப்பினாலேதான் இவ்வற்புதம் நிகழ்வதாயிற்று; அவன் திறம் அறவணன் அறியும் என்று- மேலும் அவ்வாபுத்திரன் செய்தியெல்லாம் அறவணவடிகள் கந்திற் பாவை; என் நாவை வருத்தியது- என்னுடைய நாவையும் வருந்துமாறு செய்து விட்டது காண்; என்றார் என்க.

(விளக்கம்) மாதவர், ஈண்டுப் பௌத்தத் துறவோர். கந்திற்பாவையினது பக்கலிலே சென்றிருப்போர்க்கு அது தன் தெய்வக் கிளவியின் திப்பிய முரைக்கும் ஆகலின் சென்று வினவிலும் என்னாது சேறலும் என்றொழிந்தார். சேறலும்- செல்லலும் நீத்தோன்: பெயர்; ஆபுத்திரன். தணியா- பசித்துன்பம் தணியாத: பெயரெச்சத் தீறு கெட்டது. உய் உய்ய. அறவணன் அறியும் என்று அக் கந்திற் பாவை கூறிவிட்டமையாலே அவரெல்லாம் என்பால் வந்து வினவ அவர்க்கெல்லாம் யான் ஆபுத்திரன் திறம் பல முறை கூறல் வேண்டிற்று என்பது தோன்றப் பாவை என்னாவையும் வருத்தியது என்றார் இறந்தது தழீஇய எச்சவும்மை தொக்கது செய்யுள் விகாரம்.

ஆபுத்திரன் அரசனாயின்மை கூறல்

39-45: இதுகேள்.......................அவன்றான்

(இதன் பொருள்) இதுகேள், மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி மணிமேகலாய்! ஆவயிற்றுப் பிறந்த அவ்வாபுத்திரன் வரலாற்றில் எஞ்சிய இதனையும் கேட்பாயாக! சாவகம் என்னும் அந்த நாட்டை ஆளுகின்ற அரசனாகிய பூமிசந்திரன் என்பான் இவ்வற்புத நிகழ்ச்சியை அறிந்து அம்மகவினை வளர்க்கின்ற மண்முகன் என்னும் அறத்தலைவன் தவப்பள்ளியை எய்தி அவ்வறவோனுடைய திருந்திய அடிகளில் வீழ்ந்து வணங்கி; மக்களை இல்லேன்-அடிகேள்! அடியேன் மக்கட் பேறில்லேன்! என்று தன் குறை கூறிக் குறிப்பாலே இரந்து நிற்ப அவ்வறவோன் அம் மகவினை அவ்வரசனுக்கு வழங்கினனாக; மாதவன் அருளால் புதல்வனைப் பெற்றேன் என்று அவன் வளர்ப்ப- மகவைப் பெற்ற அம் மன்னவன்றானும் இந்த மாதவருடைய பேரருளாலே பெரிதும் வருந்தாமலே அருமந்த மகனைப் பெறுவேனாயினேன் என்று மகிழ்ந்து அம் மகவினைக் கொடுபோய் வளர்த்தமையாலே; அவன்பால் அரைசு ஆள் செல்வம் இருந்தமையாலே; அவன்றான்-அவனால் வளர்க்கப்பட்ட அவ்வாபுத்திரன்றானும் உரிய பருவத்திலே; நிரை தார் வேந்தன் ஆயினன்- நிரல்பட்ட மலர்மாலை யணிந்து செங்கோல் ஓச்சும் அரசனும் ஆயினன் காண்! என்றார் என்க.

(விளக்கம்) இதுவும் கேள் எனல் வேண்டிய எச்ச உண்மை தொக்கது. இது என்றது அவன் வரலாற்றில் எஞ்சிய விதுவும் என்பதுபட நின்றது.

மண்- ஈண்டுச் சாவகநாடு. மக்களியில்லேன் என்று பாட்டிடை வைத்த குறிப்பினாலே அம் மாதவன் அம் மகவினை வழங்கினன் என்பது பெற்றாம். என்று மகிழ்ந்து வளர்ப்ப என்க. அரைசாள் செல்வம் படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்னும் ஆறுவகை உறுப்புகள். அவன்றான் வேந்தன் ஆயினன் என மாறுக. அவன்:ஆபுத்திரன்

அறவணவடிகள்  மணிமேகலை இனிச் செய்யக்கடவ அறம் இஃதென அறிவுறுத்துதல்

46- 55: துறக்க...........உரைத்தலும்

(இதன் பொருள்) துறக்க வேந்தன் துய்ப்பு இலன் கொல்லோ அறக்கோல் வேந்தன் அருள் இலன் கொல்-வானவர் கோமான் ஈண்டுச் செய்யும் வேள்வியின் வாயிலாய்த் தான் நுகரும் அவி உணவு நுகர்தல் இலனாயினனோ? அன்றி அறம் பிறழாத செங்கோல் வேந்தனாகிய சோழமன்னன் உயிர்களின்பாற் றான் செலுத்தும் அருளைச் செலுத்துதல் இலன் ஆயின்னோ? அன்றி பிறவாற்றாலோ யாம் காரணம் அறிகின்றிலேம் ஆயினும்; காவிரி நீர் சுரந்து புரந்து பரக்கவும்-காவிரியாறானது தன்னியல்பு பிறழாவண்ணம் வழக்கம் போலவே நீர் சுரந்து உயிரினங்களைப் பாதுகாத்துப் பாய்ச்சும் நீர் நாடெங்கணும் பரவாநிற்கவே; நலத்தகை இன்றி நல்உயிர்க்கு எல்லாம் அலத்தற் காலை ஆகியது- நலமுறும் தகுதி இல்லாமல் இந் நாட்டிலே வாழும் நன்மையுடைய உயிர்கட்கெல்லாம் துன்புறுதற்குரிய வற்கடம் நிலவாநின்றது; ஆயிழை- மகளிரிக்கெல்லாம் அணிகலனாகத் திகழுகின்ற மணிமேகலாய்! சூழ்நிலை இவ்வாறிருத்தலாலே; வெள் திரை தந்த அமுதை வானோர் உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு- வெள்ளிய அலைகளையுடைய திருப்பாற் கடல் வழங்கிய அமிழ்தத்தில் வானோர் தாமுண்டு எஞ்சி யிருந்ததனைப் பிறவுயிர் உண்ணுதல் தவிர்த்து வாளாது வைத்தாற் போன்று ; வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும் அறன் ஓடு ஒழித்தல் தகாது என மாதவன் உரைத்தலும் வற்கடம் பாவியிருக்கின்ற இந்நாட்டிலே வாழும் உயிர்களின் மாபெருந்துன்பமாகிய பசிப்பிணியைத் தீர்த்துய்விக்கும் தெய்வத் தன்மையுடைய பேரறத்தின் திருவுருவமாகத் திகழுகின்ற அமுதசுரபியாகிய இத் திருவோட்டின் செயல் நிகழாவண்ணம் அதனை வாளாது வைத்திருத்தல் நம்மனோர்க்குத் தகாது காண் என்று சிறந்த தனவொழுக்கமுடைய அறவணவடிகள் அறிவுறுத்தா நிற்றலும் என்க.

(விளக்கம்) சோழ நாட்டிலே வழக்கம் போலவே காவிரி நீர் முட்டின்றிப் பெருகிவந்து யாண்டும் பரவிப்பாயவும் இந் நாட்டிலே இப்பொழுது வற்கடம் நிலவுகின்றது; இதற்குரிய காரணம் யாமறிகிலேம் என இம்மாதவர் இயம்புகின்றனர். ஈண்டுக் கதை நிகழ்ச்சிக்கு வற்கடம் இன்றி அமையாதாக; அவ் வற்கடத்திற்குச் செங்கோல் நிலைதிரிந்ததாகக் கூறுதல் வேண்டும். இப்புலவர் பெருமான் சோழனுக்கும் பழிபிறவாவண்ணம் இம்முனிவரைப் பேசவைத்திருக்கின்ற நுணுக்கம் நினைந்தின்புற்ற பாலதாம்.

இனி, மழையில்லாமல் நிலவுலகில் வற்கடம் நிகழ்தற்குரிய காரணங்களுள் இரண்டனை மட்டும் இவர் ஈண்டு எடுத்துக் கூறிய இவற்றுள் யாதொன்று யாம் அறிகின்றிலேம் என்னுமாற்றால் ஈண்டு அக் குறை இரண்டனையுமே யாமறிகின்றிலேம் ஆயினும் வற்கடம் மட்டும் நிகழ்தல் கண்கூடாகத் தெரியவருகின்றது என்கின்றனர்.

வற்கடம் நிகழ்தற்கு மழையின்மையே காரணம்; மழை பெய்கின்றது. யாற்றுநீர் யாண்டும் பரவவும் காண்கின்றோம். என்றதனால் மழை காலந்தவறி மிகுதியாகவும் காலத்திலே பெய்யாமலும் போவதால் இவ்வற்கடம் நிகழ்வது போலும் இங்ஙனம் ஆதற்கு, இந்திரன் தனக்குச் செய்ய வேண்டிய வேள்வியை இம் மன்னவன் காலத்திலே செய்யாது விடுகின்றான் என்று செய்யும் குறும்பு என்னலாம், என்று ஒருதலை துணிந்து, மற்று அரசன் அறக்கோல் வேந்தன் ஆதலால் அவன் அருளிலன் ஆவனோ ஆகான் எனக் கூறினார் போலவும் பொருள்படுதல் அறிக.

வேள்வியைப் பௌத்தர்கள் வெறுப்பவர் ஆதலின் தனக்கு அவி சொரியாமையாலே ஆயிரங் கண்ணோன் செய்த குறும்பே இவ் வற்கடத்திற்குக் காரணம் என இம்முனிவர் ஒருதலை துணிந்து கூறுகின்றனர் என்க.

இனி, இக்கருத்தை வலியுறுத்தற்குப் போலும் அத்துறக்க வேந்தன் உண்டொழி மிச்சிலைப் பிறவுயிருண்ணுதலை ஒழித்துப் பாதுகாத்து வைத்தான் எனவும் அவ்வாறு நீ பல்லுயிரோம்பும் அமுதசுரபியை ஒழித்தல் தகாது எனவும் இதனானும் இந்திரனுக்கு ஓரிழுக் குரைத்தமை உணர்க.

வறன் ஓடு உலகு- வற்கடம் பரவுகின்ற உலகம்: அறன் ஓடு- உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் அறஞ் செய்தற் கருவியாகிய அமுதசுரபி. அலத்தற் காலையில் உண்டி கொடுத்துயிர் ஓம்புதலே இப்பொழுது நின் கடமையாகும் என்பதனை அறவணவடிகள் இதனால் வற்புறுத்தபடியாம்.

மணிமேகலைக்கு பிக்குணிக் கோலத்துப் பெருந்தெருவில்
பிச்சைப் பாத்திரம் ஏந்திச் செல்லுதல்

55-69: மணிமே..................பரிவெய்தி

(இதன் பொருள்) மணிமேகலைதான் தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி-அதுகேட்ட மணிமேகலையும் பெரிதும் மகிழ்ந்து தாயாராகிய மாதவியோடும் சுதமதியோடும் அவ்வடிகளார் திருவடிகளிலே வீழ்ந்து அவரைப் பற்பல நன்றியும் புகழும் நவின்று வாழ்த்திய பின்னர்; கைக் கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு-தான் பண்டு செய்த நற்றவத்தாலே தன் கையிலே கொண்டு ஏந்திய அமுதசுரபியாகிய கடவுட்டன்மையுடைய  அத் திருவோட்டினோடு; பிக்குணிக் கோலத்துப் பெருந்தெரு அடைத்தலும்-தவக்கோலந் தாங்கியவளாய் அப் பூம்புகார் நகரத்துப் பெரிய தெருவிலே செல்லாநிற்றலும்; ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க்குறுமாக்களும் மெலித்து உகுநெஞ்சின் விடரும் தூர்த்தரும் கொடிக் கோசம்பிக் கோமகனாகிய வடித்தேர்த்தானை வத்தவன் தன்னை மணிமேகலையைப் பிக்குணிக் கோலத்திலே கண்டதும் பெரிதும் ஆரவாரஞ் செய்து ஒருங்கே குழுமிய அவ்வூர்ச் சிறுவர்களும் நெஞ்சம் நெகிழ்ந்துருகுகின்ற கயமாக்களும் பரத்தரும் கொடியுயர்த்திய கோசம்பி நகரத்தை ஆளும் கோமகனாகிய வடித்த தேர்ப்படையையுடைய வத்தவநாட்டு மன்னன் உதயணகுமரனை உஞ்சை நகரத்தரசன் பிரச்சோதனன்; வஞ்சஞ் செய்துழி- வஞ்சகச் செயலாலே சிறைக்கோட்டத்திலிட்ட பொழுது; வான்தளை விடீஇய- பெரிய தளையினின்றும் உதயணனை விடுவித்தற் பொருட்டு; உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் உருவுக்கு ஓவ்வா உறுநோய் கண்டு-உஞ்சை மாநகரத் தெருவிலே மாறுவேடம் புனைந்து வந்து தோன்றிய அமைச்சனாகிய யூகி என்னும் பார்ப்பனன் தான் மேற்கொண்டுள்ள உருவத்திற்குப் பொருந்தாதபடி பித்தேறினான் போலவும் பேயேறினான் போலவும் வாய்தந்தன பேசி வருந்தும் வருத்தத்தைக் கண்டு; பரிவுறு மாக்களின்-அவனைச் சூழ்ந்துகொண்டு அவன் நிலைக்கு வருந்தி நின்ற மாந்தர் போன்று; தாம் பரிவெய்தி-தாமும் மணிமேகலையின் உருவிற் கொவ்வாநிலைக்குப் பெரிதும் இரக்கம் எய்தி என்க.

(விளக்கம்) தாயர் என்றது, மாதவியையும் சுதமதியையும், கடவுட்கடிஞை- தெய்வத்தன்மையுடைய பிச்சைக்கலன். அஃதாவது, அமுதசுரபி. பிக்குணி- பௌத்தர்களுள் பெண்பால் துறவி. இங்ஙனம் கூறுவது அச் சமயத்தார் மரபு.

மெலித்து- மெலிந்து என்பதன் விகாரம். மணிமேகலையின் பண்டைய செல்வ நிலைமையையும் இற்றை நாள் அவள் பிச்சை புக்க நிலையையும் கருதி அவள் பொருட்டு நெஞ்சிளகி உருகினர் என்றவாறு. குறுமாக்கள்- சிறுவர்.

கோசம்பி- வத்தவநாட்டுத் தலைநகரம். வத்தவன்- வத்தநாட்டு மன்னனாகிய உதயணன். உதயணனைப் பிரச்சோதன மன்னன் யானைப் பொறியினாலே வஞ்சித்துச் சிறைப்பிடித்துச் சிறையிலிட்டனன்.

உதயணன் அமைச்சனாகிய யூகியந்தணன் மாறுவேடம் புனைந்து கொண்டு பிரச்சோதனனுடைய தலைநகரமாகிய உஞ்சை நகரத்தின் தெருவிலே பித்தன் போல நடித்துச் சென்றான். அப்பொழுது அந்நகர மாந்தர் அவனைச் சூழ்ந்து கொண்டு அவனுருவிற்கொவ்வாத நோய் உடையனாதற்கு இரங்கி நின்றார். அவர் போன்று ஈண்டும் நகரமாக்கள் மணிமேகலையின் உருவிற் கொவ்வாத நிலை கண்டு இரங்கினர் என உவமம் எடுத்தோதியபடியாம். யூகிக்கு உஞ்சைமாக்கள் பரிவுற்றமையை-உதயணகுமார காவியத்தில் உஞ்சைக் காண்டத்தில் 72 ஆம் செய்யுள் முதலாக, 83 ஆஞ் செய்யுள் ஈறாக வருகின்ற செய்யுள்களால் உணர்க.

இதுவுமது

67-70: உதய ................கூர

(இதன் பொருள்) உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த மதுமலர்க்குழலாள் வந்து தோன்றி-சின்னாள் முன்னர் நங்கோமகனாகிய உதயகுமரனுடைய நெஞ்சத்தை முழுவதும் நவர்ந்துகொண்டு பிறர் யாரும் அறியாதபடி இந்நகரத்தினின்றும் மறைந்துபோன தேன்துளிக்கும் மலர்க் கூந்தலையுடைய இம் மணிமேலை மீண்டும் பிறர் யாம் காணாதபடியே இப்பெருந் தெருவினூடே வந்து நம்மனோர்க்குக் கண்கூடாகத் தோன்றி; பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது- பிச்சை ஏற்றற்குரிய திருவோட்டைக் கையில் ஏந்தி நிற்குமிக் காட்சி; திப்பியம் என்றே சிந்தை நோய் கூர-ஒரு தெய்வத்தன்மை யுடைத்து என்று அவள் நிலைக்குப் பெரிதும் நெஞ்சழிந்து துன்புறா நிற்ப என்க.

(விளக்கம்) ஊர்க்குறுமாக்களும் விடரும் தூர்த்தரும் உதயகுமரன் மணிமேகலையைத் தேரில் ஏற்றி வருவல் என்று எட்டிகுமரனுக்குச் சூண்மொழிந்து போனவன் வறிதே மீண்டமையும் அற்றை நாளிலிருந்து மணிமேகலையை அந்நகரத்தே யாரும் அறியாதபடி மணிமேகலா தெய்வம் எடுத்துப் போன செய்தியும் அறியாமையாலே அவள் எங்கோ மாயமாய் மறைந்துவிட்டனள் என்று வியப்புற்றிருந்தாராக, மீண்டும் அவள் வான்வழியாக வந்திறங்கிமையாலே அவள் வருகையும் காணாராயிருந்தவர், பொள்ளென அவள் பிக்குணிக் கோலத்தோடு பிச்சைப்பாத்திரம் ஏந்திப் பெருந்தெருவில் வந்துற்றமை ஆகிய அவள் செயலெல்லாம் பெரிதும் வியக்கத்தக்கவா யிருத்தலின், உதயகுமரன் உளங் கொண்டொளித்தமையும் பின்னர் வந்து தோன்றினமையும் அவள் பிச்சைப்பாத்திரம் ஏந்தினமையும் ஆகிய அனைத்துமே திப்பியம் என்று வியந்தனர். மேலும் அவள் கோவலன் மகளாய் மாபெருஞ் செல்வத்தினூடே வளர்ந்தமை யாவரும் அறிகுவர் ஆதலினானும் அவளுடைய இளமைக்கும் அழகுக்கும் சிறிதும் பொருந்தாத வண்ணம் பிச்சைபுக்கமை கருதி அனைவருமே அவட்கிரங்கிச் சிந்தை நோய் கூர்ந்தனர் என்பது கருத்து

திப்பியம்-ஈண்டு வியப்பு என்னும் பொருண்மேனின்றது

மணிமேகலை அமுதசுரபியின்கண் முதன் முதலாகப் பத்தினிப் பெண்டிர் இடும் பிச்சை ஏற்றல் வேண்டும் எனலும் காயச்சண்டிகை ஆதிரைபால் ஏற்றிடுக எனலும்

71-80: மணமனை..................என்றனள்

(இதன் பொருள்) மணமனை மறுகின் மாதவி ஈன்ற அணி மலர்ப் பூங்கொடி- திருமணஞ் செய்துகொண்டு இல்லறம் பேணுவோர் இனிது வாழுகின்ற மங்கல மனைகளையுடைய அப்பெருந்தெருவிலே பிச்சைப்பாத்திரம் ஏந்திச் சென்றவளாகிய மாதவி பெற்ற அழகிய மலர்கணிரம்பிய பூங்கொடி போல் வாளாகிய மணிமேகலை தனக்கு அணுக்கமாக நிற்கின்ற மடந்தை ஒருத்தியை நோக்கி; அகமலி உவகையின் பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை ஏற்றல் பெருந்தகவு உடைத்து என அன்புடையோய் இத் திருவோட்டில் முதன் முதலாகப் பிச்சை ஏற்குங்கால் விருந்தினரைக் கண்டபொழுதே உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியோடே கொணர்ந்து கற்புடை மகளிர் அன்போடு இடுகின்ற உணவை ஏற்பதே பெருந்தன்மை யுடையதாகும். என்று கூறாநிற்ப; குளன் அணி தாமரைக் கொழுமலர் நாப்பண் ஒரு தனி ஓங்கிய திருமலர் போன்று- அங்ஙனம் வினவிய மணிமேகலையின் குறிப்பறிந்து கூறும் அம் மடந்தை அன்னாய் கேள்! குளத்தினூடே யாண்டும் மலர்ந்து அதனை அழகு செய்கின்ற தாமரையினது கொழுவிய மலர்களின் நடுவே தான் தமியே அனைத்து மலரினுங்காட்டில் உயர்ந்து திகழாநிற்குமொரு அழகிய தாமரை மலரைப் போன்று; வான் தரும் கற்பின் மனையுறை மகளிரில்- மழை பெய்விக்கும் தெய்வத்தன்மை யுடைய கற்பென்னும் திட்பத்தோடு இம் மங்கல மனைகளிலே இருந்து இல்லறம் பேணும் மகளிருள் வைத்து; ஆதிரை நல்லாள் தான் தனியோங்கிய தகைமையள் அன்றோ-ஆதிரை என்னுய் பெயரையுடைய நங்கைதான் தனிச் சிறப்புடையளாய் உயர்ந்திருக்கின்ற பெருந்தகைமை உடையாள் என்பதை நீ யறியாயோ?அறிந்திருப்பாய் அல்லையோ? நேரிழை மகளிர்க்கெல்லாம் அணிகலனாகத் திகழுகின்ற தவச்செல்வியே கேள்; இம் மனை அவள் மனை நீ புகல் வேண்டும்-இதோ அணித்தாக இருக்கின்ற இம் மங்கல மனையே அவள் வாழும் மனையாகும் ஆகவே நீ முதன் முதலாக அம் மனை முன்றிலிலே பிச்சை புகுதல் வேண்டும்; என்றனள்-என்று அறிவித்தனள்; என்க.

(விளக்கம்) மணமனை என்றது திருமணஞ் செய்துகொண்டு மணமக்கள் இல்லறம் ஓம்பும் மனை என்றவாறு. அகமலி உவகையின் என்றது விருந்தினர் வரப்பெற்றோம் என்று உளம் நிறைந்த மகிழ்ச்சியோடு என்பதுபட நின்றது. ஈண்டு

முகத்தா னமர்ந்தினது நோக்கி அகத்தானாம்
இனசோ லினதே அறம்                  (93)

எனவரும் திருக்குறளையும் நினைக.

பண்புடன் இடூஉம் என்புழி பண்பு என்றது அன்பு என்க. என்னை?

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது               (45)

எனவரும் திருக்குறட் கருத்தினை நோக்குக.

பத்தினிப் பெண்டிர் இடும் பிச்சை ஏற்றல் பெருந்தகைமை என்று மணிமேகலை கூறியதன் குறிப்பு அத்தகைய பத்தினிப் பெண்டிர் உறையும் மனை யாது நீ அறிகுவையோ அறிதியாயின் கூறுதி என்பதே யாம். இக் குறிப்பறிந்து அம் மடந்தை கூறுகின்றாள் என்க.

இனி, அவள் கூறும் உவமையழகு நினைந்து நினைந்து மகிழற் பாலதாம். இங்கு இம் மனைகளுள் வாழும் மகளிர் எல்லாருமே பத்தினி மகளிரேயாவர் ஆயினும் அவருள்ளும் தலைசிறந்து திகழுபவள் ஆதிரை என்பவளே! என்றிறுத்தபடியாம்.

வான்தரு கற்பு- வேண்டும் பொழுது மழை பெய்விக்கத் தகுந்த தெய்வக்கற்பு. வான்- மழைக்கு ஆகுபெயர். ஈண்டு

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை          (55)

எனவரும் திருக்குறள் நினைக்கப்படும்

புகல்- பிச்சைபுகல். இம் மனைபுகல் வேண்டும் என்றது நின் கருத்து அதுவாயின் இந்த மனையிற் புகுதுக! என்பதுபட நின்றது. அதுவும் சேய்த்தன்றென்பாள் இம் மனை எனச் சுட்டினாள்.

காயசண்டிகை வரலாறு

81-86: வடதிசை..............தானென்

(இதன் பொருள்) வடதிசை விஞ்சை மாநகர்த் தோன்றித் தென்திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை-அவ்வாறு ஆதிரை மனையை மணிமேகலைக்கு அறிவித்தவள் யாரோ எனின், வடதிசையின் கண்ணுள்ள விச்சாதரர் நகரங்களுள் வைத்துக் காஞ்சனபுரம் என்னும் பெரிய நகரத்திலே பிறந்து வைத்தும் தென்திசையில் உள்ள பொதியமலை மருங்கில் ஒரு சிறிய யாற்றினது நீரடை கரையிடத்தே; வல்வினை உருப்ப- தான் முற்பிறப்பிலே செய்த தீவினை உருத்துவந்தூட்டுதலாலே; மாதவன் தன்னால் சாவம்பட்டுத் தனித்துயர் உறூஉம் சிறந்த தவத்தையுடைய துறவோன் ஒருவனாலே சாவம் இடப்பட்டு மாபெருந்துன்பத்தை நுகர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமான; வீவுஇல் வெம்பசி வேட்கையொடு திரிதரும் காயசண்டிகை என்னும் காரிகை-ஒரு பொழுதும் அழிதலில்லாத வெவ்விய பசித்துன்பத்தோடும் அதனைத் தணிக்கும் பேரவாவோடும் அந்நகரத் தெருக்களிலே இடையறாது சுற்றித் திரிகின்ற காய சண்டிகை என்னும் வித்தியாதர மகளே யாவாள் என்பதாம்.

(விளக்கம்) காயசண்டிகை என்னும் இவ் விச்சாதரி இக் காப்பியக்கதைக்கு இன்றியமையாத ஓருறுப்பாவாள். ஆதலில் நூலாசிரியர் இவள் வரலாற்றை ஈண்டு விதந்தெடுத்து விளம்பினர். இவள் வரலாறு மேலும் விளக்கமாகக் கூறப்படும் ஆதலின் ஈண்டுச் சுருக்கமாகவே சொல்லிவைத்தனர்.

விஞ்சைமாநகர்- விச்சாதரருடைய பெரிய நகரம். தனித்துயர் பெருந்துன்பம். காரிகை- பெண்.

இனி இக்காதையை- மாதே கேளாய்! நல்லாய் எய்தி ஊட்டலும் மண்முகமுனிவன் ஒருவன் தோன்றும் அவன் பொன் முட்டை அகவையினான் என, மன்னுயிர் நீத்தோன் ஒழியானாதலின் சாவகத்துதித்தனன் நீர் சொரிந்தது, மாதவர் வியந்து அறிகுவம் என்று சேறலும் பாவை அறவணன் அறியுமென்று ஈங்கென் நாவை வருத்தியது. இதுகேள்! மண்ணாள் வேந்தன் இல்லேன் பெற்றேன் என்று வளர்ப்ப அவன்பால் செல்வம் உண்மையின் அவன் வேந்தன் ஆயினன். அலத்தற் காலை ஆகியது. அறன் ஓடு துயர் கெடுக்கும் ஒழித்தல் ஆயிழை தகாது என மணிமேகலை ஏந்திக் கடிஞையொடு தெரு அடைதலும் மாக்களும் தூர்த்தரும் ஒளித்த குழலாள் தோன்றி ஏந்தியது திப்பியம் என்று நோய் கூர; கொம்பு ஏற்றல் தகவுடைத்தென இம் மனை அவள் மனைபுகல் வேண்டும் என்றனள் (அவள் யாரெனின்) வடதிசைத் தோன்றிவினை உருப்பத் துயர் உறூஉம் பசி வேட்கையொடு திரிதரும் காயசண்டிகை எனும் காரிகை, என இயைத்திடுக.

பாத்திரம் கொண்டு பிச்சைபுக்க காதை முற்றிற்று.


Offline Anu

Re: மணிமேகலை
« Reply #16 on: February 28, 2012, 09:22:18 AM »
16. ஆதிரை பிச்சையிட்ட காதை

(பதினாறாவது மணிமேகலைக்கு ஆதிரையென்னும் பத்தினிப் பெண்டிர் பாத்தூணீத்த பாட்டு)

அஃதாவது: அமுதசுரபியின்கண் முதன்முதலாக அகமலி உவகையின் பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடும் பிச்சை ஏற்றல் பெருந்தகவுடைத்து என்னுங் கோட்பாட்டோடு ஆதிரையின் மங்கலமனை முன்றிலிலே மணிமேகலை தான் புனையா வோவியம் போல நிற்ப, அதுகண்ட ஆதிரை நல்லாள் அகமலியுவகையளாய் அவளைத் தொழுது வலங்கொண்டு அமுதசுரபி என்னும் அரும் பெரும் பாத்திரம் நிறைதருமாறு ஆருயிர் மருந்தைக் கொணர்ந்து பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென வாயார வாழ்த்திப் பெய்து அருளறத்திற்குக் கால்கோள் செய்தமையைக் கட்டுரைக்கும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- ஆதிரையின் கற்பின் பொற்பு விளங்கும் வரலாற்றினைக் காயசண்டிகை மணிமேகலைக்குக் கூறுபவள் ஆதிரை கணவனாகிய சாதுவன் கணிகையின் கேண்மை கொண்டு வட்டினுஞ் சூதினும் வான் பொருள் தோற்றுக் கேடெய்துதலும் கணிகையாற் கைவிடப்பட்டு மரக்கலமேறிப் பொருளீட்டய் போதலும் கடலில் மரக்கலம் உடைந்தொழிதலும் சாதுவன் ஒடிமரம் பற்றி நீந்திப் போய் நக்கசாரணர் நாகர் வாழ் மலைப்பக்கம் சார்ந்து நாகர் தலைவன்பால் எய்துதலும் உடைந்த மரக்கலத்தே உயிருய்ந்தோர் பூம்புகார்க்கு வந்து சாதுவன் சாவுற்றான் என ஆதிரைக்கறிவித்தலும் அவள் தீப்பாய்தலும் தீ அவளைச் சுடாது நீரெனக் குளிர்ந்திருத்தலும், அவள் தீயுங் கொல்லாத் தீவினையாட்டியேன் இனி யாது செய்வேன் என்று ஏங்குதலும் அசரீரி அந்தரம் தோன்றி நின் கணவன் உயிருய்ந்துளன் என்று கூறுதலும் நீராடி இல்லம் புகுவாள் போன்று ஆதிரை மனை புகுதலும் சாதுவன் நக்கர் தலைவனாலே நயக்கப்பட்டு நம்பிக்கிளையளோர் நங்கையைக் கொடுத்து வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும் எனத் தன் பணிமாக்கட்குக் கட்டளையிடுதலும் அதுகேட்ட சாதுவன் அருளறமுடையனாதலின் அவற்றை மறுத்து நக்கர் தலைவனுக்கு நல்லறம் கூறுதலும் பிறவும் பெரிதும் இனிமையாக ஓதப்படுகன்றன. இக் காதையினால் தமிழகத்தே புத்த சமயத்தைத் தழுவிய தமிழர்கள் தமது பழைய பண்பாட்டை விடாமல் அச் சமயத்தோடு சார்த்தித் தமிழகத்துப் பண்பு கெடாமல் வாழ்ந்திருந்ததொரு தனிச் சிறப்பை இனிதாக இப்புலவர் பெருமான் அறிவித்துள்ளார் ஆதலின் இக்காதை ஒரு வரலாற்றுச் சிறப்புடையதாகவும் திகழ்கின்றது; அச்சிறப்பினை இதனுரையில் உரியவிடத்தே எடுத்துக் காட்டுதும்; அவற்றை ஆண்டுக் கண்டு கொள்க.

ஈங்கு இவள் செய்தி கேள் என விஞ்சையர்
பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள்
ஆதிரை கணவன் ஆய் இழை! கேளாய்
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி
அணி இழை தன்னை அகன்றனன் போகி
கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி
கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின்
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி
காணம் இலி என கையுதிர்க்கோடலும்  16-010

வங்கம் போகும் வாணிகர் தம்முடன்
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ
ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்
பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன்
நாவாய் கேடுற நல் மரம் பற்றிப்
போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர்
இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங் கடல்
உடை கலப் பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன்  16-020

சாதுவன் தானும் சாவுற்றான் என
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு
ஊரீரேயோ! ஒள் அழல் ஈமம்
தாரீரோ? எனச் சாற்றினள் கழறி
சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து
முடலை விறகின் முளி எரி பொத்தி
மிக்க என் கணவன் வினைப் பயன் உய்ப்பப்
புக்குழிப் புகுவேன் என்று அவள் புகுதலும்
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும்
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது  16-030

ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது
விரை மலர்த் தாமரை ஒரு தனி இருந்த
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்பத்
தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன்
யாது செய்கேன்? என்று அவள் ஏங்கலும்
ஆதிரை! கேள் உன் அரும் பெறல் கணவனை
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்
பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன்  16-040

சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன்
வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்
நின் பெருந் துன்பம் ஒழிவாய் நீ என
அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்
ஐ அரி உண் கண் அழு துயர் நீங்கி
பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று
மனம் கவல்வு இன்றி மனைஅகம் புகுந்து என்
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக! என
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம்
அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்  16-050

விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்
ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல்
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து
துஞ்சு துயில்கொள்ள அச் சூர் மலை வாழும்
நக்க சாரணர் நயமிலர் தோன்றி
பக்கம் சேர்ந்து பரி புலம்பினன் இவன்
தானே தமியன் வந்தனன் அளியன்
ஊன் உடை இவ் உடம்பு உணவு என்று எழுப்பலும்
மற்று அவர் பாடை மயக்கு அறு மரபின்  16-060

கற்றனன் ஆதலின் கடுந் தொழில் மாக்கள்
சுற்றும் நீங்கித் தொழுது உரையாடி
ஆங்கு அவர் உரைப்போர் அருந்திறல்! கேளாய்
ஈங்கு எம் குருமகன் இருந்தோன் அவன்பால்
போந்தருள் நீ என அவருடன் போகி
கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும்
வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்
எண்கு தன் பிணவோடு இருந்தது போல
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி
பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகிக்  16-070

கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன்
ஈங்கு நீ வந்த காரணம் என்? என
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும்
அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன்
வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள்
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து
வெங் களும் ஊனும் வேண்டுவ கொடும் என
அவ் உரை கேட்ட சாதுவன் அயர்ந்து
வெவ்உரை கேட்டேன் வேண்டேன் என்றலும்
பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு  16-080

உண்டோ ஞாலத்து உறு பயன்? உண்டுஎனின்
காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என
தூண்டிய சினத்தினன் சொல் என சொல்லும்
மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும்
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும்
உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர்  16-090

கண்டனை ஆக! என கடு நகை எய்தி
உடம்பு விட்டு ஓடும் உயிர் உருக் கொண்டு ஓர்
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய்
அவ் உயிர் எவ்வணம் போய்ப் புகும், அவ் வகை
செவ்வனம் உரை எனச் சினவாது இது கேள்
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி
மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின்
தடிந்து எரியூட்டினும் தான் உணராதுஎனின்
உடம்பிடைப் போனது ஒன்று உண்டு என உணர் நீ
போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது  16-100

யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம்
கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை
ஆங்கனம் போகி அவ் உயிர் செய் வினை
பூண்ட யாக்கையின் புகுவது தெளி நீ
என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும்
நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து
கள்ளும் ஊனும் கைவிடின் இவ் உடம்பு
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன்
தமக்கு ஒழி மரபின் சாவுறுகாறும்  16-110

எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும்
நன்று சொன்னாய்! நல் நெறிப் படர்குவை
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன்
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின்
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி
மூத்து விளி மா ஒழித்து எவ் உயிர்மாட்டும்
தீத்திறம் ஒழிக! எனச் சிறுமகன் உரைப்போன்
ஈங்கு எமக்கு ஆகும் இவ் அறம் செய்கேம்
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க எனப்
பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை  16-120

உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை
விரை மரம் மென் துகில் விழு நிதிக் குப்பையோடு
இவை இவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து
சந்திரதத்தன் என்னும் வாணிகன்
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி
இந் நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து
தன் மனை நன் பல தானமும் செய்தனன்
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால்
பூங் கொடி நல்லாய்! பிச்சை பெறுக! என
மனைஅகம் புகுந்து மணிமேகலை தான்  16-130

புனையா ஓவியம் போல நிற்றலும்
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு
அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர
பார்அகம் அடங்கலும் பசிப் பிணி அறுக என
ஆதிரை இட்டனள் ஆருயிர்மருந்து என்  16-135

(இக் காதை 129 ஆம் அடிகாறும் ஆதிரை வரலாற்றினைக் கூறுகின்ற காயசண்டிகை கூற்றாய் ஒரு தொடர்)

ஆதிரை கணவன் சாதுவன் கேடெய்துதல்

1-10: ஈங்கிவள்..............கோடலும்

(இதன் பொருள்) விஞ்சையர் பூங்கொடி- விச்சாதரியாகிய பூங்கொடி போன்ற காய சண்டிகை மணிமேகலை நோக்கி; ஆயிழை ஈங்கு இவள் செய்தி கேள் என- மணிமேகலாய்! ஈங்கு யான் கூறிய இவ்வாதிரையின் வரலாற்றினைக் கூறுவல் கேட்பாயாக! என்று சொல்லி மணிமேகலையை முன்னிலைப்படுத்திக் கொண்டு மாதர்க்கு புகுந்ததை உரைப்போள்- அவ்வாதிரைக்கு நிகழ்ந்த செய்தியைக் கூறுபவள்; ஆயிழை கேளாய் ஆதிரை கணவன் சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி- ஆயிழாய்! கேள் இந்த ஆதிரை நல்லாள் கணவனாகிய சாதுவன் என்னும் பெயருடையன் ஆவான் அவன் பெருந்தன்மையிலனாய் இன்பத் துறையில் எளியனாகி; அணியிழைதன்னை அகன்றனன் போகி கற்புக் கடம்பூண்ட தெய்வம் போலவாளாகிய அறிகலனணிந்த தன் மனைவி ஆதிரை நல்லாளைப் பிரிந்து போய்; கணிகை யொருத்தி கைத்து ஊண்நல்க- தன்னைக் காமுற்ற கணிகை மகள் ஒருத்தி தன் பரத்தைமைத் தொழிலால் ஈட்டிய பொருளாலியன்ற உணவினை நாடொறும் வழங்குதலாலே அதனை உண்டு; வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி- வட்டாடுதலும் சூதாடுதலும் ஆகிய தீத்தொழில்களிலீடுபட்டுத் தன் முன்னோர் ஈட்டி வைத்த பெரும்  பொருளையெல்லாம் தொலைத்து விட்டமையாலே; கெட்ட பொருளின் கிளை கேடு உறுதலின்-இவ்வாறு கெட்டொழிந்த பொருள் காரணமாக அப் பொருட்கு வருவாய் ஆகிய நிலமும் பிறவுமாகிய பொருட் பகுதிகள் எல்லாம் கேடுறுதலாலே; பேணிய கணிகையும் காணம் இலி என பிறர் நலம் காட்டிக் கை உதிர்க் கோடலும்-பொருளிருக்குமளவும் தன்னைப் பொய்யன்பு காட்டி உண்டியும் கொடுத்துப் பேணி வந்த அக்கணிகை தானும் இவன் பொன்னில்லாதவன் என்றறிந்த பொழுதே தன்னைக் காமுற்று வருகின்ற பிறராகிய செல்வரின் சிறப்பை இவனுக்குக் கூறிக்காட்டி இனி நீ என் மனைக்கு வாராதே கொள் எனக் கையை அசைத்துப் போக்கி விடாநிற்ப என்க.

(விளக்கம்) ஈங்கிவள் என்றது ஈண்டு யான் கூறிய அவ்வாதிரை என்றவாறு செய்தி என்றது- ஆதிரை தெய்வக் கற்புடையாள் என இவ்வுலகம் அறிதற்குக் காரணமாக அவட்கெய்திய செய்தியை விஞ்சையர் பூங்கொடி: காயசண்டிகை; மாதர்க்கு-ஆதிரைக்கு. புகுந்ததை- நிகழ்ந்த செய்தியை ஆயிழை:விளி. அணியிழை ஆதிரை. கணிகை கைத்தூண் என்றது- கணிகைத் தொழிலால் செய்த பொருளாலாய உண்டி. இஃது உண்ணத்தகாமைக்கு ஏதுவை விதந்து கூறியபடியாம். கடவதன்று நின் கைத்தூண் வாழ்க்கை எனச் சிலப்பதிகாரத்தினும் வருதலுணர்க.(15-57)

வட்டினும் சூதினும் கெட்ட பொருட்கு முதலாகிய வழியைக் கிளை என்றார். பொருளின் வருவாய்க்குரிய கிளைகள் என்க. அவை நிலமும் தொழிலுமாம். பேணிய- என்றது பொருள் உள்ளதுணையும் பேணிய கணிகை என்பதுபட நின்றது. பிறர் நலம் காட்டுதலாவது இன்னின்னார் என்னை விரும்புகின்றனர் அவர் இத்துணை நலம் உடையர் என்று நாணாது கூறுதல். இனி இன்னின்ன கணிகையர் இன்னின்னாரால் இத்துணை நலம் எய்தினர் என எடுத்துக் காட்டலுமாம். இது நின்னால் யாது பயன் எனக் கைவிட்டுப் போக்கற் பொருட்டு. காணம்- பொன். கையுதிர்க் கோடல்- கைப்பற்றுதற்கு எதிர்மறை. அகற்றுதல் என்னும் பொருட்டாய ஒரு சொல் எனினுமாம்.

சாதுவன் மரக்கலமேறிச் செல்லுதலும் அவனுக்கு நேர்ந்த நிகழ்ச்சியும்

11-21: வங்கம்.......................உற்றானென

(இதன் பொருள்) தானும் வங்கம் போகும் வணிகர் தம்முடன் தங்கா வேட்கையின் செல்வுழி- தனது தீயொழுக்கத்தாலே தீதுற்ற அச் சாதுவன்றானும் பொருளீட்டற் பொருட்டு மரக்கல மேறி வேற்று நாட்டிற்குச் செல்லும் வணிகரோடு கூடி ஓரிடத்தினும் தங்காமல் பிறநாடெல்லாம் காண்டல் வேண்டும் என்னும் வேணவரவோடு கடலினூடே செல்லும்பொழுது; நளி இரு முந்நீர் வளிகலன் வெளவ - செறிந்த பெரிய கடலானது சூறைக் காற்று வீசிக் கவிழ்த்தலால் மரக்கலத்தை விழுங்கி விட்டமையாலே; ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் காற்றினாலே மோதிக் கவிழ்க்கப்பட்ட அம் மரக்கலத்தல் முறிந்து மிதக்கின்ற மரத்தைத் தெப்பமாகப் பற்றிக் கொண்டு கரை நோக்கி இயங்குகின்ற அலைகள் அம் மரத்தினை உந்திச் செலுத்துதலாலே சென்று ஆடையின்றித் திரிகின்றவராகிய நாகர் என்போர் வாழுகின்ற தீவின் மலைப்பக்கத்தே நிலத்திலேறி அவர் வயப்பட்டனன் இவன் நிலை இன்னதாக; நாவாய் கேடு உற நல்மரம் பற்றி உயிர் உயப் போந்தோர்-இவனோடு மரக்கலத்திற் சென்றவர் அம் மரக்கலங் கெட்டபொழுது இவனைப் போலவே ஒடிந்த நல்ல மரத்துண்டுகளைப் பற்றி அவனோடு உயிர் உய்தற்கு முயன்று சென்றோருள் சிலர் பூம்புகார் நகரத்திற்கே சென்று கரை ஏறியவர்; இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங்கடல் உடைகலப்பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன் சாதுவன் தானும் சாவு உற்றான் என-இரவின் இருள் மிக்க இடையாமத்திலே மோதுகின்ற அலைகளையுடைய பெரிய கடலின் கண் உடைந்து மூழ்கிய மரக்கலத்தினூடே அகப்பட்டு அங்கு இறந்தவர்களோடு கூடச் சாதுவன்றானும் இறந்தொழிந்தான் என்று கருதி அச் செய்தியை நகரிற் கூறிவிட்டமையாலே என்க.

(விளக்கம்) தங்கா வேட்கை என்றது-ஓரிடத்தே தங்காமல் யாண்டுஞ் சென்று காண வேண்டும் என்னும் அவா. இனி ஊரகத்தே தங்காமைக்குக் காரணமான பொருள் வேட்கையால் எனினுமாம்.

தானும்- சாதுவனும் நளி-குளிர்ச்சியுமாம். முந்நீர் வளி கவிழ்த்தலாலே வெளவ என்க. மரக்கலம் மூழ்கிவிட என்பது கருத்து. மரக்கலத்தில் ஒடிந்து தனித்து மிதக்கும் மரம் என்க. ஊர்திரை: வினைத்தொகை.

நக்க சாரணர் நாகர்- ஆடையின்றித் திரிகின்ற நாகர் என்னும் ஒரு வகை மலையில் வாழும் மாக்கள். இவர் நாகத்தைத் தெய்வமாகக் கருதி வழிபடுவோராதலின் நாகர் என்னும் பெயர் பெற்றனர் என்ப. அவர் பான்மையன்-அவர் வயப்பட்டவன்.

உயிருயப் போந்தவர் சிலர் வெவ்வேறு திசைகளிற் சென்றுய்ந்தாராக அவருள் நன் மரம் பற்றிய காரணத்தாலே மீண்டும் புகார் நகரத்தில் வந்து கரையேறி யுய்ந்தாரும் சிலர் உளராயினர்; அவர் மரக்கலத்துளகப்பட்டு இறந்தவரோடே சாதுவனும் இறந்தனன் என்று எண்ணியே அவன் இறந்தான் என்றே சொல்லி விட்டனர் என்க.

கணவன் இறந்தான் எனக் கேள்வியுற்ற ஆதிரையின் செயல்

22-28: ஆதிரை.....................புகுதலும்

(இதன் பொருள்) ஆங்கு அது கேட்டு ஆதிரை நல்லாள்-ஆங்குப் பரவிய அச் செய்தியைக்கேட்டுக் கற்புடைமையிற் சிறந்த ஆதிரை என்னும் நங்கை அப்பொழுதே; ஊரீரேயோ-இம்மூதூரில் வாழும் பல்சான்றீரே பல்சான்றீரே!; ஒள் அழல் ஈமம் தாரீரோ எனச் சாற்றினள் கழறி-கணவனை இழந்த அளியேனுக்கு யான் மூழ்குதற்கியன்ற ஒள்ளிய நெருப்பினைச் சுடுகாட்டின்கண் வளர்த்துத் தரமாட்டீரோ? என்று பலர்க்கும் அறிவிக்க அவர் தாமும் அவள் தீயின் முழுகுதல் வேண்டா என அவளைத் தடுத்த பொழுது அவரையெல்லாம் இடித்துரை கூறி அடக்கி அவர்களைக் கொண்டே; சுடலைக் கானில் தொடுகுழிப்படுத்து முடலை முளி விறகின் எரி பொத்தி-சுடுகாட்டுக் கோட்டத்துள்ளமைந்த நன்காட்டின்கண் தீ வளர்த்தற்குத் தோண்டும் குழியை முறைப்படி தோண்டச் செய்து அக் குழியிலடுக்கிய முறுக்கேறி உலர்ந்த விறகின்கண் தீ மூட்டி; மிக்க என் கணவன் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்று அவள் புகுதலும்- எனக்குத் தெய்வத்தினும் மிக்கவனாகிய என்னுடைய கணவன் தான் செய்த பழவினை செலுத்துதலாலே சென்று மாறிப் பிறந்த விடத்தே யானும் என்னுயிரும் மாறிப் பிறக்கு மாற்றால் அவன் மனைவியே ஆகுவேன் என்னும் கோட்பாட்டோடே அவ்வாதிரை அத் தீயினுட் புகாநிற்ப என்க.

(விளக்கம்) அது- சாதுவன் சாவுற்றான் என்ற செய்தி. ஊரீர் என்றது ஊரிலுள்ள தன் குலத்துச் சான்றோரை. ஈமம்-சுடுகாட்டில் பிணஞ்சுட அடுக்கும் விறகு. சுடுகாடெனினுமாம். சாற்றுதல் வற்புறுத்துக் கூறுதல். கழறிஎன்றார். ஊரவர் அவளைத் தடுத்தமையும் அவரையெல்லாம் இடித்துக் கூறித் தன் கருத்தின் வழி ஒழுகினாள் என்பது போதர. முளி விறகின் என மாறுக. முடலை விறகு-முதிர்ந்த ஒழுங்கற்ற முருட்டுக் கட்டைகள். முளிதல்-உலர்தல். எரிபொத்தி தீமூட்டி.

மிக்க என் கணவன் என்றது எனக்குத் தெய்வத்தினுங் காட்டிற் சிறந்தவனாகிய என் கணவன் என்றவாறு.

செய்வினைக் கேற்பவே மறுபிறப்பு வந்துறுமாகலின் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்றாள். என்னை? இன்பமும் துன்பமும் அவனுக்கும் தனக்கும் ஒன்றாகவே வருதலின். புக்குழிப் புகுவேன் என்றது அவன் பிறப்புற்றவிடத்தே பிறந்து மீண்டும் அவனுக்கே மனைவியாவேன் என்பதுபட நின்றது. ஈண்டு

காதலர் இறப்பின் கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்தகத்து அடங்காது
இன்னுயிர் ஈவர் ஈயா ராயின்
நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்

எனப் பண்டு மாதவி வயந்த மாலைக்குக் கூறியது நிலைக்கற்பாலதாம் (ஊரலர்................42-45)

தீப்பாய்ந்த ஆதிரை ஊறின்றியமைதல்

29-34: படுத்து..............ஏங்கலும்

(இதன் பொருள்) படுத்துடன் வைத்த பாயல் பள்ளியும் உடுத்த கூறையும் ஒள் எரி உறாஅது- தீப்புகுதுவோர் கிடத்தற்கென சமவிறகடுக்கின்மேல் விரித்து அதனோடு கிடத்திய பாயலாகிய படுக்கையிடத்தினும் அதன்கட் புகந்து வைகிய ஆதிரை நல்லாள் உடுத்திருந்த கோடிப் புடைவையினுங் கூட ஒள்ளிய நெருப்புப் பற்றாமலும்; ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலின் சூடிய மாலையும் தொல் நிறம் வழாது- பூசிய சந்தனமும் கட்டிய கூந்தலிலே சூட்டப் பெற்ற மலர் மாலையும் புலர்ந்தும் கருகியும் தத்தம் நிறங் கெடாமலும்; விரைமலர்த் தாமரை ஒரு தனி இருந்த திருவின் செய்யோள் மலராகிய தனதிருக்கையின்கண் தான் ஒருத்தியே தமித்திருந்த திருமகள் போன்று குளிர்ந்து இனிதாகச் சிறிதும் ஊறின்றியிருத்தலும் என்க.

(விளக்கம்) கணவன் இறந்தமையால் தீப் புகுதும் பத்தினிப் பெண்டிர் ஈமவிறகின் மேல் படுத்தற்குப் பாய் விரித்தல் வழக்கம் என்பதும் தீப்புகு மகளிர் மலர் சூடிச் சாந்தம் நீவிப் புதுப்புடைவையுடுத்தும் ஒப்பனை செய்துகொண்டு புகுவர் என்பதும் இதனாலறியப்படும்.

பூசிய சந்தனம் புலர்ந்து நிறம் கெடாமலும் சூடிய மலர் கருகி நிறம் வாடாமலும் இருந்தன. ஈம விறகில் தீப்பற்றிச் சூழக் கொழுந்து விட்டெரிய அதன் நாப்பண் சிறிதும் ஊறின்றி அமர்ந்திருக்கும் ஆதிரை நல்லாளுக்குச் செந்தாமரை மலரின் மேல் எழுந்தருளியிருக்கும் திருமகள் உவமை. சூழ்ந்தெரியும் தீப்பிழம்புகள் செந்தாமரை மலரின் மலர்ந்த இதழ்களாகவும் பாயல் பொகுட்டாகவும் ஆதிரை திருமகளாகவும் கொண்டு இவ்வுவமையின் அழகுணர்ந்து மகிழற்பாற்று. திருவின் செய்யோள்- திருமகள் என்னுந்துணை.

ஆருயிர் நீங்காத ஆதிரையின் துயரமும் தெய்வம் தெளித்துத் தேற்றுதலும்

35-44: தீயும்....................அறைதலும்

(இதன் பொருள்) அவள் தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன் யாது செய்வேன் என்று ஏங்கலும்- தீயினாலே சிறிதும் துன்புறுத்தப்படாமல் உயிரோடிருந்த அந்த ஆதிரை நல்லாள் தீயாகிய தெய்வம் தீண்டவும் ஒருப்படாத மாபெருந்தீவினை செய்துளேன் போலும், அந்தோ இனி யான் எவ்வாற்றால் என்னுயிரைப் போக்கமாட்டுவேன் என்று பெரிதும் ஏங்கி அழா நிற்ப; அசரீரி அந்தரம் தோன்றி-அவளது பேதைமை காரணமாகத் தோன்றிய அவளுடைய துயர்கண்டு அருட்பிழம்பாக யாண்டும் நிறைந்திருக்கின்ற தெய்வம் வானிடத்தே ஒலியுருவில் தோன்றி; ஆதிரை கேள்- ஆதிரை நல்லாய் தீ நின்னைக் கொல்லாமைக்குக் காரணம் கூறுவல் கேள்; உன் அரும் பெறல் கணவனை ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி-உன் அரும் பெறல் கணவன் இறந்திலன் காண்! கடலுள் மூழ்கிய மரக்கலத்திலே ஒடி மரம் பற்றிக் கிடந்த நின் கணவனை இயங்கும் அலைகள் உந்திக்கொடு போதலாலே அவன் போய்; நக்கசாரணர் நாகர் வாழ்மலைப் பக்கம் சேர்ந்தனன்- நக்கசாரணராகிய நாகர்கள் வாழுகின்ற மலைப்பக்கத்திலே சேர்ந்துயிருய்ந் திருக்கின்றனன் காண்!; பல்யாண்டு இராஅன்-அவன் அங்குப் பல யாண்டுகள் தங்கி இருப்பானல்லன்; சந்திர தத்தன் எனுமோர் வணிகன் வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்-இன்னும் சின்னாளிலே அம் மலைப் பக்கமாகச் சந்திரதத்தன் என்னும் ஒரு வணிகனுடைய மரக்கலம் வந்தெய்தும் அந்த மரக்கலத்திலேறி நின் கணவனும் வந்து நின் கண்முன் தோன்றா நிற்பன காண்; நீ நின் பெருந் துன்பம் ஒழிவாய் என-ஆதலின் நீ எய்துகின்ற நின் பெரிய துன்பம் ஒழிந்து இனி திருப்பாயாக என்று; அறைதலும்- கூறா நிற்றலாலே என்க.

(விளக்கம்) தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன் என்றது தீத் தானும் தெய்வமாகலின் என்னைத் தீண்டுதல் தகாது என்று கைவிடத் தகுந்த மாபெருந் தீவினை செய்துள்ளேன் போலும் அதனால் என்னைத் தீண்டா தொழிந்தது என ஆதிரை கற்பித்துக் கொள்ளும் காரணம் நுண்ணியதாதலறிக. யாது செய்கேன் என்றது இனி எவ்வாற்றால் உயிர் துறப்பேன் என்று ஐயுற்றபடியாம்.

உன் கணவன் உயிருடன் இருத்தலாலும் நீ கற்பின் கனலியாதலானும் தீ உன்னைக் கொல்லா தொழிந்தது என்று குறிப்பாகக் காரணம் தெரிவித்தபடியாம்.

அசரீரி-அருவமாயிருக்கின்ற தெய்வம். அந்தரந் தோன்றி என்றது வானத்தில் ஒலியாகத் தோன்றி என்றவாறு. கணவனை இழந்த துன்பமாகலின் பெருந்துன்பம் என்று அத் தெய்வம் கூறுகின்றது.

ஆதிரை மகிழ்ந்து இல்லம் புகுதல்

45-51: மையரி....................ஆயினள்

(இதன் பொருள்) மை அரி உண்கண் அழுதுயர் நீங்கிப் பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று-அசரீரி கூறிய ஆறுதல் மொழி கேட்டலும் கறுத்துச் செவ்வரி படர்ந்த மை எழுதிய கண்ணையுடைய ஆதிரை நங்கை யாது செய்கேன் எனக் கையற்றுக் கலங்கியழுதற்குக் காரணமான துன்பம் நீங்கிக் குளிர்ந்தகுளத்தில் முழுகி ஆடி வருவாள் போன்று அத் தீக்குழியினின்றும் புறப்பட்டு; மனம் கவல்வு இன்றி- மனத்திற் சிறிதும் கவலை இன்றி; மனை அகம்புகுந்து-பெரிதும் மகிழ்ச்சியுடையளாய் இல்லம் புகுந்து; என் கண்மணி அனையான் கடிது ஈங்கு உறுக என-என் கண்ணினுட் பாவை போல்வானாகிய என் காதலன் விரைந்து எம்மில்லம் புகுவானாக என்னும் வேண்டுகோளோடே; புண்ணியம் முட்டாள்-அருள் அறத்தை முட்டுப்பாடின்றிச் செய்பவள்; பொழி மழை தரூஉம் அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும் விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்-பொழிகின்ற மழையைத் தாம் விரும்பிய போது பெய்யென ஏவிப் பெய்விக்கும் தெய்வத்தன்மையுடைய இன்றியமையாச் சிறப்பினையுடைய பத்தினி மகளிரும் விரும்பித் தொழத் தகுந்த வியப்புடைய தெய்வக் கற்புடையளாகத் திகழ்கின்றனள் காண்; என்றாள் என்க.

(விளக்கம்) மை- கரிய. அரி- செவ்வரி; உண்கண்- மையுண்டகண் இது பன்மொழித் தொடர். ஆதிரை என்னும் பெயராந்துணை. தீயுள் மூழ்கியவள் பொய்கை புக்காடிப் போதுவாள் போன்று போந்தாள் என்க. கண்மணி யானையான் என்றது சாதுவனாகிய தன் கணவனை சாதுவன் கணிகையின் கேண்மை கொண்டு தன்னைத் துறந்து தீயொழுக்கி னின்றவனாக இருந்தும் அவனை இவள் கண்மணி யனையான் என்று பாராட்டுதல் அவள் தெய்வக் கற்பிற்குச் சிறந்ததொரு சான்றாம் இக்கருத்தினை

சேக்கை இனியார்பாற் செல்வான் மனையாளால்
காக்கை கவிந்தொழுகல் கூடுமோ கூடா
தகவுடைய மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்

எனவரும் பரிபாடலினும் காண்க. (20-86-89)

காயசண்டிகை முன்பு கூறிய சாதுவன் வரலாற்றில் எஞ்சிய துரைத்தல்

52-59: ஆங்க....................எழுப்பலும்

(இதன் பொருள்) ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மரநீழல்- மணிமேகலை நங்காய் யான் முன்பு நாகர் வாழ்மலைப் பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் என்று அறிவித்த அவ்வாதிரை கணவனாகிய சாதுவன் செய்திகேள் அவன் எய்தி அலை எறிகின்ற கடலினது நீர் அடைகரையில் மிகவும் உயர்ந்துள்ளதொரு மலையின் மேல் ஏறி அவ்விடத்தே ஒரு மரத்தின் நீழலிலே இருந்தவன்; மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து துஞ்சு துயில் கொள்ள முகல்களையுடைய பெரிய கடலிலே அகப்பட்டுத் தான் அலைப்புண்ட உடற்றுன்பம் மிகப்பெற்றுத் தன்னை மறந்து துயில் கொள்ளா நிற்ப; அச் சூர் மலை வாழும் நக்கசாரணர் நயமிலர் தோன்றிப் பக்கம் சேர்ந்து-அந்த அச்சந்தருகின்ற மலையின் கண் வாழ்கின்ற நக்க சாரணராகிய மக்கட் பண்பில்லாதவர் உணவு தேடிவருபவர் அவ்விடத்துத் தாமே வந்தெய்தி ஆண்டுத் துயின்று கிடக்கின்ற சாதுவன் பக்கத்திலே வந்து கூர்ந்து நோக்கியவர்; இவன் பரிபுலம்பினன் தானே தமியன் வந்தனன் அளியன்-இங்குக் கிடக்குமிவன் பெரிதும் வருந்தியவன் என்று தோன்றுகின்றது தான் தமியனாகவே இங்கு வந்துளான் நம்மால் பெரிதும் இரங்கத் தகுந்தவன் என்று தமக்குள்ளேயே அசதியாடுபவராய்; ஊன் உடை இவ்வுடம்பு உணவு என்று எழுப்பலும்-ஊன் மிக்கிருக்கின்ற இவனுடைய இவ்வுடம்பு இப்பொழுது நமக்கு ஒரு வேளை உணவாகலாம் என்று சொல்லிக் கொண்டு அவனைத் துயிலுணர்த்தி எழுப்புமளவிலே என்க.

(விளக்கம்) அலைநீர்- கடல் பிறங்கல்- மலை. மஞ்சு- முகில் மால் கடல் உழந்த நோய்- பெரிய கடலினின்றும் ஒடிமரம் பற்றிக் கிடந்து குளிராலும் பசியாலும் எய்திய துன்பம். அது கூர்த்தலாவது- செயலறவெய்துதல். சூர்மலை- அச்சந்தருமலை. மக்களைத் தின்பவர் வாழு மலையாதலின் சூர்மலை என்றார். நயம்-ஈண்டு மக்கட்பண்பு. கண்ணோட்டம் எனினுமாம்.

கடலிடையே உடைகலப்பட்டு ஒடிமரம் பற்றி வந்து கரையேறிய வரை அவர் பண்டும் பலரைப் பார்த்தவராதலின் இவனும் அங்ஙனம் கடலில் உழந்தவன் என்று அவன் உடல்நிலை கண்டே இவன் பரிபுலம்பினன் என்றார். பரிபுலம்பினன்- பெரிதும் துன்பப்பட்டவன் பலர் வந்திருந்தால் நமக்கு இரை பெரிதும் கிட்டியிருக்கும். ஆனால் இவனோ தனியனாக வந்திருக்கின்றான் என்பார் தாமே தமியன் வந்தான் என்று பரிந்துரைக்கின்றனர். இவனைத் தின்றுவிட்டால் இவன் துயரம் துவரப்போம் ஆதலின் இவனும் நம்மால் இரங்கித் தகுந்தவனே ஆகின்றான் என்று அசதியாடியபடியாம். பரிபுலம்பினனேனும் உடம்பில் தசை மிகுதியாகவே உளது என்பார் ஊனுடைய உடம்பு என்றார். உணவு என்றது நமக்கிது ஒரு பொழுதைக்குப் போதிய உணவேயாம் என்பதுபட நின்றது.

சாதுவன் நாகர் தலைவனைக் காண்டல்

60-71: மற்றவர்.................குளிர்ந்தபின்

(இதன் பொருள்) மற்று அவர் பாடை மயக்கு அறு மரபில் கற்றனன் ஆதலின்- மணிமேகலாய்! நாகராலே எழுப்பப்பட்ட அச் சாதுவன்றானும் அந்த நாகர் மொழியைச் சிறிதும் மயக்கம் இல்லாத முறையிலே நன்கு கற்றிருந்தபடியாலே, தமது மொழியாலே தன்னை உரப்பி எழுப்பிய அந்த நாகரோடு அவரும் வியப்புறும் வண்ணமும் தன்பாலன்புறும்படியும் கேள்விக்கினி தாம்படி அந் நாகர் மொழியாலே அவருடன் சொல்லாடுமாற்றால் அவரைத் தன் வயப்படுத்திவிட்டமையாலே; சுற்றும் நீங்கித் தொழுது உரையாடியாங்கு- அவனைச் சூழ்ந்து மிகவும் அணுக்கராய் நின்ற அந் நாகர் மருட்சியுற்றுப் பெரிதும் விலகி நின்று கைகூப்பித் தொழுது வணக்கத்துடன் பேசிய பின்னர்; அவர் உரைப்போர்-அந் நக்க சாரணர் சாதுவனுக்குத் தமது வேண்டுகோளைக் கூறுபவர்; அருந்திறல் கேளாய் ஈங்கு எம் குருமகன் இருந்தோன் அவன்பால் நீ போந்தருள் என பெறுதற்கரிய பேராற்றலுடையோய் நின்னோடு சொல்லாடும் திறம் எமக்கில்லை இம் மலையிடத்தே எங்கள் குருமகன் இருக்கின்றனன், அவன்பால் நீ எழுந்தருளல் வேண்டும் என்று அழையா நிற்றலாலே; அவருடன் போகி-அவரோடு சென்று; கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும் வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்-கள் சமைக்கும் பானையும் மிக்க ஊன் நாற்றமும் வெள்ளிய என்போடு கூடிய ஊன் வற்றலும் விரவியுள்ளதோர் இருக்கையின்கண்; எண்கு தன் பிணவோடு இருந்தது போலப் பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி ஏற்றைக் கரடியொன்று தன் காதற்றுணையாகிய பெண்கரடியோடு கூடியிருந்தாற் போன்று தன் காதற் பெண்டாட்டியோடு வீற்றிருந்த தன்மையைப் பார்த்து; பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகி-அவனையும் தன்னுடைய மொழியினிமையாலே தன் வயப்படுத்திக்கொண்டு அவன் பக்கத்து அவனாலே விரும்பப்படும் தன்மையையுடையவனாகி; கோடுயர் மரநிழல் குளிர்ந்தபின்-அவனிருந்த கிளைகயோடுயர்ந்துள்ளதொரு பெரிய மரத்தின் நீழலிலே அவனால் நன்கு மதிக்கப்பட்டுக் கொல்வர் என்னும் அச்சந் தீர்ந் துளங் குளிர்ந்திருந்த பின்னர் என்க.

(விளக்கம்) மற்றவர் பாடை-அந்த நாகர் தாய்மொழியாகிய நாகமொழி. நாகருள் நாகரிக மிக்கவரும் உளர் என்பது கீழ்நில மருங்கின் நாக நாடாளும் இருவர் மன்னவர் என முற் கூறப்பட்டமையால் அறியப்படும் ஈண்டுக் கூறப்படுகின்ற நாகர் அவரினத்தவராய் அவர் பேசுகின்ற நாக மொழியே பேசுகின்ற நாகரிகமில்லாத நாகர்கள் மேலும், ஆடையுடுத்தாது திரியுமளவிற்குத் தாழ்ந்த காட்டகத்தே வாழும் மாக்கள். மக்களைக் கொன்று தின்பவரும் ஆவார். ஆகவே இவரைப் பிரித்துக் காட்டவே புலவர் பெருமான் இவரை நக்க சாரணர் நாகர் என அடைபுணர்த்து ஓதுகின்றனர். ஈண்டுச் சாதுவன் கற்ற மொழி நாகரிகமுடைய நாகர் பேசும் மொழியாகும். ஆகவே தாம் பேசும் மொழியே பேசுகின்ற சாதுவனுடைய மொழியைக் கேட்டலும் நக்கசாரணர் நாகர் இவன் தம்மினத்து மேன்மகன் என்று கருதி அச்சத்தாலே அணுக்கராய் நின்றவர் சற்று நீங்கித் தூரத்தே நின்று தொழுது உரையாடுகின்றனர் என்றுணர்தல் வேண்டும். இவன்பால் இவர் பெரிதும் அச்சமெய்தியதனை இவர் அவனை அருந்திறல் என்று விளிப்பதனாலும் அறியலாம். மேன் மகனாகலின் தமக்குள் மேன்மகனாய் விளங்கும் தங் குருமகன்பால் அழைத்தேகக் கருதி ஈங்கு எங் குருமகன் இருந்தோன் அவன்பால் போந்தருள் என்று வேண்டுகின்றனர்.

கல்லாத மாக்கட்குக் கற்றறிந்தவர்பால் மருட்கையும் அச்சமும் தோன்றுதல் இயல்பு.

குருமகன் இருந்தோன் என்புழி ஆகாரம் ஓகாரமாயிற்றுச் செய்யுளாதலின்.

குழிசி- பானை. முடை-ஊன். என்புணங்கல்-என்போடு கூடிய ஊன்வற்றல். எண்கு- கரடி. பிணவு, ஈண்டுக் கரடியின் பெண்ணுக்கு வந்தமையை,

பன்றி புல்வாய் நாயென மூன்றும்
ஒன்றிய என்ப பிணவென் பெயர்க்கொடை

என்னும் தொல்காப்பியமரபியற் சூத்திரத்தின்கண்(60) ஒன்றிய என்ற இலேசானே அமைத்துக் கொள்க. இங்ஙனமே பரிபாடலினும் வேழப்பிணவு (10-15) என இப் பெயர் யானைக்கும் வருவதூஉ முணர்க.

பெண்டு- பெண்டாட்டி; மனைவி மனையறமில்லாமை பற்றி மனைவி என்னாது பெண்டு என்ற நுண்மை நோக்குக.

குளிர்ந்த பின் என்றது, கொன்று தின்பர் என்னும் அச்சந்தீர்ந்து உள்ளம் குளிர்ந்த பின் என்றபடியாம்.

நக்கசாரணர் நாகர் குருமகன் செயல்

71-79: அவன்.....................என்றலும்

(இதன் பொருள்) அவன் நீ ஈங்கு வந்த காரணம் என் என சாதுவனுடைய மொழியினிமையால் பிணிப்புண்ட அந் நாகர் தலைமகன் சாதுவனை நோக்கி ஐய எமது மலைக்கு நீ வருதற்கியன்ற  காரணம் யாது? என்று வினவா நிற்ப; ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும்- அங்ஙனம் வினவிய அந் நாகர் தலைவனுக்குச் சாதுவன் தான் அலைமிக்க கடலில் எய்திய துன்ப நிகழ்ச்சியை எடுத்துக் கூறவே அது கேட்ட அத் தலைவன்; அருந்துதல் இன்றி அலைகடல் உழந்தோன் வருந்தினன் அளியன்-உணவுமின்றிப் பெரிதும் அலைக்கின்ற கடலிலே இவன் துன்புற்று வருந்தினன் நம்மால் இரக்கப்படத் தக்கவன் என்று சாதுவன் திறத்திலே பரிவு கூர்ந்து தன் பணி மாக்களை நோக்கி; மாக்காள் வம்மின் நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து வெம்களும் ஊனும் வேண்டுவ கொடும் என- ஏவலர்களே விரைந்து வாருங்கள் இப்பொழுதே ஆடவருட் சிறந்திருக்கின்ற இந்த நம்பிக்குப் பொருத்தமாக இளமையுடையளாய் நம் மகளிரிற் சிறந்த நங்கை யொருத்தியையும் கொடுத்து அவ்விருவர்க்கும் வெவ்விய கள்ளும் ஊனுமாகிய உணவுகளையும் வேண்டும் பிற பொருள்களையும் கொடுங்கோள் என்று கட்டளையிடா நிற்ப; அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து-அத் தலைவன் கூற்றைக் கேட்ட சாதுவன் பெரிதும் வருந்தி; வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும்- நீ அன்பு மிகுதியாலே கூறினையேனும் யான் கேட்கலாகாத தீய மொழிகளைக் கேட்கலாயினேன் நின்னால் கூறப்பட்ட பொருள்களை யான் விரும்புகிலேன் காண்! பொறுத்தருள்க! என்று மறுத்துக் கூறலும் என்க.

(விளக்கம்) அவன்- நாகர் தலைவன். ஈங்கு நீ வந்த காரணம் என்? என்றது மேன் மகனாகிய நீ கீழோர் ஆகிய யாங்கள் உறையுமிடத்திற்கு வர நேர்ந்த காரணம் என்னை? என்று வினவியபடியாம்.

அவற்கு-அந் நாகர் தலைவனுக்கு.  நம்பி என்றான் இவன் ஆண் மக்களுள் தலை சிறந்தவன் என்னும் கருத்தால். இவனுக்கேற்ற இளமகள் ஒருத்தியை ஆராய்ந்து கொடுமின் என்பான் இளையளோர் நங்கையைக் கொடுத்து என்றான்.

அயர்ந்து-வருந்தி. அவன் கட்டளையை மறுத்துழி அவன் தீங்கு செய்யவும் கூடும் என்று கருதி அயர்ந்து என்பது கருத்து.

களும்- கள்ளும்: விகாரம். வேண்டுவ பிறவும்-இவன் விரும்பும் பிறவும். அவை இருப்பிடம் கலம் படுக்கை முதலியன. வெவ்வுரை தீய மொழி. அப் பொருள்களை யான் வேண்டேன் என்றவாறு.

நாகர் தலைவன் வியப்பும் வினாக்களும்

80-83: பெண்டிரும்..............சொல்லென

(இதன் பொருள்) தூண்டிய சினத்தினன்- சாதுவன் தன் கட்டளையை மறுத்த மாற்றத்தாலே தூண்டப்பட்டெழுந்த வெகுளியை யுடையவனாகிய அந் நாகர் குருமகன்; ஞாலத்து பெண்டிரும் உண்டியும் இன்று எனின் மாக்கட்கு உறுபயன் உண்டோ-விருந்தினனே! எற்றிற்கு என் நன்கொடைகளை நீ மறுக்கின்றனை இந் நிலவுலகத்திலே மகளிரும் உணவும் இல்லை எனின் இதன்கண் வாழும் மாந்தருக்கு எய்தும் இன்பம் பிறிது ஏதேனும் உண்டோ? யாமறிகின்றிலேம்; உண்டு எனின் சொல் யாங்களும் காண்குவம் காட்டுவாயாக என- நீ உண்டு என்று கூறுவாயாயின் கூறுதி யாங்களும் அறிந்து கொள்வேங் காண் அவற்றை எமக்குங் காட்டுவாயாக என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) பெண்டிருமுண்டியு மின்றெனின் மாக்கட்கு உண்டோ ஞாலத்து உறுபயன் என நிகழுமிதனோடு

பெண்டிரும் உண்டியும் இன்பமென் றுலகில்
கொண்டோர்               (14:39-40)

எனவரும் சிலப்பதிகாரம் ஒப்பு நோக்கற்பாலதாம்.

சாதுவனுக்கு நலஞ் செய்யும் கருத்தோடு கூறியவற்றை மறுத்துரைத்தலும் அம் மறுப்பு அவன் சினத்தைத் தூண்டுதலியல்பே யாதலறிக. உண்டெனின் யாங்களும் காண்குவம் என்றது இகழ்ச்சி இன்றெனின்-இல்லையாயின்.

சாதுவன் அறங்கூறல்

83-91: சொல்லும்....................ஆகென

(இதன் பொருள்)  சொல்லும்-அது கேட்ட சாதுவன் கூறுவான்; கயக்கறு மாக்கள்- கலங்குதலில்லாத அறிவுடைய சான்றோர்; மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கடிந்தனர்- அறிவினை மயக்கு மியல்புடைய கள்ளுண்ணுதலையும் உடம்பிலே நிலைபெற்ற உயிர்களைக் கொல்லுதலையும் தீவினை என்று கருதி விலக்கிவிட்டனர்; கேளாய்- அதற்குக் காரணம் கூறுவல் கேட்பாயாக!; பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் தலைவனே இவ்வுலகிலே பிறந்தவர் இறந்து போதலும் இறந்து போனவர் மீண்டும் பிறப்பெய்துதலும் விழித்திருப்பவர் உறங்குவதும் உறங்கியவர் மீண்டும் விழிப்புறுதலும் போன்றதாம் என்னும் மெய்க்காட்சி வாய்மையே ஆதலின்; நல்அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் அல் அறம் செய்வோர் அருநரகு அடைதலும் உண்டு என உணர்தலின்-மேலும் பிறந்து வாழ்வோருள் வைத்து நன்மை பயக்கும் நல்வினையைச் செய்தவர் இறந்த பின்னர் நன்மையுடைய மேனிலையுலகங்களிலே சென்று இன்புற்றிருத்தலும் அல்லாத தீவினையைச் செய்தவர் இறந்த பின்னர்ப் பொறுத்தற்கரிய துன்பமுடைய நரக லோகத்திலே சென்று துன்பத்திலழுந்துதலும் உண்டு என்று திறவோர் காட்சியினால் தெளிந்திருத்தலாலே; உரவோர் களைந்தனர் கண்டனை ஆகு என-அறிஞர் அவற்றை நீக்கினர் என்று அறிவாயாக! என்று கூறா நிற்ப என்க.

(விளக்கம்) சொல்லும்- சொல்வான். கள் தன்னையும் மறப்பிக்கும் பெரியதொரு மயக்கஞ் செய்வதாகலின் மயக்குங் கள்ளும் என அதன் தீமையையும் விதந்தோதினன். ஈண்டு,

கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து
மெய்யறி யாமை கொளல்       (குறள்-925)

எனவரும் திருவள்ளுவர் திருவாக்கும்,

ஏயின விதுவலான்மற் றேழைமைப் பால தென்னோ
தாயிவள் மனைவி யென்னும் தெளிவன்றேல் தரும மென்னாம்
தீவினை யைந்தின் ஒன்றாம் அன்றியும் திருக்கு நீங்கா
மாயையின் மயங்கு கின்றாம் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்

எனவரும் கம்பநாடர் திருவாக்கும் நினையற்பாலன

மன்னுயிர்-உடம்பில் நிலைபெற்ற வுயிர். கோறல்-கொல்லுதல் இனி நக்கசாரணர் நாகர்தலைவன் ஆகலின் அவனுடைய தகுதி நோக்கி ஈண்டு அறங் கூறும் சாதுவன் இல்லறத்தோர்க் கோதிய பஞ்சசீலம் என்னும் ஐவகை அறமும் கூறாமல் கள்ளுண்ணாமையும் கொல்லாமையும் ஆகிய இரண்டறங்களே கூறியொழிந்தான்; இவ்விரண்டுமே தலைசிறந்தனவாம் இவற்றையே கூறினன். ஏனைய பொய்யாமையும் காமமின்மையும் கள்ளாமையும் ஆகிய மூன்றும் அவர்க்கு ஆற்றலாகாவறங்கள் ஆதலின் என்க. என்னை? அவர் இன்னும் இல்லறமே தலைப்படாத காடுறை வாழ்வினர் ஆதலின் இவை அவர்க்கு விளங்காமையின் பயனில கூறலாய் முடியுமாதலான்.

ஈண்டு பிறந்தவர்.............விழித்தலும் எனவரும் இவ்வடிகள் உறங்குவது போலும் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு எனவரும் (339 திருக்குறட் கருத்தை இவர் பொன்போற் போற்றி வைத்தமை யுணர்க.

கயக்கு-கலக்கம். மேலே கயக்கறு மாக்கள் இவற்றைக் கடிந்தமைக்குக் காரணம் கூறுபவனும், நல்லறம் செய்வோர் நல்லுல கடைதலும் அல்லறஞ் செய்வோர் அருநரகு அடைதலும் உண்டு என்று அச்சுறுத்தினன் என்னை? அச்சமே கீழ்களது ஆசாரம் என்பதுபற்றி நீயிர் இவற்றைச் செய்வீராயின் அருநரகடைந்து அளவிலாத் துயரத்துக் காளாவீர் என்று, அச்சுறுத்தல் வேண்டிற் றென்க. உரவோர் அறிஞர்.

கண்டனை ஆக என்றது இதனை நன்குணர்ந்து கொள்ளுதி என்று வற்புறுத்தியபடியாம்.

நாகர் குருமகன் நகைத்து வினவுதல்

91-95: கடுநகை.....................உரையென

(இதன் பொருள்) கடுநகை எய்தி-அதுகேட்ட அந் நாகர் குருமகன் இவன் நமது நன்கொடையை இகழ்ந்ததூஉமன்றி அச் செயலுக்குத் தகுந்த காரணமும் கூறாமல் வாய்தந்தன கூறுகின்றான் என்று கருதி அவன் மடமை கருதிச் சினத்தோடு விலாவிற்ச் சிரித்து வினவுபவன்! புதுவோய்!; ஈங்கு உடம்பு விட்டு ஓடும் உயிர் உருக்கொண்டு ஓர் இடம் புகும் என்று எமக்கு உரைத்தாய்-இவ்வுலகத்திலே உடம்பைப் போகட்கு ஓடுகின்ற உயிரானது மீண்டும் உடம்பெடுத்துக் கொண்டு நல்லுலகமும் நரகருலகமும் ஆகிய இரண்டிடங்களுள் வைத்து ஓருலகத்திலே புகுதும் என்று கூறினையன்றோ? வறுங்காற்றேயாகிய உயிர் காற்றோடு கலந்தொழிதலன்றி; அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும்-இறந்தொழிந்த அவ்வுயிர் எவ்வாறு சென்று மற்றோருடம்பிலே புகமுடியும்? அவ்வகை செவ்வனம் உரையென-அது புகுதும் வகையை எமக்கு விளக்கமாகக் கூறிக்காண் என்று சொல்லிப் பின்னும் வெகுளா நிற்ப என்க.

(விளக்கம்) உயிருண்மையறியாதோர் உயிர்ப்பையே (பிராண வாயுவை) உயிர் என்ற கருதுதல் இயல்பாகலின் அவர் கருத்திற்கேற்ப உரைவிரித்தாம். இதனை

யாதுமில்லை உயிரிவை யாம் சொலும்
பூதமே யெனப் போந்திருந் தென்னொடு
வாதஞ் செய்கின்ற பூதமவ் வாதமோ
யாதைம் பூதங்க டம்முள்ளு மஃதினி

எனவரும் நீலகேசிச் செய்யுளுள் நீலகேசி ஐம்பூதங்களுள் என்னோடு வாதம் செய்யும் பூதம் அவ்வாதமோ (பிராணவாயுவோ) எனப் பூதவாதியை வினவுமாற்றா லறிக.

மூச்சுகாற்றே இவ்வுடம்பிற்குயிர், அஃதியங்குங்காறும் இவ்வுடம்பியங்கும். இயங்காதொழியின் உடம்பியங்காது. ஆகவே உடம்பிற் புகாது ஒழிந்த மூச்சுக்காற்றுக் காற்றுடன் கலப்பதன்றி வேறோர் உடம்பிற்புகும் என்பதும் வேறோரிடத்திலே வாழும் என்பதும் அந் நாகர் தலைவனுக்குப் பெரும் பேதைமையாகத் தோன்றினமையின். அப் பேதைமை நிலைக்களனாகப் பெருநகை தோன்றுவதாயிற்று. பண்டும் சினந்து வினவியவனுக்குச் சாதுவன் கூற்றுத் தகுந்த காரணமாகப் படாமையிற் பின்னும் சினந்தே வினவினான் என்பது மேலே சாதுவன் சினவாது இதுகேள்! என்று விடை கூறப்புகுமாற்றால் அறியலாம்.

சாதுவன் உயிருண்மையும் மறுபிறப்பும் பிறவும் நாகர் குருமகனுக்கு அறிவுறுத்துதல்

95-106: சினவா..............உரைத்தலும்

(இதன் பொருள்) சினவாது இதுகேள்-தலைமகனே! வெகுளாதே கொள்! நின் வினாக்களுக்கு விடை கூறுவல் அதனைக் கூர்ந்து கேட்பாயாக!; உடல் உயிர் வாழ்வுழி உற்றதை உணரும்-உடலின் கண்ணிருந்து உயிர் வாழ்கின்ற காலத்தே அவ்வுடல் தன்கண் வந்துறுகின்ற புலன்களுள் வைத்து யாதானும் ஒன்றனைத் தன் ஐம்பொறிகளுள் வைத்து அப் புலனுக்கு இயைந்த ஒரு பொறியாலே உணர்கின்ற இயல்புடையதாம்; மற்றையவுடம்பே மன் உயிர் நீங்கிடின் தடித்து எரியூட்டினும் தான் உணராது அவ்வாறு பொறிகளாலே புலன்களை உணரும் இயல்புடைய அவ்வுடம்பு தானே பொறிகளின் வாயிலாயுணரும் பொருளாய்த் தனக்குள்ளில் நிலைபெற்றிருந்த உயிர் போய்விட்ட காலத்தே வாளாலே துணித்துத் தீயாற் சுட்டாலும் தான் ஒரு சிறிதும் உணரமாட்டாது இவ்வியல்பு நீயும் நன்கறிந்ததே யாமன்றோ; எனின் உடம்பிடைப் போனது ஒன்று உண்டு என உணர் நீ-இங்ஙனமாதலின் பண்டு இன்பதுன்பங்களை நுகர்ந்திருந்த பொருளொன்று அவ்வுடம்பினின்றும் போய் விட்டது என்று தெரிகின்றதன்றே அதுவே அவ்வுயிர் என்று நீ உணர்ந்து கொள்ளக்கடவாய்; போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்-தாம் வாழுகின்ற இல்லத்திலிருந்து புறப்பட்டுப் போனவர்க்கு அவர் புகுந்துறைவதற்கு மற்றோர் இல்லம் இருக்கும் என்பதனை யான் மட்டுமோ அறிவேன் யாவருமே நன்கறிகுவால்லரோ?; உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை-இனி இது நிற்க மற்றொன்று கூறுவல் கேள், நீ நின் இவ்விருப்பிடத்திலே உறங்கும்பொழுது உன் உடம்பு இவ்விடத்தினின்றும் தனியே பல காவத தூரத்திற்கப்பாலும் சென்று பல்வேறு செயல்களைச் செய்து இன்ப துன்பநுகர்ச்சிகளை எய்துமொரு விந்தையை நீ நின்னுடைய கனவிடத்தே பன்முறையும் கண்டிருப்பாயல்லையோ; ஆங்ஙனம் போகி அவ்வுயிர் செய்வினை பூண்ட யாக்கையில் புகுவது நீ தெளி-அவ்வாறே சென்று அந்த உயிரானது தான் செய்த வினைக்கிணங்க எடுத்த உடலின்கண் புகுந்து வாழ்வதாம் என்று நீ தெளிந்து கொள்ளுதி; என்று அவன் உரைத்தலும்- என்று சாதுவன் கூறியவளவிலே; என்க.

(விளக்கம்) செவ்வனம்- செவ்வையாக; விளக்கமாக. சினவாது என்றமையால் அவன் வெகுண்டமை பெற்றாம். உடல் உயிர் வாழ்வுழி உற்றதை யுணரும் என்க. உற்றதை என்றது புலனை சாதியொருமை. சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் புலன்களை உணரும் என்றவாறு. உடல் கருவிகளால் உணரும் என்பதாம். கருவி- மெய்வாய் கண் மூக்குச் செவி மனம் என்னும் ஆறுமாம். உயிர் நீங்கிடில் அவ்வுடம்பே உணராமையின் உணர்தற்கு வினை முதலாக அவ்வுடம்பிடை இருந்து போனது ஒன்றுண்டு என்று தெரிகின்றதன்றோ அதுவே உயிர் என நீ உணர் என்றறிவுறுத்தபடியாம். இங்ஙனம் புலன்களை யுணருமியல்பு உயிர்ப்பிற்கு இல்லை என்பதும் இதனால் அறிவுறுத்தினானுமாதலறிக.

ஓரிடத்திலிருந்து புறப்பட்டுப் போனவர் பிறிதோரிடத்தே சென்றுறைவர் என்பது கூறாமலே அமையும் என்பான் யாவரும் உணர்குவர் என்றான்.

இனி அவ்வுயிர் உடம்பு கிடப்பத் தான் மட்டும் புறம் போமாற்றை உணர்ததுவான் உடம்பீண்டொழியக் கடந்து சேட் சேறல் கனவினுங் காண்குவை என்றான். இதனால் கனவிற் காணப்படும் அருவுடம்பினுள் உயிர் இருத்தலைக் கூறாது கனவையே அஃதாவது அருவுடம்பையே உயிர் என்று அறிவுறுத்தானாம், என்னை? அவன் ஐயந்தீர்த்தற்கு அருவுடம்பினியல்பு கூறுதல் மிகையாய் அவனுக்குப் பிறிதும் ஐயந்தோற்றுவிக்குமாகலின் என்க.   

அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும் என்பதே அவன் வினாவாதலின் உயிர் உறக்கத்தே பருவுடம்பை நீத்து அருவுடம்பிற் சேட் சேறலைக் கனவின்கண் வைத்து அறிவுறுத்தான். உறங்கும் போது உடல் உயிர்ப்புடன் கிடத்தலின் இதனானும் உயிர்ப்பு உயிர் அன்று என்று அறிவுறுத்தானும் ஆயினன் ஆதலறிக.

இதனாற் பயன் நல்லறம் செய்வோர் நல்லுலகடைதலும் அல்லறம் செய்வோர் அருநரகடைதலும் கூடும் என்று அக் குருமகனுக்கு அறிவித்தலாம் என்க.

இதனால் அவன் நன்கொடையைத் தான் மறுத்தமைக்குச் சிறந்த காரணம் அறிவுறுத்தினமையும் அறிக.

நாகர் தலைவன் நன்றிநவின்று எமக்காம் நல்லறம் நவிலுக என்று சாதுவனைச் சரணடைதல்

104-111: எரிவிழி..................என்றலும்

(இதன் பொருள்) எரிவிழி நாகனும்- சாதுவன் கூறிய புதுமையுடைய மொழிகளைக் கேட்டவுடன் தீப்போன்று எரிகின்ற கண்களையுடைய அந் நாகர் குருமகன் பெரிதும் வியந்து பின்னும் அவனுடைய சொன்னயத்தாலே பிணிப்புண்டவனாய்ச் சாதுவனைப் பெரிதும் மதித்து; நன்று அறிசெட்டி நல் அடி வீழ்ந்து நல்லறத்தை நன்குணர்ந்த வணிகனாகிய அச் சாதுவனுடைய அழகிய அடிகளிலே வீழ்ந்து வணங்கி; கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பின் உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன்- பெரியோய்! நீ கூறிய அறவுரை சிறந்ததே ஆயினும், நீ அறிவுறுத்தவாறு யானும் கள்ளையும் ஊனையும் உண்ணாது கைவிடு வேன்மன்! அங்ஙனம் அவற்றைக் கைவிட்டாலோ இந்த உடம்பினுள்ளே உறைந்து வாழும் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுதல் இயலாதேனாவேன் காண்!; தமக்கு ஒழிமரபின் சாவு உறும் காறும் எமக்கு ஆம் நல் அறம் எடுத்துரை என்றலும்- உயிர்கட்கு வரையறுத்துள்ள முறைமையாலே இந்த உடம்பு சாக்காடெய்து மளவும் எம்மால் ஆற்றலாகும் நல அறங்களை மட்டும் எடுத்துக் கூறுவாயாக! என்று வேண்டா நிற்றலும் என்க.

(விளக்கம்) கள்ளையும் ஊனையுமே உண்டு பழகி விட்டமையாலே அவற்றைக் கை விட்டால் வேறுணவு கோடல் எம்மாலியல்வதன்று என்பது கருத்து. தமக்கு ஒழிமரபு என்றது மன்னுயிர்கட்கு இன்னது செய்யலாகாது என்று விலக்கப்பட்ட முறைமையை. இவற்றை அன்றி வேறு அறம் உளவேல் கூறுக அவற்றைக் கடைப்பிடிப்பல் என்பது கருத்து.

நன்றறி செட்டி  நாகர்கடைப் பிடித்தற்கியன்ற நல்லறங் கூறுதல்

112-123: நன்று.............கொள்கென

(இதன் பொருள்) நன்று சொன்னாய் நல் நெறிப் படர்குவை உன் தனக்கு ஒல்லும் அற முரைக்கேன்-அது கேட்ட சாதுவன் பெரிதும் மகிழ்ந்து தலைமகனே நீ நன்றே கூறினை இனி நீ படிப்படியாக நன்னெறியிலே சென்று சென்று உய்பவும் உய்குவை காண்! நீ விரும்பியவாறே உன்னால் கடைப்பிடித் தொழுகற் பால அறங்களும் உள அவற்றைக் கூறுவல்கேள்!; உடைகல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் அடுதொழில் ஒழிந்து ஆர் உயிர் ஓம்பி- என்னைப் போன்று கடலில்கண் தாம் ஏறிவரும் மரக்கலம் உடைந்துழி அதனினின்று ஒடி மரம் பற்றி வருகின்ற மக்கள் அரிதின் உயிர் தப்பி இங்கு வந்து உற்றங்கால் அவரைக் கொல்லும் தீத்தொழிலைக் கைவிட்டு அவருடைய அரிய உயிரைப் பாதுகாத்திடுவாயாக!; மூத்து விளி மா வொழித்து எவ்வுயிர் மாட்டும் தீத்திறம் ஒழிக என்-அப்பாலும் ஊன்தினறல் கைவிட மாட்டாயேனும், தாமே முதுமையுற்று இறந்துபடுகின்ற விலங்குகளின் ஊனை உண்பதல்லது எல்லா உயிர்களிடத்தும் அருள் உடையையாகித் தின்னுதற் பொருட்டாக அவற்றைக் கொல்லுகின்ற தீவினையைச் செய்யா தொழிவாயாக, இவ் விரண்டும் உனக்கு ஒல்லும் அறங்களே யாதலின் இவற்றையே கடைப்பிடித் தொழுகுதி என்று கூற சிறுமகன் உரைப்போன் ஈங்கு எமக்கு ஆகும் இவ்வறம் செய்கேன்-இவற்றைக் கேட்டுக் கீழ்மகனாகிய அந் நாகர் தலைவன் தன் உடம்பாட்டைக் கூறுபவன் ஐய! நீ கூறிய இவ்வற மிரண்டும் எம்மால் மேற் கொண்டொழுகத் தக்க அறமே ஆகும் ஆதலின் இவற்றைக் கடைப் பிடியாகக் கொண்டொழுகுவேன் காண்!; ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க-அதோ அவ்விடத்தே கிடக்கின்ற உனக்கு ஆக்கமாகின்ற பெறற்கரும் பொருள்களை யெல்லாம் நீ ஏற்றுக் கொள்வாயாக என்று சொல்லிச் சாதுவனுக்குப் பொருட்குவியல் சிலவற்றைக் காட்டிக் கூறுபவன்; பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை உண்டேம்-ஐயனேபழைய காலந் தொட்டு மரக்கலம் கவிழ்ப்பெற்று உயிருய்ந்து ஈங்கு வந்துற்ற மாந்தர்களைப் பன்முறை கொன்று தின்றேமாக; ஈங்கு இவை அவர் தம் உறுபொருள்-இதோ இவ்விடத்தே குவிந்து கிடக்கும் இப் பொருள்கள் அம் மாந்தர் கொடுவந்தமையாலே மிக்குக் கிடக்கும் பொன் முதலிய பொருள்களாம். இவையேயன்றி; விரை மரம் மெல் துகில் விழுநிதிக் குப்பையோடு- அதோ அவ்விடத்தே சந்தன மரமும் அகிலும் பிறவுமாகிய நறுமணங் கமழும் மரங்களும் மெல்லிய ஆடைகளும் இன்னோரன்ன பிறவுமாகிய இவற்றையும் பொன் முதலிய உனக்குச் சிறந்த பொருட்குவியல்களோடே இக் குவியல்களையும் நீ ஏற்றுக் கொள்வாயாக! என்று வழங்கா நிற்ப; என்க.

(விளக்கம்) நன்று சொன்னாய் என்றான் முன் போன்று கடுநகை எய்தி இவற்றையும் இகழ்ந்து கை விடாமல் எமக்கு ஆம் நல் அறம் உரை என அறத்தைக் கேட்டற்கு அவாவி வேண்டுதல் பற்றி, அவ்வாறு அற நெறியை அவாவி நிற்போர் மேலும் மேலும் அந்நெறி பற்றி ஒழுகுதலியல்பாதல் பற்றி இனி நீ உய்ந்தாய் என்று உவகை கூறுவான், நன்னெறிப் படர்குவை என்று பாராட்டினன்; இக் கருத்தோடு

பல்சான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பின் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை இரங்குவிர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே

எனவரும் இனிய புறநானூற்றுப் பாடற் கருத்தும் ஒப்புக்காணத்தகும் (195)

இனி, ஒல்லும் அறநெறி உரைக்கேன்

என்னும் இது,

ஒல்லும் வகையான் அறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்         (33)

எனவரும் அருமைத் திருக்குறளையும் நினைப்பித்தலுணர்க

அடுதொழில்-கொல்லும் தொழில்

இனி ஊன் உண்ணாமல் என் உயிர் ஓம்புதல் ஆற்றேன் என்றானாகலின் அதற்குப் புறனடையாக ஒரு வழி கூறுவான், மூத்துவிளி மாக்களின் ஊனைத் தின்னுக என்றான்

இனி, ஈண்டு இச் சாதுவன் மூத்துவிளி மாவின் ஊனைத் தின்னுக என்றது செத்ததெல்லாம் மண்ணோடொத்தலினானும் ஊன்தின்னா தோம்புதல் அந் நாகர் தலைவனுக்கு ஒல்லாது என்பதானும் புறனடையாகக் கூறப்பட்டதே யன்றிப் பிறிதொன்று மில்லை. ஆதி புத்தர் அறமுரைக்குங் காலத்தே இங்ஙனமே கீழ் மக்கட்கு அறிவுறுத்தியிருத்தலும் கூடும். இதனைப் பிற்காலத்துப் பௌத்தர்கள் விதியறமே போலத் தஞ்சமய நூல்களினும் புகுத்தி விடுவார் ஆயினர் என்பதும், பிடக நூலிலேறிய இவ் விதி காரணமாக இக் காலத்தே பவுத்த சமயத் துறவோர் தாமும் விலைப்பாலில் ஊன் கொண்டு தின்கின்றனர். இங்ஙன மன்றித் தினற் பொருட்டாய் விலைப்பாலில் ஊன் கொண்டு தின்னலாம் என்று புத்தர் பெருமான் பிடக நூலிற் கூறி வைத்துள்ளார் என்பது அருட்பிழம்பாகிய அப் பெரியோர் இயல்பறியாதவர் படைத்து மொழிக் கிளவியே என்று உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இனி ஈண்டுச் சாதுவன் ஊன் தின்றலைத் தீவினை என்பதனால் பண்டு பவுத்த சமயத்தைத் தழுவிய தண்டமிழாசான் சாத்தனாரை யுள்ளிட்ட தமிழகத்துப் பவுத்தர் எல்லாம் ஊன் உண்ணாமையை மேற் கொண்டிருந்தவரே என்பது புலனாகும். இது பற்றி யாம் நீலகேசி முன்னுரையினும் ஆராய்ச்சி செய்து வரைந்துள்ளேம். அறிய விரும்புவோர் அம் முன்னுரையைப் பயின்றறிக. ஈண்டு,

தீனற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்    (256)

எனவரும் திருக்குறளும், நினைவிற் கொள்ளற்பாலதாம்.

தீத்திறம்- கொலை செய்யும் தீவினை. பொன்னும் மணியும் விரை மரமும் பிறவுமாகிய அரும்பொருள் எல்லாம் நக்க சாரணர் ஆகிய தமக்குப் பயன் படாமையின் உனக்கு ஆகும் அரும்பொருள் என்றான்.

பண்டும் பண்டும் என்னும் அடுக்குப் பன்மை பற்றி வந்தது. விரை மரம்-நறுமணப் பொருளாகிய சந்தனம் முதலியவை. விழுநிதிக்குவை என்றது பொன்மணி முதலியவற்றாலியன்ற அணிகலன்களை. அவை உடைகலப்பட்டு உய்ந்து வந்தோர் அணிந்திருந்தவை என்க.

காயசண்டிகை மணிமேகலையை ஆதிரை கையாற் பிச்சை பெறுக எனல்

123-129: எடுத்தனன்..................பெறுகென

(இதன் பொருள்) சந்திர தத்தன் என்னும் வணிகன் வங்கம் சேர்ந்தது- சாதுவன் அத் தீவினருகே சந்திர தத்தன் என்னும் வணிகன் மரக்கலம் வந்து சேர்ந்ததனைக் கண்டு; எடுத்துக் கொணர்ந்தனன் வந்து அதில் உடன் ஏறி இந்நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து- நாகர் தலைவன் கொள்கெனக் கொடுத்த சிறந்த பொருள்களில் வேண்டுமவற்றைக் கைக்கொண்டு அவற்றைப் பொதிகளாக்கி எடுத்துக் கொண்டு வந்து அம் மரக்கலத்தி லேறிக் கடல் கடந்து வந்து இப் பூம்புகார் நகரத்தை அடைந்து தன் கற்புடைய மனைவியோடு கூடி இனிது வாழ்க்கை நடத்தி; தன் மனை நன்பல தானமும் செய்தனன் தன்னில்லத்தே நன்மை தருகின்ற பல தானங்களையும் செய்து சிறந்தனன் காண்!; பூங்கொடி நல்லாய் ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால் பிச்சை பெறுக என- மகளிருள் சிறந்த மணிமேகலை நங்காய்! இவ்வாறு பத்தினிப் பெண்டிருள்ளும் தலை சிறந்து விளங்கா நின்ற அவ்வாதிரை நல்லாளுடைய பெருந்தகைமையுடைய கையாலே இடப்படுகின்ற ஆருயிர் மருந்தாகிய பிச்சையினை நீ முதன் முதலாக ஏற்றருளுக என்று அறிவியா நிற்ப என்க.

(விளக்கம்) வங்கம் சேர்ந்ததில் என்றது சேர்ந்த வங்கத்தில் என்றவாறு இனி வங்கம் சேர்ந்தது அதில் என்னும் மொழிகளில் நிலை மொழியீற்றினின்ற குற்றியலுகரமும் அஃதேறிய வல்லொற்றும் ஈற்றபலுயிரும் விகார வகையாற் கெட்டனவாகக் கொண்டு சேர்ந்தது+ அதில் எனக் கண்ணழித்து வினை முற்றும் சுட்டுப் பெயருமாக அறுத்துப் பொருள் கூறலுமாம்.

இந்நகர்-புகார்நகர். இவள்: ஆதிரை. ஆங்கனமாகிய என்றது அவ்வாறு பத்தினிகளுள் தலை சிறந்த பத்தினியாகத் திகழ்கின்ற என்பது பட நின்றது.

பூங்கொடி நல்லாய் என்றது மணிமேகலையை விளித்தபடியாம்

மணிமேகலை ஆதிரைநல்லாள்பாற் பிச்சை ஏற்றல்

130-135: மனையகம்..............மருந்தென்

(இதன் பொருள்) மணிமேகலை தான் மனையகம் புகுந்து புனையா ஓவியம் போல நிற்றலும்-அது கேட்ட மணிமேகலை தானும் அவளறிவுரையை ஏற்றுக் கொண்டவளாய் அவ்வாதிரை நல்லாள் மங்கல மனையின் முன்றிலிலே சென்று அமுத சுரபியைச் செங்கையில் ஏந்தி வண்ணங்களைக் கொண்டு எழுதப் படாத ஓவியம் போன்று வாய் வாளாது நிற்ப; ஆதிரை-அவள் வருகை கண்ட ஆதிரை நல்லாள் தானும்; தொழுது வலம் கொண்டு பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என துயர் அறு கிளவியோடு- நிலவுலகத்தே வாழுகின்ற உயிர்களின் பசி நோய் ஒழிவதாக! என்று சொல்லி வாழ்த்தும் உயிர்களின் துயர் கெடுதற்குக் காரணமான வாழ்த்துரையோடு; அமுத சுரபியின் அகன்சுரை நிறைதர ஆருயிர் மருந்து இட்டனன்-அமுத சுரபி என்னும் அரும் பெறற்பாத்திரத்தினது அகன்ற உள்ளிடம் நிறையும்படி உணவாகிய ஆருயிர் மருந்தைப் பெய்தருளினள் என்பதாம்.

(விளக்கம்) மனையகம் என்றது முன்றிலை. புனையா ஓவியம்- வடிவ மட்டும் வரைந்து வண்ணம் தீட்டப்பெறாத நிலையில் உள்ள வோவியம். இவ்வுவமை மணிமேகலையின் மாண்புடைய இயற்கை யழகை ஆடையணி கலன்களாலே ஒப்பனை செய்யப்படாமை பற்றிக் கூறப்பட்டதாம் இங்ஙனமே ஒப்பனை  செய்யப்படாது இயற்கை யழகோடு மட்டு மிருந்த கோப்பெருந்தேவியாகிய தலைவியை ஆசிரியர் நக்கீரனார் தாமும் அம்மா சூர்ந்த அவிர் நூற் கலிங்கமொடு புனையா வோவியம் கடுப்ப என்றோதுவர் (நெடுநல்வாடை- 146-7) இன்னும் தண்டமிழா சான் சாத்தனார் இவ்வினிய வுவமையை, புனையா வோவியம் புறம் போந்தென்ன மனையகம் நீங்கி வாணுதல் விசாகை உலக அறவியின் ஊடு சென்றேறி எனப் பிறாண்டும் (22-88) ஓதி இன்புறுத்துவர் கவிச்சக்கரவர்த்தி யாகிய கம்பநாடர் தாமும் இப் புனையா வோவியத்தைப் புகையூட்டிச் சீதைக்குவமை கூறுவர்.

தேவுகெண்கடல் அமிழ்து கொண்டு அநங்கவேள் செய்த ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள் என்பது அத் தெய்வப் புலவர் திருவாக்கு (இராமா- காட்சிப்-11)

புனையா வோவியம் போல வாய்வாளாது நிற்றலும் என்க. துறவோர் பிச்சை ஏற்புழி ஒரு பசுக்கறக்கும் அளவுடைய பொழுது முன்றிலிலே வாய்வாளாது நின்று பொறுமையோடு ஏற்றல் வேண்டும்; அவ் வளவில் பிச்சை இட்டால் ஏற்றல் வேண்டும்; இடராயின், அயன் மனை முன்றிலிற் சென்று ஏற்றல் வேண்டும் என்பது துறவோர் திறத்தியன்ற தொரு விதியாம் என்ப.

பாரக மடங்கலும் பசிப்பிணி அறுகென வாழ்த்தும் துயரறு கிளவியோடு இட்டனள் என்க. துயர்அறு கிளவி- துயர் அறுதற்குக் காரணமான வாழ்த்துச் சொல்.

இனி, இக் காதையை- விஞ்சையர் பூங்கொடி ஈங்கு இவள் செய்திகேள்! என உரைப்போள் ஆதிரை கணவன் ஆகிப்போகி வழங்கி வங்கம் போகும் வணிகர் தம்முடன் செல்வுழி, முந்நீர் கலன் வெளவப் பற்றி மலைப்பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆகினன். போந்தோர் சாதுவன் சாவுற்றான் என, ஆதிரை அது கேட்டு எரிபொத்திப் புகுதலும்

எரி உறாஅது இனிதிருப்ப. தீவினை யாட்டியேன் யாது செய்கேன் என்றவள் ஏங்கலும், அசரீரி ஆதிரை கேள் உன் கணவனைக் கொண்டுய்ப்பப் போகி சேர்ந்தனன். இராஅன் வந்தனன் தோன்றும் ஒழிவாய் என மனையகம் புகுந்து முட்டாள் வியப்பினள் ஆயினள். கணவனும் துயில்கொள்ள எழுப்பலும் எழுந்தருள் எனப்போகி நோக்கி உரைத்தலும் கொடுமென வேண்டேன் என்றலும் கொள்கென ஏறி வாழ்ந்து செய்தனன் ஆதிரை கையால் பெறுகென காயசண்டிகை கூற நிற்றலும் ஆதிரை ஆருயிர் மருந்து இட்டனள் என இயைத்திடுக.

ஆதிரை பிச்சையிட்ட காதை முற்றிற்று.


Offline Anu

Re: மணிமேகலை
« Reply #17 on: February 28, 2012, 09:24:59 AM »
17. உலகவறவி புக்க காதை

(பதினேழாவது மணிமேகலை காயசண்டிகை என்னும் விச்சாதரி வயிற்று யானைத் தீயவித்து அம்பலம் புக்க பாட்டு)

அஃதாவது-அமுதசுரபி யென்னும் அரும்பெருந் தெய்வப் பாத்திரத்திலே முதன் முதலாக அகமலி உவகையின் பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை ஏற்றல் பெருந்தக வுடைத்து என்னும் கருத்தோடு மணிமேகலை முதன் முதலாக அத்தகு மரபின் பத்தினியாகிய ஆதிரை நல்லாள் முன்றிலிலே சென்று புனையா ஓவியம் போல் நின்று அவ்வாதிரை நல்லாள் பாரக மடங்கலும் பசிப்பிணி அறுகெனத் தொழுது வலங்கொண்டு அமுதசுரபி நிறையப் பெய்த ஆருயிர் மருந்தாகிய பிச்சையை ஏற்றவள், அவ்வமுத சுரபியாலே ஆற்றாமாக்கள் அரும்பசி களைந்து நாடோறும் அருளறம் ஆற்றுதற்கு அந் நகரத்தே ஊரம்பலத்தே புகுந்து ஆங்கு ஆருயிர் ஓம்பும் செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- காயசண்டிகை என்னும் விச்சாதரி ஆனைத்தீநோயாலே ஆற்றவும் துயருழப்பவள், மணிமேகலையின் அறச் செயல்கண்டு உணவு வேண்டலும் அமுதசுரபியினின்றும் உணவு பெற்றுண்ட பொழுதே அவளது ஆனைத்தீ நோய் அகன்று விடுதலும் அவள் மணிமேகலைக்குத் தன் வரலாறு கற்போர் உள்ளம் கசிந்துருகுமாறு கூறுதலும், உலகவறவியின்கண் உறுபசியுழந்தோரும் பாதுகாப்பவர் ஆருமின்மையின் அரும்பிணி யுற்றோரும் இடுவோர்த் தேர்ந்திருப்போர் பலராவார், நீ அங்குச் சென்று அறம்புரிக என்று அறிவுறுத்துதலும் மணிமேகலை உலக அறவியின்பாற் சேறலும் ஆண்டுச் சம்பாபதி கோட்டத்தை மும்மையின் வணங்கிக் கந்திற் பாவையையும் கைதொழுதேத்திதலும், உலகவறவியின்கண் ஊண் ஒலி எழுதலும் பிறவும் அழகுற ஓதப்பட்டுள்ளன.

பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற
பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை
அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉம் செய்கை போல
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்துத்
தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி
யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி
நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று  17-010

குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி
துன்னிய என் நோய் துடைப்பாய்! என்றலும்
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம்
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும்
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள்
துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்  17-020

மாசு இல்வாள் ஒளி வட திசைச் சேடிக்
காசு இல் காஞ்சனபுரக் கடி நகர் உள்ளேன்
விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்பத்
தென் திசைப் பொதியில் காணிய வந்தேன்
கடுவரல் அருவிக் கடும் புனல் கொழித்த
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன்
புரி நூல் மார்பின் திரி புரி வார் சடை
மரவுரி உடையன் விருச்சிகன் என்போன்
பெருங் குலைப் பெண்ணைக் கருங் கனி அனையது ஓர்
இருங் கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி  17-030

தேக்கு இலை வைத்துச் சேண் நாறு பரப்பின்
பூக் கமழ் பொய்கை ஆடச் சென்றோன்
தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன்
காலால் அந்தக் கருங் கனி சிதைத்தேன்
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன்
கண்டனன் என்னைக் கருங் கனிச் சிதைவுடன்
சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது
ஈர் ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது
அக் கனி உண்டோர் ஆறு ஈர் ஆண்டு
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர்  17-040

பன்னீராண்டில் ஒரு நாள் அல்லது
உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய்!
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து
தந்தித் தீயால் தனித் துயர் உழந்து
முந்நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு
உண்ணும் நாள் உன் உறு பசி களைக! என
அந் நாள் ஆங்கு அவன் இட்ட சாபம்
இந் நாள் போலும் இளங்கொடி! கெடுத்தனை!
வாடு பசி உழந்து மா முனி போய பின்
பாடு இமிழ் அருவிப் பய மலை ஒழிந்து என்  17-050

அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற
இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி
ஆர் அணங்கு ஆகிய அருந் தவன் தன்னால்
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை!
வானூடு எழுக என மந்திரம் மறந்தேன்!
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு
தீம் கனி கிழங்கு செழுங் காய் நல்லன
ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக
நீங்கல் ஆற்றான் நெடுந் துயர் எய்தி  17-060

ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன்
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்பம் இல்லாக் கழி பெருஞ் செல்வர்
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால்
பல நாள் ஆயினும் நிலனொடு போகி
அப் பதிப் புகுக என்று அவன் அருள்செய்ய
இப் பதிப் புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்
இந்திர கோடணை விழவு அணி வரு நாள்
வந்து தோன்றி இம் மா நகர் மருங்கே  17-070

என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும்
தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன்
மணிமேகலை! என் வான் பதிப் படர்கேன்
துக்கம் துடைக்கும் துகள் அறு மாதவர்
சக்கரவாளக் கோட்டம் உண்டு ஆங்கு அதில்
பலர் புகத் திறந்த பகு வாய் வாயில்
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை
ஊர்ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர்
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர்  17-080

இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால்
வடு வாழ் கூந்தல்! அதன்பால் போக என்று
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய் இழை
ஓங்கிய வீதியின் ஒரு புடை ஒதுங்கி
வல முறை மும் முறை வந்தனை செய்து அவ்
உலக அறவியின் ஒரு தனி ஏறி
பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும்
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக்
கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய
தம் துணைப் பாவையைத் தான் தொழுது ஏத்தி  17-090

வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்துக்
கருவி மா மழை தோன்றியதென்ன
பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு
அமுதசுரபியோடு ஆய் இழை தோன்றி
ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது
யாவரும் வருக ஏற்போர் தாம்! என
ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே
யாணர்ப் பேர் ஊர் அம்பல மருங்கு என்  17-098

உரை

மணிமேகலை அமுதசுரபி சுரக்கின்ற ஆருயிர் மருந்தாகிய உண்டி கொடுத்து ஆற்றாமாக்கள் அரும் பசி களைதலும் அவ்வற்புதங் கண்ட காயசண்டிகை மணிமேகலையை வணங்குதலும்

1-8: பத்தினி..............வணங்கி

(இதன் பொருள்) பத்தினிப் பெண்டிர் பாத்து ஊண் ஏற்ற பிச்சைப் பாத்திரம் பெருஞ்சோற்று அமலை- பத்தினிப் பெண்டிருலளும் சிறந்த பத்தினிப் பெண்டிராகிய ஆதிரை நல்லாள் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகெனத் தன்னை வலஞ் செய்து தொழுது பலரொடும் பகுத்துண்டற்கியன்ற ஆருயிர் மருந்தை அமுதசுரபியிலிட அவ்வுணவு அமுதசுரபியினின்றும் இடையறாது சுரக்கின்ற பெரிய சோற்றுத் திரளையை; அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன் திறந்து வழிப்படும் செய்கை போல-அறநெறியிலே நின்று தொகுக்கப் பெற்ற ஒள்ளிய பொருளானது அவ்வறவோன்பால் நாடொறும் பெருக்க மெய்திப் பின்னரும் அவனாலே அவ்வற நெறியிலேயே செலவு செய்யப்பட்டு அவனுக்கும் பிறர்க்கும் ஆக்கமாகும் செயல்போல; வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்துத் தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி- மணிமேகலை தனது அறவொழுக்கங் காரணமாக எய்திய அவ்வமுத சுரபியினின்றுஞ் சுரக்கின்ற உண்டியை ஏற்போருடைய கைகள் வருந்துமாறு மன்னுயிர் பலவற்றிற்கும் வழங்கியும் தான் அவ்வுணவு சுரத்தல் ஒழியாத அதன் தெய்வத் தன்மையை அவளுடனிருந்தே நோக்கி; ஆனைத் தீ நோக்கி அகவயிற்று அடக்கிய காய சண்டிகை என்னும் காரிகை வணங்கி -ஆனைத் தீ யென்னும் கொடிய நோயைத் தனது வயிற்றினூடே அடக்கிப் பெரிதும் வருந்தி யிருக்கின்ற காய கண்டிகை என்னும் அவ் விச்சாதர மகள் மணிமேகலையின் திருவடிகளிலே வீழ்ந்து அன்போடு வணங்கி யென்க.

(விளக்கம்) பத்தினிப் பெண்டிர் என்றது ஆதிரை நல்லாளை. அவளிட்ட உணவு தானும் பலரோடிருந்து பகுத்துண்ணற் பொருட்டே அப் பத்தினியால் ஆக்கப்பெற்ற சிறப்புடையது என்பார் அதனைப் பாத்தூண் என்று விதந்தார்.

அஃதாவது பலருக்கும் பகுத்தூட்டப்படும் உணவு என்றவாறு.

ஈண்டு

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்

எனவருந் திருக்குறளும் (44) நினைக்கப்படும்.

பத்தினிப் பெண்டிர் கையில் ஏற்கப்பட்டதாதலின் அதன்கட் சுரக்கும் பெருஞ்சோற்றமலை மன்னுயிர்க் களித்தும் தொலைவில்லாத தாயிற்று எனத் தொலைவில்லாமைக்குப் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் என்றது குறிப்பேதுவாக நின்றது. என்னை? அமுதசுரபி அறவோர்பால் முதன் முதலாக ஏற்றால் நன்கு சுரக்கும் ஏனையோர்பால் இரப்பின் நன்கு சுரவாது, இதனை நன்கு நினைவிற் கொள்க எனபாள் தீவதிலகை மறந்தேன் அதன் திறம் அறங்கரியாக அருள்சுரந்தூட்டும் சிறந்தோர்க் கல்லது செவ்வனம் சுரவாது என்றறிவுறுத்தினமையும் அவ்வறிவுரையை மறவாதிருந்த மணிமேகலை தானும் முதன் முதலாக அகமலி உவகையிற் பத்தினிப்பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சையேற்றல் பெருந்தக வுடைத்து என்று காயசண்டிகைக்குக் கூறி ஆதிரைபால் ஏற்றமையும் ஈண்டு நினைக.

பெருஞ்சோற்றமலை- மிக்க சோற்றுத்திரளை

அறவோனால் அறத்தின் ஈட்டிய பொருள் அவ்வறவோன்பாற் பெருக்கம் எய்தி மீண்டும் அவன்பால் அறத்தின் வழிப்படும் பொழுது அழிவின்றி மேலும் மேலும் வளமாப்போலே அமுதசுரபியின்கண் அமலை தொலைவில்லாது வளர்வதாயிற்று என்று உவமை கூறியபடியாம். அறவோன்- மணிமேகலைக்குவமை அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் என்றது  அவள் முன்னை நல்வினையாற் பெற்ற அமுதசுரபியும் அதன்கண் ஆதிரைபால் ஏற்ற ஆருயிர் மருந்துமாகிய இரண்டற்கும் உவமையாகும். மன்னுயிர்க் களித்தும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது.

ஆனைத்தீநோய்- எத்துணை யுண்டாலும் இடையறாது பசித்துத் துன்புறுத்துவதொரு கொடிய நோய். அகவயிறு- வயிற்றகம். அடக்குதலருமை தோன்ற அடக்கிய என்றார்.

காயசண்டிகையின் அகவயிற்றடக்கிய ஆனைத்தீ நோயின் கொடுமையை அவள் கூறுதல்

9-16: நெடியோன்......................என்றலும்

(இதன் பொருள்)  அன்னை நீ கேள்-ஆருயிர்க் கெல்லாம் அன்னையே! நீ என் துயர் கேட்டருள்க!; நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று நீள் நிலமளந்த நெடுமால் தானும் மயங்கி இந் நிலவுலகத்திலே இராமனாகப் பிறந்துழலுங் காலத்தே வலிமையுடைய அடைத்தற் கரிய கடலிலே அணை கோலி யடைத்த பொழுது; குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்; குரங்குகள் பெயர்த்துக் கொணர்ந்து வீசிய நெடிய மலைகள் எல்லாம்; அணங்கு உடை அளக்கர் வயிறுபுக்கு ஆங்கு- தெய்வத் தன்மையையுடைய அக் கடலின் வயிற்றினுட் புகுந்து மறைந்தொழிந்தாற் போன்று; என்றன் பழவினைப் பயத்தால் இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசிப்பட்டேன்-அளியேன் என்னுடைய பழவினைப் பயனாலே இட்ட உணவு எவ்வளவேனும் ஒரு சிறிதும் தணிக்கவியலாத பெரு நெருப்பை ஒத்த பெரிய பசி நோய்வாய்ப் பட்டேன்காண்! ஆர் உயிர் மருத்துவி-ஆற்றுதலரிய பசிப் பிணியகற்றும் உயிர்களின் மருத்துவச்சியே!; துன்னிய என் நோய் துடைப்பாய் என்றலும்- நின் திருவடிகளில் தஞ்சமாக வந்தெய்திய என்னுடைய அக் கொடிய ஆனைத்தீ நோயைத் துவர நீக்கி என்னை உய்யக் கொள்வாயாக என்று வேண்டா நிற்றலும் என்க.

(விளக்கம்) நெடியோன்- திருமால். திருமாலும் உயிரினத்தவன் என்பதே பவுத்தர் கொள்கையாம். கடவுள் என்பது அவர்க்குடம் பாடன்று. ஆகவே அவன் பிறப்பெய்தியதற்குங் காரணம் மயக்கமே என்பதவர் கருத்தாகலின், நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி என்றாள். அணங்கு- தெய்வம். இனி வருத்துதலுடைய எனினுமாம். நெடுமலை-தான் ஏற்றுண்ணும் உணவிற்குவமை.

ஆருயிரை எல்லாம் ஊட்டி வளர்த்தலின் காயசண்டிகை மணிமேகலையை அன்னை! என்று விளிக்கின்றாள். ஆருயிரின் பசிப்பிணி தீர்த்தலின் மருத்துவி என்றாள். துன்னிய என்றது அடைக்கலம் புகுந்த என்றவாறு. நோய்-ஆனைத்தீநோய். காயசண்டிகை மணிமேகலை வழங்கிய உணவுண்டு ஆனைத் தீ நோய் அகலப்பெற்றுத் தன் வரலாறு கூறுதல்

17-26: எடுத்த.....................இருந்தேன்

(இதன் பொருள்) எடுத்த பாத்திரத்து அமுதம் பிடித்து ஏந்திய அவள் கையில் பேணினள் பெய்தலும்-மணிமேகலை ஆருயிர் ஓம்புதற்குத் தன் செங்கையில் தாங்கிய அமுதசுரபியிற் சுரந்த சோற்றில் ஒரு பிடி சோற்றைப் பிடித்து ஏற்றற்கு ஏந்திய காயசண்டிகையின் கையிலே அவள் வேண்டுகோளை நிறைவேற்றி அவளைப் பேணுங் கருத்துடையளாய் இடுதலும்; வயிறு காய பெரும்பசி நீங்கி மற்றவள் துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்-ஆனைத் தீ நோய் காரணமாக இடையறாது தன் வயிறு காய்தற்குக் காரணமான பெரிய பசி தீர்ந்தொழிந்தமையாலே அக் காய சண்டிகை தன் தீராத மனத்துன்பமும் தீரப்பெற்று மகிழ்ந்து மணிமேகலையைக் கை குவித்துத் தொழுது கூறுவாள்; மாசு இல் வால் ஒளி வடதிசைச் சேடிக் காசு இல் காஞ்சினபுரக் கடிநகர் உள்ளேன்-அன்னையே! அளியேன் வரலாறு கூறுவல் கேட்டருளுக! யான் வட திசைக் கண்ணதாகிய குற்றமற்ற வெள்ளிய ஒளியையுடைய வெள்ளி மலையின் கண்ணுள்ள விததியாதரர் உலகிலே குற்றமற்ற காஞ்சனபுரம் என்னும் காவலமைந்த நகரத்திலுள்ள விச்சாதர மகளாவேன் காண்!; என் வெவ்வினை உருப்ப-என் வெவ்விய பழவினை உருத்து வந்தமையாலே; விஞ்சையன் தன்னொடு தென்திசைப் பொதியில் காணவந்தேன்-விச்சாதரனாகிய என் கணவனோடு கூடித் தென் திசையிலுள்ள பொதிய மலையைக் கண்டு தொழுதற் பொருட்டு வந்த யான்; கடுவால் அருவிக் கடும்புனல் கொழித்த விடுமணல் கான்யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன்- விரைந்து வருதலையுடைய அருவியாகிய கடிய நீர் கொழித்துப் போகட்ட ஒன்றோடொன் றொட்டாமல் கிடக்கும் மணற் பரப்பினையுடைய ஒரு காட்டியாற்றின்கட் சென்று ஆங்கு என் கணவனோடு ஒரு சேர வீற்றிருந்தேனாக; என்றாள் என்க.

(விளக்கம்) எடுத்த என்றது ஆருயிரோம்ப எடுத்த என்பதுபட நின்றது. பாத்திரம்-அமுதசுரபி. அமுதம் பிடித்து ஏந்திய அவள் கையிற் பெய்தலும் என மாறுக. கையிற் பெய்தலும் பேணினள் பெய்தலும் எனத் தனித்தனி கூட்டுக. பேணினள்-பேணி. அஃதாவது அவள் வேண்டுகோளைப் போற்றிக் கேட்டு அவ்வாறு அவள் நோய் துடைத்தல் வேண்டும் என்று குறிக்கொண்டு என்றவாறு. அமுதம் சோறு. சோற்றைப் பிடித்துண்டலும் பிடித்து ஈதலும் இயல்பு. ஒரு பிடி சோறு என்னும் வழக்கும் நோக்குக.

பண்டு எவ்வளவு உணவு இட்டாலும். ஆற்றப் படாத ஆனைத் தீப்பசி மணிமேகலை கையாற் பிடித்திட்ட ஒரு பிடி சோற்றாலே நீங்கிற்று என்றுணர்த்தியவாறாம். துயரம் என்றது மனத்துன்பத்தை. தொழுதனள்- தொழுது. சேடி- விச்சாதரருலகு. அது வெள்ளி மலையின்கண்ணதாகலின், வாலொளிச் சேடி என்றாள். வெவ்வினை- தீவினையாகிய பழவினை. உருப்ப- பக்குவ மெய்திப் பயன் நுகர்விக்கும் செவ்வித்தாக. காசு-குற்றம். விஞ்சையன் என்றது கணவன் என்பதுபடநின்றது. காணிய; காண-கண்டு தொழ என்பது கருத்து. கொழித்தல்- தெள்ளுதல். மணல் ஒன்றனோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியே கிடத்தல் பற்றி விடு மணல் என்றாள்.

இதுவுமது

27-34: புரிநூன்......................சிதைத்தேன்

(இதன் பொருள்) புரிநூல் மார்பின் திரிபுரி வார்சடை மரவுரிஉடையன் விருச்சிகன் என்போன்- முறுக்குண்ட பூணுநூலுடைய மார்பையும் திரித்து முறுக்கிவிட்ட நீண்ட சடையையும் மரவுரியாகிய ஆடையையும் உடையவனாகிய விருச்சிகன் என்னும் முனிவன் ஒருவன்; பெண்ணைப் பெருங்குலை கருங்கனி அனையது ஓர் இருங்கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி-பனையினது பெரிய குலையின்கட் பழுத்த கரிய பனம் பழம் போன்ற ஒரு முறையில் ஒரோ ஒரு பெரிய பழத்தை மட்டும் பழுக்குமியல்புடைய நாவல்  மரத்தினது பழம் ஒன்றனைக் கையிலேந்தி வந்து; தேக்கு இலை வைத்து சேண நாறு பூ கமழ் பொய்கைப் பரப்பின் ஆடச் சென்றோன்- தேக்கினது இலையிலே அதனை ஓரிடத்தே வைத்து விட்டு நெடுந்தொலை நீர்ப் பூக்கள் மணக்கின்ற பொய் கையின்கண் நீராடச் சென்றானாக; தீவினை உருத்தலின்- தீய என் பழவினை தன் பயனை யூட்டுஞ் செவ்வி பெற்று வந்துற்றமையாலே அளியேன்; செருக்கொடு சென்றேன்- வழியைப் பார்த்துப் போகாமல் களிப்பொடு அங்கு மிங்கும் பார்த்துச் சென்றேனாதலின்; அந்தக் கருங்கனி காலால் சிதைத்தேன்-அந்தக் கரிய நாவற் கனியை என் காலாலே மிதித்துச் சிதைத் தொழித்தேன்; என்றாள் என்க.

(விளக்கம்) புரிநூல்-பூணுநூல்-வார்சடை- நெடியசடை.உடையன்- ஆடையை யணிந்தவன். பெண்ணை- பனை. நாவற்கனிக்குப் பனங்கனி உவமை. இருங்கனி- பெரிய கனி. ஓர் இருங்கனி நாவல் பன்னீராட்டைக்கொரு முறை ஒரு கனியே தருகின்ற நாவல் மரம் என்க. சேண்-தொலைவிடம். சென்றோன்- சென்றான்; ஆ ஓவாயிற்று. செருக்கு- களிப்பு.

இதுவுமது

35-46: உண்டல்...........களைகென

(இதன் பொருள்) உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் பொய்கையில் நீராடியபின் தான் வைத்துச் சென்ற நாவற் பழத்தை உண்ணும் வேட்கையோடு மீண்டும் அங்கு வந்துற்ற அவ் விருச்சிக முனிவன்; கருங்கனிச் சிதைவுடன் என்னைக் கண்டனன்-கரிய அந் நாவற் பழம் சிதைந்து கிடத்தலையும் அதனைச் சிதைத்த அறிகுறியோடு நின்ற என்னையும் ஒருங்கே கண்டனன்; சீர் திகழ் நாவலில் திப்பியமானது ஈர் ஆறு ஆண்டின் ஒரு கனி தருவது- விச்சாதரியே! நின்னாற் சிதைக்கப்பட்ட இந் நாவற் கனியின் வரலாறு கேள்! சிறப்புற்று விளங்குகின்ற நாவல் மரங்களில் வைத்து இந்தக் கனிதந்த நாவல் மரமானது தெய்வத்தன்மை யுடையது, பன்னிரண்டாண்டிற்கு ஒரு முறை ஒரோவொரு கனியை மட்டுமே கனிந்து தருவது காண்!; அக் கனி உண்டோர் ஆறு ஈர் ஆண்டு மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர்-அந்தக் கனியைத் தின்பவர் யாவரேனும் மீண்டும் அந் நாவல் மரம் கனி தரும் பன்னிரண்டாண்டும் மக்கள் யாக்கையின்கண் ஒரு நாளிற் பன்முறை வந்து வருத்தும் பசிப்பிணி நீங்கப் பெறுவர்; பன்னிராண்டில் ஒரு நாள் அல்லது உண்ணா நோன்பினேன்- பன்னிரண்டாண்டினுள் ஒரு நாள் உண்பதல்லது எஞ்சிய நாள்களில் உண்ணாத நோன்பையுடைய யான்; உண் கனி சிதைத்தாய்- உண்ணுதற்கு வைத்திருந்த இத் தெய்வக் கனியைக் காலாலே சிதைத்தொழிந்த நீ; அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து தந்தித் தீயால் தனித்துயர் உழந்து- வான் வழியே இயங்குதற்குரிய மறை மொழியை இழந்து ஆனைத் தீ யென்னும் கொடிய நோயாற் பற்றப்பட்டு ஒப்பற்ற பெருந்துன்பத்தை நுகர்ந்து; முந்நால் ஆண்டின் முதிர்கனி நான் ஈங்கு உண்ணும்நாள் உன் பசி களைக என மீண்டும் இற்றை நாளினின்றும் பன்னிரண்டாம் ஆண்டின்கண் இந் நாவன் மரத்திலே காய்ந்து முதிர்ந்த இத்தகைய கனியைப் பெற்று யான் இவ்விடத்திலே உண்ணும்பொழுது நீ தானும் உன் ஆனைத் தீ நோயா லெய்தும் பசியைத் தீர்த்துக் கொள்ளக் கடவை என்று சொல்லி; அந் நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் இந் நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை-அந்த நாளிலே அக் காட்டியாற்றின்கண் அவ் விருச்சிக முனிவன் இட்ட சாபம் நீங்கும் நாள் இந்த நாளே போலும்; நோன்பினாலே உயர்ந்த இளைய மலர்க்கொடி போலும் நீ ஒரு பிடி சோற்றினாலே அம் மாபெரும் பசியைத் தணித் தருளினை காண்!; என்றாள் என்க.

(விளக்கம்) திப்பியம்- தெய்வத் தன்மையுடையது; நோன்பு விரதம். உண்கனி: வினைத்தொகை. மந்திரம்- மறை மொழி பிறர் அறியா வண்ணம் தம்முள்ளேயே கணிக்கப்படுவது ஆதலின் அப் பெயர் பெற்றது. மந்திரம் இழந்து என்றது-அதனாலாம் பயனை இழந்து என்றவாறு.

தந்தி-யானை, ஆனைத்தீ நோயைத் தந்தித்தீ என்றார் முந்நாலாண்டு- பன்னிரண்டாண்டு அரும்பி மலர்ந்து பிஞ்சாகிக் காயாகிக் கனி யொன்று கனிதற்குப் பன்னீராண்டு ஆகும் என்பது தோன்ற முந் நாலாண்டின் முதிர்கனி என்றார். அந்நாள் இந் நாள் போலும் என்றது சாபமிட்ட நாளினின்றும் பன்னீராண்டும் கழிந்தபின் நிகழும் நாள் இது போலும் என்றவாறு.

இதுவுமது

49-61: வாடுபசி.............உரைப்போன்

(இதன் பொருள்) வாடுபசி உழந்து மாமுனி போயபின்-உடம்பு வாதெற்குக் காரணமான பெரிய பசியால் வருந்திச் சிறந்த முனிவனாகிய விருச்சிகன் அவ்விடத்தினின்றுஞ் சென்ற பின்னர்; என் அலவலைச் செய்திக்கு அஞ்சினன் பாடு இமிழ் அருவிப் பயமலை ஒழிந்து அகன்ற விலகு ஒளி விஞ்சையன்- எளியேன் விழிப்பின்மையாற் செய்த மனஞ் சுழன்று வருந்துதற்குக் காரணமான செயல் பற்றி அம் முனிவனால் யாது விளையுமோ என்று அச்ச மெய்தி ஆரவாரஞ் செய்து வீழுகின்ற அருவியையும் பயனையும் உடைய அம் மலையை விட்டு ஓடிப்போன மழுங்கிய ஒளியையுடைய என் கணவனாகிய விச்சாதரன்றானும்; விழுமமோடு எய்தி-துன்பத்தோடு மீண்டும் என்பால் வந்து யான் சாபத்தா லெய்திய ஆனைத் தீ நோயை அறிந்து பெரிதும் இரங்கி; ஆர் அணங்கு ஆகிய அருந்தவன் தன்னால் காரணம் இன்றியும் கடுநோய் உழந்தனை- பெறற் கரிய தெய்வத் தன்மையையுடைய அரிய தவத்தையுடைய முனிவனாலே காரணமில்லாமலே கடிய நோய்க்கு ஆளாகித் துன்புறுகின்றனை இதற்குக் கழுவாய் தேடுதற்கு யாம் நமது விச்சாதரருலகிற்கு இன்னே செல்வோம்; வானூடு எழுக என- வானத்தே என்னோடு எழுந்து வருவாயாக என்று பணித்தலும்; மந்திரம் மறந்தேன் ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி வயிறு காய் பெரும்பசி வருத்தும் என்றேற்கு-அது கேட்ட யான், ஐய வானூடு இயங்குதற்கு வேண்டிய மந்திரத்தையும் மறந்தொழிந்தேனே! எங்ஙனம் வானத்தே இயங்க மாட்டுவேன், மேலும், உடம்பினின்றும் உயிர் நீங்குமளவற்கு வெப்பத்தோடு தோன்றி வயிற்றினைச் சுட்டெரிக்கின்ற பெரிய பசித் தீத்தானும் வருத்துகின்றதே என் செய்கேன்? என்று சொல்லி வருந்துகின்ற எனக்கு; ஆங்கு அவன் தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன கொணரவும்-அது கேட்ட வப்பொழுதே அன்புமிக்க என் கணவன்றானும் காட்டினுட் சென்று இனிய பழங்களும் கிழங்குகளும் வளவிய காய்களும் ஆகிய நல்ல உணவுகளைக் கொண்டு வந்து கொடுப்பவும் அவற்றை யெல்லாம் உண்ட பின்னரும்; ஆற்றேன் ஆக-என் பசித்துன்பம் சிறிதும் தணிந்திலாமையாலே அது பெறாது வருந்துவேனாக; நீங்கல் ஆற்றான் நெடுந்துயர் எய்தி ஆங்கு-அந் நிலையில் என்னை நீங்கிச் செல்லவியலாதவனாய் என் பொருட்டுப் பொறுத்தற்கரிய துன்பம் எய்திய பொழுது; அவன் என்ககு அருளொடு உரைப்போன்-என் கணவன் எனக்குத் தன் அருளுடைமை காரணமாகக் கூறுபவன்; என்க.

(விளக்கம்) வாடுபசி: வினைத்தொகை. அலவலை-அலமரல்; அஃதாவது மனச்சுழற்சி. முனிவனால் யாது நேருமோ என்று அஞ்சிவிச்சாதரன் அம் மலைக்கு அப்பால் ஓடிப்போயினன் என்றவாறு பாடு ஆரவாரம். இமிழ் என்றது செய்கின்ற என்பதுபட நின்றது. பயம் பயன். அவை சந்தனம் முதலியவை. அணங்கு-தெய்வத் தன்மை. விலகு ஒளி எனக் கண்ணழித்து அச்சத்தால் மழுங்கிய ஒளி என்க. விழுமம்-துன்பம். விஞ்சையன் என்றது என் கணவன் என்பதுபட நின்றது.

உருப்பு- வெப்பம். நல்லன: பலவறிசொல்.

இதுவுமது

62-67: சம்பு............செய்ய

(இதன் பொருள்) சம்புத் தீவினுள் தமிழகம் மருங்கில்-அன்புடையோய்! இந்த ஆனைத் தீ நோயை ஒல்லுந்துணை ஆற்றிக்கோடற்கு ஓர் உபாயம் கூறவல் கேள்! இந்த நாவலந் தீவின்கண் யாம் இப்பொழுதிருக்கின்ற இத் தமிழ் நாட்டின் கண்; கம்பம் இல்லா- பகைவருக்கஞ்சி நடுங்குதல் ஒரு பொழுதும் இல்லாதவரும்; கழிபெருஞ்செல்வர் ஆற்றாமாக்கட்கு ஆற்றும் துணையாகி நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் மாபெருஞ் செல்வமுடையோரும் தமக்குற்ற துன்பத்தைத் தாமே துடைத்துக் கொள்ளமாட்டாத எளிய மாக்கட்கெல்லாம் அவ்வத்துன்பத்தைத் துடைத்துக் கோடற்கு உற்ற துணைவர்களாகி மெய்ந்நெறி வாழ்க்கை வாழ்பவரும் ஆகி அதற்கியன்ற நோன்பினை பண்டும் பண்டும் பல பிறப்பிலே செய்து அடிப்பட்டு வருகன்ற மேன்மக்கள் வதிகின்ற படை வலிமையுடைய நகரம் ஒன்றுளது காண்! பல நாள் ஆயினும் நிலனொடு போகி அப் பதிபுகுக என்று அவன் அருள் செய்ய வானூடு இயங்கும் மந்திரம் மறந்தொழிந்தமையாலே பல நாள் கழியுமாயினும் நிலத்தின் வழியாகவே நடந்து அப் பூம்புகார் என்னும் அம் மாநகரத்திலே சென்று புகுவாயாக! என்று அறிவித்தருளிச் சென்றனன் என்றாள் என்க.

(விளக்கம்) சம்புத் தீவு-நாவலம் தீவு. தமிழகம் என்றது வடவேங்கடம் தென்குமரி ஆயிடைக் கிடந்த மூன்று தமிழ் நாட்டையும் கம்பம்- நடுக்கம்; இது பகைவர் வரவினால் நிகழ்வது. ஒரு பொழுதும் பகைவர் வரவு நிகழாமையின் அங்கு வாழும் செல்வர், நடுக்கமில்லாதார் என்றான் என்க. கழிபெருஞ் செல்வர் என்றது மாக வானிகர் வண்கை மாநாய்கனும், வருநிதி பிறர்க் கார்த்தும் மாசாத்துவானும் போன்ற கொழுங்குடிச் செல்வர்களை. அந் நகரத்தே பிறந்து அங்ஙனம் வாழ்தற்கு நோன்பு பல செய்திருத்தல் வேண்டும் என்பான், நோற்றோர் என்றான். ஆசிரியர் இளங்கோவடிகளாரும். அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர் உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய காயமலர்க் கண்ணியும் காதற் கொழூநனும் என்றோதுதலறிக. (மனையறம்-9-11). பாட்டிடை வைத்த குறிப்பால்-அப் பதி என்றது பூம்புகார் என்னும் அம் மாநகரம் என்பது பெறப்படும்.

அவன்-என் கணவன். அருள் செய்து போயினனாக என்று வருவித்து முடித்திடுக.

இதுவுமது

68-72: இப்பதி............கழியும்

(இதன் பொருள்) இப்பதிப் புகுந்து யான் உறைகின்றேன் நங்காய்! என் கணவன் அறிவித்தபடியே நிலத்திலே நடந்து வந்து இப் பூம்புகார் நகரத்தே புகுந்து இரந்துண்டு இவ்விடத்திலே உறைகின்றேன் காண்!; அவன்-என்பா லன்புமிக்க என் கணவன் நீங்கலாற்றாது ஒருவாறு நீங்கி எம் வித்தியாதரருல கிற்குச் சென்றவன்றானும், யாண்டுதோறும் இம் மாநகரத்திலே; இந்திர கோடணை விழா அணிவருநாள்-இந்திரவிழா அழகுற வருகின்ற நாளிலே; இம் மாநகர் மருங்கே வந்து-இப் பூம்புகார் நகரத்திலே வந்து; என் உறுபசி கண்டனன் இரங்கி என் முன் தோன்றி-எனது மிக்க பசித்துன்பத்தையறிந்து என் பொருட்டுப் பெரிதும் இரங்கி; பின்- பின்னர்; வரும் யாண்டு எண்ணினன் கழியும்-எதிர்வரும் யாண்டின் இந்திர விழா நாளில் வருதற்குக் கருதிச் செல்லா நிற்பன் காண்!; இதுவே என் வரலாறு என்று கூறி என்க.

(விளக்கம்) இப்பதி என்றது பூம்புகார் நகரத்தை. இந்திர கோடணை யாகிய விழா என்க. கோடணை விழா-இரு பெயரொட்டு விழாவின் அழகு வரும் நாள் என்க. உறுபசி- மிக்கபசி. பின் வருகின்ற யாண்டின் வருதற்கெண்ணி என்க.

காயசண்டிகை நன்றி கூறி விடை கொள்பவள் மணிமேகலை அறஞ்செய்தற்கேற்ற இடம் உலகவறவியே எனல்

73-83; தணிவில்........பின்னர்

(இதன் பொருள்) மணிமேகலை- மணிமேகலை என்னும் மாதவக் கொழுந்தே!; தணிவில் வெம்பசி தவிர்த்தனை வணங்கினேன் ஒரு பொழுதுந் தணிதலில்லாத என ஆனைத்தீயின் வெவ்விய அரும்பசியை ஒரு பிடி அன்னமாகிய ஆருயிர் மருந்தாலே துவரத் தீர்த்தருளினை,யாண் நினக்கு செய்யும் கைம்மாறும் உளதோ காண்! என் தலையாலே நின் திருவடியை வணங்கு நின்றேன் காண்!; என் வான்பதிப் படர்கேன்-இனி யான் என் சிறந்த நகரமாகிய விச்சாதர ருலகின்கண்ணதாகிய காஞ்சன புரத்திற்குச் செல்லுவேன் காண்! வானூடு இயங்கும் மந்திரமும் நினைவில் வந்துற்றது, யான் நினக்குக் கூறுவதும் ஒன்றுண்டு அஃதியாதெனின்; துக்கம் துடைக்கும் துகள் அறு மாதவர் சக்கரவாளக் கோட்டம் உண்டு- பிறவித் துன்பத்தைத் துவரத் துடைக்கின்ற குற்றமற்ற பெரிய துறவோர் வாழுமிடமாகிய சக்கரவாளக் கோட்டம் ஒன்று இந் நகரத்தே உண்டு அதனைச் சுடுகாட்டுக் கோட்டம் என்றலது இவ்வூரவர் கூறார்; ஆங்கு அதில்-அச் சக்கரவாளக் கோட்டத்தின்கண்; பலர் புகத் திறந்த புகுவாய் வாயில் உலக அறவி ஒன்று உண்டு- பலரும் தடையின்றிப் புகுதற் பொருட்டு அகலிதாகப் பகுக்கப்பட்ட வாயிலையுடைய உலக அறவி என்னும் பெயரையுடைய அம்பலம் ஒன்றுளது காண்; அதனிடை ஊர் ஊர் ஆங்கண் உறுபசி உழந்தோர்-ஊர்தோறும் ஊர்தோறும் மிக்க பசித்துன்பம் உற்றவரும்; அரும்பிணி உற்றோர்- தம்மால் தீர்த்தற்கரிய பிணிப்பட்டவருள்; ஆரும் இன்மையின்-தாம் இல்லாமையாலே வந்து குழுமி; இடுவோர் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் -தமக்கு உணவு கொடுப்போர் உளரோ என்று ஆராய்ந்து அவ்விடத்திலேயே வதியும் ஆற்றாமாக்கள் சாலப் பலராவார் காண்!; வடுவு ஆழ் கூந்தல் அதன்பால் போகு என்று ஆங்கு அவள் போகிய பின்னர்-அறல் ஆழ்ந்து கிடக்கும் கூந்தலையுடைய ஆருயிர் மருத்துவியே நீ அவ்வுலகவறவியின்பாற் சென்று புகுவாயாக! என்று சொல்லி அவ்விடத்தினின்றும் காயசண்டிகை வானத்திலே எழுந்து போன பின்னர் என்க.

(விளக்கம்) ஆனைத்தீ நோயாலாகிய பசி என்பாள் தணிவில் வெம் பசி என்றாள். என் வான்பதிப்படர்கேன் எனப் பாட்டிடை வைத்த குறிப்பினால் மறந்த வானிலியங்கும் மந்திரமும் நினைவுறப் பெற்றேன் என்றாளுமாயிற்று. இனி, வான் என்பதிப்படர்கேன் என மாறி வான் வழியே என் பதிக்குப் போவேன் என்றாள் எனினுமாம். பவுத்தர் மெய்க் காட்சிகளுள் தலை சிறந்தது துக்கம் துடைத்தலே ஆதலின் அஃதொன்றனையே கூறி யொழிந்தாள்.

அந்நகர மாந்தர் சுடுகாட்டுக் கோட்டம் என்றலது கூறாராகலின் அதற்குச் சக்கரவாளக் கோட்டம் என்பதே தலையாய பெய ரென்பதை மணிமேகலைக்கு அறிவுறுப்பாள் போன்று சக்கரவாளக் கோட்டம் உண்டு; என்றாள். மணிமேகலை அச் சக்கரவாளக் கோட்டம் என்னும் அதன் பெயரும் வரலாறும் பண்டே அறிந்தவளாதலின் சக்கரவாளக் கோட்டத்தில் எனலே அமையும்;உண்டென்று அறிவுறுத்துதல் மிகையாம்பிற வெனின், அற்றன்று! அச் செய்தி காயசண்டிகை அறியாளாகலின் அங்ஙன மறிவுறத்தியதாகப் புலவர் ஓதினமை அவரது நுண்புலமைக்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக் காட்டும் ஆதல் நுண்ணிதின் உணர்க. இனி, காயசண்டிகைக்கும் அப் பெயர் தெரியாதாம் பிறவெனின், மாருதவேகனும் நீயுமே சக்கரவாளக் கோட்டம் என்கின்றீர் அதற்குக் காரணமென்ன எனப் பண்டு சுதமதி வினவினள் என்றமையால் தேவகணத்தா ரெல்லாம் அவ் வரலாறு அறிவர் என்பது போந்தமையால் விச்சாதரியாகிய காயசண்டிகைக்கும் மாருத வேகனுக்குப் போல அவ் வரலாறு தெரியும் என்பது போதரப் புலவர் பெருமான் அங்ஙனம் ஓதினர் என்க.

உலக அறவி என்றது பூம்புகார் நகரத்து ஊர் அம்பலத்திற்கே சிறப்புப் பெயர்; என்னை? முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவா வளத்தது (சிலப்: மனையற- 3-4) என்பது பற்றி அஃதப் பெயர் பெற்றது என்க.

வடுவுஆழ் கூந்தல்-அறல் ஆழ்ந்து கிடக்கும் கூந்தல். இனி வடுவகிர் எனினுமாம். அதன்பாற் போகு என்றது நின் அருளறம் முட்டின்றி நடத்தற் கேற்ற இடம் அதுவே என்னும் குறிப்புடையதாம்.

மணிமேகலை உலகவறவியற் புகுதல்

83-90: ஆயிழை..........ஏத்தி

(இதன் பொருள்) ஆயிழை ஓங்கிய வீதியின் ஒரு புடை ஒதுங்கி அதுகேட்ட மணிமேகலை மகிழ்ந்து இரண்டு பக்கங்களினும் மாடங்கள் உயர்ந்துள்ள அவ் வீதியிலே ஒருபக்கமாக நடந்துபோய்; (உலக அறவியை) வலமுறை மும்முறை வந்தனை செய்து-வலம் வந்து மனமும் மொழியும் மெய்யுமாகிய முக்கருவிகளானும் முறைப்படியே (அதனை) வணங்கிய பின்னர்; அவ் வுலக வறவியின் ஒரு தனியேறி-அவ் வுலக வறவியென்னும் சிறந்த அம்பலத்தின்கண் மிகவும் சிறப்புற ஏறி; பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும் முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி-அதன் கண்ணமைந்துள்ளதும் அந் நகர் வாழ் மாந்தரும் பிறவிடங் களிலிருந்து வருவோரும் ஆகிய பலராலும் தொழப்படுகின்ற சிறப்புடைய இறைவியாகிய சம்பாபதியின் திருக்கோயிலையும் அங்ஙனமே மும்முறையானும் வணங்கிப் பின்னர்; நெடுநிலைக் கந்துடை காரணங் காட்டிய தம் துணைப்பாவையைத் தான் தொழுது ஏத்தி-நெடிதாக நிற்கும் நிலையினையுடைய தூணின் கணிருந்து ஏது நிகழ்ச்சிகளை எடுத்துப் பண்டு சுதமதிக்குக் கூறியவாற்றல் தமக்கு உற்றுழியுதவுந் துணையாகிய கந்திற் பாவையாகிய தெய்வத்தையும் கை குவித்துத் தொழுது வழிபாடு செய்து என்க.

(விளக்கம்) மாடமோங்கிய வீதி என்க ஒரு புடை ஒதுங்கிப் போயது வருவோர் போவோர்க்கு இடையூறில்லாமைப் பொருட்டென்க. மும்முறை-மூன்று முறை எனினுமாம். ஒரு தனியேறி-சிறப்புற வேறி. பலர் என்றது, யாத்திரீகரை. தேவரும் முனிவருமாகிய பலரும் எனினுமாம். முன்னைப் பழைமைக்கும் முன்னைப் பழைமையுடையாளாதல் பற்றிச் சம்பாபதி என்னுங் கொற்றவையை முதியோள் என்றார். கோட்டம்-கோயில்.

பாவை- கந்திற்பாவை; சம்பாபதி கோயிலின்கண் கிழக்கேயுள்ள தொரு நெடுநிலைத் தூணில் மயனால் இயற்றப்பட்டதொரு பாவை. காரணம்-ஏது நிகழ்ச்சி. சுதமதிக்கு இப் பாவை மணிமேகலை நிலை கூறி மாதவியையும் சுதமதியையும் ஆற்றுவித்தமை பற்றித் தந்துணைப்பாவை என்றார். துயிலெழுப்பிய காதை 96-109 நோக்குக. இக் கருத்தறியாதார் இதற்குக் கூறும் உரை போலி யென்க. தந்துணை என்றது மாதவி சுதமதி தானாகிய மூவரையும் உளப்படுத்தோதிய படியாம்.

மணிமேகலை ஆற்றாமாக்கள் அரும்பசி களைதல்

91-98: வெயில்..............மருங்கென்

(இதன் பொருள்) வெயில் சுட வெம்பிய வேய்கரி கானத்து கருவி மாமழை தோன்றியது என்ன-முதுவேனிற் பருவத்து வெயிலாலே சுடப்பட்டு வெந்த மூங்கில்கள் கரிந்த காட்டிடத்தே மின்னலும் இடியுமாகிய தொகுதியையுடைய முகில்கள் தாமே வானத்தே தோன்றிப் பெரிய மழையைப் பெய்தாற் போல; பசிதின வருந்திய பைதல் மாக்கட்கு- பசியாலே தின்னப்பட்டுலந்த உடம்போடே வருந்தி ஆங்கு இடுவோர்த் தேர்ந்து வந்து குழுமிய ஆற்றா மாக்களிடையே; ஆயிழை அமுதசுரபியொடு தோன்றி- மணிமேகலை அமுதசுரபி என்னும் அவ்வரும்பெறற் பாத்திரத்தோடே எழுந்தருளி; அவர்களைப் பொது நோக்கான் நோக்கி; ஏற்போர் தாம் யாவரும் வருக- மக்களே நுங்களில் ஏற்றுண்போரெல்லாம் வாருங்கள்!; இஃது ஆபுத்திரன் கை அமுதசுரபி-இதோ யான் ஏந்தியிருக்கின்ற இத் திருவோடு பண்டு ஆபுத்திரன் என்னும் அறவோன் சிந்தாதேவியென்னும் செழுங்கலை நியமத்துத் தெய்வத்தின்பாற் பெற்று அனைத்துயிர்கட்கும் உண்டி கொடுத்து உயிர் கொடுத்த தெய்வத் திருவோடு ஆதலால் அனைவரும் வம்மின்; என என்று அழைத்தபொழுதே; யர்ணர்ப் பேரூர் அம்பலம் மருங்கு ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்று-புதுவருவாயையுடைய பெரிய நகரமாகிய பூம்புகாரில் உலக அறவி என்னும் அவ்வம்பலத்தே ஆற்றாமாக்கள் ஏற்றுண்ணுதலாலுண்டாகும் ஒலி பேராரவாரமாகி எழுந்தது என்க.

(விளக்கம்) வேய்- மூங்கில். மூங்கில் வெப்பத்தைப் பெரிதுல் பொறுத்துக் கொள்ளும் ஒரு புல். ஆகவே, வேயும் கரிகானம் எனம் வேண்டிய சிறப்பும்மை தொக்கது; செய்யுள் விகாரம்.

ஆபுத்திரன் செய்த அறத்தின் புகழ் உலகெலாம் பரவியிருக்கும் என்னும் கருத்தால் இஃது ஆபுத்திரன் கை அமுதசுரபி என்றாள். எனவே எல்லீரும் இனிதுண்ணலாம் என்றறிவித்தாளும் ஆயிற்று. பிச்சை ஏலாதாரும் அக் குழுவில் இருத்தல் கூடுமாகலின், அவர் வெகுளாமைப் பொருட்டு ஏற்போர் தாம் யாவரும் வருக என்றாள். அரவத்தொலி என்றது பேராரவாரம் என்றவாறு.

இனி, இக் காதையை- காயசண்டிகை நோக்கி வணங்கி, துடைப்பாய் என்றலும் மணிமேகலை பெய்தலும் அவள் உரைக்கும்; உரைப்பவள் அதன்பாற் போக என்று கூறிப் போகிய பின்னர் ஆயிழை ஒதுங்கிச் செய்து ஏறித்தொழுது வணங்கி ஏத்தி, தோன்றி வருக என அம்பலம் மருங்கு ஒலி யெழுந்தன்று என இயைத்திடுக.

உலக அறவி புக்க காதை முற்றிற்று.


Offline Anu

Re: மணிமேகலை
« Reply #18 on: February 28, 2012, 09:27:48 AM »
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை

(பதினெட்டாவது மணிமேகலை அம்பலமடைந்தமை சித்திராபதி உதயகுமரனுக்குச் சொல்ல அவன் அம்பலம் புக்க பாட்டு)

அஃதாவது- மாதவியும் மணிமேகலையும் பவுத்தப் பள்ளி புக்கமை கேட்டுத் தணியாத் துன்பந் தலைத்தலை மேல்வர மனம் வெந்திருந்த சித்திராபதி மணிமேகலை பிச்சைப் பாத்திரம் ஏந்தி உலகவறவியினூடு சென்றேறிய செய்தி கேட்டவுடன் பழங்கரும்புண்ணக வயின் தீத்துறு செங்கோல் சென்று சுட்டாற் போன்று பெரிதும் வருந்தி, அவள்பால் இடங்கழி காமமோடிருந்த இளவரசனாகிய உதயகுமரன்பாற் சென்று மணிமேகலையைக் கைப்பற்றித் தேரிலேற்றி வருமாறு ஊக்குவித்தமையால் உதயகுமரன் மணிமேகலையைக் கைப்பற்றி வருங் கருத்தோடு அவளிருக்கின்ற உலகவறவி என்னும் அம்பலத்திற் சென்று புகுந்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- சித்திராபதியானவள் மணிமேகலை பிக்குணிக் கோலத்தோடு பிச்சைப் பாத்திரம் ஏந்தி உலகவறவியினூடு சென்றேறினள் என்ற செய்தி கேட்குக் கொதித்த உள்ளமொடு வெய்துயிர்த்துக் கலங்கித் தன்னோர் அனைய கூத்தியன் மடந்தையர்க் கெல்லாம் கூறும் பரிவுரைகளும், மணிமேகலை ஏந்திய பிச்சைக் கடிஞையைப் பிச்சை மாக்கள் பிறர் கைக்காட்டி உதயகுமரனால் அவளைப் பொற்றேர்க் கொண்டு போதேனாகின் யான் இன்னள் ஆகுவல் என்று சூளுரைத்துக் குறுவியர் பொடித்த முகத்தோடு இளங்கோவேந்தன் இருப்பிடங் குறுகும் காட்சியும், ஆங்கு அரசிளங்குமரன் திருந்தடி வணங்கி நிற்றலும் மணிமேகலையைக் கைப்பற்றமாட்டாத தனது ஏக்கறவு தோன்ற அவன் மணிமேகலையின் தாபதக் கோலம் தவறின்றோ என நலம் வினவுவான் போல வினவுதலும், சித்திராபதியும் உதயகுமரனும் தம்முட் சொல்லாட்டம் நிகழ்த்துதலும், உதயகுமரன் மணிமேகலையின்பாற் கண்ட தெய்வத்  தன்மைகளைச் சித்திராபதிக்குக் கூறி அவளைக் கைப்பற்ற நன்கு துணியானாதலும்; அது கண்ட சித்திராபதி அவ்விறைமகனைத் தன் வயப்படுத்தும் பொருட்டுச் சிறுநகை எய்திச் செப்புகின்ற அவளது பேச்சுத் திறங்களும், அவள் வயப்பட்ட அரசிளங்குமரன் உலகவறவி சென்று புகுதலும் ஆங்கு மணிமேகலையை அவன் வினவும் வினாக்களும், அதற்கவள் கூறும்விடைகளும் மணிமேகலை சம்பாபதி கோயிலுட்புகுந்து காயசண்டிகை வடிவங்கொண்டு மீண்டு வருதலும் மணிகேலை கோயிலுட் கரந்திருக்கின்றனள் என்று கருதிய உதயகுமரன் கோயிலுட்புகுந்து அவளைத் தேடுதலும்; காணாமல் திகைத்துச் சம்பாபதியாகிய தெய்வத்தை நோக்கிக் கூறுஞ் செய்தியும் சூளுறவும் பிறவும் இலக்கியவின்பம் பொதுள இயம்பப்பட்டுள்ளன.

ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அகவயின்
தீத் துறு செங் கோல் சென்று சுட்டாங்குக்
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி
விதுப்புறு நெஞ்சினள் வெய்து உயிர்த்துக் கலங்கித்
தீர்ப்பல் இவ் அறம்! என சித்திராபதி தான்
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்
கோவலன் இறந்த பின் கொடுந் துயர் எய்தி
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது
நகுதக்கன்றே! நல் நெடும் பேர் ஊர்
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது!  18-010

காதலன் வீய கடுந் துயர் எய்திப்
போதல்செய்யா உயிரொடு புலந்து
நளி இரும் பொய்கை ஆடுநர் போல
முளி எரிப் புகூஉம் முது குடிப் பிறந்த
பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர் தம்
கைத்தூண் வாழ்க்கைக் கடவியம் அன்றே
பாண் மகன் பட்டுழிப் படூஉம் பான்மை இல்
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும்
நறுந் தாது உண்டு நயன் இல் காலை
வறும் பூத் துறக்கும் வண்டு போல்குவம்  18-020

வினை ஒழிகாலைத் திருவின் செல்வி
அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்
தாபதக் கோலம் தாங்கினம் என்பது
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே?
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின்
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்தக்
கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையைப்
பிச்சை மாக்கள் பிறர் கைக் காட்டி  18-030

மற்று அவன் தன்னால் மணிமேகலை தனைப்
பொன் தேர்க் கொண்டு போதேன் ஆகின்
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையேன் ஆகி அரங்கக் கூத்தியர்
மனைஅகம் புகாஅ மரபினன் என்றே
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகையுயிர்த்து
வஞ்சக் கிளவி மாண்பொடு தேர்ந்து
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழக்
குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள்  18-040

கடுந் தேர் வீதி காலில் போகி
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு சிறைப்
பவழத் தூணத்து பசும் பொன் செஞ் சுவர்த்
திகழ் ஒளி நித்திலச் சித்திர விதானத்து
விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து
துளங்கும் மான் ஊர்தித் தூ மலர்ப் பள்ளி
வெண் திரை விரிந்த வெண் நிறச் சாமரை
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச  18-050

இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தித்
திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கு அவன்
மாதவி மணிமேகலையுடன் எய்திய
தாபதக் கோலம் தவறு இன்றோ? என
அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப
ஒரு தனி ஓங்கிய திரு மணிக் காஞ்சி
பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
நாடகம் விரும்ப நல் நலம் கவினிக்
காமர் செவ்விக் கடி மலர் அவிழ்ந்தது
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய  18-060

விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர்ப்
பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது
வாழ்க நின் கண்ணி! வாய் வாள் வேந்து! என
ஓங்கிய பௌவத்து உடைகலப் பட்டோன்
வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன்
மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது
ஓவியச் செய்தி என்று ஒழிவேன் முன்னர்
காந்தள் அம் செங் கை தளை பிணி விடாஅ
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம்
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த  18-070

முத்துக் கூர்த்தன்ன முள் எயிற்று அமுதம்
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப
விருந்தின் மூரல் அரும்பியதூஉம்
மா இதழ்க் குவளை மலர் புறத்து ஓட்டிக்
காய் வேல் வென்ற கருங் கயல் நெடுங் கண்
அறிவு பிறிதாகியது ஆய் இழை தனக்கு என
செவிஅகம் புகூஉச் சென்ற செவ்வியும்
பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவை என்
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர்க் காப்பிட்டு என்று
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர்ப்  18-080

பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றிச்
செங்கோல் காட்டிச் செய் தவம் புரிந்த
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றனள்
தெய்வம்கொல்லோ? திப்பியம்கொல்லோ?
எய்யா மையலேன் யான்! என்று அவன் சொலச்
சித்திராபதி தான் சிறு நகை எய்தி
அத் திறம் விடுவாய் அரசு இளங் குருசில்!
காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன
தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின்?
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி  18-090

ஆயிரம் செங் கண் அமரர் கோன் பெற்றதும்
மேருக் குன்றத்து ஊரும் நீர்ச் சரவணத்து
அருந் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய
பெரும் பெயர்ப் பெண்டிர்பின்பு உளம் போக்கிய
அங்கி மனையாள் அவரவர் வடிவு ஆய்த்
தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம்
கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில்?
கன்னிக் காவலும் கடியின் காவலும்
தன் உறு கணவன் சாவுறின் காவலும்
நிறையின் காத்துப் பிறர் பிறர்க் காணாது  18-100

கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர் தம் குடியில் பிறந்தாள் அல்லள்
நாடவர் காண நல் அரங்கு ஏறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டி
சுருப்பு நாண் கருப்பு வில் அருப்புக் கணை தூவச்
செருக் கயல் நெடுங் கண் சுருக்கு வலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப்
பண் தேர் மொழியின் பயன் பல வாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்
பான்மையின் பிணித்துப் படிற்று உரை அடக்குதல்  18-110

கோன்முறை அன்றோ குமரற்கு? என்றலும்
உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து
விரை பரி நெடுந் தேர்மேல் சென்று ஏறி
ஆய் இழை இருந்த அம்பலம் எய்தி
காடு அமர் செல்வி கடிப் பசி களைய
ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போலத்
தீப் பசி மாக்கட்குச் செழுஞ் சோறு ஈத்துப்
பாத்திரம் ஏந்திய பாவையைக் கண்டலும்
இடங்கழி காமமொடு அடங்காண் ஆகி
உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என்  18-120

நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி
நோற்றூண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி
ஏற்றூண் விரும்பிய காரணம் என்? என
தானே தமியள் நின்றோள் முன்னர்
யானே கேட்டல் இயல்பு எனச் சென்று
நல்லாய்! என்கொல் நல் தவம் புரிந்தது?
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன்
தன் அடி தொழுதலும் தகவு! என வணங்கி
அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்  18-130

இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும்
தொன்று காதலன் சொல் எதிர் மறுத்தல்
நன்றி அன்று! என நடுங்கினள் மயங்கி
கேட்டது மொழியேன் கேள்வியாளரின்
தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின்
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்
மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு  18-140

பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ
கேட்டனை ஆயின் வேட்டது செய்க! என
வாள் திறல் குருசிலை மடக்கொடி நீங்கி
முத்தை முதல்வி முதியாள் இருந்த
குச்சரக் குடிகை தன் அகம் புக்கு ஆங்கு
ஆடவர் செய்தி அறிகுநர் யார்? எனத்
தோடு அலர் கோதையைத் தொழுதனன் ஏத்தி
மாய விஞ்சை மந்திரம் ஓதிக்
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய்
மணிமேகலை தான் வந்து தோன்ற  18-150

அணி மலர்த் தாரோன் அவள்பால் புக்குக்
குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப்
பிச்சைப் பாத்திரம் பெரும் பசி உழந்த
காயசண்டிகை தன் கையில் காட்டி
மாயையின் ஒளித்த மணிமேகலை தனை
ஈங்கு இம் மண்ணீட்டு யார் என உணர்கேன்?
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின்
பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன்!
இன்னும் கேளாய் இமையோர் பாவாய்!
பவளச் செவ் வாய்த் தவள வாள் நகையும்  18-160

அஞ்சனம் சேராச் செங் கயல் நெடுங் கணும்
முரிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும்
குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனைக்
கவை முள் கருவியும் ஆகிக் கடிகொள
கல்விப் பாகரின் காப்பு வலை ஓட்டி
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
புதுக் கோள் யானை வேட்டம் வாய்ந்தென
முதியாள்! உன் தன் கோட்டம் புகுந்த
மதி வாள் முகத்து மணிமேகலை தனை
ஒழியப் போகேன் உன் அடி தொட்டேன்
இது குறை என்றனன் இறைமகன் தான் என்  18-172

உரை

மணிமேகலை பிக்குணிக் கோலங் கொண்டு அம்பலம்புக்க செய்திகேட்ட சித்திராபதியின் சீற்றமும் செயலும்

1-9: ஆங்கது................கூறும்

(இதன் பொருள்) சித்திராபதிதான்-முன்னரே தீவகச் சாந்தி செய்தரும் நன்னாள் மணிமேகலையோடு மாதவி வாராமையாலே தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர நெஞ்சம் புண்ணாகியிருந்த சித்திராபதியாகிய மாதவியின்தாய்; ஆங்கு அது கேட்டாங்கு மணிமேகலை பிச்சைப் பாத்திரம் ஏந்திப் பிக்குணிக் கோலத்தோடு உலகவறவியினூடு சென்றேறினள் என்னும்  அப்பொழுது நிகழ்ந்த செய்தியைக் கேட்டவளவிலே; கரும்புண் அகவயின் தீதிறு செங்கோல் சென்று சுட்டாங்கு-பழம் பெரும் புண்ணினூடே தீயினுட் செருகிப் பழுக்கக் காய்ச்சிய சிவந்த சூட்டுக்கோல் புகுந்து சுட்டு வருத்தினாற் போன்று அச் செய்தி முன்னரே புண்பட்டிருந்த தன்னெஞ்சத்தை ஆற்றவும் வருத்தியதனாலே; கொதித்தவுள்ளமொடு குரம்பு கொண்டேறி விதுப்புற நெஞ்சினள் வெய்து உயிர்த்துக் கலங்கி- வெம்மிய நெஞ்சத்தோடு எல்லையைக் கடந்துயர்ந்து துடிதுடிக்கின்ற நெஞ்சத்தையுடையவளாகி வெய்தாக நெடுமூச் செறிந்து கலக்கமுற்று; இ அறம் தீர்ப்பல் என-மணிமேகலை மேற்கொண்ட இவ் வறத்தை ஒழித்து அவளை மீட்பல் என்று துணிந்து; கூத்தியல் மடந்தையர்க்கெல்லாம் கூறும்-அத் தெருவில் உறைகின்ற நாடகக் கணிகை மகளிர் அங்கு வந்து குழுமியவர்களை நோக்கிக் கூறுவாள் என்க.

(விளக்கம்) சித்தராபதி முன்பே நெஞ்சம் புண்ணாகி மாதவி மணிமேகலை இருவர் பெரிதும் வருந்தி யிருப்பளாதலின் இப் பொழுது மணிமேகலையும் பிக்குணியாகிய செய்தி ஆற்றொணாத்துயர் செய்தலியல்பே ஆகலின் அதற்கேற்ப உவமை தேர்ந்துரைப்பவர் கரும் புண் அகவயின் தீத்துறு செங்கோல் சென்று சுட்டாங்கு என்றினிதின் ஓதினர். சுட்டாங்கு-சுட்டாற்போல. சுட்டாங்கு அச் செய்தியாற் சுடப்பட்டுக் கொதித்த என்றவாறு. குரம்பு கொண்டேறுதல்-அணையிடப் பட்டிருந்து பின்னர் அவ்வணையையும் உடைத்துக் கொண்டு செல்லுதல். எனவே ஈண்டுச் சித்திராபதி முன்னர்த் துன்பத்தைத் தன்னுள் அடக்கி யிருந்த ஆற்றைலையும் அழித்து இத் துயரம் மிக்கெழுந்த தென்பார் இங்ஙனம் உவமை கூறினர். குரம்பு-அணைக்கட்டு. விதுப்புறு நெஞ்சு-இதற்கேதேனுஞ் செய்ய வேண்டும் என்று முனைப்புற்றுத் துடிக்கும் நெஞ்சம்.

கூத்தியன் மடந்தையர்க் கெல்லாம் கூறும் என்ற குறிப்பால் அப் பொழுது அவள் எய்திய இன்னல் நிலைக்கு இரங்கி அங்குக் கூத்தியல் மகளிர் வந்து குழுமினர் என்பது பெற்றாம்.

தீர்ப்பல் இவ்வறம் என்றது சித்திராபதியின் உட்கோள். கூத்தியல் மடந்தையர்- நாடகக் கணிகை மகளிர்.

சித்திராபதியின் சூள் உரை

7-15: கோவலன்.............அல்லேம்

(இதன் பொருள்) கோவலன் இறந்தபின் மாதவி கொடுந்துயர் எய்திய மாதவர் பள்ளியுள் அடைந்தது- நமரங்காள் எல்லீரும் கேளுங்கள்! கோவலன் என்னும் வணிகன் மாமதுரை சென்று கொலையுண்டிறந்த பின்னர் மாதவியாகிய என் மகள் கொடிய துன்ப மெய்திச் சிறந்த தவத்தோர்க்கே உரிய பவுத்தருடைய தவப் பள்ளியிலே புகுந்த செயலானது, நகுதக்கன்று நம்மனோர்க்கெல்லாம் நகத் தகுந்ததொரு செயலேயாயிற்று; நல்நெடும் பேரூர் இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது- நன்மையுடைய நெடிய பெரிய இப் பூம்புகார் நகரத்தே ஆடலும் பாடலும் அழகுமாகிய கலையைப் பேணி வாழுகின்ற இந் நாடகக் கணிகையர் செயலும் நமக்கு இன்றியமையாத தகுதியுடைய தொன்றே என்று நம்மைப் பாராட்டும் கலையுணர்வுடையோர்க்கெல்லாம் நம்மை இகழும் மொழியைத் தோற்றுவிப்பதாகவும் ஆயிற்றுக் கண்டீர்!; காதலன் வீய கடு துயர் எய்தி போதல் செல்லா உயிரொடு புலந்து- யாமெல்லாம் தம் காதலன் இறந்துபட்ட பொழுதே கடிய துயரத்தை அடைந்து தானே போயொழியாத தம் உயிரினது புன்மை கருதி அதனொடு பிணங்கி; நளி இரும் பொய்கை ஆடுநர் போல முளி எரி புகூஉம் முதுக்குடிப் பிறந்த பத்தினிப் பெண்டிர் அல்லேம்-குளிர்ந்த பெரிய நீர் நிலையில் புகுந்து நீராடுவார் போன்று வேகின்ற ஈமத்தீயிலே புகுதுமியல் புடைய பழைய உயர் குடியிலே பிறந்த பத்தினிப் பெண்டிரல்லமே என்றாள் என்க.

(விளக்கம்) கோவலன் என்றது யாரோ ஒரு வணிகனாகிய கோவலன் என்பதுபட நின்றது. என்னை? நகர நம்பியர் பலர். நம்மைக் காமுற்று வருபவர் ஆவர். அவருள் ஒருவனாகக் கருதிக் கோவலன் இறந்தமை பற்ற மாதவி ஒரு சிறிதும் கவலாதிருக்க வேண்டியவள் என்பதுபட அவனது அயன்மை தோன்ற வாளாது கோவலன் என்றாள் என்க. நம்மனோரால் நகுதக்கதொன்று. பேரூரின்கண் கலைப்பொருள் பற்றி இவர் வாழ்க்கையும் தக்கது என்று நம்மைப் பாராட்டும் கலையுணர் பெருமக்களுக்கு எள்ளுரை ஆயது என்று நுண்ணிதிற் கூறுக.

முதுக்குடிப் பிறந்தோர், காதலன் இறப்பின் அப்பொழுதே தானே போகும் உயிரே தலையாய பத்தினிப் பெண்டிர் உயிரியல்பாகும், அங்ஙனம் போகாத உயிரைப் புலந்து இடையாய பத்தினிப் பெண்டிர் முளியெரி புகுவர். கடையாய பத்தினிப் பெண்டிர் நோன்பு மேற்கொள்வர். மாதவி அம் முதுக்குடிப் பிறந்தாள் அல்லள் ஆகவும் அவர் செய்வது செய்தாள். இச் செயல் பத்தினிப் பெண்டிர்க்காயின் புகழும் மதிப்பும் தரும். நம்மனோர் செய்யின் நம்மனோரில் எஞ்சியோர்க்கு நகைப்பையும் முதுக்குடிப் பிறந்தோர்க்கு எள்ளல் உரையையுமே தோற்றுவிக்கும் என்று கூறுகின்றனள் என்க.

காதலர் இறந்தவழிப் பத்தினிப் பெண்டிர் நிலையை ஊரலர் தூற்றிய காதையில் மாதவியும் திறம்பட ஓதினமை ஈண்டு நினைவிற் கொள்க.

சித்திராபதி கணிகையரியல்பு கூறல்

15-24: பலர்..........அன்றே

(இதன் பொருள்) பலர் தம் கைத்து ஊண் வாழ்க்கை கடவியம் அன்றே!- நமரங்காள்! யாமெல்லாம் நம்மைக் காமுற்று வருகின்ற நகர நம்பியர் பலருடைய கைப்பொருளைக் கவர்ந்துண்ணும் வாழ்க்கையையே கடமையாகக் கொண்டுளேமல்லமோ!; பாண் மகன் பட்டுழிப் படூஉம் யாழ்இனம் போலும் பான்மையில் இயல்பினம்-இனி யாமெல்லாம் நம்மைக் காமுற்று வருவோன் ஒருவன் இறந்தொழிந்தானாயின் என்னாவோம் எனின் பாணன் இறந்தபொழுது அவன் பயின்ற யாழ் முதலிய இசைக் கருவி தம்மைப் பயிலவல்ல கலைவாணர் பிறர் கையிலே பட்டு அவராலே பயிலப்படுமாறுபோல நமக்கு வேண்டுவன செய்து நம்மொடு பயிலத் தகுந்த பிற காமுகர் பாலேம் ஆகும் இயல்பினம் அல்லமோ? அன்றியும்; நறுந்தாது உண்டு நயன்இல் காலை வறும் பூ துறக்கும் வண்டும் போல்குவம்-ஏன்? நம்மைக் காமுற்று வருபவன் செல்வனாந்துணையும் அவனை நயந்து செல்வம் இன்றி நல்குரவுடையனாய பொழுதே நாம் கைவிட்டு விடுவதனால் யாம் நறிய தேன் உள்ள துணையுமிருந்து அஃதொழிந்த பொழுது அந்த வறும்பூவைத் திரும்பிப் பாராமல் மீண்டுமொரு தேன் பொதுளிய மலரை நாடிச் செல்லும் வண்டினத்தையும் ஒப்பாகுவம் அல்லமோ? வண்டென நம்மை நாம் தாழ்த்திக் கூறிக் கொள்வானேன்?வினையொழி காலை திருவின் செல்வி அனையேம் ஆகி ஆடவர் துறப்பேம் வினையொழிகாலைத் திருவின் செல்வி அனையேம் ஆகி- ஆகூழ் ஒழிந்த விடத்தே தன்னாதரவிற் பட்டவரைக் கைவிட்டகன்று பிறரிடம் போகும் திருமகளாகிய தெய்வத்தைப் போலவே யாமும்; ஆடவர் துறப்பேம்- பொருளின்றி நல்குரவுற்றாரை அப் பொழுதே துறந்துவிடுவோ மல்லமோ! இத்தகைய இயல்புடைய நாடகக் கணிகையராகிய யாம்; தாபதக் கோலம் தாங்கினம் என்பது- யாரோ ஒரு காமுகன் இறந்துபட்டான் என்று துறவுக் கோலம் பூண்டேம் என்னும் இச் செய்தி உலகில் வாழும்; யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே- எத்தகையோரும் எள்ளி நகையாடுதற் கியன்ற தொரு செய்தியே யாகும் என்பது தேற்றம் என்றாள் என்க.

(விளக்கம்) பலர்- செல்வர் பலர். கைத்து-கைப்பொருள். பான் மையில் யாம் பாண்மகன் பட்டுழிப் படூஉம் யாழினம் போலும் இயல்பினம் என மாறுக. பான்மை- இயல்பு. இஃதென் சொல்லியவாறோ வெனின் பயிற்சிமிக்க பாணனுடைய யாழ் அவன் இறந்துழித் தான் அழிவின்றியே பயிற்சிமிக்க பிறபாணர் கையதாய்த் தன் தொழிலைச் செய்யுமாறுபோல யாமும் நமது பிறப்பியல்பினாலே நம்மொடு பயிலும் செல்வர்பாற் பயிலுதலும்; அவன் இறந்துபடின் துயரமின்றி அத்தகு பிறசெல்வர்பாற் பயிலுவோம், இதுவே நமக்கியல்பான பண்பு. இத்தகைய பண்புடைய யாம் ஆயிரவருள் ஒருவனாகக் கருதப்படுகின்ற ஒரு காமுகச் செல்வன் இறந்தான் எனத் துறவுக் கோலம் பூண்பது உலகில் அனைவராலும் எள்ளி நகைத்தற் குரியதொரு செயலேயாம் என்றவாறு. இது பொதுவிற் கூறப்பட்டதேனும் முன்பு கோவலன் இறந்தபின் கொடுந்துயர் எய்தி மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது நகுதக்கன்றே என்றதனை ஏதுவும் எடுத்துக் காட்டுங் கூறி மாதவி செயலைப் பழித்த படியாம்.

இனிக் கோவலன்  தன் மனைவி சிலம்பை விற்குமளவிற்கு நல்குர வெய்தினான் ஆகலின் அவனை மாதவியே கைவிடற்பால ளாவாள் அத்தகையோன் தானே அவளைத் துறந்தமை கருதின் அவள் மகிழவே வேண்டும். அவளஃதறியாது கடுந்துயர் எய்தி மாதவர் பள்ளியுள் அடைவது எத்துணைப் பேதைமைத் தென்றற்கு யாம் நறுந்தாதுண்டு நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம் அல்லமோ என்றாள். இவ்வாறு செய்வது இழிதகவுடைத்தென்று எண்ணற்க. திருவின் செல்விகூட நம்மோரனைய இயல்பினளே என்று தம் குலத்திற்கும் ஒரு சிறப்புக் கூறுவாள் யாம் திருவின் செல்வி அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம் என்றனள். ஈண்டு இவள் இராமவதாரத்திற் கம்பர் காட்டும் கொடுமனக் கூனி போலவே காணப்படுதல் இவளுடைய மொழித் திறத்தில் வைத்துணர்க.

சித்திராபதியின் சினஞ்சிறந்து செப்பிய வஞ்சினமொழி

25-36: மாதவி...........சாற்றி

(இதன் பொருள்) மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி போது அவிழ்செவ்வி பொருந்துதல் விரும்பிய- நத்தம் குலவொழுக்கங் கடந்த அறிவிலியாகிய அந்த மாதவி பெற்ற மணிமேகலையென்னும் பெயரையுடைய பூங்கொடி அரும்பி இதழ்விரித்து மலருகின்ற புத்தம் புதிய செவ்வியிலே அம் மலரினகத்தே அமர்ந்து புதுத் தேன் பருகுதற்குப் பெரிதும் அவர்க்கொண்ட;(அலமருகின்றது ஒரு மணிவண்டு நமரங்காள்! அவ்வண்டினை நீயிர் அறியீர் போலும் எதிர்பார்த்துத் திரிகின்ற அவ்வண்டு) உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின்- உதயகுமரன் என்னும் பெயரையுடைய உலகத்தையே ஆளுமொரு சிறப்பான வண்டு கண்டீர்! அவ் வண்டின்; சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த-உறுதி குலையாத உள்ளமாகிய திருவாயினாலே நன்கு ஆரப் பருகும்படி; கைக் கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையைப் பிச்சைமாக்கள் பிறர்கைக் காட்டி- யான் கைப்பற்றிக் கொண்டு அந்த மணிமேகலை தன் செங்கையி லேந்தியிருக்கின்ற பிச்சைக் கலத்தை இயல்பாகப் பிச்சை ஏற்கும் இரவலர் கையிடத்தாகும்படி பறித்து வீதியிலே வீசிப் போகட்டு; மற்று அவன்றன்னால் மணிமேகலை தனைப் பொன் தேர் கொண்டு போதேன் ஆகின்-முன் யான் கூறிய அவ்வுதிய குமரனாலேயே அவளை அவனது பொன்னாலியன்ற தேரிலே ஏற்றுவித்துக் கொண்டு வருவேன் காண்! அங்ஙனம் வாராதொழிவேனாயின்; சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி வடுவொடு வாழும் மடந்தையர் தம் ஓர் அனையேன் ஆகி நம்மனோரில் குடிக்குற்றப்பட்டுத் தலையிலே செங்கலை ஏற்றிச் சுமக்கச் செய்து நாடக அரங்கினை நாட்டவர் காணச் சுற்றி வந்தமையாலே தமக்குண்டான பழியோடு உயிர் சுமந்து வாழுமகளிரோடு ஒரு தன்மையுடையேனாய்; அரங்கக் கூத்தியர் மனையகம் புகா மரபினன் என்று வஞ்சினம் சாற்றி-உலகினர் மதிப்பிற்குரியராக இனிது வாழுகின்ற நாடகக் கணிகையர் வாழ்கின்ற இல்லம் புகாத முறைமையினையுடைய இழிதகைமையுடையேன் ஆகுவன் இது வாய்மை! என்று பலரும் கேட்கச் சூண்மொழி சொல்லி; என்க.

(விளக்கம்) பூம்புகார் நகரத்தே வாழ்கின்ற நாடகக் கணிகையர் மரபினுள்ளும் சித்திராபதியின் குடி பெரிதும் சிறப்புடைய குடி என்பதனை

தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திரன் சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய
பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதவிழ் புரிகுழன் மாதவி    (அரங்கேற்று-1-7)

எனவும்,

மங்கை மாதவி வழிமுதற் றோன்றிய
அங்கர வல்குலும்     (6-2-4-5)

எனவும் வரும் சிலப்பதிகாரத்தானும் அறியப்பட்டது

அத்துணைச் சிறப்பான குடிப் பெருமையை இம் மாதவி தாபதக்கோலந் தாங்குமாற்றால் கெடுத் தொழிந்தாள் என்பது அவள் உட்கோள் ஆகும். மேலும் அவள் அக் குலக் கொழுந்தாகிய மணிமேகலை என்னும் மலர்பூங் கொம்பினை அது மலர்ந்துள்ள செவ்வியில் பிக்குணிக் கோலம் பூட்டிப் பிச்சைப் பாத்திரம் ஏந்திச் செல்ல விடுத்த செயலை எண்ணுந்தோறும் அவள் சினம் தலைத் தலைப் பெருகி வருகின்றது. அவளுக்கும் குடிப்பழி வந்துற்றதைக் காணவே, (தம்முள்ளும் சித்திராபதி குடியினாற் பெரிதும் தனக்கு மதிப்புண்டென்று செருக்குற்றிருந்த வட்கும் பழிவந்துற்றமை கண்டு உள்ளுள்ளே உவத்தற்கே ஏனைய கணிகையர்) அரங்கக் கூத்தியர் எல்லாம் ஒருங்கு குழுமி நிற்கின்றனர். ஆதலால் அளியள் அச் சித்திராபதி அம் மகளிர் முன் தன் குடிப்பழி தீர்த்தற்குத் தான் செய்யப் போவது இன்னது என்று சீற்றஞ் சிறக்கப் பேசும் இப் பேச்சுக்கள் பெரிதும் இயற்கை நவிற்சியே ஆதலறிக.

இனி, மாதவியின்பா லுண்டான வெறுப்பினாலே என் மகள் என்னாது அவளை ஏதிலாள் போன்று மாதவி என்றமையும் உணர்க மணிமேகலை தவறிலள்; அவள் தாய் பூட்டிய கோலத்தை ஏற்றனள் என்னுங் கருத்துடையளாதலின் அவளை மணிமேகலையாகிய வல்லி என்றும், அவ் வல்லி புதிதலரும் பூவின்கட் பொருந்திக் காமத் தேனுகர ஓர் உலகாள் வண்டு காத்திருக்கின்றது என்றும் கூறுமிக்கூற்றுத் தன் செருக்கை மீண்டும் நிலைநாட்டுதற் பொருட்டுத் தன் குடிப்பெருமை கூறியவாறு.

பிச்சைப் பாத்திர மேந்திப் பெருந் தெருப்புக்காளொரு கணிகை மகளை உலகாள் வேந்தன் மகன் ஒருவன் விரும்புதலும் உளதாமோ? என்று ஐயுறுவார் அக் கணிகையருட் பலர் உளராகலாமன்றே, அவர் தம் ஐயந் தீர்ப்பாள் அவ் வண்டு, சிதையாவுள்ளம் உடைய வண்டு என்றாள். அவ் வேந்தன் மகன் அவளைப் பெறுதற் பொருட்டு யான் ஏவிய அனைத்தும் செய்குவன் என்பது தோன்ற மற்றவன்றன்னால் மணிமேகலையைப் பொற்றேர்க் கொண்டு போதுவல் கண்டீர்! என்றாள்.

மணிமேகலை பிச்சைப் பாத்திரம் ஏந்தியதாலே வந்த இழிவொன்று மில்லை. அவள் தானும் என் வழிக்குடன்பட்டு வருவாள் என்பது தோன்ற பிச்சைப் பாத்திரம் பிறர் கைக் காட்டிப் பொற்றேர்க் கொண்டு போதுவல் என்றாள். இனி சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின் என்பதனாலும்( சிலப்- 14:146) பதியிலாரிற் குடிக் குற்றப் பட்டாரை ஏழு செங்கற் சுமத்தி ஊர் சூழ்வித்தல் மரபு எனவரும் அடியார்க்கு நல்லார் விளக்கத்தாலும் அக் காலத்தே அவ் வழக்க முண்மை புலனாகும்.

வடுவொடு வாழும் கணிகையர் ஏனைய கணிகையர் மனையகம்புகுதல் கூடாதென்னும் விதியுண்மையும் இவள் கூற்றாற் பெற்றாம்.

சித்திராபதி உதயகுமரன் அரண்மனை எய்துதல்

37-42: நெஞ்சு...........குறுகி

(இதன் பொருள்) நெஞ்சு புகை உயிர்த்து- சினத்தீப் பற்றி எரிதலாலே நெஞ்சினின்றும் புகைபோன்று வெய்தாக உயிர்ப் பெறிந்து அவ்விடத்தினின்றும் அரண்மனை நோக்கிச் செல்லுபவள் செல்லும் பொழுதே; மாண்பொடு வஞ்சக் கிளவி தேர்ந்து மன்னவன் மகனைத் தன் வழிப்படுத்தற்கு அவனுடைய மாட்சிமையோடு பொருந்துகின்ற வஞ்சக மொழிகளை இன்னின்னவாறு பேசுதல் வேண்டும் என்று தன்னெஞ்சத்தே ஆராய்ந்து கொண்டு; செறிவளை நல்லார் சிலர் புறஞ் சூழ- தன் குற்றேவற் சிலதியருள்ளும் திறமுடையார் ஒரு சிலரே தன்னைச் சூழ்ந்துவாரர் நிற்ப; குறுவியர் பொடித்த கோலவான் முகத்தள்-குறிய வியர்வை நீர் அரும்பியுள்ள அழகிய ஒளி படைத்த முகத்தையுடைய அச் சித்திராபதி; கடுந்தேர் வீதி காலின் போகி விரைந்து-தேர்களியங்குகின்ற வீதி வழியே காலாலே கடுகிச் சென்று; இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி- இளவரசனாகிய உதயகுமரன் உறைகின்ற இடத்தை அணுகி என்க.

(விளக்கம்) நெஞ்சத்தே சினத்தீ பற்றி எரிதலின் அங்கிருந்து வருகின்ற உயிர்ப்பைப் புகை என்றே குறிப்புவம மாக்கினர். தான் வயப்படுத்த வேண்டிய மன்னிளங் குமரன் பெருந்தகைமைக் கேற்பவே பேச வேண்டுதலின் வஞ்சக் கிளவியாயினும் மாண்புடையவே தேர்ந்து கொள்ளல் வேண்டிற்று. மன்னன் மகன்பாற் செல்ல வேண்டுதலின் திறமுடைய ஒரு சில பணிமகளிரையே தேர்ந்து அவர் தற்சூழச் சென்றாள் என்றவாறு. சித்திராபதி தானும் ஊர்வசி வழித் தோன்றியவள் ஆதலின் அவள் முகம் அந்த முதுமைக் காலத்தும் அழகும் ஒளியும் உடைத்தாகவே இருந்தது. அம் முகத்திற் பொடித்த குறு வியரும் அவட்கு ஓரணியே தந்தது என்பார் குறுவியர் பொடித்த கோலவாள் முகத்தள் என்று விதந்தோதினர். காலிற்போகி- காற்றுப் போல விரைந்து சென்று எனினுமாம்.

உதயகுமரன் இருக்கை வண்ணனை

43-51: அரவ.................ஏத்தி

(இதன் பொருள்) அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும் தருமணல் ஞெமிரிய திரு நாறு ஒரு சிறை-நறுமணத்தினன்றி வேறிடஞ் செல்லுதலில்லாத இயல்புடைய வண்டினங்களும் தேனினங்களுமே இசை முரன்று திரிகின்ற புதுவதாகக் கொணர்ந்து பரப்பிய மணலையுடைய அழகின் பிறப்பிடமாகிய ஒரு பக்கத்திலே; பவழத்தூணத்துப் பசும் பொன் செஞ்சுவர்த் திகழ் ஒளி நித்திலச் சித்திரவிதானத்து விளங்கு ஒளி பரந்த-பவழங்களாலியன்ற தூண்களையும் பசிய பொன்னாலியன்ற சிவந்த சுவரின்கண் விளங்குகின்ற ஒளியும் முத்தினாலியன்ற சித்திரச் செயலமைந்த மேற்கட்டியினின்றும் விளங்குகின்ற ஒளியும் யாண்டும் பரவப்பெற்ற; பளிங்கு செய் மண்டபத்து- பளிங்கினாலே அழகுறச் செய்யப் பெற்றதொரு மண்டபத்தினூடே இடப்பட்ட; துளங்கு மான் ஊர்தித் தூமலர்ப்பள்ளி-ஒளிதவழுகின்ற பொன்னானும் மணியானுஞ் செய்த அரிமான்கள் சுமந்திருக்கின்ற தூய மலர்கள் பரப்பப்பட்ட பள்ளியின் மேல் வெள் திரை விரிந்த வெள்நிறச் சாமரை கொண்டு இருமருங்கும் கோதையர் வீச- வெள்ளிய பாற்கடலின் அலைகள் போல விரிந்து புரள்கின்ற வெண்ணிறமான சாமரைகளைச் செங்கையிலேந்தி அக் கட்டிலின் இரண்டு பக்கத்தேயும் அழகிய மங்கல மகளிர் நின்று வீசாநிற்ப; இருந்தோன் திருந்து அடி பொருந்தி வீற்றிருந்த அரசிளங்குமரனாகிய உதயகுமரன் அழகிய திருவடியிலே வீழ்ந்து வணங்கிச் சித்திராபதி; நின்று ஏத்தி எழுந்து கை கூப்பித் தொழுது நின்று பாராட்ட என்க. 

(விளக்கம்) அரவம்-இசைமுரற்சி. வண்டு தேன் சுரும்பு மிஞிறு தும்பி என்பன வண்டுகளின் வகைகள். அவற்றுள் வண்டும் தேன் என்பனவும் நறுமணங்கமழும் மலர்களிலன்றிப் பிற மலர்களிற் செல்லா என்பது பற்றி அவ் விரண்டனையும் ஓதினர் என்பர். இதனைச் சீவக சிந்தாமணியில்(892) மிஞிற்றில் சுரும்பு சிறத்தலின் அதனை முற்கூறினார்..........இவை எல்லா மணத்திலுஞ் செல்லும்; மதுவுண்டு தேக்கிடுகின்ற வண்டுகாள்! மதுவுண்டு தேக்கிடுகின்ற தேன்காள்! என்க. இவை நல்ல மணத்தே செல்லும் என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் நல்லுரையாலறிக.

தருமணல்- கொணர்ந்து பரப்பிய புதுமணல். ஞெமிர்தல்-பரப்புதல். திரு அழகு. நாறுதல்- தோன்றுதல். இனி, புதுமணல் பரப்பிய இடம் திருப்பாற்கடல்போற் றிகழ்தலின் திருமகள் பிறக்கும் பாற்கடற் பரப்புப் போலுமோரிடத்தே எனினுமாம்.

பவழத்தால் தூணிறுத்திப் பசும்பொன்னாற் சுவரியற்றப் பட்டிருத்தலின் செவ்வொளி திகழா நிற்ப, வெண்ணிற முத்துப் பந்தரின் கீழ் இயற்றப்பட்ட பளிக்கு மண்டபம் என்க. இது மண்டபத்துள்ளமைந்த பள்ளியறை என்க.

துளங்கும் மானூர்தி என்றார் மான்களும் மணியினும் பொன்னினும் இயன்றவை என்பது தோன்ற. துளங்கும்- ஒளிதவழ்கின்ற. மான்-அரிமான், சிங்கம். நான்கு சிங்கங்கள் சுமந்து நிற்பது போன்று அவற்றைக் கால்களாக அமைத்துச் செய்த பள்ளிக் கட்டில் என்க. அரசன் மகன் கட்டிலாதலின் அரிமான் சுமந்த கட்டில் வேண்டிற்று. திரை போல விரிந்த சாமரை என்க. கோதையர் என்றார் அவரது இளமை தோன்ற. இவர் பணி மகளிர். அடி பொருந்தி-அடியில் வீழ்ந்து வணங்கி. அரசரை வணங்குவோர் கொற்றங் கூறி வாழ்த்துதல் மரபு ஆதலின் ஏத்தி என்றது வாழ்த்தி என்றவாறாயிற்று.

உதயகுமரன் சித்திராபதியின்பால் மணிமேகலை நிலை என்னாயிற் றென்று வினாதலும் அவள் விடையும்.

52-63: திருந்து..................வேந்தென

(இதன் பொருள்) திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கவன் சித்திராபதியின் வருகை கண்டு தன் அழகிய பற்கள் தோன்று மளவில் இதழ் திறந்து சிறிதே சிரித்த உதயகுமரன் அவள் முகம் நோக்கி; மாதவி மணிமேகலையுடன் எய்திய தாபதக் கோலம் தவறு இன்றோ என-முதியோய் நின் மகள் மாதவி தன் மகளோடு ஒரு சேர மேற்கொண்ட பிக்குணிக் கோலம் பிழையின்றி நன்கு நடைபெறுகின்றதோ? என்று நாகரிகமாக வினவா நிற்ப; வாழ்க நின் கண்ணி அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப ஒரு தனி ஓங்கிய திருமணிக் காஞ்சி- மாதவி பெறுதலாலே ஒப்பற்ற பெருஞ் சிறப்போடு உயர்ந்து விளங்குகின்ற அழகிய மணிமேகலை தானும் இப்பொழுது; பாடல் சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய நாடகம் விரும்ப நல்நலம் கவினிக்காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது- புலவர்களால் பாடப்பெற்ற இசைப்பாடல்களோடு கூடிய நாடக நூலின்கண் உயர்ந்து திகழ்கின்ற ஆடற்கலை தானே தன்னைப் பெரிதும் விரும்பி வரவேற்கும்படி ஆடல் பாடல் அழகு என்னும் அழகிய மூன்று பண்புகளானும் நன்மைகள் நிரம்பிப் பேரழகெய்தி, காதல் பிறக்கும் செவ்வியையும் விளக்கத்தையும் உடையவளாய் நெஞ்சமாகிய நறுமலர் நன்கு தளையவிழப் பெற்றனள்; உதயகுமரன் என்னும் ஒரு வண்டு உணீஇய விரைவொடு வந்தேன்-அந் நாண் மலரிற் பொதுளிய நறுந்தேனை உதயகுமரன் என்னும் பெயரையுடைய ஒப்பற்ற வண்டு பருக வேண்டும் என்னும் குறிக்கோளுடனேயே அடிச்சி ஈண்டு விரைந்து வந்துளேன்; வாள் வாய் வேந்து-வாள் வென்றி வாய்ந்த வேந்தர் பெருமானே; வியன் பெருமூதூர் பாழ்மம் பறந்தலை அம்பலத்து ஆயது-ஆயினும் அம் மலர் இப்பொழுது மாதவி ஏவலாலே அகன்ற பெரிய பழைய இப் பூம்புகார் நகரத்தே பாழ்பட்ட இடமாகிய நன்காட்டின்கண் உலக வறவியென்னும் அம்பலத்தே சென்றுளது என்றாள் என்க.

(விளக்கம்) ஒரு காரியத்தில் தோல்வியுற்றிருப்பவர் அக் காரியத்துத் துணை செய்தவரைக் கண்ட பொழுது சிறிது நகைப்பது இயல்பு. அவ்வியல்பு தோன்ற உதயகுமரன் எயிறிலங்கு மளவே நக்கனன் என்றார். சித்திராபதி கூற்றின் வெளிப்படைப் பொருளே ஈண்டு உரையில் விரித்து வரையப்பட்டது. சித்திராபதி அங்குள்ள பணி மாந்தர்க்கும் பொருள் விளங்காத வகையில் உதய குமரனுக்கு மட்டுமே பொருள் தெளிவாகப் புலப்படும்படி கூறுகின்ற வித்தகம் பெரிதும் வியக்கத் தகுந்ததாம்.

சித்திராபதி தன் கூற்றின் பொருளை மறைத்தல் வேண்டி அதனையே சிலேடை வகையாலே வேறுவாய்பாட்டாற் கூறுகின்றாள். ஆகவே அவள் கூற்றிற்கு-அரிதாகவே காணப்படுகின்ற சிறப்பையுடைய குருக்கத்தி என்னும் பூங்கொடி ஒன்று அழகிய காஞ்சிப் பூவை மலர்ந்துளது. அங்ஙனம் மலர்ந்துள்ள அவ் வற்புத நிகழ்ச்சியைப் புலவர் பாடுஞ் சிறப்புடைய இப் பாரத கண்டத்திலே அமைந்த நாடுகளில் வாழ்கின்ற மாந்தர் எல்லாம் கண்டுகளிக்க விரும்புமாறு அக் காஞ்சிப்பூத்தானும் நாளரும்பாயிருந்தது; மண முதலிய நலங்களோடே அழகுடையதாய் நன்கு மலர்ந்துளது; அம் மலரிற்றேன் தெய்வத்தன்மையுடையதாக இருத்தல் வேண்டும் ஆகலின் அம் மலரின் திப்பியத் தேனை எங்கள் இறை மகனாகிய வண்டே உண்ண வேண்டும்; என்று கருதி இவ் வற்புத நிகழ்ச்சியைக் கூறவே யான் விரைந்து வந்தேன் என்பதே அவள் ஆண்டுள்ளோர் அறியும்படி கூறிய செய்தியாம்.

இதன் கண்-குருகு-குருக்கத்தி; மாதவி. கருவுயிர்ப்ப-மலரைத் தோற்றுவிக்க; ஈன. மணிக்காஞ்சி-அழகிய காஞ்சி மரம்(மாதவி மகள்) மணிமேகலை என்பவள். பாடல்-இசைப் பாடல்-இயல் பாடல்; பரதம்- பரதகண்டம்; பரதநூல். நாடகம்-கூத்து-நாட்டில் வாழ்வோர். நன்னலம்- நல்ல அழகு; அழகிய பெண்மை நலம். காமர் செவ்வி-காதல் தோன்றும் செவ்வி; அழகிய செவ்வி. கடிமலர் அவிழ்தல்- மணமுடைய மலர் மலர்தல். திருமணம் புரிதற்கியன்ற பூப்புப் பருவம் அடைதல்.

மணிமேகலையை மலராக உருவகித்தமைக்கும் அவளை மலராகவே கூறியதற்கும் உதயகுமரனை வண்டாகக் கூறியது பொருந்துதலும் உணர்க.

உதயகுமரன் அவள்பால் இடங்கழி காமமுடையாள் என்பதனை அவள் முன்பே அறிவாள் ஆதலின் அவள் உலகவறவியில் இருக்கும் பொழுதே சென்று கைப்பற்றுக, இன்றேல் வேறிடங்கட்குப் போதலும் கூடும் என்று அவனை ஊக்குவாள் யான்  விரைவொடு வந்தேன் என்றாள். முன்போல அவள் பகவனத்தாணையால் பன்மரம் பூக்கும் மலர் வனத்தில் இல்லை, இப்பொழுது அச்சஞ் சிறிதுமின்றிக் கைப்பற்றி வரலாம் என்பாள் அது பாழ்ம் பறந்தலை அம்பலத்தாயது என்றாள். நீ வேந்தன் என்பாள் வாய்வாள் வேந்தே என்பாள் வாய்வாள் வேந்தே என்றாள். இம்முறை நீ வெற்றியொடு மீள்குவை என்பாள் நின் கண்ணி வாழ்க! என்றாள்.

மணிமேகலையின்பால் காதல் கொண்டு கைகூடாமையால் ஏக்கற்றிருக்கும் உதயகுமரனின் உள்ளம்

63-80: ஓங்கிய...........முன்னர்

(இதன் பொருள்) ஓங்கிய பவுவத்து உடைகலப்பட்டோன் வான் புணை பெற்றென-அலைகள் உயர்ந்த பெரிய கடலின்கண் தான் ஊர்ந்து வந்த மரக்கலம் உடையக் கடலின் மூழ்கி உயிர் துறக்கும் நிலையை யடைந்தவொருவன் அவ்விடத்திலேயே தான் உய்ந்து கரையை எய்துதற் கேற்ற சிறப்புடைய தெப்பத்தைக் கண்டு அதனைத் தவறவிடாமல் கைப்பற்றுதல் போன்று; மணிமேகலையின்பால் தனக்குண்டான காமக்கடலை நீந்த மாட்டாது உயிர் துறக்கும் நிலையிலிருந்த உதயகுமரன் அச் சித்திராபதியின் வாயிலாய் இனி மணிமேகலையைக் கைப்பற்றி உய்யலாம் போலும் என்னும் உறுதி கொண்ட உள்ளத்தவனாய்; மற்று அவட்கு உரைப்போன்-அச் சித்திராபதிக்குக் கூறுவான்!; இஃது மேவிய பளிங்கின் விருந்தின் பாவை ஓவியச் செய்தி என்று ஒழிவேன் முன்னர்-மூதாட்டியே கேள்! பளிக்கறையினுள்ளிருந்து புறத்தே தோற்றிய மணிமேகலையின் உருவத்தை யான் கண்ணுற்ற பொழுது இவ்வுருவம் அதற்குத் தகந்த பளிங்கின் கண் ஓவியப் புலமைமிக்கோன் ஒரு வித்தகன் தன்கைத்திறம் தோன்ற இதுகாறும் யாரானும் வரையப்படாததொரு புதுமையோடு வரையப்பட்டதொரு பெண்ணோவியம் என்றே எண்ணிப் பெரிதும் அவ்வோவியன் தன்னுள்ளத்தே கருதிய அழகின் சிறப்பினை யானும் கருதிப்பார்த்து அஃது ஓர் ஓவியச் செயலே என்று அவ்விடத்தினின்றும் புறப்படுகின்ற பொழுது என் கண் முன்னரே; காந்தளம் செங்கைத் தளைபிணி விடா ஏந்து இள வனமுலை இறை நெரித்ததூஉம்-அங்ஙனம் கருதப்பட்டு நின்ற அம் மணிமேகலையின் செங்காந்தள் மலர் போன்ற சிவந்த கைகள் விரலாலே ஒன்றனோடொன்று பிணித்துக் கொண்ட பிணிப்பினை விடாவாய் அவளுடைய அணந்த இளைய அழகிய முலையிரண்டனையும் ஒரு சேரச் சிறிது நெரித்த செய்கையும்; அன்றியும், ஒளிர்பவளத்துள் ஒத்து ஒளி சிறந்த முத்து கூர்த்து அன்ன முள் எயிற்று அமுதம் அருந்து ஏமாந்த ஆர் உயிர் தளர்ப்ப-அவளுடைய ஒளியுடைய பவளம் போன்று சிவந்த திருவாயினுள்ளே தம்முள் நிரல்பட்டு ஒத்து வெள்ளொளியினாலே சிறப்புற்ற முத்துக்கள் தமக்கியல்பான வட்ட வடிவத்தைப் பெறாமல் கூர்த்திருந்தாற்போன்று கூரிய அவளதுவாலெயிற்றின் ஊறுகின்ற அமிழ்தினும் இனிய நீரைப் பருகுதற்கு ஏக்கற்று நிற்கின்ற உய்தற்கரிய என் உயிர் தழைக்கும்படி; விருந்தின் மூரல் அரும்பியதூஉம்-புதுமையுடையதொரு புன்முறுவல் பூத்த செய்கையும் ஆகிய இவற்றைக் கண்டு; ஆய் இதழ்க்குவளை மலர் புறத்து ஓட்டிக் காய் வேல் வென்ற கருங்கவல் நெடுங்கண்- அழகிய இதழையுடைய கருங்குவளைப் பூவை அழகாலே வென்று புறங் கொடுத்தோடச் செய்து பின்னரும் பகைவர் உரங்கிழித்து வருத்தி அவர்தங் குருதியாற் சிவந்த வேற்படையையும் வென்ற கரிய கயல்மீன் போன்ற நெடிய அவளுடைய கண்கள் தாமே; ஆயிழை தனக்கு அறிவு பிறிது ஆகியது எனச் செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும்- நம்மையுடைய மணிமேகலைக்கு இப்பொழுது அறிவு வேறுபட்டது காண் என்று மறைவாக அறிவுறுத்தற்கு அவளுடைய செவிமருங்கே ஓடி மீண்டும் மற்றொரு செவிக்குக் கூறுதற்குச் சென்றதொரு செய்கையும் ஆகிய இச் செயல்களாலே; பளிங்கு புறத்து எறிந்த பவளப்பாவை- பண்டு அப் பளிக்கறையானது தன்னகத்திருந்து புறத்தே வீசிய பவளப்பாவை போல்வாளாகிய அம் மணிமேகலை; உயிர்க்காப்பு இட்டு என் உளம் கொண்டு ஒளித்தாள் என்று இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர்-என்னுடைய ஆருயிர் உடம்பை விட்டுப் போகாமைக்கும் ஒரு பாதுகாப்பினைச் செய்து வைத்து என்னுடைய நெஞ்சத்தை மட்டும் கவர்ந்து கொண்டு கரந்தொழிந்தாள் என்று செயலறவு கொண்டு, அற்றை நாளிரவு இப் பள்ளிக் கட்டிலின் மேல் எப்படியும் இவ்விரவு கழிந்தால் அவள் என்கையகத் தாள் ஆகுவள் என்னும் நம்பிக்கையோடு துயிலின்றித் தனித்துச் சிந்தனையிலாழ்ந்திருந்தேனாக! அப்பொழுது என் கண் முன்னர்; என்க.

(விளக்கம்) மணிமேகலையை மன்னவன் மகன் மலர்வனத்தே சென்று கைப்பற்றிச் சென்றவன் யாண்டும் அவளைக் காணப் பெறானாய் ஆங்கொருசார் சுதமதியை வினவி நின்ற பொழுது பளிக்கறையுட் புக்கிருந்த மணிமேகலையுருவம் புறத்தே தெரிந்ததனை ஓவியச் செய்தி என்றே கருதி அவ்வோவியத்தின் அழகிலீடுபட்டு அதனைக் கூர்ந்து நோக்கி அதனை இயற்றிய ஓவியனுடைய கலையுள்ளத்தைப் பாராட்டி மீளக் கருதியபொழுது உள்ளிருந்த மணிமேகலையின் பால் நிகழ்ந்த மெய்ப்பாடுகள் ஈண்டு அவனாற் சித்தராபதிக்குக் கூறப்படுகின்றன.

மணிமேகலா தெய்வம் எடுத்துப் போனமையால் அவள் நிலையறியாத உதய குமரன் அற்றை நாள் இரவு பெருந்துய ரெய்தி, கங்குல் கழியிலென் கையகத்தாள் என்றிருந்தவன் மற்றை நாள் தொடங்கி அற்றை நாள்காறும் அவளைக் காணப் பெரிதும் முயன்றும் காணப் பெறாமையாலே இனித் தன் உயிர்க்கு உய்தியில்லை போலும் என்று துயர்க் கடலுள் மூழ்கி யிருந்தான் என்பது தோன்ற இப் புலவர் பெருமான் இவனை உடைகலப் பட்டோனாகவும் சித்திராபதியை வான்புணையாகவும் ஓதும் நுண்மை யுணர்க.

இனி, அம் மணிமேகலை, இளவன முலை நெரித்ததும் மூரல் அரும்பியதும் கண்ணினது மருட்சியும் அவள் தன்பால் தீராக்காதலுடையாள் என்பதை நன்கு அறிவித்து விட்டமையின், அதுபற்றி அவன் உயிர் வாழ்கின்றான் ஆதலின் அச் செயல்களால் என் உயிர் போகாமல் காப்பிட்டு வைத்தாள் என்றான். மீண்டும் தன் னெஞ்சத்தை முழுதும் கவர்ந்து கொண்டவை தாமும் அச் செயல்களே யாதலால் உயிர்க்குக் காப்பிட்டு என்னுடலில் நிறுத்தி அதற்குத் துணையாகிய உள்ளத்தைக் கவர்ந்து கொண்டு போயினள் என்கின்றான். ஈண்டு

மணிமேகலை மூரல் அரும்பியதும் அவள் கண்களின் மிளிர்ச்சியும் பிறவும் அவள் உதய குமரனைப் பெரிதும் காதலிக்கின்றனள் என்பதற்குக் குறிப்பறிவுறுத்துவனவாகவும், அவள் அவனாற் பற்றற்கரியளானமையால் மீண்டும் அச் செயல்களே அவனுக்குப் படர்மெலிந்திரங்கற்குக் காரணமாகவும் ஆயபடியறிக.

இனி மணிமேகலை நம்பாற்படுவாள் என்னுங் கருத்தாலே அவனுடலில் உயிர் தங்குவதாயிற்று. வழிநாள் முதற் கொண்டு அற்றை நாள் காறும் அவளைப் பற்றிய செய்தி யாதொன்றும் அறியப்படாமையால் காமம் என்னும் கரை காணாத கடலைக் கையானீந்திக் கொண்டு இனி உய்வேனோ மாட்டேனோ என்னும் ஐயுறவோ டிருந்தவனுக்குச் சித்திராபதி வான்புணையாயினள். ஆயவட்கு மணிமேகலையின் மனநிலை இன்னது என இவ்விளவரசன் இயம்புதல் இன்றியமையாதாயிற்று. என்னை? மணிமேகலை உடன் படுவளோ படாளோ என்னும் ஐயம் அவட்கிருத்தல் இயல்பாகலின். அது தீர்தற்கு இது கூறினன் என்க.

இனி மணிமேகலை உலகவறவி புக்கமையால் கைப்பற்றுதற்கு எளியளாயினும் அவளைக் கைப்பற்றுதற்குத் தடையாயிருக்கின்றதோரச் சத்தை அவ்வரசிளங் குமரன் இனிச் சித்திராபதிக்குக் கூறுகின்றனன்.

இளவரசனின் எய்யா மையலும் சித்திராபதியின் சிறுநகையும்

81-89: பொன்றிகழ்.........செப்பின்

(இதன் பொருள்) பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டி- பொள்ளெனப் பொன் போன்று விளங்குகின்ற திருமேனியையுடைய ஒரு நங்கை வந்து நின்று எனக்குச் செங்கோன்மையினின்றும் பிறழ்வதனாலே மன்னர்க்குண்டாகும் இழிதகைமையை எடுத்துக்காட்டி; அங்கு அருந்தவம் புரிந்த அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றனள்-ஆங்குப் பவுத்தருடைய தவப்பள்ளியிற் சேர்ந்து ஆற்றுதற்கரிய தவத்தை மேற்கொண்டிருக்கின்ற மணிமேகலை திறத்திலே நீ நினைக்கின்ற நினைவுகளை மறந்தொழிக என்று கூறி அப்பொழுதே மறைந்தொழிந்தனள் காண்; தெய்வம் கொல்லோ திப்பியம் கொல்லோ-அங்ஙனம் தோன்றி எனக்கு அறிவுரை கூறியது யாதேனும் ஒரு தெய்வமோ? அல்லது, அம் மணிமேகலைக் கெய்திய தெய்வத் தன்மையாலே நிகழ்ந்ததோர் அற்புத நிகழ்ச்சியேயோ!!; யான் எய்யா மையலேன் என்று அவன் சொல-யான் இற்றை நாள் காறும் அந் நிகழ்ச்சிக்குரிய காரணம் யாதொன்றும் அறியமாட்டாமல் மயங்கியே இருக்கின்றேன் காண்!; என்று அவ்வரசிளங்குமரன் கூற; சித்திராபதி தான் சிறு நகை எய்தி அரசிளங்குரிசில் அத்திறம் விடுவாய்-அது கேட்ட சித்திராபதி புன்முறுவல் பூத்து மன்னவன் மகனாகிய எங்கள் இளவரசே! அந் நிகழ்ச்சி தலைக்கீடாகச் சிறிதும் கவலாதே கொள்!; தேவர்க்கு ஆயினும் காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன செப்பின் சிலவோ- மக்களாகிய நம்மனோர் கிடக்கத் தேர்களுக்குக் கூடக்காமமாகிய கள்ளுண்டு களித்தற்குக் காரணமான இவ்விளையாட்டிடையே உண்டாகும் இத்தகைய மயக்கக் காட்சிகள் ஒரு சிலவோ ஆயிரம் நிகழ்தலுண்டு காண்! என்றாள் என்க.

(விளக்கம்) பொன் திகழ் மேனி ஒருத்தி என்றான் அவள் இன்னள் என்று அறியாமையினாலே. ஈண்டு உதயகுமரன் கூறுவது-அவன் மணிமேகலையை மலர்வனத்திலே கைப்பற்ற முயன்று செவ்வி பெறாமல் வறிதே மீண்ட. அற்றை நாள் இரவு மணிமேகலா தெய்வம் கங்குல் கழியில் என் கையைத்தாள் என எண்ணமிட்டுக் கொண்டு பொங்கு மெல்லமளியிற் பொருந்தாது உறுதுய ரெய்தி இருந்தோன் முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே! கோல் நிலை திரிந்திடின் கோணிலை திரியும்.........அவத்திறம் ஒழிக. என்றறிவுறுத்து மறைந்த நிகழ்ச்சியை (துயிலெழுப்பிய காதை-5-14)

ஈண்டு அவன் பொன்திகழ் ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த அங்கவடன் திறம் அயர்ப்பா யென்றனள் தெய்வம் கொல்லோ திப்பியம் கொல்லோ எய்யா மையலேன் என்று சித்திராபதிக்குக் கூறியது. இங்ஙனமாதலின் அவளைக் காமுறாது விடுவதோ அன்றிக் காமுற்று மீண்டும் கைப்பற்ற முயல்வதோ இரண்டனுள் யாது செய்யற்பாலது என்று துணியாமைக்குக் காரணமான மயக்கத்தோடிருக்கின்றேன் என்பது குறிப்பாகத் தோன்றும்படி கூறியதாம். என்னை? அவன்றானும்

..................நன்னுதன் மடந்தையர்
மடங்கெழு நோக்கின் மதமுகம் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத் திளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா உள்ளத் தோடு மாயினும்
ஒழுக்கொடு புணர்ந்த     (சிலப்-23; 35-40)

விழுக்குடிப் பிறப்புடையோன் ஆதலானும், அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் ஆதலானும் அப் பெரியோன் தனது அச்சத்தையே இதனால் சித்திராபதிக்குப் பொதுவாகச் சொல்லிக் காட்டுகின்றான் என்று கொள்க.

ஆயினும் சித்திராபதி தனது சிறு நகையாலேயே அவ் வச்சத்திற் செம்பாதியைத் தவிர்த்து எஞ்சிய பாதியைச் சொல்லாலே தவிர்த்து விடுகின்ற அவள் சொற்றிறம் பெரிதும் வியத்தற்பாலதாம்.

இப்படி ஆயிரம் ஆயிரம் மயக்கக் காட்சிகள் காமக்கள்ளாட்டாடுவாரிடையே காணப்படும். இத்தகைய மயக்கக் காட்சிகள் தேவர்களுக்குக் கூட ஏற்படும் ஆதலின் அத்திறம் விடுவாய் அரசிளங்குரிசில் என இம் முது கணிகை அவ்வச்சத்தை மிகமிக எளிதாகவே பேசி எடுத்தெறிந்து தவிர்க்கும் இவள் நுண்ணறிவை எண்ணி எண்ணி இறும்பூது கொள்கின்றோம்.

ஈண்டு, இராவணன் காம மயக்க முதிர்ச்சியாலே சீதையை உருவெளித் தோற்றமாக உள்ளத்திலே படைத்துக் கொண்டு சூர்ப்பனகையை அழைத்து இந் நின்றவளாங் கொல் நீ இயம்பிய சீதை? என்று வினவுதலும் அவள் தானும் காமக்கள்ளாட்டிடை மயக்குற்று இராமனை உருவெளித் தோற்றத்தே காண்பவள் சூழ்நிலையையும் மறந்து போய் வந்தான் இவனாகும் அவ் வல்வில் இராமன் என்று விடை கூறுதலும் அது கேட்ட இராவணன் அவளைச் சினந்து மண்பாலவரோ நம்மை மாயை விளைப்பர்! பேதாய்! நின் விடைக்குப் பொருள் என்னென்றுரப்புதலும் அதற்கவள்

ஊன்றும் உணர்வு அப்புறம் ஒன்றினும் ஓடலின்றி
ஆன்று முளதாம் நெடிதுஆசை கனற்ற நின்றாய்க்கு
ஏன்றுன் எதிரே விழிநோக்கும் இடங்கள் தோறும்
தோன்றும் அனையாள் இது தொன்னெறித் தாகும்

என்றும் இன்னோரன்ன காமக்கள்ளாட்டிடை மயக்குற்றனவாகிய மருட்காட்சிகள் என்றும் அறிவுறுத்தல் ஒப்புநோக்கற் பாலதாம்.

சித்திராபதி அவன் போதைமைபற்றி ஈண்டுச் சிறுநகை தோற்றுவிக்கின்றாள். இந் நகைப்பு வாய்மையன்று நடிப்பு.

சிலவோ என்புழி ஓகாரம் எதிர்மறையாய் அதன் மறுதலைப் பொருளை வற்புறுத்து நின்றது. அஃதாவது சிலவல்ல எண்ணிறந்தனவுள என்றவாறு. உதயகுமரன் மணிமேகலை மூரலரும்பியமையால் என் ஆருயிர் தளிர்த்த தென்றமையால் அவனைக் காமக் கள்ளாடினானாகவே கூறினள் என்க.

காமக் கள்ளாட்டிடை மயங்கிய தேவர்க்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்

90-97: மாதவன்...............குருசில்

(இதன் பொருள்) மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி ஆயிரஞ் செங்கண் அமரர் கோன் பெற்றதும்- பெரிய தவவொழுக்கத்தே நின்ற கவுதமமுனிவருடைய பத்தினியாகிய அகலிகையின் பால் காமத்தால் மயக்குற்றுப் பற்பல நாள் மாபெருந் துன்பம் எய்தி ஆயிரம் சிவந்த கண்களை அமரர் கோமானாகிய இந்திரன் எய்திய செய்தியும்; மேருக்குன்றத்து ஊரு நீர்ச் சரவணத்து அருந்திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய பெரும் பெயர்ப் பெண்டிர் பின்பு உளம் போக்கிய அங்கி மனையாள் மேருமலையுச்சியினின்று ஊர்ந்து வருகின்ற அருவி நீர் நிரம்பிய சரவணப் பொய்கைக் கரையிடத்தே தவம் புரிபவராகிய அரிய ஆற்றலமைந்த முனிவர் எழுவருக்கும் பொருந்திய வாழ்க்கைத் துணைவியராகிய பெரிய புகழையுடைய பத்தினிப் பெண்டிரின்பால் காமுற்றுத் தன் நெஞ்சத்தை அவர்பால் போகவிட்டுப் பெரிதும் துன்பமுற்ற நெருப்புக் கடவுளின் மனைவியாகிய சுவாகை என்னும் தெய்வமகள்; அவண்-தன் கணவன் காம நோயால் கடுந்துயரெய்திய அவ்விடத்தே; தங்கா வேட்கை தனை-அத்தீக் கடவுளின் அறிவின் எல்லையிலே தங்காமல் மாற்றார் மனைவியர் பாற் சென்ற அவனது காமவேட்கையை; அவர் அவர் வடிவாய் தணித்ததூஉம்-அவ்வேழு முனிவர் மனைவிமாருள் ஒவ்வொருவர் வடிவத்தையும் தானே எடுத்துக் கொண்டு வந்து அவனைப் புணர்ந்து ஆற்றுவித்து அவனை உய்வித்த செய்தியும் ஆகிய தேவர்க்கும் எய்திய காமக் கள்ளாட்டு மயக்கச் செய்திகளை; வாள் திறல் குரிசில்- வாட் போரிற் பேராற்றல் வாய்ந்த இளவரசனே நீ; கேட்டும் அறிதியோ- நீ தானும் கற்றறிந்திருப்பாய் இல்லையாகிற் கேட்கும் அறிந்திருப்பாய் அல்லையோ! என்றாள் என்க.

(விளக்கம்) மாதவன்- கவுதம முனிவன். மடந்தை-அகலிகை. மடந்தையை நுகரும் பொருட்டு என்க. ஆயிரஞ் செங்கண் என்றது இடக்கரடக்கு.

ஊருநீர்-ஊர்ந்துவரும் அருவிநீர் சரவணம்- நாணற்புதர் சூழ்ந்த தொரு நீர்நிலை. சரவணத்துக் கரையிடத்தே தவஞ் செய்யும் முனிவர் என்றவாறு. அணங்கு- பெண்டு என்னும் பொருட்டாய் நின்றது. பெரும் பெயர்-புகழ். அங்கி- நெருப்புக்கடவுள். மனையாள் என்றது அவன் மனைவியாகிய சுவாகை என்பாளை. அவரவர் வடிவு-அம் முனிவர் பத்தினிமார் ஒவ்வொருவருடைய வடிவத்தையும் என்க. ஈண்டுக் கூறப்படும் இக்கதை, (அங்கி மனையாள் அம் முனிவர் மனைவிமார் வடிவத்தை எடுத்துக் கொண்டு வந்து ஒவ்வொரமையத்து அங்கியின் காம வேட்கையைத் தணித்த கதை) வியாச பாரதத்தில் ஆரணிய பருவத்தில் 224-6 ஆம் அத்தியாயத்தில் காணப்படுகின்ற தென்பர். 

தேவர்கள் தாமும் காமக் கள்ளாட்டிடை மயக்குற்று முறை பிறழ்ந்தொழுகினர். நீ மணிமேகலையின்பாற் கொண்ட காமம் நின் செங்கோன்மைக்குப் பொருந்தியதொரு காமமே; பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றி இவ்வொழுக்கம் செங்கோன்மைக்குப் பொருந்தாது என்பதுபட நினக்குச் செங்கோல் காட்டினளாகக் கண்டதாகக் கூறிய காட்சியும் மயக்கக் காட்சியே காண் என்று அவனுக்கு இனிச் சித்திராபதி செங்கோல் காட்டுகின்றாள்.

சித்திராபதி மணிமேகலையை உதயகுமரன் கைப்பற்றி வருதல் செங்கோன் முறைமையே யாம் எனத் தேற்றுரை பகர்தல்

68-102: கன்னி................அல்லள்

(இதன் பொருள்)  கன்னிக் காவலும் கடியிற் காவலும் தன்உறு கணவன் சாவுறின் நாவலும் நிறையின் காத்து- மன்னவன் மகனே! இடையிருள் யாமத்து நின் முன்னர்ப் பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டி அவள் திறம் அயர்ப்பாய் என்று கூறி மறைந்தனள் என்குதி இதுவும் காம மயக்கத்தே தோன்றியதொரு மருட்காட்சியே காண், எற்றாலெனின், நின்னாற் காமுறப்படுகின்ற மணிமேகலை யார்? அவள்தான் கன்னிமைப் பருவத்தினும் அடுத்துவருகின்ற திருமணத்தின் பின்னிகழும் கற்பொழுக்கந் தலைநிற்கும் நெடிய பருவத்தினும் ஓரோஓ வழித் தம்மைப் பொருந்திய கணவர்க்குச் சாக்காடு வந்துற்றக்கால் பின்னிகழுகின்ற கைம்மை கூர் பருவத்தினும்; நிறையின் காத்து-தமது நெஞ்சத்தைத் தங்குடிக்குரிய பண்பாகிய நிறை என்னும் ஆற்றலாலே புறம் போகாமற் காவல் செய்து; பிறர் பிறர் காணாது- தம்மழகைப் பிற ஆடவர் கண்டு காமுறாவண்ணம் கரந்தொழுகி; தெய்வமும் பேணாது- தங்கணவரைத் தொழுதலன்றித் தெய்வங்களையும் பேணித் தொழாமல் வாழ்தற்குரிய; பெண்டிர்தம் குடியில் பிறந்தாள் அல்லள்- பத்தினிப் பெண்டிருடைய உயர்ந்த குடியிலே பிறந்த குலமகள் அல்லளே; என்றாள் என்க.

(விளக்கம்) கன்னி- பெதும்பைப்பருவம் எய்தியும் திருமணம் நிகழப் பெறாத இளம் பெண். கடி- திருமணம். கடியிற் காவலாவது- கணவனோடு இல்லறம் நிகழ்த்தும் பருவம். சாவுறின் என்றது கணவன் மணநாள் தொடங்கி எந்த நாளினும் சாதலுண்டாகலின் ஊழ்வினை காரணமான அவ்வாறு மிக்க இளமையிலேயே கணவனுக்குச் சாவு நேர்ந்துழி என்பதுபட நின்றது. என்னை? கணவன் நூறாண்டு வாழ்ந்து சாவுறுமிடத்து மனைவிக்குக் கற்புக் காவல் கூற வேண்டாமையின் சாவுறின் என்றது கணவன் இளம்பருவத்திலேயே இறந்துபடின் என்றவாறே யாம் என்க.

நிறையாலல்லது கற்புப் பிறிதோராற்றானும் காக்கப் படுவதல்லாமையின் நிறையிற் காத்து என்று கருவியையும் விதந்தோதினள் ஈண்டு,

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை      (57)

எனவரும் திருக்குறளையும் கொண்டோ னல்லது தெய்வம் பேணாப் பெண்டிர் என்புழி,

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனம் பெய்யு மழை

எனவரும் திருக்குறளையும் நினைவு கூர்க.                (55)

இதுவுமது

103-111: நாடவர்....................என்றலும்

(இதன் பொருள்) நாடு அவர் காண நல் அரங்கு ஏறி-நாட்டில் வாழும் காமுகர் எல்லாம் கண்டு களிக்கும்படி இலக்கண முறைப்படி அமைக்கப் பெற்ற அழகிய நாடக அரங்கின் கண் நூல் விதித்த முறையாலே ஏறி; ஆடலும் பாடலும் அழகும் காட்டி-தாம் பயின்றுள்ள கூத்தின் சிறப்பையும் பாடல்களின் இனிமையையும் தமக்கியற்கையாகவும் செயற்கையாகவும் எய்திய அழகின் சிறப்பினையும் நன்கு தெரிவுறக் காட்டு மாற்றாலே; சுருப்பு நாண் கருப்புவில் அருப்புக்கணை தூவ-அக் காமுகர் நெஞ்சத்திலே காமவேள் தன் வண்டுகளாலியன்ற நாணைத் தனது கரும்பாகிய வில்லிலேற்றித் தனக்கியன்ற மலரம்புகளை எய்து நெகிழ்விக்கப் பெற்றனவாகிய; கண்டோர் நெஞ்சம்- தம்மைக் கண்ட அக் காமுகருடைய நெஞ்சமாகிய மீன்களை; செருக்கயல் நெடு கண் சுருக்கு வலைப்படுத்துக் கொண்டு- ஒன்றனோடொன்று எதிர்ந்து போர் புரிகின்ற இரண்டுகயற் கொண்டைகளை யொத்த நெடிய தம் கண்ணாகிய சுருக்கு வலையை வீசி அகப்படுத்துச் சுருக்கி எடுத்துக்கொண்டு சென்று; அகம் புக்கு-தம்மில்லத்தே புகுந்து, பண் தேர் மொழியில் பல பயன் வாங்கி- தம்முடைய பண்பேன்றினினம செய்யும் மொழிகளாலே அவரை வயப்படுத்து அவரிடத்தே தாம் பெறக்கிடந்த பயன்கள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்ட பின்னர்; வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை-வறும் பூத்துறக்கும் வண்டு போல அவரைத் துறந்துவிடுகின்ற கொள்ளைச் செயலையுடைய பரத்தை மகளிரைத் தாமும்; பான்மையின் பிணித்து-அவர்தம் குடிக்கியன்ற பண்போடு ஒழுகும்படி கட்டுப்பாடு செய்து; படிற்று உரை அடக்குதல்-அவர் கூறுகின்ற மாயப் பொய்ம் மொழிகள் செல்லாதன வாகும்படி அடக்கிவைத்தல்; குமரற்குக் கோல் முறை அன்றோ அரசிளங்குமரனாகிய நினக்கே யுரிய செங்கோல் முறைமை யாகாதோ? என்றாள் என்க.

(விளக்கம்) நாட்டவர் என உயிர் முதல்வரு மொழியாயின் நெடிற்றொடர் இரட்டுதலே பெரும்பான்மை, சிறுபான்மை இரட்டாது புணர்தலும் உண்மையின் நாடவர் எனப் புணர்ந்தது; காடக மிறந்தார்க்கே யோடுமென் மனனே என்புழிப் போல.

நாட்டில் வாழும் காமுக ரெல்லாம் காண என்றவாறு. பத்தினி மகளிர் பிறர் பிறர்க் காணாது வாழ்வர் என்று முற்கூறியதும் நினைக. நல்லரங்கு என்றது. நூன் முறைப்படி யமைந்த ஆடலரங்கினை. அஃதாவது:-ஏழிகோ லகலத்தினையும் எண்கோல் நீளத்தினையும் ஒரு கோல் உயரத்தினையும் வாய்தல் இரண்டனையும் உடைய அரங்கென்ப.( சிலப்-3:101-5)

ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையில் நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த கலைகள் பிறவும் பலவுள வேனும் அவற்றுள்ளும் இவையே தலை சிறந்து திகழ்தல் பற்றி ஆடலும் பாடலும் அழகும் காட்டி என்று இம் மூன்றனையே விதந் தெடுத்தோதினள்; ஆசிரியர் இளங்கோவடிகளார் தாமும் கணிகையரை எண்ணென் கலையோர், எனவும்,(14:166) எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற..............மடந்தையர் (22-13-8-26) எனவும் ஓதுவரேனும் அவற்றுள்ளும் இவை சிறந்தமைபற்றி, ஆடலும் பாடலும் அழகு மென்றீக் கூறிய மூன்றின் ஒன்று குறை படாமல் என விதந்தெடுத் தோதினமையு முணர்க.

சுருப்பு நாண், கருப்புவில், அருப்புக் கணை என்பன மென்றொடர் வன்றொடராயின அல்வழிப் புணர்ச்சியாகலின், தூவ என்னும் வினைக்குத் தகுதியால் காமவேள் என்னும் வினைமுதல் வருவித்தோதுக சுருக்கு வலை- விரித்து வீசப்பட்டு இழுக்குங்கால் தானே சுருங்கிக் கொள்ளும் ஒருவகை வலை. கண்வலை என்க. வலை என்றமையால் நெஞ்சமாகிய மினைப் படுத்து என்க. பண்தேர் என்புழி தேர் உவமவுருபின் பொருட்டு. பல பயன்- பலவகைப்பட்ட செல்வங்கள்.

நறுந்தாதுண்டு நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டு போல் குவம் என இவள் இக் காதையிலே கூறினள் ஆதலின் அது நம்மனோர் நினைவின்கண் நிற்கும் என்னுங் கருத்தால் ஈண்டு வாளாது வண்டிற்றுறக்கும் கொண்டி மகளிர்- என்றார். கொண்டி மகளிர்- என்றது, பட்டி மகளிர்; வேசையர் பான்மையிற் பிணித்து என்றது அவர் குடி யொழுக்கம்பற்றி நடக்கும்படி கட்டுப்படுத்தி வைத்து என்றவாறு. படிற்றுரை- வஞ்சகமொழி; பொய்யுமாம், ஈண்டு மணிமேகலை துறவுக்கோலம் பூண்டு அதற்கேற்பப் பேசும் பேச்செல்லாம் வறும் பொய்ம்மொழி. அங்ஙனம் பொய் பேசி மக்களை வஞ்சியாமற் செய்வது செங்கோன் முறையே என்பாள் கோன் முறையன்றோ குமரற்கு என்றாள். குமரற்கு என்றது முன்னிலைப் புறமொழி. கீழ்மக்கள் மேன்மக்களோடு உரையாடுங்கால் இங்ஙனம் முன்னிலைப்புறமொழியாகக் கூறுதல் ஓர் ஒழுக்கமாம். இதனை இற்றை நாளினும் உலகியலில் காணலாம்.

ஈண்டு, உதயகுமரன் அறவோனாதலின் அவன் மணிமேகலையை அணுகும்பொழுது அவள் பேசும் துறவோர் மொழிகளைக் கேட்டு அஞ்சி வாளாது மீளாமைப் பொருட்டுக் கொண்டி மகளிரைப் பான்மையிற் பிணித்துப் படிற்றுரை அடக்குதல் உனக்குரிய அறமே என்கின்றாள்.

மேலும், நீ பொன்றிகழ் மேனி யொருத்தி தோன்றி நீ அவள் திறம் அயர்ப்பாய் என்று கூறி மறைந்தது என்கின்றாய், அது தெய்வமும் அன்று அம்மொழி திப்பயமும் அன்று, அக் காட்சி வறிய உருவெளித்தோற்றம் போல்வதொரு மருட்காட்சி என்று இதனால் அவனைத் திறம்படத் தேற்றினாளுமாதலறிக.

உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து மணிமேகலையைக் கைப்பற்றி வருதற்கு உலகவறவி நோக்கி விரைதல்

112-118: உதய..............காண்டலும்

(இதன் பொருள்) உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து விரைபரி நெடுந்தேர் மேல் சென்று ஏறி- சித்திராபதியின் திறமிக்க தேற்றுரைகளைக் கேட்ட உதயகுமரனுடைய உள்ளம் தன்னிலையினின்று அவள் காட்டிய நெறியின் மேலதாய்த் திரிந்து விட்டமையாலே அவள் கூறியபடியே மணிமேகலையைக் கைப்பற்றி அவள் கூறும் படிற்றுரைகள் அடக்கி அவள் குடிக்கியன்ற வொழுக்கத்தே நிறுத்தத் துணிந்து அப்பொழுதே விரைந்து செல்லும் இயல்புடைய குதிரைகளைப் பூட்டி நிறுத்தப்பட்ட தனது நெடிய தேரின் மேற் சென்று ஏறி; ஆயிழை இருந்த அம்பலம் எய்தி- விரைந்து போய் மணிமேகலை இருந்த உலக அறவி என்னும் ஊரம்பலத்தே சென்று அவ்விடத்தே; காடு அமர் செல்வி கடிப் பசி களைய -காட்டிலே வீற்றிருக்கின்ற கொற்றவையாகிய காளி தன்னருள் நீழலிலே வாழுகின்ற கூளிகளுக்குற்ற பசிப் பிணியை அகற்றுதற் பொருட்டு; ஓடு கைக் கொண்டு நின்று ஊட்டுகள் போல-ஒரு திருவோட்டினைக் கைக் கொண்டு அவற்றினிடைய நின்று தன்தருளாலே அவ்வோட்டிலே கொடுக்கக் கொடுக்கக் குறையாமல் சுரக்கின்ற உணவினை அக் கூளிகட்கு வழங்குகின்ற அவ்விறைவியேபோற் றோற்றந்தந்து; தீப்பசி மாக்கட்குச் செழுஞ்சோறு ஈத்துப் பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும்- தீய பசியாலே வருந்துகின்ற ஆற்றாமாக்கட் கெல்லாம் அமுதசுரபியிலே இடையறாது சுரவா நிறை வளமான சோற்றுத் திரளையை அள்ளி அள்ளி வழங்குபவளாய் அமுதசுரபியென்னும் அரும் பெரும் பாத்திரத்தை அங்கையில் ஏந்தி நிற்கின்ற கொல்லிப் பாவை போன்ற மணிமேகலையைக் கண் கூடாகக் கண்ட வளவிலே என்க.

(விளக்கம்) உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து என்றமையால் அவன் மணிமேகலா தெய்வம் கோன்முறை காட்டி, தவத்திறம் பூண்டோன் தன் மேல் வைத்த அவத்திறம் ஒழிக என்றறிவுறுத்தமை கேட்டு அஞ்சி மணிமேகலையைக் கைப்பற்றுங் கொள்கையைக் கைவிட்டு அவள் பால் உண்டான தன் இடங்கழி காமத்தைக் கைவிடமாட்டானாய்ப் பெரிதும் துன்புழந்தான். அங்ஙன மிருந்தவன் முன்பு கைவிட்டிருந்த செயலைச் செய்வதென உள்ளம் பிறழ்ந்தான் என்பது பெற்றாம்.

ஈண்டுச் சித்திராபதி இவ்வாறு மருட்காட்சி காமங்கதுவப் பெற்றார்க்குத் தோன்றுதல் இயல்பு காண்! என்று கூறியதனால் அவள் கூற்றை வாய்மை என்றே கொண்டு விட்டான் என்க. அவன் உள்ளத்தின் விதுப்புரவினை விரைபரி நெடுந்தேர் ஏறி அம்பல மெய்தினான் என்பதனால் அறிவுறுத்தார்.

மணிமேகலைக்குக் காடு அமர் செல்வியும், இரவன் மாக்கட்குக் கூளியும் உவமை. காடமர் செல்வி- காளி. கடி-கூளி; பேய். பாவை- கொல்லிப்பாவை போன்ற மணிமேகலை.

மணிமேகலையைக் கண்ட உதயகுமரன் எண்ணித் துணிதல்

119-127: இடங்கழி.....கேட்ப

(இதன் பொருள்) இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி- பண்டு மலர்வனத்திலே மணிமேகலையின் காதற் குறிப்பை கண்டு வைத்து அவள்பால் தணியா நோக்கம் தவிர்ந்திலனாகி அறந்தோர் வனம் என்றஞ்சி மீண்டவன் இப்பொழுது ஊரம்பலத்தே கண்டமையாலே தன்கட்டுக் கடங்காது வரம்பு கடந்து அவள்பாற் செல்கின்ற காமமுடையவனாகியும் உயர் குடிப் பிறப்புடையோன் ஆதலின் தன்னுள்ளே எண்ணித் துணிபவன்; யானே- வாயிலாவாரையின்றி யானே; தானே தமியள் நின்றோள் முன்னர் சென்று-அவள் தனித்து நிற்கின்ற செவ்வி நோக்கி அவள் முன்னிலையிலே சென்று; உடம்போடு என்தன் உள்ளகம் புக்கு என் நெஞ்சம் கவர்ந்த வஞ்சகக் கள்வி- உன் உடம்போடு என் கண் வழியாக என் உள்ளத்தினூடு புகுந்து என் நெஞ்சம் முழுவதையும் கவர்ந்து கொண்ட கள்வியாகிய நீ; நோற்று ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி ஏற்று ஊண் விரும்பிய காரணம் என் என கேட்டல் இயல்பு என துணிந்து- நோன்பு மேற் கொண்டு பட்டினி விட்டுண்ணும் வாழ்க்கையினாலே உடம்பும் உள்ளமும் சுருங்குவதற்குக் காரணமான தவவொழுக்கத்தைத் தாங்கிய பிச்சை ஏற்றுண்ணும் உணவினை விரும்பியதற்குக் காரணந்தான் என்னையோ? என்று வினவத் தெரிந்து கொள்ளுதலே முறையாகும் என்று தன்னுள் ஆராய்ந்து துணிந்து அங்ஙனமே அவள் தமியளாய் நிறை செவ்வியின் அவள் முற்சென்று; நல்லாய் என்கொல் நல் தவம் புரிந்தது நங்கையே இத்தகைய கள்வியாகிய நீ எற்றிற்குத் தவம்புரியத் தொடங்கியது; செல்லாய்-அதற்குரிய காரணத்தை எனக்குக் கூறுவாயாக; என்று உடன் கேட்ப-என்று அப்பொழுதே மணிமேகலையை வினவா நிற்ப என்க.

(விளக்கம்) இடங்கழி காமமொடு அடங்கானாகியும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. என்னை? அடங்கானாகியும் எண்ணித் தன்னியல்பிற் கேற்ற செயலே செய்தலன்றி அவளைக் கைப்பற்றுதன் முதலிய மிகை ஏதுஞ் செய்திலாமை அவன் துயர்குடிச் சிறப்பிற்குச் சான்றாய் நிற்றலின் என்க. பிறர் பொருளைக் களவாடியவரை அரசன் வினவுதல் கோன் முறைமையே யாகலின் கள்வி அதற்கு மாறாகித் தவம் புரிந்தது என் என்று வினவுதல் தனக்கு இயல்பு என்று துணிந்த படியாம்.

உதயகுமரன் தன்னுள்ளத்தை அவள் கவர்ந்தமை முன்பு சித்திராபதிக்குக் கூறுமாற்றாலே பெற்றாம். அருந்தே மாந்த ஆருயிர் தளிர்ப்பத் தன்னைக் கண்டுழி அவள் விருந்தின் மூரலரும்பி வைத்தும் அதற்கியைய வொழுகாமல் அவள் தவம் புரிந்தது அடாது என்பதே அவன் ஈண்டு எடுத்துக் காட்டுகின்ற குற்றம். மற்று அவள் தவம் புரிவதே குற்றம் என்பது அவன் கருத்தல்லாமை யுணர்க. உடம்போடு......யானே கேட்ட லியல்பெனத் துணிந்தானாகலின் அதனை வழிமொழிந்து அவ்வாறே கேட்டனன் என்று கூறிக்கொள்க. அல்லது-அவ்வாறு தன்னுட்டுணிந்து சென்று அவை யெல்லாம் அவள்-நெஞ்சறியுமாதலின் நல்லாய் என்கொல் தவம் புரிந்தது சொல்லாய் என்னுமளவே வினவினன் எனக்கோடலுமாம். என்னை? அவள் முன்னிலையினின்று அது கூற அவன் நாத்துணிதலரிதாகலின் இங்ஙனம் வினவவும் அவன் துணிந்தமையின் அருமை தோன்ற அத் துணிவை விதந்து துணிந்து கேட்ப என்றார். நல்லாய் என்று விளித்தான் அதனினும் சிறந்த விளிச்சொல் பிறிதொன்று காணமாட்டாமையின்.

மணிமேகலையின் உள்ளத்தினியல்பும் செயலும்

128-133: என்னமர்..........மயங்கி

(இதன் பொருள்) ஈங்கு இவன் என் அமர் காதலன் இராகுலன்-அவ் வேந்தன் மகன் வினவிய சொற்களைக் கேட்ட மணிமேகலை இங்கு வந்து இவ்வாறு என்னை வினவுவான் முற்பிறப்பிலேயும் என்னைப் பெரிதும் காதலித்து என் கணவனாயிருந்த இராகுலனே ஆதலின்; இவன்றன் அடிதொழுதலும் தகவு என வணங்கி இவனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கித் தொழுவதும் எனக்குத் தகுதியே யாம் என்று தன்னுட் கருதியவளாய் அவன் அடிகளில் வீழ்ந்து வணங்கி; நெஞ்சம் அறைபோய் அவன் பால் அணுகினும் ஈங்கு இவன் இறைவளை முன் கை பற்றினும் என் பேதை நெஞ்சம் என்னைக் கீழறுத்துப் போய் அவனிடத்தே அணுகினும் அணுகுக! அல்லது இவன்றானும் அடிப்பட்டு வந்த அன்புடைமை காரணமாக ஆற்றானாய் மூட்டுவாயையுடைய வளையலணியத் தகுந்த என் முன்னங்கையைப் பற்றிக் கொள்ளினும் கொள்ளுக!; தொன்று காதலன் சொல் எதிர் மறுத்தல் நன்றியன்று என்று நடுங்கினள் மயங்கி-முற்பிறவிதொட்டு அடிப்பட்டு வருகின்ற என் காதலனாகிய இவனுடைய மொழிக்கு மாறு கூறல் நல்லறமன்று என்று நினைந்து தானும் அக்காமத்தாலேயே மயக்க மெய்தி என்க.

(விளக்கம்) மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் உவவனமருங்கில் உன்பால் தோன்றிய உதயகுமரனவன் உன் இராகுலன், ஆங்கு அவனன்றியும் அவன் பாலுள்ளம் நீங்காத் தன்மை நினக்கும் உண்டு என்றறிவித்தமையால் தன் முற்பிறப்பிற் கணவனாக இருந்த இராகுலனே இவன் என்றும் அவ்வன்புத் தொடர்ச்சியாகிய ஏது நிகழ்ச்சியே இப்பிறப்பினும் இவனுக்கு, என்னைக் காட்டுவித்தது என்றும் அவ்வாறே அவன்பால் என்னெஞ்சமும் நீங்காத் தன்மைத்தாகின்றது, என்று கருதி அவன்பாற் பரிவுள்ளங் கொண்டவளாய்க் கணவனைக் கற்புடை மகளிர் தொழுமாறே தொழுதவள், இவ்வுண்மை இவனறியானாயினும் அப் பழவினை வலியால் இவன்பால் என்னெஞ்சம் அறை போகின்றது; போயிற் போதுக! அங்ஙனமே அப் பழவினையா லுந்தப்பட்டு வந்த இவன் என் கையைப் பற்றுதலும் கூடும், பற்றினும் பற்றுக. தன் னெஞ்சறிவது பொய்யற்க என்னும் அறம்பற்றிக் கணவனாகிய இவனை வணங்குவல் அப்பாலும் அவன் வினாவிற்கும் விடை கூறுவல் என்று மணிமேகலை ஈண்டு மயங்குகின்றனள் என்றுணர்க.

இனி, தொன்று காதலன் ஆயினும் இவன் பிறப்பறுத்தற்கியன்ற நல்வினை செய்திலன், தான் செய்த நல்வினையே பிறப்பறுத்தற்கியன்ற தொரு நன்னெறியில் தன்னைச் சேர்ப்பித்துளது என்றறிந்துள ளாகலின் ஈண்டு இரண்டு பேரறங்கள் தம்முள் எதிர்ந்து போரிடுதலானே அவள் உள்ளம் மயங்கி இவற்றுள் பழைய அன்பு நெறியே வென்று மீண்டும் தன்னை அவன்பாற் படுத்துப் பறவிப் பெருங்கடலுள் வீழ்த்து விடுமோ என்றையுற்று அச்சமெய்தி நடுங்கினள் என்பது கருத்தாகக் கொள்க.

என் அமர்காதலன்- என்னை விரும்பிய கணவன். தொன்று பழைமையான. நன்றி- நல்லறம். நடுங்கினள்: முற்றெச்சம்.

மணிமேகலை உதயகுமரன் வினாவிற்கு விடை இறுத்தல்

134-142: கேட்டது..........செய்கென

(இதன் பொருள்) கேட்டது மொழிவேன் நீ கேள்வியாளரின் தோட்ட செவியை ஆகுவை ஆம் எனின்- வேந்தன் மகனே! நீ என்னை வினவிய காரணத்தை யான் இப்பொழுது கூறுவல் நீதானும் கேள்வியை விரும்பிக் கேட்டுப் பயின்ற பயன்பெற்றுச் சிறந்த கேள்வியாளர் போன்று அறக் கேள்விகளாலே நன்கு துளைக்கப்பட்ட செவிகளை உடையையாயிருப்பாய் ஆயின்(யான் கூறும் காரணம் நினக்கும்பயன் தருவதாகுமானால்) மக்கள் யாக்கை இது பிறத்தலும் மூத்தலும் பிணப்பட்டு இரங்கலும் இறத்தலும் உடையது பெருமானே! யான் எடுத்துக் கொண்டிருக்கின்ற மக்களுடைய பிறந்த பின்னர்க் கணந்தோறும் மூத்தலையும் பல்வேறு பிணிகளின்பாற் பட்டுத் துன்புறுதலையும் என்றேனுமொரு நாள் இறத்தலையும் உடையதாகும்; இடும்பைக் கொள்கலம்-துன்பத்தை நிரப்பி வைத்துள்ள தொரு மட்பாண்டம் போன்றது; என உணர்ந்து-என்று நன்குணர்ந்து கொண்டமையாலே; மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்-அப் பிறவிப் பெருங்கடலினின்று உய்ந்து கரையேறுதற்குரிய அறங்களுள் வைத்துத் தலைசிறந்த நன்மை யுடையதாகிய அருளறத்தை மேற்கொள்ளுதலைப் பெரிதும் விரும்பினேன், இதுவே இந் நற்றவத்தை யான் செய்தற்குரிய காரணமாகும்; மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்குப் பெண்டிர் கூறும் பேரறிவு உண்டோ- நாற்பெரும் படையும் மண்டி வருதற்கிடமான போரின்கண் பகைவரைக் கொன்றழிக்கும் பேராற்றலுடைய பெருமானை ஒத்த களிற்றியானை போன்ற தறுகண்மையுடைய வீரர்களுக்கு என் போன்ற மெல்லியன் மகளிர் கூறுதற்குரிய பேரறிவும் உளதாகுமோ! இல்லையாகலின் பெருமான் வினாவிற்கு மட்டுமே விடை இறுத்துள்ளேன்; கேட்டனையாயின்-யான் கூறிய விடையைச் செவியேற்றருளினையாயின்; வேட்டது செய்க என- இனிப் பெருமான் விரும்பியதனைச் செய்தருள்வாயாக! என்று விடை கூறிய பின்னர் என்க.

(விளக்கம்) என் கொல் நற்றவம் புரிந்தது? என்பதே உதயகுமரன் வினாவாதலின் அதற்கு விடை கொடாது மறுத்தல் நன்றியன்று என்றுட்கொண்டு விடை கூறத் தொடங்கும் மணிமேகலை கேட்டதற்கு விடை தருதல் என கடமையாகலின் அதற்கு விடை தருவேன் என்பாள் கேட்டது மொழிவேன் என்று தொடங்கி; என் விடைக்குப் பொருளுணர்வாய் எனின் நீ நன்கு அறவரைகளைப் பலகாலும் கேட்டுப் பயின்றடிப்பட்ட செவிகளை உடையை ஆதல் தேற்றம் என்பாள். நீ கேள்வியாளரின் தோட்ட செவியை ஆகுவை என்றாள். உணர்ச்சி உணர்வோர் வலித்தேயாகலின் அத்தகைய வலி நினக்குளதாகும் எனின் நன்று இன்றெனினும் கேட்டதற்கு விடை கூறுதல் என் கடமை யாதலின் மொழிவேன் என்றாள்.

பிறத்தல் முதலியவாக எண்ணிறந்த துயரங்களுக்குக் கொள்கல மாகும் மக்கள் யாக்கையாகிய இஃதென்று யான் நன்கனம் உணர்ந்து கொண்டமையே நற்றவம் புரிதற்குக் காரணமாம், என்பதே மணிமேகலை இறுத்த விடையாகும்.

யான் மெல்லியல்புடைய எளிய பெண் மகள். நீயோ மண்டமர் மூருக்கும் களிறனையை ஆதலின் நீ இப்பொழுது என் திறத்திலே ஏது வேண்டுமாயினும் செய்யக் கூடும். நீ இனி வேட்டது செய்க, நின்னைத் தடுப்பார் யாருமிலர் என்பதுபட உலகின் மேல் வைத்துக் களிறனை யார்க்குப் பெண்டிர் கூறும் பேரறிவுண்டோ வேட்டது செய்க என்றாள்.

மிக்க நல்லறம் என்றது அருளுடைமையை, அதனையன்றிப் பிறவிப் பெருங் கடலைக் கடத்தற்குப் பிறிதொரு வழியில்லையாகலின் அதனை அங்ஙனம் விதந்துரைத்தாள் என்னை?

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு       (247)

எனவும்,

நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினும் அஃதே துணை      (242)

எனவும் வரும் அருமைத் திருக்குறள்களையும் நோக்குக.

இதுவே பவுத்த சமயக் கோட்பாடாகும். பண்டைக் காலத் தமிழ்த் திறவோர் மெய்க் காட்சியும் இதுவே யாகும் என்றுணர்க. இவ்வறத்தினை ஆசிரியர் தொல்காப்பியனார் மக்கள் வாழ்க்கையின் வெற்றியாகக் கருதி வாகைத் திணையின் பாற்படுத்தி அருளொடு புணர்ந்த அகற்சி என்றொரு துறையாக அமைத்து வைத்தனர்.(வாகை-சூ-21)

கேட்டனையாயின் வேட்டது செய்க, என்றது நீ யாது செய்யினும் யான் மேற்கொண்ட அறத்தினின்றும் பிறழேன் காண்! என்னுங் குறிப்பெச்சப் பொருள் பயந்து நின்றது.

உதயகுமரன் முன்னிலையினின்றும் மணிமேகலை தற்காத்தற் பொருட்டு விரைந்து கொற்றவை கோயிலுட் புகுந்து வேற்றுருக் கொண்டு வெளிப்படுதல்

142-150: வாட்டிறல்..............தோன்ற

(இதன் பொருள்) மடக்கொடி வாள் திறல் குரிசிலை நீங்கி இவ்வாறு விடையிறுத்த இளம்பூங்கொடி போல்வாளாகிய மணிமேகலை வாட் போராற்றல் மிக்க இடங்கழி காமத்தானாகிய இவன் முன் யான் இனி நிற்றலும் தகாதென வுட்கொண்டு பொள்ளென அவ்விடத்தினின்றும் நீங்கி; முத்தை முதல்வி முதியாள் இருந்த குச்சரக் குடிகை தன் அகம் புக்கு ஆங்கு முன்னைப் பழைமைக்கும் முன்னைப் பழைமையுடைய முழுமுதலாகிய இறைவி எழுந்தருளியிருக்கின்ற குச்சரக்குடிகையினுட் புகுந்து ஆங்குச் சிறிது பொழுது நின்று ஆராய்பவள்; ஆடவர் செய்தி அறிகுநர் யார் என-காமம் கைமிகின் மடலேறுதலும் பிறிதும் ஆகும் இயல்புடைய இத்தகைய ஆடவர் தக்கது இன்னது தகாததின்னது என்று ஆராய்ந்து துணிந்து ஒன்றனைச் செய்யும் இயல்புடையாராகார் ஆதலின் அரசன்மகன் விழுக்குடிப் பிறப்பினன் ஆயினும் இக் காமச்சூழ்நிலையில் அவன் இது செய்வான் இது செய்யான் என்று யாரே துணிந்து கூறவல்லுநர் இங்ஙன மாகலின் யாம் நமதறிவுடைமையால் இவனிடமிருந்து தப்புதலே நன்றென்று தன்னுட்கொண்டு; தோடுஅலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி-அக் குச்சரக் குடிகையில் எழுந்தருளிய இதழ் விரிந்து நறுமணங்கமழும் மலர்மாலை சூட்டப்பெற்றுள்ள காவற் றெய்வமாகிய சம்பாபதியைக் கைகூப்பித் தொழுது வாழ்த்தி; மாயவிஞ்சை மந்திரம் ஓதி- மாய வித்தையின் பாற்பட்ட வேற்றுருக் கொள்ளுதற்கியன்ற மந்திரத்தை மனத்தினுள் உருவேற்றி; காயசண்டிகையெனும் காரிகை வடிவாய் மணிமேகலை வந்து தோன்ற-ஆண்டுப் பலரானும் அறியப்பட்டிருந்த விச்சாதரியாகிய காயசண்டிகையின் உருவத்தை எடுத்துக் கொண்டு முன்பு தன் முன்னிலையிலே நின்று நீங்கிக் குடிகையுட் புக்க அம் மணிமேகலையே மீண்டும் அக் குடிகையுணின்றும் வெளிப்பட்டுத் தோன்றா நிற்ப என்க.

(விளக்கம்) முந்தை, முத்தை என வலித்தல் விகாரம் எய்தியது-முந்தை முதல்வியாகிய முதியோள் என்க. அவளாவாள் சம்பாபதி என்னும் காவற்றெய்வம் குச்சரக் குடிகை- கூர்ச்சர நாட்டினர் கட்டுகின்ற கலைத்தொழின் முறையாலே கட்டப்பெற்ற சிறிய கோயில்; மண்டபமுமாம். மணிமேகலை தற்காத்துக் கொள்ள முயலுதலின் காவற்றெய்வத்தைத் தன்னைக் காத்தருள வேண்டிக் கைதொழுதவாறாம். காமம் காழ்கொளின் ஆடவர் மடலேறுதல் முதலிய வன்செயலும் செய்வர், இறந்துபடுதலும் செய்வர், அத்தகையோர் யாது செய்யார்? மனம் போனவாறே ஏதும் செய்வர். மடலேறாப் பீடு மகளிர்க்கே உரித்து. ஆகவே யானும் ஒல்லும் வகையால் அவன் வன்செயலுக்கு ஆளாகாது தப்புவதே அறிவுடைமை என்னும் இத்துணைக் கருத்துந் தோன்ற ஆடவர் செய்தி அறிகுநர் யார்? என ஆடவரை மட்டும் தனித்தெடுத்தோதினள்.

இனி ஆடவர் காமங் காழ்கொளின் அத்தகையராதலை,

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறு மடல்          (குறள், 1133)

எனவருந் திருக்குறளானும்,

கடலே றியகழி காமம் பெருகின் கரும்பனையின்
மடலே றுவர் மற்றும் செய்யா தனசெய்வர் மாநிலத்தே   
                  (களவி-உரைமேற்-79)

எனவரும் பாண்டிக் கோவையானும்,

மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமங்காழ் கொளினே (17)

எனவரும் குறுந்தொகையானும் உணர்க.

இனி மகளிர் காமங்காழ் கவுளின் இவ்வாறு மிகை செய்யாப் பீடுடையர் என்பது பற்றி ஆடவர் செய்தி என்று ஆடவரை மட்டும் பிரித்தோதினள். மகளிர் அங்ஙனம் மிகை செய்யார் என்பதனை

கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்

எனவரும் அருமைத் திருக்குறளாலு முணர்க.

தோடலர்கோதை: அன்மொழித் தொகை; சம்பாபதி.

உண்மை வடிவத்தை மறைத்து வேறுருவந் தருதலால் வேற்றுருக் கொள்ளும் மந்திரத்தை மாயவிஞ்சை மந்திரம் என்றார். 

மணிமேகலையைக் காணாமல் மன்னன் மகன் அலமருதல்

151-158: அணிமலர்............கிடப்பேன்

(இதன் பொருள்) அணிமலர்த் தாரோன் அவள்பால் புக்கு- விரைந்து தன் முன்னிலையினின்றும் கோயிலினுட் புகுந்த மணிமேகலை வரவினை எதிர்பார்த்து நின்ற அழகிய மலர்மாலையணிந்த அவ்வரசிளங்குமரன் பாத்திரமேந்தி வெளிவருகின்றவள் பாற் சென்று அவள் மற்றொருத்தியாதல் கண்டு, பிச்சைப் பாத்திரத்தை இவள் கையிற் கொடுத்துவிட்டு மணிமேகலை கோயிலினுள் கரந்திருக்கின்றாள் என்று கருதியவனாய்; குச்சரக்குடிகைக் குமரியை மரீஇ-தானும் அக் குச்சரக் குடிகையாகிய கோயிலுட் புகுந்து மணிமேகலையைத் தேடி அவளை யாண்டும் காணானாகி ஆங்கெழுந்தருளிய சம்பாபதியைத் தொழுது கூறுபவன்; இமையோர் பாவாய் பிச்சைப் பாத்திரம் பெரும்பசியுழந்த காயசண்டிகை தன் கையில் காட்டி- தேவர்கட்குந் தெய்வமாகிய சம்பாபதியே கேள்! தன் கையிலிருந்த பிச்சைக் கலத்தை நாளும் ஆனைத் தீ நோயாலே ஆற்றொணாத பெரிய பசித்துன்பத்தே கிடந்துழன்ற காயசண்டிகை என்பவள் கையிலே கொடுத்துவிட்டு; மாயையின் ஒளித்த மணிமேகலைதனை தான் கற்ற மாயவித்தையாலே ஈண்டுக் கரந்துறைகின்ற மணிமேகலையை; ஈங்கு இம்மண்ணீட்டு யார் என உணர்கேன் இங்கே நிறைந்துள்ள சுதையாலியன்ற மகளிர் உருவங்களுள் வைத்து மணிமேகலையின் உருவம் யாது என்று யான் எவ்வண்ணம் அறிந்து கொள்ளமாட்டுவேன்! அறிகின்றிலேன் ஆதலாலே; ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின்-அவ்விடத்திலே நிற்கின்ற உருவமே உன்னால் தேடப்படுகின்ற மணிமேகலையின் உருவமாகும் என்று நீயே எனக்குக் காட்டியருளாயாயின்; பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன்- நீ உளம் இரங்கி அங்ஙனம் காட்டுதற்குப் பல நாள் கழியினும் யான் நின் திருமுன்பே வரங்கிடப்பேன் காண்! என்றான் என்க.

(விளக்கம்) அணிமலர்த்தாரோன்: உதயகுமரன். அவள் என்றது காயசண்டிகை வடிவத்தில் வந்த மணிமேகலையை. கையிற் பாத்திரம் ஏந்தி வருதல் கண்டு மணிமேகலையே வருகின்றாள் என்று கருதி அணுகியவன் அவள் காயசண்டிகையாதல் கண்டு மணிமேகலை தன் கைப் பாத்திரத்தை இவள்பாற் கொடுத்துத் தான் கோயிலினுள்ளே மறைந்துறைகின்றனள் என்று கருதித் தானும் அவளைத் தேடிக் கோயிலினுள் புகுந்தான் என்பதே கருத்தாகலின் அதற்கியன்ற சொற்கள் இசை யெச்சத்தால் வருவித்தோதப்பட்டன.

குமரி: சம்பாபதி. மரீஇ- மருவி; அணுகி என்றவாறு. மண்ணீடு- சுண்ணச்சாந்தா லியற்றிய சிற்ப உருவம். மணிமேகலையை இச் சிற்ப உருவங்களினூடே யார்? என அறிகின்றிலேன் என்றமையால் மணிமேகலையின் எழிலும் அங்குள்ள சிற்பங்களின் அழகும் ஒன்றற்கொன் றுவமை யாகி இருவழியும் சிறப்பெய்துதல் உணர்க. இறைவி கோயிலாகலின் அம் மண்ணீடுகள் மகளிர் உருவங்களாதலும் இயல்பாதல் உணர்க.

இனி, யார் என்னும் வினைக்குறிப்பு மணிமேகலைதனை யார் என உணர்கேன் என உயர்திணைக்கண் வந்ததாயினும் ஐயப்புலப் பொதுச் சொல் மண்ணீடு என்பதாம். ஆகவே அஃறிணைப் பொதுச் சொல்லாகிய யார் என உணர்கேன் என்பது திணைவழுவாம் ஆதலின். இம் மண்ணீடுகளின் உருவங்களுள் வைத்து மணிமேகலை யுருவம்யாது என்றறிகேன் என்பதை கருத்தாகலின் திணை வழுவமைதியாகக் கொள்க. ஆங்கவள் இவள் என்றதும் நின்னால் தேடப்படும் மணிமேகலை யுருவம் இஃதாம் என்று காட்டியருளாயாயிடின் என ஐயப்புலப் பொதுச் சொல்லாகாமல் உயர்திணைச் சொல்லாற் கூறியதனையும் திணைவழுவமைதியாகவே கொள்க.

நான் யார் என ஞானங்கள் யார் என்புழியும் இவ்வழுவுண்மையும் அதனை அமைத்துக் கொண்டமையும் உணர்க. பாடு கிடப்பேன்- வரங்கிடப்பேன் பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு என் புழியும்(சிலப்-9-15) அஃதப் பொருட்டாதல் அடியார்க்கு நல்லார் உரையானும் அறிக.

உதயகுமரன் சம்பாபதி திருமுன் தன்னிலை கூறிக் குறையிரத்தல்

159-172: இன்னும்...............தானென்

(இதன் பொருள்) இமையோர் பாவாய்- தேவர்கட்கும் தெய்வமாகிய சம்பாபதியே; இன்னும் கேளாய்!-அடியேன் உற்ற குறையோ பெரிது அதனைக் கூறுவல் வெறாமல் திருச்செவியேற்றருள்வாயாக!; பவளச் செவ்வாய் தவள் வாள் நகையும் அஞ்சனஞ் சேராச் செங்கயல் நெடுங்கணும்-அம் மணிமேகலை தானும் தன்னுடைய பவளம் போன்று சிவந்த வாயின்கண் நிரல் பட்டிருக்கின்ற வெள்ளிய ஒளி தவழும் எயிறுகளும் மை தீட்டப் பெறாத சிவந்த கயல்மீன் போன்ற நெடிய கண்ணும்; முரிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும்- வளைந்து கடைப்பகுதி நெரியும்படி விரிந்து கட்டப்பட்ட வில்லினை ஒத்த புருவமும் ஆகிய தனது இம் மூன்றுறுப்புகளே நிரலே; குவி முன் கருவியும் கோணமும் கூர்நுனைக


Offline Anu

Re: மணிமேகலை
« Reply #19 on: February 28, 2012, 09:31:35 AM »
19. சிறைக்கோட்டம் அறக் கோட்டமாக்கிய காதை

(பத்தொன்பதாவது மணிமேகலை காயசண்டிகை வடிவாய்ச் சிறைக் கோட்டம் புக்குச் சிறைவீடு செய்து அறக் கோட்டமாக்கிய பாட்டு)

அஃதாவது: சம்பாபதி முன்பு மணிமேகலை ஒழியப் போகேன் பன்னாளாயினும் பாடு கிடப்பேன், உன்னடி தொட்டு உறுதி கூறுகின்றேன் என விஞ்சினஞ் சாற்றியவுடன் அங்குச் சித்திரத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டுறைகின்ற ஒரு தெய்வம் நீ ஆராய்ச்சியின்றி வஞ்சினங் கூறினை என்று கூறக்கேட்ட உதயகுமரன் அத் தெய்வம் பேசியதனையும் பண்டு தன் முன் பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டிய தனையும் மணிமேகலை ஏந்திய அமுதசுரபியின் தெய்வத் தன்மையையும் ஒரு சேர எண்ணிப் பெரிதும் வியப்பெய்திப் பின்னும் மணிமேகலையின் செயல்களைப் பார்த்தே அவளைப்பற்றி நன்கு தெரிதல் வேண்டும் என்று கருதி, அவ்விடத்தினின்றும் அகன்று போய்பின் மணிமேகலை தன்னுருவோடு திரியின் மன்னன் மகன் நம்மைத் தொடர்வான் என்று அஞ்சிக் காயசண்டிகையின் வடிவத்தோடிருந்தே ஆற்றாமாக்கட்கு ஆற்றுந்துøணாயகி உண்டி கொடுத்து உயிரோம்புவள் சிறைக்கோட்டம் புகுந்து ஆங்குச் சிறைப்பட்டுக்கிடப்போரைக் கணடிரங்கி அவர்க்கெல்லாம் உண்டி வழங்கா நிற்ப, ஒரே பாத்திரத்தால் எண்ணிறந்த உயிர்க்கு உண்டி வழங்கும் அவ்வற்புதங் கண்டு வியந்து இச் செய்தியைக் காவலர் அரசனுக்கு அறிவிப்ப அவனும் அவளை அழைப்பித்து வினவி அவளது தெய்வத் தன்மையை வியந்து நின் திறத்திலே யான் செயற்பால துண்டாயிற் கூறுக! என்று வேண்டினனாக அது கேட்ட மணிமேகலை அங்குச் சிறைப்பட்டு வருந்துவோரையெல்லாம் விடுதலை செய்து அதனை அறக்கோட்டம் ஆங்குக என்று வேண்ட, அரசனும் அவள் வேண்டுகோட் கிணங்கிச் சிறையோர் கோட்டத்தை அறவோர் கோட்டமாகச் செய்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண் சோழமன்னன் விளையாடும் பூம்பொழில் வண்ணனை அக் காலத்து அரசர் வாழ்க்கைச் சிறப்பினைக் கண்கூடாகக் காட்டும் சொல்லோ வியமாகத் திகழ்கின்றது.

மணிமேகலையின் அறச்செயல் கண்டு வியந்த அரசன் அவளை நீ யார்? இத்தெய்வத் தன்மையுடைய திருவோடு நினக்கு எவ்வாறு கிடைத்த தென்று அருள்புரி நெஞ்சோடு வினவுதலும், அதற்கு மணிமேகலை இரட்டுற மொழிதலாகத் தன்னை விஞ்சை மகள் என்றறிவித்துப் பின்னர் மன்னனை மனமார வாழ்த்துதலும் இப்பாத்திரம் அம்பலமருங்கோர் தெய்வந் தந்தது திப்பியமானது யானைத்தீ நோய் அரும்பசி கெடுத்தது என அவன் தன்னைக் காயசண்டிகையாகவே கருதுதற் பொருட்டுக் கூறும் விடைகளும், பின்னர் அரசன் யான் செயற்பாலது என் இளங்கொடிக்கு என்று வினாதலும், அவள் வேண்டுகோளும் கற்போர் உளமுருக்கும் பான்மையனவாகக் கூறப்பட்டுள்ளன.

முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி
மது மலர்த் தாரோன் வஞ்சினம் கூற
ஏடு அவிழ் தாரோய்! எம் கோமகள் முன்
நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை என
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்
உதயகுமரன் உள்ளம் கலங்கி
பொதி அறைப் பட்டோர் போன்று மெய் வருந்தி
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றே
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம்  19-010

பை அரவு அல்குல் பலர் பசி களையக்
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்
முத்தை முதல்வி அடி பிழைத்தாய் எனச்
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்
இந் நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின்
பின் அறிவாம் எனப் பெயர்வோன் தன்னை
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப
மாலை நெற்றி வான் பிறைக் கோட்டு
நீல யானை மேலோர் இன்றிக்   19-020

காமர் செங் கை நீட்டி வண்டு படு
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து
நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின்
நகர நம்பியர் வளையோர் தம்முடன்
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்பப்
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி
பறாஅக் குருகின் உயிர்த்து அவன் போய பின்
உறையுள் குடிகை உள்வரிக் கொண்ட
மறு இல் செய்கை மணிமேகலை தான்  19-030

மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின்
காவலன் மகனோ கைவிடலீ யான்!
காய்பசியாட்டி காயசண்டிகை என
ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர்
மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம் என
முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த
அமுதசுரபியை அங்கையின் வாங்கிப்  19-040

பதிஅகம் திரிதரும் பைந் தொடி நங்கை
அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை
ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம்
விருப்பொடும் புகுந்து வெய்து உயிர்த்துப் புலம்பி
ஆங்குப் பசியுறும் ஆர் உயிர் மாக்களை
வாங்கு கைஅகம் வருந்த நின்று ஊட்டலும்
ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து
கோட்டம் காவலர் கோமகன் தனக்கு இப்
பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும்
யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி  19-050

நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன்
அடியில் படியை அடக்கிய அந் நாள்
நீரின் பெய்த மூரி வார் சிலை
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள்
சீர்த்தி என்னும் திருத் தகு தேவியொடு
போது அவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக்
கொம்பர்த் தும்பி குழல் இசை காட்டக்
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்செய்ய
வரிக் குயில் பாட மா மயில் ஆடும்
விரைப் பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும்  19-060

புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு
மட மயில் பேடையும் தோகையும் கூடி
இரு சிறைக் விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன
ஒரு சிறைக் கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி
மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும்
கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னைப்
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையைச்
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்திப்
பைங் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும்  19-070

அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த
பிணவுக் குரங்கு ஏற்றி பெரு மதர் மழைக் கண்
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல்
கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும்
பாசிலை செறிந்த பசுங் கால் கழையொடு
வால் வீ செறிந்த மராஅம் கண்டு
நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என
தொடி சேர் செங் கையின் தொழுது நின்று ஏத்தியும்
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்
நாடகக் காப்பிய நல் நூல் நுனிப்போர்  19-080

பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர்
தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர்
குழலொடு கண்டம் கொளச் சீர் நிறுப்போர்
பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர்
ஆரம் பரிந்த முத்தம் கோப்போர்
ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர்
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர்
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர்
நல் நெடுங் கூந்தல் நறு விரை குடைவோர்
பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர்  19-090

ஆங்கு அவர் தம்மோடு அகல் இரு வானத்து
வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து
குருந்தும் தளவும் திருந்து மலர்ச் செருந்தியும்
முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும்
பொருந்துபு நின்று திருந்து நகை செய்து
குறுங் கால் நகுலமும் நெடுஞ் செவி முயலும்
பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும்
வம் எனக் கூஉய் மகிழ் துணையொடு தன்
செம்மலர்ச் செங் கை காட்டுபு நின்று
மன்னவன் தானும் மலர்க் கணை மைந்தனும்  19-100

இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும்
எந்திரக் கிணறும் இடும் கல் குன்றமும்
வந்து வீழ் அருவியும் மலர்ப் பூம் பந்தரும்
பரப்பு நீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க் கேணியும்
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறைப் பள்ளியும்
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண் தமிழ் வினைஞ்அர் தம்மொடு கூடிக்
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினைப்  19-110

பவளத் திரள் கால் பல் மணிப் போதிகைத்
தவள நித்திலத் தாமம் தாழ்ந்த
கோணச் சந்தி மாண் வினை விதானத்துத்
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின்
பைஞ் சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்து
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும்
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால்
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி   19-120

முறம் செவி யானையும் தேரும் மாவும்
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த
தலைத் தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர்
சிலைக் கயல் நெடுங் கொடி செரு வேல் தடக் கை
ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால்
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
வலி கெழு தடக் கை மாவண்கிள்ளி!
ஒளியொடு வாழி ஊழிதோறு ஊழி!
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை!
கேள் இது மன்னோ! கெடுக நின் பகைஞர்  19-130

யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம்
மா நகர்த் திரியும் ஓர் வம்ப மாதர்
அருஞ் சிறைக்கோட்டத்து அகவயின் புகுந்து
பெரும் பெயர் மன்ன! நின் பெயர் வாழ்த்தி
ஐயப் பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள்
ஊழிதோறு ஊழி உலகம் காத்து
வாழி எம் கோ மன்னவ! என்றலும்
வருக வருக மடக்கொடி தான் என்று
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின்  19-140

வாயிலாளரின் மடக்கொடி தான் சென்று
ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய! எனத்
தாங்கு அருந் தன்மைத் தவத்தோய் நீ யார்?
யாங்கு ஆகியது இவ் ஏந்திய கடிஞை? என்று
அரசன் கூறலும் ஆய் இழை உரைக்கும்
விரைத் தார் வேந்தே! நீ நீடு வாழி!
விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர்
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை!
வானம் வாய்க்க! மண் வளம் பெருகுக!
தீது இன்றாக கோமகற்கு! ஈங்கு ஈது  19-150

ஐயக் கடிஞை அம்பல மருங்கு ஓர்
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது
யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என
யான் செயற்பாலது என் இளங்கொடிக்கு? என்று
வேந்தன் கூற மெல் இயல் உரைக்கும்
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர்க்கு ஆக்குமது வாழியர்! என
அருஞ் சிறை விட்டு ஆங்கு ஆய் இழை உரைத்த
பெருந் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த
கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என்  19-162

உரை

வஞ்சினங் கூறிய மன்னவன் மகனுக்கு ஆண்டுச் சித்திரத்திலே நிற்குந் தெய்வம் கூறுதல்

1-6: முதியாள்...........கூறலும்

(இதன் பொருள்) மதுமலர்த் தாரோன் முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி- தேன்பிலிற்றும் மலர்மாலையணிந்த திருவடிகளை மனம் மொழி மெய் என்னும் மூன்று கருவிகளானும் வழிபாடு செய்து சூண் மொழிந்தவளவிலே; வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரம் ஒன்று தெய்வம் சிற்பப்புலமை மிக்க வித்தகர்களாலே இயற்றப்பட்டதும் விளக்கமான கலைத் தொழிற்றிறமமைந்ததுமாகிய ஒரு சித்திரத்திலே பொருந்தியுறை வதுமாகி ஒரு தெய்வம் தனது தெய்வக்கிளவியாலே; ஏடு அவிழ்தாரோய் எம் கோமகள் முன் நாடாது துணிந்து நாநல் கூர்ந்தனை என-இதழ்விரிந்த மலராற் புனைந்த மலர் மாலையணிந்த மன்னவன் மகனே! நீ தானும் எம்மிறைவி திருமுன்னின்று சிறிதும் ஆராயாமல் துணிவுற்று வாளாது வஞ்சினம் கூறி நாநலமிழந்து வறுமையுற்றனை காண்! என்று; கூறலும் கூறக் கேட்டலும் என்க.

(விளக்கம்) முதியாள் என்றது சம்பாபதியை. திருந்தடி-இலக்கணத்தாற் செவ்விதாக வமைந்த திருவடி; தாரோன்: உதயகுமரன் மும்மை- மன மொழி மெய்கள். வஞ்சினம்- சூண்மொழி; அஃதாவது அருளாயாயிடின் பன்னாளாயினும் பாடுகிடப்பேன் என்று கூறியதாம்.

நாநல் கூர்தல்-நாநலமிழத்தல்; பயனில மொழிதல். எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு எனவரும் திருக்குறட் கருத்தை யுள்ளுறுத்து நாடாது துணிந்து நாநல் கூர்ந்தனை எனத் தெய்வம் கூறியவாறாம். ஒன்று தெய்வம்- பொருந்தியுறையும் தெய்வம்.

உதயகுமரனின் மருட்கை

7-19-: உதய...............தன்னை

(இதன் பொருள்) உதயகுமரன் உள்ளம் கலங்கி பொதியறைப் பட்டோர் போன்று மெய் வருந்தி-உதயகுமரன் தன் துயரத்தினின்றும் தப்புதற்குப் பிறிதொரு வழியும் காணமாட்டாமை யாலே பொதியறை என்னும் கீழறைக்கண் அகப்பட்டவர் போன்று உடம்பு மெலிந்து வருந்தி மயங்குபவன்; அங்கு செங்கோல் காட்டி அவள் தன் திறம் அயர்ப்பாய் என்ற தெய்வமும் திப்பியம்-யாம் நமது பள்ளியறைக்கண் அவளையே எண்ணித் துயிலாதிருந்த பொழுது பொன்னிற் பொலிந்த நிறத்தோடு தோன்றி எனக்குச் செங்கோல் முறைமையை எடுத்துக் காட்டித் தவத்திறமுடைய அம் மணிமேகலையை மறந்துவிடு என்று கூறிய தெய்வக் காட்சியும் தெய்வத் தன்மையுடைத்தா யிருந்தது; பைஅரவு அல்குல் பலர் பசி களையக் கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்-அன்றியும் பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய அம் மணிமேகலை ஆற்றாமாக்கள் அரும்பசி களைதற்குக் கருவி யாகத் தன் கையிலேந்தியிருந்த பிச்சைக்கலன் தானும் தெய்வத்தன்மை யுடைத்தாயிருந்தது; முத்தை முதல்வி அடி பிழைத்தாய் எனச் சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம் சம்பாபதி திருமுன் திருந்தடி தொட்டுச் சூளுரைத்துப் பிழை செய்தொழிந்தாய் என்று வித்தகரியற்றிய இச் சித்திரங் கூறுகின்ற இவ்வடித்துரை தானும் தெய்வத்தன்மையுடைய தாகவே; உளது; இந்நிலை எல்லாம் பின் இளங்கொடி செய்தியில் அறிவோம் எனப் பெயர்வோன் தன்னை- மருட்கை விளைக்கின்ற இத் தெய்வத்தன்மைகளுக்கெல்லாம் காரணம் இனி அந்த மணிமேகலையின் செயல்களை யாம் ஆராய்ந்தறிந்து கொள்ளக்கடவேம் என்று கருதியவனாய் அவ்விடத்தினின்றும் போகின்ற உதய குமரனை என்க.

(விளக்கம்) திப்பியம்- தெய்வத் தன்மையால் நிகழ்வது; மக்கட் டன்மைக்கப்பாற்பட்ட நிகழ்ச்சி என்பது கருத்து. செங்கோல் காட்டிய தெய்வம் என்றது மணிமேகலா தெய்வத்தை. பையரவல்குல்; அன்மொழித்தொகை; மணிமேகலை பலர் பசியை ஒரே பாத்திரம் உணவு சுரந்தூட்டுவது திப்பியம் என்றவாறு. சித்திரம்- ஈண்டுச் சிற்பம், ஓவியம் எனினுமாம். இந்நிலை என்றது இவ்வாறு மருட்கை விளைத்தற்குக் காரணமான நிலைமைகள். செய்தி- செய்கை.

உதயகுமரன் காமத்துயருழந்துயிர்த்தல்

17-28: அகல்வாய்.............போயபின்

(இதன் பொருள்) அகல்வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண பகல் அரசு ஓட்டிய பணை எழுந்து ஆர்ப்ப-அகன்ற இடத்தையுடைய நிலவுலகத்தை விலக்குதற்கரிய இருள் விழுங்கிவிடும்படி ஞாயிறாகிய அரசனைப் புறங்காட்டி ஓடச் செய்து உலகின்கண் வெற்றி முரசின் முழக்கம் எழுந்து ஆரவாரியாநிற்ப; மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு நீல யானை- மாலைப் பொழுதாகிய நெற்றியினையும் வெள்ளிய பிறையாகிய மருப்பையுமுடைய நீலநிறம் பொருந்திய இரவாகிய யானையானது; மேலோர் இன்றி-தன்னையடக்குபவராகிய பாகர் யாருமில்லாமல்; காமர் செங்கை நீட்டி- விருப்பமாகிய தன் செவ்விய கையை உலகிலே நீட்டி; வண்டுபடு பூநாறு கடாஅஞ் செருக்கி வண்டுகள் மொய்த்தற்குக் காரணமான ஏழிலைப்பாலை மலரினது மணம்கமழ் தலாகிய மதத்தாலே செருக்குற்று; கால் கிளர்ந்து காற்றைப் போல விரைந்து; நிறை அழி தோற்றமொடு தொடர் தன்னைக் கண்டோருடைய மனத்திட்பம் அழிதற்குக் காரணமான தோற்றத்தோடு தொடரா நிற்பவும்; முறைமையின்-இசை நூல் முறைப்படியே; நகர நம்பியர் விளையோர் தம்முடன் மகரவீணையினை கிளை நரம்பு வடித்த இளிபுணர் இன்சீர் எஃகு உளம் கிழிப்ப-பூம்புகார் நகரத்தே வாழுகின்ற மேன்மக்களுள் வைத்து இளமையுடைய ஆடவர் தங் காதலியரோடு களித்திருந்து மகரயாழின்கண் கிளைநரம்புகளை வருடி எழுப்பிய இளி முறையாலே கூட்டப்பெற்ற இனிய தாளவறுதியுடைய பண்ணாகிய வேலானது பாய்ந்து ஊடுருவிப் புண் செய்யப்பட்டு; பொறாஅ நெஞ்சில் புகை எரிபொத்தி பறா அக்குருகின் உயிர்த்து அவன் போயபின்-உண்டாகின்ற துன்பத்திற்கு ஆற்றாது அலமருகின்ற தனது நெஞ்சத்திலே புகையுடைய காமத்தீப் பற்றித் தீய்த்தலாலே கொல்லுலைக்கண் துருத்தியுயிர்க்கு மாறு போலே வெய்தாக நெடுமூச்செறிந்து அவ்வரசன் மகன் அவ்விடத்தினின்றும் அகன்று போயபின்பு என்க.

(விளக்கம்) பெயர்வோன்றன்னை நீல யானை தொடர இன்சீர் எஃகுளம் கிழிப்ப உயிர்த்து அவன் போயபின் என இயையும்.

அகல்வாய்-அகன்ற இடத்தையுடைய. இனி ஞாலத்தை அகல்வாய் இருள் உண்ண என மாறி வாயை இருண்மேலேற்றலுமாம். பகலரசு-ஞாயிறு. மாலை முரசு முழங்குதல் உண்மையின் இரவு என்னும் நீல யானை தன் பகையாகிய பகலரசனை வென்று(மாலை முரசாகிய தனது) வெற்றி முரசம் முழங்கும்படி அவன் ஆட்சி செய்த ஞாலத்தை எல்லாம் இருளாகிய தன்வாய் விழுங்காநிற்பக் காம விருப்பம் என்கின்ற தன் கையை நீட்டிச் செருக்கி (உதயகுமரனுடைய) நிறையழி தோற்றமொடு அவனைத் தொடரவும் இன்சீராகிய எஃகு உளம் கிழிப்பவும் அது பொறாஅத நெஞ்சிற் (காமமாகிய) புகையெரி மூள ஆற்றாது உயிர்த்து அவன் போயபின் என்க.

இரவை யானையாக உருவகித்தலின் மாலையை அதன் நெற்றியாகவும் பிறையை மருப்பாகவும் இருளை நிறமாகவும் உருவகித்தனர்.

இரவு உலகில் காமத்தை உண்டாக்குதலின் அதனை அதன் கையாக உருவகித்தார். ஏழிலைப்பாலை மலர் இரவில் மலரும் போலும். ஆகவே அம் மலர் யானையின் மதநாற்றம் போலும் நாற்றமுடையதாதல் பற்றி அந் நாற்றத்தை அந்த யானை பொழியும் மாநாற்றமாக உருவகித்தார். ஏழிலைப்பாலை மலர் யானைமதம் நாறுமியல்புடைத் தென்பதை

பாத்த யானையிற் பதங்களிற் படுமத நாறக்
காத்த வங்குச நிமிர்ந்திடக் கால்பிடித் தோடிப்
பூத்த வேழிலைப் பாலையைப் பொடிப்பொடி யாகக்
காத்தி ரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததோர் களிறு

எனவரும் இராமாவதாரச் செய்யுளானும்( வரைக்-6) உணர்க.

முறைமையின்-நூல் முறைமையாலே. நகர நம்பியர் என்றது, நகரத்துப் பெருங்குடி மக்களாகிய இளைஞர்களை. இவர்கள் தங் காதலிய ரோடிருந்து யாழ்வருடிப் பாடுகின்ற இசை உதயகுமரன் காமநோயை மிகுவித்தலின் இன்சீர் எஃகு என்றார். இன்சீர் என்றது அன்மொழித் தொகையாய்ப் பண் என்னும் பெயர்ப் பொருட்டாய் நின்றது. இனிய தாளவறு தியையுடைய பண் என்றவாறு.

எரி-காமத்தீ. பொத்தி-மூண்டு. பறாஅக்குருகு- கொல்லன் உலைக்களத்துத் துருத்தி; வெளிப்படை, பாயா வேங்கை பறவாக் கொக்கு என்பன போல. அவன்: உதயகுமரன்.

உதயகுமரன் போனபின் மணிமேகலை உட்கோளும் செயலும்

29-38: உறையுள்........ஆமென

(இதன் பொருள்)  உறையுள் குடிகை உள்வரிக்கோலம் கொண்ட மறு இல் செய்கை மணிமேகலைதான்- சம்பாபதி எழுந்தருளியிருக்குமிடமாகிய குச்சரக் குடிகையினின்றும் காய சண்டிகையாக உள்வரிக்கோலம் பூண்ட குற்றமில்லாத நல்லொழுக்கத்தையுடைய அம் மணிமேகலை தானும் தான் இனிச் செய்யக்கடவதென்னென்று தன்னுள்ளே ஆராய்பவள்; மாதவி மகளாய் மன்றம் திரிதரின்- மாதவி மகளாகிய யான் எனக்குரிய உருவத்தோடே இவ்வுலக வறவியாகிய பாதுகாவலற்ற இவ்வம்பலத்தே இவ்வாறு திரிவேனாயின்; மன்னவன் மகன் கைவிடலீயான்- வேந்தன் மகன் நம்மைக் கைவிட்டுப் போவானல்லன், ஆகவே அவனிடத்தினின்றும் யான் தப்புதல் வேண்டின்; காயசண்டிகை காய் பசியாட்டி என ஊர் முழுதும் அறியும் உருவம் கொண்டே- காயசண்டிகை என்னும் அவ் விச்சாதரி இடையறாது வயிறு துன்புறுத்துதற்குக் காரணமான ஆனைத் தீ நோயுடையாள் என்று இப் பூம்புகார் நகரத்தில் வாழ்வோரெல்லாம் நன்கு அறிகுவர் ஆதலால் என்னுருக்கரந்து யான் இப்பொழுது மேற்கொண்டிருக்கும் இக் காயசண்டிகை யுருவத்தோடேயே எப்பொழுதும் புறஞ் சென்று; ஆற்றாமாக்கட்கு ஆற்றுந்துணை ஆகி ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் மேற் சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே பசித்துயரம் பொறாமல் வருந்துகின்ற இரவன்மாக்கள் பசியை மாற்றி அவரை ஆற்றாவாராக்குதற் பொருட்டு இல்லந்தொறும் சென்று பிச்சை ஏற்றலும் அப் பிச்சையுண்டியை ஆற்றாமாக்கட்கு வழங்குதலும் பிச்சை ஏற்போர்க்குரிய கடமைகளாகும் என்றும், அவ்வாறு இரப்பவர் தாமும் காணாரும் கேளாரும் முதலியவராக அவ்வாற்றாமாக்கள் இருக்குமிடத்தே சென்று அவ்வுணவினை வழங்கிப் பேணுதல் மிகவும் சிறந்த நல்வினையாகும் என்றும்; நூல் பொருள் உணர்ந்தோர்- பிடக நூலின் பொருளை ஐயந்திரிபற உணர்ந்த சான்றோர்; நுனித்தனர்- கூறுந் துணர்ந்துரைத்தனர் ஆதலின்; அம் என-அங்ஙனம் செய்தலே இப்பொழுது நமக்கியன்ற செயலாகும் என்று துணிந்து என்க.

(விளக்கம்) இப் பகுதியில் மணிமேகலை தனக்கும் தன்னாலே பிறர்க்கும் சிறிதும் இடர் வாராமைக்கும் ஆற்றாமாக்கட்கு ஆற்றுந் துணையாய் அவர்க்கெல்லாம் இன்பஞ் செய்தற்கும் சூழ்கின்ற இச் சூழ்ச்சி பெரிதும் நுணுக்க முடையதாதலுணர்க. இங்ஙனம் சூழவல்ல அறிவை எதிரதாக் காக்கும் அறிவு என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் போற்றிக் கூறுவர்

எதிரதாக் காக்கும் மறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்      (429)

என்பது செந்தமிழ் மறை

ஆனைத் தீப்பசியை ஆற்றுதற் பொருட்டுக் காயசண்டிகை இடையறாது அந் நகரத்திலே பிச்சை ஏற்றத் திரிந்தமையாலே அவளை ஊர் முழுதும் அறியும். அவள் அவ்வூரை விட்டுப் போய் விட்டமை மணிமேகலை மட்டும் அறிகுவள். அவ்வூரிற் பிறர் யாரும் அறியாமையின் அவ்வுருவங் கொண்டு திரிந்தால் தன்னை எல்லாரும் காயசண்டிகை என்றே கருதுவர்; மன்னவன் மகனும் நாளடைவில் தன்னை மறந்தொழிவான் என்றுட் கொண்ட படியாம்.

பிச்சை ஏற்பது தானும் பிறர் பொருட்டே ஏற்றல் வேண்டும், ஏற்போர் ஒல்லும் வகையால் அவ்வாற்றானும் ஓவாத அறவினை செய்தல் வேண்டும், தம் பொருட்டு ஏற்றல் தீவினையாம் என்னு மிவ்வறங்கள் பிடகநூல் கூறும் அறங்கள் போலும் என்னை? இவ்வறம் நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் என்றமையால் ஈண்டு நூலெனப்படுவது பிடக நூல்களே யாதலின் என்க.

இரப்போர்க்கு ஏற்றலும் இடுதலும் கடன் ஆகலின் யாம் இடுவது கண்டும் அயிர்ப்பாரிலர் என்று துணிவாள் அவர் மேற் சென்றளித்தல் விழுத்தகைத்து என்று நூலோர் நுனித்தனர் என்று நினைந்தனள் என்க.

நுனித்தல்- நுணுக்கமாக அறிதல். ஆம் என-என்று அறுத்துக் கண்ணழித்து இங்ஙனம் செய்தலே இப்பொழுதைக்கு நமக்குத் தகதி யாம் என்று கருதி என்று பொருள் விரித்திடுக.

மணிமேகலை சிறைக்கோட்டம் புகந்து உண்டி கொடுத்து உயர் அறம் பேணல்

39-46: முதியாள்.....................ஊட்டலும்

(இதன் பொருள்) முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த அமுதசுரபியை அங்கையின் வாங்கி- சம்பாபதியின் கோயிலாகிய குச்சரக்குடிகையின் உள்ளே தான் கொடுபோய் வைத்திருந்த அமுதசுரபி என்னும் தெய்வத்தன்மையுடைய திருவோட்டினை எடுத்துத் தன் அழகிய கையிலே ஏந்தி; பதி அகம் திரிதரும் பைந்தொடி நங்கை- காயசண்டிகை வடிவத்தோடே அந் நகரத்தினூடே இரவலரை நாடித் தான் வேண்டியாங்கு இயங்குகின்ற அம் மணிமேகலை நல்லாள்; அதிர் கழல் வேந்தன் அடிபிழைத்தாரை ஒறுக்கும் தண்டத்து உறுசிறைக் கோட்டம் விருப்பொடும் புகுந்து-ஒலிக்கின்ற வீரக்கழல் கட்டிய சோழ வேந்தன் தன் திருவடியின் கீழிருந்தும் அறியாமையாலே பிழை செய்த மாக்களை அப் பிழைக்குத்தகத் துன்புறுத்தும் தண்டம் காரணமாகப் பிழை செய்த அம் மாக்கள் புக்குறைகின்ற சிறைக்கோட்டத்தினுள்ளே உண்டி கொடுத்து அவர் உறுபசி களைதற்குப் பெரிதும் விரும்பிப் புகுந்து; ஆங்கு வெய்து உயிர்த்துப் புலம்பி பசிஉறு மாக்களை-அச் சிறைக் கோட்டத்தில் துன்பத் தாலே வெய்தாக நெடுமூச்செறிந்து பசியாலும் வருந்தியிருக்கின்ற அரிய உயிரையுடைய மாக்களை இனிதிற்கூவியழைத்து; வாங்கு கையகம் வருந்த நின்று ஊட்டலும்-அம் மக்கள் ஏந்துகின்ற கைகள் பொறையால் வருந்துமாறு மிகுதியாக அமுதசுரபியினின்றும் உணவுகளை நிரம்பப்பெய்து உண்ணச் செய்யுமளவிலே என்க.

(விளக்கம்) முதியாள்: சம்பாபதி. கோட்டத்து அகவயினிருந்த அமுத சுரபியை வாங்கி என்றமையால்-முன்னர்க் காயசண்டிகை வடிவாய்ப் பாத்திரம் ஏந்தி வந்து தோன்றியவள் மன்னவன் மகன் போயபின் மீண்டும் கோயிலுட் புகுந்து வைத்த பாத்திரத்தை இன்னது செய்வல் என எண்ணித் துணிந்த பின் எடுத்தாள் என்பது பெற்றாம்.

வாங்கி-எடுத்து. பைந்தொடி: மணிமேகலை. பசியால் வருந்துவோர் சிறைக் கோட்டத்துள் மிக்கிருப்பர் என்னும் கருத்தால் சிறைக் கோட்டத்துப் புகுந்தபடியாம்.

அதிர்கழல்-ஒலிக்கின்ற வீரக்கழல். பகைவர் உள்ளம் நடுங்குதற்குக் காரணமான வீரக்கழல் எனினுமாம். வேந்தன் அடிபிழைத்தார் என்றது- நாட்டினிற் செங்கோன் முறையினில்லாமல் குற்றம் புரிந்த மாந்தரை, ஒறுத்தல்-துன்புறுத்துதல் உறுசிறை: வினைத்தொகை. ஆருயிர் என்றார் துன்புழித் தொறும் காதலிக்கப் படுமருமையுடைத்தாதல் பற்றி.

கோட்டங் காவலர் வியந்து கோவேந்தனுக் கறிவிக்கச் செல்லுதல்

47-50: ஊட்டிய................ஏகி

(இதன் பொருள்) கோட்டங் காவலர்-கோவேந்தனுடைய சிறைக் கோட்டத்தைக் காவல் செய்கின்ற அரசியற் பணியாளர் மணிமேகலை அச் சிறைக் கோட்டத்தே புகுந்து பசியால் வருந்துகின்ற மாந்தரையெல்லாம் அழைத்து அமுதூட்டி நிற்கும் காட்சியைக் கண்ணுற்று; ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து-என்னே! இஃது என்னே! எண்ணிறந்த மாந்தர்க் கெல்லாம் இவள் அவரவர் வேண்டியவுணவினை ஏற்போர் கையகம் வருந்துமாறு வழங்கும் கருவி இவள் கையிலேந்திய திருவோடு ஒன்று மட்டுமே யாகவுளது, இக்காட்சி பெரிதும் வியக்கத் தக்கது என்று மருண்டு; கோமகன் தனக்கு இப் பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும்-யாம் நம்மரசர் பெருமானுக்கு இத் திருவோடு உணவு தருகின்றதும் அவ்வுணவினை ஆர்வத்தோடு நின்றூட்டுவதுமாகிய இவ்வற்புதம்; யாப்புடைத்தாக-திருச்செவியோடு தொடர்புடையதாகும்படி; இசைத்தும் என்று ஏகி- சென்று கூறுவேம் என்று துணிந்து போய் என்க.

(விளக்கம்) பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் ஆகிய இவ்வற்புதக் காட்சியை என்று வருவித்தோதி யாப்புடைத்து என்னும் ஒருமையோடியைக்க அன்றி: பன்மை ஒருமை மயக்கம் எனினுமாம் இசைத்தும்-கூறுவேம்.

(51-ஆம் அடிமுதலாக, 116 ஆம் அடியீறாகச் சோழ மன்னனுடைய பொழில் விளையாட்டு வண்ணனையாக ஒரு தொடர்)

சோழமன்னன் உரிமையோடு சென்று பூம்பொழிலிற் புகுந்து விளையாடுதல்

51-60: நெடியோன்................சிறந்தும்

(இதன் பொருள்) நெடியோன் குறள் உருவு ஆகி- திருமால் தேவர்கள் வேண்டுகோட்கிணங்கிக் காசிபன் என்னும் முனிவன் பத்தினியாகிய அதிதி என்பவள் வயிற்றில் குறிய உருவமுடையவனாகப் பிறந்து மாவலியின் வேள்விக் களத்திலே சென்று; நிமிர்ந்து தன் அடியில் படியை அடக்கிய அந்நாள்- பேருருக் கொண்டு தனது ஒரே திருவடியில் இந் நிலவுலகத்தை எல்லாம் அடக்கி அளந்து தனதாக்கிக் கொள்ளும் பொருட்டுப் பண்டொரு காலத்தே மூன்றடி மண்ணிரந்த நாளிலே; நீரின் பெய்தமூரிவார் சிலை மாவலி மருமான்-ஆசிரியனாகிய வெள்ளிதடுக்கவும் இல்லை என்னாமல் அவ் வாமனன் இரந்த மண்ணை நீர் வார்த்து வழங்கிய வள்ளன்மையையும் அமரர் முதலியோரையும் வெல்லுதற்கியன்ற பெரிய நெடிய விற்படையையும் உடைய புகழாளனாகிய மாவலியின் வழித்தோன்றலாகிய மன்னவனுடைய; சீர்கெழு திருமகள் சீர்த்தி என்னும் திருத்தகு தேவியொடு-கற்புடைமையாலே புகழ் பொருந்திய செல்வமகளாகிய சீர்த்தி என்னும் திருப்பெயரையுடைய திருமகளை ஒத்த தன் பெருந்தேவியோடு; போது அவிழ் பூம் பொழில் புகுந்தனன்(மாவண்கிள்ளியாகிய சோழமன்னவன்)- நாளரும்புகள் இதழ் விரிக்கின்ற தனது பூம்பொழிலிலே புகுந்தானாக; புக்கு கொம்பர்த் தும்பி குழல்இசை காட்ட பொங்கர் வண்டு இனம்  நல் யாழ் செய்ய குயில் வரி பாட மாமயில் ஆடும்-புகுந்து அப் பொழிலினூடு ஒரு சார் மலர்ந்த கொம்புகளிலே தேன் தேர்கின்ற தும்பிகள் தமது முரற்சியாலே வேய்ங் குழலின் இன்னிசையைக் செய்யாநிற்பவும் அப் பொழிலிடத்துப் பல்வேறு வகைப்பட்ட வண்டுகள் யாழின் இசைபோன்று இனிதாக முரலா நிற்பவும் குயில்கள் இனியமிடற்றுப் பாடலைப் பாடா நிற்பவும் நீலமயில்கள் விறலியர் போன்று கூத்தாடுகின்ற; விரைப் பூம்பந்தர் கண்டு உளம் சிறந்தும்- நறுமணம் கமழ்கின்ற மலர்க்கொடிகளாலியன்ற ஆடலரங்கு போன்ற பந்தரின் எழில் கண்டு உள்ளத்தில் உவகைமிக்கும்; என்க.

(விளக்கம்) ஈண்டுக் கூறப்படுகின்ற சோழமன்னனை மாவண்கிள்ளி என்பர். இக் காதையில் 127 ஆம் அடியில் வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி என்றோதுதல் காண்க. பிறிதோர் இடத்தில் நெடுமுடிக்கிள்ளி என்றலின் கிள்ளி என்பதே இவன் பெயர் என்று தெரிகின்றது. இவனைக் கிள்ளி வளவன் என்றும் கூறுப.

இக் கிள்ளியின் மனைவியின் பெயர் சீர்த்தி என்பதாம். இவளைப் புலவர் பெருமான் ஈண்டு நான்கு அடிகளாலே விதந்தெடுத்துப் பாராட்டி நம்மனோர்க்கு அறிவிக்கின்றனர். இவ்வடிகளாலே இக் கோப்பெருந் தேவி புகழப்படுகின்றாளேனும் அது வஞ்சப் புகழ்ச்சியேயாம். அவளை அரக்கி என்றிகழ்வதே நூலாசிரியர் குறிப்பாகும். இவள் பின்னர் மணிமேகலைக்குச் செய்யும் கொடுமை இரக்க மென்றொரு பொருளிலாத நெஞ்சினராகிய அரக்கர் செய்தற்கியன்ற செயலாக இருத்தலின் அவளுடைய குலம் அரக்கர் குலம் என்பதை அறிவுறுத்தவே புலவர் இவ்வாறு வஞ்சப் புகழ்ச்சியாகப் பாராட்டுகின்றனர். இந் நுணுக்க முணராக்கால் ஈண்டு நீளதாக அவளைப் புகழ்வது மிகைபடக் கூறலாய் முடியும் என்க.

மாவலி தேவர்களுக் கிடுக்கண் செய்ய அது பெறாத தேவர் திருமாலிடத்தே தஞ்சம் புக்கனர். அவர் இடுக்கண் தீரத் திருமால் குறள் உருவாகிச் சென்று மாவலியின்பால் மூவடி மண்ணிரந்தான்; திருமாலின் சூழ்ச்சியை அறிந்த வெள்ளி கொடாதே என்று தடுத்தான்; அவனை இகழ்ந்து நீர்வார்த்த நில மீந்தான். அம் மாவலியின் இவ் வள்ளன்மைச் சிறப்புக் குறிப்பாகத் தோன்றுதற்கே நீரிற் பெய்த என்றார். அவனுடைய ஆற்றற் சிறப்பை வில்லிற் கேற்றி மூரிவார் சிலை மாவலி என்றார்.

மாவலி மருமான்- மாவலி மரபிற்றோன்றிய ஓரரசன். அவள் அரக்கர் மரபிற் பிறந்தவள் என்றறிவித்தலே புலவர் கருத்தாகலின் அவள் தந்தை பெயர் கூறாது மாவலி மருமான் மகள் என்றொழிந்தார். திருமகள் என்றது செல்வ மகள் எனவும் திருத்தகு தேவி என்றது திருமகள் எனத் தகுந்த தேவி எனவும் வெவ்வேறு பொருள் காண்க. மாவலி மரபு மன்னர் பாணவரசர் எனவும் கூறப்படுவர். அவராவார் வாணகப்பாடி முதலிய இடத்தை ஆட்சி செய்தவர். போது- நாளரும்பு. அன்றலரும் அரும்பு என்றவாறு. கொம்பர் மலர்க்கொம்பு. தும்பி வண்டு என்பன அவற்றின் வகை. யாழ்: ஆகுபெயர் வரியையுடைய குயிலுமாம். மா- சிறப்புமாம். விரை நறுமணம்.

இதுவுமது

91-70: புணர்...........என்றும்

(இதன் பொருள்) புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு மடமயிற் பேடையும் தோகையும் கூடி- தன்னோடு புணரும் காதற்றுணையாகிய பெடையன்னம் பிரியப் பெற்றுப் பொய்கையின்கண் தனத்திருக்கின்ற அன்னச் சேவலொடு தோகையையுடைய ஆண் மயிலும் அதன் புணர் துணையாகிய மடப்பமுடைய பெடையும் தம்முட் கூடி; ஆங்கு இருசிறை விரித்து எழுந்து உடன் கொட்பன-அவ் விடத்தே தம்மிரு சிறகுகளையும் விரித்தெழுந்து ஒரு சேரச் சுற்றி வருபவற்றை; ஒரு சிறைக் கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி-ஓரிடத்தே கண்டபொழுது உள்ளத்தே பெரிதும் மகிழ்ந்து; மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும்-நீலமணி போன்ற நிறமுடைய மாயவனும் அவன் தமையனாகிய பலதேவனும் நப்பின்னைப் பிராட்டியும் ஒருங்கு கூடி ஆடிய குரவைக் கூத்தையே ஒக்கின்றது இப் பறவைகள் கூடி ஆடுகின்ற இக் காட்சி என்று நெடும் பொழுது அவ்வழகை நோக்கி நின்றும்; கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை பாங்கு உற இருந்து பல்பொறி மஞ்ஞையை-கோங்க மரத்திலே மலர்ந்திருக்கின்ற ஒரு மலரின் மேலே பொருந்துமாறு அதனயலே நிற்கின்ற மாமரத்திலே காய்த்துத் தூங்குகின்ற முகஞ் சிவந்த கனியையும் அதன் பக்கத்திலே கோங்கங் கொம்பிலே அமர்ந்திருக்கின்ற பலவாகிய புள்ளிகளையுடைய மயிலையும் ஒருங்கே நோக்கி; செம்பொன் தட்டில் தீம்பால் ஏந்திப் பைங்கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும்- சிவந்த பொன்னாலியன்றதொரு தட்டிலே இனிய பாலைப் பெய்து கையிலேந்தித் தான் வளர்க்கின்ற பசிய கிளிக்கு ஊட்டுவாளொர நங்கையைக் காண்பது போல்கின்றது இக்காட்சி என்று அக்காட்சியை நயந்து நோக்கியும்; என்க.

(விளக்கம்) புணர்துணை-புணர்ந்து மகிழ்தற்குக் காரணமான பெடையன்னம். துணை நீங்கிய அன்னம் என்றது சேவலன்னத்தை. இது பலதேவனுக்குவமை. தோகை-ஆண்மயில் இது ;நீலமணி வண்ணனாகிய மாயவனுக்கும் அதன் பெடை நப்பின்னைப் பிராட்டிக்கும் உவமைகள்.

குரவை-கை கோத்தாடும் ஒரு வகைக்கூத்து.

மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவை என்பதனோடு

மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர
ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழுதேத்தத்
தாதெருமன் றத்தாடும் குரவையோ தகவுடைத்தே

எனவரும் சிலப்பதிகாரமும்(17) நினைவு கூரற்பாலதாம்.

மலர்ந்த கோங்கமலர்க்குப் பொன்னாலியன்ற தட்டும் அம் மலர்மேற் பொருந்தத் தூங்கும் மாங்கனிக்குப் பைங்கிளியும் அவற்றின் மருங்கே மரக்கிளையிலமர்ந்திருக்கின்ற மயிலுக்குப் பாவை(பெண்)யும் உவமைகள். பைங்கிளி என்ற குறிப்பாலும் காயென்னாது கனி என்றதனாலும் முகஞ்சிவந்த கனி என்று கொள்க. கனிந்த முகம் கிளியின் அலகிற்கும் பசிய ஏனைய பகுதி கிளியின் உடலிற்கும் உவமைகளாக நுண்ணிதிற் கண்டு கொள்க.

இனி இவ்வுவமையோடு

வண்டளிர் மாஅத்துக் கிளிபோல் காயகிளைத்துணர்

எனவும்,(அகம்-37)

சேடியல் வள்ளத்துப் பெய்தபால் சிலகாட்டி
ஊடுமென் சிறுகிளி யுணர்ப்பவள் முகம்போல
............................................
கடிகயத் தாமரைக் கமழ்முகை கரைமாவின்
வடிதீண்ட வாய்விடூஉம் வயலணி நல்லூர!
 
எனவும் வரும்(கலி-72) பிற சான்றோர் கூற்றுக்களும் நோக்கத் தகுவனவாம்.

இதுவுமது

71-78: மணி................ஏத்தியும்

(இதன் பொருள்) மணி மலர்ப் பூம்பொழில் அகவயின்-அழகிய மலர்களையுடைய பூம்பொழிலினுள்ளிடத்தே; பெருமதர் மழைக்கண் மடவோர்க்கு இயற்றிய மாமணி ஊசல்- பெரிய மதர்த்த குளிர்ந்த கண்ணையுடைய உரிமை மகளிர் ஏறி ஆடுதற் பொருட்டு இயற்றப்பட்ட சிறந்த மணிகள் பதித்த பொன்னூசலின் மேல்; கடுவன் இருந்த பிணவுக் குரங்கு ஏற்றி ஊக்குவது கண்டு நகை எய்தியும்-ஆண் குரங்கு தன் பக்கலிலே இருந்த தன் காதலியாகிய பெண் குரங்கை ஏற்றி வைத்து ஆட்டுவதனைப் பார்த்து நகைத்தும்; பாசிலை செறிந்த பசுங்கால் கழையொடு வால் வீசெறிந்த மராஅங் கண்டு- பசிய இலைகள் செறிந்திருக்கின்ற பிச்சை நிறமான தண்டினையுடைய மூங்கிலோடு வெள்ளிய நாண் மலர் செறிய மலர்ந்து நிற்கின்ற வெண்கடப்ப மரத்தினையும் ஒரு சேரக் கண்டு இக் காட்சியானது; நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என-நெடுமாலாகிய மாயவன் தன் தமையனாகிய பலதேவனோடு நிற்பவனுடைய தோற்றத்தை நினைவூட்டுகின்றது என்று இறையன்பு கொண்டு; தொடி சேர் செங்கையின் தொழுது நின்று ஏத்தியும்-வீர வலையங் கிடந்த தனது சிவந்த கைகளைக் குவித்து நின்று வாழ்த்தியும் என்க.

(விளக்கம்) மணிமலர்-அழகிய மலர். பிணவுக் குரங்கு-பெண் குரங்கு. பிணவு என்னும் சொல் குரங்கிற் பெண்ணிற்கு வந்தமை தொல்-மரபி-58 ஆம் சூத்திரத்தே ஒன்றிய என்று இலேசாற் கொள்க.

மடவோர் என்றது உவளகத்து மகளிரை. மணி கூறியதனால் மணி பதித்த பொன்னூசல் என்க. கடுவன்-ஆண் குரங்கு. குரங்குகள் மக்கள் செய்வதனைப் பார்த்தவழி அது போலத் தாமும் செய்யும் இயல்புடையன ஆதல் ஈண்டு நினைக. நெடியோன்-மாயவன். மாயவனுக்கு இலை செறிந்த பச்சை மூங்கில் உவமை. வெள்ளிய மலர் செறிந்த வெண்கடம்பு பலதேவனுக்குவமை. இதனோடு ஒருகுழை ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும் எனவரும் கலியடியையும்(26) நோக்குக. பச்சைமூங்கிலும் வெண்மலர் செறிந்த மராஅமும் ஓரிடத்தே சேர்ந்து நிற்குங் காட்சி மாயவனும் பலதேவனும் ஓரிடத்தே நிற்குங் காட்சி போறலின் அக் கடவுளர்பால் அன்புடைமையின் கைகூப்பித் தொழுதனன் என்றவாறு. தொடி-வீரவலையம்.

அரசனோடாடும் அரிவையரியல்பு

79-92: ஆடல்..............அயர்ந்து

(இதன் பொருள்) ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிப்போர் நாடகக் காப்பிய நல் நூல் நுனிப்போர்-கதை தழுவாமல் இசைப்பாட்டின் தாளத்திற் கேற்பக் கால்பெயர்த்திட்டாடுமியல்பினையுடைய ஆடற் கலையினோடு பாட்டின் பொருள் புலப்படக் கை காட்டி அவிநயிக்கும் இசைக்கலையும் நாடக வழிக்குப்பற்றி இயற்றப்பட்ட அகப்பொருட் பனுவல்களின் உள்ளுறையும் இறைச்சியுமாகிய நுண்பொருளை நுணுக்கமாக உணர்ந்து கூறும் இயற் கலையுமாகிய மூன்று கலைகளையும் கூர்ந்துணர்ந்தவரும்; பண் யாழ் நரம்பின் பண்ணுமுறை நிறுப்போர்-எழிசைகளையுமுடைய யாழின் நரம்புகளை வருடிப் பண்களை நூன் முறைப்படி எழுவி இசைக்க வல்லாரும்; தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர்-தோற் கருவிகளுள் தலையாய மத்தளத்தின் இருமுகத்தினும் இசைகூட்டி அடித்தலை நன்குணர்ந்தவரும்; குழிலொடு கண்டம் கொளச் சீர் நிறுப்போர்-வேய்ங் குழலின் இசையோடு தமது மிடற்றிசை பொருந்தும்படி பாடி தாளத்தாலே அளப்பவரும்; பழுகிய பாடல் பலரொடு மகிழ்வோர்-இலக்கணம் நிரம்பி இன்பம் கெழுமிய பண்களைப் பலர் கேட்ப அரங்கிலிருந்து பாடிக் கேட்போர் பலரும் மகிழ்தல் கண்டு அவரினுங் காட்டிற் பெரிதும் மகிழுபவரும்; ஆரம் பரிந்த முத்தம் கோப்போர்-அறுந்த மாலையினின்றும் உதிர்ந்த முத்துக்களை அழகுறக் கோப்பவரும்; ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர்-ஈரமின்றி உலர்ந்த சந்தனச் சுண்ணத்தை வியர்வொழிய மார்பிலே அப்புவோரும்; குங்குமம் கொங்கையின் வருணம் இழைப்போர்-குங்குமத்தைக் கொண்டு முலைகளுக்கு வண்ணந் தீற்றுவோரும்; அம் செங்கழுநீர் ஆய்இதழ் பிணைப்போர்-அழகிய செங்கழுநீரினது அழகிய மலரை மாலையாகத் தொடுப்பவரும்; நல் நெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர்-இயற்கையழகுமிக்க நெடிய தம் கூந்தலை நறுமணப் புகையிலே மூழ்குவிப்பவரும்; பொன்னின் ஆடியின் பொருந்துபு நிற்போர்-திருமகள் போன்று தமது நிழல் நிலைக்கண்ணாடியிலே பொருந்தும்படி அதனெதிரே தமதழகைக் கண்டு நிற்பவரும் ஆகிய; ஆங்கவர் தம்மொடு-இன்னோரன்ன கலை நலமிக்க மகளிர் பலரோடுங் கூடி; அகல் இரு வானத்து வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து-அகன்ற பெரிய வானுலகத்து வாழும் அமரர் கோமானாகிய இந்திரன் அரம்பையரோடு சென்று கற்பகப் பொழிலில் விளையாடுமாறு போலப் பூம்பொழிலிற் புகுந்து விளையாடல் செய்து என்க.

(விளக்கம்) ஆடல்-தாளத்திற்கேற்ப அடிபெயர்த்து ஆடும் நடனம் அவிநயம்-பாடலின் பொருள் தோன்றக் கை காட்டி வல்லபஞ் செய்தல். நாடகக் காப்பியம்-அகப்பொருட்பனுவல். என்னை? இது நாடக வழக்கும் உலக வழக்குந் தழுவி இயற்றப்படுஞ் செய்யுள் ஆதலின் நாடகக் காப்பியம் என்றார். நுனித்தல்-உள்ளுறையும் இறைச்சியும் குறிப்புமாகிய செய்யுட் பொருளைக் கூர்ந்துணர்ந்து கூறுதல். என்னை?

கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மார்ந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே

என்பவாகலின் (தொல்-மெய்ப்-சூ-27) நன்னூல் அறிவோர் என்னாது நுனிப்போர் என்றார். எனவே ஈண்டு இயல் இசை நாடகம் என்னும் முத்திறத்துத் தமிழ்க்கலையும் வல்ல மகளிரும் கூறப்பட்டமையிறிக.

தண்ணுமை- மத்தளம். கண் என்றது அதன் இரண்டு முகங்களையும். எறி-எறிதல்; முழக்குதல். கண்ணெறி என்பதனை நெறி எனக் கண்ணழித்துக் கண்களில் இசை கூட்டும் நெறி எனினுமாம். என்றது இரண்டு கண்களினும் சுதி கூட்டும் முறை என்றவாறு. என்னை?

இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய்
நடப்பது தோலியற் கருவி யாகும்

என்பது முணர்க.(சிந்தா- செய்=675-நச்சி=உரை)

குழல்- வேய்ங்குழல். கண்டம்-மிடறு. குழலிசையோடு மிடற்றிசை பொருந்தப் பாடித் தாளத்தால் அளந்து அறுதி செய்வோர் என்க.

பழுநிய-நிரம்பிய; முற்றிய. பாடல்-இசைப் பாடல்; உருக்கள் ஆரம்-மாலை. பரிந்த முத்து-அறுந்துதிர்ந்த முத்து. விளையாட்டாகலின் ஆரம் அறுந்து உதிரும் முத்துக் கோக்கும் மகளிரும் வேண்டிற்று. ஈரம் புலர்ந்த சாந்தம்- சந்தனச் சுண்ணம். ஆடுங்கால் வியர்வை யொழியச் சுண்ணம் அப்புவோர் என்றவாறு. கூந்தலை நறுமணப் புகையில் மூழ்குவிப்போர் என்க. கூந்தலில் விரையூட்டி நீரின் மூழ்கி விளையாடுவோர் எனினுமாம். பொன்னின்- திருமகள் போல. இவரும் இன்னோரன்ன பிற மகளிரும் என்பார் ஆங்கவர் தம்மொடு என்றார். வேந்தன்-இந்திரன் வேந்தன் தீம்புனலுலகமும் என்புழி அஃதப் பொருட்டாதலறிக. விளையாட்டயர்ந்து- விளையாடி என்னும் ஒரு சொன்னீர்மைத்து.

பூம்பொழிலின் இயல்பு

93-99: குருந்தும்.............நின்றும்

(இதன் பொருள்) குருந்தும் தளவும் திருந்து மலர்ச்செருந்தியும் முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும்-அவ் விளையாட்டில் இளைப்புழிக் குருந்த மர நிழலினும் செம்முல்லைப் பூம்பந்தரின் கீழும் அழகிய மலரையுடைய செருந்தி மரத்தின் நீழலினும் மணம் பரவுகின்ற முல்லைப் பூம்பந்தரின் கீழும் கருவிள மரச்சோலையினூடும்; பொருந்துபு நின்று-சேர்ந்து நின்றும்; திருந்து நகை செய்தும்- விளையாட்டின் வெற்றி தோல்வி பற்றி ஒருவரோடுடொருவர் அழகிய புன்முறுவல் செய்தும்; குறுங்கால் நகுலமும் நெடுஞ் செவி முயலும் பிறழ்ந்துபாய் மானும் இறும்பு அகலா வெறியும்-குறிய கால்களையுடைய கீரியும் நெடிய செவியையுடைய முயலும் பொள்ளெனத் தம்மைக் கண்டவுடன் திசைமாறி ஓடுகின்ற மானும் குறுங்காட்டைவிட்டு அகலாமல் நிலைத்து வாழுகின்ற யாடும் ஆகிய உயிரினங்களைக் கண்டுழி; வம் எனக் கூஉய்-இங்கு வாருங்கள் என்று தன் விளையாட்டுத் தோழரை யழைத்து; மகிழ்துணையொடு தன் செம்மலர்ச் செங்கை காட்டுபு நின்றும்-அவ்விடத்தே தோழியரோடு விரைந்து வந்துற்ற தான் மகிழ்தற்குக் காரணமான வாழ்க்கைத் துணைவியாகிய சீர்த்தி என்னும் பெருந்தேவியோடு சேரநின்று அவற்றை அவர்க்குத் தன் செந்தாமரை மலர் போன்ற சிவந்த கையாலே காட்டி மகிழ்ந்து நின்றும் என்க.

(விளக்கம்) விளையாட்டயர்ந்து இளைத்துழி என்க. தளவு-செம்முல்லை. செருந்தி-ஒரு மரம். தளவு முல்லை என்பன அவை படர்ந்த பந்தர்க்கு ஆகுபெயர். பொங்கர்-சோலை. விளையாடுவோர் அணிவகுத்துத் தம்முள் மாறுபட்டு நின்று ஆடி வென்றாலும் தோற்றாலும் அவை பற்றிப் பேசி நகுதல் இயல்பாகலின் திருந்து நகை செய்தும் என்றார். திருந்து நகை-எள்ளல் முதலிய குற்றமற்ற நகை எனினுமாம், உடலும் உள்ளமும் ஆக்கமுற்றுத் திருந்துதற்குக் காரணமான நகை எனினுமாம்.

குறுங்கால் நகுலமும் நெடுஞ்செவி முயலும் எனவும் பாய்மானும் அகலா வெறியும் எனவும் வருவனவற்றுள் முரண்அணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுவித்தல் உணர்க.

நகுலம்-கீரி. இறும்பு-குறுங்காடு. வெறி-யாடு. வம்மென மாதரைக் கூஉய், வரவழைத்து அவர்களில் மகிழ் துணையோடு நின்று அவையிற்றை இன்னின்ன என்று சொல்லிக் கையாற் சுட்டிக் காட்டி என்றவாறு. காட்டுபு-காட்டி.

பிற விளையாட்டிடங்கள்

100-109: மன்னவன்..............விளையாடி

(இதன் பொருள்) மன்னவன்றானும்-இவ்வாறு மாதரார் குழுவினோடு விளையாட்டயர்ந்து அவரோடு காட்சி பல கண்டு நின்ற அரசன் பின்னரும்; மலர்க்கணை மைந்தனும் இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும்-அவ்வுரிமை மகளிரேயன்றி, காமவேளும் ஆடற்கு இனிய இளைமையுடைய வேனிலரசனும் இளைமையுடைய தென்றலாகிய செல்வனும் உடங்கியைய மாலைப் பொழுதில் மெல்லென ஆடுபவன்; எந்திரக் கிணறும் கல் இடும் குன்றமும் வந்து வீழ் அருவியும் மலர்ப்பூம்பந்தரும்-வேண்டும்பொழுது நீரை நிரப்பவும் வேண்டாத பொழுது கழிக்கவும் ஆகிய பொறியமைக்கப் பெற்ற கிணறுகளின் மருங்கும் கல்லிட்டுக் கட்டப் பெற்ற செய்குன்றுகளின் மருங்கும் வேண்டும் பொழுது வந்து வீழ்கின்ற நீர்வீழ்ச்சியின் மருங்கும் மலர்க் கொடிகள் படர்ந்த நறுமணங்கமழும் பல்வேறு மலர்ப் பந்தரினூடும்; நீர்ப்பரப்பு பொங்கையும் கரப்பு நீர்க்கேணியும் நன்னீர்ப் பரப்பினையுடைய நீர் நிலையின் கரைகளிடத்தும் ஒளித்து உறை இடங்களும்-தேடுவார்க்கு அகப்படாமல் கரந்திருத்தற் கியன்ற இடங்களினூடும்; பளிக்கறைப் பள்ளியும் பளிங்காலியன்ற மண்டபங்களாகிய தங்குமிடங்களும் ஆகிய யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி- பல் வேறிடங்களினும் திரிந்து இருந்தும் மெல்லென விளையாடுதலைச் செய்து என்க.

(விளக்கம்) 55 ஆம் அடி தொடங்கி, 78- தொழுது நின்றேத்தியும் என்பது முடிய மன்னவன் மகளிரொடு பூம்பொழிலிற் புகுந்து முற்பகலில் ஆங்காங்குச் சென்று அதனழகு கண்டு கண்டு மகிழ்தலும், 79 ஆம் அடி தொடங்கி 95 ஆம் அடிகாறும் மன்னவன் ஆடற்கூத்தியர் முதலிய கலைநலம் மிக்க மகளிரோடு மரநீழலினும் சோலையினூடும் இளைப்பாறி இருந்து பல்வேறு கலையின்பம் துய்த்திருத்தலும், நண்பகல் நிகழ்ச்சிகள் என்றும், 96 ஆம் அடி தொடங்கி 106 ஆம் அடி முடிய அம் மன்னவன் அம் மகளிரொடு தென்றற் காற்றை இனிது நுகர்ந்தவாறே யாங்கணும் மெல்லத் திரிந்தும் தாழ்ந்தும் ஆடிய மென்மையான நிகழ்ச்சிகள் என்றும் நிரலே கூறப்பட்டிருத்தல் குறிக் கொண்டு நோக்குக. ஏன்? இவன் உதயகுமரனுடைய தந்தையாகலின் அவன் முதுமைப் பருவத்திற் கேற்ப ஈண்டுக் கூறப்படுவன எல்லாம் காட்சி காண்டலும் வாளாது உலாப் போதலுமாகவே கூறல் வேண்டிற்று.

மாலைப் பொழுதிலே மகளிரொடு ஆடுதற்கியன்ற வேட்கையும் அவ்விளவேனிற் பருவமும் மெல்லிய தென்றற் பூங்காற்றும் யாண்டுந் திரிதரும் மன்னனுக்குப் பேருதவி செய்தலின் அவற்றையும் அவனுடைய விளையாட்டுத் தோழர்களாகவே குறிப்புவமஞ் செய்தார்.

இளவேனில்-சித்திரையும் வைகாசியும் ஆகிய இரண்டு திங்களுமாம். இப் பருவம் அழகு மாலையிலேதான் பெரிதும் மாண்புற்றுத் திகழும். பூந்தென்றலும் பிற்பகலிலேதான் இனிதாக இயங்கும். இவற்றைப் பட்டறிவால் உணர்க.

எந்திரக்கிணறு............பளக்கறைப் பள்ளியும் எனவரும் இப் பகுதியோடு

அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்
தண்பூங் காவும் தலைத்தோன் றருவிய
வெண்சுதைக் குன்றொடு வேண்டுவ பிறவும்
இளையோர்க் கியற்றிய விளையாட் டிடத்த
சித்திரப் பூமி வித்தகம் நோக்கி

எனவரும் பெருங்கதைப் பகுதி(1-33:3-7) ஒப்புநோக்கற் பாலதாம்.

எந்திரக்கிணறு-வேண்டுங்கால் நீர் நிரப்பவும் வேண்டாதபொழுது கழிக்கவும் பொறி பொருத்தப்பட்ட கிணறு.

கல்இடும் குன்றம் என மாறுக-கல்லிட்டுக் கட்டப்பட்ட செய்குன்றம் என்க. இக் குன்றத்தின் இயல்பினை

வெள்ளித் திரண்மேல் பசும்பொன் மடற்பொதிந்து
அள்ளுறு தேங்கனிய தாம்பொற் றிரளசைந்து
புள்ளுறு பொன்வாழைக் கானம் புடையணிந்த
தெள்ளுமணி அருவிச் செய்குன்றம் சேர்ந்தார்

எனவரும் சூளாமணி யானும்(1946) உணர்க.

சுரப்பு நீர்க்கேணி- நீருண்மை தெரியாமல் மறைக்கப்பட்டுள்ள கேணி

ஒளித்துறை இடம்-வழியும் எதிர்முட்டும் கிளை வழியும் பலப்பல வாக ஒளிந்து விளையாடற் பொருட்டுச் செய்யப்பெற்ற வழிகள். இவற்றில் களைவழி போலத் தோன்றுவன உள்ளே சென்றால் அடைபட்டிருக்கும். இவ் வழியினூடும் கிளை வழிகள் பல காணப்படும். இவ் வழிகளினூடே சென்று ஒளிந்திருப்பாரைக் கண்டுபிடித்தல் அரிது. ஆதலின் ஒளிந்து விளையாடும் இத்தகைய இடத்தையே ஈண்டு ஒளித்துறை இடம் என்றார். பள்ளி-தங்குமிடம்.

திரிந்தும் தாழ்ந்தும் என எண்ணும்மை விரித்தோதுக.

பைஞ்சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்தில் இந்திர திருவன் சென்றினிதேறுதல்

107-119: மகத................ஏறலும்

(இதன் பொருள்) மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்- மகதநாட்டுப் பிறந்த மணித்தொழில் வித்தகரும் மராட்டநாட்டுப் பிறந்த பொற் கம்மாளரும் அவந்திநாட்டுப் பிறந்த இரும்புசெய் கொல்லுத் தொழிலாளரும் யவனநாட்டுப் பிறந்த மரங்கொல் தச்சுத் தொழிலாளரும்; தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடி-குளிர்ந்த தமிழ் வழங்கும் நாட்டிலே பிறந்த தொழில் வித்தகரோடு கூடி; கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை- மன்னன் கருத்தைத் தெரிந்துகொண்டு இனிதாக இயற்றப்பட்ட காண்போர் கண்ணைக் கவருகின்ற கலையழகு மிளிரும் தொழிற் சிறப்பமைந்ததாய்; பவளத் திரள்கால் பல்மணிப் போதிகை தவள நித்திலத் தாமம் தாழ்ந்த கோணச்சந்தி மாண்வினை விதானத்து-பவளத்தாலியற்றிய திரண்ட தூண்களையும் ஒன்பது வகையான மணிகளும் பதிக்கப்பட்ட போதிகைகளையும் வெள்ளிய முத்துமாலைகள் தூங்காநின்ற மூலைகளாகிய மூட்டுவாய்களையும், மாட்சிமை பெற அமைத்த மேற்கட்டியினையும் உடையதாய்; தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் பொன்னாலே கூரை வேயப் பெற்றதுமாய்ப் பல்வேறு வகைப்பட்ட கலையழகோடு கூடி; பைஞ்சேறு மெழுகா பசும்பொன் மண்டபத்து-பசிய ஆப்பியாலே மெழுகப்படாமல் பசிய பொற்றகட்டாலே தளமிடப்பட்ட மண்டபத்தின்கண்; இந்திர திருவன் சென்று இனிது ஏறலும்-தேவேந்திரன் போன்ற பெரிய செல்வச் சிறப்புடைய அச் சோழ மன்னன் இனிது சென்று ஏதுமளவிலே என்க.

(விளக்கம்) இப் பகுதியோடு

யவனத் தச்சரும் அவந்திக் கொல்லரும்
மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும்
பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும்
கோசலத் தியன்ற வோவியத் தொழிலரும்
வத்த நாட்டு வண்ணக் கம்மரும்

எனவரும் பெருங்கதைப் பகுதி(1.58:40-44) ஒப்பு நோக்கற் பாலதாம்.

இதனால் மகதவினைஞர் என்றது அந்நாட்டு மணிவினைஞரை என்பது பெற்றாம். கம்மர்- வண்ணவினைஞர் எனவும் ஈண்டு மராட்டியர் அத்தொழிலில் சிறப்புடையர் எனவும் கொள்க. கொல்லர்-இரும்புத் தொழிலாளர். தச்சர்-மரங்கொல் தச்சர்.

பல நாட்டுக் கலைத்திறமும் ஒருங்கே திகழ வேண்டும் என்னும் கலையுணர்வு காரணமாக மகத முதலிய பிறநாட்டு வினைஞரும் வரவழைக்கப்பட்டுத் தண்டமிழ் வினைஞர் தம்மொடுங் கூட்டி வினை செய்விக்கப்பட்டனர் என்பது கருத்து.

திரள்கால்-திரட்சியுடைய தூண். போதிகை-தூணின் மேல் பொருத்தப்பட்டு உத்தரத்தைத் தாங்குமோருறுப்பு. பன்மணிப்போதிகை என்றதனால் இவ்வுறுப்புப் பொன்னாலியற்றப்பட்டுப் பல்வேறு மணிகளும் பதிக்கப்பட்டிருந்தன என்பது பெற்றாம்.

தவளநித்திலத் தாமம்-வெள்ளிய முத்துமாலைகள். கோணச் சந்தி-மூலையாகிய மூட்டுவாய். விதானம் சுடு மண்ணோடு முதலியவற்றால் வேயப்படாமல் பொன்னாலியன்ற ஓட்டால் வேயப்பட்ட கூரையையுடைய மண்டபம் என்க. பைஞ்சேறு என்றது-ஆப்பியை. ஆப்பியால் மெழுக வேண்டாது பசும்பொற் றளமிடப்பட்ட மண்டபம் என்பது கருத்து.

இந்திரதிருவன்-இந்திரன் போன்ற பெருஞ் செல்வமுடைய சோழமன்னன்.

கோட்டங் காவலர் செயல்

117-130: வாயிலுக்கு..................பகைஞர்

(இதன் பொருள்) வாயிலுக்கு இசைத்து-மன்னவன் இருக்குமிடம் வினவி அப் பசும் பொன் மண்டபத்திற்கு வந்தெய்திய சிறைக் கோட்டங் காவலர் தம் வரவினை வாயில் காவலருக்கு அறிவிக்குமாற்றால்; மன்னவன் அருளால்-அரசனுடைய கட்டளை பெற்றமையால் மண்டபத்துள்ளே புக்கு; சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி-தூரிய இடத்திலேயே அவன் திருவடி நோக்கி நிலத்தில் வீழ்ந்து வணங்கியதல்லாமலும் அவன் திருவருள் நோக்கம் தம்மிசை வீழ்ந்த செவ்வியினும் நிலத்தில் வீழ்ந்து வணங்கிக் கூறுபவர்; வாழி எங்கோ-வாழ்க எங்கள் கோமான்!; எஞ்சா மண் நசைஇ இகல் உளம் துரப்ப-ஒரு பொழுதும் குறையாத மண்ணை விரும்பிப் பிறரைப் பகைக்கும் ஊக்கமானது செலுத்துதலாலே; வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி- வஞ்சி மாநகரத்தினின்னும் வஞ்சிப் பூமாலையைச் சூடி; முறம் செவி யானையும் தேரும் மாவும் மறம்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த-முறம் போன்ற செவிகளையுடைய யானைப் படையும் தேர்ப்படையும் குதிரைப் படையும் மறப்பண்புடைய நெடிய வாள் முதலிய படைக்கல மேந்தும் போர் மறவரும் ஆகிய நாற் பெரும் படைகளுஞ் செறிந்த; தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர்-தலைமைத் தன்மை பொருந்திய தூசிப்படையோடு வந்து போர் செய்து முற்பட்டு வந்தவராகிய சேர மன்னனும் பாண்டிய மன்னனும் ஆகிய முவேந்தர் இருவரையும்; செருவேல் தடக்கை ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால்- போர் வேல் ஏந்திய பெரிய கையையும் ஆத்திப்பூவாற் றொடுக்கப்பட்ட மாலையினையும் உடைய நங்கள் இளைய வேந்தனை ஏவுமாற்றாலே; காரியாற்று சிலை கயல் நெடுங் கொடி கொண்ட- காரியாற்றின்கண் பொருது வென்று அவருடைய விற் கொடி மீன் கொடி ஆகிய அடையாளக் கொடியிரண்டையும் ஒரு சேரக் கைப்பற்றிக் கொண்ட; காவல் வெள்குடை வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி-குடிமக்கட்குத் தண்ணிழல் செய்து பாதுகாக்கும் வெண்கொற்றக் குடையையும் பகைவரைக் கொன்று நூழிலாட்டுதற்கியன்ற வலிய பெரிய கையையும் பெரிய வள்ளன் மையையும் உடைய கிள்ளிவளவனாகிய நங்கள் கோமான்; ஒளியொடு ஊழிதோறு ஊழி வாழி-புகழோடு ஊழி பலப்பல இனிது வாழ்க; மன்னவர் பெருந்தகை இது கேள்-வேந்தர் வேந்தே எளியேம் விண்ணப்பமிதனைத் திருச்செவி ஏற்றருள்க; நின் பகைவர் கெடுக- நின்னுடைய பகைவர் கெட்டொழிக! என்று வாழ்த்தி முன்னிலைப் படுத்திக் கூறுபவர், என்க.

(விளக்கம்) வாயிலுக்கு-வாயில் காவலருக்கு. மன்னவன் அருள் என்றது அவனது கட்டளையை. சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி என்றது மன்னவன் கட்டளை பெற்று அவனைக் காணச் செல்வோர் அவன் தம்மை நோக்கினும் நோக்காமல் பொது நோக்குடையவனாயிருப்பினும் ஏழு கோல் தொலைவிற்கு இப்பாலே திருவடிநோக்கித் தொழுது நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்து நிற்பர். பின்னர் மன்னவன் தம்மைச் சிறப்பாக நோக்குமாற்றால் செவ்வி பெறப்பொழுதும் மீண்டும் நிலத்தில் வீழ்ந்து வணங்கி யெழுந்தே தாம் கூற வேண்டிய செய்தியைக் கூறுதல் மரபு. இம் மரபு தோன்றச் சேய் நிலத்திலே வணங்கியதன்றி மீண்டும் செவ்வி பெற்ற பொழுதும் வணங்கினர் என்றவாறு. இம் மரபுண்மையை

இருந்த மன்னவற் கெழுகோ லெல்லையுட்
பொருந்தல் செல்லாது புக்கவ ளிறைஞ்ச
வண்ணமும் வடிவு நோக்கி மற்றவன்
கண்ணி வந்தது கடுமை சேர்ந்ததென்
றெண்ணிய இறைவன் இருகோல் எல்லையுள்
துன்னக் கூஉய் மின்னிழை பக்கம்
மாற்றம் உரையென மன்னவன் கேட்ப
இருநில மடந்தை திருமொழி கேட்டவட்
கெதிர்மொழி கொடுப்போன் போல விறைஞ்ச

எனவரும் பெருங்கதையாலு முணர்க.    (1.47:53-61)

செவ்வியின் வணங்கி என்றது அவன் தம்மைக் குறிக் கொண்டு நோக்கும் செவ்வி பெற்ற பொழுது மீண்டும் வணங்கி என்றவாறு. வணங்கி என்பதனை முன்னும் கூட்டுக.

வஞ்சி சேரமன்னர் தலைநகரம். வஞ்சி சூடி என்றதனால் பாண்டியன் சேரன்பாற் சென்று அவனொடும் அங்கிருந்தே வஞ்சி சூடி வந்தான் என்பது பெற்றாம். சிலையென்றொழியாது கயலும் கூறினமையின் மலைத்துத் தலைவந்தோர் சேரனும் பாண்டியனும் என்பது பெற்றாம். வஞ்சிப்பூச் சூடி என்க. மாற்றார் நிலத்தைக் கவரும் கருத்துடைய மன்னர் வஞ்சிப் பூச்சூடிச் செல்வது மரபு, இதனை

வஞ்சி தானே முல்லையது புறனே
எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே

எனவரும் கொல்காப்பியத்தானும்(புறத்திணை-சூ.7) அறிக.

ஈண்டும் ஆசிரியர் தொல்காப்பியனார் மொழியை எடுத்துப் பொன் போல் போற்றி எஞ்சா மண்ணசைஇ எனப் பொதிந்து வைத்திருத்தலு முணர்க.

வயவர்-போர் மறவர்; தார்ச் சேனை- தூசிப்படை. இளங்கோன் என்றது கிள்ளிவளவன் தம்பியாகிய நலங்கிள்ளியை. காரியாறு சோணாட்டின்கண் ஒரு யாறு. இதற்குத் திருத்தொண்டர் மாக்கதையில் திருநாவுக்கரசர் வரலாற்றில் வருகின்ற திருக்காரிக் கரை என்பதனை (செய்யுள் 343) எடுத்துக்காட்டுவாருமுளர். வடதிசைக்கண்ணதாகக் கூறப்படும் இக்காரி(க்கரை) இவ்வரலாற்றோடு பொருந்துமா? என்று ஆராய்ந்து காண்டற்குரியதாம் மற்று, ஈண்டுக் காரியா றென்றதே இக்காலத்தே கோரையாறென்று வழங்கப்படுகின்றது என்று ஊகிக்கவும் இடனுளது. இந்த யாறு மன்னார்குடி திருத்தருப்பூண்டிக் கூற்றங்களினூடு பாய்கின்றது. மலைத்துத் தலைவந்தோர் பாண்டியனும் சேரனுமாதலின் இங்ஙனம் ஊகிக்கின்றாம்.

அளியும் தெறலும் தோன்ற வெண்குடையும் வலிகெழுதடக்கையும் கூறினர். அவனது வள்ளன்மைச் சிறப்புத் தோன்ற மாவன் கிள்ளி என்றார்.

கோட்டங் காவலர் கோவேந்தனுக்குக் கூறல்

131-138: யானை................என்றலும்

(இதன் பொருள்) யானைத் தீ நோய்க்கு அயர்ந்து மெய் இம்மாநகர்த் திரியும் ஓர் வம்ப மாதர்-யானைத் தீ என்னும் நோயாற் பற்றப்பட்டு அது செய்யும் துயர்க்கு ஆற்றாமல் உடம்பு வாடி இரத்தற் பொருட்டு இப் பெரிய நகரத்தில் தெருக்கள் தோறும் திரிகின்ற இந்நகரத்திற்குப் புதியவளாகிய ஓர் இரவன் மகள்; அருஞ்சிறைக் கோட்டத்து அகவயின் புகுந்து- தப்புதற் கரிய நமது சிறைக் கோட்டத்தினுள்ளே புகுந்து; பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி-பெரிய புகழையுடைய அரசே நின் திருப்பெயரை எடுத்துக் கூறி வாழ்த்தி; ஐயப்பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள்- பிச்சைப் பாத்திரம் ஒரோஒவொன்றனைக் கைக் கொண்டு நின்று தன்னைச் சூழ்ந்து கொள்கின்ற ஆற்றாமாக்கள் அனைவர்க்கும் வேண்டுமளவுண்ணும்படி உண்டி வழங்குகின்றனள். இஃதோர் அற்புதமிருந்தவாறு அறிந்தருள்க என்று சொல்லி; வாழி எங்கோ மன்னவ என்றலும்- வாழ்க எங்கள் கோமானாகிய மன்னவனே என்று வாழ்த்தா நிற்ப என்க.

(விளக்கம்) வம்பமாதர் என்றார் அவள் இந்நாட்டினள் அல்லள் புதியவள் என்பது தோன்ற. அவளை ஊர் முழுதும் அறியுமெனினும் அரசன் அறிதற்கு ஏதுவின்மையின், இங்ஙனம் பிச்சை ஏற்றுத் திரிவாள் ஒருத்தி என அறிவித்தனர். பிச்சை ஏற்பவள் ஆகலின் அவளால் தீமையொன்றும் நிகழாதென்று யாங்கள் அவளைத் தடுத்திலம் என்பது தோன்ற, அருஞ்சிறைக் கோட்டத்தகவயிற் புகுந்து என்றார். அவள் தானும் அரசன்பால் நன்மையே நினைப்பவள் என்பது தோன்ற, நின் பெயர் வாழ்த்தி என்றார். நின்பெயர் வாழ்த்தி என்றது சோழமன்னன் மாவண்கிள்ளி நீடூழி வாழ்க என்று வாழ்த்தினள் என்றவாறு.

ஐயப்பாத்திரம்- பிச்சைக்கலம். ஒரு பாத்திரத்தைக் கொண்டே தன்னைச் சூழ்ந்து மொய்த்துக் கொள்வோர்க்கெல்லாம் உண்டி வழங்குகின்றாள், இஃதோர் அற்புதம் இருந்தவாறு அரசர் பெருமான் அறிந்தருள்க என்று வியப்பறிவித்தபடியாம்.

மன்னவன் வியந்து வரவேற்றல்

139-145: வருக.............கூறலும்

(இதன் பொருள்) அரசன் அருள்புரி நெஞ்சமொடு மடக்கொடி வருக வருக என்று கூறலின்-அவ்வற்புதம் கேட்டு வியப்புற்ற அரசன்றானும் அத்தகையாட்கு நம்மால் ஓல்லும் வகை அருளல் வேண்டும் என்னும் ஆர்வமுடைய நன்னர் நெஞ்சத்தோடு அந்நல்லாள் ஈண்டு வருக! வருக! என்று இருமுறை இயம்பாநிற்றலின்; வாயிலாளரின் மடக்கொடிதான் சென்று-அரசனுடைய வரவேற்பை அறிவித்த வாயிலாளரோடு மணிமேகலை தானும் அரசன் திருமுன் சென்று; ஆய்கழல் வேந்தன் அருள் வாழிய என-அழகிய வீரக்கழல் கட்டிய திருவடியையுடைய அரசர் பெருமானுடைய அருளுடைமை நெடிது வாழ்க! என்று வாழ்த்தா நிற்ப; அரசன் தாங்க அரும் தவத்தோய் நீ யார்? ஏந்திய இ கடிஞை யாங்கு ஆகியது என்று கூறலும்-அது கேட்டு மகிழ்ந்த அம் மன்னவன் தாங்குதற் கரிய தவவொழுக்கத்தையுடைய நங்காய்! நீ யார்? நின் கையிலேந்திய தெய்வத்தன்மையுடைய இத் திருவோடு நின் கையில் எவ்வண்ணம் வந்துற்றது? என்று வினவுதலும் என்க.

(விளக்கம்) வருக வருக என்று இருமுறை அடுக்கிக் கூறியது மன்னனுடைய ஆர்வமிகுதியைக் காட்டும். விரைந்துபோய் அத்தகைய வியத்தகு நங்கையை விரைந்து இங்கு அழைத்து வம்மின் என வாயிலாளர்க்குக் கட்டளையிட்டபடியாம். வாயிலாளர்-ஈண்டுக் கோட்டங் காவலர்.

எளியளாகிய என்னை அழைத்தமைக்குக் காரணமான நின் அருள் வாழிய என்று வாழ்த்தியவாறு. அருளறமே அனைவரும் பேணற்பாலதாகலின் நின்பால் அவ்வருளறம் நிலைத்து வாழ்க என்று வாழ்த்தினள் எனக் கோடலுமாம்.

மணிமேகலை காயசண்டிகை வடிவக்தினும் பிக்குணிக் கோலமே பூண்டிருத்தலின் அவள் வரலாறறியாத மன்னவன் அவளைத் தாங்கருந் தவத்தோய் என்று விளித்தான். தவத்தால் இருத்தி பெற்றார்க்கன்றி இத்தகைய அற்புதச் செயல் நிகழ்த்தலாகாமையின் இங்ஙனம் இனிதின் விளித்தான். மேலும் ஒரு பாத்திரத்தாலே பல்லுயிர் ஓம்புகின்றனள் என்று கேட்டிருந்தமையின் இங்ஙனம் அற்புதம் விளைக்கும் இப் பாத்திரம் எங்ஙனம் நின்னுடையதாகியது என்றும் வினவினன். கூறலும் என்றது வினவலும் என்பதுபட நின்றது.

மணிமேகலை மன்னன் வினாவிற்கும் விடை கூறுதல்

145-154: ஆயிழை...........இதுவென

(இதன் பொருள்) ஆயிழை கூறும்-அது கேட்டு மணிமேகலை கூறுவாள்; விரைத்தார் வேந்தே நீ நீடூழி வாழி- மணமிக்க ஆத்தி மாலையையுடைய அரசே நீ நீடூழி காலம் வாழ்வாயாக!; யான் விஞ்சை மகள் விழவு அணி மூதூர் வஞ்சம் திரிந்தேன்-யான் ஒரு வித்தியாதரமகளாவேன், திருவிழாக்களாலே நாடோறும் அழகுறுகின்ற பழைய இம் மாநகரத்தின்கண் யான் இதுகாறும் என்னை இன்னன் என யாருக்கும் அறிவியாமல் வஞ்சித்தே திரிந்தேன் காண்; பெருந்தகை வாழிய-என்னைப் பொருளாக மதித்தழைத்த நின் பெருந்தகையை வாழ்க!; வானம் வாய்க்க- நின்னாட்டின்கண் மழைவளம் வாய்ப்புடைய தாகுக!; மண் வளம் பெருகுக- நின்னுடைய நாட்டின்கண் வளம்பலவும் பெருக!; கோமகற்குத் தீது இன்றாக-இங்கே பெருமானுக்குச் சிறிதும் தீமை இல்லையாகுக; ஈது ஐயக்கடிஞை என் கையிலேந்திய இப் பாத்திரம் யான் ஏற்றுண்ணும் பிச்சைப் பாத்திரமாகும்; அம்பலமருங்கு ஓர் தெய்வம் தந்தது-இது தானும் உலகவறவியின் பக்கத்திலே ஒரு தெய்வத்தால் வழங்கப்பட்டது; திப்பியம் ஆயது-அக் காரணத்தாலே தெய்வத்தன்மை யுடையது மாயிற்று; ஆனைத்தீ நோய் அரும்பசி கெடுத்தது-ஆனைத்தீ நோய் என்னும் கொடிய நோய் காரணமாகத் தோன்றிய உய்தற்கரிய பெரும் பசியையும் இது தீர்த்திருக்கின்றது காண்; அப்பாலும் ஊண் உடை மாக்கட்கு இது உயிர் மருந்து என- பசிப்பிணியாலே உடலும் உடைந்து வருந்தி ஆற்றாமாக்கட்கு இப் பாத்திரம் அப்பிணி தீர்த்து உயிர் தந்து ஓம்புமொரு மருந்துமாகும் காண்! என்று கூறாநிற்ப என்க.

(விளக்கம்) விஞ்சை மகள்- வித்தியாதரமகள்; மந்திரத்தாலே வேற்றுருக் கொண்டிருக்கும் மகள்-என இருபொருளும் தோன்றுதலுணர்க.

வஞ்சந்திரிந்தேன்- என்னை இன்னள் என அறிவியாமல் இதுகாறும் வஞ்சகமாகவே திரிந்தேன் எனவும் வஞ்சமாக உருவந்திரிந்தேன் (உருவம் மாறுபட்டேன்) எனவும் இதற்கும் இருபொருள் காண்க. இனி, கோமகற்கு ஈங்குத் தீது இன்றாக என்றதும்-அரசனாகிய நின்னுடைய மகனும் என் பழைய கணவனுமாகிய உதயகுமரனுக்கு இங்கே தீங்கு நிகழாமைப் பொருட்டே வஞ்சம் திரிந்தேன் எனவும் ஒரு பொருள் தோன்றுமாறும் உணர்க.

நின் மகனுக்கும் தீதின்றாக என்று வாழ்த்தியவாறும் ஆயிற்று, கோமகன்- கோவாகிய மகன்; அரசனாகிய நின் மகன் உதயகுமரன் என இருபொருளும் காண்க.

அம்பலமருங்கில் ஆபுத்திரனுக்குத் தெய்வந்தந்தது எனவும் எனக்குத் தெய்வந்தந்தது எனவும் இரட்டுற மொழிந்தமையும் காயசண்டிகையின் ஆனைத்தீ நோய் அரும்பசி கெடுத்தது எனவும் ஆனைத்தீ நோயின் அரும்பசியையும் கெடுத்த அற்புதமுடையது எனவும் பிறர் அயிராவண்ணம் இருபொருள்படுமாறும் உணர்க.

வேண்டுகோளாகிய வினாவும் விடையாகிய வேண்டுகோளும்

155-162: யான்.................வேந்தென்

(இதன் பொருள்) வேந்தன் இளங்கொடிக்கு யான் செயற்பாலது என் என்று கூற-அது கேட்ட அரசன் மணிமேகலையை நோக்கி இளமை மிக்க நினக்கு யான் செய்யத் தகுந்த உதவி யாது? என்று வினவா நிற்ப; மெல்லியல் உரைக்கும்-அது கேட்ட மணிமேகலை அரசனுக்குக் கூறுவாள்:- சிறையோர் கோட்டம் சீத்து அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என அரசே நீ எனக்குச் செய்யும் உதவியும் உளது காண்! அஃதாவது சிறையிடப்பட்டோர் உறைகின்ற அச் சிறைக்கோட்டத்தை அவ்விடத்தினின்றும் இடித்து அகற்றிப் பின்னர் அவ்விடத்தைத் துறவறத்தோர் உறையும் தவப்பள்ளியாக அமைக்கும் அதுவே, பெருமான் நீடூழி வாழ்க! என்று சொல்லி வாழ்த்தா நிற்ப; அரசு ஆள் வேந்து- செங்கோன்மை பிறழாது அரசாட்சி செலுத்தும் அக் கிள்ளிவளவன்றானும் இளங்கொடி கூறியாங்குச் செய்குவல் என்றுடம்பட்டு; அருஞ்சிறைவிட்டு தன் அடிபிழைத்துத் தண்டனை பெற்றிருந்தோரை எல்லாம் தப்புதற்கரிய அச் சிறைக் கோட்டத்தினின்றும் வீடு செய்து; ஆங்குக் கறையோரில்லாச் சிறையோர் கோட்டம்-அவ்விடத்திலே கறை வீடும் செய்யப்பட்டமையின் தண்டனை பெற்ற அரசிறைக் கடனாளரும் இல்லாதொழிந்த சிறையோர் உறையும் அக் கோட்டத்தை; ஆயிழை உரைத்த பெருந்தவர் தம்மால் பெரும் பொருள் எய்த-மணிமேகலையாலே கூறப்பட்ட பெரிய தவத்தையுடைய அறவோரைப் பேணுமாற்றால் எய்தும் அற முதலிய பெருமையுடைய உறுதிப் பொருளை எய்த விரும்பி; அறவோர்க்கு ஆக்கினன்-அத் துறவோர் உறையுளாக மாற்றியருளினன் என்பதாம்.

(விளக்கம்) இளங்கொடி: மணிமேகலை யான் செயற்பாலது என் என்றது உனது அருளறம் தழைத்தற்கு அரசனாகிய யான் செய்யத் தகுந்த அறக்கடமை என்னை? என்றவாறு. மணிமேகலை தான் மேற்கொண்டுள்ள அருளறத்தின் பாற்பட்ட சிறைக்கோட்டஞ் சீத்தலையே தனக்குச் செய்யும் உதவியாகக் கூறியபடியாம்.

சிறைக் கோட்டஞ் சீத்தலாவது தன்னடி பிழைத்துத் தண்டனை பெற்றாரை எல்லாம் விடுதலை செய்துவிடுதல். அடிபிழைத்தாரும் அரசிறை இறுக்காதவரும் ஆகிய இருவகையாரையும் வீடு செய்தான் என்பது தோன்றக் கறையோர் இல்லாச் சிறைக் கோட்டம் என்று விதந்தார். கறை-அரசிற்கு இறுக்கக்கடவ பொருள். இதனால் சிறைவீடும் கறை வீடும் செய்து அருள் அறத்தைத் தனக்காகும் முறையில் அவ் வேந்தனும் மேற் கொண்டனன் என்பது பெற்றாம். அரசற்கியன்ற அருளறம் இத்தகையனவாதலை

சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதும்
கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்
இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும்
உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென
யானை யெருத்தத் தணிமுர சிரீஇக்
கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன்

எனவும்,                   (சிலப்-23: 126-133)

சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணும்
கறைகெழு நாடு கறைவீடு செய்ம்மென

எனவும்;   (சிலப்-28:203-204) பிற சான்றோர் ஓதுமாற்றானும் உணர்க.

பெருந்தவர் தம்மால் பெரும்பொருள் என்றது அவர்க்கு உண்டியும் உறையுளும் வழங்கும் நல்வினைப் பயனாக எய்தும் அறம் பொருள் இன்பம் வீடு முதலிய உறுதிப் பொருள்களை. அத்தகைய நல்வினையால் அத்தகைய உறுதிப்பொருள் எய்துதலை இக் காவியத்தில் மணிமேகலையும் மாதவியும் சுதமதியும் முற்பிறப்பிலே அறவோர்ப் பேணிய நல்வினை அவர்கட்கு இப்பிறப்பிலே எய்தி ஆக்கஞ் செய்யுமாற்றானும் அறிக இக்கருத்தோடு

சிவஞானச் செயலுடையோர் கையில் தானம்
திலமளவே செய்திடினும் நிலமலைபோல் திகழ்ந்து
பவமாயக் கடலின் அழுந் தாதவகை யெடுத்துப்
பரபோகந் துய்ப்பித்துப் பாசத்தை அறுக்கத்
தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச்
சரியைகிரி யாயோகந் தன்னினுஞ் சாராமே
நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி
நாதனடிக் கமலத்தை நணுகுவிக்குந் தானே

என வரும் சிவஞான சித்தியார்ச் (சுபக்-278) செய்யுள் ஒப்பு நோக்கற் பாலதாம்.

இனி இக் காதையை

தாரோன் வஞ்சினம் கூறத் தெய்வம் கூறலும் கலங்கி வருந்திப் பெயர்வோன்றன்னைத் தொடரக் கிழிப்ப உயிர்த்துப் போய பின் மணிமேகலை நுனித்தனரா மென்று வாங்கிப் புகுந்து ஊட்டலும் காவலர் வியந்து இசைத்துமென்றேகி, திருவன் சென்றேறலும் இசைத்து வணங்கி; சுரந்தனள் என்றலும், வருக வருக என்றரசன் கூறலும் மடக்கொடி சென்று வாழிய என நீ யார் யாங்காகியது இக் கடிஞை என அரசன் கூறலும் ஆயிழை உரைக்கும்; வாழி விஞ்சைமகள் யான் திரிந்தேன் வாழிய வாய்க்கப் பெருகுக தீதின்றாக ஐய கடிஞை தந்தது ஆயது கெடுத்தது மருந்து என வேந்து விட்டு ஆக்கினன் என இயைத்திடுக.

சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை முற்றிற்று.


Offline Anu

Re: மணிமேகலை
« Reply #20 on: February 28, 2012, 09:34:39 AM »
20. உதயகுமரனைக் காஞ்சனன் வாளாலெறிந்த காதை

(இருபதாவது மணிமேகலை காய சண்டிகை வடிவெய்த, காயசண்டிகை கணவனாகிய காஞ்சனன் என்னும் விச்சாதரன் வந்து காய சண்டிகை யாமெனக் கருதி அவள் பின்னிலை விடா உதயகுமரனைப் புதையிருட்கண் உலகவறவியில் வாளாலெறிந்து போன பாட்டு)

அஃதாவது: மணிமேகலையின் பால் இடங்கழி காம முடையவனாகிய உதயகுமரன் மீண்டும் அவளைக் கைப்பற்றித் தன் பொற்றேரி லேற்றிவரத் துணிந்து பின்னிலை விடானாகி முயலுங்கால் காயசண்டிகையின் கணவனாகிய விச்சாதரன் காயசண்டிகை வடிவினின்ற மணிமேகலை உதயகுமரனோடு நெருங்கிச் சொல்லாடுதல் கண்டும் அவள் தன்னைப் பொருட்படுத்தாமை கண்டும் உதய குமரனுக்கும் தன்மனைவியாகிய காயசண்டிகைக்கும் காமத் தொடர்பிருத்தல் வேண்டும் என்று ஐயுற்று அது தெளிதற்குக் கரந்திருந்தானாக, மணிமேகலையே காய சண்டிகையாக மாற்றுருவங் கொண்டிருக்கின்றாள் என்றுணர்ந்த அம் மன்னன் மகன் அவள் செய்தி யறிகுவல் என நள்ளிரவிற் றமியனாய் வந்து உலகவறவியினூடு புகுவானை அவ் வித்தியாதரன் வாளால் வெட்டி வீழ்த்திச் சென்ற செய்தி கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- மணிமேகலையின் விருப்பப்படி மன்னவன் கொடுஞ்சிறைக் கோட்டத்தே புத்தருக்குக் கோயிலமைத்தும் அறவோர்க்குப் பள்ளிகளமைத்தும் அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும் அமைத்துக் கட்டுடைச் செல்வக்காப்புடையதாகச் செய்த செய்தியும்; உதயகுமரன் மணிமேகலையின் பால் இடங்கழி காமத்தனாய் மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் அவள் அம்பலத்தினின்றும் நீங்கிய செவ்வியிற்பற்றி என் பொற்றேர் ஏற்றி அவள் கற்ற விஞ்சையும் கேட்டு அவள் கூறும் அஞ்சொலறிவுரையும் கேட்டு ஆற்றவும் மகிழ்வல் என்று துணிந்து உலகவறவியிற் சென்று ஏறுதலும், காய சண்டிகை வடிவந்தாங்கி நிற்கும் மணிமேகலையைக் காயசண்டிகை யென்றே எண்ணி அவள் மருங்கே சென்று ஒரே பாத்திரத்தினின்றும் உணவினை வாரி வாரி அவள் எண்ணிறந்தோர்க்கு வழங்கும் அற்புதச் செய்தி கண்டு இறும்பூதெய்தி அவளை அணுகி அப் பாத்திரத்தின் வரலாறு வினவுதலும் பழைமைக் கட்டுரை பல பாராட்டிய வழியும் அவள் அவனை விழையாவுள்ளத்தோடு அவ்விடத்தினின்றும் நீங்கி ஆங்கு வந்த உதயகுமரன் பாற் சென்று அவனுக்கு மக்கள் யாக்கையின் இழிதகைமை அறிவுறுத்தற் பொருட்டு அப்பொழுது அவ்வழிச் சென்ற நரை மூதாட்டியைக் காட்டி அவள் உறுப்புகளின் தன்மைகளைச் சுட்டிக்காட்டி

தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சந் தெரியாய் மன்னவன் மகனென

செவியறிவுறுத்துதலும், அங்ஙனம் அறிவுறுத்துவாளேனும் அவள் அவன்பாற் காமக் குறிப்புடையளாகவே இருத்தலும் காய சண்டிகையின் கணவன் தன் மனைவி தன்னைச் சிறிதும்  பொருட்படுத்தாது ஏதிலானோடு காதன் மொழி பேசுகின்றாள் என்று கருதிக் கடுஞ்சின முடையனாய்ப் பின்னும் அவள் நிலை அறிதற்கு அம்பலத்தில் ஒரு சார் புற்றடங்கு அரவெனப் புகுந்து கரந்துறைதலும்-அரண்மனைக்குச் சென்ற அரசன் மகன் மணிமேகலையின் நிலைமை அறிதற்கு மீண்டும் ஆயிழை யிருந்த அம்பல மணைந்து வேகவெந்தீ நாகங்கிடந்த போகுயர் புற்றளை புகுவான் போல விச்சாதரன் கரந்துறைகின்ற உலக வறவியினூடு புகுதலும் அவன்றானும் இவன் காயசண்டிகையின் பாலே வந்தனன் என்று துணிந்து வெகுண்டு உதயகுமரன் பின் சென்று அவனுடைய மணித்தோள் துணியும்படி வாளால் எறிந்து காயசண்டிகை என்று கருதிய மணிமேகலையைக் கைப் பற்றிச் செல்லுதலும் அப்பொழுது கந்திற்பாவை அவனுக்குக் கூறுகின்ற ஊழ்வினை விளைவுகளும்; உண்மையறிந்த விச்சாதரன் கன்றிய நெஞ்சொடு விண்வழியே தன்னூர் நோக்கிப் போதலும் பிறவும் கற்போர்க்கு மருட்கைச் சுவை பற்பல விடங்களிலே தோன்றும்படி கூறப்படுகின்றன.

அரசன் ஆணையின் ஆய் இழை அருளால்
நிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம்
தீப் பிறப்பு உழந்தோர் செய் வினைப் பயத்தான்
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போலப்
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும்
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும்
கட்டு உடைச் செல்வக் களிப்பு உடைத்து ஆக
ஆய் இழை சென்றதூஉம் ஆங்கு அவள் தனக்கு
வீயா விழுச் சீர் வேந்தன் பணித்ததூஉம்  20-010

சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
கேட்டனன் ஆகி அத் தோட்டு ஆர் குழலியை
மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும்
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே
மதுக் கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து
பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய  20-020

உலக அறவியின் ஊடு சென்று ஏறலும்
மழை சூழ் குடுமிப் பொதியில் குன்றத்துக்
கழை வளர் கான் யாற்று பழப் வினைப் பயத்தான்
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம்
ஈர் ஆறு ஆண்டு வந்தது வாராள்
காயசண்டிகை! எனக் கையறவு எய்தி
காஞ்சனன் என்னும் அவள் தன் கணவன்
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து
பூத சதுக்கமும் பூ மரச் சோலையும்
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும்  20-030

தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை
மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டு ஆங்கு
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம்
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்
ஆனைத்தீ நோய் அரும் பசி களைய
வான வாழ்க்கையர் அருளினர்கொல்? எனப்
பழைமைக் கட்டுரை பல பாராட்டவும்
விழையா உள்ளமொடு அவன்பால் நீங்கி
உதயகுமரன் தன்பால் சென்று
நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி   20-040

தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய்
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ
நரைமையின் திரை தோல் தகையின்று ஆயது
விறல் வில் புருவம் இவையும் காணாய்
இறவின் உணங்கல் போன்று வேறாயின
கழுநீர்க் கண் காண் வழுநீர் சுமந்தன
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ
நிரை முத்து அனைய நகையும் காணாய்
சுரை வித்து ஏய்ப்பப் பிறழ்ந்து போயின  20-050

இலவு இதழ்ச் செவ் வாய் காணாயோ நீ
புலவுப் புண் போல் புலால் புறத்திடுவது
வள்ளைத் தாள் போல் வடி காது இவை காண்
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன
இறும்பூது சான்ற முலையும் காணாய்
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி
வீழ்ந்தன இள வேய்த் தோளும் காணாய்
நரம்பொடு விடு தோல் உகிர்த் தொடர் கழன்று
திரங்கிய விரல்கள் இவையும் காணாய்  20-060

வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை
தாழைத் தண்டின் உணங்கல் காணாய்
ஆவக் கணைக்கால் காணாயோ நீ
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல்
பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து
தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன்! என
விஞ்சை மகளாய் மெல் இயல் உரைத்தலும்  20-070

தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள்
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும்
மதுக் கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டி
பவளக் கடிகையில் தவள வாள் நகையும்
குவளைச் செங் கணும் குறிப்பொடு வழாஅள்
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து இழை
ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி
மற்றவள் இருந்த மன்றப் பொதியிலுள்
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன்  20-0810

காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன்
ஆங்கு அவள் உரைத்த அரசு இளங் குமரனும்
களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான்
வளை சேர் செங் கை மணிமேகலையே
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி
மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள்
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இவ்
வம்பலன் தன்னொடு இவ் வைகு இருள் ஒழியாள்
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து  20-090

வான்தேர்ப் பாகனைப் மீன் திகழ் கொடியனை
கருப்பு வில்லியை அருப்புக் கணை மைந்தனை
உயாவுத் துணையாக வயாவொடும் போகி
ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து
வேழம் வேட்டு எழும் வெம் புலி போல
கோயில் கழிந்து வாயில் நீங்கி
ஆய் இழை இருந்த அம்பலம் அணைந்து
வேக வெந் தீ நாகம் கிடந்த
போகு உயர் புற்று அளை புகுவான் போல
ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த  20-100

ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன்
ஈங்கு இவன் வந்தனன் இவள்பால் என்றே
வெஞ் சின அரவம் நஞ்சு எயிறு அரும்பத்
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன்
சுரும்பு அறை மணித் தோள் துணிய வீசி
காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம்
போகுவல் என்றே அவள்பால் புகுதலும்
நெடு நிலைக் கந்தின் இடவயின் விளங்கக்  20-110

கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும்
அணுகல் அணுகல்! விஞ்சைக் காஞ்சன!
மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள்
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி
வானம் போவழி வந்தது கேளாய்
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த
விந்த மால் வரை மீமிசைப் போகார்
போவார் உளர்அனின் பொங்கிய சினத்தள்
சாயையின் வாங்கித் தன் வயிற்று இடூஉம்
விந்தம் காக்கும் விந்தா கடிகை   20-120

அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள்
கைம்மை கொள்ளேல் காஞ்சன! இது கேள்
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை
ஆர் உயிர் உண்டதுஆயினும் அறியாய்
வெவ் வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன!
அவ் வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து
கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ
விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என் 20-129

உரை

அரசன் ஆணையாலே சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கப்படுதல்

1-8: அரசன்...............ஆக

(இதன் பொருள்) ஆயிழை அருளால் அரசன் ஆணையின்- மணிமேகலையின் அருளுடைமை காரணமாகவும், அவள் வேண்டுகோட் கிணங்கிய அரசன் இட்ட கட்டளை காரணமாகவும்; நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம்-தன்னுள் உறைபவர்க்கு நரகம் போன்று பெருந்துயர் செய்கின்ற கொடிய சிறையாகுந் தன்மையை நீக்கப்பெற்ற பின்னர் அக் கட்டிடமே; தீப்பிறப்பு உழந்தோர் செய்வினைப் பயத்தால் யாப்பு உடை நல்பிறப்பு எய்தினர்- போல-உம்மைச் செய்த தீவினையின் பயனாகத் தீய பிறப்பிற் பிறந்து அத் தீமையின் பயனை நுகர்ந்து கிடந்தவர் இம்மையிற் செய்த நல்வினைப் பயன் காரணமாக மீண்டும் அந் நன்மையோடு தொடர்புடைய நற்பிறப்பை எய்தி நன்மையே செய்கின்ற மாந்தர் போன்று; பொருள்புரி நெஞ்சின் புலவோன் கோயிலும்-மெய்ப்பொருளையே விரும்புகின்ற பேரறிவுடைய புத்தபெருமானுடைய திருக்கோயிலும்; அருள்புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்-எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோராகிய துறவுடையோர் உறைகின்ற தூய தவப்பள்ளியும்; அட்டில் சாலையும்-ஆருயிர் மருந்தாகிய உண்டி சமைக்கின்ற மடைப்பள்ளியும்; அருந்துநர் சாலையும்-உணவுண்ணுபவர்க்கு வேண்டிய அறக்கோட்டமும் என்னும் பகுதிகளாக; கட்டு உடை செல்வக் காப்பு உடைத்து ஆக-கட்டப்பட்டு, இவற்றிற்கின்றியமையாத செல்வமாகிய காவலையும் உடையதாகத் திகழ் என்க.

(விளக்கம்) நிரயம்-நரகம். நரகம் போன்று மன்னுயிரை வருத்தும் கொடிய சிறைக்கோட்டம். ஆயிழை அருளாலும் அரசனுடைய ஆணையாலும் இப்பொழுது மன்னுயிர்க்குப் பேரின்பம் தருகின்ற துறக்கம் போலத் திருக்கோயிலும் தவப்பள்ளியும் மடைப்பள்ளியும் உண்ணும் மண்டபமும் ஆகிய பல பகுதிகளாகக் கட்டுதலுடைத்தாய் மேலும் இவற்றிற்கு வேண்டிய செல்வமாகிய காவலையும் உடைய அறக்கோட்டமாகத் திகழ்ந்தது என்றவாறு.

தீப்பிறப்பு-பிறருக்குத் தீமையே செய்யும் இயல்புடைய பிறப்பு. முற்செய் வினையால் தீப்பிறப்பிற் பிறந்துழந்தோர் இப்பிறப்பிற் செய்த நல்வினையால் நற்பிறப்பு எய்தினவரைப் போல, முன்பு நரகத் துன்பத்தைச் செய்யும் சிறைக்கோட்டம் இப்பொழுது துறக்கவின்பத்தைத் தருமிடமாக மாறியது என்க.

ஒரோவழி மணிமேகலை ஒரு நாள் அதன்கட் புகுந்து ஆற்றாமாக்கட் கெல்லாம் உண்டி கொடுத்து உயிர் ஓம்பிய நல்லறம் நிகழ்தற்கிடமாயிருந்தமையால் அவ்வறத்தின் பயனாக அச் சிறைக் கோட்டம் அறக் கோட்டமாக மாறியது கண்டீர் என்னும் ஒரு குறிப்பும் அதற்குக் கூறிய உவமையாலே கொள்ளக் கிடந்தமையும் நுண்ணிதின் உணரலாம்.

பொருள் புரி நெஞ்சின் புலவோன் என்றது புத்தபெருமானை பொருள்- மெய்ப்பொருள். அறவோர் என்றது அருளறம் பூண்ட பவுத்தத் துறவோரை.

அட்டிற்சாலை-மடைப்பள்ளி. அருந்துநர்சாலை என்றது உண்ணுமிடத்தை. இவை யெல்லாம் மன்னுயிர்க்கின்பங் தருமிடங்களாதலறிக.

செல்வக்காப்பு- செல்வமாகிய காவல். அஃதாவது அவ்வறக்கோட்டத்தில் இறைவனுக்குப் பூசனையும் அறவோர்க்கும் பிறர்க்கும் உண்டியும் நிகழ்தற்கு அரசன் விட்ட முற்றூட்டாகிய செல்வத்தையே ஈண்டுச் செல்வக்காப்பு என்றார் என்றுணர்க.

உதயகுமரன் செயல்

9-19: ஆயிழை...............எழுந்து

(இதன் பொருள்) மதுக் கமழ் தாரோன்-தேன்மணங் கமழுகின்ற ஆத்திப்பூமாலை யணிந்த அரசிளங் குமரனாகிய உதயகுமரன்; ஆயிழை சென்றதூஉம்-அரசன் அழைப்பிற்கிணங்கி மணிமேகலை அவன் திருமுன் சென்ற செய்தியையும் வீயா விழுச்சீர் வேந்தன் ஆங்கு அவள் தனக்கு பணித்ததூஉம் இறவாத பெரும்புகழையுடைய அரசன் அவ்விடத்தே அம் மணிமேகலைக்குத் தான் செய்யக்கடவது என்? என்று வினவிய செய்தியையும்; சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்- மணிமேகலை விரும்பியபடியே அரசன்றானும் சிறையோர் கோட்டம் என்னும் பெயரையே அகற்றி அவ்விடத்தை அருள் கெழுமிய நன்னர் நெஞ்சமுடைய துறவோர் உறையும் அறக்கோட்டமாக அமைத்த செய்தியையும்; கேட்டனன் ஆகி-பிறர் கூறக் கேள்வியுற்றவனாகி; அத் தோட்டு ஆர் குழலியை-என்னை இவ்வண்ணஞ் செய்து மற்றொரு நெறியிலே செல்லுகின்ற அம் மணிமேகலையை; மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும்- சான்றோர் என்னை இகழ்ந்தாலும் அரசனே என்னை ஒறுத்தாலும்; பொதியில் நீங்கிய பொழுதில் சென்று பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி-அம்பலத்தினின்றும் அயலே செல்லும் செல்வியில் சென்று கைப்பற்றிக் கொணர்ந்து என்னுடைய பொற்றேரிலே ஏற்றி; கற்று அறிவிச்சையும் கேட்டு அவள் உரைக்கும் முதுக் குறை முதுமொழி கேட்குவன்-அவள் இங்ஙனம் மாயம் பல செய்தற்கெனக் கற்றறிந்திருக்கின்ற வித்தைதான் யாது என்று கேட்டபின் அவள் கூறுகின்ற அறிவுசான்ற முதுமொழிகளையும் கேட்பேன்; என்று மனங்கொண்டு எழுந்து-என்று தன் நெஞ்சினுள்ளே துணிந்துடனே எழுந்து போய் என்க.

(விளக்கம்) ஆயிழை: மணிமேகலை. வீயா-இறவாத பணித்த தூஉம்-அவள் பொருட்டுப் பணிமாக்கட்குக் கட்டளையிட்டதூஉம் எனலுமாம். தோடு ஆர் குழலி, தோட்டார் குழலி என விகாரம். மதியோர்-அறிவுசான்றோர். பற்றினன் கொண்டு-பற்றிக்கொண்டு. ஊரம்பலத்தே புகுந்து கைப்பற்றுதல் முறைமையன் றென்பது கருதிப் பொதியில் நீங்கிய பொழுதற் பற்றிக் கொள்வேன் என் றுட்கொண்ட படியாம். ஈண்டுக் காமம் காழ் கொண்டவழி ஆடவர் மடலேறுவர், உயிரும் விடுவர் என்பதற்கு உதயகுமரன் அவளைக் கைப்பற்றுதல் பற்றித் தன்னை மதியோர் எள்ளினும் எள்ளுக, மன்னவன் காயினும் காய்க! என்று துணிதல் சிறந்த எடுத்துக் காட்டாகும். இது காதலின் பொருட்டு மடலேறுதற் கொத்ததொரு துணிவே என்க. என்னை? வாய்மையான காதலுக்கு இடையூறெய்தின் சாதலன்றி வேறுய்தியின்மையால்.

மணிமேகலையின் அருமைப்பாடு கருதிப் பொற்றேர் ஏற்றிக் கொடுவருவல் என்றான். ஒரே பாத்திங்கொண்டு பலரை யுண்பித்தற்கும் வேற்றுருக் கோடற்கும் யாண்டுக் கற்றனை என்று கேட்டறிகுவலென்பான் கற்றறிவிச்சையும் கேட்டு என்றான். மற்று அவள் இப் பொழுதும் முதுக்குறை முதுமொழி கூறாதிராள். அக்கூற்று என் கருத்திற்கு முரணுமாயினும் அவற்றை அவள் கூறக்கேட்குங்கால் என் அருந்தேமாந்த ஆருயிர் தளிர்க்குமாதலின் அவற்றையும் கேட்டிடுவேன் என்கின்றான். முதுக்குறை முதுமொழி என்றது முன்னம் அவள் தான் தவந்தாங்கியதற்குக் காரணமாக மக்கள் யாக்கையினியல்பு கூறியதை நினைந்து கூறியபடியாம்(18:134-138) ஈண்டு அவற்றை இகழும் குறிப்புடன் முதுக்குறை முதுமொழி என்கின்றான். எழுந்து சென்றென்க.

காயசண்டிகையின் கணவன் செயல்

20-31: பலர்..............திரிவோன்

(இதன் பொருள்) பாவை பலர் பசி களைய ஒதுங்கிய உலகவறவியின் ஊடு சென்று ஏறலும்-மணிமேகலை ஆற்றாமாக்கள் பலருடைய அரும்பசியையும் ஒருசேரக் களைந்து மகிழ்வித்தற் பொருட்டுப் புகுந்த உலகவறவியாகிய அம்பலத்தினூடு சென்று புகுதாநிற்ப; காஞ்சனன் என்னும்- காஞ்சனன் என்னும் பெயரையுடைய (காயசண்டிகையின் கணவனாகிய) விச்சாதரன்; மழை சூழ் குடுமிப் பொதியிற் குறைத்து கழைவளர் கான்யாற்று- முகில் தவழுகின்ற உச்சியினையுடைய பொதியமலை மருங்கில் மூங்கில்கள் தழைத்து வளருதற்கிடனான காட்டியாற்றின் படுகரிலே; பழவினைப் பயத்தால்-ஊழ்வினை காரணமாக; மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் ஈர் ஆறு ஆண்டு வந்தது-விருச்சிக முனிவன் என் காதலிக்கு இட்ட சாபம் கட்டி நிற்கும் பன்னீராட்டைக் காலமும் கழிந்து உய்திக் காலமும் வந்துற்றது; காயசண்டிகை வாராள்- காயசண்டிகையோ இன்னும் வந்திலள்; எனக் கையறவு எய்தி-அவட் கென்னுற்றதோ என்று வருந்தி; ஓங்கிய மூதூருள் வந்து இழிந்து-அவள் இருந்த உயர்ந்த புகழையுடைய பழைய நகரமாகிய பூம்புகாரிலே வான்வழியே வந்திறங்கி பூதசதுக்கமும் பூமலர்ச்சோலையும் மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் தேர்ந்தனன் திரிவோன்- பூதநிற்கும் நாற்சந்தியினும் பூவையுடைய பூம்பொழிலிடத்தும் ஊர்மன்றங்களினும் ஊரம்பலத்தினும் சென்று சென்று அவளைத் தேடித் திரிகின்றவன், என்க.

(விளக்கம்) பலர்-ஆற்றாமாக்கள் பலருடைய. பாவை: காயசண்டிகை வடிவங்கொண்டுள்ள மணிமேகலை. ஊடு-உள்ளே. மழை-முகில். குடுமி-உச்சி. பொதியிற் குன்றம்- பொதியின் மலை. ஈர் ஆறு ஆண்டு என்றது, ஈர் ஆறாம் ஆண்டு என்பதுபட நின்றது. அஃதாவது- பன்னிரண்டாம் ஆண்டின் இறுதியும் வந்தது என்றவாறு. அவ்விறுதி அச் சாப வீடு பெறும் நாளாதலின், அவள் சாப வீடு பெற்றிருப்பள் அங்ஙனமாயின் அவள் உடனே ஈண்டு வந்திருப்பளே வாராமைக்குக் காரணம் என்னோ என்று ஐயுற்றுக் கையற வெய்தினன் என்பதாம். அவள் என்னும் சுட்டுப் பெயரை விளக்கத்தின் பொருட்டு இயற்பெயராக்கி உரை கூறப்பட்டது.

புகழான் ஓங்கிய மூதூர் என்க. அஃதாவது- பூம்புகார் நகரம். பூதசதுக்கம்- பூதநிற்குமிடமாகிய நாற்சந்தி. இதனியல்பை

தவமறைந் தொழுகுந் தன்மை யிலாளர்
அவமறைந் தொழுகு மலவற் பெண்டிர்
அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக்
காத நான்கும் கடுங்குர லெடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும்

எனவருஞ் சிலப்பதிகாரத்தால்(5:128-134) இனிதினுணர்க.

மன்றம்-மரத்து நிழலில் ஊர் மக்கள் கூடுமிடம். பொதியில் என்றது உலகவறவியை. தேர்ந்தனன்: முற்றெச்சம்.

காஞ்சனன் காயசண்டிகை வடிவந்தாங்கிய மணிமேகலையைக் காயசண்டிகை என்றே கருதி அவள் மருங்கு சென்று பழைமைக் கட்டுரை பல பாராட்டுதல்.

31:37: ஏந்திள..............பாராட்டவும்

(இதன் பொருள்) ஏந்திள வனமுலை-காயசண்டிகை வடிவந்தாங்கி உலகவறவியினூடு சென்று பாத்திர மேந்தி மணிமேகலை யானவள்; மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டு-ஆற்றாமாந்தர் பலருடைய பசி நோயையும் உணவீந்து மாற்றுபவளைக் காயசண்டிகையாகவே கண்டு வியந்து; ஆங்கு-அவளிடம் அணுகி அன்புடையோய்!; இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்- இற்றைநாள் நீ நின் கையிலேந்திய பிச்சைப் பாத்திரம் ஒன்றே ஆகவும் அதனூடிருந்து நீ வழங்கும் உணவினை உண்பவரோ எண்ணிலராயிருக்கின்றனர் இந் நிகழ்ச்சி கண்டு யான் பெரிதும் வியப்புறுகின்றேன் காண்! ஆனைத்தீ நோய் அரும்பசி களைய வான் வாழ்க்கையர் அருளினர் கொல் என-இத்தகு தெய்வத்தன்மையுடைய அரும்பெறற் பாத்திரத்தை நினக்குச் சாபத்தாலே எய்திய ஆனைத்தீநோய் காரணமாக நீ எய்துகின்ற தீர்த்தற்கரிய பசி நோயின் துன்பத்தைக் கண்டிரங்கி அதனை நீக்கும் பொருட்டு வானுலகத்தே வாழும் தேவர்கள் வழங்கினரோ? இது நீ தனது பழைய காதலன்பு தோன்றுதற்குக் காரணமான பொருள் பொதிந்த மொழிகள் பலவற்றையும் கூறி நலம் பாராட்டா நிற்பவும் என்க.

(விளக்கம்) இன்று என்றது இற்றை நாள் வியத்தகு நிகழ்ச்சி யொன்றனைக் காணுகின்றேன்! என்பதுபட நின்றது.

வான வாழ்க்கையர்-தேவர்கள். இப் பாத்திரம் தெய்வத் தன்மையுடைத்தாகலின் இது தெய்வத்தாலேயே வழங்கப்பட்டிருத்தல் வேண்டும் என ஊகித்து வினவுவான், வான வாழ்க்கையர் அருளினர் கொல் என்று வினவியவாறு. பழைமை- பழைதாகிய காதற்கேண்மை. பாராட்ட-நலம் பாராட்ட, நலம், ஈண்டு பெறலரும் பேறு பெற்றிருத்தலாம்.

மணிமேகலை அவனை இன்னாள் என அறியாளாய் உதயகுமரன்பாற் சென்று அறஞ்செவியறிவுறுத்துதல்

38-40: விழையா................காட்டி

(இதன் பொருள்) விழையா உள்ளமொடு அவன் பால் நீங்கி-தன் அறச்செயலிலே கருத்தூன்றியிருந்த மணிமேகலை தன்னை அணுகிய காஞ்சன்னையாதல் அவன் கூறிய கட்டுரையையாதல் சிறிதும் விரும்பாத நெஞ்சத்தனளாய் அவனிடத்தினின்றும் விலகி; உதயகுமரன்றன்பாற் சென்று-தன் பழைய கணவனாகிய உதயகுமரனைத் தெருட்டி நன்னெறிப் படுத்தும் கருத்துடையவளாய் அவனை விழைத்த மூதாட்டி உள்ளத்தோடு அவ்வரசிளங்குமரனை அணுகி; நகர மூதாட்டி ஒருத்தியைக் காட்டி-அவ்வுலகவறவியிலே உறை வாள் ஒரு நரைத்து முதிர்ந்த கிழப்பருவத்தாளைச் சுட்டி காட்டிக் கூறுபவள்

(விளக்கம்) அவன்பால்-காஞ்சனனிடத்தினின்றும். ஆற்றாமாக்களுள் ஒருத்தியாக ஆங்குறைவாளி ஒரு நரை மூதாட்டியைக் காட்டி என்க. அவனுக்கு நல்லறிவு கொளுத்துவான் கூறுபவள் என்க. இவை இசையெச்சம்.

மக்கள் யாக்கையின் இழிதகைமை

41-66: தண்ணறல்...........உணங்கல்

(இதன் பொருள்) தண் அறல் வண்ணம் திரிந்து வேறு ஆகி மன்னவன் மகனே! இம் மூதாட்டியின் கூந்தல் தானும் பண்டு குளிர்ந்த கருமணல் போன்ற நிறமுடையதாகத் தான் இருந்திருத்தல் வேண்டும், இப்பொழுதோ அக் கருநிறம் முழுவதும் மாறுபட்டு அதற்கு முரண்பட்டதாகி; வெண்மணல் போன்ற நிறமுடைய கூந்தலாகி விட்டதனைக் காண்பாயாக!; பிறைநுதல் வண்ணம்- எண்ணாட் பக்கத்துப் பிறைத்திங்கள் போலும் பேரழகுடையது என்று பாராட்டப்படுகின்ற மகளிரின் நுதலின் தன்மை; நரைமையின் திரைதோல் தகைமை இன்றாயது நீ காணாயோ-அவ்வெண்மை நிறத்தோடும் திரைந்த தோலோடும் சிறிதும் அழகில்லாததாகியதனை நீ இவள்பால் கண்டிலையோ?; விறலவில் புருவம் இவையும் இறவின் உணங்கல் போன்று வேறு ஆயின காணாய்- வெற்றிதருகின்ற வில் என்று பாராட்டப்படுகின்ற புருவங்களாகிய இவை தாமும் இறாமீன் வற்றல் போன்று சுருண்டு அருவருப்புண்டாக்குவனவாய் மாறுபட்டுத் தூங்குகின்றவற்றையும் காண்பாயாக!; கழுநீர்க்கண் காண் வழுநீர் சுமந்தன- கருங்குவளை மலர் போன்று கவினுடையன என்று பாராட்டப் பெற்ற கண்களைப் பார்! பீளையும் நீரும் சுமந்திருக்கின்றன; குமிழ்மூக்கு இவைகாண் உமிழ்சீ ஒழுங்குவ-குமிழம்பூப் போன்ற மூக்கின் துளைகளாகிய இவற்றை நோக்குதி உமிழுகின்ற அருவருக்கத் தகுந்த சீயைத் துளிக்கின்றன; நிரை முத்து அனைய நகையும் காணாய்- நிரல்பட அமைத்த முத்துகள் என்று பாராட்டப்படுகின்ற பற்களின் இயல்பையும் ஈண்டுக் கண்டறிதி; சுரைவித்து ஏய்பபப் பிறழ்ந்து வேறு ஆயின-சுரையினது விதை போன்று நிரந்திரிந்து நிலையும் பிறழ்ந்து வேறுபட்டன; நீ இலவு இதழ் செவ்வாய்- நீ இலவமலர் போன்று சிவந்த வாய் என்று பாராட்டப்படுகின்ற சிவந்த வாய்; புலவுப் புறத்திடுவது காணாயோ-புலால்நாற்றத்தைப் புறமெங்கும் பரப்புவதனைக் கண்டிலையோ?; வள்ளைத் தாள்போல் வடிகாது இவை காண் உள் ஊண் வாடிய உணங்கல் போன்றன-வள்ளைக் கொடி போன்று வடிந்த அழகிய காதுகள் எனது வண்ணிக்கப் படும் காதுகளாகிய இவற்றை நோக்குதி உள்ளிருந்த ஊன் உலர்ந்துபோன வற்றிலைப்போல்கின்றன அல்லவோ?; இறும்பூது சான்ற முலையும் காணாய்-காமுகர்க்கு எப்பொழுதும் வியத்தற் குரியவாகிய இம் மூலைகளினியல்பையும் ஈண்டுக் கண்டுணர்தி வெறும்பை போல வீழ்ந்து வேறு ஆயின-உள்ளீடற்ற தோற்பைகள் போன்று தொங்கி அருவருப்புத் தரும் வேறு தன்மை யுடையன வாயினவன்றோ?; இளவேய்த் தோளும் காணாய்-இளமையுடைய பச்சைமூங்கில் போன்றன என்று பாராட்டப்படும் தோள்களையும் காணுதி; தாழ்ந்து ஒசி தெங்கின் மடல் போல் திரங்கி வீழ்ந்தன-சரிந்து ஒசிந்த தென்னை மட்டை போன்று சுருங்கித் தூங்குகின்றனவன்றோ; நரம்பொடு விடுதோல் உகிர்த்தொடர் கழன்று திரங்கிய விரல்கள் இவையும் காணாய்-நரம்பும் அவற்றோடு தொடர்பற்ற தோலுமாய் நகத்தின் வரிசையும் கழன்று வற்றியிருக்கின்ற விரல்களாகிய இவற்றின் இயல்பையும் காண்பாயாக; வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை தாழைத் தண்டின் உணங்கல் காணாய்-வாழைத் தண்டே போல்வன இவை என்று வண்ணிக்கப்படுகின்ற துடையிரண்டும் தாழைத் தண்டின் வற்றல் போல்கின்றன அவற்றின் இயல்பையும் அறிதி; நீ ஆவக்கணைக்கால்-நீ தானும் அம்புக் கூடு போன்ற அழகுடையன என்னும் கணைக்காலிரண்டும்; மேவிய நரம்போடு என்பு புறங்காட்டுவ காணாயோ-தமக்குப் பொருந்திய நரம்போடு எலும்புகளையும் புறத்தார்க்கும் காட்டுவன ஆதலைக் காண்கின்றிலையோ?; தளிர் அடி வண்ணம் முளிமுதிர் தெங்கின் உதிர்காய் உணங்கல்-தளிர்போன்ற மெல்லிய அடிகளின் தன்மை உலர்ந்த முதிர்ந்த தெங்கினின்றும் உதிர்ந்தகாயாகிய நெற்றின் தன்மை யுடையனவாதலை; நீ காணாயோ நீ கண்கூடாகக் காண்கின்றிலையோ என்றாள் என்க.

(விளக்கம்) அறல்-கருமணல் . நரைமை-வெண்மை திரை தோல் வினைத்தொகை. தகை-அழகு. விறல்-வெற்றி. இறவின் உணங்கல்-இறாமீன்வற்றல். கழுநீர்-மலர்க்கு ஆகுபெயர் வழுவும் நீரும் என்க வழு-பீளை. குமிழ்-குமிழம்பூ-மூக்கின்றுளைகளைச் சுமந்தன எனப் பலவறி சொல்லாற் கூறப்பட்டது. நகை-பல். ஏய்ப்ப: உவமஉருபு. புலவு-புலால் நாறுகின்ற. இறும்பூது-வியப்பு.வெறுந் தோற்பை என்க. தாழைத் தண்டின் வற்றல்-உலர்ந்து சுருங்கிய தாழைத் தண்டென்றவாறு. ஆவம்-அம்புக்கூடு. என்பு-எலும்பு. தெங்கின் காய் உணங்கல் என்றது, தென்னை நெற்றினை.

இதுவுமது

68-80: பூலினும்-காணாயோ

(இதன் பொருள்) மன்னவன் மகன்-வேந்தன் மகனே!; தொல்லோர்-முன்னையோர்; புலால் பூவினும் சாந்தினும்-மகளிரின் யாக்கையின்கண் இத்தகைய புலால் நாறுமியற்கையை கறிய மணங்கமழும் மலர்களானும் சாந்தம் முதலிய நறுமணம் பொருள்களாலும் ஒல்லுந்துணையும்; மறைத்துத் தூசினும் மணியினும் யாத்து வகுத்த வஞ்சம் தெரியாய்-மறைத்து விட்டு மேலும் அதன் விகாரங்கள் அழகிய ஆடைவகைகளையும் மணி முதலியவற்றாலியன்ற அணிகலன்களையும் அழகாக அணிந்து வைத்து அதனைக் கண்டோர் காமுறும்வண்ணம் அழகுடையதாய் யாப்புறுத்திய வஞ்சகச் செயலையும்; ஆராய்ந்து தெரிந்து கொள்வாயாக; என-என்று சொல்லி மெல்லியல் விஞ்சை மகளாய் உரைத்தலும்-மணிமேகலை காயசண்டிகையாய் நின்று செவியறிவுறுத்தலும் என்க.

(விளக்கம்) ஈண்டு மணிமேகலை அவன்பால் முற்பிறப்பினின்றும் அடிப்பட்டு வருகின்ற அன்பு காரணமாக அவனுக்கும் மெய்யறிவு கொளுத்தித் தான் செல்லும் நன்னெறிக்கண் ஆற்றுப்படை செய்வான் யாக்கையின் இயல்பினை விதந்தெடுத்துச் செவியறிவுறுத்தியபடியாம்.

யாக்கையின் தன்மையை உள்ளவாறு உணர்ந்தாலன்றி அதன்கண் பற்று அறாது, இவ்வாறு யாக்கையின் இழிதகைமையை இடையறாது சிந்தித்துப் பற்றறுத்தல் வேண்டும் என்பது புத்தருடைய அறிவுரையாகும். இங்ஙனம் சிந்தித்தலை அசுப்பாவனை என்று பவுத்த நூல்கள் கூறும் இந்நூலினும்

அநித்தம் துக்கம் அநான்மா அசுசியெனத்
தனித்துப் பார்த்தப் பற்றறுத் திடுதல் 

என வருதலறிக(30:254-5)

இனி ஈண்டு, பூவினும்.....தெரியாய் எனவருமிப் பகுதியோடு

கூராரும் வேல்விழியார் கோலா கலங்க ளெல்லாம்
தேராத சிந்தையரைச் சிங்கி கொள்ளு மல்லாமல்
நேராயு ணிற்கு நிலையுணர்ந்து நற்கருமம்
ஆராய் பவருக்கு அருவருப்ப தாய்விடுமே

எனவும்

வால வயதின் மயக்கு மடந்தையருங்
கால மகன்றதற்பின் கண்டெவரு மேயிகழ
நீலநறுங் குழலு நீடழகு நீங்கியவர்
கோலதொரு கையூன்றிக் கொக்குப்போ லாயினரே

எனவும்,

கிட்டா தகன்மின் கிடப்பதிற் பொல்லாங் கென்(று)
இட்டா ரலரேல் இலங்கிழையார் தம்முடம்பிற்
பட்டாடை மேல்விரித்துப் பாதாதி கேசாந்த
மட்டாய் மறைத்துவரு மார்க்கமது வென்கொண்டோ

எனவும்,

வீசிய துர்க்கந்தம் வெளிப்படுத்தும் மெய்யிலெனக்
கூசி மறைப்பதன்றேற் கோற்றொடியார் அங்கமெங்கு
நாசி மணக்க நறுங்குங் குமசுகந்தம்
பூசி முடித்தல்பசி போக்கும் பொருட்டேயோ

எனவும்,

மாற்றரிய தமூத்தை வாய்திறக்கு முன்னமெழு
நாற்ற மறைக்கவன்றேல் நாவழித்துப் பல்விளக்கிக்
கோற்றொடியார் நன்னீருங் கொப்புளித்துப் பாகுசுருள்
தீற்றுவது மென்குதலை தீர்க்குமருந் தென்றேயோ

எனவும்,

பட்டாடை சாத்திப் பணிமே கலைதிருத்தி
மட்டா யவயங்கண் மற்றவைக்கு மேற்குவண்ணம்
கட்டாணி முத்தும் கனகமணிப் பூடணங்கள்
இட்டால் அலதவருங் கென்னோ வியலழகே

எனவும் அசுபபாவனைக்கு அற்புதமாக வந்த இச் செய்யுள்களையும் ஒப்பு நோக்கி உணர்க.  (மெய்ஞ்ஞான விளக்கம். நீருப-14-9)

விஞ்சை மகளாய்-காயசண்டிகையாய்

காஞ்சணன் உட்கோளும் கரந்துறைவும்

71-81: தற்பாரா..... விஞ்சையன்

(இதன் பொருள்) தன் பாராட்டும் என் சொல் பயன் கொள்ளான் காயசண்டிகை வடிவத்தோடு நின்று உதயகுமரனுக்கு முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டிய மணிமேகலையின் செயலைக் கண்ட காஞ்சனன் காயசண்டிகையே இங்ஙனம் ஆயினன் என்றுட் கொண்டவனாய்! என்னே! இஃதென்னே! இவன்தான் தன்னை யான் அன்புடன் பாராட்டிக் கூறுகின்ற சொற்களின் யான் அன்புடன் பாராட்டிக் கூறுகின்ற சொற்களின் பயனைச் சிறிதும் கருத்துட் கொள்கின்றிலள்; பிறன் பின் செல்லும் பிறன் போல நோக்கும்-கணவனாகிய என் கண் காணவே பிறனொருவன் பின்னேயே செல்கின்றாள் என்னை நோக்குழியும் ஏதிலானை நோக்குமாறு போலவே நோக்குகின்றனள்; மதுக்கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டி-தேனமணங் கமழும் ஆத்திப்பூமாலை அணிந்திருக்கின்ற இவ்வரசன் மகனுக்கு இவள் அறிவுரை கூறுவாள் போன்று அறிவுசான்ற பழமொழிகள் பலவற்றை எடுத்துக் கூறுகின்றாளாயினும்; பவளக் கடிகையின் தவள வாள நகையும் குவளைச் செங்கணும் குறிப்பொடு வழாஅள்-பவளத்துணுக்குகள் போன்ற தன் வாயிதழ்களின் மேலே தவழ்கின்ற வெள்ளிய எயிற்றின் ஒளி தவழ்கின்ற புனமுறுவல் பூப்பதனானும் குவளை மலர் போன்ற தன் சிவந்த கண்களிலே காமப் பண்பு ததும்பக் காதற் குறிப்பிற் சிறிதும் வழுவாமல் நோக்குகின்ற நோக்கமுடைமையானும்; ஈங்கு இவன் காதலன்-இந் நகரத்தின்கண் இம் மன்னவன் மகன் இவளுக்குக் காதலன் ஆயினன் என்பது தேற்றம்; ஆகலின் ஏந்திழை ஈங்கு ஒழிந்தனள் என-இங்ஙனமிருத்தலாலே தான் காயசண்டிகை தனக்கெய்திய சாபம் தீர்ந்தபின்னரும் தனக்குரிய விச்சாதர நாட்டை வெறுத்து இந் நகரத்திலேயே தங்கினள் என்று கருதியவனாய்; இகழ் எரி பொத்தி-மன்னன் மகன்பா லெழுந்த பகைமை காரணமாகத் தன்னெஞ்சத்தே வெகுளித் தீமூண்டெரியா நிற்ப; காஞ்சனன் என்னும் பெயரையுடைய ஒளிமிக்க வாளையுடைய அவ்விச்சாதரன்; மற்று அவள் இருந்த மன்றப் பொதியிலுள் புற்றடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன்-அக் காயசண்டிகை பண்டு வதிந்த மன்றயாகிய ஊரம்பலத்தினூடு ஒருசார் புகுந்து புற்றினுள்ளே அடங்கியிருக்கும் பாம்பு போலே தன்னை யாரும் அறியாவண்ணம் கரந்துறைவானாயினன் என்க.

(விளக்கம்) தன் என்றது, காயசண்டிகையை, பிறன் பின் செல்லும் என்றது. கணவனாகிய என்னைக் கண்டு வைத்தும் ஏதிலாள் பின் செல்கின்றாள் என்பதுபட நின்றது.

பிறன்போல் என்றதும், கணவனாகிய என்னை ஏதிலானை நோக்குவது போல் போக்குகின்றாள் என்பதுபட நின்றது. மன்னவன் மகனும் இவள்பால் காதலுடையனாதலின் தன்னை மலர் மாலை முதலியவற்றால் அழகு செய்து கொண்டு வந்துள்ளான் போலும் என்னும் தனது ஐயந்தோன்ற உதயகுமரனை மதுக்கமழ் அலங்கல் மன்னவன் மகன் என்றான். இதன்கண் காயசண்டிகை தன்னைக் கைவிட்டு அவனைக் காதலித்தற்குக் காரணமான சிறப்பிது என்பது தோன்ற, பிறன் என்னாது மன்னவன் மகன் என்ற நுணுக்கம் உணர்க எடுத்துக் காட்டியும் எனல் வேண்டிய இழிவு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. பேசுவது ஞானம் இடை பேணுவது காமம் என்று கனல்வான், வாணகையும் செங்கணும் குறிப்பொடு வழாஅள் என்றான். ஈண்டுக் குறிப்பாவது வெள்ளையுள்ளத்தோடு நேரிட்டு நோக்காமல் கள்ளவுள்ளத்தோடு பாராதாள் போன்று பார்த்தல். ஈண்டு மணிமேகலை அவன்பாற் காதல்புடையள் ஆதலின் தன் காதல் அவனுக்குத் தோன்றாமைப் பொருட்டுக் கள்ளத்தோடே நோக்கினள் என்பது இக் காஞ்சனன் கூற்றால் யாமும் உணர்கின்றோமல்லமோ!

ஈங்கு இவன் அவட்குக் காதலன் என்பது தேற்றம் என அறுத்து முடித்திடுக. காதலன் என்றது இகழ்ச்சி. ஏந்திழை: காயசண்டிகை. இவள் என்னும் பொருட்டாய் நின்றது. இகல்-பகைமை; ஆகு பெயராய்ச் சினத்தைக் குறித்து நின்ற தெனினுமாம்.

மன்றப் பொதியில்: இருபெயரொட்டு. அவள்: காயசண்டிகை. அரவம் தன்னைப் பிறர் அறியாவகை உறையுமிடத்தே கரந்துறையும் இயல்பிற்று ஆதலும் நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும் என்பதனாலுமுணர்க. பின்னர் அவன் செயலுக்கியன்ற கருவியும் அவன் பாலிருந்தமை தோன்றக் கதிர்வாள் விஞ்சையன் என்று விதந்தார் என்னை? படை கொண்டார் நெஞ்சம் நன்றூக்காதாகலின் படையுண்மையையும் விதந்தோதினர்.

உதயகுமரன் உட்கோளும் செயலும்

82-93: ஆங்கவள்.........போகி

(இதன் பொருள்) ஆங்கு அவள் உரைத்த அரசிளங்குமரனும் அவ்விடத்திலே மணிமேகலையாலே அறிவுரை கூறப்பட்ட மன்னவன் மகனாகிய இளமைமிக்க உதயகுமரன்றானும்; களையா வேட்கை கையுதிர்க் கொள்ளான்-ஊழ்வினையின் புணர்ப் பாதலாலே தன்னறிவினாலே சிறிதும் நீக்கலாகாத கழிபெருங்காம வேட்கை காரணமாக அவளைக் காயசண்டிகை என்றே கருதிக் கைவிட்டொழிய மாட்டானாகித் தன்னுள்ளே ஆராய்ந்து துணிபவன்; வளைசேர் செங்கை மணிமேகலையே-மாணிக்கத்தானும் பொன்னானுமியன்ற வளையல்கள் அவாவிச் சேர்தற்கியன்ற அழகிய சிவந்த கைகளையுடைய மணிமேலை தானே மாயவிஞ்சையின் காயசண்டிகை ஆய்மனம் மயக்குறுத்தனள் தான் கற்றுள்ள வேற்றுருக் கோடற்கியன்ற மாய மந்திரத்தாலே காயசண்டிகை வடிவந்தாங்கியவளாகிப் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி என் முன் வந்து தன் முதுக்குறை முதுமொழிகளாலே என் மனத்தைப் பின்னும் மயக்குவித்தனள் ஆதல் வேண்டும் அம்பல மருங்கில் அயர்ந்து அறிவு உரைத்த இவ்வம்பலன் தன்னொடு வைகிருள் ஒழியாள்-உலகவறவியின்கண் இவளைக் காயசண்டிகை என்று கருதி நெஞ்சம் வருந்தி அறிவுரை கூறிய இப் புதியவனோடு இற்றை நாள் இருள்மிக்க இவ்விரவினைக் கழித்தற்கொருப்படாள்; இங்கு இவள் செய்தி-யான் மணிமேலையே என்று கருதுகின்ற இவளுடைய செயலை; இடையாமத்து இருள் வந்து அறிகுவன் எனமனங் கொண்டு எழுந்து-இற்றைக்கு நள்ளிரவிலே இருளினூடே வந்து ஒற்றி இவள் யார் என நன்கு அறிந்து கொள்வேன் என்றுட் கொண்டு அவ்விடத்தினின்றும் பெயர்ந்து; வான தேர்ப்பாகனை மீன்திகழ் கொடியனைக் கருப்பு வில்லியை அருப்புக்கணை மைந்தனை தன்னை இடையறாது வருத்துபவனும் வானத்தே இயங்குந் தென்றல் தேரினையும் மீன் எழுதப்பட்டு விளங்கும் கொடியையும் கரும்பாகிய வில்லையும் மலராகிய அம்புகளையும் உடைய ஆற்றல் மிக்கவனுமாகிய காம வேளையே; உயர்வுத் துணையாக-தன் ஆராய்ச்சிக் குற்ற துணைவனாகக் கொண்டு வயாவொடும் போகி-மிக்க காம வேட்கையொடு தன் மாளிகைக்குச் சென்று; என்க.

(விளக்கம்) அவள்: மணிமேகலை; உரைத்த-உரைக்கப்பட்ட கையுதிர்க் கொள்ளல்-கைவிட்டொழிதல் தன் மனக்கண்ணாலே மணிமேகலையின் செங்கையில் மணியானும் பொன்னானுமியன்ற வளையல்களையும் செறித்து அதன் அழகைச் சுவைப்பவன் அது தோன்ற வளைசேர் செங்கை மணிமேகலை என்றான். இங்ஙனம் கற்பனையாகச் சுவைப்பது காமுற்றோரியல்பு. மணிமேகலையே என்புழி ஏகாரம் தேற்றப் பொருட்டு: பிரிநிலைப் பொருளும் பயந்து நின்றது. மாயவிஞ்சை-வேற்றுருக் கொள்ளுதற்கியன்ற மந்திரம்.

மணிமேகலையாயின் இரவில் இப் புதியவனோடு தங்கியிராள் என்றவாறு. இஃது ஐயந்தீர்தற்குக் கருவி கூறியவாறாம். வம்பலன் புதியவன். வைகு இருள்-தங்கிய இருளையுடைய இரவு. வைகறை எனல் ஈண்டைக்குப் பொருந்தாது. இவள் என்றது, தனக்கு ஐயப்புலமாகிய இவள் என்றவாறு. அறிகுவன் என்றது ஐயமற அறிவேன் என்றவாறு.

காம வேள் இடையறாது தன்னோடிருந்து தன்னை ஊக்குதலின் அவனையே துணையாகக் கொண்டு சென்றான் என்றார்; பிறிதொரு துணை பெறாது தனியே சென்றாள் என்பது கருத்து. உயாவுத்துணை-வினாவிக்காரியந் தெரிதற்கியன்ற துணைவன். வயா-ஈண்டுக் கழிபெருங் காமவேட்கை.

உதயகுமரன் நள்ளிரவில் ஊழ்வலியாலே உலகவறவியினூடு சென்றேறுதல்

94-101: ஊர்துஞ்ச.........புகுதலும்

(இதன் பொருள்) ஊர்துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து முதூரின்கண் வாழும் மக்களையுள்ளிட்ட உயிரினமெல்லாம் உறங்கிக் கிடக்கின்ற இரவின் இடையாமத்திலே அவ்வரசிளங் குமரன் தான் கருதியாங்குப் பிறிதொரு துணையும் நாடாது தான் மட்டுமே தமியனாய்த் தன் மாளிகையினின்றும் எழுந்து, வேழம் வேட்டு எழும் வெம்புலி போல -யானையை புடைத்துத்தினன் அவாவிச் செல்லுகின்ற வெவ்விய புலி பதுங்கிச் செல்லுமாறு போலே தன் செலவினைப் பிறர் அறியாவண்ணம் கரந்து சென்று; கோயில் கழிந்து வாயில் நீங்கி ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து-அரண்மனையினின்றும் புறப்பட்டு வாயில் காவலரும் காணா வண்ணம் பெருவாயிலையுங் கடந்து போய் மணிமேகலை இருந்த அம்பலத்தை அணுகி; வேகவெந்தீ நாகம் கிடந்த போகு உயர் புற்று அளை புகுவான் போல-விரைந்து கொல்லும் வெவ்விய நச்சுப் பாம்பு கரந்து கிடக்கும் மிகவும் உயர்ந்துள்ள புற்றின்கண் அமைந்ததொரு பெரிய வளையினூடு புகுபவனைப் போன்று; ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த ஊழ் அடியிட்டு அதன் உள் அகம் புகுதலும்-தன் வரவினை அறிவுறுத்தா நிற்பவும் தன் வருகையைப் பிறர் அறியாதிருக்கும் முறைமையாலே ஒலியவித்து அடிபெயர்த்து அவவம்பலத் துள்ளே புகுமளவிலே என்க.

(விளக்கம்) போகித் தன் பள்ளியிலே கிடந்தவன் தான் கருதிய வண்ணமே ஊர்துஞ்சியாமத்து ஒரு தனி எழுந்து என்க. வாள் வேல் முதலிய படைக்கலத்தின் துணையுமின்றிச் சென்றமை கருதித் தனி எழுந்தான் என்னாது ஒருதனி எழுந்து என்று தனிமையை விதந்தார். தன் வருகையைத் தான் வேட்கும் வேழமும் அறியாவண்ணம் போதலும் அஞ்சாது போதரும் வேட்கையொடு போதலும் நள்ளிரவிற் போதலும் ஆகிய பொதுத்தன்மைகள் பலவும் கருதி வேழம் வேட்டெழும் வெம்புலியை உவமம் கொண்டனர். கோயிலையும் வாயிலையும் பிறர் அறியாவண்ணம் கடந்து நீங்குதலின் அருமை தோன்ற அவற்றைத் தனித்தனி எடுத்தோதினர், ஆயிழை: மணிமேகலை.

முன்னம் காஞ்சனன் அவளிருந்த மன்றப் பொதியிலுட் புற்றடங் காவிற் புக்கொளிந்தடங்கினன் என்றதனை மீண்டும் நினைவுறுத்தியது. வேண்டாகூறி வேண்டியது முடித்தல் என்னும் உத்தி. என்னை? வேகவெந்தீ நாகம் கிடந்த போகுயர் புற்றளை புகுவான் போல என்புழிப் பயில்வோர் நெஞ்சத்தே அவலச் சுவை இரட்டிப்பாதல் நுண்ணிதின் உணர்க.

சாந்தலர் உறுத்தவும் அஃதுணராது அடியிடுதலை ஒளியின்றிச் செல்வோர் செல்லும் முறைப்படி மெத்தென்று இட்டுச் சென்றனன் என்றிரங்குவார். சாந்தலர் உறுத்த ஊழ் அடியிட்டு என்றார். இப்பொருட்கு உறுத்தவும் எனல் வேண்டிய எச்சவும்மை தொக்கதாகக் கொள்க.

இனி, ஊழ் தானே அவனை அவ்வாறு செலுத்த அடியிட்டுப் புகுதலும் என்னும் பொருளும் தோன்ற ஊழடியிட்டு என இரட்டுற இயம்பினர்.

சாந்தலர் உறுத்த என்றது காஞ்சனன் அவன் வரவினைச் சந்தனத்தின் நறுமணத்தாலறிந்தனன் எனற்குக் குறிப்பேதுவாய் நின்றது. ஈண்டு உதயகுமரன் தன் வருகையைப் பிறர் அறியாவண்ணம் செல்ல வேண்டும் என்னும் கருத்தினனாய்ச் சென்றானேனும் அவன் வரவினைக் காஞ்சனனுக்கு அறிவுறுத்தும் கருவியொன்றனை அவன்பாலே அவனது ஊழ்வினை கூட்டி வைத்திருந்தமையை எண்ணுங்கால்

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்   (குறள்-380)

எனும் திருக்குறளும் நம் மெண்ணத்தின்கண் முகிழ்ப்பதாம்

காஞ்சனன் உதயகுமரன் வாளால் எறிதல்

102-109: ஆங்கு............புகுதலும்

(இதன் பொருள்) ஆங்கு முன் இருந்த அலர்தார் விஞ்சையன் அம்பலத்தினூடே முன்னரே காயசண்டிகையின் செயலை ஒற்றியறிதற்குக் கரந்திருந்த மலர்ந்த மாலையையுடைய வித்தியாதரனாகிய காஞ்சனன் உதயகுமரனுடைய வரவு கண்டவுடன்; ஈங்கு இவன் இவள்பால் வந்தனன் என்றே இவ்வம்பலத்தின்கண் இம் மன்னவன் மகன் காயசண்டிகையின் பொருட்டே வந்துள்ளான் என்று ஐயமறத் துணிந்தவனாய்; இருந்தோன் வெம்சின அரவம் நஞ்சு எயிறு அரும்பத் தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென எழுந்து பெரும்பின் சென்று அவன் சுரும்பு அறை மணித்தோள் துணிய வீசி கரந்திருந்த அக் காஞ்சனன் வெவ்விய வெகுளியையுடைய நாகப்பாம்பு நச்சுப்பற்கள் நிமிரும்படி தன் பெரிய வெகுளியோடே சீறி எழுந்து தனது படத்தை விரித்தாற் போன்று பெரிதும் சினந்தெழுந்து உதயகுமரனை முதுகுப்புறமாகப் பெரிதும் அணுகிச் சென்று அவனுடைய வண்டுகள் முரலும் மலர் மாலையணிந்த அழகிய தோள் துணிபடும்படி தன் கதிர்வாளால் வெட்டி வீழ்த்திப் பின்னர்; காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம் போகுவல் என்று அவள்பால் புகுதலும்-தன் மனைவியாகிய காயசண்டிகைக் கைப்பற்றிக் கொண்டு வான் வழியே என்னூர்க்குப் போவேன் என்று கருதியவனாய்க் காயசண்டிகை வடிவத்தோடிருந்த மணிமேகலையிருந்த இடத்தை நோக்கிப் போகுமளவிலே என்க.

(விளக்கம்) ஊழ்-முறைமை; ஊழ்வினையுமாம் விஞ்சையன்-விச்சாதரனாகிய காஞ்சனன். இவன்-இளவரசன் மகன் இவள்பால் வந்தனன் என்றது இடக்கரடக்கு வீசிவிட்டுப் பின்னர் என்க அவள்பாற் புகுதலும் என்புழி அவள் என்றது காயசண்டிகை வடிவிலிருந்த மணிமேகலையை

கந்திற்பாவை காஞ்சனனுக்குக் கூறுதல்

110-121: நெடுநிலை...............அடங்கினள்

(இதன் பொருள்) நெடுநிலைக்கந்தின் இடவயின் விளங்க கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும்-நெடிதாக உயர்ந்து நிற்கும் தூணில் ஓரிடத்தே விளக்கமாகக் கடவுள் தன்மையோடு பண்டு மயனாற் பண்ணிய பாவையின்கண் நீங்காது நிற்கும் தெய்வம் அக் காஞ்சனனுக்குக் கூறுகிறது. விஞ்சைக் காஞ்சன அணுகல் அவள் மணிமேகலை............மறந்து உரு எய்தினள் அணுகல்- விச்சாதரனே! அவளை அணுகாதே கொள்! அங்கிருப்பவள் நின் மனைவியாகிய காயசண்டிகையல்லன், பின்னே யாரோ வெனின்; மணிமேகலை-மணிமேகலை என்னும் பிக்குணிகாண்! அவளை அணுகாதே கொள்! அவள் காயசண்டிகையின் உருவத்தைத் தான் கரந்துறையும் உருவமாக மேற்கொண்டிருக்கின்றனள் காண்!; காயசண்டிகை தன் கடும்பசி நீங்கி வானம் போவுழி-இனி நின் காதலியாகிய காயசண்டிகை தன் சாபம் நீங்குழி இவளிட்ட ஆருயிர் மருந்தாயுண்டு தான் உழந்த கடிய பசியாகிய ஆனைத் தீ நோய் நீங்கி வான் வழியே நும்மூர் நோக்கிப் போகும் பொழுது; வந்தது கேளாய்-அவளுக்கு வந்த துன்பச் செய்தியைக் கூறுவேன் கேட்பாயாக!; அந்தரஞ் செல்வோர் வான் வழியே செல்லுமியல்புடைய வானவரும் முனிவரும் பிறரும் யாவரேனும்; அந்தரி இருந்த விந்தமால் வரை மீமிசைப் போகார்-கொற்றவையாகிய இறைவி எழுந்தருளியிருக்கும் விந்தமலையின் உச்சிக்கு நேர் மேலே பறந்து செல்லார், அதனை வலங் கொண்டு விலகியே செல்வார்காண்!; போவார் உளர் எனின் இச் செய்தி யறியாமல் யாரேனும் அவ் விந்தத்தின் உச்சிக்கு மேலே பறந்து செல்வார் உளராய பொழுது; விந்தம் காக்கும் விந்தாகடிகை பொங்கிய சினத்தள்-அவ் விந்த மலையினைக் காத்திருக்கின்ற விந்தாகடிகை என்னும் தெய்வம் மிகுந்த சினங்கொண்டவளாய்; சாயையின் வாங்கித் தன் வயிற்று இடூஉம் அவருடைய நிழலையே பற்றியிழுத்து அவரைத் தன் வயிற்றினூடே போகட்டுக் கொள்ளும்; அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள்-காயசண்டிகையும் தன் அறியாமை காரணமாக அவ் விந்த மலையுச்சிக்கு மேலாகச் சென்று அவ் விந்தா கடிகையின் வயிற்றிலே அடங்கி யொழிந்தனள் காண்! என்று அறிவித்து என்க.

(விளக்கம்) விளங்க என்றது எதிர்கால நிகழ்ச்சிகள் விளங்க வேண்டி என்றவாறுமாம். கடவுள்-கடவுட்டன்மையோடு; கடவுட்டச்சன் எழுதிய பாவை எனலுமாம். விந்தாகடிகை என்பது அந்தரியின் மற்றொரு பெயர் என்பாருமுளர். விந்தாகடிகை வாங்கி வயிற்றிடூஉம் என்க அவள்: விந்தாகடிகை அடக்கினள் என்றது அவ்வாற்றாலிறந்தாள் என்றவாறு.

காஞ்சனன் கருத்தழிந்து தன்னூர்க்குச்  செல்லுதல்

122-129: கைம்மை..........படர்ந்தென்

(இதன் பொருள்) காஞ்சன கைம்மை கொள்ளேல்-காஞ்சனனே! இவள் மனைவி யல்லளாகலின் நின் நெஞ்சத்தே சிறுமை கொள்ளாதொழிக; விஞ்சைக் காஞ்சன- விச்சாதரனாகிய காஞ்சனனே இன்னு மொன்று கூறுவல்; இது கேள்-இதனையும் கேட்பாயாக!; உதயகுமாரனை ஊழ்வினை வந்து இங்கு ஆருயிர் உண்டது ஆயினும்-உதயகுமரனாகிய இவ்வரசிளங்குமரனை அவன் முற்பிறப்பிலே செய்த பழவினையே செவ்வியுற்று வந்து இவ்விடத்திலே அவனது அரிய உயிரைத் பருகியது, அங்கனமிருப்பினும்; அறியாய் வெவ்வினை செய்தாய்-நீ தானும் நன்கு ஆராய்ந்தறியாமல் தீவினை யொன்றனை ஈண்டுச் செய்தொழிந்தமையின்; அவ்வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்-அத்தீவினை தானும் நின்னை விட்டகலாமல் அவ்வாறே செவ்வி பெற்றுத் தன் பயனை ஊட்டுதற்கு நின்பால் விட்டகலாமல் அவ்வாறே செவ்வி பெற்றுத் தன் பயனை ஊட்டுதற்கு நின்பால் வந்துறாமற் போகாது; என்று இவை தெய்வம் கூறலும்-என்று அறிதற்கரிய இச் செய்திகளை அக் கந்திற்பாவை யிடத்துறையும் தெய்வமானது கூறா நின்றவளவிலே; கன்றிய நெஞ்சில் கடுவினை உருத்து எழ-முன்னம் உதயகுமரனைச் சினந்த தன் நெஞ்சினுள்ளே தான் அறியாமல் செய்த கொலையாகிய இக் கொடிய தீவினையானது சினந்தெழுந்து சுடா நிற்ப; விஞ்சையான் எழுந்து விண் விலங்கு படர்ந்து போயினன்- விச்சாதரனாகிய அக் காஞ்சனன் பெரிதும் வருந்தி மேலே உயர்ந்தெழுந்து வானினூடே குறுக்காக இயங்கித் தன்னூர் நோக்கிச் சென்றனன்; என்பதாம்.

(விளக்கம்) கைம்மை என்றது சிறுமை என்னும் பொருட்டாய்த் தனக்குரியளல்லாதாளைக் கைப்பற்றக் கருதிய தீயகருத்தின் மேனின்றது. நினக்கு அறிவருந்தும் சினம் காரணமாக ஆராயாது தீவினை செய்தனை ஆகலின் அது தன் பயனை ஊட்டாது கழியாது என்பதுபட அறியாய் வெவ்வினை செய்தாய் அவ்வினை நின்னையும் அகலாது ஆங்குறும் என்று கந்திற்பாவை அறிவுறுத்துகின்றது என்னை?

அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை (குறள்-315)

எனவும்,

இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னுமை
வேண்டும் பிறன்கட் செயல்    (குறள்-316)

எனவும் வரும் அறங்களை அறிதற்கியன்ற அறிவு பெற்றிருந்தும் அறியாயாய் வெவ்வினை செய்தொழிந்தாய் என்றிரங்கிக் கழறியபடியாம். இத் தீவினை சிந்தாயின்றிச் செய்வினை அல்லாமையை நுண்ணுணர்வாற் கண்டு கொள்க. என்னை? ஓருயிரைக் கொல்ல வேண்டும் என்பதே அவன்கருத்தாகலின்; ஆகவே சிந்தை இன்றெனிற் செய்வினை யாவதும் எய்தாது என்னும் அவர் சித்தாந்தத்தோடு இது முரணாமையு மறிக. கன்றிய-சினந்த. கடுவினை-கொலை. விலங்கு-குறுக்காக.

இனி, இக் காதையினை-கோட்டம் காப்புடைத்தாக; தாரோன் கேட்டு எழுந்து சென்று ஏறலும், கணவன் கையறவெய்தி வந்து இழிந்து தேர்ந்து திரிவோன் கண்டு பழமைக் கட்டுரை பல பாராட்டவும் நீங்கி சென்று காட்டி காணாயோ நீ இவையும் காணாய் தகை இன்றாயது. வேறாயின சுமந்தன ஒழுக்குவ வேறாயின தொல்லோர் வகுத்த வஞ்சம் தெரியாய் என மெல்லியல் உரைத்தலும் கொள்ளான் செல்லும் நோக்கும் காட்டி வழாஅள் ஆதலின் ஒழிந்தனளென ஒளித்தடங்கினன் விஞ்சையன் குமரனும் மணிமேகலையே ஆய் ஏந்தி மயக்குறுத்தனள் இருளொழியாள் வந்தறிகுவனென எழுந்து போகி யாமத்து எழுந்து கழிந்து நீங்கி அணைந்து புகுதலும் விஞ்சையன் எழுந்து சென்று வீசிப்புகுதலும் பாவை உரைக்கும் விஞ்சையன் எழுந்து படர்ந்து போயினன் என முடித்திடுக.

உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் எறிந்த காதை முற்றிற்று


Offline Anu

Re: மணிமேகலை
« Reply #21 on: February 28, 2012, 09:37:03 AM »
21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை

(இருபத்தொன்றாவது-மணிமேகலை உதயகுமரன் மடிந்தது கண்டு உறுதுயரெய்த நெடுநிலைக் கந்தின் நின்ற பாவை வருவதுரைத்து அவள் மயக்கொழித்த பாட்டு)

அஃதாவது: விச்சாதரன் உதயகுமரன் பின் சென்று மணித்தோள் துணிய வாளால் வீசியதனானும் மணிமேகலையை அணுகச் சென்ற காஞ்சனனை மறித்து அவனுக்குக் கந்திற்பாவை அறிவுறுத்திய சொல்லானும் உண்டான அரவத்தாலே சம்பாபதி கோயிலினூடே துயின்றிருந்த மணிமேகலை விழித்துக் கந்திற்பாவை கூற்றினாலே உதயகுமரன் கொலையுண்டமை யுணர்ந்து அவன்பால் பற்பல பிறப்புகளிலே அடிப்பட்டு வந்த பற்றுண்மையாலே அவ்வுதயகுமரன் இறந்துபட்டமை பொறாமல் பற்பல கூறி அரற்றி அவன் உடலைத் தழுவி அழச்செல் வாளை இடையே கந்தற்பாவை தடுத்து இறந்தகாலச் செய்திகள் பற்பல கூறி உதயகுமரன் கொலையுண்டமைக்குக் காரணமான பழவினை இன்னதென இயம்பித் தேற்றி இனி, எதிர்காலத்தேயும் அவட்கு வர விருக்கின்ற ஏது நிகழ்ச்சியனைத்தையும் இயம்பி இனிது ஆற்றுவித்த செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இனி, இதன்கண்-கந்துடை நெடுநிலை கடவுட் பாவை கூறும் கூற்றுக்கள் முழுவதுமே பயில்வோர்க்கு மெய்யறிவு கொளுத்தும் பண்புமிக்கன; ஆற்றவும் இனிமையும் மிக்கனவாயிருத்தலுணர்ந்து மகிழற்பாற்று. இக் காதை அவலச் சுவை பொதுளிதொரு காதையுமாகும்.

மணிமேகலை பிறப்புப் பலவற்றிற் றொடர்ந்து தனக்குக் கணவனாகவே வந்த உதயகுமரன்பால் பற்று மிக்கவளாகி அவனையும் மெய்யறிவு கொளுத்தி அவனுடைய பிறவிப்பிணியையும் அகற்றி விடப் பெரிதும் விரும்பி அவனுக்கு அறங்கூற முயன்றாவாகவும் தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று கருதி அவனைக் கொன்றொழித்ததாகவும் சொல்லி அழுதரற்று மொழிகள் அவலச்சுவைக்கு எடுத்துக் காட்டத் தகுவனவாக அமைந்திருக்கின்றன. இக் காதை பயில்பவர்க்கும் மெய்யுணர்வு தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை.

கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்தின்
குடவயின் அமைத்த நெடு நிலை வாயில்
முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த
மது மலர்க் குழலி மயங்கினள் எழுந்து
விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன்
மைந்தற்கு உற்றதும் மன்றப் பொதியில்
கந்து உடை நெடு நிலைக் கடவுள் பாவை
அங்கு அவற்கு உரைத்த அற்புதக் கிளவியும்
கேட்டனள் எழுந்து கெடுக இவ் உரு என
தோட்டு அலர்க் குழலி உள்வரி நீங்கித்  21-010

திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள்
கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்
உவவன மருங்கில் நின்பால் உள்ளம்
தவிர்விலேன் ஆதலின் தலைமகள் தோன்றி
மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காட்டி
என் பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றி
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின்
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும்  21-020

யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்கக்
காயசண்டிகை வடிவு ஆனேன் காதல!
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின்
வெவ் வினை உருப்ப விளிந்தனையோ! என
விழுமக் கிளவியின் வெய்து உயிர்த்துப் புலம்பி
அழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும்
செல்லல் செல்லல்! சேயரி நெடுங்கண்!
அல்லி அம் தாரோன் தன்பால் செல்லல்!
நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்
மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம்  21-030

பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால்
கண்ட பிறவியே அல்ல காரிகை
தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய்! விழுமம் கொள்ளேல்!
என்று இவை சொல்லி, இருந் தெய்வம் உரைத்தலும்
பொன் திகழ் மேனிப் பூங்கொடி பொருந்திப்
பொய்யா நாவொடு இப் பொதியிலில் பொருந்திய
தெய்வம் நீயோ? திருவடி தொழுதேன்
விட்ட பிறப்பின் வெய்து உயிர்த்து ஈங்கு இவன்
திட்டிவிடம் உணச் செல் உயிர் போயதும்  21-040

நெஞ்சு நடுங்கி நெடுந் துயர் கூர யான்
விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம்
அறிதலும் அறிதியோ? அறிந்தனை ஆயின்
பெறுவேன் தில்ல நின் பேர் அருள் ஈங்கு! என
ஐ அரி நெடுங் கண் ஆய் இழை! கேள் எனத்
தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
மாயம் இல் மாதவன் வரு பொருள் உரைத்து
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம்
பிரமதருமனைப் பேணினிராகி   21-050

அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல்
விடியல் வேலை வேண்டினம் என்றலும்
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி
காலை தோன்ற வேலையின் வரூஉ
நடைத் திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து
மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை
சீலம் நீங்காச் செய் தவத்தோர்க்கு
வேலை பிழைத்த வெகுளி தோன்றத்
தோளும் தலையும் துணிந்து வேறாக
வாளின் தப்பிய வல் வினை அன்றே  21-060

விரா மலர்க் கூந்தல் மெல் இயல் நின்னோடு
இராகுலன் தன்னை இட்டு அகலாதது
தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய
அவல வெவ் வினை என்போர் அறியார்
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும்
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது
ஆங்கு அவ் வினை வந்து அணுகும்காலைத்
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின்
மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும்
ஆங்கு அவ் வினை காண் ஆய் இழை கணவனை  21-070

ஈங்கு வந்து இவ் இடர் செய்து ஒழிந்தது
இன்னும் கேளாய் இளங் கொடி நல்லாய்!
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டுக்
காவலன் நின்னையும் காவல்செய்து ஆங்கு இடும்
இடு சிறை நீக்கி இராசமாதேவி
கூட வைக்கும் கொட்பினள் ஆகி
மாதவி மாதவன் மலர் அடி வணங்கித்
தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு  21-080

காதலி நின்னையும் காவல் நீக்குவள்
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்பால்
புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை
போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து
மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும்
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்
தீவதிலகையின் தன் திறம் கேட்டு
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின்
ஆங்கு அத் தீவம் விட்டு அருந் தவன் வடிவு ஆய்  21-090

பூங் கொடி வஞ்சி மா நகர் புகுவை
ஆங்கு அந் நகரத்து அறி பொருள் வினாவும்
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்
இறைவன் எம் கோன் எவ் உயிர் அனைத்தும்
முறைமையின் படைத்த முதல்வன் என்போர்களும்
தன் உரு இல்லோன் பிற உருப் படைப்போன்
அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும்
துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு
இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும்
பூத விகாரப் புணர்ப்பு என்போர்களும்  21-100

பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள்
இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார்
அறனோடு என்னை? என்று அறைந்தோன் தன்னைப்
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறு மலர்க் கோதை! எள்ளினை நகுதி
எள்ளினை போலும் இவ் உரை கேட்டு! இங்கு
ஒள்ளியது உரை! என உன் பிறப்பு உணர்த்துவை
ஆங்கு நிற்கொணர்ந்த அருந் தெய்வம் மயக்க
காம்பு அன தோளி! கனா மயக்கு உற்றனை  21-110

என்று அவன் உரைக்கும் இளங் கொடி நல்லாய்!
அன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை
தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும்
வாயே என்று மயக்கு ஒழி மடவாய்
வழு அறு மரனும் மண்ணும் கல்லும்
எழுதிய பாவையும் பேசா என்பது
அறிதலும் அறிதியோ? அறியாய்கொல்லோ?
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்!
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும்
கொடித் தேர் வீதியும் தேவர் கோட்டமும்  21-120

முது மர இடங்களும் முது நீர்த் துறைகளும்
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி
காப்பு உடை மா நகர்க் காவலும் கண்ணி
யாப்பு உடைத்தாக அறிந்தோர் வலித்து
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
ஆங்கு அத் தெய்வதம் அவ் இடம் நீங்கா
ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும்
என் திறம் கேட்டியோ இளங் கொடி நல்லாய்!
மன் பெருந் தெய்வ கணங்களின் உள்ளேன்!  21-130

துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின்
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின்
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய்
மாந்தர் அறிவது வானவர் அறியார்
ஓவியச்சேனன் என் உறு துணைத் தோழன்
ஆவதை இந் நகர்க்கு ஆர் உரைத்தனரோ?
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம்
உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி
பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின்  21-140

மணிமேகலை! யான் வரு பொருள் எல்லாம்
துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு என
தேறேன் அல்லேன் தெய்வக் கிளவிகள்
ஈறு கடைபோக எனக்கு அருள்? என்றலும்
துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன்
வருவது கேளாய் மடக் கொடி நல்லாய்!
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய்
ஈங்கு இம் முதியாள் இடவயின் வைத்த  21-150

தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித்
தையல்! நிற்பயந்தோர் தம்மொடு போகி
அறவணன் தானும் ஆங்கு உளன் ஆதலின்
செறி தொடி! காஞ்சி மா நகர் சேர்குவை
அறவணன் அருளால் ஆய் தொடி! அவ் ஊர்ப்
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி
வறன் ஓடு உலகில் மழைவளம் தரூஉம்
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை
ஆய் தொடிக்கு அவ் ஊர் அறனொடு தோன்றும்
ஏது நிகழ்ச்சி யாவும் பல உள   21-160

பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம்
அறவணன் தனக்கு நீ உரைத்த அந் நாள்
தவமும் தருமமும் சார்பின் தோற்றமும்
பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து
மற இருள் இரிய மன் உயிர் ஏம் உற
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு இல் இருத்தியொடு
புத்த ஞாயிறு தோன்றும்காறும்
செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா
இத் தலம் நீங்கேன் இளங்கொடி! யானும்
தாயரும் நீயும் தவறு இன்றுஆக   21-170

வாய்வதாக நின் மனப்பாட்டு அறம்! என
ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய்
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின்
கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள
உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம்
ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்குத்
தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை!  21-180

ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம்
சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய்!
ஈது நின் பிறப்பு என்பது தௌிந்தே
உவவன மருங்கில் நின்பால் தோன்றி
மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள் என
துவதிகன் உரைத்தலும் துயர்க் கடல் நீங்கி
அவதி அறிந்த அணி இழை நல்லாள்
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும்
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என்  21-190

உரை

மணிமேகலை துயில் காயசண்டிகை வடிவத்தைக் களைந்து தன்னுருக் கோடல்

1-10: கடவுள்.....நீங்கி

(இதன் பொருள்) கடவுள் எழுதிய நெடுநிலைக்கந்தின் குடவயின் அமைத்த நெடுநிலை வாயில் முதியாள் கோட்டத்து-கடவுட்டன்மையோடு இயற்றப்பட்ட பாவையையுடைய நெடிய நிலையினையுடைய தூணுக்கு மேற்றிசையிலே அமைக்கப்பட்டிருந்த குச்சரக் குடிஞை யென்னும் நெடிய நிலையையுடைய வாயிலமைந்த சம்பாபதியின் திருக்கோயிலின்; அகவயின் கிடந்த மதுமலர்க் குழலி மயங்கிளன் எழுந்து-உள்ளிடத்தே துயில்கொண் டிருந்த மணிமேகலையானவள் அம்பலத்தே யெழுந்த அரவம் கேட்டுத் துயில் மயக்கத்தோடு எழுந்து; (கந்திற் பாவையின் கடவுள் மொழியினாலே) விஞ்சையன் செய்தியும் வென்வேல் வேந்தன் மைந்தற்கு உற்றதும்- விச்சாதரன் உதயணனை வாளால் எறிந்து கொன்ற செய்தியையும் ;மன்றப் பொதியில் கந்து உடை நெடுநிலை கடவுள் பாவை ஆங்கு அவற்கு உரைத்த அற்புதக் கிளவியும்-அம்பலமாகிய அவ்வுலக வறவியின் தூணை இடமாகக் கொண்டு நெடிது நிலைபெற்றிருக்கின்ற தெய்வத் தன்மையுடைய அக் கந்திற் பாவையானது அப்பொது அவ் விச்சாதரனுக்குக் கூறிய வியத்தகு மொழிகளையும்; கேட்டனன் எழுந்து-கேட்டுத் துயில் மயக்கம் நீங்கி நன்கு விழிப்புற்றவளாய் அவ்விடத்தினின்றும் எழுந்து; தோட்டு அலர்குழலி இவ்வுரு கெடுக என உள்வரி நீங்கி-அம் மணிமேகலை இக் காயசண்டிகையின் வடிவம் என்னை விட்டொழிவதாக என்று அவ் வேற்றுருவத்தினின்று விலகித் தன் வடிவத்தோடே நின்று அரற்றுபவள்;

(விளக்கம்) கடவுள் என்றது-துவதிகனை. குடவயின்-மேற்றிசையின்கண். முதியாள் கோட்டம்-சம்பாபதி கோயில். கிடந்த என்றது துயில்கொண்டிருந்த என்றவாறு. மதுமலர்க்குழலி: மணிமேகலை மயங்கினள்: முற்றெச்சம். விஞ்சையன் செய்தி-உதயகுமரனை வாளால் எறிந்தமை வேந்தன் மைந்தன்: உதயகுமரன் உற்றது என்றது. கொலை யுண்டமையை அற்புதக் கிளவி-வியத்தகு மொழி; அஃதாவது, காயசண்டிகையின் நிலை இன்னது எனக் கூறியதாம். இவ்வுரு என்றது, தான் மேற்கொண்டிருந்த காயசண்டிகை வடிவத்தை; அவ்வடிவமே உதயகுமரன் கொலையுண்டமைக்குக் காரணம் என்னும் கருத்தால் கெடுக! என்றாள். தோடலர்-தோட்டலர் என விகாரம் எய்தியது. குழலி: மணிமேகலை. உள்வரி-வேடம் மேல்வருவன மணிமேகலையின் அரற்றல், ஆதலின் அரற்றுபவள் என எழுவாய் பெய்துரைத்துக் கொள்க.

மணிமேகலையின் அரற்றுரை

11-22: திட்டி..........காதல

(இதன் பொருள்) (22) காதல-என் ஆருயிர்க்காதலனே!; திட்டிவிடம் உண நின் உயிர்போம் நாள் கட்டழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்-அந்தோ! போய பிறப்பில் திட்டிவிடம் என்னும் பாம்பினது நஞ்சு பருகுதலாலே உன்னுடைய உயிர் போன நாளிலே அடிச்சியாகிய யான் மிக்க நெருப்பினை உடைய சுடுகாட்டின்கண் தீப்பாய்ந்து என் உயிரை யானே சுட்டுப் போக்கினேன், இப் பழந் தொடர்பு காரணமாக; உவவன மருங்கின் நின்பால் உள்ளம் தவிர்விலேன் ஆதலின்-மன்னவன் மகனாக இப்பிறப்பில் பிறந்து வந்த நின்னை யான் உவவனம் என்னும் பூம்பொழிலின்கண் முதன் முதலாகக் கண்டபொழுதே நின்பால் வந்த என் நெஞ்சத்தைத் தடுத்து நிறுத்த இயலாதேன் ஆயினேன், என் மன நிலை இங்ஙனம் இருத்தலின்; தலை மகள் தோன்றி என்னை ஆங்கு மணிபல்லவத்திடை உய்த்து என்பால் அருள் மிக்க எங்குல முதல்வியாகிய மணிமேகலா தெய்வம் அம் மலர்வனத்தினில் வந்து என்னைத் துயிலும்பொழுது அவ்விடத்தினின்றும் எடுத்துப்போய் மணிபல்லவத் தீவின் கண் வைத்தும்; பிணிப்பு அறு மாதவன் பீடிகை காட்டி என் பிறப்பு உணர்ந்த என் முன் தோன்றி-பற்றறுதற்குக் காரணமான பெரிய தவத்தை உடைய புத்தபெருமானுடைய பீடிகையைக் காணச் செய்து அவ்வாற்றால் என்னுடைய பழைய பிறப்பை உணர்ந்துகொண்டு நின்ற என் முன்னே எழுந்தருளி அத் தெய்வமானது; உன் பிறப்பு எல்லாம் ஒழிடு இன்று உரைத்தலின்-அப் பிறப்பிலே என் காதலனாகிய உன்னுடைய முற்பிறப்பும் இப்பிறப்பும் ஆகிய பிறப்புகளையும் இவற்றிற்கியன்ற காரணங்களையும் சிறிதும் ஒழிவின்றி அறிவித்தமையாலே; யான்-நின் காதலி ஆகிய யான் நின்பால் அன்பு மிகுந்து; பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும்-பிறந்தவர்கள் இறந்து போதலும் இறந்தவர் மீண்டும் பிறந்தலும் இங்ஙனம் பிறந்தும் இறந்தும் சுழன்று வருகின்ற உயிர்களுக்கு அவை செய்கின்ற கல்வினைகள் கொணர்ந்து தருகின்ற மன அமைத்திக்குக் காரணமாகிய இன்பமும் அவை செய்த தீவினைகள் கொணர்ந்து தருகின்ற அமைதி அற்ற துன்பமும் ஆகிய இவற்றின் இயல்புகளையும்; நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்கக் காய சண்டிகை வடிவானேன் உனக்கு அறிவித்து உனது பிறவித் துயரங்களுக்கெல்லாம் காரணமாய் இருக்கின்ற இருள்சேர் இருவினையும் ஒழித்து நின்னை உய்விக்க கருதியன்றோ இக் காய சண்டிகை வடிவத்தை யான் மேற்கொள்ளலாயினேன் அந்தோ! அம்முயற்சியே நினது சாவிற்குக் காரணமாய் முடிந்ததே என்றாள் என்க.

(விளக்கம்) திட்டிவிடம்-கண்ணால் நோக்கியே கொல்லும் ஒருவகைப் பாம்பு. கட்டழல்-மிக்க நெருப்பு. என் உயிர் சுட்டேன் என்றது -தீப்பாய்ந் திறந்தேன் என்றவனாறு. நின்பால் உள்ளம் தவிர்விலேன் என்றது-அடிப்பட்டு வருகின்ற அன்புத் தொடர்பு காரணமாக மறு பிறப்பெய்தி வந்த நின்பால் எய்திய என் நெஞ்சத்தைத் தவிர்க்க இயலாதேன் ஆயினேன் என்பதுபட நின்றது. தலைமகள் என்றது- மணிமேகலா தெய்வத்தை; குலதெய்வமாதலின் தலைமகள் என்றாள். மாதவன்: புத்த பெருமான். காட்டினமையால் என் பிறப்பு உணர்ந்து நின்ற என்க. உன் என்றது-உதயகுமரனை யான் உனக்கு இடர்களைய எண்ணிக் காயசண்டிகை வடிவானேன். அதுவே உனக்குச் சாத்துன்பத்தை விளைவித்துவிட்டது என்று பரிந்துகூறியவாறு. ஈண்டு,

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்   (380)

எனவரும் திருக்குறள் நினைக்கத்தகும்.

இதுவுமது

23-26: வைவாள்...........எழுதலும்

(இதன் பொருள்) வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின் வெவ்வினை உருப்ப விளிந்தனையோ- கூரிய வாளையுடைய விச்சாதரனுடைய மயக்கம் காரணமாக மிக்க சினத்தைக் கருவியாகக் கொண்டு நின்று பழவினை சினந்து வந்து ஊட்டுதலாலே இறந்தொழிந்தாயோ; என விழுமக் கிளவியின் வெந்துயிர்த்துப் புலம்பி-என்று சொல்லி அழுகின்ற துன்ப மொழிகளோடே வெய்தாக மூச்செறிந்து தனிமையுற்று; அழுதனள் ஏங்கி அயாவுயிர்த்து எழுதலும்-நிலத்தில் வீழ்ந்து அழுது ஏங்கி நெடிடுயிர்ப்புக் கொண்டு உதயகுமரன் உடல் கிடக்கும் இடத்திற்குப் போக எண்ணிச் செல்லுமளவிலே; என்க.

(விளக்கம்) வை-கூர்மை. மயக்கு-அறியாமை. வெவ்வினை-கொடிய தீவினை உருப்ப என்றது. உருத்து வந்தூட்ட என்றவாறு, விழுமக்கிளவி-துன்பத்தாற் பிறந்த மொழி. வெய்துயிர்த்தல்-வெய்தாக நெடுமூச் செறிதல் புலம்பி-தனிமையுற்று. அழுதனள் :முற்றெச்சம் அயா உயிர்த்தல்-நெட்டுயிர்ப்புக் கொள்ளல்.

மணிமேகலையைக் கந்திற்பாவை தடுத்தல்

27-35: செல்லல்..............உரைத்தலும்

(இதன் பொருள்) இருந்தெய்வம் செல்லல் செல்லல்சே அரிநெடுங்கண் அல்லியம் தாரோன் தன்பால் செல்லல்-தூணகத் துறைகின்ற பெரிய தெய்வமானது போகாதே போகாதே சிவந்த வரிகள் படர்ந்த நெடிய கண்ணையுடைய மணிமேகலாய் அகவிதழ்களால் புனைந்த மலர்மாலை அணிந்த உதயகுமரன்பால் போகாதே கொள்; நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம் மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம்-உனக்கு இவ்வுதயகுமரன் கணவனாகப் பிறந்ததுவும் நின்னுடைய மனதிற்கு இனியவனாகிய இவனுக்கு நீ மனைவியாகப் பிறந்ததுவும்; கண்ட பிறவியே அல்ல-நீ உணர்ந்திருக்கின்ற உங்களுடைய முற்பிறப்பு மட்டுமே அல்ல; பண்டும் பண்டும் பல்பிறப்பு உளவால்-அதற்கு முன் நிகழ்ந்த பழங்காலத்தும் பன்முறை அங்ஙனமே கணவன் மனைவியாகப் பிறந்த பிறப்புகள் பற்பல உள்ளன; காரிகை-நங்கையே கேள்; தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம் விடுமாறு முயல்வோய்-நீ இப்பொழுது மாறி மாறி வருகின்ற பிறவிக் கடலின்கண் ஆழ்வதற்குக் காரணமான அப் பிறப்பினையே ஒழித்து விடுகின்ற நல்நெறியிலே செல்லுகின்ற முயற்சியை உடையை அல்லையோ ஆதலால்; விழுமங் கொள்ளேல் என்று இவை சொல்லி உரைத்தலும்-துன்புறாதே கொள் என்று இவ்வரிய செய்திகளைச் சொல்லித் தடுத்துக் கூறுதலும்; என்க.

(விளக்கம்) செல்லல்: எதிர்மறை வியங்கோள்; சேயரி நெடுங்கண்: அன்மொழித் தொகை. அல்லி-அகவிதழ். தாரோன் என்றது உதயகுமரனை. உதயகுமரன் உடம்பின் அருகே செல்லற்க என்று தடுத்தப்படியாம் மகன்-கணவன். மகள்-மனைவி. கண்ட பிறவி-புத்தபீடிகையின் தெய்வத்தன்மையாலும் மணிமேகலா தெய்வத்தின் திருவருளாலும் நீ உணர்ந்து கொண்டிருக்கின்ற உங்கள் முற்பிறப்பு என்றவாறு; தெய்வ மாதலின் இந்நிகழ்ச்சியை அறிந்து கூறிற்று என்க. காரிகை: விளி தடுமாறுதல்-மாறி மாறி மேலும் கீழுமாய் வருதல் பிறவிக் கடலில் என்க. தோற்றம் -பிறப்பு. தோற்றம் விடுமாறு முயல்வோய் விழுமம் கொள்ளேல் என்றது, போகாதே  போகாதே என்று தான் வற்புறுத்துத் தடுத்தற்குக் காரணம் இதுவென உடம்படுத்துக் கூறிய படியாம் என்னை?

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை   (குறள்-345)

என்பது பற்றி பழவினைத் தொடர்புடைய அம் மன்னன் மகனை நீ மனத்தாலும் நினைதல் கூடாது எனவும், அவன் பொருட்டு நீ இவ்வாறு வருந்துதலும் கூடாது எனவும் அறிவுரை கூறியபடியாம். அறிதற்கரிய செய்திகளை எடுத்துக் கூறி அத் தெய்வம் உணர்த்திற்றென்பார் இவை சொல்லி உரைத்தலும் என வேண்டாது கூறி வேண்டியது முடித்தார்.

மணிமேகலை கந்திற்பாவையைத் தன் நன்றியறிவு தோன்றக் கைதொழுதல்

36-44: பொன்........ஈங்கென

(இதன் பொருள்) பொன்திகழ்மேனி பூங்கொடி பொருந்தி-பொன் போல விளங்குகின்ற திருமேனியையுடைய பூங்கொடி போல் பவளாகிய மணிமேகலை தானும் அத் தெய்வத்தின் மொழிக்குடன் பட்டு நின்று கூறுபவள்; பொய்யா நாவொடு இப் பொதியிலில் பொருந்திய தெய்வம் நீயோ-வியப்புற்றுப் பொய்த்தல் இல்லாத மொழி பேசுகின்ற நாவினோடு இவ் வம்பலத்தின்கண் தூணில் உறைகின்ற தெய்வம் ஒன்றுண்டு என்று அறிந்தோரால் கூறப் படுகின்ற கந்திற்பாவை என்னும் தெய்வம் நீ தானோ; திருஅடி தொழுதேன்-அங்ஙனமாயின் நன்றுகாண் அடியேன் நின்னுடைய திருவடிகளை நன்றியறிவுடன் கைகூப்பித் தொழுகின்றேன்; விட்ட பிறப்பின் ஈங்கு இவன் செல்உயிர் திட்டிவிடம் உண் யான் வெய்து உயிர்த்து நெஞ்சு நடுங்கி நெடுந்துயர்கூர போயது-கழிந்த பிறப்பின்கண் இங்கு வெட்டுண்டிறந்த மன்னன் மகன் உயிரைத் திட்டிவிடம் என்னும் பாம்பு கண்ணால் நோக்கிப் பருகுதலாலே உடலை விட்டுப் போகின்ற உயிரானது என்னுடைய உள்ளம் நடுங்கிப் பெரிய துயர் மிகுந்து யான் வருந்தும்படி போயதற்கும்; விஞ்சையன் வாளின் விளிந்ததுஉம் இப்பிறப்பின்கண் விச்சாதரனுடைய வாளினாலே இவன் வெட்டுண்டு இறந்தமைக்கும் காரணங்களையும்; அறிதலும் அறிதியோ அறிந்தனையாயின் நின் பேரருள் ஈங்கு பெறுவேன் தில்ல என அறிந்திருப்பாய் அல்லையோ அவற்றை அறிந்துள்ளாயாயின் நின்னுடைய பெரிய அருளால் இப்பொழுது அறிந்து கொள்ளப் பெறுவேன்: இஃது என் விருப்பமாம் என்று சொல்லிக் கை கூப்பி வணங்கா நிற்ப; என்க.

(விளக்கம்) விட்ட பிறப்பு-முற்பிறப்பு. இவன்-இம் மன்னன் மகன்-முற்பிறப்பில் இவனுயிர் திட்டி விடத்தால் போயதற்கும் இப்பிறப்பில் இவன் வாளால் இறந்ததற்கும் உரிய காரணங்களையும் நீ அறிந்திருத்தல் கூடும் அறிந்ததுண்டாயின் அவற்றையும் எனக்குக் கூறியருளுக, இஃது என் வேண்டுகோள் என்று கூறியபடியாம். தில்ல: விழைவின்கண் வந்தது; உரிச்சொல்.

கந்திற்பாவை மணிமேகலைக்கு காரணம் அறிவுறுத்தல்

45-52: ஐஅரி.............என்றலும்

(இதன் பொருள்) ஐ அரி நெடுங்கண் ஆயிழை கேள் என தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்-அழகிய செவ்வரியோடிய நெடிய கண்ணையுடைய ஆயிழையே கூறுவல் கேட்பாயாக என்று சொல்லித் தனக்குரிய தெய்வ மொழியினாலே அக் கந்திற்பாவை கூறுகின்றது:-காயங்கரை எனும் பேரியாற்று அரைகரை மாயம் இல் மாதவன்-முற்பிறப்பிலே நீயும் நின் கணவனாகிய இராகுலனும் காயங்கரை என்னும் பெரிய யாற்றினது நீரடை கரையின் கண் எழுந்தருளி இருந்து பொய்மை சிறிதும் இல்லாத பெரிய தவத்தை உடைய புத்தர்; வருபொருள் உரைத்து மருள் உடை மாக்கள் மனமாசு கழூஉம்-உலகில் வந்து பிறந்தருளி அறங்கூறும் காலத்தையும் அறிவித்து அறியாமையுடைய மாந்தரின் மனத்தின்கண் உள்ள அழுக்ககற்றுபவனும் ஆகிய; பரமதருமனை பேணினிர் ஆகி-பிரமதருமன் என்னும் பெயரையுடைய துறவியைக் கண்டு அவனை நன்கு மதித்துப் போற்றுபவராய்; யாம் விடியல்வேலை அடிகளுக்கு அடிசில் சிறப்பு ஆக்குதல் வேண்டும் என்றலும்-யாங்கள் நாளை விடியற் காலத்தே அடிகளாருக்கு அடிசிலால் விருந்து செய்தற்கு விரும்பினேம் என்று நீவிர் இருவிரும் நுங்கள் மடைத்தொழிலாளனுக்குக் கூறாநிற்க; என்க.

(விளக்கம்) மாதவன் வருபொருள் என்றது-புத்தபெருமான் வந்து அவதரிக்கும் செய்தியை என்றவாறு; உலகத்தில் தீவினை மிகும் காலம் தோறும் புத்தபெருமான் ஈண்டு வந்து பிறந்தருளித் தமது அருள் அறத்தை நிலை நிறுத்துவர் என்பது பவுத்த நூற்றுணிபு. இதனை  ஈரெண்ணூற்றொ டீரெட்டாண்டிற் பேரறிவாளன் றோன்றும் எனவும்(12:77-8) புலவன் முழுதும் பொய்யின் றுணர்ந்தோ னுலகுயக் கோடற் கொருவன் றோன்று மந்தா ளவனறங் கோட்டோரல்ல தின்னாப் பிறவி யிழுக்குந ரில்லை எனவும்(25:45-8) கரவரும் பெருமைக் கபிலையும் பதியி ளளப்பரும் பாரமிதை யளவன்ற நிறைத்துத் துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றி(26-44-6) எனவும் இந்நூலுள்ளே பலவிடத்தும் வருதலாலும் காண்க. பிரமதருமன் ஒரு பவுத்தத் துறவி. இவர் வரலாற்றினை 9 ஆம் காதையில் விளக்கமாகக் காணலாம். ஆக்குதல் வேண்டினம் என்று மடைத்தொழிலாளனுக்கு அறிவிக்க என்க.

உதயகுமரன் வாளால் எறியுண்டமைக்குக் காரணமான தீவினை

53-62: மாலை..................அகலாதது

(இதன் பொருள்) மாலை நீங்க மனமகிழ்வு எய்தி காலை தோன்று அ வேலையின் வரூஉம்-அற்றை நாள் இரவு கழியா நிற்ப அவ்வறம் செய்தல் காரணமாக மனத்தின்கண் பெரிதும் மகிழ்ந்து நீங்கள் குறிப்பிட்ட அவ் விடியற்காலம் தோன்றுகின்ற பொழுதே வந்து; நடைத்திறத்து இழுக்கி நல்அடி தளர்ந்து மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை-மகிழ்ச்சியின்கண் உண்டான சோர்வு காரணமாக நடந்து செல்லும் பொழுது வழுக்கித் தனது நல்ல கால் தளர்ந்து அக்களையின்கண் உள்ள அடிசிற் கலங்கள் தொழிலாளனைக் கண்டு; சீலம் நீங்கா செய்தவத்தோர்க்கு வேலை பிழைத்த வெகுளி தோன்ற-நின் கணவனுக்குப் பத்துவகை ஒழுக்கத்தினின்றும் நீங்காது செய்கின்ற தவத்தை உடையவராகிய பிரம தருமருக்கு உண்டி வழங்கும் பொழுது தவறியமையால் பெரிதும் சினம் தோன்றா நிற்ப அம்மடைத் தொழிலாளனுடைய; தோளும் தலையும் துணிந்து வேறாக வாளின் தப்பிய வல்வினை அன்றே-தோளும் தலையும் வெட்டுண்டு வேறுபட்டு வீழும்படி தனது வாளால் வெட்டிய வலிய கொலையாகிய தீவினை யல்லவோ; விராமலர் கூந்தல் மெல்லியல் நின்னோடு இராகுலன் தன்னை இட்டு அகலாதது மணம் விரவிய மலர்களை அணிந்த கூந்தலையுடைய மெல்லியலாயிருந்த இல்ககுமியாகிய நின்னோடு நின் கணவனாகிய இராகுலனையும் விட்டு நீங்காமல் தொடர்வது; என்க.

(விளக்கம்) மனமகிழ்ச்சியோடு வந்தமையால் சோர்வுற்று அடிவழுக்கி அம் மடையன் மடைக்கலம் சிதைய வீழ்ந்தான் என்பது தோன்ற மனமகிழ்வெய்தி வந்தான் என்றார். இதன் பயன் கொலையுண்டவனும் அறவோன் என்றுணர்த்தல். வேலை-ஈண்டு உண்ணுதற்குரிய பொழுது. தப்பிய-வெட்டிய. வல்வினை யாதலால் அஃது எங்ஙனம் தன் பயனை ஊட்டாது போம்? என்றவாறு மணிமேகலையின் முற்பிறப்பாகிய இலக்குமியின் மேற்றாக மணிமேகலையை விராமலர் கூந்தல் மெல்லியல் என இத் தெய்வம் கூறுகின்றது என்க. இராகுலன்-உதயகுமரனுடைய முற்பிறப்பின் பெயர்.

வல்வினையின் இயல்பு

63-71: தலைவன்..........ஒழிந்தது

(இதன் பொருள்) தம் பொருட்டு அல்லல் ஆகிய அவல் வெல்வினை தலைவன் காக்கும் என்போர் அறியார்-தன்னிடத்தே அன்பு செய்கின்ற அடியார்கள் என்பது கருதி அவ்வடியாராகிய தம்மால் செய்யப்பெற்ற துன்பத்திற்குக் காரணமான தீவினை வந்து துன்புறுத்தாற்படி தம் இறைவன் காப்பாற்றுவான் என்று கூறுபவர் அறிவிலாதார் ஆவர்; அறம் செய் காதல் அன்பினின் ஆயினும் மறம் செய்து உளது எனின் வல்வினை ஒழியாது-ஒருவன் அறம் செய்ய வேண்டும் என்னும் காதல் உடையவனாய் அவ்வன்பு காரணமாகவேனும் அவனால் தீவினை செய்யப்பட்டிருக்குமாயின் அத் தீவினை உருத்து வந்து தன் பயனை ஊட்டாது ஒழியாது காண்; ஆங்கு அவ்வினை வந்து அணுகும் காலை-அவ்வாறு அத் தீவினை வந்து தன் பயனை ஊட்டுவதற்கு அணுகும் காலத்தே; தீங்கு உறும் உயிரே செய்வினை தீமையை எய்துதற்குரிய அவ்வுயிர்க்குச் செய்த அப் பிறப்பினூடேயே ஊட்டினும் ஊட்டும், அல்லது அவ்வுயிர் தான் செய்த வினை வழியாக இறந்துபோய் மாறிப்பிறக்கின்ற பிறப்பின் கண் வந்து தன் பயனை ஊட்டினும் ஊட்டும்; ஆங்கு அவ்வினை காண் ஆயிழை கணவனை ஈங்கு வந்துஇ இடர் செய்து ஒழிந்தது. முற்பிறப்பில் அம் மடையனைக் கொன்ற அத் தீவினையே நின் கணவனாகிய இராகுலனை இங்கு இப் பிறப்பில் வந்து தன் பயனாக இக் கொலைத் துன்பத்தை ஊட்டிக் கழிந்தது; என்க.

(விளக்கம்) தம் பொருட்டு அல்லல் ஆகிய வெவ்வினை தலைவன் காக்கும் என்போர் என மாறிக் கூட்டுக; இவ்வாறு கூறுபவர் சைவசமய முதலிய பிற சமயத்தவர்கள். இதனை-

சிவனும் இவன் செய்தியெலாம் என்செய்தி என்றும்
செய்ததெனக் கிவனுக்குச் செய்ததென்றும்
பவமகல உடனாகி நின்றுகொள்வன் பரிவாற்
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே  (சுபக்கம்-304)

எனவரும் சிவஞானசித்தியாரானும் அறிக.

இறைவன்பால் அல்லது துறவோர்பால் உண்டான அன்பு காரணமாகச் செய்யப்பட்டாலும் மறவினை ஊட்டா தொழியாது என்றவாறு.

மீண்டு வருபிறப்பின் மீளினும் என்றது அப் பிறப்பிலேயே எய்தும் எய்தாதாயின் என இறந்தது தழீஇய எச்சவும்மை உறும் உயிர்-உறுதற்குரிய வுயிர். ஆங்கு-அவ்வண்ணமே. அவ்வினை-மடையனைக் கொன்ற தீவினை. ஆயிழை: முன்னிலைப் புறுமொழி. இவ்விடர் இக்கொலைத் துன்பத்தை.

கந்திற்பாவை மணிமேகலைக்கு எதிர்காலத்து வரும் ஏது நிகழ்ச்சிகளை அறிவுறுத்துதல்

72-81: இன்னும்........நீங்குவ

(இதன் பொருள்) இளங்கொடி நல்லாய்-இளமையுடைய பூங்கொடி அழகுடைய மணிமேகலை நல்லாய்!; இன்னும் கேளாய்-இன்னும் நினக்கு அறிவுறுத்த வேண்டிய செய்திகள் உள்ளன அவற்றையும் கூறுவேன் கேட்பாயாக; மன்னவன்-சோழமன்னன்; மகற்கு வருந்து துயர் எய்தி-தன் மகனாகிய இவ்வுதயகுமரன் கொலை யுண்டமை அறிந்து பெரிதும் வருந்துதற்குக் காரணமான மகவன்பினாலே மாபெருந்துயர மெய்திப் பின்னர்; மாதவர் உரைத்த வாய்மொழி கேட்டு-பெரிய தவத்தையுடைய சான்றோர் எடுத்துக் கூறுகின்ற வாய்மையான அறிவுரைகளைக் கேட்டு அமைதியுற்ற பின்னர்; காவலன் நின்னையும் காவல் செய்து ஆங்கு இடும்-செங்கோன் முறைப்படி ஆருயிர் காவலன் ஆதலின் நின்னையும் தன் காவலிற் படுத்து அதற்கியன்ற சிறைக்கோட்டத்திலே இடுவன்; இராசமாதேவி ஈடு சிறை நீக்கி கூட வைக்கும் கொட்பினள் ஆகி-பின்னர் உதயகுமரன் அன்னையாகிய கோப்பெருந்தேவி தன் மகன் கொலையுண்டமைக்கு இவளே காரணம் என்று கருதி நினக்கு இடுக்கண் செய்ய வேண்டும் என்னும் தன் படிற்றுளம் கரந்து நின்னை மன்னவன் இட்ட ஈடுசிறைக்கோட்டத்தினின்றும் நீக்கித் தன்னோடு உவளகத்திலே வைத்துக் கொள்ளும் ஒரு கொள்கையுடையவளாகி;(தான் கருதிய வஞ்சச் செயல் சில செய்யவும் செய்வள்;) மாதவி மாதவன் மலரடி வணங்கித் தீது கூற-பின்னர் மாதவி நின் நிலையறிந்து போய் அறவண வடிகளாரின் மலர் போன்ற திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி நீ சிறைப்பட்டிருக்கின்ற துன்பச் செய்தியைக் கூறா நிற்றலாலே; அவள் தன்னொடும் சேர்ந்து மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு-அம்மாதவியையும் தம்மோடு அழைத்துக் கொண்டு அறவணவடிகளார் கோப்பெருந் தேவியின்பாற் சென்று கூறிய அறிவுரையாகிய மெய்மொழிகளைக் கேட்டுப் பின்னர்; காதலி நின்னையும் காவல் நீக்குவள்-தன் மகன் காதலியாகிய நின்னையும் அக்கோப் பெருந்தேவி சிறை வீடு செய்குவன் காண்; என்க.

(விளக்கம்) மன்னவன் என்றது உதயகுமரன் தந்தையை மகற்கு வருந்துயர்-மகன் பொருட்டுத் தனக்கு வருந்துயருமாம். வருந்து துயர்-இடையறாது வருந்துதற்குக் காரணமான பெருந்துயர்; மகன் இறந்துபட்டமையால் வந்த துயரம்; அது மாபெருந் துன்பமாதலின் அங்ஙனம் விதந்தபடியாம்.

மாதவர்: உதயகுமரனுக்குற்ற துரைக்க இனிச் செல்ல விருக்கும் சக்கரவாளத்துத் துறவோர்களை. நினக்குப் பிறரால் தீங்கு நேராமைப் பொருட்டும் நின் அழகான் மயங்கி நகரத்து இளைஞர் தீமைக்கு ஆளாகாமைப் பொருட்டும் நின்னைத் தன் காவலிலே வைத்துக் கோடலே அம் மன்னவன் செங்கோன் முறைமை ஆதலின் அவன் காவல் செய்திடும் என்னாது காவலன் என்று எடுத்தோதினர். காவல் செய்தற்கியன்ற பிழை செய்திலாத நின்னையும் என்பது தோன்ற உயர்வு சிறப்பும்மை கொடுத்தோதினர்.

ஈடுசிறை- சிறையில் ஒருவகைச் சிறை எனக் கோடலுமாம். அஃதாவது-குற்றமில்லாதவரையும் பிறர் வருத்தாமைப் பொருட்டு வைக்கும் பாதுகாவற் சிறை என்க. இக் கருத்தாற்போலும் காவலன் நின்னைச் சிறை செய்யும் என்னாது நின்னையும் காவல் செய்து அதற்குரிய இடத்திலே இடும் என்பதுபட ஓதியதும். மேலும் அவ்விடத்திற்கு ஈடுசிறை என்னும் பெயர் என்பது தோன்ற ஈடுசிறை நீக்கி என்று ஓதியதூஉம் என்று கருத இடனுண்ணையுணர்க இக்காலத்தும் அத்தகு சிறைக் கோட்டமுண்மையும் நினைக.

கொட்பு-கோட்பாடு. (78) மாதவன்: அறவணர். தீது-மணிமேகலை சிறைப்பட்ட துன்பச்செய்தி. தன் மகற்குப் பல பிறப்புகளிலே காதலியானவள் என்னும் பரிவு காரணமாகவும் நின்னைச் சிறை வீடு செய்வாள் என்பது தோன்ற, காதலி நின்னையும் என்று வேண்டா கூறி வேண்டியது முடித்தார்.

இதுவுமது

82-91: அரசாள்..........புகுவை

(இதன் பொருள்) அரசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்பால் புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை-சிறைவீடு பெற்ற பின்னர் அரசாட்சியாகிய செல்வத்தையுடைய ஆபுத்திரனைக் காண்டற்கு விரும்பி அவன் இருக்கும் நகரத்திற்கு நின்னுடைய சான்றோராகிய அறவணர் மாதவி சுதமதி முதலிய மேலோரை வணங்கி அவர்பால் விடைபெற்றுச் செல்லவும் செல்வாய்; போனால் அவனொடும் பொருள் உரை பொருந்தி-அந்நகரத்திற்குச் சென்றால் அவ்வாபுத்திரனோடு அறவுரைகள் கூறி அவனோடு கேண்மை கொண்டிருந்து; மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து மாயம் இல்செய்தி மணிபல்லவம் எனும் தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்-கடலின்கண் மரக்கலம் ஊர்ந்து வருகின்ற ஆபுத்திரனாகிய புண்ணியராசன் என்பவனோடு புறப்பட்டு நீ வானத்தின் வழியே பொய்மையில்லாத செயலையுடைய மணிபல்லவம் என்னும் தீவின்கண் மீண்டும் போதலும் உண்டாகும்; தீவதிலகையின் சாவகமன்னன் தன்திறம் கேட்டு தன் நாடு அடைந்த பின்-மணிபல்லவத்தின்கண் தீவதிலகை என்னும் தெய்வத்தின் வாயிலாக அச் சாவக நாட்டு மன்னனாகிய புண்ணியராசன் தன் பழம்பிறப்பு வரலாறுகளைக் கேட்டறிந்து கொண்டு அத் தீவினின்றும் தன்னுடைய நாட்டிற்குச் சென்ற பின்னர்; ஆங்கு அத் தீவம்விட்டு அருந்தவன் வடிவாய் பூங்கொடி வஞ்சி மாநகர் புகுவை பின்னர் நீயும் அவ்வாறே தீவினின்றும் அரிய மாதவனாகிய வேற்றுருவங் கொண்டு வஞ்சி மாநகரத்திற்குச் செல்லுவாய் என்க.

(விளக்கம்) ஆபுத்திரன் என்றது சாவக நாட்டில் புண்ணியராசனாகப் பிறந்திருக்கின்ற ஆபுத்திரன் என்றவாறு. புரையோர்-மேலோர் அவராவார், அறவணர் மாதவி சுதமதி சித்திராபதி முதலியோர். போகலும் போகுவை என்றது ஒரு சொல் நீர்மைத்து பொருளுரை என்றது பவுத்தர் அறவுரையை. பொருந்தி என்றது அவற்றைக் கேட்டு என்றவாறு. மாநீர்-கடல். வங்கம்-மரக்கலம். அவன் புண்ணியராசன். வங்கத்தில் வருகின்ற அவனோடு நீ வானத்தில் எழுந்து சேறலும் உண்டு என்க. சாவக மன்னன்-புண்ணியராசன். பூங்கொடி என்றது நீ என்னுந் துணை. புகுவை: முன்னிலை ஒருமை.

இதுவுமது

92-102: ஆங்கு............அந்நாள்

(இதன் பொருள்)  ஆங்கு அந்நகரத்து அறிபொருள் வினாவும் ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்-அவ்விடத்தே அந்த வஞ்சி மாநகரத்தின்கண் உன்னால் மெய்ப்பொருளை வினவி அறிந்து கொள்ளுதற்குரிய உயர்ந்த நூற்கேள்வியையுடைய சான்றோர் பலராவர் அவரைக் கண்டு வினவுமிடத்தே அவர்களுள் வைத்து; இறைவன் எம் கோன் எவ்வுயிர் அனைத்தும் முறைமையின் படைத்த முதல்வன் என்போர்களும்-இறைவனே எங்களுக்குக் கடவுள், காணப்படுகின்ற எந்த உயிரினங்கள் உளவோ அவை அனைத்தையும் முறைமையினாலே படைத்தருளிய அவனே தலைவன் என்று கூறுவோர்களும்; தன் உரு இல்லோன் பிறஉரு படைப்போன் அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும்-தனக்கென்று யாதோருருவமும் இல்லாதவனும் உயிரினங்களுக்கெல்லாம் உருவங்களைப் படைகின்றவனும் ஆகிய அத்தகையவனே எங்களுக்குக் கடவுளாகும் என்று கூறுவோர்களும்; துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு இன்ப உச்சி இருத்தும் என்போர்களும்-யாங்கள் மேற் கொண்டிருக்கின்ற துன்பத்தைப் பொறுக்கின்ற இந் நோன்பு தானே இப்பிறவித் தொடர்புக்குக் காரணமான பற்றினை அறுத்து அவ்விடத்தே அந்தமில் இன்பமுடைய உலகினது. உச்சியில் வைக்கும் என்று கூறுவோர்களும்; பூதவிகாரப் புணர்ப்பு என்போர்களும்-ஐம்பெரும் பூதங்களும் தம்முள் விகாரமெய்திக் கூடிய கூட்டமே உலகம் இதற்கொரு கடவுள் இல்லை என்று கூறகின்றவர்களும் இங்ஙனமாக; பல்வேறு சமய படிற்று உரை எல்லாம் அல்லியம் கோதை கேட்குறும் அந்நாள்-பல்வேறு வகைப்பட்ட சமயக்கணக்கர்கள் கூறுகின்ற பொய்ம் மொழியையெல்லாம் மணிமேகலாய் நீ கேட்கலாகின்ற அந்த நாளிலே; என்க.

(விளக்கம்) அறிபொருள்-அறிதற்குரிய மெய்ப்பொருள். இறைவன் என்றது அங்கிங்கெனாதபடி எங்குமிருக்கின்ற பரப்பிரமத்தை முறைமை என்றது ஒன்றிலிருந்து ஒன்றைத் தோற்றுவிக்கின்ற முறைமை. தன் உருவில்லோன்-தனக்கென்று உருவமில்லாதவன்; பிறவற்றிற்கு உருப்படைப்போன் என்க. அன்னோன்-அத்தகையவன்; துன்ப நோன்பே அறுத்து உச்சியில் இருந்தும் என்க. பூத விகாரப்புணர்ப்பு என்பவர்-பூதவாதிகள்; படிற்றுரை-பொய் மொழி; அல்லியங் கோதை முன்னிலைப் புறமொழி.

இதுவுமது

103-112: இறைவனும்.......ஒழிவாயலை

(இதன் பொருள்) இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் இவ்வுலகத்திற்குக் கடவுளாவான் யாருமில்லை செத்தவர் மீண்டும் பிறப்பதில்லை ஆதலால்; அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை-அறம் என்னும் அவற்றினோடு மாந்தர்க்குற்ற தொடர்பு என்கொலோ என்று கூரிய பூதவாதியை நோக்கி; பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த நறுமலர்க்கோதை எள்ளினை நகுதி-முற்பிறப்பும் அறநெறியும் பண்பினோடு அறிந்துகொண்டிருக்கின்ற மணிமேகலாய்! நீ இகழ்ந்து நகைப்பாய்; இவ்வுரை கேட்டு எள்ளிவை போலும்-நீ நகைத்தமை கண்ட அப் பூதவாதி யான் கூறிய மொழியைக் கேட்டு நீ என்னை இகழ்ந்து நகைத்தாய் போலும்; இங்கு எள்ளியது உரை என-நீ இவ்விடத்திலே என்னை இகழ்ததற்குக் காரணம் கூறுதி என்று அவன் நின்னை வினவா நிற்ப அவனுக்கு; உன் பிறப்பு உணர்த்துவை-நீ உன்னுடைய முற்பிறப்பினை உணர்ந்திருக்கின்ற வரலாற்றினைக் கூறுவாய்; ஆங்கு நின் கொணர்ந்த அருந்தெய்வம் மயக்க காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை என்று அவன் உரைக்கும்-அது கேட்ட அந்தப் பூதவாதி நின்னை நோக்கிக் கூறுபவன் அம் மணிபல்லவத்தின்கண் உன்னைக் கொண்டுவந்த காண்டற்கரிய தெய்வமே நின்னை மயக்கி விட்டமையாலே மூங்கில் போன்ற தோளையுடைய நீ கனவின்கண் மயங்கி அங்ஙனம் கண்டிருக்கின்றாய் என்று அவன் உனக்குக் கூறுவான்; இளங்கொடி நல்லாய் அன்று நன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாய் அலை-மணிமேகலாய் நீ அங்ஙனம் அன்று என்று கூறுமளவிலே நில்லாமல் அவன் முன்னர் அறங் கூறுதலை மறந்து போகமாட்டாய் என்க. 

(விளக்கம்) இறைவனும் இல்லை............அறைந்தோன் என்றது பூதவாதியை இறந்தோர் பிறத்தல் இல்லையாதலால் மாந்தர் அறம் செய்தல் பயனில் செயலால் என்பான் இறந்தோர் பிறவார் அறனோடு என்னை என்றான். என்னை? என்னும் வீனாஅது பயனில் செயலாம் என்பது படநின்றது. அறவி-அறநெறி. நறுமலர்க் கோதை:முன்னிலைப் புறமொழி;காம்பன தோளி என்றது அத் தெய்வம் பூதவாதியின் கூற்றைக் கொண்டு கூறியபடியாம்; நிற்கொணர்ந்த அருந்தெய்வம் பூதாவதியின் கூற்றைக் கொண்டு கூறியபடியாம்; நிற்கொணர்ந்த அருந்தெய்வம் மயக்க மயக்குற்றனை என்று பூதவாதி கூறினான் என்றமையால் மணிமேகலை அவனுக்குத் தன் பிறப்புணர்த்தும் வழி மணிமேகலா தெய்வம் தன்னை எடுத்துப் போயதும் அதனால் புத்த பீடிகை கண்டு பிறப்புணர்ந்து வரலாறு முழுவதும் கூறுவாள் என்பதும் பெற்றாம். அயர்ந் தொழி வாயலை-மறந் தொழியாய்.

இதுவுமது

113-118: தீவினை.....கேளாய்

(இதன் பொருள்) மடவாய் தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும்-மணிமேகலாய்! ஒருவன் செய்த தீவினையின் பயன் அவனுக்கு வந்தெய்துதலும் இறந்தவர் மீண்டும் பிறத்தலும் வாயே என்று மயக்கொழி -உண்மையே என்று நீ அவன் உரையால் மயங்காதொழிக; வழுஅறு மானும் மண்ணும் கல்லும் எழுதிய பாவையும் பேசா என்பது குற்றமற்ற மரமும் மண்ணும் கல்லும் இவற்றால் பண்ணிய பாவைகளும் பேசமாட்டா என்னும் இயற்கையை; அறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்-நீ அறிந்திருப்பாயோ அறியமாட்டாயோ அறிந்திலா யாயின் அது பற்றி யான் கூறும் இதனையும் கேட்பாயாக; என்க.

(விளக்கம்) வாயே என்று அவனுடைய மயக்கத்தை ஒழித்திடுக எனக் கந்திற்பாவையின் வேண்டுகோளாகக் கோடலுமாம். வழு-குன்றம் பேசா என்பது என்றது பேசமாட்டா என்னும் இயற்கையை. கந்திற்பாவை தான் தூணின் நின்ற பாவை வாயிலாகப் பேசுதலால் தன் பேச்சிணை அவள் ஐயுறாமைப் பொருட்டு அத் தெய்வம் இது கூறிய படியாம். ஆங்கு அது என்றது. அவ்வியற்கைக்கு மாறாய் இக் கற்பாவை பேசுமிது என்றவாறு.

கந்திற் பாவை தன் வரலாறு கூறுதல்

119-129: முடித்து....கேட்டியோ

(இதன் பொருள்) முடித்துவரு சிறப்பின் மூதூர்-யாண்டு தோறும் செய்து முடித்து வருகின்ற இந்திர விழாவினையுடைய பழைய இப் பூம்புகார் நகரத்தின்கண்; கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும் முதுமா இடங்களும் முதுநீர்த் துறைகளும் பொதியிலும் மன்றமும் யாங்கணும்-கொடியுயர்திய தேர் ஓடுகின்ற வீதிகளிலும் கோயில்களிடத்தும் முதிய மரங்கள் நிற்கும் இடங்களிலும் பழைமையான நீராடும் துறைகளிடத்திலும் ஊரம்பலத்திலும் மன்றங்களிடத்தும் இன்னோரன்ன எவ்விடங்களிலும் பொருந்துபு நாடி காப்பு உடை மாநகர் காவலும் கண்ணி-பெருந்தும் இடங்களை ஆராய்ந்தறிந்து மதில் அரண் முதலிய காவலையுடைய பெரிய இந்நகரத்திற்குத் தெய்வக் காவலும் வேண்டும் என்றும் கருதி, யாப்புடைத்தாக அறிந்தோர் வலித்து மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்-அவ்வத் தெய்வங்களுக்குப் பொருத்தமுடையதாக அவற்றின் இயல்பறிந் தோரால் துணியப் பெற்று மண்ணாலும் கல்லினாலும் மரத்தினாலும் சுவர்களிடத்தும்; கண்ணிய தெய்வம் காட்டுநர் வகுக்க ஆங்கு அத்தெய்வதம் அவ்விடம் நீங்கா அச் சான்றோரால் கருதப்பட்ட அத் தெய்வங்களின் உருவத்தைச் செய்து காட்டுபவராகிய மண்ணீட்டாளரும் கண்ணுள் வினைஞரும் இயற்றா நிற்ப அவ்வுருவங்களில் உறைகின்ற அத் தெய்வங்கள் அவ்விடங்களினின்றும் ஒரு பொழுதும் நீங்க மாட்டா ஆதலின்; ஊன் கணினார்கட்கு உற்றதை உரைக்கும் என் திறம் கேட்டியோ ஞானக்கண் இல்லாத மாந்தர்களுக்கு நிகழ்வதனை எடுத்துரைக் கின்ற என்னுடைய வரலாறு கேட்பாயா; என்க.

(விளக்கம்) தேவர் கோட்டம்-தெய்வத்திருக்கோயில்கள்; பொதியில்-கட்டிடத்தோடு கூடிய ஊரம்பலம். மன்றம்-மரநிழலையுடைய பொதுவிடம். காப்பு-மதில் முதலியன. காவலும் கண்ணி என்றது அரண்காவலேயன்றித் தெய்வக்காவலும் வேண்டுமென்று கருதி என்றவாறு. யாப்பு-பொருத்தம், வலித்து-துணியப்பட்டு. அறிந்தோரால் வலிக்கப்பட்டு மண் முதலியவற்றால் தெய்வதம் காட்டுநர் வகுக்க என இயைத்திடுக தெய்வதம் காட்டுநர்-மண்ணீட்டாளரும் கண்ணுள் வினைஞருமாம். அத் தெய்வம் அவ்விடம் நீங்கா எனவே யானும் எனக்கு வகுத்த இப் பாவையினின்று உற்றதுரைப்பேன் என்று அறிவித்தவாறும் ஆயிற்று. இது குறிப்பெச்சம் கேட்டியோ என்புழி ஓகாரம் அசைச்சொல்.

இதுவுமது

129-142: இளங்கொடி...........என

(இதன் பொருள்) இளங்கொடி நல்லாய்-இளைமையுடைய மணிமேகலை நல்லாய்!; மன்பெரும் தெய்வகணங்களின் உள்ளேன்-யான் நிலைபெற்ற பெருந்தெய்வக் கூட்டங்களுள் ஒரு தெய்வமாக இருக்கின்றேன்; துவதிகன் என்பேன்-துவதிகன் என்று பெயர் கூறப்படுவேன்; தொன்று முதிர் கந்தின் மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் யான் நீங்கேன்-பழைமையினால் முதிர்வுற்ற இத் தூணின்கண் மயன் என்னும் தெய்வத்தச்சன் பொழுதும் யான் நீங்குகிலேன்; என் நிலையது கேளாய்-என்னுடைய தன்மையைக் கூறுவேன் கேள்; மாந்தர் அறிவது வானவர் அறியார்-மக்கள் அறிதற்கியன்ற மறைச்செய்தியைத் தேவர்களும் அறிந்துகொள்ள வல்லுநர் அல்லர் போலும்; ஓவியச் சேனன் என் உறுதுணைத்தோழன் ஆவதை ஆர் இந்நகர்க்கு உரைத்தனரோ-தெய்வங்களுள் வைத்துச் சித்திசேனன் என்பான் என்னுடைய நெருங்கிய உசாஅத்துணைத் தோழனாய் இருக்கின்ற செய்தியை யார்தாம் இந்நகர மக்களுக்கு அறிவித்தனரோ யானும் அறிகிலேன்; அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் உடம் உறைந்தார் போல் ஒழியாது எழுதி-அச்சித்திர சேனனோடு யான் போய் விளையாடுகின்ற இடங்களிலெல்லாம் எம்முடன் கூடி இருந்தார் போன்று அவனையும் என்னையும் இணைத்து அவ்விடங்களில் ஒன்றேனும் ஒழியா வண்ணம் உருவெழுதி வைத்துக்கொண்டு; பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து-மலரும் மணப்புகையும் ஆகிய வழிபாட்டுப் பொருள்களைக் கூட்டி என்பால் வந்து; நாநனிவருந்த என் நலம் பாராட்டலின்-தம்முடைய நா மிகவும் வருந்துமளவிற்கு என்னுடைய அழகினை வர்ணித்துப் புகழ்தலின்; மணிமேகலை யான் வருபொருள் எல்லாம் துணிவுடன் உரைத்தேன்-மணிமேகலாய்! யான் அம் மக்களுக்கு எதிர்காலத்திலே நிகழ்கின்ற பொருளெல்லாம் தெளிவுடன் கூறுவேன் ஆயினேன்; என் சொல் தேறு என-ஆதலின் அங்ஙனமே யான் உனக்குக் கூறிய எதிர்கால நிகழ்ச்சிகளையும் உண்மை என்று தெளிந்துகொள்ளக் கடவாய் ஐயுறாதே கொள்; என்க.

(விளக்கம்) தெய்வங்களுள் யான் சிறந்த தெய்வ கணத்தைச் சேர்ந்துளேன் என்பது தோன்ற மன்பெருந் தெய்வகணம் எனல் வேண்டிற்று என்பேன்-எனப்படுவேன். ஒப்பாக என்பதன் ஈறு தொக்கது. பாவை-கந்தினிடத்துப் படிமம். எனக்கு ஒரு தோழன் சித்திரசேனன் என்பவன் உளன். யானும் சித்திரசேனனும் எங்குச் சென்றாலும் சேர்ந்து செல்வேம். அவனும் யானும் விரும்பி விளையாடுகின்ற இடங்களும் பல உள. அவ்விடங்களிலெல்லாம் என்னையும் அவனையும் இணைத்தே எழுதியிருக்கின்றனர். வாழ்த்தும்போது என்னுடைய நலத்தை மட்டும் தனித்தெடுத்துப் பாராட்டுகின்றனர். அவன் எனக்குத் தோழனாய் இருப்பதனையும் அறிந்து, யாங்கள் கூடி விளையாடும் இடங்களிலும் ஒன்றும் ஒளியாமல் எங்களை இணைத்தே எழுதியிருக்கின்றனர். இம் மறைச் செய்திகளை எல்லாம் மக்களாகிய இவர்கள் எப்படித்தான் அறிந்து கொள்ள முடிந்ததோ! அவர்கள் அறிந்து கெண்ட வழி யாது என அறிந்துகொள்ளத் தெய்வமாகிய எனக்கும் இயலவில்லை என மக்களைப் பாராட்டுகின்ற இக் கந்திற் பாவை மாந்தர் அறிவது வானவர் அறியார் போலும் என்று வியந்து கூறுகின்றது; என்க துணிவுடன் உரைத்தேன் என்றது உரைத்து வந்தேன் அவ்வாறே நினைக்கும் உரைத்த என் சொல் தேறு என்பதுபட நின்றது. தேறு-தெளி.

மணிமேகலை கந்திற்பாவையை எனக்கு எதிர்காலத்தே வரும் ஏது நிகழ்ச்சிகளைக் கடைபோகக் கூறுக என்று வேண்டுதல்

143-146: தேறேன்...........நல்லாய்

(இதன் பொருள்) தெய்வக் கிளவிகள் தேறேன் அல்லேன்-அதுகேட்ட மணிமேகலை அருளுடைய தெய்வமே கேள்! அடிச்சி தெய்வங்கள் கூறுகின்ற மொழிகளை வாய்மை என்று தெளிந்து கொள்ளும் அளவிற்கும் பட்டறிவுடையேன் ஆதலால் ஐயுறாது உன் மொழிகளைத் தெளிந்து கொள்வேன் காண், ஒரு வேண்டுகோள்! நீ கூறுகின்ற ஏது நிகழ்ச்சிகளை; எனக்கு ஈறு கடை போக அருள் என்றலும்-அடிச்சிக்கு அவற்றை எனது இறுதிகாறும் கூறி அருளுக என்று வேண்டிக் கொள்ளா நிற்ப; துவதிகன் உரைக்கும் மடக்கொடி நல்லாய் சொல்லலும் சொல்லுவேன் வருவது கேளாய்-அவ் வேண்டுகோட் கிணங்கிய துவதிகன் என்னும் அத் தெய்வம் கூறும் மடப்பம் உடைய பூங்கொடி போலும் அழகுடையோய் அங்ஙனமே நின்னுடைய இறுதிக்காலம் வருந்துணையும் நிகழும் ஏது நிகழ்ச்சியைக் கூறுகின்றேன் கேட்பாயாக; என்க.

(விளக்கம்) தேறேன் அல்லேன் என்னும் இரண்டு எதிர்மறையும் ஓருடன்பாட்டுப் பொருளை வற்புறுத்து நின்றன. ஈறு-சாக்காடு அங்ஙனம் தெளிவதற்குரிய பட்டறிவு எனக்கு மிகுதியும் உண்டென்பது இதன் குறிப்புப் பொருள். சொல்லலும் சொல்லுவேன் என்னும் அடுக்கு தேற்றமாகச் சொல்லுவேன் எனும் உறுதிப்பொருள் பயந்து நின்றது; இவ்வாறு அடுக்கிக் கூறும் வழக்கம் இந்நூலின்கண் பலவிடங்களில் காணப்படுகின்றது. அவ்விடமெல்லாம் இவ்விளக்கத்தைக் கோள்ளுக.

துவதிகன் கூற்று

147-154: மன்னுயிர்.........சேர்குவை

(இதன் பொருள்)  மன் உயிர் நீங்க மழைவளம் கரந்து பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய-உலகத்தில் உடம்பொடு நிலைபெற்று வாழுகின்ற உயிர்கள் மடிந்து போகும்படி மழையால் உண்டாகின்ற வளம் ஒழிந்து போனமையால் அழகிய மதிலை உடைய காஞ்சிமாநகரம் அழகொழிந்து போகாநிற்க; ஆங்கு அது கேட்டு ஆர் உயிர் மருந்தாய் ஈங்கு இம் முதியாள் இடவயின் வைத்த தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கி-ஆங்கு நிகழ்ந்த மன்னுயிர் மடியும் செய்தியைக் கேட்டு அரிய உயிர்களுக்குச் சாக்காடு தவிர்க்கும் மருந்தாக இங்கு இச்சம்பாபதி திருக்கோயிலின்கண் வைத்துள்ள தெய்வத்தன்மையுடைய அமுதசுரபி என்னும் பிச்சைப் பாத்திரத்தைச் செவ்விதாகக் கையில் எடுத்துக் கொண்டு; தையல் நின் பயந்தோர் தம்மொடு போகி அறவணன் தானும் ஆங்கு உளன் ஆதலின்-மணிமேகலாய்! உன்னுடைய தாய்மார்களாகிய மாதவியோடும் சுதமதியோடும் சென்று அறவணவடிகளாரும் அக் காஞ்சி நகரத்திலேயே இருப்பது தெரிந்து; செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை-நீயும் வஞ்சி நகரத்தினின்றும் போய் அக் காஞ்சிமா நகரத்தை அடைவாய் என்க.

(விளக்கம்) நீங்க என்றது இறந்துபட என்றவாறு. பொன் அழகு. நீ அது கேட்டுத் தெய்வப்பாத்திரம் செவ்விதின் வாங்கி அறவணன் ஆங்குளன் ஆதலும் தெரிந்து நீயும் அவ்வுயிரைப் பாதுகாத்தற்கு அந் நகரத்தை அடைவாய் என்றவாறு.

இதுவுமது

155-160: அறவணன்.............பலவுள

(இதன் பொருள்) ஆய்தொடி அறவணன் அருளால் அவ்வூர் பிறவணம் ஒழிந்து நின்பெற்றியை ஆகி-அக் காஞ்சி நகரின் கண் நீ அறவணவடிகளாருடைய அறிவுரை கேட்டு அந் நகரத்தின் கண் நின் உருவிற்கு வேறுபட்ட அம் மாதவன் வடிவத்தைக் களைந்து நினைக்கியல்பான பெண்ணுருவத்தை உடையையாகி வறன்ஓடு உலகின் மழைவளம் தரூஉம் அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை-வற்கடம் பரவிய இவ்வுலகத்தின்கண் மழை போல உணவாகிய செல்வத்தை யளிக்கும் அறப் பண்புடைய அமுதசுரபியைக் கையில் ஏந்தி உண்டி கொடுத்து அரிய உயிரினங்களைப் பாதுகாத்தலைச் செய்வாய்; ஆய் தொடிக்கு அவ்வூர் அறனோடு தோன்றும் ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள- நினக்கு அக் காஞ்சிநகரத்தின்கண் அவ்வறச் செயலோடு பழவினைப் பயன்கள் பலவும் நிகழவிருக்கின்றன; என்க.

(விளக்கம்) அறவணன் அருளால் என்றது அறவணருடைய அறிவுரையின்படி என்றவாறு. ஆய்தொடி : முன்னிலைப் புறமொழி பிறவணம்-வேற்றுருவம்; என்றது அவள் மேற்கொள்ளும் மாதவன் வடிவத்தை. வறன் ஓடு உலகு-வற்கடம் (பஞ்சம்) பரவிய உலகம். மழை போல உணவாகிய செல்வத்தை அளிக்கும் என்க வறன், அறன்; மகரத்திற்கு நகரம் போலி.

இதுவுமது

141-172: பிறவறம்............உரைத்தலும்

(இதன் பொருள்) பிறவறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் அறவணன் தனக்கு நீ உரைத்த அந்நாள்-பவுத்தருடைய அறத்திற்கு வேறுபட்ட அறங்களையுடைய பிற சமயக்கணக்கர் உனக்கு வஞ்சி நகரத்திலே உரைத்த அறங்களை எல்லாம் அறவணவடிகளாருக்கு நீ எடுத்துக் கூறிய அந்த நாளிலே தவமும் தருமமும் சார்பில் தோற்றமும் பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்தும் மறஇருள் இரிய மன்உயிர் ஏமுற-அது கேட்ட அறவணவடிகளார் உனக்குக் கூறுபவர் தவமும் தருமமும் ஒன்றை ஒன்று சார்ந்து தோன்றும் நிதானம் பன்னிரண்டும் பிறப்பறுதற்குக் காரணமான நன்னெறியும் என்னும் இவற்றைத் தமக்கே சிறந்துரிமையுடைய பண்போடு எடுத்துக் கூறித் தீவினையாகிய இருள் கெடவும் நிலைபெற்ற உயிரினம் இன்பமுறவும்; அறவெயில் விரித்து ஆங்கு அளப்பு இல் இருத்தியொடு புத்த ஞாயிறு தோன்றுங்காறும்-தமது அறமாகிய ஒளியை உலகிலே பரப்பி அவ்வாறே அளக்கலாகாத இருத்திகளோடே புத்த பெருமான் என்னும் ஞாயிற்று மண்டிலம் இவ்வுலகில் வந்து தோன்றுமளவும்; செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா-யான் இறந்தும் பிறந்தும் பவுத்தர் கூறுகின்ற மெய்ப்பொருளைப் பாதுகாத்து; இத் தலம் நீங்கேன் யானும்-இக் காஞ்சி நகரத்தைக் கைவிட்டுப் போகேன் யானும் இந் நகரத்திலேயே உறைவேன் காண்; இளங்கொடி நீயும் தாயரும் தவறு இன்றாக-இளமையுடைய நீயும் நின் தாயராகிய மாதவியும் சுதமதியும் அறத்தில் பிறழாது வாழ்வீராக; நின் மனப்பாட்டு அறம் வாய்வது ஆக என ஆங்கு அவன் உரைத்தலும் நின்னுடைய உள்ளத்தினுள் தோன்றிய இத் துறவறம் நினக்கு வாய்ப்புடையதாகுக என்று அவ்வறவணவடிகள் உனக்குக் கூறா நிற்பவும்; என்க.

(விளக்கம்) பிறவறம்-பிற சமயக் கணக்கர் அறநெறி. சார்பு பன்னிரண்டு நிதானங்கள். அவை பேதைமை செய்கை யுணர்வே யருவுரு, வாயில் ஊறே நுகர்வே வேட்கை, பற்றே பவமே தோற்றம் வினைப்பய, னிற்றென வகுத்த வியல்பீ ராறும் என்பன. இவை ஒன்றை ஒன்று சார்ந்து மண்டில வகையால் வருதலால் சார்பில் தோற்றம் எனப்பட்டன. இருத்தி-சித்தி; அவை அணிமா முதலிய எண் வகைப்படும். புத்த ஞாயிறு தோன்றுங்காறும் யானும் இத் தலம் நீங்கேன் நீயும் தாயரும் தவறின்றாக நினக்கு அறம் வாய்வதாக என்று அறவணர் நின்னை வாழ்த்துவார் என்றவாறு.

இதுவுமது

172-179: அவன்......உய்தி

(இதன் பொருள்) அவன் மொழி பழையாய் பாங்கு இயல் நல்அறம் பலவும் செய்த பின்-அவ்வறவணர் அறிவுறுத்த அறிவுரைகளினின்றும் பிறழாது அவற்றின் பகுதியில் இயன்ற நன்மையுடைய அறங்கள் பலவற்றையும் செய்தபின்; கச்சிமுற்றத்து நின் உயிர் கடைகொள-அக் காஞ்சி மாநகரத்தின் கண்ணே நின்னுயிர் இப் பிறப்பின் முடிவினை எய்தா நிற்பப் பின்னர்; உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம் ஆண் பிறப்பு ஆகி அருள் அறம் ஒழயாய்-நினக்கு வட மகதநாட்டில் பல பிறப்புகள் உண்டாகும், அப் பிறப்பெல்லாம் ஆணாகவே நீ பிறந்து புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளிய அருளறத்தினின்றும் ஒழியாயாய்; மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு தலைச் சாவகனாய்ச் சார்பு அறுத்து உய்தி-அவ்வறத்திற்குரிய சிறப்போடு பிறப்பெய்தி மாந்தர்களின் மன மயக்கங்களை அறிவுரை கூறி அகற்றித் தனக்கென வாழாது பிறர் பொருட்டு நல்லறம் கூறுகின்ற புத்த பெருமானுக்குத் தலைமாணாக்கனாகிப் பற்றறுத்து வீடுபெறுவாய்காண்; என்க.

(விளக்கம்) அவன்: அறவணன்; பாங்கு-பகுதி கச்சி முற்றம் என்புழி முற்றம் ஏழாவதன் பொருட்டு ஆண் பிறப்பாகச் சார்பறுத்து உய்தி என்றமையால் ஆண் பிறப்பே வீடுபேற்றிற்குரியது என்பது பவுத்தர் கொள்கை என்பது பெற்றாம். தலைச்சாவகன் முதல் மாணாக்கன்.

இதுவுமது

180-190: இன்னும்...............கதிரோனென்

(இதன் பொருள்) இன்னும் கேட்டியோ நன்னுதல் மடந்தை இன்னும் சில கேட்பதற்கு விரும்புவாய் அல்லையோ? கூறுவன் கேள் அழகிய நுதலையுடைய பெண்ணே; ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம் முன்னொரு காலத்திலே புகழால் உயர்ந்த அறிவுடையோனாகிய உன்குல முதல்வன் ஒருவனை உலகத்தை வளைந்துள்ள கடலின் கண்ணிருந்து எடுத்து உய்வித்த நின் குலதெய்வமாகிய மணிமேகலா தெய்வம்; சாது சக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய் ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே உவவனம் மருங்கில் உன்பால் தோன்றி-நீ முற்பிறப்பில் சாது சக்கரனுக்கு உண்டி கொடுத்தமையால் இங்ஙனம் நீ பிறந்துள்ளாய் என்னும் உண்மையைத் தெரிந்து கொண்டே நீ உவவனத்தின் உள்ளே புக்கபொழுது உன்னிடத்தே வந்து தோன்றி உன் வாழ்க்கை நெறி பிறழ்தல் கூடாது என்பது கருதியே நின்னை; மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள்-உவவனத்தினின்றும் எடுத்துப் போய் மணிபல்லவத்திலே சேர்த்தது இச் செய்தியைக் கூர்ந்து கேட்பாயாக; என துவதிகன் உரைத்தலும்-என்று அக் கந்திற் பாவையிடத்து நிற்கும் தெய்வம் கூறா நிற்றலும்; அவதி அறிந்த அணி இழை நல்லாள் துயர்க்கடல் நீங்கி-இவ்வாற்றால் தன் பிறப்பின் எல்லையை அறிந்து கொண்ட மணிமேகலை துன்பமாகிய கடலினின்றும் கரை ஏறி; வலை ஒழி மஞ்ஞையின் மனமயக்கு ஒழிதலும் மலர் கதிரோன் உலகு துயில் எழுப்பினன்-வேடர் வீசிய வலையினின்றும் தப்பிய மயில் போல ஊழ் வினையினாலே எய்திய தன் மன மயக்கத்தினின்றும் ஒழியுமளவிலே கடலினின்றும் தோன்றுகின்ற கதிரவன் உலகிலுள்ள உயிர்களை உறக்கத்தினின்றும் எழுப்பினன்; என்பதாம்.

(விளக்கம்) ஊங்கண்-முன்பு. தூங்கெயிலெறிந்த நின்னூங் கணோர் நினைப்பின்(புறநா-39) போந்தைக் கண்ணி நின்னூங் கணோர் மருங்கிற் கடற் கடம் பொறிந்த காவலன் (சிலப். 28: 134-135) திரை எடுத்த-அழுந்தி. இறவாவண்ணம் கடலினின்றும் எடுத்த இக் கதையை, (சிலப்பதிகாரம், 15: 28 ஆம் அடி முதலியவற்றிற் காண்க) சாது சக்கரற்கு-சாது சக்கரனென்னும் முனிவனுக்கு. ஈது-இத்தன்மையை யுடையது. அவதி-எல்லை. 190. மலர் கதிரோன்: வினைத்தொகை.

இனி இக் காதையை-குழலி எழுந்து கேட்டு எழுந்து நீங்கி வெய்துயிர்த்துப் புலம்பி அழுதேங்கி அவாவுயிர்த்தெழுதலும் இருந்தெய்வம் உரைத்தலும், பூங்கொடி பொருந்தி, நின்பொருள் பேறுவேன் என தெய்வங்கூறும்; அங்ஙனங் கூறுந்தெய்வம் என்சொற்றேறு என மணிமேகலை எனக்கு அருள் என்றலும்; துவதிகனுரைக்கும் அங்ஙன முரைக்குந் துவதிகன் உரைத்தலும் நல்லாள் நீங்கி மயக்கொழிதலும் கதிரோன் துயிலெழுப்பினனென இயைத்துக் கொள்க.

கந்திற்பாவை வருவதுரைத்த காதை முற்றிற்று.


Offline Anu

Re: மணிமேகலை
« Reply #22 on: February 28, 2012, 09:51:16 AM »
22. சிறைசெய் காதை

(இருபத்திரண்டாவது மணிமகலை பொருட்டால் மடிந்தான் உதயகுமரனென்பது மாதவர் வாய்க் கேட்ட மன்னவன் மணிமேகலையை மந்திரியாகிய சோழிகவேனாதியாற் காவல் கொண்ட பாட்டு)

அஃதாவது-உதயகுமரன் கொலையுண்ட செய்தியை அவன் தந்தையாகிய சோழ மன்னனுக்கு அறிவித்த முனிவர்கள் அவன் வருந்தாமைப் பொருட்டு அவன் கொலையுண்ட காரணத்தையும் கூற, அது கேட்ட மன்னவன் வருத்தமும் சினமும் தவிர்ந்து மணிமேகலையைச் சிறையிட்ட செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்-சம்பாபதி கோயிலை விடியற் காலத்தே வழிபாடு செய்ய வந்த மக்கள் உதயகுமரன் கொலையுண்ட செய்தியைச் சக்கரவாளத்தில் இருந்த மாதவருக்கெல்லாம் அறிவித்தனராக; அது கேட்ட அத் துறவோர் மணிமேகலையின்பால் சென்று நிகழ்ந்தவற்றை எல்லாம் தெரிந்துகொண்டு அரசன்பால் சென்று மனக்கினதாக வாழிய வேந்தே! என விளித்து இன்றேயல்ல எனத் தொடங்கி அந்நகரத்தின்கண் கன்றிய காமக் கள்ளாட் டயர்ந்து பத்தினிப் பெண்டிர்பாற் சென்றணுகியும் நற்றவப் பெண்டிர் பின்னுளம் போக்கியும் தீவினையுருப்ப உயிரீறு செய்தோர் பாராள் வேந்தே பண்டும் பலரால் எனத் தோற்றுவாய் செய்து பண்டைக் காலத்தில் அந்நகரத்தின்கண் காவிரியில் நீராடி வருகின்ற பார்ப்பனி மருதி என்பவளை அரசன்மகன் ஒருவன் கண்டு காமுற்று அவளை அழைக்க மருதி மனங்கலங்கி மண்திணி ஞாலத்து மழை வளந் தரூஉம் பெண்டிராயின் பிறர் நெஞ்சு புகாஅர் என அக் குற்றத்தைத் தன் மேலதாக்கிக் கொண்டு சதுக்கப்பூதத்தின் முன்னிலையில் சென்று யான் செய்குற்றம் யான் அறிகில்லேன் யான் பிறனுளம் புக்கேன் அதற்குக் காரணம் என்னை? என அழுது அத் தெய்வத்தை வினவுதலும் அதற்கு அத் தெய்வம் அவளுக்குக் கூறுகின்ற மறுமொழியும், விசாகை என்னும் பத்தினியின் வரலாறும், விசாகை தருமதத்தனுக்குக் கூறுகின்ற அறிவுரைகளும், ககந்தன் மகன் மற்றொருவன் விசாகைக்குப் பூமாலை சூட்டுதற்கு முயலுதலும், பூமாலையோடு உயர்த்திய அவன் கை மீண்டும் தாழ்த்த இயலாது போக, அதனால் அவன் செயலை அறிந்த அரசன் மகன் என்றும் நோக்காமல் அவனை வாளால் எறிந்து கொன்ற செய்தியும் ஆக அம் மாதவர் தம்முள் ஒரு மாதவன் கூற்றாக வருவனவும் மீண்டும் அம் மாதவன் உதயகுமரனுடைய இடங்கழி காமம் காரணமாக மணிமேகலையை நிழல் போலத் தொடர்ந்ததும் காயசண்டிகையின் கணவன் உதயகுமரனைக் கொன்றமையும் அரசனுக்கு எடுத்துக் கூறி இவை எல்லாம் ஊழ்வினையின் செயல் என அம் மன்னவன் உதயகுமரன்பால் வெறுப்புற்றவனாய் உதயகுமரன் உடலை ஈமத்து ஏற்றி மணிமேகலையையும் காவல் செய்க என்று சோழிக வேனாதி என்னும் கோத்தொழிலாளனுக்குக் கட்டளையிடுதலும் பிறவுமாகிய செய்திகள் பலவும் பயில்வோர் உளமுருகக் கூறப்படுகின்றன.

கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப
நெடு நிலைக் கந்தில் நின்ற பாவையொடு
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்
உதயகுமரற்கு உற்றதை உரைப்ப
சா துயர் கேட்டுச் சக்கரவாளத்து
மாதவர் எல்லாம் மணிமேகலை தனை
இளங்கொடி! அறிவதும் உண்டோ இது- என
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும்
ஆங்கு அவள் தன்னை ஆர் உயிர் நீங்கிய
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து  22-010

மா பெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து
கோயில் மன்னனைக் குறுகினர் சென்று ஈங்கு
உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதிபோல
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய!
வேலும் கோலும் அருட்கண் விழிக்க!
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி!
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம்
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே!
இன்றே அல்ல இப் பதி மருங்கில்
கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து  22-020

பத்தினிப் பெண்டிர்பால் சென்று அணுகியும்
நல் தவப் பெண்டிர்பின் உளம் போக்கியும்
தீவினை உருப்ப உயிர் ஈறுசெய்தோர்
பார் ஆள் வேந்தே! பண்டும் பலரால்
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
தன் முன் தோன்றல் தகாது ஒழி நீ எனக்
கன்னி ஏவலின் காந்த மன்னவன்
இந் நகர் காப்போர் யார்? என நினைஇ
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்குறக்
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன்  22-030

இகழ்ந்தோர்க் காயினும் எஞ்சுதல் இல்லோன்
ககந்தன் ஆம் எனக் காதலின் கூஉய்
அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின்
பரசுராமன் நின்பால் வந்து அணுகான்
அமர முனிவன் அகத்தியன் தனாது
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும்
ககந்தன் காத்தல்! காகந்தி என்றே
இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு ஈங்கு
உள்வரிக் கொண்டு அவ் உரவோன் பெயர் நாள்
தெள்ளு நீர்க் காவிரி ஆடினள் வரூஉம்  22-040

பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
நீ வா என்ன நேர் இழை கலங்கி
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன்
முத் தீப் பேணும் முறை எனக்கு இல் என
மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்   22-050

கொண்டோர் பிழைத்த குற்றம் தான் இலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன்
வான் தரு கற்பின் மனையறம் பட்டேன்
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன்
பொய்யினைகொல்லோ பூத சதுக்கத்துத்
தெய்வம் நீ எனச் சேயிழை அரற்றலும்
மா பெரும் பூதம் தோன்றி மடக்கொடி!
நீ கேள் என்றே நேர் இழைக்கு உரைக்கும்
தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் பெரு மழை என்ற அப்  22-060

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!
பிசியும் நொடியும் பிறர் வாய்க் கேட்டு
விசி பிணி முழவின் விழாக் கோள் விரும்பி
கடவுள் பேணல் கடவியை ஆகலின்
மடவரல்! ஏவ மழையும் பெய்யாது
நிறை உடைப் பெண்டிர் தம்மே போல
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய் இழை!
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது
பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக்  22-070

கட்டாது உன்னை என் கடுந் தொழில் பாசம்
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம்
பின்முறை அல்லது என் முறை இல்லை
ஈங்கு எழு நாளில் இளங்கொடி நின்பால்
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்
ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு என
இகந்த பூதம் எடுத்து உரைசெய்தது அப்
பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன்
தாதை வாளால் தடியவும் பட்டனன்
இன்னும் கேளாய் இருங் கடல் உடுத்த  22-080

மண் ஆள் செவத்து மன்னவர் ஏறே!
தருமதத்தனும் தன் மாமன் மகள்
பெரு மதர் மழைக் கண் விசாகையும் பேணித்
தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக்
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர்
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு
ஒத்தனர் என்றே ஊர் முழுது அலர் எழ
புனையா ஓவியம் புறம் போந்தென்ன
மனைஅகம் நீங்கி வாள் நுதல் விசாகை
உலக அறவியினூடு சென்று ஏறி   22-090

இலகு ஒளிக் கந்தின் எழுதிய பாவாய்!
உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என
மா நகருள்ளீர்! மழை தரும் இவள் என
நா உடைப் பாவை நங்கையை எடுத்தலும்
தெய்வம் காட்டித் தௌத்திலேன் ஆயின்
மையல் ஊரோ மன மாசு ஒழியாது
மைத்துனன் மனையாள் மறு பிறப்பு ஆகுவேன்
இப் பிறப்பு இவனொடும் கூடேன் என்றே
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின்  22-100

தருமதத்தனும் தந்தையும் தாயரும்
பெரு நகர் தன்னைப் பிறகிட்டு ஏகி
தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என
நா உடைப் பாவையை நலம் பல ஏத்தி
மிக்கோர் உறையும் விழுப் பெருஞ் செல்வத்துத்
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின்
தருமதத்தனும் தன் மாமன் மகள்
விரி தரு பூங் குழல் விசாகையை அல்லது
பெண்டிரைப் பேணேன் இப் பிறப்பு ஒழிக! எனக்
கொண்ட விரதம் தன்னுள் கூறி   22-110

வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி
நீள் நிதிச் செல்வன் ஆய் நீள் நில வேந்தனின்
எட்டிப் பூப் பெற்று இரு முப்பதிற்று யாண்டு
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்
அந்தணாளன் ஒருவன் சென்று ஈங்கு
என் செய்தனையோ இரு நிதிச் செல்வ?
பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகாஅர் என்பது
கேட்டும் அறிதியோ? கேட்டனைஆயின்
நீட்டித்திராது நின் நகர் அடைக! எனத்  22-120

தக்கண மதுரை தான் வறிது ஆக
இப் பதிப் புகுந்தனன் இரு நில வேந்தே!
மற்று அவன் இவ் ஊர் வந்தமை கேட்டு
பொன் தொடி விசாகையும் மனைப் புறம்போந்து
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண்
அல்லவை கடிந்த அவன்பால் சென்று
நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள்
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன
ஆறு ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என்
நாறு ஐங் கூந்தலும் நரை விராவுற்றன  22-130

இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ?
உளன் இல்லாள! எனக்கு ஈங்கு உரையாய்
இப் பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன்
அப் பிறப்பு யான் நின் அடித்தொழில் கேட்குவன்
இளமையும் நில்லாது யாக்கையும் நில்லாது
வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத் துணை ஆவது
தானம் செய் என தருமதத்தனும்
மாமன் மகள்பால் வான் பொருள் காட்டி  22-140

ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம்
ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால்
குமரி மூத்த அக் கொடுங் குழை நல்லாள்
அமரன் அருளால் அகல் நகர் இடூஉம்
படு பழி நீங்கி பல்லோர் நாப்பண்
கொடி மிடை வீதியில் வருவோள் குழல்மேல்
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன்
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொளச்
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறந் தாழ்ந்த
விரி பூ மாலை விரும்பினன் வாங்கி  22-150

தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
மாலை வாங்க ஏறிய செங் கை
நீலக் குஞ்சி நீங்காது ஆகலின்
ஏறிய செங் கை இழிந்திலது இந்தக்
காரிகை பொருட்டு எனக் ககந்தன் கேட்டுக்
கடுஞ் சினம் திருகி மகன் துயர் நோக்கான்
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன்
ஊழிதோறு ஊழி உலகம் காத்து
வாழி எம் கோ மன்னவ! என்று   22-160

மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும்
வீயா விழுச் சீர் வேந்தன் கேட்டனன்
இன்றே அல்ல என்று எடுத்து உரைத்து
நன்று அறி மாதவிர்! நலம் பல காட்டினிர்
இன்றும் உளதோ இவ் வினை? உரைம் என
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப
தீது இன்று ஆக செங்கோல் வேந்து! என
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும்
முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில்
கடியப் பட்டன ஐந்து உள அவற்றில்  22-170

கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
தள்ளாது ஆகும் காமம் தம்பால்
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள்
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே!
தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்
சே அரி நெடுங் கண் சித்திராபதி மகள்
காதலன் உற்ற கடுந் துயர் பொறாஅள்
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்
மற்று அவள் பெற்ற மணிமேகலை தான்  22-180

முற்றா முலையினள் முதிராக் கிளவியள்
செய்குவன் தவம் என சிற்றிலும் பேர் இலும்
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள்
ஆங்கு அவள் அவ் இயல்பினளே ஆயினும்
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும்
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன்
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை
காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின்
காயசண்டிகை தன் கணவன் ஆகிய  22-190

 வாய் வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என
ஆங்கு அவன் தீவினை உருத்தது ஆகலின்
மதி மருள் வெண்குடை மன்ன! நின் மகன்
உதயகுமரன் ஒழியானாக
ஆங்கு அவள் தன்னை அம்பலத்து ஏற்றி
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து
காயசண்டிகை தன் கணவன் ஆகிய
வாய் வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்
விஞ்சை மகள்பால் இவன் வந்தனன் என  22-200

வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி
ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து
ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும்
சோழிக ஏனாதி தன் முகம் நோக்கி
யான் செயற்பாலது இளங்கோன் தன்னைத்
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்சையன்
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றுஎனின் இன்றால் சூ
மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர்  22-210

துயர் வினையாளன் தோன்றினான் என்பது
வேந்தர் தம் செவி உறுவதன் முன்னம்
ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி
கணிகை மகளையும் காவல் செய்க என்றனன்
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என்  22-215

உரை

சக்கரவாளத்து முனிவர் செயல்

1-10: கடவுள்............ஒளித்து

(இதன் பொருள்) கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப-கடவுள் தன்மையுடைய ஞாயிற்று மண்டிலம் குணகடலில் தோன்றி உலகத்தைக் கவ்வியிருக்கின்ற கரிய இருளை அகற்றுகின்ற நாட்காலத்தே யெழுந்து; நெடுநிலைக் கந்தின் நின்ற பாவையொடு? முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்-நெடிய நிலைத்தூணின்கண் உறைகின்ற துவதிகன் என்னும் தெய்வத்தோடு சம்பாபதியின் திருக்கோயிலையும் வழிபாடு செய்கின்றவர்; உதயகுமரற்கு உற்றதை உரைப்ப-உதயகுமரன் கொலையுண்டு கிடந்தமையைக் கண்டு வந்து தமக்குக் கூறுதலாலே; சக்கர வாளத்து மாதவர் எல்லாம்-சக்கரவாளக் கோடத்தில் உலகவறவியின்கண் உறைகின்ற துறவோர் எல்லாம்; சாதுயர் கேட்டு அரசிளங்குமரன் இறந்தமையால் உண்டான பெருந்துயரம் தரும் செய்தியைக் கேட்டு; மணிமேகலையை அணுகி இளைய பூங்கொடி போல்வாய் இந்நிகழ்ச்சியை நீ அறிந்ததும் உண்டோ என்று வினவ; ஆங்கு அவள் தன்னை ஆர் ,உயிர் நீங்கிய வேந்தன் சிறுவனோடு வேறு இடத்து ஒளித்து-அம் மணிமேகலையையும் அரிய உயிர் நீங்கிய உதயகுமரன் உடம்பையும் வெவ்வேறிடத்து மறைத்து வைத்த பின்னர்; என்க

(விளக்கம்) கடவுள் மண்டிலம் என்றது கடவுள் தன்மையுடைய ஞாயிற்று மண்டிலத்தை என்னை? அம் மண்டிலம் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய இறைமைத் தொழில் மூன்றையும் செய்தலான் என்க. கந்தின் நின்ற பாவை-கந்திற் பாவை மேனின்ற தெய்வம். முதியோள்: சம்பாபதி. சாதுயர்-சாவினால் துயர்தரும் செய்தி. மணிமேகலைதனை அணுகி என்க. இது-இந் நிகழ்ச்சி மெய்யுணர்வு பெற்று மேனிகழ்வனவற்றை அறிந்தவள் ஆதலின் ஆஞ்சாமல் பட்டாங்குக் கூறினள் என்பார் துளங்காது உற்றதை உரைத்தலும் என்றார். வேறிடத்து என்றது வெவ்வேறிடத்து என்பதுபட நின்றது. அவளுக்குப் பிறரால் துன்பம் நிகழாமைப் பொருட்டும் அச் செய்தி பரவாமைப் பொருட்டும் சிறுவன் உடம்பையும் அவளையும் ஒளித்து வைத்தனர் என்பது குறிப்பு.

துறவோர் மன்னன்பால் செல்லுதல்

11-18: மாபெரும்.......வேந்தே!

(இதன் பொருள்) மாபெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து கோயில் மன்னனை குறுகினர் சென்று- மிகப் பெரிய அரண்மனையைக் காக்கும் வாயில் காவலருக்குத் தம் வரவினைக் கூறி அவர் வாயிலாய் மன்னவனுடைய உடம்பாடு பெற்று அரண்மனையினுள்ளே புகுந்து அரசனை அணுகிச் சென்று வாழ்த்துபவர்; வேந்தே ஈங்கு உயர்ந்து ஓங்கு உச்சி உவாமதி போல நவந்து ஓங்கு வெள் குடை மண்ணகம் நிழல் செய-அரசே நின் திருஓலக்கத்தின் மிக உயர்ந்து உச்சியில் அமைந்த முழுத் திங்கள் போன்று விளங்குகின்ற நினது வெண்கொற்றக்குடை இந் நிலவுலகம் முழுவதும் தண்ணிழல் செய்வதாக; வேலும் கோலும் அருள் கண் விழிக்க- நின்னுடைய வெற்றி வேலும் செங்கோலும் உயிர்களின் பால் அருளோடு நோக்குவனவாக; நீ ஏந்திய திகிரி தீது இன்றி உருள்க-நீ ஏந்தியிருக்கின்ற ஆணைச்சக்கரம் தடையின்றி உருள்வதாக; நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் மனக்கு இனிதாக வாழிய-பெருமானே நினக்கென்று பால்வரை தெய்வம் வரையறைப்படுத்திய நின் அகவையாகிய ஆண்டுகள் எல்லாம் நீ நின் மனத்திற்கு இனிதாக நன்கு வாழ்ந்திருப்பாயாக என்று வாழ்த்தி; என்க.

(விளக்கம்) (9) மாதவர் ஒளித்து இசைத்து சென்று வாழ்த்துபவர் வேந்தே குடை நிழல் செய, வேலும் கோலும் விழிக்க, திகிரி உருள்க நீ வாழிய என்று இயைத்திடுக. நினக்கென்ப பால்வரை தெய்வம் வரைந்த ஆண்டுகள் என்க. மனக்கு-மனத்திற்கு.

துறவோர் அச் செய்தி கேட்டு அரசன் அதிர்ச்சி எய்தாமலும் சினவாமலும் அமைதி செய்தற்பொருட்டு நயம்பட உரைசெயத் தொடங்குதல்

19-24: இன்றே............பலரால்

(இதன் பொருள்) இன்றே அல்ல-இன்று மட்டுமல்ல; பார் ஆள் வேந்தே நிலவுலகத்தைச் செங்கோன் முறை பிறழாது ஆளுகின்ற அரசனே! இப் பதி மருங்கில்-இப் பூம்புகார் நகரத்திலேயே; கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து-முதிர்ந்த காமமாகிய கள்ளையுண்டு களித்து ஆடி; பத்தினிப் பெண்டிர் பால் சென்று அணுகியும் நல் தவப் பெண்டிர் பின் உளம் போக்கியும்-கற்புடைய மகளிரிடத்தே காம நோக்கத்துடனே சென்றும் நல்ல தவ ஒழுக்கத்தை மேற்கொண்டுள்ள மகளிரின் பின் தம் நெஞ்சத்தைச் செலுத்தியும்; தீவினை உருப்ப உயிர் ஈறு செய்தோர் பண்டும் பலர்-தமது ஊழ்வினை உருத்து வந்து தம் பயனை ஊட்டுதலாலே தம்முயிர்க்குத் தாமே இறுதியைத் தேடிக் கொண்டோர் பண்டைக் காலத்திலும் பலர் ஆவர்; என்க.

(விளக்கம்) கன்றிய காமம்-முதிர்ந்த காமம். போலித் தவமும் உண்மையால் அதனினீக்குதற்கு நற்றவம் என்றார். இன்றே யல்ல என்றது இன்றும் அத்தகையார் உளர் எனக் குறிப்பால் உணர்தற் பொருட்டு. ஆல்: அசை.

இதுவுமது

25-32: மன்மருங்கு.............கூஉய்

(இதன் பொருள்) மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் தம்முன் தோன்றல் தகாது ஒழி நீ என-வேந்தருடைய குலத்தை ஒழித்த பரசு என்னும் படைக்கலத்தையுடைய திருமாலாகிய பரசுராமன் முன்னிலையிலே காணப்படுதல் கூடாது ஆதலின் அவன் முன் தோன்றாது ஒழி நீ என்று; கன்னி ஏவலின் காந்த மன்னவன்-காவல் தெய்வமாகிய சம்பாபதி கட்டளை யிட்டமையால் காந்தன் என்னும் பெயரையுடைய வேந்தன்; இந் நகர் காப்போர் யார் என நினைஇ-அவ்வாறு யான் இந் நகரத்தை விட்டு நீக்கினேனானால் இந்த நகரத்தைப் பாதுகாப்பவர் யார் என்று தனக்குள் சூழ்ந்து; நாவலம் தண் பொழில் நண்ணார் நடுக்குற-இந் நாவலந் தீவில் பகைவர் அஞ்சி நடுங்குதற்குக் காரணமான வீரத்தோடு; காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்-கற்புக் காவலையுடைய கணிகை ஒருத்தியின்பால் தனக்குப் பிறந்த மகனும் பகைவர் சினந்து போர் செய்யினும் மறங்குறையாதவனும் ஆகிய; காந்தன் ஆம் என காதலின் கூஉய்-ககந்தன் செங்கோலோச்சுதற்குத் தகுந்தவனாவான் என்று துணிந்து மகனன்பினோடு அவனை அழைத்து; என்க.

(விளக்கம்) மன்மருங்கு-அரசர் குலம் மழுவாள்-பரசு என்னும் படை; நெடியோன்-திருமால்; என்வே பரசுராமன் என்றாயிற்று கன்னி என்றது கொற்றவையை; காந்த மன்னவன்-சோழர் குலத்து ஒரு மன்னன் நினைஇ-நினைத்து; நண்ணார்-பகைவர்; காவற் கணிகை ஒன்வன்றனக்கே உரிமை பூண்டு ஒழுகும் காமக்கிழத்தி, களத்தாடும் கூத்தி என்பாரும் இராக்கிடை வேசை என்பாரும் உளர். ஈண்டு அவ்வுரை போலி. எஞ்சுதல்-மறங்குறைதல்; அஃதாவது புறங்கொடுத்தல். ககந்தன் காந்தனக்கும் காமக் கிழத்திக்கும் பிறந்த மகன் ஆதலின் மகவன்போடு அழைத்தான் என்பது கருத்து.

ககந்தன் மகன் மருதியைக் காமுறுதல்

33-44: அரசாள்................கலங்கி

(இதன் பொருள்) அரசாள் உரிமை நின்பால் இன்மையின் பரசுராமன் நின்பால் வந்து அணுகான்-மைந்தனே! நாட்டை ஆளுகின்ற உரிமை நினக்கில்லாமையாலே பரசுராமன் உன்னோடு போர் செய்தற்கு வருவானல்லன்; யான் அமரமுனிவன் தனாது துயர்நீங்கு கிளவியின் தோன்று அளவும் ககந்தன் காத்தல்-யான் சென்று கடவுள் தன்மையுடைய அகத்தியருடைய வரமாகிய என் துன்பம் நீங்குதற்குக் காரணமான அருளுரை பெற்று மீண்டு வருமளவும் ககந்தன் இந் நாட்டினைப் பாதுகாப்பாயாக என்று சொல்லி; காகந்தி என்று இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு-இந் நகரத்திற்கும் காகந்தி நகரம் என்று ஒரு பெயருஞ் சூட்டி; ஈங்கு உள்வரிக் கொண்டு அவ்வுரவோன் பெயர் நாள்-இந் நகரத்தினின்றும் மாறுவேடம் புனைந்து கொண்டு அறிவு சான்ற அக் காந்த மன்னன் இந் நகரத்தை விட்டுச் சென்ற பின்னர் ஒரு நாள்; காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்-காவிரிக் கரையின்கண் அக் ககந்த மன்னனுடைய இளைய மகன்; தெள்ளுநீர் காவிரி ஆடினன் வரூஉம் பார்ப்பனி மருதியை-தெளிந்த நீரையுடைய காவிரியாற்றின்கண் நீராடி வருகின்ற பார்ப்பனியாகிய மருதி என்பவளைக் கண்ணுற்று பாங்கோர் இன்மையின் யாப்பறை என்று எண்ணினன் ஆகி நீ வா என்ன-அவள் பக்கத்திலே யாரும் இல்லாமையால் அவள் அழகில் மயங்கி இவள் கற்பு என்னும் திட்பம் இல்லாதவள் என்று கருதியவனாய் நங்காய்! இங்கு வருவாயாக என்று தன் காமம் தோன்றும் இன்மொழியாலே அழையா நிற்ப; நேரிழை கலங்கி-அழகிய அணிகலன் அணிந்த அப் பார்ப்பனி அது கேட்டு நெஞ்சு கலங்கி; என்க.

(விளக்கம்) காமக்கிழத்தி வயிற்றிற் பிறந்த மகனாதலின் அரசாள் உரிமை இலன் என்றவாறு ஆகவே நீ அரசன் குலத்தை வேராறுப்பேன் என்பதே அவன் கொண்ட சூள் ஆதலின் நின்னை அணுகான் என்பது குறிப்பு. கடவுள் முனி என்றது கடல் குடித்தமையாலும் இமையத் திறைவனோடு துலையொக்க வீற்றிருத்தலாலும் இன்னோரன்ன அவன் சிறப்பினைக் குறித்தபடியாம். ஆடினள்: முற்றெச்சம். பாங்கோர்-பக்கத்திலிருப்பவர். பாங்கோர் இன்மையின் என்றது அவளை யாப்பறை என்று நினைத்தற்கும் வானென்றழைத்தற்கும் ஏதுவாக நின்றது. நீவா என்று தன் காமம் தோன்ற அழைக்க என்க. நேரிழை: மருதி.

மருதியின் மாண்புறு செயல்

54-56: மண்திணி.............அரற்றலும்

(இதன் பொருள்) மண்திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் பெண்டிராயின் பிறர் நெஞ்சு புகா அர் மண்ணாகிய அணுச் செறிந்த இந் நிலவுலகத்தில் பெய்யென்று சொல்லி மழை பெய்விக்கும் தெய்வத்தன்மையுடைய கற்பென்னும் திட்பமுடைய மகளிராயின் கணவர் நெஞ்சில் புகுவதன்றி மற்றையோர் நெஞ்சில் காமப் பொருளாகப் புலப்படார்; பிறன் உளம் புக்கேன்-அளியேன் பிறன் நெஞ்சத்தில் காமப் பொருளாகப் புகுந்தேன்! ஆயின் என் கற்பென்னாயிற்று?; புரிநூல் மார்பன் முத்தீ பேணும் முறை எனக்கு இல் என மா துயர் எவ்வமொடு மனை அகம் புகாஅள்-இனி முப்புரி நூல் அணிந்த மார்பினையுடைய பார்ப்பனன் வளர்க்கின்ற வேள்வித் தீயைக் காவல் செய்யும் தகுதி எனக்கு இல்லையாயிற்று என்று மிகவும் பெரிய துன்பத்தோடு தன் இல்லத்தின்கண் புகாமல்; பூத சதுக்கம் புக்கனள் மயங்கி-பூதம் நிற்கும் சதுக்கத்தையடைந்து காரணம் தெரியாமல் மயங்கி அச் சதுக்கத்தில் எழுந்தருளி இருக்கின்ற தெய்வமாகிய பூதத்தை நோக்கிக் கூறுபவள்; கொண்டோன் பிழைத்த குற்றம் தான் இலேன் கண்டோன் நெஞ்சில் காப்பு எளிது ஆயினேன்-தெய்வமே! யான் என் கணவன் திறத்திலே செய்த குற்றம் ஒன்றேனும் இலேன் அங்ஙனமிருப்பவும் என்னைக் கண்ட ஏதிலேன் ஒருவன் நெஞ்சினும் புகுந்து கரந்திருத்தற்குரிய எளியள் ஆயினேன்; வான் தரும் கற்பின் மனை அறம் பட்டேன்யானோ தருதற்கியன்ற கற்பொழுக்கத்தோடு இல்லறத்தின் கண் ஒருவனுக்கு வாழ்க்கைத் துணையாய்ப் புகுந்தேன்; யான் செய் குற்றம் யான் அறிகில்லேன்-யான் அங்ஙனம் பிறன் உளம் புகுதற்குரியதாகச் செய்த குற்றம் ஒன்றினையும் யான் அறிகின்றிலேன்; பூத சதுக்கத்து தெய்வம் நீ பொய்யினை கொல்லோ எனச் சேயிழை தன்மையுடையாய் இப்பூத சதுக்கத்துக் கண்கண்ட தெய்வமாக எழுந்தருளியிருந்த நீ இப்பொழுது இல்லை ஆயினையோ என்று சொல்லி அப் பார்ப்பினி அழா நிற்ப என்க.

(விளக்கம்) மண் என்றது மண்ணின் துகளை. மழை வளம் தருதல் பெய்யென்று ஏவுமளவிலே மழை பெய்விக்கும் தெய்வத்தன்மை மண்திணி ஞாலத்து மழைவளம் தரூஉம் பெண்டிராயின் பிறர் நெஞ்சு புகாஅர் என்னும் இவ்வடிகள் வேறெங்கும் காணப்படாத அரியாதொரு கற்பிலக்கணமாகத் திகழ்தல் உணர்க. இத்தகைய இலக்கணம் பிற மொழிக்கண்ணும் காண்டல் அரிது போலும், பிறனுளம் புக்கமையால் யான் கற்புடையேன் அல்லேன் போலும் கற்பிலேன் ஆதற்குரிய குற்றம் யான் என் நெஞ்சறியச் செய்திலேனே என்று இப் பார்ப்பினி அரற்றுதல் அவள் சிறப்பினை நன்கு விளக்குகின்றது.

சதுக்கப் பூதம் அல்லவை செய்வோரை அறைந்துண்ணும் இயல்புடையது. அது வாய்மையாயின் கற்பில் பிழைத்த என்னை அஃது அறைந்து உண்டிருத்தல் வேண்டும்; அல்லது யான் கற்புடையேன் ஆயின் என்னை நீ வா என்று அழைத்த அரசன் மகனை அறைந்து கொன்றிருத்தல் வேண்டும். இரண்டும் நிகழாமையின் அத் தெய்வம் இப்பொழுது ஈண்டில்லை போலும் என்னும் கருத்தினால் பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத் தெய்வம் நீ என்றாள்; பொய்யிளை இல்லையாயினை.

மருதி முன்னிலையில் சதுக்கப் பூதம் தோன்றி அவள் வினாவிற்கு விடையிறுத்தல்

57-97: மாபெரும்........இல்லை

(இதன் பொருள்) மாபெரும் பூதம் தோன்றி நீ கேள் என்று நேரிழைக்கு உரைக்கும்-அவ்வாறு மருதியின் முன்னர் மிகப் பெரிய உருவத்தோடு சதுக்கப் பூதம் தோன்றி மடப்பமுடைய நங்காய்! நீ யான் கூறுவதனைக் கேட்பாயாக என்று அம் மருதிக்குக் கூறும்:-தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய் எனப் பெருமழை பெய்யும் என்ற-தனக்கென்ப பிறிதொரு தெய்வம் கொண்டு தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு நாள் தோறும் துயிலெழும் பொழுதே அவன் திருவடிகளைத் தொட்டுக் கை கூப்பித் தொழுது எழுகின்ற கற்புடையவள் பெய் என்று பிணிக்கு மளவிலே பெரிய முகில் மழை பெய்யும் என்று திருவாய் மலர்ந்தருளிய; அப் பொய்யில் புலவன் பொருள் உரைதேறாய்-அந்தத் தெய்வப் புலமைத் திருவள்ளுவருடைய பொருள் பொதிந்த அறிவுரையைப் பயின்றிருந்தும் அதன் பொருளைத் தெளியாயாய் நீ; பிறர்வாய் பிசியும் நொடியும் கேட்டு விசி பிணிமுழவின் விழாக்கோள் விரும்பி கடவுள் பேணல் கடவியை ஆகலின்-ஏதிலார் கூறுகின்ற பிசியையும் நொடியையும் கேட்டு வாய்மை என்று கருதி அவரோடு கூடி வலித்துக் கட்டிய வார்க்கட்டினையுடைய முழவு முழங்குகின்ற திருவிழாக் கொள்ளும் காட்சியைப் பெரிதும் விரும்பிப் பிற தெய்வங்களையும் வழிபடுகின்ற செயலை ஒரு கடப்பாடாகக் கைக்கொண்டுள்ளனையாதலின்; மடவரல் ஏவ மழையும் பெய்யாது-மடப்பம் வருதலையுடைய நீ இப்பொழுது ஏவினால் மழையும் நின் ஏவல் கேட்டுப் பெய்யாது; நிறை உடைப் பெண்டிர் தம்மே போல பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை-மேற்கூறிய கற்பு நிறைவினையுடைய மகளிர் போல நின்னை நினைக்கும் பிறருடைய நெஞ்சத்தைச் சுடுகின்ற அத் தெய்வத் தன்மையும் நின்பால் இல்லை காண்; என்க.

(விளக்கம்) சதுக்கப் பூதம்-இதன் வரலாற்றைச் சிலப்பதிகாரம் 5: 128 ஆம் அடி முதலியவற்றால் உணர்க. இது தவம் மறைந்து ஒழுகும் தன்மையிலாளர் முதலிய அறுவகையினரைத் தன் பாசத்தால் கட்டிப் புடைத்துண்ணும் ஆதலால் அப் பூதம் கற்பிறந்தவளாகிய தன்னையும் தன்பால் தவறு செய்த ககந்தன் மகனையும் புடைத்துண்ணாமையின் நீ பொய்த்தனையோ என்று பழித்தமையின், அது பொறாத அத் தெய்வம் உரைத்தது என்று மாதவர் மன்னனுக்குக் கூறுகின்றனர் என்றுணர்க. இதன்கண் பொய்யில் புலவன் என்றது திருவள்ளுவரை; இப் புலவர்,

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை   (குறள், 55)

எனவரும் திருக்குறளைப் பொன்னே போல் போற்றியெடுத்து இக் காப்பியத்துள் முழுமையாக அமைந்திருத்தலும், வள்ளுவரைப் பொய்யில் புலவன் எனவும் அவர் உரையைப் பொருளுரை எனவும் பாராட்டியிருத்தலும் பண்டைக் காலத்தே திருக்குறள் பெற்றிருந்த நன்மதிப்பை நன்கு வெளிப்படுத்திக் காட்டும். பிசி-பிதிர் இக் காலத்தே புதிர் என்பதுமது. நொடி-விடுகதை. விழாக் கோள்-திருவிழாக் காணல். கடவியை-கடப்பாடாக உடையை மடவரல்: முன்னிலைப் புறமொழி. நிறை-கற்பு. கற்புடையாரைக் காமுகக்கயவர் நினைக்கும் பொழுதே அவர் நெஞ்சே அவரைச் சுடும். நீ கணவனை யன்றியும் வேறு தெய்வங்களையும் தொழுதல் உண்டாதலின் உனது கற்புடைமை அந்தக் தெய்வத் தன்மையை இழந்து விட்டது. இக் காரணத்தால் கற்புக் குறைபடினும் நீ அலவலைப் பெண்டிர் அல்லை ஆகலின் நின்னை என் பாசம் கட்டா தொழிந்தது என்று அத் தெய்வம் மருதிக்கு அமைதி கூறியபடியாம். மேலே ககந்தன் மகனைக் கட்டாமைக்கு அமைதி கூறுகின்றது.

இதுவுமது

68-77: ஆங்கவை.........செய்தது

(இதன் பொருள்) ஆங்கு அவை ஒழிகுவை ஆயின்-இவ்விரு வகை ஒழுக்கங்களையும் கை விடுவாயாயின்; ஆயிழை ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது-பார்ப்பனியே உயர்ந்த பெரிய வானத்தின் கண்ணதாகிய மழையும் நின் ஏவலன்படி ஒழுகுவதாம்; பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போல என் கடுந்தொழிற் பாசம் உன்னைக் கட்டாது-தாம் விரும்பியபடி தீய வழிகளிலே ஒழுகுகின்ற அவலைப் பெண்டிரைக் கட்டுவது போலக் கடிய தொழிலையுடைய என்னுடைய கயிறு உன்னைக் கட்டாது; மன்முறை எழுநாள் வைத்து அவன் வரூஉம் பின் முறை அல்லது என்முறை இல்லை-அரசன் தீவினையாளரை ஏழு நாள்களுள் ஒறுத்தல் வேண்டும் ஆதலின் அரசனுக்குரிய ஏழு நாளையும் இடையில் வைத்துப் பார்த்து அரசன் தன் முறையில் வழுவின் பின் யான் முறை செய்வதல்லது யான் ஏழு நாள் கத்துள் அவனை ஒறுப்பது என் முறையில்லை; ஈங்கு எழு நாளில் இளங்கொடி நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியைக் கேட்டு வாளால் ககந்தன் கடிதலும் உண்டு என-இற்றை நாளிலிருந்து ஏழுநாள் அகவையின் இளைய பூங்கொடி போல்வாய் நின்னிடத்தே நின்றும் மீட்க மாட்டாத நெஞ்சத்தின்கண் மயக்கத்தையுடைய தன் மகன் செய்த பிழையை வினவித் தெரிந்து தான் தன் வாளாலேயே அவனைக் ககந்த மன்னன் எறிந்து தொலைத்தலும் உண்டாகும் என்று சொல்லி; இகந்த பூதம் எடுத்து உரை செய்தது. தீவினையைக் கடந்த அப் பூதம் இங்ஙனம் காரணம் எடுத்துக் கூறி மருதிக்கும் அறிவுறுத்தியது; என்க.

(விளக்கம்) ஆங்கு அவை என்றது பிசியும் நொடியும் கேட்டலும் பிற கடவுளைப் பேணலும் ஆகிய அவற்றை என்றவாறு. அவற்றைக் கை விட்டால் நிதானும் தெய்வங்களாலும் தொழத் தகுந்த கற்புடைத் தெய்வமாகத் திகழ்வாய். தம் மனம் விரும்பியபடி நடக்கும் பெண்டிரைக் கட்டுமாறு போல என் கயிறு உன்னைக் கட்டாது என்றவாறு. கட்டிக் கொள்ளுதலால் கடுந்தொழில் பாசம் எனப்பட்டது . மன்முறை-அரசன் செய்யும் முறைமை. எழு நாள் வைத்துப் பார்த்து அவன் வழுவுமாயின் அதன் பின் எனக்கு முறையாவதல்லது அதற்குள் எனக்கு முறை செய்யும் கடமை இல்லை என்பது கருத்து. ககந்த மன்னன் ஏழு நாள்களினூடேயே தன் மகன் செய்த பிழையின் பொருட்டுத் தன் வாளால் வெட்டிக் கொல்லுவான் என்று மருதியின் பொருட்டு அத் தெய்வம் அமைதி கூறுதல் உணர்க.

மாதவர் பின்னும் ஒரு பத்தினிப் பெண்ணின் வரலாறு கூறுதல்

77-87: அப்பூதம்..............அலரெழ

(இதன் பொருள்) அப் பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன் தாதை வாளால் தடியவும் பட்டனன்-அந்தச் சதுக்கப் பூதம் சொன்னவாறே ஏழு நாள் அகவையுள் அவ்வாறே அவ்வரசிளங் குமரன் தன் தந்தையாகிய ககந்தனது வாளால் வெட்டுண்டொழிந்தான்; இருங்கடல் உடுத்த மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே இன்னும் கேளாய்-பெரிய கடலை ஆடையாக உடுத்துள்ள இந் நிலவுலகத்தை ஆளுகின்ற செல்வத்தையுடைய அரசர்களுக்கெல்லாம் ஏறுபோல்வாய் இன்னுமொன்று கேட்பாயாக; தருமதத்தனும் தன் மாமன் மகள் பெருமதர் மழைக் கண் விசாகையம்-தருமதத்தன் என்பவனும் அவன் மாமன் மகளாகிய பெரிய மதர்த்த குளிர்ந்த கண்களையுடைய விசாகை என்பவளும்; திப்பிய ஓவிய கைவினை கடந்த கண்கவர் வனப்பினர்-தெய்வத் தன்மையுடைய ஓவியப் புலவர்களின் வனப்பினர்-தெய்வத் தன்மையுடைய ஓவியப் புலவர்களின் கைத் தொழிகளையும் கடந்த கண்டோர் கண்ணைக் கவருகின்ற அழகுடையராய் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகுதலால் அவ்வூரின்கண்; தெய்வம் காட்டும் யாழோர் மணவினைக்கு ஒத்தனர் என்றே-பால்வரை தெய்வத்தால் காட்டப்படுகின்ற கந்தருவமணமாகிய களவொழுக்கத்தின்கண் மனமொத்தவராய் ஒழுகுகின்றனர் என்று; மைத்துனன் முறைமையால்-தருமதத்தன் விசாகைக்கு மைத்துனன் முறைமையுடையன் ஆதலால்; ஊர்முழுது அலர்ஏழ-கொடிதறி பெண்டிர் தூற்றுதலாலே நகர் முழுவம் பழிச்சொல் எழாநிற்ப; என்க.

(விளக்கம்) நாளால்-நாளின்கண். தடியவும்-என்புழி உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை; மதர்க்கண், மழைக்கண் எனத் தனித்தனி கூட்டுக. தருமதத்தனும் விசாகையும் வனப்பினர் எனக் கூட்டுக. தெய்வம் காட்டும் யாழோர் மணவினை எனக் கூட்டுக; அஃதாவது களவுப் புணர்ச்சி. அப் பழிச் சொல்லைக் கேட்போர் நம்புவதற்கு மைத்துனன் முறைமை என்றது ஏதுவாயிற்று. ஊர்: ஆகு பெயர், அலர் பழிச் சொல்.

விசாகையின் செயல்

88-100: புனையா..........அடைந்தபின்

(இதன் பொருள்) வாள் நுதல் விசாகை புனையா ஓவியம் புறம் போந்தென்ன மனையகம் நீங்கி உலக அறவியின் ஊடு சென்று ஏறி-ஒளி படைத்த நெற்றியையுடைய அவ் விசாகை என்பவள் அப் பழிச் சொல் யொறாளாய் வண்ணம் தீட்டப் பெறாத பெண் ஓவியம் ஒன்று இடம் பெயர்ந்து சென்றாற்போல் இல்லத்தை விட்டுப் புறப்பட்டுப் போய் ஊரம்பலத்தினுள் புகுந்து சென்று; இலகு ஒளி கந்தின் எழுதிய பாவாய் நீ உலகர் பெரும்பழி ஒழிப் பாய் என-விளங்குகின்ற ஒளியையுடைய தூணின்கண் பண்ணப் பட்ட தெய்வப் பாவையே நீ இவ்வுலகத்தவர் நம்புதற்குக் காரணமான பெரிய இப் பழியைத் தீர்த்தருளுவாய் என்று வேண்டா நிற்ப; நாவுடைப்பாவை மாநகர் உள்ளீர் இவள் மழைதரும் என நங்கையை எடுத்தலும்-அவ் வேண்டுகோட் கிணங்கிய செந்நாவுடைய அக் கந்திற்பாவைதானும் அந் நகரத்திலுள்ளோர் அனைவர்க்கும் செவியிற்படும்படி பெருங்குர லெடுத்துப் பெரிய நகரத்தில் வாழும் மக்களே கேண்மின், இவ் விசாகை பெய்யெனப் பெய்யும் பெரு மழை; பழித்தற்குரியள் அல்லள் என்று மகளிருள் சிறந்த மாபெரும் பத்தினியாகிய விசாகையின் புகழை உயர்த்திக் கூறுதலும்; தெய்வம் காட்டி தெளித்திலேன் ஆயின் மையல் ஊர் மனமாசு ஒழியாது-அது கேட்ட பின்னும் அவ் விசாகை யான் இவ்வாறு தெய்வத்தின் வாயிலாக யான் பழியற்றிவள் இவ்வூரிலுள்ள மாந்தர்களின் மனத்திற் படர்ந்த என் பழிச் சொல் தீராதன்றோ இன்னும் என் நிறையின் சிறப்பினை இவ்வூர் மாக்கள் நன்கு உணர்தற் பொருட்டு; இப் பிறப்பு இவனொடும் கூடேன் மைத்துனன் மனையாள் மறு பிறப்பு ஆகுவேன் என்று-இந்தப் பிறப்பின்கண் தருமதத்தனோடு யான் சேர்கிலேன், மைத்துனனாகிய அவனுக்கு மலையாளாக என்னுடைய மறுபிறப்பின்கண் ஆகுவேன் என்று நற்றாய் தனக்கு நல்திறம் சாற்றி-தன்னை ஈன்ற தாய்க்குத் தனது நல்ல உறுதி மொழியை எடுத்துக் கூறி;மற்று அவள் கன்னி மாடத்து அடைந்தபின்-அவ் விசாகையானவள் கன்னி மாடத்திற்குச் சென்ற பின்னர்; என்க

(விளக்கம்) புனையா ஓவியம்-வண்ணம் தீட்டப் பெறாது வடிவம் மட்டும் எழுதி விடப்பட்ட ஓவியம் செய்யாக் கோலத்தோடிருத்தலில் இங்ஙனம் கூறினர். ஊடு சென்றேறி-உள்ளே புகுந்து சென்று ஒளிப்பாவாய், கந்தின் எழுதிய பாவாய் எனத் தனித்தனி கூட்டுக. இவள் மழைதரும் என்றது இவள் பெய்யென மழை பெய்யும் அத் துணைக் கற்பென்னும் திட்பம் உடையவள் என்று பாராட்டிய படியாம். நாஉடைப்பாவாய் என்றது கந்திற் பாவையை. எடுத்தல்-உயர்த்திக் கூறுதல். ஊர்: ஆகு பெயர். மாசு-பழிச்சொல். இவன்: தருமதத்தன் நற்றாய்-ஈன்ற தாய்; திறம்-உறுதிச் சொல். அவள் : விசாகை; கன்னிமாடம்-கன்னியாகவே யிருந்து காலம் போக்குதற்குரிய மாடம்.

தருமதத்தன் செயல்

101-110: தரும..........கூறி

(இதன் பொருள்) தருமதத்தனும் தந்தையும் தாயரும் தாழ்தரு துன்பம் தலைஎடுத்தாய் என நாவுடைப் பாவையை நலம்பல ஏத்தி-அப் பழிக்கு அஞ்சிய பெரிதும் வருந்தி இருந்த தருமதத்தனும் அவன் தந்தையும் தாயரும் ஆகிய அக் குடும்பத்தினர் கீழ்மையைத் தருகின்ற துன்பக் கடலினின்றும் எம்மைக் கரை யேற்றினாய் என்று நன்றி கூறச் செந்நாவுடைய கந்திற்பாவையை வணங்கி அதன் புகழ் பலவற்றையும் கூறி வணங்கிய பின்னர்; பெருநகர் தன்னை பிறகு இட்டு ஏகிமிக்கோர் உறையும் விழுப்பெரும் செல்வத்து தக்கண மதுரை தான் சென்று அடைந்தபின்-தாம் வாழுகின்ற பெரிய நகரமாகிய காவிரிப்பூம் பட்டினத்தைத் துறந்து சென்று சான்றோர் உறைகின்ற மாபெரும் செல்வத்தை உடைய தென் மதுரைக்குப் போய்ச் சேர்ந்தபின்; தருமதத்தனும் தன் மாமன் மகள் விரிதரு பூங்குழல் விசாகையை அல்லது பெண்டிரைப் பேணேன்-தருமதத்தன் தானும் தன்னுடைய மாமன் மகளாகிய இதழ்விரிகின்ற மலரையுடைய கூந்தலையுடைய விசாகையை மாறிப் பிறந்து வாழ்க்கைத் துணையாகக் கொள்வதல்லது பிற மகளிரை விரும்புகிலேன் ஆதலின்; இப் பிறப்பு ஒழிக என கொண்ட விரதம் தன்னுள் கூறி-இப் பிறப்பு இங்ஙனமே ஒழிவதாக என்று தன் கருத்துள் கொண்ட உறுதி மொழியைத் தன் நெஞ்சத்துள் கூறித் திண்ணிதாக்கிக் கொண்டு; என்க.

(விளக்கம்) தாயர்-நற்றாயும் செவிலித் தாயரும் எனப் பலராகலின் பன்மை கூறினார். பெருநகர் என்றது காவிரிப்பூம்பட்டினத்தை. பிறகிட்டு ஏகி என்றது பின்னே கிடக்க விட்டுப், போகி என்றவாறு. தாழ்தரு துன்பம்-தாழ்வைக் கொடுக்கின்ற துன்பம். பாவையைத் தொழுது நன்றி கூறி ஏத்தி என்க. மிக்கோர் உறைவதாகிய விழுப்பெரும் செல்வம் எனினுமாம். உத்தர மதுரையும் உண்டாகலின் தக்கண மதுரை என்றார். தான்: அசை தருமதத்தனும் என்புழி உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. விசாகை மறு பிறப்பில் தனக்கு மனையாள் ஆவேன் என உறுதி கூறியதற்குடம்பட்டுத் தருமதத்தனும் அங்ஙனமே தன்னுள் உறுதி செய்துகொண்டான் என்றவாறு.

இதுவுமது

111-122: வாணிக..............புகுந்தனன்

(இதன் பொருள்) வாணிக மரபின் வருபொருள் ஈட்டி நீள்நிதி செல்வனாய்-தான் பிறந்த குலத் தொழிலாகிய வாணிகத் தொழில் முறையின்படி அத் தொழிலைச் செய்து அதன் ஊதியமாக வருகின்ற பொருள்களைத் தொகுத்து மேன்மேலும் வளர்கின்ற பொருளையுடைய கொழுங்குடிச் செல்வனாகி; நீள் நில வேந்தனின் எட்டிப்பூப் பெற்று இருமுப்பதிற்று யாண்டு ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்-நெடிய நீலவுலகத்தை ஆளுகின்ற பாண்டிய மன்னனால் எட்டிப்பட்டம் வழங்கப் பெற்று அதற்குரிய பொற்பூவினையும் விருதாகப்பெற்று இவ்வாறு அறுபது ஆண்டு அகவை காறும் பொருந்திய செல்வத்தினாலே மிகவும் உயர்ந்தவனாய் விளங்கினன் அப்பொழுது; அந்தணாளன் ஒருவன் சென்று இருநிதிச் செல்வ ஈங்கு என் செய்தனை பார்ப்பனன் ஒருவன் அத் தருமதத்தன்பால் சென்று பெரிய நிதியை உடைய வணிகர் பெருமானே இத்துணைப் பெரும் செல்வத்தோடு இந் நகரத்திருந்து உன் வாழ்நாளை வீழ்நாளாகக் கெடுத்தொழிந்ததல்லது வேறு புத்தேள் உலகம் புகாஅர் என்பது கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின்-கற்புடை மனைவியை இல்லாத ஆடவர் தமியராய் இருந்து நூல்களில் கூறப்படுகின்ற பல்வேறு அறங்களையும் செய்தாலும் அமரர் வாழும் மேனிலையுலகில் புகமாட்டார் என்னும் இவ்வறிவுரையை நீ கேள்வி மாத்திரையானும் கேட்டறிந்த தில்லையோ இல்லையெனின் இப்பொழுதேனும் யான் கூறுவதனைக் கேட்டாய் அல்லையோ கேட்டாயெனின்; நீட்டித்து இராது நின்நகர் அடைக என-நீ இந்நகரத்தின்கண் நின்னகவை முதிரும்படி காலந்தாழ்த்திராமல் நின்னுடைய நகரத்திற்குச் சென்று கற்புடையாள் ஒருத்தியைக் கடிமணம் செய்து கொள்க என்று கூறா நிற்ப; தக்கண மதுரை தான் வறிது ஆக இப் பதிப் புகுந்தனன்-அது கேட்ட தருமதத்தன் நெஞ்சு கலங்கி அத் தென் மதுரை நல்கூரும்படி அதனை விட்டு இப் பூம்புகார் நகரத்தை யடைந்தான், என்க.

(விளக்கம்) வாணிக மரபாவது கொள்வது மிகையும் கொடுப்பது குறையுமாகாமல் பிறர் பொருளையும் தம் பொருள் போலப் பேணி வாணிகம் செய்தல். இதனை

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின்        (குறள்-120)

என்பதனாலும் உணர்க. எட்டிப்பூ-எட்டிப்பட்டம் பெற்ற வணிகர்க்கு அதற்கறிகுறியாகக் கொடுக்கும் பொற்பூ. எட்டி காவிதிப்பட்டம் தாங்கி(பெருங், 2.3:144) எட்டி காவிதி என்பன தேயவழக் காகிய சிறப்புப் பெயர்(தொல். தொகை. சூ. 12) என்பது நச்சிவிளக்கம். இருமுப்பதிற்றியாண்டு-அறுபதாட்டைப் பருவம். ஈங்கு என் செய்தனையோ இருநிதிச் செல்வ என்றது இருநிதி பெற்றிருந்தும் திருமணம் கொள்ளாமலும் மகப்பேற்றை யிழந்தும் நின் வாழ்நாளைக் கெடுத் தொழிந்தனை என்று இரங்கியதனைக் குறிப்பாக உணர்த்தி நின்றது. புத்தேள் உலகம்-தேவருலகம். காலம் நீட்டித்திராது-காலம் தாழ்த்திராது. அவனால் மதுரை நகரமே சிறப்புற்றிருந்தமையின் அவன் நீங்கினமையால் மதுரை வறிதாயிற்று என்றவாறு. இப்பதி இந்த நகரம்.

இதுவுமது

122-132: இருநில...........உரையாய்

(இதன் பொருள்) இரு நில வேந்தே-பெரிய நிலவுலகத்தை ஆளும் அரசனை; மற்று அவள் இவ்வூர் வந்தமை கேட்டு பொற்றோடி விசாகை நல்லாள் மனைப்புறம் போந்து நாணாள் பல்லோர் நரப்பண்-பொன்னால் இயன்ற வளையலையுடைய அவ்விசாகை நல்லாளும் தன் இல்லத்தினின்றும் புறத்தே வந்து நாணம் இலாளாய்ப் பலர் கூடிய கூட்டத்தினுள்; அல்லவை கடிந்த அவன் பால் சென்று-அறம் அல்லாதவற்றைச் செய்யாதொழிந்த தருமதத்தன்பால் சென்று மைத்துன!; நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள் மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன-நெருங்கிய உறவினேம் ஆகிய நாம் ஒருவரை யொருவர் இப்பொழுது இன்னார் என அறிந்து கொள்கிலேம் நம்மிருவரையும் முற்காலத்தே ஒருவரைக் கண்டு ஒருவர் மயங்குமாறு செய்த ஆண்மையழகும் பெண்மையழகும் எவ்விடத்துச் சென்று மறைந்தனவோ அறிகின்றிலேம்; ஆறைந்து இரட்டியாண்டு உனக்கு ஆயது என் நாறு ஐங்கூந்தலும் நரை விராவுற்றன- அறுபதாட்டைப் பருவம் உனக்கும் வந்துற்றது என்னுடைய நறுமணங்கமழும் ஐம்பாலாகிய கூந்திலின் கண்ணும் நரைமயிர் கலந்து தோன்றுகின்றன; இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ உளன் இல்லாள் எனக்கு ஈங்கு உரையாய்-நம்முடைய இளமையும் காம வேட்கையும் இப்பொழுது எங்குச் சென்று மறைந்தனவோ நீ அறிவாயெனின் உள்ளத்தின்கண் திட்பம் இல்லாதோய் எனக்கும் இங்கு அறிவிப்பாய்; என்க.

(விளக்கம்) பொற்றொடியாகிய விசாகை நல்லாளும் என இயைத்துக் கொள்க. இனி, விசாகைதானும் நல்லாளாயிருந்தும் நாணாளாய் என இயைப்பினுமாம். நம்முள் நாம் அறிந்திலம் என்றது நம்முடைய யாக்கைகள் அத்துணை மாறுபட்டிருக்கின்றன என்ற வாறாம். மம்மர்-மயக்கம். வனப்பு ஆண்மை வனப்பும் பெண்மை வனப்பும் ஆதலின் ஒளித்தன எனப் பன்மை முடிபேற்றது. யாண்டகவை உனக்கு ஆயது என்க. யானும் அத்துணை முதிர்ந்துளேன் என்பாள் நாறைங் கூந்தலும் நரை விரவுற்றன என்றாள். இருவருடைய இளமையும் காமமும், என்க. உளன் ஆகுபெயராய் அதன் உறுதி மேல் நின்றது.

விசாகை தருமதத்தனுக்கு அறிவுரை கூறுதல்

133-142: இப்பிறப்பு..............பலவால்

(இதன் பொருள்) இப் பிறப்பாயின் யான் நின் அடி அடையேன் அப் பிறப்பு யான் நின் அடித் தொழில் கேட்குவன்-சூளுறவு செய்து கொண்ட இப் பிறப்புடையேனாகவே இனி யான் நின்னுடைய அடிச்சியாக நின்பால் எய்துகிலேன் இம்மை மாறி மறுமையாகிய அப் பிறப்பின்கண் யான் நீ ஏவிய குற்றேவலைச் செய்யும் நின் வாழ்க்கைத் துணைவி ஆகுவன் ஐய இவ்வுலகின்கண்; இளமையும் நில்லா-யாக்கையும் நில்லா வளவிய வானபெரும் செல்வமும் நில்லா மாந்தரிடத்துத் தோன்றுகின்ற இளமைப் பருவங்களும் அழியாமல் நில்லா அங்ஙனமே யாக்கைகளும் நிற்கமாட்டா வளமிக்க மிகப்பெரிய செல்வங்களும் நிற்கமாட்டா; புத்தேள் உலகம் புநதல்வருந் தாரார்-ஒருவனுக்கு அவனுடை மக்களும் மேனிலையுலகத்தைத் தருவாரல்லர் மிக்க அறமே விழுத்துணை ஆவது-யாவரேனும் அவரவர் செய்த மிகுந்த நல்வினையே அவரவர்க்குப் பொன்றுங்காலத்தே பொன்றாது துணையாவதாம் ஆதலால் இனி நீ; தானம் செய்என தருமதத்தனும் மாமன் மகள் பால் வான் பொருள்காட்டி-அறம் செய்வாயாக என்று அறிவுறுத்த அது கேட்ட தருமதத்தனும் மாமன் மகளாகிய விசாகைக்குத் தான் ஈட்டிக் கொணர்ந்த பெரும் பொருள் குவையைக் காட்டி; ஆங்கு அவன் அவளுடன் செய்த நல்லறம் ஓங்கு இருவானத்து மீனினும் பல வால்-அப்பொழுதிலிருந்து அத் தருமதத்தன் அவ் விசாகை நல்லாளுடன் இருந்து அப் பொருளால் செய்த நன்மை தருகின்ற அறங்கள் உயர்ந்த பெரிய வானத்திலே தோன்றுகின்ற மீன்களினும் காட்டில் சாலப் பலவாம்; என்க.

(விளக்கம்) இப் பிறப்பாய்-இப் பிறப்பாகவே இனி இப் பிறப்பாயின் யான் என்க கண்ணழிப்பாரும் உளர்; அப் பிறப்பு-மறுபிறப்பு. அடித்தொழில் கேட்குவன் என்றது, நினக்கு மனைவியாகுவேன் என்றவாறு. இளமையும் காமமும் நில்லா என்பதற்கு நாமே சான்றாயினேம். அங்ஙனமே யாக்கையும் செல்வமும் நிலையா என்பது கருத்து. மணந்து கொண்டு மகப்பே றெய்தக் கருதி வந்துள்ள அவன் கருத்தறிந்து நம் இளமையும் காமமும் ஒழிந்தன. அதுவேயுமன்றிப் புத்தேளுலகம் புதல்வர் தருவார் என்னும் நின்கருத்துப் பிழையாம் என்பது தோன்றப் புத்தேளுலகம் புதல்வரும் தாரார் என்றாள். உம்மை இழிவு சிறப்பு மிக்க அறமே விழுத்துணையாவது என்னும் இதனோடு

அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை    (குறள், 36)

எனவரும் திருக்குறளையும் நினைக

விசாகை நல்லாளும் அவன்பாற் சென்று தானம் செய்யெனக் கூற என இயையும். வானத்து மீன்-வீண்மீன்

ககந்தன் மூத்த மகனின் அடாச் செயல்

143-154: குமரி............ஆகலின்

(இதன் பொருள்) குமரி மூத்த அக் கொடுங்குழை நல்லாள் அமரன் அருளால் அகன் நகர் இடூஉம் படுபழி நீங்கி-கன்னியாகவே இருந்து மூத்தவளாகிய அந்த வளைந்த குழை அணிந்த அவ் விசாகைதானே பண்டு கந்திற் பாவையாகிய தெய்வத்தின் திருவருளால் புகாரின் அகநகரத்தில் வாழ்கின்ற மாக்கள் தன்மேலேற்றிய பெரும்பழி நீங்கிய பின்பு ஒரு நாள்; பல்லோர் நரப்பண் கொடிமிடை வீதியில் வருவோள் குழல் மேல்-பல மகளிர் நடுவே கொடி செறிந்த பெரிய வீதியின்கண் வருகின்ற வளுடைய கூந்தலின் மேலே; மருதி பொருட்டான் மடிந்தோன் தம்முன் காமம் காழ்கொள் கருகிய நெஞ்சினன்-முன்பு பார்ப்பனியாகிய மருதி காரணமாகக் கொலையுண்டவனுடைய தமையனாகிய ககந்த மன்னன் மகன் காமமாகிய தீ முதிர்ந்து கடுதலாலே கருகிய நெஞ்சை உடையவனாய்; தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என-நம் பண்டைத் தமிழ்ச் சான்றோர் உயர்த்துக் கூறிய களவு மணம் இதுவேயாம் எனச் சொல்லிக் கொண்டு தன் தலையில்; சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த விரிபூமாலை வாங்கி-சுருண்ட கரிய தலை மயிரினைச் சுற்றி முதுகிலே தூங்கவிட்டிருந்த மலர்ந்த மலர் மாலையைக் கையால்; எல்லவிழ் தாரோன் விரும்பினன் மாலை வாங்க-ஒளி விரிக்கின்ற பொன்மாலை யணிந்த அம் மன்னன் மகன் பெரிதும் விரும்பித் தன் தலையில் மாலையைக் கையில் ஏந்துதற்கு; ஏறிய செங்கை நீலக்குஞ்சி நீங்காதாகலின்-தலையில் ஏறிய அவனது சிவந்த கையானது கரிய அவனது மயிர் முடியினின்றும் நீங்காமல் நிலைபெற்று விடுதலின்; என்க.

(விளக்கம்) குமரிமூத்தல்-கன்னியாகவே இருந்து முதிர்ந்துவிடுதல்; அமரன்: கந்திற்பாவை. அகநகர்: ஆகுபெயர். படுபழி-மிக்கபழி தம்முன்-தமையன்.காமத்தீ முதிர்ந்து சுடுதலால் கருகிய நெஞ்சினன் என்க. பித்தை-ஆண்மகன் தலைமயிர் விரும்பினன்: முற்றெச்சம் தொல்லோர் என்றது பழங்காலத்துத் தொல்காப்பியர் முதலியோரை. மணம்-களவு மணம். இடுவான்-இட. குஞ்சி-ஆடவன் தலைமயிர். வருவோள் குழல் மேல் இடுவான் வேண்டி மாலை வாங்க ஏறிய கை நீங்காதாகலால் என இயைக்க.

இதுவுமது

155-161: ஏறிய............கூறலும்

(இதன் பொருள்) ஏறிய செங்கை இழிந்திலது இந்தக் காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு-தன் மகனுடைய தலையில் ஏறிய சிவந்த கை இறங்காததற்கு இந்த விசாகையின் கற்புடைமையே காரணம் எனக் ககந்த மன்னன் கேள்வியுற்று; கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான் மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன்-கடிய வெகுளி முறுகுதலாலே மகன் இறந்துபடுதலால் வருகின்ற துன்பத்தையும் ஒரு பொருளாகக் கொள்ளாதவராய் அம் மைந்தனையும் தனது வாளாலேயே வெட்டிக் கொன்றனன். இவையெல்லாம் இந் நகரத்திலே நிகழ்ந்த பழையவரலாறாம்; ஊழிதோறு ஊழி உலகம் காத்து வாழிய எம் கோ மன்னவ என்று-பல்லூழி காலம் இவ்வுலகத்து மன்னுயிரைப் பாதுகாத்து வாழ்வாயாக எங்கள் கோமானாகிய அரசனே என்று சொல்லி; மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும்-அத் துறவோரில் வைத்து ஒரு துறவி இவற்றைக் கூறா நிற்றலும்; என்க.

(விளக்கம்) செங்கை இழிந்திலது என்னும் இதனையும் இங்ஙனம் இழியாமைக்கு இந்தக் காரிகையின் கற்பே காரணம் என்பதனையும் அறிந்தோர் கூறக்கேட்டு என்க. சினந்திருகி-சினம்முறுகி. மகன் துயர்-மகன் உறுதுயர் எனவும் மகனால் தனக்குவரும் துயர் எனவும் இருபொருளில் மயங்கிற்று மைந்தன் தன்னை என்றது இம் மைந்தனையும் என்பதுபட நின்றது.

சோழ மன்னன் அத் துறவியை வினவுதல்

162-168: வீயா..........உரைக்கும்

(இதன் பொருள்) வீயா விழுச்சீர் வேந்தன் கேட்டனன் இவற்றை எல்லாம் கெடாத பெரும் புகழையுடைய அச் சோழ மன்னன் கூர்ந்து கேட்டனன் அங்ஙனம் கேட்டவன் அத் துறவோரை நோக்கி; நன்றறி மாதவிர்-நன்மையை நன்கு அறிந்த பெரிய தவத்தையுடையீர்; இன்றே யல்ல என்று எடுத்து உரைத்து நலம் பல காட்டினிர் இன்றும் உளதோ இவ்வினை உரைம் என-நீவிர் உரை தொடங்குங்கால் இன்று மட்டுமல்ல என்று தொடங்கிக் கூறுமாற்றால் அரசியல் நன்மையும் கற்புடை மகளிர் நன்மையும் ஆகிய நலங்கள் பலவற்றை எடுத்துக் காட்டலானீர் அங்ஙனமாயின் இன்றும் நிகழ்ந்துளதோ இத்தகைய நிகழ்ச்சி, உளதாயின் கூறிக் காட்டுமின் என்று வென்றி நெடுவேல் வேந்தன்கேட்ப-வெற்றியையுடைய வேலேந்திய அவ்வரசன் வினவுதலாலே; மாதவர் தம்முள் ஓர் மாதவன்-அத் துறவோரில் வைத்து ஒரு துறவோன்; தீது இன்றாக வேந்து செங்கோல் என-தீங்கின்று அரசர் பெருமானுடைய செங்கோன்மை நிகழ்வதாக என்று வாழ்த்தி; உரைக்கும்-சொல்வான்; என்க. 

(விளக்கம்) வீயாத என்பதன்கண் ஈற்றுயிர் மெய் கெட்டது. விழுச்சீர்-பெரும்புகழ் அங்ஙனம் கேட்டவன் என்க. இன்றே அல்ல என்றமையால் இன்றுமுளது என்பது போதருதலின் இன்றும் உளதோ இவ்வினை என்று அரசன் வினவினான். உரையும் என்பதன் ஈற்றுயிர் மெய் கெட்டு உரைம் என நின்றது. உரைக்கும்-சொல்லுவான்.

(இது முதலாக (169) (204) மாதவன் உரைத்தலும் என்பதிறுதியாக ஒரு மாதவன் உதயகுமரன் கொலையுண்டமையை அரசனுக்கு அறிவிப்பதாக ஒரு தொடர்)

துறவி கூற்று

169-179: முடிபொருள்..........அடைந்தனள்

(இதன் பொருள்) நீள் நில வேந்தே-நெடிய உலகத்தை ஆளுகின்ற அரசனே! இன்றும் அத்தகைய நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்துளது கூறுவல் கேட்டருளுக; முடி பொருள் உணர்ந்தோர்-மெய்ப்பொருளை யுணர்ந்த சான்றோர்கள்; முதுநீர் உலகில் கடியப்பட்டன ஐந்து உள-கடல் சூழ்ந்த இந் நிலவுலகத்தின்கண் விலக்கப்பட்டனவாகிய தீவினைகள் ஐந்துள்ளன அவையாவன: கள்ளுண்டல் பொய் மொழிதல் களவு செய்தல் காமமாடுதல் என்பனவாம்; அவற்றில்-அவ்வைந்தனுள்ளே; கள்ளும் பொய்யும் களவும் கொலையும் தள்ளாதாகும் காமம்-கள் பொய் களவு கொலை ஆகிய நான்கு தீவினைகளையும் தன்பால் உடையதாம் காமம் என்னும் அத் தீவினை; தம்பால் ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என-ஆதலால் தம்மிடத்தே அத்தகைய வற்றால் நிகழும் தீவினைகளையும் ஒரு சேர நீக்கினவர்களே ஆவர் என்று அறிந்து; நீங்கினர் அன்றே நிறைதவ மாக்கள் அக் காமத்தைக் கைவிட்டு நீக்கினோரே நிறைந்த தவ ஒழுக்கமுடைய சான்றோராவர்; நீக்காரன்றே தாங்கா நகரம் தன்னிடை உழப்போர்-அக் காமத்தை நீங்காதவர்தாம் துயரம் பொறுக்கொணாத நகரத்தில் வீழ்ந்து உழல்வோர் ஆவர்; சித்திராபதி மகள் சே அரி நெடுங்கண் மாதவி-சித்திராபதியின் மகளாகிய செவ்வரியோடிய நெடிய கண்ணையுடைய மாதவி என்னும் நாடகக் கணிகை; காதலன் உற்ற கடுந்துயர் பொறாஅள்-தன் காதலனாகிய கோவலன் எய்திய கடிய கொலைத் துன்பத்தைக் கேட்டு நெஞ்சு பொறாதவளாய்; மாதவர் பள்ளியுள் அடைந்தனள்-பெரிய தவத்தையுடைய அறவண வடிகள் தவப்பள்ளியின்கண் தஞ்சம் புகுந்தனள்; என்க.

(விளக்கம்) முடிபொருள்-மெய்ப் பொருள். முதுநீர்-கடல் காமத்தீவினை உடையார்பால் கள்ளுண்டலும் பொய் கூறுதலும் களவு கோடலும் கொலை செய்தலும் ஆகிய நான்கு தீவினைகளும் ஒருதலையாகவுளவாம் என்றவாறு. எனவே காமமே ஏனையவற்றிற்கும் காரணமாம் ஆகவே தம்பால் காமத் தீவினை நிகழாதவாறு விலக்கியவர் எல்லாத் தீவினைகளையும் ஒரு சேர விலக்கியவர் ஆவார். இவ்வுண்மையை யுணர்ந்து காமத்தைத் துவர விலக்கியவரே நிறைந்த தவமுடையோர் ஆவர்; விலக்காதவர் நரகத்தில் வீழ்வர் என்றவாறு. நீங்கார் நரகிடை உழப்போர் எனவே நீங்கினவர் துறக்கத்தும் விட்டுலகத்தினும் புகுந்தின்பம் எய்துவர் என்பது அருத்தாபத்தியால் பெற்றாம் காதலன்: கோவலன். கடுந்துயர்-கொலைப்பட்ட துன்பம். கேட்டுப் பொறாளாய் என்க. அடைந்தனள் என்றது தஞ்சம் அடைந்தனள் என்பதுபட நின்றது.

இதுவுமது

180-188: மற்றவன்.........காரிகை

(இதன் பொருள்) மற்று அவள் பெற்ற மணிமேகலை தான் முற்றாமுலையினள் முதிரா கிளவியள்-அம் மாதவி பெற்ற மணிமேகலை தானும் முதிராத முலையினையும் மழலை மாறாத மொழியினையும் உடைய இளமையுடையவளாய் இருந்தும்; தவம் செய்குவன் என சிற்றிலும் பேரிலும் ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள்-யானும் தவம் செய்வேன் எனத் துணிந்து சிறிய குடில்களிலும் ஊரம்பலத்தை அடைந்தனள்; ஆங்கு அவள் அ இயல்பினளே ஆயினும்-அம்வம்பலத்தின்கண் அம் மணிமேகலை அவள் மேற்கொண்ட அத் தவ ஒழுக்கத்தின்கண் பிறழாதவளாகவே யிருந்துழியும்; அவளை நீங்கான் நிழல்போல் யாங்கணும் காரிகை பொருட்டால் காமம் நிழலைப் போல எவ்விடத்தும் தொடர்பவன் அவளுடைய பேரழகு காரணமாகத் தன் நெஞ்சத்தே காமம் முதிர்ச்சியடைதலால்; ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன்-நிறைந்த இருளையுடைய நள்ளிரவினும் பழியஞ்சானாய் அவள் துயிலுகின்ற அம்பலத்தினூடும் புகுந்தனன்; காரிகை காயசண்டிகை வடிவாயினள்-அம்மணிமேகலை தானும் அவனுக்ககப்படாமல் தன் வடிவத்தைக் கரந்து காயசண்டிகை என்னும் மற்றொருத்தியின் வடிவத்தை மேற்கொண்டிருந்தாள்; என்க

(விளக்கம்) இம் மாதவன் நின்மகன் என்னும் உண்மையை முற்படக் கூறிவிட்டால் பின்னர் அவன் செய்த பிழை கூறும் செவ்வி பெறுதல் அரிதென்பது கருதி யாரோ ஒருவனுடைய ஒழுக்கத்தைக் கூறுபவன் போல முற்பட அவன் செய்த பிழையை மன்னன் உளம் கொள்ளும் வண்ணம் ஓதி வருகின்ற நுணுக்கம் நினைந்து நினைந்து இன்புறற் பாலதாய் இருத்தலுணர்க. முற்றாமுலையினள் என்றது அவன் காமம் காழ் கொள் ஏதுக்கூறியபடியாம் மணிமேகலை காமுறுதற்குரியள் அல்லள் என்பது தோன்றுதற்கு ஆங்கு அவள் அவ்வியல்பின்ளேயாயினும் என்றான். காரிகை-அழகு ஆரிருளும் எனல் வேண்டிய இழிவு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது(188) காரிகை: மணிமேகலை. காயசண்டிகை வடிவாயினள் என்றது அவன் கையில் அகப்படாமைப் பொருட்டு அவ்வடிவாயினள் என்றவாறு.

இதுவுமது

189-193: காயசண்டிகை...............ஆகலின்

(இதன் பொருள்) காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின் காயசண்டிகை என்னும் விச்சாதரி ஒருத்தியும் அவ்வம்பலத்திலிருக்கின்றாளாதலின்; காயசண்டிகை தன் கணவனாகிய வாய்வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி-அக் காய சண்டிகையின் கணவனாகிய ஏறு தப்பாத வாளையுடைய விச்சாதரன் ஒருவன் அவளைக் காண்டற் பொருட்டு அச் செவ்வியில் அம்பலத்தில் வந்து; இவன் ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் என மணிமேகலையின் பொருட்டு வந்தவனைக் கண்டு இவன் இவ்வம்பலத்திற்கு என் மனைவியாகிய காயசண்டிகையின் பொருட்டே வந்தான் போலும் என்று பிழைபடக் கருதி; ஆங்கு அவன் தீவினை உருத்தது ஆகலின்-அப்பொழுது அவனுடைய பழவினையும் தன் பயனை ஊட்டுதற்கு உருத்து வந்ததாதலால்; என்க.

(விளக்கம்) காயசண்டிகையும் ஆங்கு உளன் என்றது காயசண்டிகை சென்றுவிட்ட செய்தி இத் துறவிக்குத் தெரியாதாகலின் புலவர் பெருமான் அவன் கூற்றாக அங்ஙனம் கூறியது புலமை நுணுக்கங்களுள் ஒன்றாகும். மேலும் அவள் அந் நகரத்திருந்த செய்தியை அரசன் அறியானாதலே இயல்பாதலின் அவள் இருந்தமையும் உணர்த்துதல் வேண்டிற்று; இதுவும் ஒரு நுணுக்கமாம். வாய்வாள்-ஏறு தப்பாதவாள். விஞ்சையன் என்றது காஞ்சனனை. தோன்றி என்றது மனைவியைக் காணும் பொருட்டு வந்து என்பதுபட நின்றது. இவள் பொருட்டால்-இடக்கரடக்கு. ஈண்டும் இவன் எனச் சுட்டுப் பெயரால் கூறினார். அவன் என்பதும் அது.

இதுவுமது

194-204: மதிமருள்.............உரைத்தலும்

(இதன் பொருள்) மதிமருள் வெண்குடை மன்ன நின்மகன்-முழு வெண் திங்கள் போன்ற கொற்றவெண் குடையையுடைய மன்னனே நின்னுடைய மகனாகிய; உதயகுமரன் ஒழியானாக ஆங்கு அவள் தன்னை அம்பலத்து ஏற்றி-உதயகுமரன் தானும் நீங்கானாக அம் மணிமேகலையை ஊரம்பலத்தின்கண் ஏற்றி; ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து-உயர்ந்த இருளையுடைய நள்ளிரவிலே இவனையும் ஆங்குச் செலுத்தி; காயசண்டிகை தன் கணவனாகிய வாய்வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்-காயசண்டிகையின் கணவனாகிய வாய்க்கும் வாளையுடைய விச்சாதரனையும் அவ்விடத்திற்கு அழைத்து; விஞ்சை மகள்பால் இவன் வந்தனன் என வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி-நின் மனைவியாகிய காயசண்டிகையின் பொருட்டே இவன் மனைவியாகிய காயசண்டிகையின் பொருட்டே இவன் இப்பொழுது இங்கு வந்தான் என்னும் ஒரு பிழையான எண்ணத்தைத் தோற்றுவித்து முன்னமே இவன் செயலை ஆராய்தல் பொருட்டு வஞ்சமாகக் கரந்திருந்த அவ் விச்சாதரனுடைய நெஞ்சத்தையும் கலக்கிவிட்டு; ஆங்கு அவன் தன் கைவாளால் அம்பலத்து ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி-அவ்விடத்தே அவ் விச்சாதரனுடைய கையிலிருந்த வாளினாலேயே அவ்வலம்பலத்தினூடேயே ஈங்குக் கூறப்பட்ட நின் மகனை வெட்டுவித்தொழிந்தது என்று சொல்லி வாழ்க நின் செங்கோல் என்று வாழ்த்தி; மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் அத் துறவியருள் வைத்துச் சொல்வன்மையுடைய ஒரு துறவி உதயகுமரன் கொலையுண்ட செய்தியை அரசனுக்கு அறிவுறுத்தலும்; என்க.

(விளக்கம்) (169) முடிபொருள் என்று தொடங்கி (193) ஆங்கவன் தீவினை உருத்ததாகலின் என்பது வரையில் இம் மாதவன் கூறிய செய்தியின் சுருக்கம் வருமாறு-வேந்தே காமம் ஏனைய தீவினைகுக்கும் காரணமாம் அதனை விலக்கியவரே துறவோராவர். காமம் காழ் கொண்டவர் நரகத்  துன்பத்தை நுகர்வது இயற்கை. இன்று இந் நகரத்தில் நிகழ்ந்ததொரு நிகழ்ச்சியைக் கேள்! மணிமேகலை தவம் செய்யத் துணிந்து பிச்சையேற்றுண்டு ஊரம்பலததில் உறைந்தாள். அவள் அழகு மிக்கவள். அதனால் காமம் காழ் கொண்டு அவள் நிழல் போல எவ்விடத்தும் நீங்காதவனாய் நள்ளிரவிலே அம்பலத்திற்கும் வந்துவிட்டான்; அவள் அவனுக்கஞ்சிக் காயசண்டிகை வடிவம் கொண்டிருந்தாள். காயசண்டிகையின் கணவனும் மனைவியைக் காண அந் நள்ளிரவில் வந்தான் அவன் இவனைக் கண்டு தன் மனைவியின் பொருட்டே இவன் வந்தனன் என்று கருதும்படி அவனுடைய தீவினையும் அப்பொழுது செவ்வி பெற்றிருந்ததாகலின் என்று சொல்லுமளவும் நின்மகன் என்றாதல் உதயகுமரன் என்றாதல் குறிப்பிடாமல் அவன் இவன் என்னும் சுட்டுப் பெயராலேயே கூறி வந்தமையின் அவ்வரசன் தெரிந்து கொண்ட செய்தி இங்ஙனம் துணிந்து வந்தமையின் அவ்வரசன் தெரிந்து கொண்ட செய்தி இங்ஙனம் துணிந்து தவமகளை இடங்கழி காமத்தோடு விடாது தொடர்ந்து இரவினும் அம்பலத்தினும் துணிந்து புகும் தீயவன் ஒருவன் இந் நகரத்தில் இருக்கின்றான் என்பதேயாம்.

இச்செய்தி கேட்ட மன்னவன் நெஞ்சத்தில் அத்தகைய தீவினை செய்தவன் யாவன் என அறியும் அவாவும் அங்ஙனம் செய்தவனைக் கண்டுபிடித்து ஒறுக்கவேண்டும் என்னுமளவிற்குச் சினமும் உண்டாயிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அம் மாதவனோ அவன் யார் என்று இன்னும் கூறவில்லை. இவ்வாற்றால் மன்னவனுடைய அறிவு தடுமாறி இருக்குமன்றோ? இத் தடுமாற்றத்தைப் புலவர் பெருமான் அவன் குடையைப் பாராட்டுவார்போல மதிமருள் வெண்குடை மன்ன என இரட்டுறக் கூறியுள்ள நயமுணர்க. மதிமருள் என்றது திங்கள் போன்ற என வெண்குடைக்கு உவமாயிற்று. இது கேட்ட அரசன் மதிமருண்டிருப்பதும் இயற்கையே. இன்னும் தீவினையுருத்தாகலின் என ஏதுக் கூறி நின்மகன் உதயகுமரன் ஒழியானாக அவளை அம்பலத்தேற்றி இவனை ஆங்கு உய்த்து விஞ்சையனையும் அழைத்து இவன் நின்மனைவி பால் வந்தனன் எனக் காட்டி அவன் மனத்தையும் கலக்கி என்னுமளவும் உதயகுமரன் எழுவாய் போன்று கூறி வருதலால் ஈண்டும் அவன் தன் மகனே என்று அரசன் துணிதற்கு இடமில்லாமை உணர்க. இவ்வாறு இம் மாதவன் உதயகுமரன் ஐயப்புலத்தில் வைத்து அவன் செய்த பெருந்தீவினையைத் தெளிடுவுபடக் கூறிய பின்னர் மேலே கூறிய முடிக்கும் பொழுதுதான் அரசன் கொலையுண்டவன் தன்மகன் என்றுணரும்படி கூறி முடித்த நயம் உணர்ந்து மகிழ்க.

அரசன் செயல்

205-215: சோழிக..................வேந்தென்

(இதன் பொருள்) (205) அணிகிளர் நெடுமுடி அரசு ஆள் வேந்து-அழகு மிகுகின்ற நெடிய முடியினையுடைய அரசாட்சியைச் செய்கின்ற வேந்தனாகிய அச் சோழ மன்னன் தானும் இற்றை நாள் இத் தீவினை செய்தவன் தன் மகனாகிய உதயகுமரனே யென்பதும் அவன்றானும் விஞ்சையானால் கொலையுண்டான் என்பதும் நன்குணர்ந்த பின்னர்த் தன் தானைத் தலைவனாகிய சோழிக ஏனாதி தன் முகம் நோக்கி-சோழிக ஏனாதியினுடைய முகத்தை நோக்கிக் கூறுபவன்; இளங்கோன் தன்னை யான் செயற் பாலது தான் செய்ததனால் விஞ்சையன் தகவு இலன்-தானைத் தலைவனே இத்தகு தீவினை செய்த இளவரசனாகிய உதயகுமரனை யானே செய்ய வேண்டிய செங்கோன் முறைமை ஒன்றனை யான் செய்தற்கிடனிலாது தானே செய்து விட்டதனால் அவ் விச்சாதரன் பெருந்தகைமை இலன் ஆயினான் அது கிடக்க; மாதவர் நோன்பும் இன்று மடவார் கற்பும் இன்று காவலன் காவல் இன்று எனின்-சிறந்த தவத்தை மேற்கொண்ட துறவோருடைய நோன்பும் இல்லையாம் மடப்பமுடைய மகளிருடைய கற்பறமும் இல்லையாம் அரசனுடைய காவல் இல்லையாயின்; மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர் துயர்வினையாளன் தோன்றினன் என்பது கன்றையிழந்த ஒரு பசுவின் துயர்தீர்தற் பொருட்டுத் தன் அரும்பெற்ற புதல்வனைத் தேராழியின் கீழ்க்கிடத்திக் கொன்று செங்கோன் முறை செய்த மனுவேந்தனுடைய மரபின்கண் இத்தகைய துன்பம் தருகின்ற தீவினையாளன் ஒருவன் பிறந்தான் என்னும் இப் பழிச்சொல்; வேந்தர் தம் செவி உறுவதன் முன்னம்-எம்மோரனைய பிற மன்னருடைய செவியில் சென்று புகுவதற்கு முன்நு; ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி ஈங்குக் கொலையுண்ட உதயகுமரன் உடம்பையும் ஈமத்தீயில் இட்டொழித்து; கணிகை மகளையும் காவல் செய்க என்றனன்-அந் நாடகக் கணிகை மகளாகிய மணிமேகலையையும் காவலின்கண் வைத்திடுக என்று கட்டளையிட்டனன் என்பதாம்.

(விளக்கம்) ஏனாதி என்பது படை மறவருள் சிறந்தோர்க்கு அரசனால் வழங்கப்பெறும் ஒரு பட்டப்பெயராம். இதனை மாராயம் பெற்ற நெடுமொழியானும்(தொல் புறத் சூ. 8) என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியார்

போர்க் கடலாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக்
கார்க்கடல் பெற்ற கரையன்றோ-போர்க்கெல்லாம்
தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே
ரேனாதிப் பட்டத் திவன்

என்று காட்டிய மேற்கோளாலும் உணர்க. சோழிக ஏனாதி என்றமையால் சோழ மன்னனால் ஏனாதிப்பட்டம் வழங்கப்பட்டவன் என்பது பெற்றாம். யான் செய்ய வேண்டிய கொலைத் தண்டனையை ஏதிலனாகிய தான் செய்தமையால் அவ் விஞ்சையனும் ஒரு தவறு செய்தான் என்பதுபடத் தகவிலன் என்றான். இன்று என்பதனை நோன்பும் இன்று கற்புமின்றி என இரண்டிடத்தும் கூட்டுக. மகனை முறை செய்த மன்னவன் என்றது மனுநீதிச்சோழனை இதனை

வாயிற் கடைமணி நடுநா நடுங்க
வாவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன்
அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே  (சிலப் 20: 53-6)

எனவரும் கண்ணகி கூற்றாலும் உணர்க. அம் மாதவனால் கூறப்பட்ட ககந்தன் மக்கள் இருவரையும் கொள்ளாது விடுத்தான். என்னை? அவ்விருவரும் குலப்பிறப்பினர் அல்லராகலின், அக் கருத்துத் தோன்ற ஓர் துயர்வினையாளன் என்றான். வேந்தர் என்றது எம்மோரனைய பிறவேந்தர் என்றவாறு. இதனை

எம்மோ ரன்ன வேந்தற் குற்ற
செம்மையி னிகந்தசொற் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை யுறுக வீங்கென

என வரும் சிலப்பதிகாரத்தினோடு 25: 95-97 ஒப்பு நோக்குக. கணிகை மகள் என்றான் கண்டோரெல்லாம் காமுறுதற்குரியவள் என்பது தோன்ற. அவ்வாறு பிறர் காமுற்றுக்கெடாமலும் வேந்தன் மகன் கொலையுண்டமைக்கு காரணம் இவளென்று கருதி மணிமேகலைக்கு நகர மக்கள் கேடுசூழாமலும் பாதுகாத்தல் தன் கடமை யாதலின் மணிமேகலையையும் காவல் செய்தல் வேண்டிற்று. இனி, மணிமேகலையையும் வெறுத்து அவளைக் கணிகை மகள் என்று கூறிக் காவல் செய்வித்தான் எனக் கருதுவாருமுளர். அங்ஙனம் கருதின் மணிமேகலையை அரசன் வெறுத்தற்குத் தன் மகன் கொலையுண்டமையன்றிப் பிறிதொரு காரணம் இன்மையின் அவ்வரசனுக்கே இழுக்காதலை அவர் நோக்கிற்றிலர்.

இக்காதையை-மண்டிலம் சீப்பப் புரிந்தோர் உரைப்பக் கேட்டு மாதவரெல்லாம் மணிமேகலையை நோக்கி, இதனை நீ அறிவதுமுண்டோ என, அவள் உரைத்தலும் அவளைச் சிறுவனோடு வேறிடத் தொளித்து இசைத்துச் சென்று குறுகி ஒரு மாதவனுரைத்தலும், கேட்டு வேந்தன் உரையும் என ஒரு மாதவன் உரைக்கும்; அங்ஙனம் உரைக்கும் மாதவன் ஏத்தி உரைத்தலும் வேந்து காவல் செய்கென்றனன் என, இயைத்திடுக.

சிறைசெய் காதை முற்றிற்று.


Offline Anu

Re: மணிமேகலை
« Reply #23 on: February 28, 2012, 10:02:59 AM »
23. சிறைவிடு காதை

(23. மணிமேகலை சிறைவீடு செய்த இராசமாதேவி குறைகொண்டிரப்பச் சீலங்கொடுத்த பாட்டு)

அஃதாவது அரசன் கட்டளைப்படி சோழிக வேனாதியால் சிறையிடப்பட்ட மணிமேகலை தன் மகனைக் கொன்றவள் என்னும் செற்றத்தால் இராசமாதேவி அரசன்பால் சென்று வஞ்சகமாய் மணிமேகலையைப் பெரிதும் மதிப்பவள் போலப் பேசி மணிமேகலையைத் தன்பால் இருக்கும்படி அரசன்பால் வேண்டி அவளை அச் சிறையினின்றும் மீட்டுக் கொணர்ந்து தன் பாதுகாவலில் வைத்து அவளுக்குப் பித்தேற்றுதற்குரிய மருந்தூட்டியும் கல்லாத இளைஞன் ஒருவனை விடுத்து மணிமேகலை கற்பினை யழிக்கச் சொல்லியும் நோய் கொண்டாள் என்று பொய் சொல்லிப் பல்வேறு வகையில் மணிமேகலையைத் துன்புறுத்த முயன்று பார்த்தும் அவற்றிற்கெல்லாம் மணிமேகலை தான் பெற்றுள்ள மந்திரங்களின் உதவியால் சிறிதும் தீங்கின்றி இருப்பாளாக; அது கண்ட இராசமாதேவி மணிமேகலை தெய்வத் தன்மையுடையவள்; அஃதறியாது அவளுக்குக் கேடு சூழ்ந்தமையின் தனக்கு இன்னும் என்னென்ன துன்பங்கள் வருமோவென்றஞ் சியவளாய் அவள்பால் சென்று யான் என்மகனை இழந்த துன்பம் காரணமாக இவ்வாறு பல தீங்குகளைச் செய்து விட்டேன் அவற்றைப் பொறுத்தருள வேண்டும் என்று சொல்லி மணிமேகலையை அவள் விருப்பம்போல ஒழுக விட்டுவிட்ட செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.

அரசனுடைய சிறைக் கோட்டத்தினின்றும் இராசமாதேவி விடுவித்துக் கொண்டமையின் இது சிறைவிடுகாதை எனும் பெயர் பெற்றது.

இனி, இதன்கண் மணிமேகலையின்பால் செற்றம் கொண்ட இராசமாதேவி மணிமேகலையைச் சிறை மீட்டுக் கொணர்ந்து மணிமேகலைக்குச் செய்யும் வஞ்சகச் செயல்களும், அச் செயல்களுக்கு மணிமேகலை மந்திரவலிமையால் சிறிதும் துன்புறாதிருத்தலும் அது கண்ட இராசமாதேவி அஞ்சி நடுங்குதலும், மணிமேகலை இராசமா தேவிக்குத் தன் முற்பிறப்பினையும் உதயகுமரன் முற்பிறப்பினையும் அறிவுறுத்துதலும், உதயகுமரன் கொலையுண்டமைக்குரிய பழவினை இன்னது என அறிவுறுத்துதலும், மணிமேகலை இராசமாதேவி செய்த வஞ்சகச் செயல்களினின்றுந் தப்பிய வகை கூறுதலும் காமம் முதலியவற்றால் ஏற்படுகின்ற துன்பங்களை எடுத்துக் கூறி உயிர்களின்பால் அன்பு செலுத்துக என்று இராசமாதேவிக்கு நல்லறிவு கொளுத்துதலும் மகன் துயர் நெருப்பாக மனம் விறகாக இராசமாதேவியின் அகம் சுடுகின்ற வெந்தீயை அவித்துக் குளிரச் செய்தலும் அரசன்தேவி நன்றியுடையளாய்த் தொழுது அடிவீழ் முயல்பவளை மணிமேகலை தடுத்து நீ தொழுதல் கூடாது என் காதலன் தாய் அல்லையோ நீ; மாபெருந் தேவி என்று எதிர் வணங்குதலும் பிறவும் இனிதாகக் கூறப்படுகின்றன.

மன்னவன் அருளால் வாசந்தவை எனும்
நல் நெடுங் கூந்தல் நரை மூதாட்டி
அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும்
திரு நிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும்
கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும்
பட்டவை துடைக்கும் பயம் கெழு மொழியினள்
இலங்கு அரி நெடுங் கண் இராசமாதேவி
கலங்கு அஞ்அர் ஒழியக் கடிது சென்று எய்தி
அழுது அடி வீழாது ஆய் இழை தன்னைத்
தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி  23-010

கொற்றம் கொண்டு குடி புறங்காத்து
செற்றத் தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும்
தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து
செருப் புகல் மன்னர் செல்வுழிச் செல்க என
மூத்து விளிதல் இக் குடிப் பிறந்தோர்க்கு
நாப் புடைபெயராது நாணுத் தகவுடைத்தே
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று
என் எனப் படுமோ நின் மகன் மடிந்தது?
மன்பதை காக்கும் மன்னவன் தன் முன்
துன்பம் கொள்ளேல் என்று அவள் போய பின்  23-020

கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து
வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று
அம் சில் ஓதி அரசனுக்கு ஒரு நாள்
பிறர் பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன்
கரும்பு உடைத் தடக் கைக் காமன் கையற
அரும் பெறல் இளமை பெரும்பிறிதாக்கும்
அறிவு தலைப்பட்ட ஆய் இழை தனக்குச்
சிறை தக்கன்று செங்கோல் வேந்து! எனச்  23-030

சிறப்பின் பாலார் மக்கள் அல்லார்
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது
அறிந்தனைஆயின் இவ் ஆய் இழை தன்னைச்
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல
என்னோடு இருப்பினும் இருக்க இவ் இளங்கொடி
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று
அங்கு அவள் தனைக் கூஉய் அவள் தன்னோடு
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு
அறிவு திரித்து இவ் அகல் நகர் எல்லாம்
எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே  23-040

மயல் பகை ஊட்ட மறு பிறப்பு உணர்ந்தாள்
அயர்ப்பது செய்யா அறிவினள் ஆகக்
கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய்
வல்லாங்குச் செய்து மணிமேகலை தன்
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்துப்
புணர் குறி செய்து பொருந்தினள் என்னும்
பான்மைக் கட்டுரை பலர்க்கு உரை என்றே
காணம் பலவும் கைந் நிறை கொடுப்ப
ஆங்கு அவன் சென்று அவ் ஆய் இழை இருந்த
பாங்கில் ஒரு சிறைப்பாடு சென்று அணைதலும்  23-050

தேவி வஞ்சம் இது எனத் தௌந்து
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி
ஆண்மைக் கோலத்து ஆய் இழை இருப்ப
காணம் பெற்றோன் கடுந் துயர் எய்தி
அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார்
நிரயக் கொடு மகள் நினைப்பு அறியேன் என்று
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின்
மகனை நோய் செய்தாளை வைப்பது என்? என்று
உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என
பொய்ந் நோய் காட்டிப் புழுக்கறை அடைப்ப  23-060

ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப
ஐயென விம்மி ஆய் இழை நடுங்கி
செய் தவத்தாட்டியைச் சிறுமை செய்தேன்
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது
பொன் நேர் அனையாய்! பொறுக்க என்று அவள் தொழ
நீலபதி தன் வயிற்றில் தோன்றிய
ஏலம் கமழ் தார் இராகுலன் தன்னை
அழற்கண் நாகம் ஆர் உயிர் உண்ண
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள்  23-070

யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு?
பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனை
உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ?
உடற்கு அழுதனையேல் உன்மகன் தன்னை
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே?
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது
அவ் உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய் தொடி!
எவ் உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்
மற்று உன் மகனை மாபெருந்தேவி   23-080
செற்ற கள்வன் செய்தது கேளாய்
மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை
உடல் துணிசெய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை
நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி
விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே
யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ? எனின்
பூங் கொடி நல்லாய்! புகுந்தது இது என
மொய்ம் மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா
தெய்வக் கட்டுரை தௌந்ததை ஈறா
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து  23-090

மற்றும் உரை செயும் மணிமேகலை தான்
மயல் பகை ஊட்டினை மறு பிறப்பு உணர்ந்தேன்
அயர்ப்பதுசெய்யா அறிவினேன் ஆயினேன்
கல்லாக் கயவன் கார் இருள் தான் வர
நல்லாய்! ஆண் உரு நான் கொண்டிருந்தேன்
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது?
அந்தரம் சேறலும் அயல் உருக் கோடலும்
சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில்
காதலற் பயந்தோய்! கடுந் துயர் களைந்து  23-100

தீது உறு வெவ் வினை தீர்ப்பதுபொருட்டால்
தையால்! உன் தன் தடுமாற்று அவலத்து
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய்
ஆள்பவர் கலக்குற மயங்கிய நல் நாட்டுக்
காருக மடந்தை கணவனும் கைவிட
ஈன்ற குழவியொடு தான் வேறாகி
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி
புதல்வன் தன்னை ஓர் புரி நூல் மார்பன்
பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க
ஆங்கு அப் புதல்வன் அவள் திறம் அறியான்  23-110

தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும்
நீர் நசை வேட்கையின் நெடுங் கடம் உழலும்
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓடக்
கான வேட்டுவன் கடுங் கணை துரப்ப
மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி
பயிர்க் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி
உயிர்ப்பொடு செங் கண் உகுத்த நீர் கண்டு
ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும்
கேட்டும் அறிதியோ வாள் தடங் கண்ணி
கடாஅ யானைமுன் கள் காமுற்றோர்  23-120

விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர்
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ?
களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந் துயர்
இள வேய்த் தோளாய்க்கு இது என வேண்டா
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை
துன்பம் தருவன துறத்தல் வேண்டும்
கற்ற கல்வி அன்றால் காரிகை!   23-130

செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர்
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்
திருந்து ஏர் எல் வளை! செல் உலகு அறிந்தோர்
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர்
துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என
ஞான நல் நீர் நன்கனம் தௌத்து
தேன் ஆர் ஓதி செவிமுதல் வார்த்து
மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக   23-140

அகம் சுடு வெந் தீ ஆய் இழை அவிப்ப
தேறு படு சில் நீர் போலத் தௌிந்து
மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி
ஆங்கு அவள் தொழுதலும் ஆய் இழை பொறாஅள்
தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை
காதலற் பயந்தோய் அன்றியும் காவலன்
மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினள் என்  23-147

உரை

மன்னவன் ஏவலின்படி வாசந்தவை என்னும் முதியவள் இராசமாதேவியின் பால் சென்று ஆற்றுவித்தல்

1-10: மன்னவன்..........வாழ்த்தி

(இதன் பொருள்) மன்னவன் அருளால்-சோழ மன்னனுடைய அருளை முன்னிட்டுக் கொண்டு அரண்மனையின்கண்; அரசற்காயினும் குமரர்க்காயினும் இருநில கிழமை தேவியர்க்கு ஆயினும்-அரசர்களுக்கேனும் மக்களுக்கேனும் பெரிய நிலத்தை ஆளும் உரிமை பூண்ட பட்டத்துத் தேவியருக்கேனும் ஏதேனும் துன்பம் வந்த காலத்தில் சென்று அத் துன்பத்தைத் தீர்த்தற்கு; கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும்-பொருள் பொதிந்த சொற்களை விரித்துக் கூறியும் தான் கற்ற அறிவுரைகளை எடுத்து விளக்கியும்; பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழியினள்-அவர்கள் உற்ற துன்பத்தைத் துடைக்கவல்ல பயன் பொருந்திய மொழியையுடையவளாகிய; வாசந்தவை எனும் நல்நெடும் கூந்தல் நரை மூதாட்டி- வாசந்தவை என்னும் பெயரையுடைய அழகிய நெடிய கூந்தல் நரைத்துள்ள முதியவள்; இலங்கு அரிநெடும் கண் இராசமாதேவி கலங்கு அஞர் ஒழிய கடிது சென்று எய்தி-விளங்குகின்ற செவ்வரியோடிய நெடிய கண்ணையுடைய இராசமாதேவிக்குத் தன் மகன் இறந்தமையால் உண்டான நெஞ்சு கலங்குதற்குக் காரணமான துன்பம் தீர்தற்பொருட்டு விரைந்து உவளகத்தே சென்று; அழுது அடி வீழாது-ஏனைய மகளிரைப் போல அழுதுகொண்டு அடியில் வீழாமல்; ஆயிழை தன்னை தொழுது முன்னின்று-இராசமாதேவியைக் கை குவித்துத் தொழுது அவள் முன்னிலையின் நின்றவாறே; தோன்ற வாழ்த்தி-தன் வருகை தோன்றுமாறு சிறப்பாகத் தேவியை வாழ்த்திக் கூறுபவள்; என்க.

(விளக்கம்) மன்னவன் அருளால் என்றது இராசமாதேவிக்கு ஆறுதல் கூறுதல் வேண்டும் என்னும் கருத்து அரசனுக்குண்மையைக் குறிப்பால் உணர்ந்துகொண்டு என்றவாறு. எனவே இவள் முற்பட அரசனுக்கு ஆறுதல் கூறவேண்டாமையும் பெற்றாம். நரையையுடைய மூதாட்டி என்க. அரசர்க்கு, தேவியர்க்கு என்பதற்கேற்பக் குமரர்க்கு  தருப்பையில் கிடத்தி.....விளிதல் என்பதனோடு ஓடன் மரீஇய பீடின் மன்னர், நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதன் மறந்தவர் தீது மருங்கறுமார், அறம்புரி  கொள்கை நான்முறை முதல்வர், திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி, மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர் என வரும் புறப்பாட்டு (13) ஒப்பு நோக்கப்படும் மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து வீழ்ந்தாரே துறக்கம் பெறுவர் என்பது நச்சினார்க்கினியர்(தொல் அகத் 44) உரை என்னெனப் படுமோ என்றது இகழ்ச்சி. நின்மகன் பொருட்டு நீ துன்பங்கொள்ளுதலை அரசன் காணின் நாணுவன் ஆதலால் நீ துன்பங்கொள்ளேல் என்பது குறிப்பு. இக் குறிப்பு பெரிதும் நுணுக்கமுடையத்தாய் இராசமாதேவி துன்பம் மறத்தற்கு ஏதுவாதலும் உணர்க.

அரசியின் வஞ்சகச் செயல்

21-30: கையாற்று............வேந்தென

(இதன் பொருள்) கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து-மகன் இறந்தமையால் பெரிதும் துன்பமுற்றுக் கையாற்றுக் கிடக்கும் என் நெஞ்சத்தைப் பிறர் அறியாவண்ணம் என்னுள்ளேயே மறைத்து அடக்கிக்கொண்டு பொய்யாகத் துன்புறாதவள் போன்று நடிக்கும் ஒழுக்கத்தைக் கைக்கொண்டு அதனால் என் வஞ்சம் புறத்தே தோன்றா வண்ணம்; மணிமேகலையை வஞ்சம் செய்குவன் என்று அம்சில் ஓதி-என் மகன் கொலையுண்டமைக்குக் காரணமான மணிமேகலையை வஞ்சித்து ஒறுக்குவன் என்று துணிந்து அழகிய சில பகுதியையுடைய கூந்தலையுடைய இராசமாதேவி தன்னுள் துணிந்து; அரசனுக்கு-தன் கணவனாகிய மன்னனுக்குச் செவ்வி பெற்ற ஒரு நாளில் கூறுபவள்; பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து-பிறர் தன்னை விரும்பிப் பின் வாராமைக்குரிய மணிமேகலையின் தவவேடத்தைக் கண்டு; அறிவு திரிந்தோன் அரசியல் தானிலன்-தனதறிவு பிறழ்ந்துபோன நம் மகன் நம் அரசியலுக்கு ஏற்புடையான் அலன் ஆதலின் அவனைப் பற்றி யான் கவல்கிலேன்; கரும்புடை தடக்கை காமன் கையற அரும்பெறல் இளமை பெரும் பிறிதாகும்-கருப்பு வில்லையுடைய பெரிய கையையுடைய காமவேளும் செயலற்றுத் திகைக்கும்படி அரிய பேறாகிய தனது இளமைப் பருவத்தைக் கொண்டடொழிதற்குக் காரணமான; அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்கு சிறைதக்கன்று செங்கோல் வேந்து என-மெய்யறிவு கைவரப்பெற்ற மணிமேகலை நல்லாளுக்குச் சிறைக் கோட்டம் தகுதியான இடம் அன்று செங்கோன்மையுடைய வேந்தர் பெருமானே இஃது என் கருத்தாம் என்று நயம்பட நவிலா நிற்ப; என்க.

(விளக்கம்) கையாற்றுள்ளம்-மகன் இறந்துபட்டமையால் துன்பம் மிகுந்து செயலற்றுக் கிடக்கும் நெஞ்சம். பொய்யாற்றொழுக்கம்-வஞ்சக ஒழுக்கம். அஞ்சிலோதி-இராசமாதேவி, அரசியல் தானிலன் ஆதலின் அவன் இறந்தமை பற்றி யானும் வருந்துகிலேன் என்பது குறிப்பு. பெரும்பிறிதாக்குதல்-சாகச் செய்தல்; பெரும் பிறிது சாவு. இளமையின் குறும்பு நிகழாவண்ணம் நன்கு அடக்கி விட்டாள் எனத் தான் மணிமேகலையைப் பெரிதும் மதிப்பாள் போல அதற்கேற்ற சொல் தேர்ந்து கூறுகின்றாள். அறிவு-மெய்யறிவு. ஆயிழை-மணிமேகலை. தக்கன்று-தகுதியுடையது அன்று. நீ இத்தகைய தவறு செய்தல் தகாது என்று இடித்துக் கூறுவாள் செங்கோல் வேந்து என்றாள்.

அரசன் செயல்

31-34: சிறப்பின்..............இறைசொல்

(இதன் பொருள்) மன்னர்க்குச் சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் மறப்பின் பாலார் என்பது-அரசர்க்கு அரசியல் இலக்கணமாகிய சிறப்பின் பாற்பட்ட மக்களே மக்கள் எனக் கொள்ளத் தகுந்தவர் அச் சிறப்பில்லாதவர் தம் மக்களாயினும் மக்களாகக் கருதாமல் மறக்கும் பகுதியின் பாற்படுவர் என்று சான்றோர் சொல்லுவர் இவ்வுண்மையை; அறிந்தனை ஆயின் இவ்வாயிழை தன்னை செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறைசொல்-யான் அறியுந்துணை நீயும் அறிந்திருப்பாயாயின் சிறைக் கோட்டத்திலிடப் பட்ட மணிமேகலையை நீயே செறிந்துள்ள சிறையினால் உண்டாகும் துன்பத்தைத் தீர்த்திடுக என்று அம் மன்னவன் அவள் கருத்துக்கிசைந்து கூறா நிற்ப; என்க.

(விளக்கம்) சிறப்பு-அரசாட்சிக்கு வேண்டிய சிறப்பிலக்கணம் ஏனையோர் தம் மக்களாயிருந்தாலும் மக்களாகக் கொள்ளப்பட்டார். அறிந்தனை ஆயின் என்றது என்னைப் போல அறிந்திருப்பதுண்டாயின் நன்று என்றவாறு. இதனானும் அரசன் மணிமேகலையைச் சிறை செய்தது அவளைப் பாதுகாத்திற் பொருட்டே என்பதறியலாம். தாய்மையுள்ள மாகலின் இவ்வாறு இராசமாதேவி கருதுதல் அரிது என்பது தோன்ற இங்ஙனம் கூறினான். இவ்வாறு பிறர் கருதாமல் அவளுக்குத் தீங்கியற்ற முற்படுவர் என்பது கருதியே யானும் அவளைச் சிறையிலிட்டுப் பாதுகாத்து வருகின்றேன் என்பது இதன்கண் குறிப்பெச்சப் பொருளாய் நின்றது. தன் விருப்பம் போலத் திரிய ஒண்ணாதபடி செறிய அடைபட்டுக் கிடப்பதனால் உண்டாகும் சிறைத்துன்பம் என்றவாறு. தீர்க்க என்றதன் ஈற்று உயிர்கெட்டது; விகாரம் அவனது இறைமைத் தன்மை விளங்குதலின் அக் கருத்துத் தோன்ற அரசன் என்னாது இறை என்றார்.

இராசமாதேவியின் வஞ்சகச் செயல்கள்

35-41: என்னோடு..............ஊட்ட

(இதன் பொருள்) என்னோடு இருப்பினும் இருக்க இவ்விளங்கொடி-பெருமானே நன்று, அங்ஙனமே செய்வல் சிறைவீடு செய்த பின்னர் மணிமேகலை என்னோடு உவளகத்தில் இருப்பினும் இருந்திடுக. அதனை விரும்பாது இவ்விளமையுடைய பிக்குணி; தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று-தன் தவவேடத்திற்கு இயையத் தனது பிச்சைப் பாத்திரத்தை ஏந்தித் தன் விருப்பப்படி போயினம் போகுக அவளைத் தடுப்பவர் யாரும் இல்லை என்று மன்னவன் மதிக்கும்படி கூறி; கொங்கு அவிழ் குழலாள் அங்கு அவள் தனை கூஉய் அவள் தன்னோடு கோயிலுள் புக்கு-நறுமணம் கமழும் கூந்தலையுடைய இராசமாதேவி அவ்விடத்தேயே மணிமேகலையைச் சிறைவீடு செய்வித்துத் தன்பால் அழைத்து அவளோடு தனது மாளிகையிலே புகுந்த பின்னர்; அறிவு திரித்து இ அகநகர் எல்லாம் எறிதரு கோலம் யான் செய்குவல் என்று-இம் மணிமேகலைக்குப் பித்தேற்றி இவள் அறிவைப் பிறழ்வித்து இந்த அகநகரத்தில் வாழுகின்ற மாந்தரெல்லாம் இவளை அடிக்கத் தகுந்ததொரு வண்ணத்தை யான் இவளுக்குச் சென்று விடுவல் என்று துணிந்து; மயல் பகை ஊட்ட-பித்துண்டாக்குகின்ற இயற்கைக்கு மாறான மருந்தை வஞ்சகமாக ஊட்டிவிடா நிற்ப; என்க.

(விளக்கம்) என்னோடு உவளகத்தில் இருப்பினும் இருக்க என்றவாறு இளங்கொடி: மணிமேகலை. ஓடு-பிச்சைப் பாத்திரம். கூஉய்-கூவி; அழைத்து கொங்கவிழ் குழலாள்: இராசமாதேவி அகநகர்-ஆகு பெயர். எறிதரும் என்புழி தரும் பகுதிப் பொருட்டு. கோலம்-தன்மை பகை-பகையான மருந்து

இதுவுமது

41-50: மறுபிறப்பு............அணைதலும்

(இதன் பொருள்) மறு பிறப்பு உணர்ந்தாள் அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக-மறு பிறப்பினையும் அறிந்துள்ள அறிவுவன்மையுடைய மணிமேகலை அம் மருந்து காரணமாக யாதொன்றினையும் மறத்தல் இல்லாத இயற்கை அறிவோடு பண்டு போல விளங்காநிற்ப அதுகண்ட இராசமாதேவி; கல்லா இளைஞன் ஒருவனை கூஉய் வல்லாங்கு செய்து-கல்லாக் கயவன் ஒருவனை மழைத்து ஏடா! உன்னால் இயலுமளவும் ஏதெனினும் செய்து; மணிமேகலை தன் இணைவளர் இளமுலை ஆகத்து புணர்குறி செய்து-மணிமேகலையினுடைய ஒன்றற்கு ஒன்று இணையாக வளருகின்ற இளைய முலைகளையுடைய உயர்ந்த அழகிய உடம்பின்கண் நீ புணர்ந்ததற்குரிய அடையாளங்களைச் செய்துவிட்டு; பொருந்தினள் என்னும் பான்மைக் கட்டுரை பலர்க்கு உரை என்று மணிமேகலை உன்னைக் காமுற்றுப் புணர்ந்தாள் என்னும் தன்மையையுடைய திட்பமான மொழிகளை நகரமாந்தர் பலருக்கும் கூறிப் பழி தூற்றுவாயாக என்று கற்பித்து; காணம் பலவும் கைநிறை கொடுப்ப-இத்தீச் செயலுக்கு அவன் உடன்படும் பொருட்டுக்கைக் கூலியாகப் பொற்காசுகள் பலவற்றையும் அவன் கை நிறையும்படி கொடுத்து ஏவ; ஆங்கு அவன் சென்று அ ஆயிழை இருந்த பாங்கில் ஒருசிறைப்பாடு சென்று அணைதலும்-அக் கய மகனும் அம் மணிமேகலை இருந்த பக்கத்தில் ஒரு புறமாகச் சென்று சேர்தலும்; என்க.

(விளக்கம்) மறு பிறப்புணர்ந்தாள் என்றது மணிமேகலையின் அறிவுப் பெருமையைக் குறிப்பாக உணர்த்தி அவ்வறிவாற்றலால் மருந்தின் ஆற்றலை அடக்கிப் பண்டு போலவே யிருந்தாள் என்பதற்குக் குறிப்பேது வாய் நின்றது. ஈண்டு இவ்வரசியின் இவ்விழிதகவு குறித்தே சாத்தனார் இவளைப் பண்டே அரக்கர் குலப்பாவை என்று அறிவுறுத்தினர் என்றுணர்க, இம் மருந்து நோய் உண்டாகுதலின் பகைமருந்து எனப் பட்டது. பகை: ஆகு பெயர். அயர்ப்பது-மறப்பது. பித்தேறியவர் ஒன்றை நினைத்து அதைச் சொல்லி முடிப்பதற்குள் அதனை மறந்த மற்றொன்றனைப் பேசுவர் ஆதலின் பித்தேறாமையை அதன் பண்புக் கேற்றி அயர்ப்பது செய்யா அறிவு என்றார். தீவினை செய்தற்கு உøம்படல் வேண்டிக் கல்லாக் கயமகனை அழைத்தாள் என்க. வல்லாங்குச் செய்து என்றது வலிந்துபுணர்க. வலிமையினால் அவளை வலிந்து பற்றிய புணர்க எனல் வேண்டியவள் தான் பெண்ணாகலின் இடக்கரடக்கி, வல்லாங்குச் செய்து என்றாள். ஆகத்துப் புணர்குறி பான்மை-முறைமை. கட்டுரை-கட்டிக் சொல்லும் பொய்ம்மொழி. காணம்-பொற்காசு. கைநிறை கொடுப்ப: விகாரம் இருந்த பாங்கு இருந்த பக்கம். ஒரு சிறைப்பாடு-ஒரு புறத்தில்

மணிமேகலையின் செயல்

51-60: தேவி.............அடைப்ப

(இதன் பொருள்) ஆயிழை-மணிமேகலை; இது தேவி வஞ்சம் எனத் தெளிந்து-ஆடவர் வரலாகா இடத்தில் இங்ஙனம் ஒரு முடலையாக்கையின் வருதற்குக் காரணம் இராசமாதேவியின் வஞ்சமே என்று நன்கு தெரிந்துகொண்டு; நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி ஆண்மைக் கோலத்து இருப்ப-நாவினால் ஓதுகின்ற மந்திரத்தை அஞ்சாமல் ஓதி அக் கயவனும் அஞ்சத் தகுந்த முடலையாக்கை ஆடவன் உருக்கொண்டு மணிமேகலையும் இருத்தலாலே; காணம் பெற்றோன் கடுந்துயர் எய்தி-கைக்கூலி பெற்ற அக் கயமகன் அங்கிருந்த ஆடவன் உருவத்தைக் கண்ணுற்று இவனால் நமக்குத் தீங்கு உண்டாகுமோ என்னும் அச்சத்தால் பெருந்துன்பமடைந்து; அரசர் உரிமையில் ஆடவர் அணுகார்-மன்னருடைய உரிமை மகளிர் இருக்கும் உவளகத்தில் இத்தகைய ஆடவர் அணுகுதல் இலர் ஆகவும் இங்கு ஒருவன் இருக்கின்றான்; நீராய் கொடுமகள் நினைப்பு அறியேன் என்று அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின்-நரகத்தில் வீழ்தற்குரிய அரசியாகிய இக் கொடும் பாவியின் கருத்து யாதென்று யான் அறிகின்றிலேன் யாதாயினும் ஆகுக யான் இங்கு இரேன் என்று துணிந்து அகநகரத்தைக் கைவிட்டு அக் கயமகன் ஓடிப்போன பின்னரும்; மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று-நம் மகனைக் கொலையுண்ணும் அளவிற்குக் காமநோய் செய்து விட்டவளை இவ்வாறு இன்புற்றிருப்ப விட்டு வைத்திருப்பது என்ன பேதைமை என்று செற்றங்கொண்டவளாய்; உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என பொய் நோய் காட்டி புழுக்கு அறை அடைப்ப-பிற மகளிர்க்குத் தன் தீவினையை மறைத்தற்பொருட்டு மணிமேகலை பிழைக்க முடியாத நோயையுடையளாய் உண்ணுதலையே கைவிட்டாள் என்று சொல்லி ஏனைய மகளிர்க்குத் தான் படைத்த பொய் நோயை மெய்போலக் கூறிக் காட்டிய புழுக்கமிக்க நிலவறையிலிட்டு அடைத்து வைப்ப என்க.

(விளக்கம்) அரசர் உரிமையில் ஆடவர் அணுகார் என்பது பற்றி உவளகத்தில் தான் இருக்குமிடம் நோக்கி ஆடவன் ஒருவன் வருதல் கண்டு இதுவும் தேவியின் வஞ்சம் என்று அவன் தன்னைக் காணு முன் அவன் கண்டு அஞ்சத்தகுந்ததோர் ஆணுருவம் கொண்டு மணிமேகலையிருந்தாள் என்பது பாட்டிடைவைத்த குறிப்பினால் பெற்ற பொருள் என்னை? காணம் பெற்றோன் அவ்வாடவனைக் கண்டு கடுந்துயர் எய்தி என்றமையால். கடுந்துயர் எய்துதற்குக் காரணம் அவ்வாடவன் உருவத்தைக் கண்டு இவன் அஞ்சினான் என்பதன்றிப் பிறிதில்லையாகலின் என்க. நிரயக்கொடுமகள் நினைப்பு அறியேன் எனப் பாட்டிடை வைத்தமையால் இராசமாதேவி இவ்வாறு முருட்டுயாக்கை ஆடவரை யழைத்து அவரொடு காமக்களியாட்டம் செய்யும் வழக்க முடையாள் போலும் ! என்னையும் அது குறித்தே அழைத்திருப்பாள் என்றஞ்சி ஓடிப்போனான் என்க. அங்ஙனம் ஓடியவன் கயவனாகலின் ஊர்முழுதும் தூற்றியும் இருப்பன். ஈண்டு,

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு    (குறள், 204)

எனவும்

அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்    (குறள், 1076)

எனவும் வரும் திருக்குறள்கள் நினைக்கப்படும்

இராசமாதேவியின் கழிவிரக்கம்

61-66 : ஊண்.......தொழ

(இதன் பொருள்) அந்த வாள் நுதல்-புழுக்கறையில் இடப்பட்ட ஒளியுடைய நுதலை உடைய மணிமேகலை-ஊண் ஒழி மந்திரம் உடைமையின் மேனி வருந்தாது இருப்ப-உணவின்றியும் நீண்ட நாள் இருத்தற்குரிய மந்திரம் தன்பால் இருத்தலால் அதனை யோதிச் சிறிதும் திருமேனி வாடாமலும் மனம் வருந்தாமலும் மகிழ்ந்திருப்ப; ஆயிழை ஐயென விம்மி நடுங்கி-இராசமாதேவி ஐயென்று பெரிதும் வியந் அத்தகையாளுக்கு அறியாது செய்துவிட்ட தன் தீவினையால் யாது நிகழுமோவென்றும் அச்சத்தால் உளம் விம்மி அழுது நடுங்கி மணிமேகலையை நோக்கி அந்தோ; என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது செய்தவத்தாட்டியை சிறுமை செய்தேன்-யான் பெற்ற செய்தவத்தாட்டியை சிறுமை செய்தேன்-யான் பெற்ற மகனுக்கு எய்திய துன்பத்தைப் பொறுக்க ஒண்ணாமல் செய்கின்ற தவவொழுக்கத்தை முழுவதும் ஆளுகின்ற தெய்வத் தன்மையுடைய உனக்குத் தீமை செய்தொழிந்தேனே என்று கழிவிரக்கம் கொண்டவளாய்;  பொன் ஏர் அனையாய்-பொன் போலும் அழகுடையாய்; அறியாமையால் செய்த என் பிழையைப் பொறுத்தருளுக என்று அவ்விராசமாதேவி கைகூப்பித் தொழாநிற்ப; என்க.

(விளக்கம்) ஊண்-உணவு: வாணுதல்: மணிமேகலை. ஐ-வியப்பு ஒன்றனைக் கண்டு வியப்போர் ஐயென்று வாயாற் சொல்லி வியத்தலும் உண்டு ஐ வியப்பாகும் என்பது தொல்காப்பியம், ஆயிழை: இராசமாதேவி, செய்தவத்தாட்டியை: முன்னிலைப் புறமொழி. சிறுமை-துன்பம். ஏர்-அழகு. பொன் போன்ற அழகுடையாய் என்க. பொறுக்க என்பதன் ஈற்றுயிர் கெட்டது. அவள்: இராசமாதேவி.

மணிமேகலை இராசமாதேவிக்குக் கூறும் அறிவுரை

67-75: நீலபதி.................யாரே

(இதன் பொருள்) நீலபதி தன் வயிற்றில் தோன்றிய ஏலம் கமழ்தார் இராகுலன் தன்னை அழல்கண் நாகம் ஆர் உயிர் உண்ண விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள்-முற்பிறப்பிலே நீலபதி என்னும் அரசியின் வயிற்றில் பிறந்த ஏலமணம் கமழும் மலர்மாலையையுடைய இராகுலனை(இப் பிறப்பில் உதயகுமரனாகப் பிறந்தானை) தீப்போன்ற கண்ணையுடைய நாகப் பாம்பு அரிய உயிர் உண்டற்குக் கண் விழித்தமையைப் பொறேனாய் (அவன் மனைவி இலக்குமியாயிருந்த யான்) என் உயிரைத் தீக்குளித்துச் சுட்ட அந்த நாளிலே; இளங்கோன் தனக்கு யாங்கு இருந்து அழுதனை-இப் பிறப்பில் உன் வயிற்றிற் பிறந்து அரசிளங் குமரனாகிய இவனுக்கு எவ்விடத்தில் இருந்து நீ அழுதாய் கூறுதி பூங்கொடி நல்லாய்-பூங்கொடி போலும் அழகுடைய அரசியே! இப்பொழுது; பொருந்தாது செய்தனை-அழுகின்ற நீ தானும் பொருத்தமின்றி அழுகின்றாய், எற்றால் எனின்; உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ-இப்பொழுது கொலையுண்ட நின் மகனுடைய உடல் அழிந்தமை கண்டு அழுதாயோ அல்லது அவன் உயிர் போயிற்று என்று அழுதாயோ இவற்றுள் எது பற்றி அழுதாலும் அறியாமையே யாம், என்னை? உடற்கு அழுதனையேல் உன் மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டில் இட்டனர் யாரே-கண் கண்ட உடல் பற்றியே நீ அழுதிருத்தல் வேண்டும் அதற்கு அழுதால் நீ பெற்ற உன் மகன் உடம்பை எடுத்துப் போய்ச் சுடுகாட்டில் ஈமத்தீயிலேற்றி அழித்தது உங்களையன்றி வேறு யார்? ஆகவே நீங்களே அழித்துவிட்டு அழுதல் எற்றிற்கு என்றாள்; என்க.

(விளக்கம்) முற்பிறப்பில் உன்மகன் நீலபதி என்னும் அரசி மகனாய் இராகுலன் என்னும் பெயரோடு இருந்தான்; அவனுக்கு இலக்குமி என்னும் பெயரோடு யான் மனைவியாய் இருந்தேன்; இராகுலன் திட்டிவிடம் என்னும் பாம்பின் பார்வையால் இறந்தான்; அப்போது யான் தீயிற்பாய்ந் திறந்தேன் முற்பிறப்பில் இறந்த மகனுக்கு அழாத நீ அங்ஙனமே இப் பிறப்பில் இறந்தவனுக்கு மட்டும் அழுவதேன்? அன்றியும் நீ பெற்றது அவன் உடலை மட்டுமே; அவ்வுடலைத் தீயிலிட்டுச் சாம்பர் ஆக்குவானேன்? ஆக்கியபின் அழுவானேன்? இவ்வாற்றால் நீ பொருந்தாது செய்தனை என்று அறிவுறுத்தபடியாம்.

அழற்கண்-தீப்போலும் நஞ்சையுடைய கண். விழித்தல்-அவன்மேல் விழித்துக் கொல்லுதல். யாங்கிருந்தழுதனை என்னும் வினா அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்து நின்றது.

இதுவுமது

76-79: உயிர்க்கு.............வேண்டும்

(இதன் பொருள்) உயிர்க்கு அழுதனையேல்-உயிர் போனதற்கு அழுதேன் என்பாயாயின் அதுவும் பொருத்தமின்று என்னை? உயிரை நீ ஈன்றாயுமல்லை கண்டாயுமல்லை ஆதலின்; செயப்பாட்டு வினையால் உயிர் புகும் புக்கில்-தன்னால் செய்யப்பட்ட பழவினைக்கேற்ப போனவுயிர் சென்று புகும் உடம்பாகிய இடம்; தெரிந்து உணர்வு அரியது-எவ்விடத்தது என்று அறிந்து கொள்ளுதல் நம்மனோர்க்கு அரியதாம்; ஆய்தொடி அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின்-கோப்பெருந்தேவியே நின்னால் பெறப்படாத  தேனும் உயிரிடத்தே யான் பெரிதும் அன்புடையேன் ஆதலால் அழுகின்றேன் என்பாயாயின் அதுவும் பொருத்தமின்று. என்னை? எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்-உயிர்களில் வேற்றுமையின்மையால் உடம்பைவிட்டுப் போகின்ற உயிர் எல்லாவற்றிற்கும் நீ இவ்வாறு அழுதல் வேண்டும், அங்ஙனம் செய்கின்றலை ஆதலான் என்றாள்; என்க

(விளக்கம்) உயிரை அன்றும் காணாய் இன்றும் காணாய் என வரும்(கபிலரகவல்) பிற்றை நாள் செய்யுள் இதனைப் பின்பற்றி வந்தது உயிர் அவ்வவற்றின் வினைக்கேற்பத்தாமே பிறந்தும் இறந்தும் சுழல்வன அது பற்றி நீ அழுதல் பேதைமை.

இதுவுமது

80-90: மற்றுன்.................உரைத்து

(இதன் பொருள்) மா பெரும் தேவி மற்று உன் மகனை செற்றகள் வன் செய்தது கேளாய்-கோப்பெருந்தேவியே! உன் மகனாகிய உதயகுமரனைச் சினந்து கொன்றவன் காஞ்சனன் என்னும் விச்சாதரன் ஆவான். அவன் அங்ஙனம் செய்ததற்குரிய காரணமாகிய தீவினையை யான் கூறுவல் கேட்டருளுக; மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை உடல் துணி செய்தாங்கு உருத்து எழும் வல்வினை-உன் மகன் இராகுலனாய் இருந்த முற்பிறப்பிலே அடிசிற்கலங்கள் சிதைந்துபோம்படி வழுக்கி அவற்றின் மேல் வீழுந்த தன் மடைத் தொழிலாளனை வாளால் உடல் துணியும்படி எறிந்து கொன்றமையால் உருத்து வந்த அக் கொடிய தீவினையானது; நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி-நஞ்சு விழி படைத்த நாகப்பாம்பினால் அப் பிறப்பிலேயே அவனது நல்ல உயிரைக் கவர்ந்ததோடு அமையாமல்; விஞ்சையன் வாளால் வீட்டியது-நின் மகனாகப் பிறந்த இப் பிறப்பினும் தொடர்ந்து வந்து விச்சாதரன் ஒருவன் வாளினாலே கொன்றொழித்தது காண்; இது நீ எங்ஙனம் அறிந்துகொண்டாயோ என்று என்னை வினவுதல் கூடும், அங்ஙனம் வினவுவாயாயின்; பூங்கொடி நல்லாய் புகுந்தது இது என-மலர்க்கொடி போலும் அழகுடைய மாபெருந்தேவியே! யான் அறிந்து கொள்ள நிகழ்ந்த நிகழ்ச்சி இது, அதனைக் கூறுவேன் கேள் என்று தொடங்கி; மெய்ம் மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா தெய்வக் கட்டுரை தெளிந்ததை ஈறா உற்றத்தை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து செறிந்த மலரையுடைய பூம்பொழிலாகிய உவவனத்திற்கு மலர் கொய்யும் பொருட்டுத் தான் சுதமதியோடு கூடிப் புகுந்தது முதலாக உலகவறவியின்கண் கந்திற்பாவைமேனிற்கின்ற துவதிகன் என்னும் தெய்வம் உதயகுமரன் கொலையுண்ட பின்னர் எடுத்துக் கூறிய பொருள் பொதிந்த மொழிகளால் தான் தெளிந்தது ஈறாக நிகழ்ந்தவற்றை எல்லாம் ஒன்றும் ஒழியாமல் எடுத்துக் கூறி என்க.

(விளக்கம்) செற்றகள்வன் என்றது சினந்த காஞ்சனனை உதயகுமரன் அறியாவண்ணம் பின்புறத்தே நின்று உயிர் கவர்ந்தான் ஆகலின் அவனைக் கள்வன் என்று உருவகித்தாள். செய்தது என்றது செய்ததற்குரிய காரணத்தை என்பதுபடநின்றது. மடைக்கலம்-அட்டிற்கலம். மடையன்-மடைத்தொழில் செய்பவன்; உண்டி சமைப்பவன். நஞ்சுவிழி அரவு-திட்டிவிடம். வீட்டியது-கொன்றது. யாங்கு-எவ்வாறு. புகுந்தது-நிகழ்ந்தது. பூம்பொழில் என்றது உவவனத்தை. தெய்வக் கட்டுரை-கந்திற்பாவை கூறிய பொருள் பொதிந்தசொல், தெளிந்ததை என்புழி ஐகாரம் சாரியை. ஈறாக என்பதன்கண் ஈற்றுயிர்மெய் தொக்கது. எல்லாம் என்பது எஞ்சாமைப்பொருட்டு. ஒழிவின்று என்பதில் குற்றியலிகரம் குற்றியலுகரமாயிற்று; செய்யுளாகலின்.

இதுவுமது

91-99: மற்று..............கொண்டிலேன்

(இதன் பொருள்) மணிமேகலைதான் மற்றும் உரை செய்யும்-பின்னர் அம் மணிமேகலை மேலும் சொல்லுகின்றாள்; மயல் பகை ஊட்டினை மறுபிறப்பு உணர்ந்தேன் அயர்ப்பது செய்யா அறிவினேன் ஆயினேன்-தேவியே! நீதானும் அறிவினை மயக்கப் பித்தேற்றும் பகை மருந்தினை எனக்கு ஊட்டினை யானோ மறுபிறப்பு உணருமளவிற்கு அறிவாற்றல் உடையேன் ஆகலின் பித்துடையார் போன்று தன்னைத்தான் மறந்திடாத நல்லறிவு உடையேனாயிருந்தேன்; நல்லாய் -நன்மை மிக்க அரசியே நின் ஏவலால்; கல்லாக் கயவன் கார் இருள் தான் வர நான் ஆண் உரு கொண்டிருந்தேன்-கல்லாத கயவன் ஒருவன் கரிய இருளின்கண் என்பால் வரும் பொழுது யான் ஆணுருக் கொண்டு தப்பினேன்; மாண் இழை செய்த வஞ்சம்-மாட்சிமையுடைய அணிகலன் அணிந்த இராசமாதேவியே! நீ பொய் நோய் காட்டி என்னைப் புழுக்கறையில் இட்ட வஞ்சகச் செயலினின்றும்; பிழைத்தது-யான் உயிர் தப்பியது; ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ-யான் உணவில்லாமலும் உயிரோடிருத்தற்குரிய மந்திரம் உடையேனாய் இருந்ததனாலன்றோ? அஃதின்றேல் இறந்து படுதல் தப்பாது; அந்தரம் சேறலும் அயல் உருக்கோடலும் சிந்தையில் கொண்டிலேன்-இவ்வாறன்றி நின் பாதுகாப்பினின்றும் வான் வழியே சென்று தப்பவும் வேற்றுருக் கொண்டு தப்பவும் யான் எண்ணுகிலேன் எனின்; என்க

(விளக்கம்) நல்லாய்: விளி மந்திரமுடைமையினன்றோ பிழைத்தது என்றது அஃதில்லையானால் இறந்தொழிவேன் என்பதுபட நின்றது. அந்தரம்-வானம் அயல் உருக்கோடல்-வேற்றுருக் கொள்ளுதல். இவற்றால் நின்னை விட்டு யான் போதல் கூடும்; ஆயினும் அவ்வாறு போவதற்கு யான் நினைந்திலேன் என்று சொல்லி மேலே அதற்கும் காரணம் கூறுகின்றாள் என்க.

இதுவுமது

99-103: சென்ற........கேளாய்

(இதன் பொருள்) தையால்-நங்கையே நின்னிடத்தினின்றும் ஓடிப்போதற்கு யான் நினையாமைக்குக் காரணம் கூறுவேன் கேள்; சென்ற பிறவியின் காதலன் பயந்தோய் கடுந்துயர் களைந்து தீது உறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டு-முற்பிறப்பிலே எனக்குக் காதலனாய் இருந்தவனை அவனது மறுபிறப்பின்கண் ஈன்ற தாய் அல்லையோ நீ? இவ்வாற்றால் எனக்கு மாமியாகிய உனக்கு வந்த கடுந்துன்பத்தைப் போக்கி மேலும் தீமை வருவதற்குக் காரணமான தீவினைகளை நின்னிடத்திருந்து ஒழிக்க வேண்டும் என்னும் என் விருப்பமே அதற்குக் காரணமாம், இதுகாறும் கூறியவற்றால்; உன் தன் தடுமாற்று அவலத்து எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் உன்னுடைய மனம் தடுமாறுதற்குக் காரணமான துன்பத்தையுடைய அறியாமையாகிய மயக்கத்தைக் கைவிட்டு இனி யான் கூறுகின்ற இனிய அறிவுரைகளைக் கேட்டருளுக; என்க.

(விளக்கம்) காதலன் என்றது இராகுலனை. பயந்தோய்-ஈன்றோய் மகன் இறந்தமையால் வந்த துன்பமாகலின் கடுந்துயர் என்றாள். இனி தீவினை செய்யாமல் தீர்க்கவேண்டுமென்னும் விருப்பம் காரணமாக என்க. தையால்: விளி. எய்யா மையல்-அறியாமைக்குக் காரணமான மயக்கம்.

மணிமேகலை காமம் முதலியவற்றால் வரும் தீவினைகளை விளக்குதல்

104-111: ஆள்பவர்....................நீத்தும்

(இதன் பொருள்) ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு காருக மடந்தை-நாட்டை யாளும் அரசர் கொடுங்கோன்மையால் கலக்குறப்பட்டு அறம் தலைதடுமாறிய நல்ல நாட்டின்கண் பண்டு இல்லறம் நடத்திய நங்கை ஒருத்தி தன்; கணவனும் கைவிட கணவனாலும் கைவிடப்பட்டு ஈன்ற குழவியொடு தான் வேறு ஆகி மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி-தான் ஈன்ற குழவியையும் கைவிட்டுத் தான் தமியளாய்ப் பிரிந்து போய் மயங்கி மனம் போனதொரு திசையிலே போய் ஆங்கோர் ஊரின்கண் வரைவின் மகளாய் வாழ்கின்ற காலத்திலே; புதல்வன் தன்னை ஓர் புரிநூல் மார்பன் பதியோர் அறியா பான்மையின் வளர்க்க-அவள் கைவிட்ட குழந்தையை ஒரு பூணுநூல் அணிந்த மார்பையுடைய ஒரு பார்ப்பனன் அவ்வூர்வாழ் மாந்தர் அறியாததொரு முறைமையாலே தன் பிள்ளை போல வளர்த்துவிட; ஆங்கு அப் புதல்வன் அவ்வாறு வளர்க்கப்பட்ட அம்மகன்; அவள் திறம் அறியான்-தன் தாயிருந்த ஊருக்கு ஒரு காரியத்தை முன்னிட்டுச் சென்றவன் அங்குப் பொது மகளாய் வாழ்க்கை நடத்திய தன் தாயைப் பொதுமகள் என்றே நினைத்து; தான் புணர்ந்து-அவளைப் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும்-பின்பு தாயென்றறிந்து அத் தீவினை பொறாமல் அவன் தன் உயிரை விட்டதும் என்க.

(விளக்கம்) ஆள்பவரால் கலக்குற மயங்கிய நாடு என்க. இது மடந்தையைக் கணவன் கைவிடவும் குழவியை அவள் பிரிந்து போதற்கும் ஏதுவாய் நின்றது. குழவியொடு: உருபுமயக்கம் வரையாளாய்-கற்பொழுக்கத்தை வரைந்து கொள்ளாது வலை மகளாய் என்க. பதியோர்-ஊரிலுள்ளோர். அவள்திறம்-அவள் தன் தாயென்னும் செய்தி. புணர்ந்தபின் அறிந்து என்க. இது காமத்தின் தீமைக்கு ஒன்று காட்டியவாறு.

இதுவுமது

112-119: நீர்நசை.............கண்ணி

(இதன் பொருள்) வாள் தடம் கண்ணி-வாள்போலும் நீண்ட பெரிய கண்ணையுடைய அரசியே; நீர்நசை வேட்கையின் நெடுங்கடம் உழலும் சூழ்முதிர் மடமான்-நீரை விரும்பும் வேட்கையினாலே நெடிய காட்டின்கண் நீர்நிலை தேடித் திரிகின்ற சூல் முதிர்ந்த இளைய மானினது; வயிறு கிழித்து ஓட கானவேட்டுவன் கடுங்கணை துரப்ப மான்மறி விழுந்தது கண்டு-வழிற்றைக் கிழித்து அப்பாலும் ஓடும்படி அக் காட்டில் வாழுகின்ற வேடன் ஒருவன் கடிய அம்பினைச் செலுத்துதலாலே அப் பெண்மான் விழுந்ததனைக் கண்டு ;மனம் மயங்கி நெஞ்சு கலங்கி; பயிர்க்குரல் கேட்டு அதன் பான்மையனாகி-அம் மான் தன் இனத்தை யழைக்குங் குரலைக் கேட்டு அதன் அருகிலே சென்று பார்த்து; உயிர்ப்பொடு செங்கண் உகுந்த நீர் கண்டு-சாகின்ற அந்த மான் நெட்டுயிர்ப்பெறிதலோடு துன்ப மிகுதிபால் தனது சிவந்த கண்ணினின்றுஞ் சொரிந்த நீரைப் பார்த்து; ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும்-அதன் மேல் அம்பு செலுத்திய வேடன் தான் செய்த அத் தீவினைக் காற்றாமல் ஒப்பற்ற தன்னுயிரையே துறந்த செய்தியை கேட்டும் அறிதியோ-நீ கேள்வி வாயிலாகவேனும் அறிவாயோ என்றாள்; என்க.

(விளக்கம்) நசை-வேட்கை-நச்சுதலாலே உண்டாகும் விருப்பம் மான் மறி-அம் மானின் சூலிலிருந்த குட்டிமான் எனினுமாம். ஓட்டி எய்தோன் என்றது சுட்டுப்பெயர் மாத்திரையாய் நின்றது. இது கொலையின் தீமைக்கு ஒன்று காட்டியவாறு.

இதுவுமது

120-130: கடாஅ...........காரிகை

(இதன் பொருள்) கள் காமுற்றோர்-கள்ளை விரும்பிப் பருகியவர் கடாஅ யானைமுன் விடாஅது சென்று அதன் வெள் கோட்டு வீழ்வது-மதம் பொருந்திய யானை முன் அணுகுதலை அக் களிப்புக் காரணமாக விலக்காமல் சென்று அந்த யானையின் வெள்ளிய கொம்பினால் குத்துண்டு சாவது; உண்ட கள்ளின் அறிதியோ-அழகுடைய அரசியே! நீ கண்டிருக்கின்றாயோ; பொய் ஆற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர்-வஞ்சகமாக ஒழுகும் ஒழுக்கத்தைப் பொருள் என்று கருதியவர்; கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ-கையறுதலுக்குக் காரணமான துன்பமாகிய கடலில் அழுந்துதலன்றி உய்ந்ததும் இவ்வுலகில் உளதாகுமோ? ஆகாது காண்; இளவேய் தோளாய்க்கு-பச்சை மூங்கில் போன்ற தோளையுடைய இராசமாதேவியாகிய உனக்கு; களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந்துயர் இது என வேண்டா-வயலில் ஏர் உழுது வாழ்வதை வெறுத்துக் களவுத் தொழிலையே ஏர்த் தொழிலாகக் கொண்டு வாழுகின்ற மாக்கள் எய்துகின்ற கடிய துன்பத்தின் தன்மையை இத்தகையது என்று யான் கூறியும் காட்ட வேண்டுமோ; மன்பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை-நிலைபெற்ற பெரிய இவ்வுலகத்தின்கண் வாழுகின் மாந்தர்களுக்கு இங்குக் கூறப்பட்ட காமம், கொலை, கள், பொய், களவு ஆகிய ஐந்தும்; துன்பம் தருவன- பெரிய துன்பங்களை உண்டாக்கும் ஆதலால்; துறத்தல் வேண்டும்-இவற்றைத் துவர விட்டொழித்தல் வேண்டும்; அங்ஙனம் ஒழியாவிடின். கற்ற கல்வி காரிகை அன்று-அவர் கற்ற கல்வியானது அவர்க்கு அழகாகாது என்றாள்; என்க.

(விளக்கம்) கடாஅயானை-மதங்கொண்ட யானை. கள் காமுற்றோர்-கள்ளை விரும்பி உண்டு களித்தோர் கள்ளுண்டு களித்தவர் அறிவு கெடுதற்கு ஒன்று காட்டுவாள் மதயானையின் முன்சென்று அதன் கொம்பால் குத்துண்டு சாதலைக் கூறினாள், பொய்யாற்று ஒழுக்கம்-பொய் கூறி அந் நெறியில் ஒழுகுதல்; கள்வேர் வாழ்க்கை-களவுத் தொழிலை உழவுத் தொழில் போல மேற்கொண்டு ஒழுகும் வாழ்க்கை. கைப்பொருள் வவ்வம் களவேர் வாழ்க்கைக் கொடியோர் என்பது பெரும்பாணாற்றுப்படை(40-45). இங்கு இவை-இங்கு எடுத்துக் காட்டப்பட்ட காமம் முதலிய ஐந்து துன்பம் தருவன ஆதலால் துறத்தல் வேண்டும் என்க. காரிகை அன்று என மாறுக.

ஞான நன்னீர்

131-139: செற்றம்...........வார்த்து

(இதன் பொருள்) மல்லன் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்-வளம் பொருந்திய பெரிய இந் நிலவுலகத்தில் வாழ்வாங்கு வாழ்பவர் என்று சொல்லத் தகுந்தவர் யாரெனின் தமதுள்ளத்தின்கண் வெகுளி தோன்றாமல் முழுதும் அடக்கியவரும் நன்மை தீமைகளை முழுவதும் ஆராய்ந்தறிந்தவரும்; அல்லன் மக்கட்கு இல்லது நிரப்புநர்-வறுமையால் அல்லல் உறும்மாக்கட்கு அவர்பால் இல்லாத பொருள்களை வழங்கி அக் குறையைத் தீர்த்து விடுபவரும் ஆவார்; திருந்து ஏர் எல்வளை-திருத்தமான அழகையும் ஒளியையும் உடைய வளையலையணிந்த கோப்பெருந்தேவியே; செல் உலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர்-இனித் தாம் செல்லுதற்குரிய மேனிலையுலகிற்கு நெறியறிந்தோர் யாரெனின் பசியினால் துன்புற்றுத் தம்பால் வந்தடைந்த வறியோருடைய ஆற்றுதற்கரிய அப் பசியைத் தீர்த்தவரே யாவர்; துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர்-பிறவித் துன்பத்தை அறுத்து உய்தற்குரிய தெளிந்த பொருளையறிந்தவர் யாரெனின்; மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார்-உயிர்களிடத்தெல்லாம் அன்பு செலுத்துதலில் ஒழியாத சான்றோர்களே யாவர்; என ஞான நன்னீர் நன்கனம் தெளித்து தேன் ஆர் ஓதி செவி முதல் வார்த்து-என்று சொல்லிமெய்யறிவாகிய நல்ல தண்ணீரை நன்றாக அவள் துன்ப நெருப்பின் மேல் தெளித்தும் வண்டுகள் பொருந்திய கூந்தலையுடைய அவ்வீராசமாதேவியின் செவியினுள்ளே வார்த்தும் என்க.

(விளக்கம்) செற்றம்-வெகுளி. அல்லல் மாக்கள்-துன்புறும் வறியவர்-செல்லுலகு-இனிச்செல்ல வேண்டிய மேனிலையுலகு. துன்பம் அறுத்தல்-பிறவித் துன்பத்தைப் போக்குதல் துணிபொருள்-தெளிந்த மெய்ப்பொருள், ஞானமாகிய நீர் என்க. தேன்-வண்டு, செவிமுதல் செவியில்.

மணிமேகலையை இராசமாதேவி தொழுதலும் அதனை மறுத்து மணிமேகலை தானே தொழுதலும்

140-147: மகன்.........வணங்கினளென்

(இதன் பொருள்) மகன் துயர் நெருப்பா மனம் விறகாக அகம் சுடு வெந்தீ ஆயிழை அவிப்ப-தன் மகனாகிய உதயகுமரன் கொலையுண்டமையா லுண்டான துன்பமே நெருப்பாகவும் தன் மனமே அந்நெருப்புப் பற்றி எரியும் விறகாகவும் இராசமாதேவியின் உள்ளுள்ளே சுட்டெரிக்கின்ற வெவ்விய அத் துன்பநெருப்பினை மணிமேகலை அவித்துவிடுதலாலே இராசமாதேவி; தேறுபடு சில் நீர் போல தெளிந்து மாறுகொண்டு ஓரா மனத்தினள் ஆகி-தேற்றாங் கொட்டை தீற்றப்பட்ட கலத்தின்கண் உள்ள சிறிய நீர் தெளிவது போலத் தெளிவடைந்து மணிமேகலையைப் பகைமைக்குணம் கொண்டு ஆராயாத அன்புடைய மனத்தையுடையவளாய்; ஆங்கு அவள் தொழுதலும் ஆயிழை பொறாஅள் தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை-அப்பொழுது அவ்விராசமாதேவி மணிமேகலையைக் கைகூப்பித் தொழா நிற்றலும் அது கண்ட மணிமேகலை மனம் பொறாளாய்த் தானே கை கூப்பித் தொழுது நின்று பாராட்டிக் கோப்பெருந்தேவியே நீ என்னைத் தொழுவது தகுதியன்று ஏனெனில்; காதலன் பயந்தோய் அன்றியும் காவலன் மாபெரும் தேவி என்று எதிர் வணங்கினள்-நீ என் கணவனை ஈன்ற தாய் அல்லையோ அல்லாமலும் எல்லா மக்களாலும் தொழத்தகுந்த கோப்பெருந்தேவியும் ஆவாய் ஆதலின் என்று சொல்லித் தொழுகின்ற அரசியின் முன்னர்த் தலை வணங்கி நின்றாள் என்பதாம்.

(விளக்கம்) மகன் இறந்தமையால் உண்டான துன்பம் என்க. அகம் உள்ளிடம் ஆயிழை: மணிமேகலை. தேறு-தேற்றாங்கொட்டை. கலத்தின் நீர் என்பதுபடச் சின்னீர் என்றார். மாறு-பகைமை காதலன் என்றது உதயகுமரனை.

இனி, இதனை மூதாட்டி அருளால் சென்றெய்தி தொழுது முன்னின்று வாழ்த்தி, மன்னவன்றன் முன் துன்பங்கொள்ளேல் என்று போயபின் அஞ்சிலோதி கரந்து அடக்கிக் கொண்டு மறைத்து, மணிமேகலையை வஞ்சஞ் செய்குவல் என்று ஒருநாள் அரசனுக்கு சிறைதக்கதன்று என தீர்க்க என்று இறைசொல், குழலாள் அவளைக் கூஉய்ப் புக்கு, செய்குவல், என்று ஊட்ட அறிவினளாக; கொடுப்ப அணைதலும், இருப்ப, போயபின், அடைப்ப, இருப்ப, அவள் தொழ, மணிமேகலை ஒழிவின்றுரைத்து மற்றும் உரை செய்யும்: அங்ஙனமுரை செய்பவள் அவிப்ப, அவள் தொழுதலும், ஆயிழை பொறாஅளாய், மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினளென இயைத்துக் கொள்க.

சிறைவிடுகாதை முற்றிற்று.


Offline Anu

Re: மணிமேகலை
« Reply #24 on: February 28, 2012, 10:05:36 AM »
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை

(மணிமேகலை மாநகரொழித்து ஆபுத்திரனாடடைந்த பாட்டு)

அஃதாவது மணிமேகலை சிறைவீடு பெற்றபின் அறவண வடிகளை வணங்கி இராசமாதேவியும் சித்திராபதியும் ஆகிய இருவரையும் நோக்கி அறவணவடிகளார் அறமொழியை மறவாது கடைப்பிடித்து ஒழுகி உய்யுமின் என்று கூறி இப் பூம்புகார் நகரத்தில் யான் இருப்பேனாயின் என்னைக் கண்டோர் இவளே மன்னவன் மகனுக்குக் கூற்றுவனாயினாள் என்று பழிப்பர்; யான் அமுத சுரபியைப் பெற்றவனாகிய ஆபுத்திரன் மாறிப் பிறந்திருக்கின்ற சாவகநாட்டிற்குச் செல்ல வேண்டும். பின்னர் மாசு இல் மணிபல்லவமும் தொழுது ஏத்தல் வேண்டும். பின்னர் வஞ்சி நகரத்தில் புகுந்து ஆங்குக் கோயில் கொண்டிருக்கின்ற கற்புடைத் தெய்வமாகிய என் அன்னை கண்ணகித் தெய்வத்தையும் கண்டடி தொழுதல் வேண்டும் என்று அவர்க்கெல்லாம் அறிவித்துவிட்டு யான் யாங்குச் சென்றாலும் எனக்கு இடர் வருமென்று நீவிர் வருந்துதல் வேண்டா; யான் யாங்கணும் சென்று நல்லறம் செய்குவல் என்று எல்லாரையும் வணங்கி விட்டு உலக அறவியில் சென்று சம்பாபதியையும் கந்திற் பாவையையும் கைதொழுது வலங்கொண்டு இரவின்கண் வரன்வழியே பறந்து சென்று ஆபுத்திரன் நாட்டினை அடைந்த செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இனி இதன்கண்-சித்திராபதி மணிமேகலையைச் சிறை வீடு செய்து தன்மாளிகைக்கு அழைத்துக் கொண்டுபோக முயலுதலும் இராசமாதேவி

கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவுமென்று றுரவோர் துறந்தவை

இத்தகைய தீவினைகளை எல்லாம் மேற்கொண்டிருக்கின்ற உன்னோடு அவற்றையெல்லாம் துறந்து தூய வாழ்க்கை மேற்கொண்டிருக்கின்ற மணிமேகலை உன் மனைக்கு இனி வருவாளல்லள் என்னோடு அரண்மனையிலேயே எஞ்ஞான்றும் இருப்பாலாக என்று கூறிச் சித்திராபதியின் வேண்டுகோளை மறுத்தலும்; அச் செவ்வியில் மாதவி மணிமேகலையைச் சிறை மீட்டற் பொருட்டு அரண்மனைக்கு அறவணரை யழைத்துக் கொண்டு வருதலும் அரசி அடிகளாரைக் கண்டவுடன் எழுந்து வணங்குதலும் அறவணவடிகளார் அரசிக்கு அறம் கூறுதலும் பிறவும் கூறப் பட்டிருக்கின்றன.

மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த
தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன்
விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது
நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி
மாதவி மகள் தனை வான் சிறை நீக்கக்
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு
அரவு ஏர் அல்குல் அருந் தவ மடவார்
உரவோற்கு அளித்த ஒருபத்து ஒருவரும்
ஆயிரம்கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள
மா இரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும்  24-010

ஆங்கு அவன் புதல்வனோடு அருந் தவன் முனிந்த
ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும்
திருக் கிளர் மணி முடித் தேவர் கோன் தன் முன்
உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும்
ஒன்று கடை நின்ற ஆறு இருபதின்மர் இத்
தோன்று படு மா நகர்த் தோன்றிய நாள் முதல்
யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர்
மாபெருந்தேவி! மாதர் யாரினும்
பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்  24-020

பரந்து படு மனைதொறும் பாத்திரம் ஏந்தி
அரங்கக் கூத்தி சென்று ஐயம் கொண்டதும்
நகுதல் அல்லது நாடகக் கணிகையர்
தகுதி என்னார் தன்மை அன்மையின்
மன்னவன் மகனே அன்றியும் மாதரால்
இந் நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்!
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடுங் கோட்டு
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல்
கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற  24-030

பூ நாறு சோலை யாரும் இல் ஒரு சிறை
தானே தமியள் ஒருத்தி தோன்ற
இன்னள் ஆர்கொல் ஈங்கு இவள்? என்று
மன்னவன் அறியான் மயக்கம் எய்தாக்
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்
உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும்
உற்று உணர் உடம்பினும் வெற்றிச் சிலைக் காமன்
மயிலையும் செயலையும் மாவும் குவளையும்
பயில் இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த
மலர் வாய் அம்பின் வாசம் கமழப்   24-040

பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப
ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள்
பொரு அறு பூங்கொடி போயின அந் நாள்
யாங்கு ஒளித்தனள் அவ் இளங்கொடி! என்றே
வேந்தரை அட்டோன் மெல் இயல் தேர்வுழி
நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள்
அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள்?  24-050

சொல்லுமின் என்று தொழ அவன் உரைப்பான்
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னைப்
பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய்
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன்
வாகை வேலோன் வளைவணன் தேவி
வாசமயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அந் நாள்
இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய
கருவொடு வரும் எனக் கணி எடுத்து உரைத்தனன்
ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது  24-060

பூங்கொடி வாராள் புலம்பல்! இது கேள்
தீவகச் சாந்தி செய்யா நாள் உன்
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம்
மணிமேகலை தன் வாய்மொழியால் அது
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின்
ஆங்குப் பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும்
வேந்தரை அட்டோய்! மெய் எனக் கொண்டு இக்
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்
வாசவன் விழாக் கோள் மறவேல் என்று
மாதவன் போயின அந் நாள் தொட்டும் இக்  24-070

காவல் மா நகர் கலக்கு ஒழியாதால்
தன் பெயர் மடந்தை துயருறுமாயின்
மன் பெருந் தெய்வம் வருதலும் உண்டு என
அஞ்சினேன் அரசன் தேவி! என்று ஏத்தி
நல் மனம் பிறந்த நாடகக் கணிகையை
என் மனைத் தருக என இராசமாதேவி
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை
புலைமை என்று அஞ்சிப் போந்த பூங்கொடி  24-080

நின்னொடு போந்து நின் மனைப் புகுதாள்
என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி
மணிமேகலை திறம் மாதவி கேட்டு
துணி கயம் துகள் படத் துளங்கிய அதுபோல்
தௌயாச் சிந்தையள் சுதமதிக்கு உரைத்து
வளி எறி கொம்பின் வருந்தி மெய்ந் நடுங்கி
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர் தம்முடன்
மற வேல் மன்னவன் தேவி தன்பால் வரத்
தேவியும் ஆயமும் சித்திராபதியும்
மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்  24-090

எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளைக் கையால்
தொழும்தகை மாதவன் துணை அடி வணங்க
அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும்
இணை வளை நல்லாள் இராசமாதேவி
அருந் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி
திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்த பின்
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என்
காண்தகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது
நாத் தொலைவு இல்லைஆயினும் தளர்ந்து
மூத்த இவ் யாக்கை வாழ்க பல்லாண்டு! என  24-100
தேவி கேளாய்! செய் தவ யாக்கையின்
மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன்
பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே இது கேள்
பேதைமை செய்கை உணர்வே அருஉரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப் பயன்
இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும்
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர்
அறியாராயின் ஆழ் நரகு அறிகுவர்  24-110

பேதைமை என்பது யாது? என வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோடு உண்டு எனக் கேட்டது தௌிதல்
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம்
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்று இரு வகையான்
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி  24-120

வினைப் பயன் விளையும்காலை உயிர்கட்கு
மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும்
தீவினை என்பது யாது? என வினவின்
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ முன்றும்
பொய்யே குறளை கடுஞ் சொல் பயன் இல்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப்  24-130

பத்து வகையால் பயன் தெரி புலவர்
இத் திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்
நல்வினை என்பது யாது? என வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
சீலம் தாங்கித்தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப் பயன் உண்குவர்  24-140

அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர்!
புரை தீர் நல் அறம் போற்றிக் கேண்மின்
மறு பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ!
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு
இத் திறம் பலவும் இவற்றின் பகுதியும்
முத்து ஏர் நகையாய்! முன்னுறக் கூறுவல்
என்று அவன் எழுதலும் இளங்கொடி எழுந்து
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி
தேவியும் ஆயமும் சித்திராபதியும்
மாதவர் நல் மொழி மறவாது உய்ம்மின்  24-150

இந் நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின்
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர்
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள்
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி
வஞ்சியுள் புக்கு மா பத்தினி தனக்கு
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல்
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா
மனக்கு இனியீர்! என்று அவரையும் வணங்கி
வெந்துறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த
அந்தி மாலை ஆய் இழை போகி   24-160

உலக அறவியும் முதியாள் குடிகையும்
இலகு ஒளிக் கந்தமும் ஏத்தி வலம் கொண்டு
அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆய் இழை
இந்திரன் மருமான் இரும் பதிப் புறத்து ஓர்
பூம்பொழில் அகவயின் இழிந்து பொறையுயிர்த்து
ஆங்கு வாழ் மாதவன் அடி இணை வணங்கி
இந் நகர்ப் பேர் யாது? இந் நகர் ஆளும்
மன்னவன் யார்? என மாதவன் கூறும்
நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன்
பூமிசந்திரன் மகன் புண்ணியராசன்   24-170

ஈங்கு இவன் பிறந்த அந் நாள் தொட்டும்
ஓங்கு உயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என
தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன்
அகை மலர்ப் பூம்பொழில் அருந் தவன் தான் என்  24-176

உரை

(சித்திராபதி மணிமேகலையைச் சிறைமீட்டுத் தன் இல்லதிற்கு அழைத்துப்போக முயலுதல்)

1-10: மன்னன்..........ஐவரும்

(இதன் பொருள்) மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த தொல்முது கணிகைதன் சூழ்ச்சியில் பேரயவன்-அரசிளங் குமரனாகிய உதயகுமரனை வஞ்சித்து மணிமேகலையோடு கூட்டுதற்குப் பெரிதும் முதுமை எய்திய நாடகக் கணிகையாகிய சித்திராபதி செய்த சூழ்ச்சியினாலே மணிமேகலையைக் கைபற்றி வருவல் என்று துணிந்துபோன உதயகுமரன் அம்பலத்தின்கண்; விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி விச்சாதரன் வாளினால் ஏறுண்டு இறந்தான் என்னும் செய்தியைச் சித்திராபதி தன் உள்ளம் நடுக்கம் எய்தும்படி கேள்வியுற்று உடல் மெலிந்து வருந்தி; மாதவி மகள்தனை வான்சிறை நீக்க-மாதவி மகளாகிய மணிமேகலையைப் பெரிய சிறையினின்றும் நீக்கித் தன் இல்லத்திற்கு அழைத்துப்போகக் கருதி அரண்மனையில் உவளகத்திற்குச் சென்று; காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு-இராசமாதேவியின் திருவடியிலே வீழ்ந்தபடியே கிடந்து அரசிக்குக் கூறுபவள் தேவியே கேள் பண்டொரு காலத்தே; அரவு ஏர் அல்குல் அருந்தவ மடவார்-பாம்பின் படம் போன்ற அல்குலையும் அரியதவத்தையுமுடைய தேவகணிகையராகிய மகளிர்; உரவோற்களித்த ஒருபத்தொருவரும-இந்திரனுக்கு வழங்கிய பதினொருவரும்; ஆயிரம் கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள-தேவேந்திரன் முன்னிலையிலே கூத்தாடுங்கால் அபிநயம் பிழைக்க ஆடினமையால்; மாயிருஞாலத்துத் தோன்றிய ஐவரும்-சாபமேற்று நிலவுலகத்திலே வந்து தோன்றிய ஐந்து மகளிரும். என்க.

(விளக்கம்) மன்ன குமரன்: உதயகுமரன் புணர்ந்த-கூட்ட தொன்முது கணிகை என்றது சித்திராபதியை தான் செய்த சூழ்ச்சியினால் என்க. போயவன் என்றது மணிமேகலையைக் கைப்பற்றி வருவேன் என்று போன உதயகுமரனை. சித்திராபதி செய்த சூழ்ச்சியையும் அச் சூழ்ச்சியால் உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து விரைபரித் தேர்மேல் சென்று ஏறி அம்பலம் புகுந்த செய்தியையும்(18) உதயகுமரன் அம்பலம் புக்ககாதையில் காண்க. அரவேர் அல்குல் அருந்தவ மடவார் என்றது தேவகணிகையரை ஒருபத்தொருவர்-பதினொருவர். ஆயிரம் கண்ணோன்: இந்திரன்.

இதுவுமது

11-18: ஆங்கவன்..........யாரினும்

(இதன் பொருள்) ஆங்கு அவன் புதல்வன் ஒரு அருந்தவன் முனிந்த ஓங்கிய சிறப்பின் ஒரு நூற்று நால்வரும்-அவ்விந்திரனுடைய மகனாகிய சயந்தனோடு அரிய தவத்தையுடைய அகத்தியனால் வெகுண்டு சபிக்கப்பட்ட உயர்ந்த கலைச்சிறப்பினையுடைய நூற்று நான்கு மகளிரும்; திருக்கிளர் மணிமுடி தேவர் கோன் தன் முன்-அழகு திகழ்கின்ற மணிமுடியையடைய இந்திரன் முன்னிலையிலே; முனிந்த உருப்பசி என் குலத்து ஒருத்தியும்-சாபம் பெற்ற ஊர்வசியாகிய என் குலத்தில் தோன்றிய ஒருத்தியும் ஆக; ஒன்று கடைநின்ற ஆறு இருபதின்மர்-நூற்றிருபத்தொருவர் ஆகிய தேவ கணிகைமகளிர்; தொன்றுபடு இ மகளிர் தோன்றிய நாள்முதல்-படைப்புக்காலத்திலேயே தோன்றிய பழைமையையுடைய இப் பூம்புகார் நகரத்தில் வந்து பிறந்த நாள்முதல்; மாபெரும் தேவி மாதர் யாரினும் யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர்-அத் தேவ கணிகையர் மரபிலே வழிவழியாகத் தோன்றி வருகின்ற நாடகக் கணிகை மகளிருள் வைத்து யான் எய்தும் துன்பம் வேறு எந்த மகளிரும் எய்தினார் இல்லை என்றாள்; என்க;

(விளக்கம்) வீழ்ந்தாங்கு-வீழ்ந்தபடியேகிடந்து. இங்குக் கூறப்பட்ட கணிகை மகளிர் வானுலகத்தினின்றும் காவிரிப்பூம் பட்டினத்திலே வந்து பிறந்து சிறப்புற்ற நாடகக்கணிகையராவர். ஈண்டுச் சித்திராபதி இந்நிலவுலகத்துக் கணிகையர் குலத்திலும் சிறந்தது தன்குலம் என்று சொல்லிக்கொள்கின்றனள். ஊர்வசி சாபமேற்று நிலவுலகில் பிறந்து மாதவி யென்னும் பெயரோடிருந்தாள் எனவும் அவள் பெயரையே அவள் மரபில் பிறந்த சித்திராபதி தன்மகளுக்கும் சூட்டினள் எனவும் வரும் வரலாறு சிலப்பதிகாரத்தில் அரங்கேற்ற காதையினும் கடலாடு காதையினும் காணப்படுகின்றன.

சித்தராபதி இராச மாதேவியை அச்சுறுத்துதல்

19-26: பூவிலே.........உண்டால்

(இதன் பொருள்) பூவிலே ஈத்தவன் பொன்றினன் என்று மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்-அற்றைப் பரிசம் அளித்த கோவலன் இந்தனன் என்று கேள்வியுற்ற என்மகள் மாதவி அத் துன்பம் பொறாமல் பெரிய தவத்தோருறைகின்ற பவுத்தப் பள்ளியுள் எய்தியதும்; பரந்துபடு மனைதொறும் பாத்திரம் ஏந்தி அரங்கக் கூத்தி சென்று ஐயங் கொண்டதும்-பரந்து கிடக்கின்ற இல்லந்தோறும் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு ஆடங்கத்தின்கண் ஏறிக் கூத்தாடுகின்ற குலத்தில் பிறந்தும், மணிமேகலை சென்று பிச்சையேற்பதும் ஆகிய இவற்றைக்கண்ட; நாடகக் கணிகையர் நகுதல் அல்லது தன்மை அன்மையின் தகுதி என்னார்-எம்மோரனைய நாடகக் கணிகையர் இகழ்ந்து சிரிப்பதன்றி இச் செயல்கள் எங்குலத்திற்கு இயல்பல்லாமையால் தகுதி என்று கூறுவாரல்லர் அன்றியும்; மாதரால் மன்னவன் மகனே அன்றியும் இந்நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்-கோப்பெருந்தேவியே! இம் மணிமேகலை காரணமாக நங்கோமகன் கொலையுண்ட துன்பம் அல்லாமலும் இப்பெரிய நகரில் வாழ்வார் அனைவர்க்கும் வரவிருக்கின்ற துன்பமும் ஒன்று உளது என்றாள்; என்க.

(விளக்கம்) பூவிலே-அற்றைப் பரிசம்; பூ இடக்கரடக்கு. பூவிலையீத் தவன்-கோவலன் என்க. பொன்றினன்-இறந்தான்: மாதவர்-அறவணவடிகளாருமாம். அரங்கக்கூத்தி: மணிமேகலை ஐயம்-பிச்சை தன்மை-இயல்பு. இவ்விரண்டும் சித்திராபதி யாவரும் படாத துன்பப்பட்டேன் என்பதற்கு ஏதுக்கூறியபடியாம். மேலே அரசி அஞ்சி மணிமேகலையைத் தன் பால் விடுத்தற்கு அரசியைச் சித்திராபதி அச்சுறுத்துகின்றாள். மணிமேகலையால் இந் நகரத்திற்கே பெருந்துன்பம் நிகழ்தல் கூடும் என்று தொடங்கி அதற்கு எடுத்துக்காட்டாக நெடுமுடிக்கிள்ளி வரலாறு ஒன்று கூறுகின்றாள்.

நெடுமுடிக்கிள்ளி வரலாறு

27-34: உம்பளம்............எய்தா

(இதன் பொருள்) உம்பளம் தழீஇய உயர் மணல் நெடுங்கோட்டு பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல்-உபபளத்தைத் தழுவிக்கிடந்த உயர்ந்த மணலால் இயன்ற கரையிடத்தே கடலினின்றும் வருகின்ற பெரிய அலைகள் உலாவுகின்ற புன்னை மரங்கள் அடர்ந்த கடற்கரைச்சோலையின்கண்; கிளர்மணி நெடுய முடியை விரும்பி அணிவதனால் நெடுமுடிக்கிள்ளி என்று அழைக்கப்படுகின்ற சோழமன்னன் நிற்கின்ற பொழுது காலமும்; இளவேனில் இறுப்ப-இளவேனில் பருவமாக இருக்க; முன்னா அச் சோழமன்னன் முன்னிலையிலே; இறும்பூது சான்ற பூநாறு சோலை-வியக்கத்தகுந்த மணம் கமழ்கின்ற அச் சோலையிலே; யாரும் இல் ஒருசிறை தானே தமியள் ஒருத்தி தோன்ற-பிறர் யாருமில்லாத துணையின்றித் தனியாக ஒரு மங்கை வந்து தோன்றாநிற்ப; ஈங்கு இவள் இன்னள் என்று யார் என்று மன்னவன் அறியான் மயக்கம் எய்தா-ஈங்குத் தோன்றிய இவள் இன்னாள் என்றாதல் யார் என்றாதல் அவ்வரசன் அறியாதவனாய் அவள் அழகினால் மயக்கம் எய்தி; என்க.

(விளக்கம்) உம்பளம்-உப்பளம்: விகாரம்.கோடு-கரை நெடு முடிக்கிள்ளி-ஒரு சோழ மன்னன் இறும்பூது-வியப்பு ஒருசிறை-ஓரிடம் தமியள்-தனியன்: இன்னள் என்று யார் கொல் என்று அறியான் என்க. அறியானாகவும் அவள் அழகில் மயக்கமெய்தி என்க.

இதுவுமது

35-45: கண்ட...........தேர்வுழி

(இதன் பொருள்) கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் உற்று உணர் உடம்பினும்-அங்ஙனம் மயங்கிய மன்னன் அவளைக் கண்ட கண்ணினும் அவள் இன்சொல்லைக் கேட்ட செவியினும் எயிற்றின் ஊறிய நீரைப் பருகிய வாயிடத்தும் மோந்த மூக்கினும் தீண்டி உணர்ந்த உடம்பிடத்தும்: வெற்றிச்சிலைக் காமன்-வெற்றியையுடைய கருப்பு வில்லையுடைய காமவேள் எய்த; மயிலையும் செயலையும் மாவும் குவளையும் பயில் இதழ் கமலமும் பருவத்து அலர்ந்த மலர்வாய் அம்பின் வாசம் கமழ-மல்லிகையும் அசோகும் மாவும் குவளையும் செறிந்த இதழையுடைய தாமரையும் ஆகிய இவற்றின் பருவத்திலே விரிந்த மலராகிய தனக்கு வாய்ந்த அம்புகளின் நறுமணம் கமழாநிற்க அவளொடு புணர்ந்து; பலர் புறம் கண்டோன்-பகைவர் பலரையும் போர்களத்திலே வென்று புறங்கண்டவனாகிய அம் மன்னவன்; பணிந்து தொழில் கேட்ப அம் மடந்தையைப் பணிந்து நாள்தோறும் அவள் ஏவிய தொழில்களை எல்லாம் செய்ய; ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள்-இவ்வாறே ஒரு திங்கள் முடியுந்துணையும் அவளோடிருந்து தான் இன்பமாகக் காலங் கழித்திருந்தாலும் தான் இன்னள் என்று அரசனுக்குக் கூறாதவளாய்; பொருவரு பூங்கொடி போயின் அந்நாள்-ஒப்பற்ற மலர்க்கொடி போலும் அம் மடந்தை அரசனைக் கைவிட்டு அவன் அறியாவண்ணம் போய்விட்ட அந்த நாளிலே; வேந்தரை அட்டோன்-பகை மன்னர்களை எல்லாம் கொன்று நூழிலாட்டிய அவ்வரசன் பெரிதும் ஆற்றாமையுடையவனாய்; அவ்விளங்கொடி யாங்கு ஒளித்தனள் என்றே-இளமையுடைய காமவல்லி போன்ற அவ்வழகி எங்குப்போய் ஒளித்தாளோ என்று மனம் மறுகி மெல்லியல் தேர்வுழி-மெல்லியலாகிய அந் நங்கையைத் தேடியலை இன்ற காலத்தே; என்க.

(விளக்கம்) அந் நங்கையுடைய திருமேனியைக் கண்ணால் கண்டு சுவைத்தும் இன்மொழியைக் கேட்டுச் சுவைத்தும் வாலெயிறூறிய நீரைப் பருகிச் சுவைத்தும் திருமேனியைத் தீண்டியும் கூந்தலை மோந்து சுவைத்தும் உணர்ந்தவரசன் ஆராமையோடு சுவைத்தான் என்பார் அதற்கு ஏதுவாகக் காமவேள் கண் முதலிய அவன் ஐம்பொறிகளிடத்தும் மயிலை முதலிய ஐந்து மலர் அம்புகளையும் இடையறாது எய்தான் என்பது தோன்ற அவற்றின் வாசம் அவன் பொறிகளில் கமழ என்றார். ஒருமதி-ஒரு திங்கள்; (அஃதாவது முப்பது நாள்) அந் நாள்களிலே தன்னை யாரென்று அரசனுக்கு அறிவியாமலே இருந்து, போகும் பொழுதும் அவன் அறியாவண்ணம் போயினள் என்றவாறு. ஈண்டு

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்டொடி கண்ணே உள   (குறள்-1101)

என வரும் திருக்குறளை நினைக. பலர் புறங்கண்டோன் ஈண்டு ஒரு மகளுக்குப் பணிந்து தொழில் கேட்ப என்ற நயமுணர்க இக்கருத்தோடு

ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரு முட்குமென் பீடு   (குறள், 1088)

என வரும் திருக்குறளையும் நோக்குக.

கிள்ளியின் முன்னர் ஒரு சாரணன் தோன்றுதல்

46-57: நிலத்தில்...............அந்நாள்

(இதன் பொருள்) நிலத்தில் குளித்து நெடுவிசும்பு ஏறி சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற-அவ்வரசன் முன்னர் நீரில் முழுகுமாறு போல நிலத்தின்கண் முழுகியும் நெடிய வானத்திலே ஏறியும் நிலத்தில் மேல் நடப்பது போல நீரின் மேல் நடந்தும் திரிகின்ற இருத்திகள் பலவும் கைவந்த ஓரு சாரணன் தோன்றா நிற்ப; மன்னவன் அவனை வணங்கி முன் நின்று-அரசன் அவனை வணங்கி அவன் முன்னிலையிலே நின்று; அடிகள் என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் அன்னாள் ஒருத்தியை கண்டிரோ சொல்லுமின் என்று தொழ-அடிகளே என்னுடைய ஆருயிர்க்காதலி இங்கு யான் அறியாவண்ணம் ஒளித்திருக்கின்றாள் அத்தகையாள் ஒரு நங்கையை இருத்தி பலவும் வல்ல தாங்கள் கண்டிருப்பீரோ கண்டிருப்பீராயின் எனக்குச் சொல்லியருள வெண்டும் என்று கைகுவித்துத் தொழா நிற்ப; அவன் உரைப்பான்-அச் சாரணன் சொல்லுவான்; பார்த்திப கேளாய் கண்டிலேனாயினும் காரிகை தன்னை பண்டு அறிவுடையேன்-அரசனே கேள் அவளை இப்பொழுது யான் கண்டிலேன் ஆனாலும் அவ்வழகியை யான் பண்டைக் காலத்தே அறிந்ததுண்டு அவள் யாரெனின்; நாகநாடு நடுக்கு இன்று ஆள்பவன் வாகை வேலோன் வளைவணன் தேவி-நாக நாட்டைக் குடிகள் துன்புறாத படி செங்கோல் செலுத்துபவனும் பகைவரை வென்று வாகை சூடுதற்கியன்ற வேலை ஏந்தியவனும் ஆகிய வளைவணன் என்னும் அரசனுடைய பட்டத்துத் தேவியாகிய; வாசமயிலை வயிற்றுள் தோன்றிய பீலிவளை என்போள் பிறந்த அந் நாள்-வாசமயிலை என்னும் பெயரையுடைய அரசியினது வயிற்றில் பிறந்த பீலிவளை என்னும் நங்கையையே நீ இப்பொழுது தேடுகின்றனை அவள் பிறந்த அந்த நாளிலே; என்க.

(விளக்கம்) நீரில் குளிப்பது போல நிலத்தில் குளிப்பதும் விசும்பில் ஏறுவதும் நீரின் மேல் நடப்பதும் சித்தி பெற்ற முனிவர் செயலாகும்; சித்தியைப் பவுத்தர்கள் இருத்தி என்பர். மன்னவன்: நெடுமுடிக் கிள்ளி. ஒளித்தாள்: முற்றெச்சம். அவன் உரைப்பான்-அச் சாரணன் சொல்லுவான்; இப்பொழுது கண்டிலேன் ஆயினும் என்க. காரிகை சுட்டுப் பொருட்டு. நடுக்கின்று: குற்றியலிகரம் உகரமாயிற்று. வளைவணன்:பெயர் வாசமயிலை: பெயர் பீலிவளை: பெயர்; இதனை யான் என் இருத்தியால் உணர்ந்துரைக்கின்றேன் என்பது குறிப்பு.

சாரணன் கூற்று

58-63: இரவி............புகூஉம்

(இதன் பொருள்) கணி இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய கருவொடு வரும் என எடுத்து உரைத்தனன்-அரசனே அந் நாகநாட் டரசனுடைய கணிவன் அவனுக்கு வேந்தே நின் மகள் தன்னுடைய பெதும்பைப் பருவத்திலே கதிரவன் குலத்தில் தோன்றிய ஒரு மன்னவன் தன் இணையாகிய முலையில் தோய்தலால் அம் மன்னவனுக்கு வயிற்றில் கருவுண்டாகி மீண்டும் நின்பால் வருவாள் என்று அவளுடைய எதிர்கால நிகழ்ச்சியை எடுத்துக் கூறினன். அவன் கூறியாங்கே அவள் வயிறு வாய்க்கப் பெற்று இப்பொழுது நாக நாடு சென்று விட்டாள்; ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது பூங்கொடி வாராள் புலம்பல் இது கேள்-அவ்வாறு நினக்குக் கருவாகிய அம் மகன் நின்பால் வந்து சேர்வானல்லது நின்னால் தேடப் படுகின்ற மலர்க்கொடி போலும் மெல்லியளாகிய அப் பீலிவளை மீண்டும் இங்கு வருவாள் அல்லள் ஆதலின் நீ வருந்தாதே கொள் அரசே இன்னும் ஒன்று கேள்; தீவகச் சாந்தி செய்யா நாள் உன் காவல் மாநகர் கடல் வயிறு புகூஉம்-இத் தீவகத்திற்குச் சாந்தியாகிய இந்திர விழா செய்யாதொழிந்த நாளிலே உன்னுடைய தலைநகரமாகிய காவலையுடைய பெரிய இப் பூம்புகார் நகரம் கடல் கோட்படும்; என்றான் என்க.

(விளக்கம்) இரவி குலத்தொருவன் என்றது கதிரவன் குலத்து மன்னவராகிய சோழ மன்னருள் ஒருவன் என்றவாறு கருவொடு வரும் வயிற்றில் கருவுண்டாகி வருவாள் கணி-காலக்கணிவன்; நிமித்திகன் ஆங்கு-அவ்வாறு. அப்புதல்வன்-நினக்குப் பிறந்த மகன், பூங்கொடி: பீலிவளை. புலம்பல்: எதிர்மறை வியங்கோள். வருந்தாதே கொள் என்றவாறு தீவகச்சாந்தி-இந்திர விழா. உன் காவலையுடைய மாநகருமாம் கடல் வயிறு புகுதல்-கடல் கோட்பட்டு மறைதல்

சித்திராபதி தன் அச்சம் இஃதெனல்

64-74: மணிமே............ஏத்தி

(இதன் பொருள்) அது மணிமேகலை தன் வாய்மொழி-அவ்வாறு இந்திர விழாச் செய்யாத நாளில் இந் நகரம் கடல் வயிறு புகுதல் வேண்டுமென்பது மணிமேகலா தெய்வத்தின் தப்பாத சாப மொழியாகும்; இந்திர சாபம் உண்டாகலின் தணியாது அங்ஙமேயாகுக என்று இந்திரனிட்ட சாபமும் உண்டாதலால் அது நிகழாதொழியாது; ஆங்கு பதி அழிதலும்-அவ்வாறு இந் நகரம் கடல் கோட்பட் டழிதலும் அழிந்த வழி; ஈங்குப் பதி கெடுதலும்-இங்கே அரசு கேடெய்துதலும்; வேந்தரை அடடோய்-பகை வேந்தனைக் கொன்றழித்தவனே; மெய்யெனக் கொண்டு -வாய்மையாக ;நிகழ்ந்துவிடும் என்று உள்ளத்தில் திட்பமாகக் கொண்டு; இக் காசு இல் மாநகர் கடல் வயிறு புகாமல் வாசவன் விழாக்கோள் மறவேல் என்று-இக் குற்றமற்ற பெரிய நகரம் கடலில் வீழ்ந்து அழிந்து போகாமைப் பொருட்டு நீ இந்திர விழாச் செய்தலை மறந்தொழியாதே கொள் என்று சொல்லி அறிவுறுத்தி; மாதவன் போயின அந் நாள் தொட்டும் இக் காவல் மாநகர் கலக்கு ஒழியாதால்-அச் சாரணன் போன அந்த நாளிலிருந்து இந்தக் காவலமைந்த பெரிய நகரத்தில் வாழுகின்ற மாந்தரெல்லாம் எப்பொழுதேனும் அந் நிகழ்ச்சி விடுமோ என்றஞ்சி நெஞ்சு கலங்குதல் ஒழிந்திலர்; மன் பெரும் தெய்வம் தன் பெயர் மடந்தை துயர் உறுமாயின் வருதலும் உண்டு என-எஞ்ஞான்றும் நிலையுதலுடைய பேராற்றலுடைய அம் மணிமேகலா தெய்வம் தன்னால் நிலை நிறுத்தப் பெற்ற குடியிற் பிறந்து அக் காரணத்தால் தன் பெயரையே கொண்டுள்ள இம் மணிமேகலை சிறையிடைக் கிடந்து துன்புறுவாளானால் சினம் கொண்டு அவளைப் பாதுகாத்துற் பொருட்டு இந் நகரத்திற்கு வருதலும் கூடும் என்று நினைத்து; அரசன் தேவி அஞ்சினேன் என்று ஏத்தி-அங்ஙனம் அத் தெய்வம் வந்தக் கால் கோப்பெருந்தேவியே இந் நகரத்திற்கு இன்னும் எத்தகைய கேடு சூழுமோ என்று அடிச்சி பெரிதும் அஞ்சிக் கிடக்கின்றேன் என்று சொல்லிப் பின்னும் அரசியைத் தொழுது வாழ்த்தி; என்க.

(விளக்கம்) அது-கடல் வயிறு புகுவது. இந்திர சாபமும் உண்டாகலின் எனல் வேண்டிய எச்சவும்மை தொக்கது செய்யுள் விகாரம். ஆங்குப் பதி-அவ்வாறு இந் நகரம் என்க. ஈங்குப்பதி-ஈங்கு நிலை பெற்றிருக்கின்ற அரசு-காசு-குற்றம். வாசவன்-இந்திரன். மாதவன்-சாரணன். மாநகர்-நகர்வாழ் மாந்தர்: ஆகுபெயர் கலக்கு-கலங்குதல் தன் பெயர் மடந்தை-மணிமேகலை தெய்வம்-மணிமேகலா தெய்வம் முன்னர்க் கடிய சாபமிட்ட அத் தெய்வம் சினந்து வருமானால் இன்னும் பெரிய கேடு சூழ்ந்து விடக்கூடும் என்று யான் அஞ்சுகின்றேன், என்று மணிமேகலையைச் சிறைவீடு செய்யக்கருதிச் சித்திராபதி அரசியை அச்சுறுத்துதலும் அத் தெய்வம் எங்கும் போய் விடவில்லை அது பேராற்றலுடையது என்பாள் மன்பெரும் தெய்வம் என்பதும், அத் தெய்வம் வருதலுக்கு ஏதுகாட்டுவாள் தன் பெயர் மடந்தை துயருறுமாயின் வருதலும் உண்டு என்பதும் பெரிதும் நுணுக்கமுடையன ஆதல் உணர்க. இங்ஙனம் அச்சுறுத்தற்கே மணிமேகலை சாபமிட்டிருக்கின்ற செய்தியை வலிந்து ஈங்கு அரசிக்குக் கூறுதலும் நினையுமிடத்தே கம்பருடைய கொடு மனக் கூனியும் நம்மகத்தே வந்து தோன்றுகின்றனள்.

சித்திராபதி மணிமேகலையைத் தன்பால் தருக எனலும் அரசி மறுத்துரைத்தலும்

75-82: நன்மனம்.........சொல்வுழி

(இதன் பொருள்) நன்மனம் பிறந்த நாடகக் கணிகையை என் மனைத் தருக என-இப்பொழுது தனது பட்டறிவு காரணமாக அறியாமை நீங்கி நல்லுளம் தோன்றி யிருக்கின்ற நாடகக் கணிகையை மணிமேகலையை யான் என்னில்லத்திற்கு அழைத்துப் போகும்படி தந்தருளுக என்று சொல்லி நயம்பட வேண்டிய சித்திராபதியை நோக்கி; இராசமாதேவி-அக் கோப்பெருந்தேவி கூறுபவள்-ஏடி சித்திராபதி; கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை கள்ளுண்ணலும் பொய் கூறுதலும் காமமாடுதலும் கொலை செய்தலும் உள்ளத்தின்கண் பிறர் பொருளைக் களவு செய்யக் கருதுதலும் என்னும் இத் தீவினைகள் ஐந்தும் அறிஞர்களால் விலக்கப்பட்டவையாம்; தலைமையாகக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை-இவற்றையே முதன்மையாகக் கொண்டு ஒழுகுகின்ற நின்னுடைய கடைப்பட்ட வாழ்க்கையானது; புலைமை என்று அஞ்சி போந்த பூங்கொடி-புலைத் தன்மையுடையது என்று அதனை அஞ்சி நன்னெறியிலே ஒழுகுகின்ற பூங்கொடி போல்பவளாகிய மணிமேகலை; நின்னொடு போந்த நின்மனைப் புகுதாள்-இனி நின்னோடு வந்து நின் இல்லத்திலே புகுதுதற்கு உடன்படாள் அவள்; என்னோடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல் உழி-என்னோடு இவ்வுவளகத்திலேயே இருப்பாள் என்று இங்குக் கூறியவற்றை அச்சித்திராபதிக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே என்க.

(விளக்கம்) நன்மனம் பிறந்த பட்டறிவினால் இப்பொழுது மணிமேகலைக்கு நல்லுளம் பிறந்திருக்கும் என்று கூறியபடியாம் இராசமாதேவி கள் முதலியன. உரவோர் துறந்தவை என்றது மணிமேகலை தனக்குக் கூறியவற்றைத் தன்னுளம் கொண்டு கூறியபடியாம். தலைமையில் வாழ்க்கை -கடைப்பட்ட வாழ்க்கை புலைமை கீழ்மை பூங்கொடி: மணிமேகலை.

கணிகையர் வாழ்க்கை கடையே (சிலப் 11-183)

என்பதும் காண்க.

மணிமேகலை நிலைமையைக் கேட்ட மாதவியின் செயல்

83-92: மணிமே.............வணங்க

(இதன் பொருள்) மணிமேகலை திறம் மாதவி கேட்டு துணி கயம் துகள்பட துளங்கியது போல் தெளியாச் சிந்தையள் மணிமேகலையின் நிலைமையை மாதவி கேள்வியுற்றுத் தெளிந்த குளத்தின்கண் காற்றுக் கொணர்ந்து வீசிய துகள்கள் படுதலாலே கலங்கியது போல் கலங்கித் தெளிவில்லாத நெஞ்சத்தையுடையளாய்; சுதமதிக்கு உரைத்து வளி எறி கொம்பின் வருந்தி மெய்ந் நடுங்கி-அச் செய்தியைத் தன்னுடன் இருந்த சுதமதிக்கும் சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு துன்பத்தால் சூறைக் காற்றால் தாக்குண்ட பூங்கொம்பு போலச் சுழன்று வருந்தி மெய் நடுங்கச் சென்று; அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர் தம்முடன் மறவேல் மன்னவன் தேவி தன்பால் வர-அறவணவடிகளாருடைய அடிகளிலே வீழ்ந்து வணங்கி அவ்விடத்தே தம்மோடு எழுந்த அவ்வடிகளாரோடு மூவருமாக வீர வேலையுடைய அரசனுடைய தேவியின் மாளிகைக்குச் செல்லா நிற்ப; தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்-இராசமாதேவியும் ஆயமகளிரும் அங்கிருந்த சித்திராபதியும் மணிமேகலையும் அறவணவடிகளாருடைய வரவு கண்டவுடன்; எழுந்து எதிர் சென்று இணைவளைக் கையால் தொழுந்தகை மாதவன் துணை அடி வணங்க-தத்தம் இருக்கையினின்றும் எழுந்து அவர் எதிரே சென்று இரு கைகளையும் குவித்து எல்லாராலும் தொழத்தகுந்த சிறப்புடைய பெரிய தவத்தையுடையவராகிய அவ்வறவணருடைய திருவடிகளிலே விழுந்து வணங்கா நிற்ப; என்க.

(விளக்கம்) மணிமேகலை திறம் என்றது அவள் சிறையிடப் பட்டிருத்தலை துணியகம்-தெளிந்த நீர் நிலை துகள்-தூசி. துளங்கியது-துளங்கியவது என விகாரம் எய்திற்று சுதமதியோடும் சென்று அறவணர் அடிவீழ்ந்து அவரோடு மூவருமாக என்க. ஆயம்-தோழியரும் சிலதியருமாகிய மகளிர் கூட்டம். இணைக்கை வளைக்கை எனத் தனித்தனி கூட்டுக கையால் தொழுது தொழுந்தகை மாதவன் அடி வணங்க என்க. தொழுந்தகை-எல்லாராலும் தொழத் தகுந்த சிறப்பு.

இராசமாதேவி அடிகளாரை முகமன் கூறி வாழ்த்துதல்

93-100: அறிவு.........ஆண்டென

(இதன் பொருள்) அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும் அங்ஙனம் வணங்கியவர்களை நோக்கி நுங்களுக்கெல்லாம் மெய்யறிவு உண்டாவதாக என்று அறவணடிகளார் வாழ்த்துக் கூறா நிற்ப; இணைவளை நல்லாள் இராசமாதேவி அருந்தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்தபின்-பொருந்திய வளையலையுடைய நல்லாளாகிய இராசமாதேவி அரிய தவத்தையுடைய அம் முனிவருக்குப் பொருந்திய இருக்கையைக் காட்டி அதன்கண் எழுந்தருளச் செய்து அவருடைய அடிகளில் நன்னீர் பெய்து விளக்கி ஆண்டுச் செய்யக்கடவ சிறப்பெல்லாம் செய்த பின்னர் அடிகளாரை நோக்கி முகமன் கூறுபவள்; யாண்டு பல புக்க நும் இணை அடிவருந்த என்காண் தகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது-அகவை யாண்டுகள் பல சென்ற இத்தகைய முதுமைக் காலத்திலே நுங்களுடைய இணைந்த திருவடி மலர்கள் நடையால் மெலிந்து வருந்தும்படி அடியேன் செய்த நினைத்துக் காணத் தகுந்த நல்வினையே நும்மை இவ்விடத்திற்கு அழைத்துக் கொணர்ந்திருத்தல் வேண்டும்; நாத் தொலைவு இல்லை ஆயினும் இயாக்கை தளர்ந்து மூத்தது-அடிகளுடைய அறம் கூறும் செந்நாவினது வன்மை குறைந்ததில்லை யானாலும் யாக்கை மட்டும் பெரிதும் மூத்துளது இது; பல்லாண்டு வாழ்கஎன-பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்தாநிற்ப; என்க

(விளக்கம்) ஒன்றற்கொன்று இணையாகிய வளையலையுடைய எனினுமாம். அருந்தவர்க்கு அமைந்த ஆசனம்-துறவோர் இருத்தற்கு எனச் சிறப்பாக அமைந்த இருக்கை. அவை மணை தருப்பை முதலியவை என்னை?

நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய
                            (தொல், மரபி, 71)

என வரும் தொல்காப்பியத்தானும் உணர்க. இங்ஙனமே,

அணிசெய் கோழரை யரை நீழ லழகனைப் பொருந்தி
மணிக டாம்பல கதிர்விடு மலருடை மணைமேற்
றுணிவு தோற்றினை யெனச்சிலர் துதியொடு தொழுது
பணிய யாதுமோர் பரிவிலன் படம்புதைத் திருந்தான்    (நீலகேசி: 476)

என நீலகேசியினும் வருதலுணர்க. யாண்டு-அகவை. காண்டகுநல்வினை நினைத்துப் பார்க்கத்தகுந்த நல்வினை; நா: ஆகுபெயர்; சொல்வன்மை ஈண்டு இராசமா தேவியின் முகமன் பேரின்பம் பயத்தல் உணர்க.

அறவணர் கூற்று

101-110: தேவி..........அறிகுவர்

(இதன் பொருள்) தேவி கேளாய் செய் தவ யாக்கையின் மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன்-இராசமாதேவியே முற்பிறப்பிலே செய்த நல்வினை காரணமாக இம்மையினும் செய்தற்கியன்ற அத் தவத்திற்குப் பொருந்திய நல்லதொரு யாக்கையோடு பிறந்தேன், அங்ஙனமாயினும் யாக்கையின் முதிர்ச்சியால் மேற்றிசையில் மறைதற்கு வீழ்ச்சியுறுகின்ற ஞாயிற்று மண்டிலம் போல்கின்றேன்; பிறந்தார் மூத்தார் பிணிநோய் உற்றார் இறந்தார் என்கை இயல்பே-உலகின்கண் பிறந்தனர் நாளுக்கு நாள் மூத்தனர் பின்னர்ப் பிணிக்கும் நோயினை எய்தினர் அது காரணமாக இறந்து பட்டார் என்பது நிலையாமையுடைய இவ்வுலகின் இயல்பேகாண், அது நிற்க இதுகேள்-உயிர்க்கு உறுதிதருகின்ற இவ்வறிவுரையைக் கேட்பாயாக; பேதைமை செய்கை உணர்வு அருவுரு வாயில் ஊறு நுகர்வு வேட்கை பற்று பவம் தோற்றம் வினைப்பயன் இற்று என வகுத்த இயல்பு ஈராறும்-பேதைமையும் செய்கையும் உணர்வும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்வும் வேட்கையும் பற்றும் பவமும் தோற்றமும் வினைப்பயனும் ஆகிய ஒவ்வொன்றும் இத் தன்மைத்து என்று வகுத்துக் கூறப்பட்ட இயற்கைப் பொருளாகிய இப் பன்னிரண்டு நிதானங்களையும் பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர் அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர்-பிறந்த மக்கள் அறிந்து கொள்வாராயின் பிறப்பினால் எய்தும் பெரிய பேறு இன்னதென்று அறிந்து கொள்வர் இவற்றை அறிந்திலராயின் அவர் ஆழும் நரகத்தையே அறிவார் என்பது தேற்றம் என்றார்; என்க.

(விளக்கம்) செய்தவத்திற்குப் பொருந்திய நல்யாக்கையின் என்க. வீழ்கதிர்-மேற்றிசையில் வீழ்ச்சியுறுகின்ற ஞாயிறு. பிறத்தலும் முத்தலும் பிணிநோய் உறுதலும் இறத்தலும் இவ்வுலகியல்பாகலின் அது பற்றிக் கவலுதல் வேண்டா என்பது குறிப்பு. பேதைமை முதலாக வினைப்பயன் ஈறாகக் கூறப்பட்ட பன்னிரண்டும் நிதானங்கள் எனப்படும். இவற்றின் இயல்புணர்ந்தோர் நன்னெறியில் ஒழுகி வீடு பெறுவர்; உணராதவர் தீவினைகள் செய்து நரகமே புகுவர் என்றறிவுறுத்த படியாம்.

நிதானங்களின் இயல்பு (1) பேதைமை

112-122: பேதைமை........காட்டும்

(இதன் பொருள்) பேதைமை என்பது யாது என வினவின் இவற்றுள் முன்னின்ற பேதைமை என்பது யாதென்று வினவினால் கூறுவன் கேள்; ஓதிய இவற்றை உணராது மயங்கி இயல் படு பொருளால் கண்டது மறந்து முயல்கோடு உண்டு என கேட்டது தெளிதல்-இங்குக் கூறப்பட்ட இந் நிதானங்கள் பன்னிரண்டையும் ஆராய்ந்து உணராமல் மயங்கி இயற்கையிலே தோன்றுகின்ற பொருள்களால் தாம் கண்கூடாகக் கண்டதனை மறந்து முயலுக்குக் கொம்புண்டென அறிவிலார் கூறியதனைக் கேட்டு அதனை உண்மையென்று துணிந்துகோடலாம்; உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் அலகில-மேலும் கீழும் நடுவும் ஆகிய மூவிடத்திலுமுள்ள மூன்று வகைப்பட்ட உயிரில் உலகங்களில் உயிருடைய உலகம் எண்ணிறந்தனவாம் அவையாவன; மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்று பல் உயிர் அறு வகைத்து ஆகும்-மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் ஒருங்கு தொக்க விலங்குகளும் பேயும் என விரிவகையால் எண்ணிறந்த பலவாகிய உயிர்களெல்லாம் தொகை வகையால் இந்த ஆறு வகையுள் அடங்கும்; நல்வினை என்று இரு வகையால் சொல்லப்பட்ட கருவின் உள் தோன்றி-அவ்வுயிர்கள் நல்வினை என்றும் தீவினை என்றும் தாம் தாம் செய்கின்ற இருவகை வினை காரணமாக முன் கூறப்பட்ட மக்கள் முதலிய அறுவகைப் பிறப்பில் கருவாகிப் பிறந்து; வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு மனப்பேர் இன்பமும் கவலையும் காட்டும்-முன் செய்த இருவகை வினைகளின் பயனும் வந்து எய்தும் காலத்தில் அவ்வுயிர்களுக்கு மனத்தின்கண் பெரிய இன்பத்தையும் பெரிய துன்பத்தையும் தோற்றுவிக்கும் என்க.   

(விளக்கம்) உலகம் மூன்று என்றது மேலும் கீழும் நடுவும் என இடவகையால் மூவகைப்படுத்தோதியபடியாம். இவற்றின் விரியைச் சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையின்கண் உணர்க. இவை உயிரில் உலகம் ஆம். இவற்றின்கண் உயிருடையவுலகம் அளவிறந்தன என்க. அவை பிறப்பு வகையால் மக்கள் முதலிய அறுவகைப்படும் என்றவாறு. இந்த உயிருலகம் தாம்தாம் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப அறுவகைப்பட்ட பிறப்பில் தோன்றும் என்க. நல்வினை இன்பம் காட்டும் தீவினை கவலை காட்டும் என்றவாறு. இனி உயிர்களுக்குத் துன்ப நீக்கமே குறிக்கோள் ஆதலின் துன்பத்திற்குக் காரணமான தீவினையை முதற்கண் எடுத்து, இனி விதந்து கூறுவர்.

தீவினையின் இயல்பும் பயனும் (2) செய்கை

123-134: தீவினை.................தோன்றுவர்

(இதன் பொருள்) தீவினை என்பது யாது என வினவின் வினைகள் இரண்டனுள் தீவினையென்று சொல்லப்படுவது யாதென்று வினவுவாயாயின்; ஆய்தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் அழகிய வளையலணிந்த நன்மையுடைய அரசியே அங்ஙனம் கூறிய அத் தீவினையை விளக்கிக் கூறுவேன் கேட்பாயாக; கொலை களவு காமத்தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்-கொலை செய்தலும் களவு கொள்ளுதலும் காமமாகிய விருப்பத்தை எய்துதலும் ஆகிய கெடாத உடம்பினால் தோன்றும் தீவினைகள் மூன்றும்; பொய் குறளை கடுஞ்சொல் பயன் இல் சொல் என சொல்லின் தோன்றுவ நான்கும்-பொய் கூறுதலும் கோள் சொல்லுதலும் கேட்போர் உள்ளத்தைப் புண்படுத்தும்படி கடுஞ்சொல் கூறுதலும் பயனில்லாத சொல்லைச் சொல்லுதலும் எனச் சொல்லிலே பிறக்கின்ற தீவினைகள் நான்கும்; வெஃகல் வெகுளல் பொல்லாக்காட்சி என்று உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என-வெஃகலும் வெகுளலும் பொல்லாக் காட்சியும் என்று உள்ளத்தில் தோன்றும் தீவினைகள்; பத்து வகையால்-பத்து வகைப்படும்; பயனை தெரி புலவர் இத் திறம் படரார்-இவற்றால் எய்தும் பயனை அறிந்துள்ள அறிவுடையோர் இத் தீய நெறியிலே ஒழுகார் படர்குவர் ஆயின் விலங்கும் பேயும் நரகரும் ஆகி கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்-அங்ஙனமின்றி இத் தீவினைகளை அஞ்சாது அவற்றிற்கியன்ற வழியில் செல்வாராயின் அவற்றின்  பயனாக விலங்காகவாதல் பேயாகவாதல் நரகராகவாதல் கலங்கிய உள்ளத்தின்கண் துன்பத்தோடு தோன்றா நிற்பர் என்றார்; என்க.

(விளக்கம்) தீவினை கொலை களவு காமம் பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் வெகுளல் பொல்லாக் காட்சி எனப் பத்துவகைப்படும் இவற்றுள் கொலை களவு காமம் ஆகிய மூன்றும் உடம்பினால் தோன்றும் தீவினை. பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் என்னும் நான்கும் மொழியால் தோன்றும் தீவினை. வெஃகல் வெகுளல் பொல்லாக்காட்சி என்னும் மூன்றும் மனத்தால் தோன்றும் தீவினை என்க. காமமாகிய தீவிழைவு என்க. பிணி முதலியவற்றையுடைய உடம்பில் இவை தோன்றா என்பது உணர்த்தற்கு உலையா உடம்பு என்றார். குறளை-கோள் பயனில் சொல்-அறம் பொருள் இன்பங்களுள் ஒன்றும் பயவாத சொல் வெஃகல்-விரும்புதல் வெகுளல்-சினத்தல். பொல்லாக் காட்சி-மயக்கக் காட்சி. இவை மூன்றுமே காம வெகுளி மயக்கம் எனப்படுவன.

நல்வினையின் இயல்பும் பயனும்

135: 140: நல்வினை...........உண்குவர்

(இதன் பொருள்) நல்வினை என்பது யாது என வினவின்-நல்வினையென்று சொல்லப்படுவது யாதென்று வினவுவாயாயின்; சொல்லிய பத்தின் தொகுதி நீங்கி-முன்னே சொல்லப்பட்ட கொலை முதலிய பத்து வகைப்பட்ட தீவினைகளினின்றும் விலகி சீலம் தாங்கி தானம் தலை நின்று-ஐந்து வகையும் பத்து வகையும் என்று கூறப்படுகின்ற நல்லொழுக்கங்களை மேற்கொண்டு தானம் முதலிய அறச் செயல்களை இடையறாது செய்து; மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து தேவரும் மக்களும் பிரமரும் ஆகி மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்-உயர்ந்த பிறப்பென்று சான்றோரால் வகுத்துக் கூறப்பட்ட மூன்று வகைப் பிறப்பாகிய தேவரும் மக்களும் பிரமரும் ஆகிய பிறப்புகளை எய்தி அங்கு வந்து மகிழ்ச்சியைத் தருகின்ற அந் நல்வினை பயன்களைத் துய்த்து இனிதிருப்ப என்றார்; என்க.

(விளக்கம்) சொல்லிய பத்து-முன் கூறப்பட்ட தீவினைகள் பத்தும். சீலம்-ஒழுக்கம். இவை இல்லறம் துறவறம் முதலிய நிலை வேறு பாட்டால் ஐந்து வகையும் எட்டு வகையும் பத்துவகையுமாம். மேல்-உயர்ந்த பிறப்பு. வினைப்பயன்-நல்வினைப்பயன். உண்குவர்-நுகர்வர்.

அறவணர் எழுந்து போதலும் மணிமேகலை செயலும்

141-150: அரசன்.........உய்ம்மின்

(இதன் பொருள்) அரசன் தேவியொடு ஆயிழை நல்லீர் புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின்-இராசமாதேவியொடு ஈங்கிருக்கின்ற மகளிர் எல்லாம் குற்றமில்லாத நல்ல அருளறத்தைப் பேணக் கேட்டு உய்யுங்கோள் என்று சொல்லி மணிமேகலையை நோக்கி; மறுபிறப்பு உணர்ந்த மணிமேகலை-முற்பிறப்பிலே செய்த நல்வினை காரணமாக மறு பிறப்பு உணரும் திருவுடைய மணிமேகலாய்; நீ பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும்-பிற சமயக் கணக்கர் அறங்களைக் கேட்டு உணர்ந்த பின்னர் நின்பால் வந்து உனக்கு இங்குக் கூறிய தத்துவங்கள் பலவற்றையும் இவற்றின் கூறுபாடுகளையும்; முத்தேர் நகையாய் முன்உறக் கூறுவல்-முத்துப் போன்ற பற்களையுடைய உன் முன்னிலையிலேயே உள்ளத்தில் பொருந்தும்படி அறிவுறுத்துவேன் காண்; என்று அவன் எழுதலும்-என்று சொல்லி அறவணர் இருக்கையினின்றும் எழா நிற்ப; இளங்கொடி எழுந்து-அது கேட்ட மணிமேகலை எழுந்து ; நன்று அறி மாதவன் நல்அடி வணங்கி-நன்மையை முழுதும் உணர்ந்த பெரிய தவத்தையுடைய அவ்வறவணவடிகளாருடைய திருவடிகளில் விழுந்து வணங்கிய பின்னர் மகளிரை நோக்கிக் கூறுபவள்; தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவர் நன்மொழி மறவாது உய்ம்மின்-இராசமாதேவியம் ஆய மகளிரும் சித்திராபதியும் ஆகிய எல்லீரும் அறவணவடிகளார் கூறுகின்ற நல்லற மொழிகளைக் கேட்டு அவற்றை மறவாமல் கடைப்பிடியாகக் கொண்டு ஒழுகி உய்யுங்கோள் என்று அறிவுறுத்த பின்னர்; என்க.

(விளக்கம்) புரை-குற்றம். நல்லறம் என்றது பவுத்தர் அறங்களை முனிவர் எஞ்சியவறங்களை யாம் பின்னர்க் கூறுவாம் அவற்றைப் போற்றிக் கேண்மின் என்றார் எனக் கோடலுமாம். மணிமேகலைக்கு நிகழவிருக்கின்ற ஏது நிகழ்ச்சிகளைக் கருதி அவை நிகழ்ந்த பின்னர்க் காஞ்சியினிடத்தே நின்பால் வந்து அறம் கூறுவேம் என்பது கருத்தாகக் கொள்க. பிறவறம்-பிற சமயக் கணக்கர் அறங்கள். நகையாய் முன்-நகையையுடைய உன் முன்னிலையிலே அவன்: அறவணவடிகள் நன்றறி-நல்லறத்தை அறிந்த.

மணிமேகலை அம் மகளிர்பால் விடை பெறுதல்

151-160: இந்நகர்.......போகி

(இதன் பொருள்) இந் நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர். அன்புடையீரே! இன்னென்று கேண்மின்! இப் பூம்புகார் நகரத்தில் யான் தங்கியிருப்பேனாயின் வேந்தன் மகனுக்கு இவள் கொல்ல வருகின்ற கூற்றுவன் ஆயினன் என்று என்னை மாந்தர் பலரும் இகழ்வர் ஆதலால் யான் இங்கிருக்க நினைகிலேன்; ஆபுத்திரன் நாடு அடைந்த பின் நாள்-அறவோனாகிய ஆபுத்திரன் மாறிப் பிறந்திருக்கின்ற சாவக நாட்டிலே சென்று அவனோடளவளாவிய பின்னர்; மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி-குற்றமில்லாத மணிபல்லவத்திற்குச் சென்று அங்குப் புத்த பீடிகையைக் கைதொழுது வணங்கிய பின்னர்; மாபத்தினி தனக்கு வஞ்சியுள் புக்கு-என் அன்னையாகிய வீர மாபத்தினித் தெய்வத்தைக் கண்டு அடி வணங்குதல் பொருட்டு வஞ்சி மாநகரத்திலே புகுந்து வணங்கிய பின்னர்; யாங்கணும் எஞ்சா நல் அறம் செய்குவல்-எவ்விடத்தும் சென்று வீழ்நாள் படாமல் உயர்ந்த அறத்தைச் செய்வேன், இஃது என் உட்கொள்; மனக்கினியீர் எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா என்று அவரையும் வணங்கி-என் உளத்திற்கு இனிய அன்பர்களே யான் எங்குச் செல்லினும் எனக்கு யாதொரு துன்பமும் நிகழமாட்டாது ஆதலால் எனக்குத் துன்பம் உண்டாகுமோவென்று நீவிர் கவலுதல் வேண்டா என்று தேற்றுரை கூறி இராசமாதேவி யும் மாதவியும் சுதமதியும் முதலிய வணங்குதற்குரியவரையும் வணங்கி; வெந்து ஆறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த அந்தி மாலை ஆயிழை போகி-உலையின்கண் தீயில் வெந்து ஆறிய பொன்னைப் போல மிளிர்ந்து மேற்றிசையிலே வீழுகின்ற ஞாயிறு மறைந்துபோன அந்திமாலை பொழுதின்கண் மணிமேகலை அவர்கள்பால் விடை பெற்றுச் சென்று என்க.

(விளக்கம்) கண்டோரெல்லாம் பழி தூற்றப்பட்டு இவ்வூரில் வாழ்வதைவிட இவ்வூரை விட்டுப் போதலே நன்று என்றவாறு

தோன்றின் புகழொடு தோன்றக வஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று   (குறள்-236)

எனவரும் திருக்குறளும் ஈண்டு நினையற்பாலது ஆபுத்திரனாடென்றது, சாவகநாட்டினை மாபத்தினி தனக்கு வஞ்சியுள் புக்கு என மாறுக. பத்தினியை வணங்குதல் பொருட்டு என்பது கருத்தாகக் கொள்க. எஞ்சாநல்லறம்-வீழ்நாள்படாது செய்யும் நல்லறம். செய்தவமும் தெய்வக்காவலும் எனக்குண்மையின் இடருண்டு என்று இரங்கல் வேண்டா என்றாள் என்க. மனக்கு-மனத்திற்கு. அவரை என்றது இராசமாதேவியையும், தாயரையும் வெந்து ஆறு பொன் வீழும் ஞாயிற்றுக்குவமை வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப(அகம்: 71) என்பதும் காண்க. வெந்துறு பொன் என்றும் பாடம்.

மணிமேகலை வான்வழியே பறந்து ஆபுத்திரனாடடைதல்

161-168: உலக............கூறும்

(இதன் பொருள்) உலக அறவியும் முதியாள் குடிகையும் இலகு ஒளிக் கந்தமும் ஏத்தி வலம் கொண்டு அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆயிழை-ஊரம்பலத்தையும் சம்பாபதியின் திருக்கோயிலையும் விளங்குகின்ற ஒளியையுடைய கந்திற் பாவையையும் கைதொழுதேத்தி வான் வழியாகப் பறந்து போய் அம் மணிமேகலை; இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்து ஓர் பூம்பொழில் அகவயின் இழிந்து பொறை உயிர்த்து-இந்திரனுடைய வழித் தோன்றலாகிய புண்ணிராசனுடைய பெரிய நகரத்தின் பக்கத்தே யமைந்த பூம்பொழிலினுள்ளே இறங்கி இளைப்பாறி; ஆங்கு வாழ் மாதவன் அடி இணை வணங்கி-அப் பூம்பொழிலின்கண் வாழுகின்ற துறவோன் ஒருவனைக் கண்டு அவன் அடிகளிலே வீழ்ந்து வணங்கி; இந் நகர் பேர் யாது இந் நகர் ஆளும் மன்னவன் யார் என மாதவன் கூறும்-அடிகளே இந் நகரின் பெயர் யாது? இந்த நகரத்தை ஆளும் அரசன் யார்? என்று வினவ அத் துறவோன் சொல்லுவான்; என்க

(விளக்கம்) உலக அறவி-ஊரம்பலம். ஆண்டுத் துறவோர் சங்கமிருத்தலின் தொழுதாள் என்க. முதியாள் குடிகை-சம்பாபதி கோயில் கந்தம்-தூண். கந்திற்பாவை என்க. ஆறாக என்பதன் ஈறுதொக்கது ஆயிழை: மணிமேகலை. இந்திரன் மருமான் என்றது புண்ணியராசனை; மருமான்-வழித்தோன்றல். பொறை உயிர்த்து-இளைப்பாறி.

அத்துறவோன் கூற்று

169-176: நாக..............தானென்

(இதன் பொருள்) நகைமலர் பூம்பொழில் அருந்தவன்-விளங்குகின்ற அம் மலர்ப் பூம்பொழில் உறைகின்ற அரிய தவத்தையுடைய அத் துறவோன்; இது நாகபுரம் நல்நகர் ஆள்வோன் பூமி சந்திரன் மகன் புண்ணியராசன்-இந் நகரத்தின் பெயர் நாகபுரமென்பது இந்த அழகிய நகரத்தை யாள்பவன் ஆவான்; ஈங்கு இவன் பிறந்த அ நாள் தொட்டு ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது-இந் நாட்டின்கண் இப் புண்ணியராசன் பிறந்த அந்த நாளிலிருந்து மிகவும் உயர்ந்த வானத்தினின்றும் மழை பெய்தல் தவறுதல் அறியாது; மண்ணும் மரனும் வளம்பல தரூஉம்-நிலமும் மரங்களும் தாம் வழங்குகின்ற வளங்கள் பலவற்றையும் குறைவின்றித் தருகின்றன ஆதலால்; உயிர்க்கு உள் நின்று உருக்கும் நோய் இல் என-உயிரினங்களுக்கு உடம்பினுள்ளிருந்து மெலிவிக்கின்ற பசி முதலிய நோய் சிறிதுமில்லை என்று; தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன்-அழகிய மலர் மாலையணிந்த புண்ணியராசனுடைய பெருமையை விதந்தெடுத்து விளம்பினன்; என்பதாம்.

(விளக்கம்) இது நாகபுரம் என மாறுக. இந் நன்னகர் எனச் சுட்டுச் சொல் பெய்துரைக்க. பெயல்-மழை. மரன். மகரத்திற்கு னகரம் போலி. தாரோன்: புண்ணியராசன். திறம்-பெருமை. அகைமலர் எனக் கண்ணழித்துக் கோடலுமாம்

இனி, இக் காதையை, கணிகைகேட்டு வருந்தி, வீழ்ந்து, ஏத்தி, தருக என இராசமாதேவி இவை சொல்வுழி மாதவி அடிகளுடன் வரக் கண்டலும் வணங்க அவன் அறிவுண்டாக என்று கூறுலும் இராசமாதேவி ஆசனங்காட்டி விளக்கி வாழ்க என, தேவி கேளாய் நல்லீர் கேண்மின் மணிமேகலை முன்னுறக் கூறுவல் என்று எழுதலும் இளங்கொடி எழுந்து வணங்கி என்று வணங்கிப் போகி ஏத்திச் சென்று இழிந்து உயிர்த்து வணங்கி யாது யார் என அருந்தவன் தாரோன் தன் திறம் கூறினன் என இயைத்துக் கொள்க.

ஆபுத்திரனாடடைந்த காதை முற்றிற்று.


Offline Anu

Re: மணிமேகலை
« Reply #25 on: February 28, 2012, 10:08:00 AM »
25. ஆபுத்திரனோடு மணிபல்லவ மடைந்த காதை

(மணிமேகலை ஆபுத்திரனை மணிபல்லவத்திடை யழைத்துப் புத்த பீடிகை காட்டிப் பிறப்புணர்த்தி வஞ்சிமாநகர் புக்க பாட்டு)

அஃதாவது-மணிமேகலை ஆபுத்திரன் மாறிப் பிறந்து புண்ணியராசன் என்னும் பெயரோடிருந்தவனைக் கண்டு உன் கையிலிருந்த பாத்திரமே என் கையை யடைந்தது. நீ முற்பிறப்பில் செய்த நல்வினையின் பயனாகவே இப் பிறப்பில் அரசனாயினை அச் செல்வத்தால் அறிவு மயங்கினை நீ இப் பிறப்பில் பசு வயிற்றில் பிறந்தாய்; அதனையும் அறிந்தில்லை நீ மணிபல்லவத்திற்குச் சென்று புத்த பீடிகையைத் தொழுதாலன்றி உனது பழம் பிறப்பை அறியாய் என்று சொல்லி விட்டு மீண்டும் வான் வழியே பறந்து மணிபல்லவத்தில் இறங்கிப் புத்த பீடிகையைத் தொழுத செய்தியையும் மணிமேகலையின் சொற்கேட்டுப் புண்ணியராசனாகிய ஆபுத்திரனும் அரசாட்சியை அமைச்சன்பால் ஒப்புவித்து விட்டு மரக்கலம் ஏறி மணிபல்லவத்தை யடைந்த செய்தியும் அங்கு நிகழ்ந்த பிற நிகழ்ச்சிகளும் கூறும் செய்யுள் என்றவாறு.

இனி, இதன்கண் சாவக நாட்டின்கண் தருமசாவகன் என்பான் மணிமேகலையின் சிறப்பெல்லாம் புண்ணியராசனுக்குக் கூறுதலும் மணிமேகலை அவ்வரசனுக்குச் செல்வமுடைமையால் நீ அறிவு மயங்கினை நீ மணிபல்லவம் வலங்கொண்டால் அல்லது பிணிப்புறு பிறவியின் பெற்றியை யறியாய் ஆதலின் அரசனே நீ ஆங்கு வருதி என்று சொல்லிவிட்டு வானிலே பறந்து மணிபல்லவத்தில் வந்திறங்கி அங்குத் தன் முற்பிறப்பினை உணர்ந்து கூறுவனவும் சாவக நாட்டில் புண்ணியராசன் தன் அமைச்சனுக்குக் கூறும் செய்திகளும் அமைச்சன் அவனுக்குக் கூறும் மாற்றங்களும் புண்ணியராசன் மரக்கலம் ஏறி மணிபல்லவத்திற்கு வருதலும் மணிமகேலை அவனை யழைத்துச் சென்று தீவகம் வலம் செய்து தரும் பீடிகையைக் காட்டுதலும் அவன் தரும் பீடிகையை வலங்கொண்டு வணங்கியவுடனே அப் பீடிகை கையகத் தெடுத்துக் காண்போர் முகத்தைக் கண்ணாடி மண்டிலம் காட்டுவதுபோல அவனுடைய முற்பிறப்பினைக் காட்டுதலும் முற்பிறப்புணர்ந்த அவ்வரசன் தனக்கு அமுத சுரபி ஈந்த சிந்தா தேவியை வாழ்த்திப் புகழ்தலும் பின்னர் முற்பிறப்பிலே இறந்து போன தன் எலும்புக் கூட்டைக் கண்டு மயங்குதலும் அவன் இறந்தமையால் அவன்பால் அன்புடைய ஒன்பது செடிகள் அங்கு வந்து உயிர் நீத்தவர்களுடைய எலும்புக் கூடுகளையும் கண்டு மயங்குதலும் பின்னர் மணிமேகலை அவ்வரசனக்கு அறங் கூறுதலும் நீ மரக்கலம் ஏறி உன்னாட்டிற்குச் செல்லுதி என்று போக்கிய பின்னர் வஞ்சிமாநகர் நோக்கி வானத்து எழுந்து பறந்து போதலும் பிறவும் பெரிதும் சுவை கெழுமச் சொல்லப் பட்டிருக்கின்றன.

அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து
தருமசாவகன் தன் அடி வணங்கி
அறனும் மறனும் அநித்தமும் நித்தத்
திறனும் துக்கமும் செல் உயிர்ப் புக்கிலும்
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும்
ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு
பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள்
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்
இங்கு இணை இல்லாள் இவள் யார்? என்ன  25-010

காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன்
நாவல் அம் தீவில் இந் நங்கையை ஒப்பார்
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம்
கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டிக்
கள் அவிழ் தாரோய்! கலத்தொடும் போகி
காவிரிப் படப்பை நல் நகர் புக்கேன்
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்தாங்கு
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன்
ஆங்கு அவள் இவள்! அவ் அகல் நகர் நீங்கி
ஈங்கு வந்தனள் என்றலும் இளங்கொடி  25-020

நின் கைப் பாத்திரம் என் கைப் புகுந்தது
மன் பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய்
அப் பிறப்பு அறிந்திலைஆயினும் ஆ வயிற்று
இப் பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ?
மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது
பிணிப்புறு பிறவியின் பெற்றியை அறியாய்
ஆங்கு வருவாய் அரச! நீ என்று அப்
பூங் கமழ் தாரோன்முன்னர்ப் புகன்று
மை அறு விசும்பின் மடக்கொடி எழுந்து
வெய்யவன் குடபால் வீழாமுன்னர்  25-030

வான் நின்று இழிந்து மறி திரை உலாவும்
பூ நாறு அடைகரை எங்கணும் போகி
மணிப்பல்லவம் வலம் கொண்டு மடக்கொடி
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும்
தொழுது வலம் கொள்ள அத் தூ மணிப்பீடிகைப்
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
மாயம் இல் மாதவன் தன் அடி பணிந்து
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி
பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம்  25-040

விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்
கலங்கு அஞர்த் தீவினை கடிமின் கடிந்தால்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்
ஆகலின் நல்வினை அயராது ஓம்புமின்
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன்
உலகு உயக் கோடற்கு ஒருவன் தோன்றும்
அந் நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது
இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை
மாற்று அருங் கூற்றம் வருவதன் முன்னம்
போற்றுமின் அறம் எனச் சாற்றிக் காட்டி  25-050

நாக் கடிப்பு ஆக வாய்ப் பறை அறைந்தீர்
அவ் உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த
வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்
பெரியவன் தோன்றாமுன்னர் இப் பீடிகை
கரியவன் இட்ட காரணம் தானும்
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய
என் பிறப்பு உணர்த்தலும் என்? என்று யான் தொழ
முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது
மற்று அப் பீடிகை தன்மிசைப் பொறாஅது
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது   25-060

வானவன் வணங்கான் மற்று அவ் வானவன்
பெருமகற்கு அமைத்து பிறந்தார் பிறவியைத்
தரும பீடிகை சாற்றுக என்றே
அருளினன் ஆதலின் ஆய் இழை பிறவியும்
இருள் அறக் காட்டும் என்று எடுத்து உரைத்தது
அன்றே போன்றது அருந் தவர் வாய்மொழி
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும்
ஆங்கு அப் பொழில் விட்டு அகநகர் புக்கு
தந்தை முனியா தாய் பசு ஆக   25-070

வந்த பிறவியும் மா முனி அருளால்
குடர்த் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர்
அடர்ப் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்
மா முனி அருளால் மக்களை இல்லோன்
பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும்
ஆய் தொடி அரிவை அமரசுந்தரி எனும்
தாய் வாய்க் கேட்டு தாழ் துயர் எய்தி
இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம்
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து
செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க  25-080

அரைசு வீற்றிருந்து புரையோர்ப் பேணி
நாடகம் கண்டு பாடல் பான்மையின்
கேள்வி இன் இசை கேட்டு தேவியர்
ஊடல் செவ்வி பார்த்து நீடாது
பாடகத் தாமரைச் சீறடி பணிந்து
தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி
நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி
மதி முகக் கருங் கண் செங் கடை கலக்கக்
கருப்பு வில்லி அருப்புக் கணை தூவ  25-090

தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து
தூ அறத் துறத்தல் நன்று எனச் சாற்றி
தௌந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்து
ஏதம் இன்றாய் இன்று விளைந்தது
மணிமேகலை தான் காரணம் ஆக என்று
அணி மணி நீள் முடி அரசன் கூற
மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி
எம் கோ வாழி! என் சொல் கேண்மதி
நும் கோன் உன்னைப் பெறுவதன் முன் நாள்  25-100

பன்னீராண்டு இப் பதி கெழு நல் நாடு
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு
ஈன்றாள் குழவிக்கு இரங்காளாகி
தான் தனி தின்னும் தகைமையது ஆயது
காய் வெங் கோடையில் கார் தோன்றியதென
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்கட்கு
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா
நீ ஒழிகாலை நின் நாடு எல்லாம்   25-110

தாய் ஒழி குழவி போலக் கூஉம்
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின்
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ!
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே!
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும்
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால்
மதி மாறு ஒர்ந்தனை மன்னவ! என்றே
முதுமொழி கூற முதல்வன் கேட்டு
மணிபல்லவம் வலம் கொள்வதற்கு எழுந்த  25-120

தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்
அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும்
ஒரு மதி எல்லை காத்தல் நின் கடன் என
கலம் செய் கம்மியர் வருக எனக் கூஉய்
இலங்கு நீர்ப் புணரி எறி கரை எய்தி
வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை
தங்காது அக் கலம் சென்று சார்ந்து இறுத்தலும்
புரை தீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி
காவலன் தன்னொடும் கடல் திரை உலாவும்  25-130

தே மலர்ச் சோலைத் தீவகம் வலம் செய்து
பெருமகன்! காணாய் பிறப்பு உணர்விக்கும்
தரும பீடிகை இது எனக் காட்ட
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு
உலந்த பிறவியை உயர் மணிப் பீடிகை
கைஅகத்து எடுத்துக் காண்போர் முகத்தை
மை அறு மண்டிலம் போலக் காட்ட
என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன்
தென் தமிழ் மதுரைச் செழுங் கலைப் பாவாய்!
மாரி நடு நாள் வயிறு காய் பசியால்  25-140

ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு
இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில்
நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது
ஏடா! அழியல் எழுந்து இது கொள்க என
அமுதசுரபி அங்கையில் தந்து என்
பவம் அறுவித்த வானோர் பாவாய்!
உணர்வில் தோன்றி உரைப் பொருள் உணர்த்தும்
மணி திகழ் அவிர் ஒளி மடந்தை! நின் அடி
தேவர் ஆயினும் பிரமர் ஆயினும்   25-150

நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி
பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது
மறந்து வாழேன் மடந்தை! என்று ஏத்தி
மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து
தென் மேற்காகச் சென்று திரை உலாம்
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர்
தூ மலர்ப் புன்னைத் துறை நிழல் இருப்ப
ஆபுத்திரனோடு ஆய் இழை இருந்தது
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி
அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு  25-160

பெருந் துயர் தீர்த்த அப் பெரியோய்! வந்தனை
அந் நாள் நின்னை அயர்த்துப் போயினர்
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர்
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண்
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர்
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண்
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப
ஆய் மலர்ப் புன்னை அணி நிழல் கீழால்
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய  25-170

என்பு உடை யாக்கை இருந்தது காணாய்
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கிப்
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்
கொலைவன் அல்லையோ? கொற்றவன் ஆயினை!
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய
மடவரல் நல்லாய்! நின் தன் மா நகர்
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய்
நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள்
பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள்
பனிப் பகை வானவன் வழியில் தோன்றிய  25-180

புனிற்று இளங் குழவியொடு பூங்கொடி பொருந்தி இத்
தீவகம் வலம் செய்து தேவர் கோன் இட்ட
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி
கம்பளச் செட்டி கலம் வந்து இறுப்ப
அங்கு அவன்பால் சென்று அவன் திறம் அறிந்து
கொற்றவன் மகன் இவன் கொள்க எனக் கொடுத்தலும்
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி
பழுது இல் காட்சிப் பைந்தொடி புதல்வனைத்
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள்  25-190

இலங்கு நீர் அடைகரை அக் கலம் கெட்டது
கெடு கல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்
நல் மணி இழந்த நாகம் போன்று
கானலும் கடலும் கரையும் தேர்வுழி
வானவன் விழாக் கோள் மா நகர் ஒழிந்தது
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்
அணி நகர் தன்னை அலை கடல் கொள்க என
இட்டனள் சாபம் பட்டது இதுவால்  25-200

கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த
வடி வேல் தடக் கை வானவன் போல
விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க
ஒரு தனி போயினன் உலக மன்னவன்
அருந் தவன் தன்னுடன் ஆய் இழை தாயரும்
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்
பரப்பு நீர்ப் பௌவம் பலர் தொழ காப்போள்
உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின்
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம்
முன் நாள் எடுத்ததும் அந் நாள் ஆங்கு அவன்  25-210

அற அரசு ஆண்டதும் அறவணன் தன்பால்
மறு பிறப்பாட்டி வஞ்சியுள் கேட்பை என்று
அந்தரத் தீவகத்து அருந் தெய்வம் போய பின்
மன்னவன் இரங்கி மணிமேகலையுடன்
துன்னிய தூ மணல் அகழத் தோன்றி
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கித்
தான் பிணி அவிழாத் தகைமையது ஆகி
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி
மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து  25-220

என் உற்றனையோ இலங்கு இதழ்த் தாரோய்?
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது
மன்னா! நின் தன் மறு பிறப்பு உணர்த்தி
அந்தரத் தீவினும் அகன் பெருந் தீவினும்
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும்
அரசர் தாமே அருளறம் பூண்டால்
பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு?
அறம் எனப்படுவது யாது? எனக் கேட்பின்
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது  25-230

கண்டது இல் எனக் காவலன் உரைக்கும்
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும்
நல் நுதல்! உரைத்த நல் அறம் செய்கேன்
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை
நின்திறம் நீங்கல் ஆற்றேன் யான் என
புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின்
மன் பெரு நல் நாடு வாய் எடுத்து அழைக்கும்
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று
அந்தரத்து எழுந்தனள் அணி இழை தான் என்  25-239

உரை

சாவக நாட்டு மன்னன் தேவியோடு அம் முனிவனை வணங்க வந்தவன் மணிமேகலையைக் கண்டு இவள் யாரென்று வினவுதல்

1-10: அரசன்..........என்ன

(இதன் பொருள்) அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து தருமசாவகன் தன் அடி வணங்கி-நாகபுரத்து மன்னனாகிய புண்ணியராசன் தன் கோப்பெருந் தேவியோடு மணிமேகலை இறங்கியிருந்த அந்தப் பூம்பொழிலிலே சென்று அங்கு மணிமேகலைக்கு அறங்கூறிக் கொண்டிருந்த தருமசாவகன் என்னும் அத் துறவோனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி அம் முனிவன் மணிமேகலைக்கு அறிவுறுத்துபவன்; அறனும் மறனும் அகித்தமும் நித்தத் திறனும் துக்கமும் செல் உயிர் புக்கிலும்-நல்வினையின் வகையும் தீவினையின் வகையும் நிலையில்லாத பொருகளி னியல்பும் நிலையுதலுடைய பொருளியல்பும் துன்பம் முதலிய வாய்மையினியல்பும் இறந்துபோம் உயிர்கள் புகுமிடம்; சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் ஆரியன அமைதியும் அமைஉறக் கேட்டு-பன்னிரு நிதானங்களாலே உண்டாகும் பிறப்பும் அப் பிறப்பறுத்து வீடுபேறெய்தி உய்யும் வகையும் இவற்றை ஓதாதுணர்ந்து பதியுமாறு கேட்டு; பெண் இணை இல்லா பெருவனப்பு-உற்றதள் காமனோடு இயங்காகண் இணை இயக்கமும்-இவ்வுலகில் உள்ள பெண்களுள் வைத்து யாரும் தனக்குவமையில்லாத பேரழகு படைத்தவளும் ஆசையின் வழியியங்காத அவளுடைய கண்களின் அருள் நோக்கமும் நேரிலே கண்ட அப் புண்ணியராசனானவன்; அம் கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன-பெரிதும் வியந்து அழகிய தன் கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு அறங்கேட்கின்ற இங்கு நிற்கும் ஒப்பற்ற இந் நங்கை யாவளோ என்று வினவ என்க.

(விளக்கம்) அரசன்: புண்ணியராசன். உரிமை-மனைவி. தருமசாவகன்-அப் பொழிலின்கண் உறைவானாக முற்கூறப்பட்ட முனிவன் பெயர்; இப் பெயர் அறங்கோட்போன் என்னும் பொருட்டு. அறன்-உண்டி கொடுத்தல் முதலியன. மறன்-கள்ளுண்ணல் முதலியன-துக்கம்-துன்பம் முதலிய வாய்மைகள். புக்கில்-புகுமிடம். சார்பு-ஒன்றனை ஒன்று சார்ந்து பிறக்கும் நிதானங்கள். உய்தி-வீடு. ஆரியன்-மேலோன்; புத்தபெருமான் காமனோடியங்கா கண்ணிணை இயக்கம் என மாறுக, இங்கிருக்கின்ற இவள் என்க. யாரென்ன என்று வியந்து அரசன் வினவ என்க.

கஞ்சுகன் கூற்று

11-20: காவலன்..........என்றலும்

(இதன் பொருள்) காவலன் தொழுது-அவ்வாறு வினவிய அரசனைக் கைகூப்பித் தொழுது; கஞ்சுகன் உரைப்போன்-கஞ்சுகன் என்னும் கோத்தொழிலாளன் அவனுக்குக் கூறுபவன்; நாவலம் தீவில் இந் நங்கையை ஒப்பார் யாவரும் இல்லை-தென்குமரி வடவிமயம் ஆயிடைப் பரந்து கிடக்கும் பெரிய நாவலந் தீவின்கண் மகளிரில் சிறந்த இவளுக்கு ஒப்பாவார் பிறர் யாரொருவரும் இல்லை; இவள் திறம் எல்லாம்-இவளுடைய வரலாறு முழுவதும் (யான் அறிகுவன்) கிள்ளி வளவனொடு கெழுதகை வேண்டி கள் அவிழ் தாரோய் கலத்தொடும் போகி காவிரிப்படப்பை நல்நகர் புக்கேன்-சோழன் நெடுமுடிக் கிள்ளியினது கேண்மை பெறுவதை விரும்பித் தேன் துளிக்கும் மலர் மாலையணிந்த நீ என்னைத் தூது போக்கி பொழுது யான் மரக்கலத்தோடு அவனுக்கு வேண்டுவன வெல்லாம் ஏற்றிக் கொண்டு மரக்கலத்தோடே சென்று காவிரியையும் அதன் இருமருங்கினும் தோட்டங்களையும் உடைய அழகிய பூம்புகார் நகரத்திலே புகுந்தேன் அல்லெனோ; மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு ஓதினன் என்று-அந் நகரத்திலுள்ள பெரிய தவத்தையுடைய அறவணவடிகள் இவளுடைய பிறப்பு முதலியவற்றை நன்குணர்ந்து அந் நகரத்தில் எனக்குக் கூறினர் என்று: யான் அன்றே உரைத்தேன்-யான் மீண்டு வந்த அற்றை நாளிலே அரசே உனக்குக் கூறியிருக்கின்றேன்; ஆங்கு அவள் இவள்-அங்ஙனம் கூறப்பட்ட அம் மணிமேகலையே இங்கு நிற்கின்ற இவ்வணங்காவாள்; அவ் அகநகர் நீங்கி ஈங்கு வந்தனள் என்றலும்-அப் பூம்புகாரின் அகநகரத்தைக் கை விட்டு என்ன காரணமோ இங்கு வந்திருக்கின்றனள் என்று அக் கஞ்சுகன் அரசனுக்கு அறிவுறுத்திய பொழுது; என்க.

(விளக்கம்) காவலன்: புண்ணியராசன். கஞ்சுகன்-மெய்ப்பை(சட்டை) புக்க கோத்தொழிலாளன்; தூதன். பிரதானியுமாம். இந்  நங்கை-இங்கிருக்கின்ற இணையில்லா இவள். இவள் திறம்-இவள் வரலாறு கிள்ளி வளவன்-மாவண்கிள்ளி; உதயகுமரன் தந்தை. கெழுதகை-நட்புரிமை; நட்புரிமை கொள்ளும் பொருட்டு நீ என்னை விடுப்ப யான் கலத்தொடும் போகிப் புகார் நகரத்துப் புகுந்த பொழுது என்றவாறு. தாரோய் என்றது முன்னிலைப் பெயர் மாத்திரை. கலத்தொடும் என்றமையால் வரிசைப்பொருள் ஏற்றப்பெற்ற கலத்தொடும் என்பது குறிப்பாயிற்று. படப்பை-தோட்டக் கூறு. இவள் பிறப்பு என்றது இவளுடைய முற்பிறப்பும் இப் பிறப்பும் என்பதுபட நின்றது. உணர்ந்தாங்கு-உணர்ந்தபடி எனினுமாம். அன்றே உரைத்தேன் என்றது யான் மீண்டு வந்த அற்றை நாளிலேயே கூறியிருக்கின்றேன் என்றவாறு. அவ்வகநகர்-பூம்புகார் நகரம். ஈங்கு வந்தனள் என்றது இங்கே ஏதோ காரியமாக வந்திருக்கின்றனள் என்று அறிவுறுத்தபடியாம் இதனைத் தோற்றுவாயாக் கொண்டு மணிமேகலை மேலே தான் வந்த காரியம் கூறுகின்றாள் என்க.

மணிமேகலை புண்ணியராசனுக்குத் தான் வந்த காரியம் கூறி மணிபல்லவத்திற்குப் போதல்

20-31: இளங்கொடி...........இழிந்து

(இதன் பொருள்) இளங்கொடி நின் கைப்பாத்திரம் என் கை புகுந்தது-அது கேட்ட மணிமேகலை அக் கஞ்சுகன் கூற்றை ஏதுவாகக் கொண்டு புண்ணியராசன் முகம் நோக்கி அரசனே நீ முற்பிறப்பிலே ஆபுத்திரனாயிருந்து தெய்வத்தின்பாற் பெற்ற நின்னுடைய கையிலிருந்த தெய்வத்தன்மையுடைய அமுதசுரபி என்னும் அப் பாத்திரமே இது யான் செய்த தவத்தால் அஃது என் கையில் தானே வந்து சேர்ந்தது; மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய்-நீயோ முற்பிறப்பிலே செய்த நல்வினைப் பயனாக அரசனுக்கியன்ற பெரிய செல்வத்தைப் பெற்று அச் செல்வத்தினாலே மயக்கமும் எய்தினையாதலால் மெய்யறிவுடைய அல்லையாயினை.இச் சிறப்பிற்குக் காரணமான; அப் பிறப்பு அறிந்திலை ஆயினும்-ஆவால் வளர்க்கப் பெற்று ஆபுத்திரன் எனப்பெயர் பெற்று அருளறம் பேணிய உனது அப் பிறப்பினை நீ இப்பொழுது அறிந்தாயில்லை எனினும்; ஆவயிற்று இப் பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ-அறவோனாகிய ஆபுத்திரனே நீ என்பதற்கு அறிகுறியாகவே நீ இப் பிறப்பில் ஓர் ஆ வயிற்றினின்றும் பிறந்தனை அதுவும் நீ அறிந்தாயில்லை, ஆகவே அவ் வறத்திற்கேற்ப நீ பிறப்பற முயலும் முயற்சி செய்தலை, அதனை மறந்து நீ அவம் செய்வதன்றிப் பிறிது என்ன தான் செய்கின்றனை? இதனை உனக்கு அறிவிக்கவே யான் இங்கு வந்தது காண்; மணிபல்லவம் வலம் கொண்டால் அல்லது-இனி நீ மணிபல்லவத் தீவிற்கு வந்து ஆங்குள்ள புத்த பீடிகையை வலம் வந்து வணங்கினால் அல்லது; பிணிப்பு  உறு பிறவியின் பெற்றியை அறியாய்-மேலும் மேலும் பற்றுண்டாதற்குக் காரணமான இப் பிறப்பின் தன்மையை அறிந்து நீ உய்தி பெறுவாயல்லை ஆதலால் இதன்கண் நின்று உய்தி பெறுதற்கு; அரச நீ ஆங்கு வருவாய் என்று அப் பூங்கமழ் தாரோன் முன்னர் புகன்று-அரசனே நீ அம் மணிபல்லவத்திற்கு வருவாயாக என்று அந்த அழகிய நறுமணங் கமழ்கின்ற மலர்மாலையணிந்த புண்ணியராசன் முன்னர்ச் சொல்லிவிட்டு; வெய்பவன் குடபால் வீழா முன்னர் மடக்கொடி மை அறு விசும்பின் எழுந்து வான் நின்று இழிந்து ஞாயிறு மேற்றிசையில் வீழ்ந்து மறைவதற்கு முன்னர் இளங்கொடியாகிய அம் மணிமேகலை அந் நகரத்தினின்றும் குற்றமற்ற வானத்திலே பறந்துபோய் வானத்தினின்றும் அம் மணிபல்லவத் தீவின்கண் இறங்கி; என்க.

(விளக்கம்) இளங்கொடி: மணிமேகலை. நின் கைப்பாத்திரம் என்றது நீ முற்பிறப்பிலே தெய்வத்தால் பெற்ற அமுதசுரபி என்னம் அரும்பெறல் பாத்திரம் என்பதுபட நின்றது. என்கைப் புகுந்தது என்றது யான் செய்த தவத்தால் என்கைப் புகுந்தது என்பதுபட நின்றது. மன் பெருஞ் செல்வம்-அரசனுக்கியன்ற பெரிய செல்வம் என்க. செல்வத்து மயங்கினை என்புழி மயங்குதற்குச் செல்வம் ஏதுவாயிற்று. ஈண்டு

அறனி ரம்பிய வருளுடை யருந்தவர்க் கேனும்
பெறல ருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்
                       (மந்தரை-70)

எனவரும் கம்பராமாயணச் செய்யுளையும் நினைக. அறியாய் என்றது உய்யும் நெறி அறியாய் என்றவாறு. அப் பிறப்பு-ஆபுத்திரனாம் பிறப்பு அதற்கறிகுறியாக ஆவயிற்றுப் பிறந்த பிறப்பு என்க. செய்தனையோ என்ற வினா தவம் செய்யாது அவம் செய்கின்றாய் என்றவாறாம் மடக்கொடி: மணிமேகலை, வெய்யவன்-ஞாயிறு. மணிபல்லவத்தில் இறங்கி என்க. 

மணிமேகலை மணிபல்லவத்தில் மாதவன் பீடிகையை வணங்குதல்

31-40: மறிதிரை.............எல்லாம்

(இதன் பொருள்) மறிதிரை உலாவும் பூ நாறு அடை கரை எங்கணும் போகி மணிபல்லவம் வலம் கொண்டு-கரையில் மோதி மீளுகின்ற அலைகள் உலாவுகின்ற அம் மணிபல்லவத் தீவினது மலர் மணம் கமழும் நீரடை கரையில் எவ்விடத்தும் சென்று அத் தீவை வலம் வந்து மடக்கொடி பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும்-அம் மணிமேகலை பற்றற்ற பெரிய தவத்தையுடைய புத்த பெருமானுக்கியன்ற பீடிகையைக் கண்டவுடன் தொழுது வலம் கொள்ள-கை குவித்துத் தொழுது வலம் வந்து வணங்குமளவிலிலே; அத் தூமணிப் பீடிகை பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த-அந்தத் தூய மணிகளால் இயன்ற புத்த பீடிகையைக் கண்ட குற்றமற்ற அக் காட்சியானது தன்னுடைய முற்பிறப்பின் நிகழ்ச்சிகளைக் கண்கூடாகக் காட்டுதலலே அம் மணிமேகலை; காயம் கரையென்னும் பேர் யாற்று அடைகரை மாயம் இல் மாதவன் தன் அடி பணிந்து-அக் காட்சியினூடே காயங்கரை என்னும் பெரிய யாற்றினது நீரடை கரையின்கண் பொய்மையில்லாத பெரிய தவத்தையுடைய பிரமதருமன் என்னும் முனிவர் பெருமானைக் கண்கூடாக் கண்டு அம் முனிவனுடைய அடிகளிலே வீழ்ந்து வணங்கிக் கூறுபவள் முனிவர் பெருமானே!; தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க் கெல்லாம்-ஆர்வத்துடன் வந்து நீ கூறுகின்ற அறங்களைக் கேட்டு மகிழ்ந்து நின்னுடைய திருவடியைத் தொழுது வாழ்த்தித் தங்கள் அரசனாகிய அத்திபதி என்பவனோடும் அவந்தி நகரத்திற்குச் செல்லும் மக்களுக்கெல்லாம்; என்க.

(விளக்கம்) பிணிப்பறு மாதவன்-புத்தர். பீடிகை-புத்த பீடிகை காட்சி பிறப் புணர்த்த என்க. காயங்கரை-ஒரு யாற்றின் பெயர் மாயம்-பொய். மாதவன்-பிரமதருமன் என்னும் முனிவன். பழம் பிறப்புணர்ந்த மணிமேகலையின் முற்பிறப்புத் தோன்றா நிற்ப. அக் காட்சியினூடு அப் பிறப்பில் தனக்கறங் கூறிய பிரமதருமன் என்னும் முனிவர் தோன்றுதலால் என்க. இனி வருவன மணிமேகலை கூற்று. அவை அம் முனிவனை முன்னிலைப்படுத்துக் கூறுவனவாம். பெருமகன் என்றது அத்திபதி என்னும் வேந்தனை. அவனொடும் பெயர்வோர் என்றது அத்திபதியின் குடிமக்களை. அவர்க்கெல்லாம் அம் முனிவன் கூறிய அறவுரைகளை ஈண்டு மணிமேகலை கொண்டு கூறுகின்றாள் என்க.

மணிமேகலை கூற்று

41-51: விலங்கு.............அறைந்தீர்

(இதன் பொருள்) விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும் கலங்கு அஞர் தீவினை கடிமின்-விலங்குப் பிறப்பினையும் நரகர்ப் பிறப்பினையும் பேய்ப்பிறப்பினையும் உண்டாக்குகின்ற உள்ளங் கலங்குதற்குக் காரணமான துன்பத்தைத் தருகின்ற தீவினைகளைச் செய்யாதொழியுங்கோள்; கடிந்தால்-அத் தீவினையைச் செய்யா தொழியின்; நல்வினை அயராது ஓம்புமின்-நல்வினைகளை மறவாது செய்யுங்கள் , எற்றுக்கெனின் தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் ஆகலின்-செய்தால் தேவரும் மக்களும் பிரமரும் ஆகிய உயர்ந்த பிறப்புக்களை எய்துவீர் ஆதலால்; புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் உலகு உயக்கோடற்கு ஒருவன் தோன்றும்-மெய்யறிவுடையவனும் முழுவதும் மயக்கமின்றி உணர்ந்தவனும் ஆகிய இவ்வுலகத்தை உய்யக் கொள்ளும் பொருட்டுப் பிறக்கின்ற ஒருவனும் ஆகிய புத்த பெருமான் இன்றியமையாத பொழுதிலே வந்து பிறப்பான்; அந்நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை-அக் காலத்திலே அப் புத்த பெருமான் திருவாய்மலர்ந்தருளுகின்ற அறங்களைக் கேட்கும் திருவுடையார் தப்புவதல்லது துன்பம் தருகின்ற இப் பிறவிக் கடலினின்றும் தப்பிக் கரையேறுவார் பிறர் யாரும் இல்லை ஆதலின்; மாற்று அரும் கூற்றம் வருவதன் முன்னம் அறம் போற்றுமின் என சாற்றிக் காட்டி-யாராலும் தடுத்தற்கரிய கூற்றுவன் வந்து நும்முயிரை உண்ணுதற்கு முன்பே நாளும் ஒல்லும் வகையால் ஓவாதே நல்லறத்தைச் செய்யுமின் என்று சொல்லிக் காட்டி; நா கடிப்பாக வாய் பிறை அறைந்தீர்-நும்முடைய நாவையே குறுந்தடியாகக் கொண்டு நும் வாயாகிய பறையை முழக்கினீர் என்றாள்; என்க.

(விளக்கம்) தீவினை கடிமின், கடித்தால் தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் எனவும், மாற்றருங் கூற்றம் வருவதன் முன்னம் அறம் போற்றுமின் எனவும் வரும் இவற்றோடு

பல்சான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே

எனவரும் (195) புறப்பாட்டினை ஒப்பு நோக்குக.

பிறவி இழுக்குதல்-பிறவிக் கடலினின்றும் உய்ந்து கரையேறுதல்; இதனை நிருவாணம் என்பர். மாற்றருங் கூற்றம்-தடுத்தற்கரிய கூற்றுவன்; சாதல் வருமுன்னர் என்றவாறு. சாற்றிக் காட்டுதல்-வற்புறுத்திச் சொல்லுதல். கடிப்பு-பறையடிக்கும் குறுந்தடி.

இதுவுமது

52-57: அவ்வுரை.........தொழ

(இதன் பொருள்) அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த-அவ்வறவுரையைக் கேட்ட பின்னர் யான் தமியேனாய் நும்முடைய திருவடிகளை வணங்கி வாழ்த்திய பொழுது; எங்கட்கு வெவ்வுரை விளம்பினிர் ஆதலின்-யானும் என் கணவனுமாகிய இருவர் திறத்தும் வெவ்விய துன்பம் தருகின்ற மொழிகளைக் கூறிய அருளினீர் ஆதலால்; பெரியவன் தோன்று முன்னர் இப் பீடிகை கரியவன் இட்ட காரணம் தானும்-புத்த பெருமான் இந் நிலவுலகிலே வந்து பிறப்பதற்கு முன்பே கரிய திருமேனியையுடைய தேவேந்திரன் இந்தப் பீடிகையை இங்கு இட்ட காரணமும்; மன்பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ-பெருமையுடைய இப் பீடிகை உடம்பினின்றும் உயிர் இறந்துபட்ட எனது முற்பிறப்பினை உணர்த்தற்குக் காரணமும் என்னையோ என்று யான் வணங்கா நிற்ப.

(விளக்கம்) வெவ்வுரை என்றது நின் கணவன் இற்றைக்குப் பதினாறாம் நாள் திட்டிவிடம் என்னும் பாம்பால் உயிர் நீப்பன், அதனால் நீயும் தீயில் மூழ்குவை என்று சொன்ன சொற்களை. அந் நிகழ்ச்சியை 9 ஆம் காதை 48 ஆம் அடி முதலியவற்றால் உணர்க. பெரியவன்: புத்த பெருமான், கரியவன்: தேவேந்திரன்.

இதுவுமது

58-68: முற்ற...........ஆக

(இதன் பொருள்) முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது பொருளியல்புகளை எல்லாம் ஓதாதுணர்ந்த புத்த பெருமானையன்றி; மற்று அப் பீடிகை தன்மிசைப் பொறாஅது-மற்றையோர் யாரையும் அந்தப் பீடிகை தன்மேல் தாங்கமாட்டாது; பீடிகை பொறுத்த பின்னர் அல்லது வானவன் வணங்கான்-அப் பீடிகையானது தன் மேல் தாங்குமாற்றால் இவரே புத்த பெருமான் என்று அறிவித்த பின்னர் வணங்குதவதல்லது அவ்விந்திரன் வணங்குதல் இலன், இவ்வாற்றால்; மற்று அவ் வானவன் பெருமகற்கு அமைத்து-அத் தேவேந்திரன் புத்த பெருமான் இவன் என அறிந்துகொள்ளற்பொருட்டு இப் பீடிகையை அமைத்து வைத்து அப்பாலும்; தரும பீடிகை பிறந்தார் பிறவியை சாற்றுக என்று அருளினன்; இத் தரும பீடிகை இந் நிலவுலகத்துப் பிறந்த மாந்தருள் வைத்துத் தன்னை வலம் வந்து வணங்கியவருடைய முற்பிறப்பினையும் அறிவித்திடுவதாக என்று ஆணையிட்டருளினான்; ஆதலின் ஆயிழை பிறவியும் இருள் அறக்காட்டும் என்று எடுத்துரைத்தது-அக்காரணங்களால் இப் பீடிகை தன்மேல் பொறுக்குமாற்றால் புத்த பெருமானை இந்திரனுக்குக் காட்டித் தருவதோடன்றி ஆயிழாய் நின் முற்பிறப்பையும் விளக்கமாகக் காட்டாநிற்கும் என்று எடுத்துக் கூறியதாகிய; அருந்தவர் வாய்மொழி எனக்கு அன்றே போன்றது இன்று என்று ஏத்தி வலங்கொண்டு-அரிய தவத்தையுடைய பிரமதத்தருடைய மெய்ம்மொழி அவர் கூறிய அற்றை நாளில் இருந்தது போல இற்றை நாளும் எனக்குப் புதுமையுடையதாகவே இருக்கின்றது என்று சொல்லி ஏத்தி வலங்கொண்டு அப் புத்த பீடிகையை வாழ்த்தி வலம் வந்து; ஈங்கு இவள் இன்னணம் ஆக-இம் மணிபல்லவத்தீவின்கண் இம் மணிமேகலை இவ்வாறிருப்ப; என்க.

(விளக்கம்) முதல்வன்-புத்தர். வானவன்-இந்திரன். இந்திரன் புத்தரை அறிந்து கொள்ளுதற்கு இப் பீடிகையை இட்டனன். மேலும் அதுவே தன்னை வணங்கிய மாந்தர் பிறவியைச் சாற்றுக என்றும் அருளினன்; ஆதலால் அது உன் பிறவியையும் காட்டும் என்று கூறினான் என்றவாறு வாய்மொழி, அவன் கூறிய அன்று போலவே இன்றும் என் உள்ளத்தில் புதுமையாகவேயுளது என்று மணிமேகலை புத்தபீடிகையை வலங்கொண்டு ஏத்தினள் என்க.

புண்ணியராசன் தான் ஆ வயிற்றில் பிறந்தமையை அன்னையின்பால் கேட்டுணர்தல்

68-79: இறைவனும்...............நினைந்து

(இதன் பொருள்) இறைவனும் ஆங்கு அப்பொழில் விட்டு அகநகர் புக்கு-நாகபுரத்தில் மணிமேகலையால் அறிவுறுத்தப்பட்ட அரசனாகிய புண்ணியராசன் அப்பொழுதே அப் பூம்பொழிலை விட்டுத் தன் நகரத்தினுட் புகுந்து; தந்தை முனியா தாய் பசு ஆக வந்த பிறவியும் தன்னை வளர்த்த மணமுக முனிவனே தந்தையாகவும் தன்னை ஈன்ற தாய் ஒரு பசுவாகவும் தனக்கு வந்துள்ள அப் பிறப்பின் வரலாற்றையும்; மாமுனி அருளால் குடர்த்தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர் அடர்ப்பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்-மண்முக முனிவனுடைய அருள் காரணமாக அப் பசுவின் வயிற்றினும் ஏனைப் பசுக்கள் சூல் கொள்ளுமாறுபோலக் குடரால் தொடர்ந்த தசை மாலையாலே சுற்றப்படாமல் அச் சூலிடத்தே ஒரு தகடாகிய பொன்னாலியன்ற மூட்டையினுள்ளே கருவாகி வளர்ந்திருந்த தன்மையையும்; மக்களை இல்லோன் பூமிசந்திரன் மாமுனி அருளால் கொடு  போந்த வண்ணமும்-மக்கட் பேறில்லாதவனாகிய பூமிசந்திரன் என்னும் அரசன் சிறந்த அம் முனிவனுடைய திருவருளாலே தன்னை மகவாக ஏற்றுக் கொண்டு தன் அரண்மனைக்குக் கொண்டு வந்த தன்மையும் அப் பூமிசந்திரன் மனைவியாகிய; ஆய்தொடி அரிவை அமரசுந்தரி எனும் தாய் வாய் கேட்டு தாழ்துயர் எய்தி-அழகிய வளையலையணிந்த அரிவைப் பருவத்தினளாகிய அமரசுந்தரி எனும் பெயரையுடைய தன் தாயின் வாய்ச் சொல்லாலேயே கேள்வியுற்று மனம் தாழ்தற்குக் காரணமான துன்பத்தை எய்தி; இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம் பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து-ஆபுத்திரனாயிருந்து இறந்துபோன பிறவியின்கண் தன்னையீன்ற தாயாகிய பார்ப்பினி சாலி செய்த இழிதகைச் செயலையும் மாறிப் பிறந்துள்ள இப் பிறப்பினும் ஆ வயிற்றில் பிறந்த இழிதகைமையையும் நினைந்து என்க.

(விளக்கம்) இறைவன்-புண்ணியராசன். முனி-மண்முக முனிவன் அடர்ப்பொன்-தகடாகிய பொன். பூமிசந்திரன்-நாகபுரத்தரசன் அமரசுந்தரி-பூமிசந்திரன் மனைவி; புண்ணியராசன் வளர்ப்புத்தாய் இறந்த பிறவியின் யாய் என்றது ஆபுத்திரனை ஈன்ற தாயாகிய பார்ப்பனியை; அவள் செய்ததாவது ஈன்ற குழவிக் கிரங்காளாய்த் தோன்றாத் துடவையின் இட்டுச் சென்றமை. பிறந்த பிறவியின் பெற்றி என்றது விலங்கின் வயிற்றில் பிறந்த இழிதகைமையை.

புண்ணியராசன் அமைச்சனுக்குக் கூறுதல்

80-92: செருவேல்...............சாற்றி

(இதன் பொருள்) செருவேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க-போர்க் கருவியாகிய வேல் ஏந்திய அரசர்கள் தங்குறை கூறுதற்குச் செவ்வி பெறாமல் அதனை எதிர்பார்த்து அது பெறுமளவும் அரண்மனை வாயிலின்கண் வாடிக்கிடப்ப; அரைசு வீற்றிருந்து புரையோர் பேணி-அரைசு கட்டிலில் ஏறிச் செம்மாந்திருந்து சான்றோரைப் போற்றுதல் செய்தும்; நாடகம் கண்டு நாடகத்தைக் கண்ணால் கண்டு களித்தும்; பாடல் பான்மையின் கேள்வி இன் இசை கேட்டு-பண்ணினது பண்பினால் உண்டாகின்ற கேட்டற்கியன்ற இனிய இசைகளைக் கேட்டு இன்புற்றும்; தேவியர் ஊடல் செவ்வி பார்த்து-உவளகத்தில் தேவிமார் ஊடியிருக்கின்ற செவ்வியைத் தெரிந்துகொண்டு நீடாது பாடகத் தாமரை சீறடி பணிந்து-அவர் ஊடல் நீடிக் காமவின்பம் பதன் அழிந்து கெடாமைப் பொருட்டு அவ்வூடலைத் தீர்த்தற்குப் பாடகம் அணிந்த தாமரைப் பூப்போன்ற மென்மையுடைய அவருடைய சிறிய அடிகளிலே விழுந்து வணங்கி அவ்வூடலைத் தீர்த்த பின்னர்; தேம் மரு கொங்கையில் குங்குமம் எழுதி-ஊற்றினிமை பொருந்தி அவர்தம் கொங்கையின் மேல் குங்குமச் சாந்து கொண்டு தொய்யில் எழுதி; அம் கையில் துறுமலர் சுரி குழல் சூட்டி-அழகிய தனது கையாலே செறிந்த மலர் மாலையை எடுத்துச் சுருண்ட அவர் தம் கூந்தலிலே சூட்டி விட்டு; நறுமுகை அமிழ்துறூஉம் திருநகை அருந்தி-நறிய முல்லையரும்பு போன்ற அழகிய எயிற்றில் ஊறும் ஊறலாகிய அமிழ்தத்தையொத்தி நீரைப் பருகி; மதிமுக கருங்கண் செங்கடை கலக்க-முழுமதி போன்ற அவர்தம் முகத்தின்கண்அமைந்த கரிய கண்ணினது சிவந்த கடைக்கண்ணோக்கம் நெஞ்சத்தைக் கலக்க அச் செவ்வி பார்த்து; கருப்பு வில்லி அருப்புக்கணை தூவ-காமவேள் தனது மலர்க்கண்களை ஏவுதலாலே; தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து-முனைத்தெழுந்த காம நுகர்ச்சியாகின்ற இன்பமாகிய கள்ளையுண்டு களித்திருக்கும் இவ்வில்லற வாழ்க்கையை அதன் புன்மை நோக்கி இகழ்ந்து தள்ளி, தூ அறத் துறத்தல் நன்று எனச் சாற்றி-சிறிதும் பற்றின்றித் துறந்து போதலே நன்றாம் என்று சொல்லிக் காட்டி; என்க.

(விளக்கம்) செவ்வி பார்த்து உணங்குவதாவது தம்குறை கூறுதற் கேற்ற மனமொழி மெய்கள் இனியனாம் காலம் வருந்துணையும் அதனை எதிர்பார்த்து முற்றத்தில் வாடிக்கிடத்தல். அரசு கட்டிலில் ஏறி வீற்றிருந்து என்க; வீற்றிருத்தல்-இறுமாந்திருத்தல், புரையோர்-பெரியோர்; அவராவார் சான்றோரும் அமைச்சரும் ஆசிரியரும் முதலியோர். நாடகம்-கண்டின்புறும் கலை. பாடல்-கேட்டின்புறும் கலை என்பது பற்றி நாடகங் கண்டு இசை கேட்டு என்றான். செவ்வி பார்த்து நீடாது அடிபணிந்து அதனைத் தீர்த்து என்க, இதனோடு

உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றா ளீள விடல்     (குறள்: 1302)

எனவும்

மலரினு மெல்லிது காமஞ் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்      (குறள்: 1289)

எனவும் வரும் திருக்குறள்களும் நினைக்கத்தகும். துறுமலர்-செறிந்த மலர். அமிழ்து உறூஉம் நகை-என்பது ஆகுபெயர். நகையின்கண் ஊறிய அமிழ்தம் போன்ற நீரை அருந்தி என்க. செங்கடை கலக்க-சிவந்த கடைக்கண்ணில் காமக்குறிப்புத் தோன்றித் தம் நெஞ்சத்தில் கலக்க எனினுமாம். கருப்பு வில்லி-காமவேள். தருக்கிய காமம்-முனைத்த காமம். தூஅற-பற்றுக் கோடற்றுப்போம்படி.

அரசன் மொழிகேட்ட அமைச்சகன் செயல்

93-104: தெளிந்த............ஆயது

(இதன் பொருள்) தெளிந்த நாதன் என் செவி முதல் இட்ட வித்து ஏதம் இன்றாய்-மெய்ப்பொருளைத் தெளிந்த தலைவனாகிய தருமசாவகன் என்னும் துறவோன் என்னுடைய செவியாகிய நிலத்தின்கண் விதைத்த விதையானது அழிவிலதாய் முளைத்துப் பயிராகி; மணிமேகலைதான் காரணமாக இன்று விளைந்தது-மணிமேகலையாகிய முகில் அருள் மழை பெய்தல் காரணமாக இற்றை நாள் நன்கு விளைந்தது; என்று அணி மணி நீள் முடி அரசன் கூற-என்று அழகிய மணியாலியன்ற நெடிய முடியையுடைய புண்ணியராசன் கூறாநிற்ப; மந்திரி சனமித்திரன் மன் மனம் வேறாயினன் என-அமைச்சனாகிய அச் சனமித்திரன் என்பவன் அரசன் மொழி கேட்டு இவ்வரசன் தன்மனம் வேறுபட்டிருக்கின்றான் என்று கருதி; அவன் தாள் தொழுது ஏத்தி எங்கோவாழி என் சொல் கேள்மதி-அப் புண்ணியராசனுடைய அடிகளில் வீழ்ந்து வணங்கிப் புகழ்ந்து எங்கள் அரசே நீடுழி வாழ்வாயாக அடியேன் சொல்லையும் சிறிது கேட்டருள்வாயாக; நும் கோன் உன்னைப் பெறுவதன் முன் நாள்-உன் தந்தையாகிய அரசன் உன்னை மகவாக ஏற்றுக்கொள்வதன் முன் சென்ற காலத்தே; இப் பதிகெழு நல்நாடு பன்னீராண்டு மன் உயிர் மடிய மழை வளம் கரந்து-இவ்வரசாட்சிக்குட் பொருந்திய நல்ல இச் சாவக நாடு தன்னிடத்தே நிலைபெற்ற உயிரினங்கள் இறந்தொழியுமளவு மழை பெய்யாது தன் வளத்தைக் கரந்து கொள்ளப்பட்டு; இங்கு ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி தான் தனி தின்னும் தகைமையது ஆயது-இங்குத் தாயானவள் தானீன்ற குழந்தை பசித்த அழுதல் கண்டும் அதற்கு இரங்காதவளாய் அரிதாகத் தான் பெற்ற உணவைத் தானே தனித்திருந்து தின்னுகின்ற இழிதகைமையை உடையதாயிருந்தது என்றான்; என்க.

(விளக்கம்) நாதன்: தருமசாவகன் செவி முதல்: முதல்-ஏழாவதன் சொல்லுருபு. ஏதம்-குற்றம்; செவியாகிய கழனியில் எனவும் மணிமேகலையாகிய முகில் எனவும் கூறிக் கொள்க. நீள்முடி-வழிவழியாக நீண்டு வருகின்ற முடியென்க. மன்-மன்னன்; மந்திரியாகிய சனமித்திரன் என்க. அவன்:புண்ணியராசன் கேள்மதி. ஈண்டு மதி: முன்னிலையசை. நுங்கோன் என்றது பூமிசந்திரனை. நன்னாடு-நல்ல சாவக நாடு வளங்கரந்து தகைமையது ஆயது என்க.

இதுவுமது

105-115: காய்............அன்றே

(இதன் பொருள்) காய் வெம் கோடையில் கார் தோன்றியது என நீ தோன்றினையே-கதிரவனால் சுடப்பெற்ற வெவ்விய முதுவேனிற் பருவத்தில் கார்ப்பருவம் தோன்றினாற் போல அத்தகைய வற்கடப்பொழுதிலே நீ இந் நாட்டின்கண் வந்து பிறந்தாய்; நிரைத்தார் அண்ணல் தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்கட்கு வானம் பொய்யாது- நிரல்படத் தொடுத்து மலர்மாலை யணிந்த தோன்றலாகிய நீ பிறந்த பின்பு இந் நாட்டிலே பிறந்த உயிர்கட்கு மழை பெய்யாமல் பொய்ப்பதில்லை; மண்வளம் பிழையாது ஊன் உடை உயிர்கள் உறுபசி அறியாநிலம் தனது வளமாகிய உணவுப் பொருள்களை வழங்குவதில் தப்புவதில்லை ஆதலன் உடம்பொடு பிறந்த உயிர்கள் மிக்க பசியை ஒரு பொழுதும் அறியாவாயின், இங்ஙனமாகலின்; நீ ஒழி காலை நின்நாடு எல்லாம் தாய் ஒழி குழவி போல கூஉம்-நீ துறந்து போன காலத்தில் நின் ஆட்சியின்கண்பட்ட இந்த நாட்டில் வாழும் உயிர்களெல்லாம் தாய் இறந்துபோன குழந்தை போலத் துன்புற்று நின்னைக் கூப்பிட்டழும் அல்லவோ; துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ உயர்நிலை உலகம் வேட்டனை ஆயின்-இவ்வாறு துயருறுகின்ற நிலைமையையுடைய இவ்வுலகத்துயிர்களைப் பாதுகாக்கும் கடமையைக் கை விட்டு நீ மட்டும் மேனிலை உலகம் புகுந்து இன்புறுதலை விரும்புவாயானால்; இறைவ உயிர்கள் இறுதி எய்தவும் பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே-அரசனே இவ்வுலகத்து உயிர்களெல்லாம் துன்பத்தால் துடித்து இறக்கும்படி கைவிட்டு நீ மட்டும் இன்பப் பேற்றினை விரும்பிச் சென்றாய் ஆகுவை அல்லையோ; என்க.

(விளக்கம்) காய் வெங்கோடை-முதுவேனிற் பருவம்; கார்-கார்ப்பருவம்; முகில் எனினுமாம். அண்ணல்-தலைமைத் தன்மையுடையோன். வானம்; ஆகுபெயர். உறுபசி-மிக்கபசி. கூஉம்-கூப்பிடும். தாயில் தூவாக் குழவி போல ஓவாது கூஉம் என்பது புறநானூறு. (4) உயர்நிலை உலகம்-வீட்டுலகம். இறுதி-சாவு. பெறுதி-பேறு (ஊதியம்)

புண்ணியராசன் செயல்

116: 126: தன்னுயிர்..........ஏறினன்

(இதன் பொருள்) தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால்-தன் உயிர் துன்புறுதல் கருதி ஒரு சிறிதும் இரங்காதவனாய்ப் பிற உயிர்களின் துன்பம் தவிர்த்துப் பாதுகாக்கின்ற மன்னுயிர் முதல்வனாகிய புத்தபெருமான் திருவாய்மலர்ந்தருளிய அறத்தினும் சேர்ந்ததன்று நீ கூறும் இத்துறவு; மன்னவ மதிமாறு ஓர்ந்தனை என்று முதுமொழி கூற-அரசே நீ அறிவுக்கும் பொருந்தாது. மாறுபடுகின்ற ஒன்றனை நினைந்தனை என்று அவ்வமைச்சன் அறிவுரை கூறா நிற்ப; முதல்வன் கேட்டு-அரசனாகிய அப் புண்ணியராசன் அது கேட்டு அமைச்சனை நோக்கிக் கூறுபவன்; மணிபல்லவம் அரிதால்-அமைச்சனே நின்னறிவுரை சாலவும் நன்றே காண்! நீ விரும்பியவாறே யான் துறவி யாவே னல்லேன் ஆயினும் மணிபல்லவத் தீவிற்குச் சென்று ஆண்டுள்ள புத்தபீடிகையை வலம் வந்து வணங்குதற்கு என் நெஞ்சத்திலுண்டான தணியாத விருப்பமானது யான் அது செய்யாமல் தணித்தற்கியலாததா யிருக்கின்றது ஆதலால்; ஒரு மதி எல்லை அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும் காத்தல் நின் கடன் என-யான் அங்குச் சென்று மீளும் பொருட்டு ஒரு திங்கள் முடியுந் துணையும் இவ்வரசாட்சியையும் உரிமை மகளிரையும் இவ்வக நகரில் வாழும் அரசியல் சுற்றத்தாரையம் காவல் செய்தல் உன் கடமையாகும், என்று சொல்லி அவற்றை யெல்லாம் அவ்வமைச்சன்பால் ஓம்படை செய்தபின்னர் அப் புண்ணியராசன்; கலம் செய் கம்மியர் வருக எனக் கூஉய்-தன் மரக்கலத்திலே தொழில் செய்யும் நீகான் முதலிய தொழிலாளர் வருவாராக என்றழைத்து அவரோடு; இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி வங்கம் ஏறினன்-விளங்குகின்ற நீரையுடைய கடல் அலை யெறிகின்ற கரையை யடைந்து மரக்கலத்தில் ஏறினன்; என்க.

(விளக்கம்) மன்னுயிர் முதல்வன்-புத்த பெருமான். அறமும் ஈதன்றால் என்புழி, உம்மை இழிவு சிறப்பு மதி-அறிவு முதுமொழி அறிவுரை. முதல்வன்: புண்ணியராசன். உரிமை-அரசன் மனைவி முதலிய மகளிர் சுற்றம்-ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் ஆம்; ஒருமதி-ஒரு திங்கள்(முப்பது நாள்) கம்மியர்-தொழிலாளர் வங்கம்-மரக்கலம்; முதல்வன் கேட்டு நின் கடன் என ஓம்படைசெய்து கூஉய் எய்தி ஏறினன் என்க.

புண்ணியராசனை மணிபல்லவத்தில் மணிமேகலை வரவேற்றல்

126-134: மணி...............மன்னவன்

(இதன் பொருள்) மணிபல்லவத்து இடை அக்கலம் தங்காது சென்று சார்ந்து இறுத்தலும்-மணிபல்லவத்தீவிற்கு இடையிலே சிறிதும் தங்காமல் அம் மரக்கலம் சென்று அத் தீவினை அணுகித் துறையின்கண் தங்குதலும்; புரைதீர் காட்சி பூங்கொடி பொருந்தி-குற்றமில்லாத மெய்க்காட்சியையுடைய பூங்கொடி போல்வாளாகிய மணிமேகலை அக் கடல் துறையின் பக்கத்தே வந்து போக்கியவள்; அரைசன் கலம் என்று அகமகிழ்வு எய்தி-அக் கலத்தின் வரவு கண்டு இது புண்ணியராசனுடைய மரக்கலமென்று துணிந்து உளம் பெரிதும் மகிழ்ந்து; காவலன் தன்னொடும் கடல்திரை உலாவும் தேமலர் சோலை தீவகம் வலம் செய்து-கலத்தினின்றும் வந்து கரையேறிய அப் புண்ணியராசனையும் வரவேற்று அவனோடும் கடலினது அலை வந்து உலாவுகின்ற தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகளோடு கூடிய அம் மணிபல்லவத்தீவை வலமாக வந்து அவ்வரசனுக்கு மணிமேகலை; பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் தருமபீடிகை இது எனக் காட்ட-அரசே உதோ பார் பழம் பிறப்பினை உணரச் செய்யும் தெய்வத் தன்மையுடைய தரும பீடிகை இது தான் என்று கட்டாநிற்ப; மன்னவன் வலம் கொண்டு ஏத்தினன்-அப் புண்ணியராசனும் பெரிதும் மகிழ்ந்து அப் புத்த பீடிகையை வலம் வந்து வீழ்ந்து வணங்கி வாழ்த்து வானாயினன்; என்க

(விளக்கம்) இறுத்தலும்-தங்குதலும். புரைதீர் காட்சி-மெய்க் காட்சி. அரைசன்: போலி. காவலன்: புண்ணியராசன். தேம்-தேன். தீவகம்-தீவு. பெருமகன்: அண்மைவிளி. மன்னவன்: புண்ணியராசன்.

புண்ணியராசன் பழம் பிறப்புணர்ந்து சிந்தாவிளக்கு என்னும் தெய்வத்தைப் புகழ்ந்தேத்துதல்

134-147: மன்னவற்கு............பாவாய்

(இதன் பொருள்) மன்னவற்கு உயர் மணிப்பீடிகை-அங்ஙனம் வாழ்த்திய அப் புண்ணியராசனுக்கு உயர்ந்த மணிகளால் இயன்ற அப் புத்த பீடிகை; மையறு மண்டிலம் கை அகத்து எடுத்து காண்போர் முகத்தைப் போல-குற்றமில்லாத கண்ணாடி வட்டம் தன்னைக் கையிலெடுத்துப் பார்ப்பவரின் முகத்தைக் காட்டுதல் போல; உலந்த பிறவியைக் காட்ட-கழிந்த பிறப்பினைக் காட்டா நிற்ப அது கண்ட அவ்வரசன் அக் காட்சியினூடே சிந்தாவிளக்கு என்னும் தெய்வத்தையும் கண்டு கூறுபவன்; என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன்-என்னுடைய முற்பிறப்பாகிய ஆபுத்திரன் பிறப்பையும் அறிந்து கொண்டேன் என் நெஞ்சத்தில் நின்ற துன்பம் முழுவதும் தீரவும் பெற்றேன்; தென் தமிழ் மதுரை செழும்கலை பாவாய்-நாவலந்தீவின்  தென்திசையின்கண் செந்தமிழ் வழங்கும் மதுரைமா நகரத்தின்கண் செழுங்கலை நியமமென்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளி இருக்கின்ற சிந்தாவிளக்கென்னும் தெய்வப் பாவையே! இப் பேற்றிற்குக் காரணம் நீயேயாவாய்; மாரி நடுநாள் வயிறு காய் பசியால் ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து-பண்டொரு காலத்தே கார்ப்பருவத்தில் மழை பொழிந்து கொண்டிருந்த ஒரு நாளின் நள்ளிரவிலே தம் வயிறு தம்மைச் சுடுகின்ற பசித்தீயினுக் காற்றாமையால் நிறைந்த இருளையும் அஞ்சாமல் அம்பலத்திற்கு வந்து; ஆங்கு இரந்து ஊண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு-அவ்வம்பல மருங்கில் பிச்சையேற்றுண்ணும் வாழ்க்கையையுடையேனாய்த் துயின்றிருந்த என்னிடத்தே வந்து உணவு இரந்தவர்களுக்கு; அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில்-பசிதீர அருந்துதற்குரிய உணவு கொடுத்தற்கு வழிகாணாமல் வருந்துவேனாகிய என் கையில்; ஏடா அழியல் எழுந்து இது வந்து இத் திருவோட்டினை ஏற்றுக் கொள்வாயாக; நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது என-இந்நாடு முழுவதும் வறுமையுற்று வருந்தினும் இத்திருவோடு தன்கண் உணவின்றி வறுமையுறாது காண் என்று சொல்லி; அமுத சுரபி அம்கையில் தந்து என் பவம் அறுவித்த வானோர் பாவாய்-அமுதசுரபி என்னும் அத் தெய்வத் தன்மையுடைய பிச்சைப் பாத்திரத்தை என்னுடைய அகங்கையில் வழங்குமாற்றால் என்னுடைய பழவினைத் தொகுதியை அறச்செய்து என்னை உய்வித்த தெய்வங்களுக்கும் தெய்வமாகிய கலைத்தெய்வமே என்று வாழ்த்தி; என்க.

(விளக்கம்) மன்னவற்கு: புண்ணியராசனுக்கு. உலந்த பிறவி கழிந்த பிறப்பு; அஃதாவது ஆபுத்திரனாகிய முற்பிறப்பு, மையறு மண்டிலம்-குற்றமற்ற கண்ணாடி. வயக்குறு மண்டிலம் (கலி-25) என வருதலும் காண்க. மன்னவற்கு. காண்போர் முகத்தைக் கண்ணாடி காட்டுதல் போல பீடிகை உலந்த பிறவியைக் காட்ட என்க. என் பிறப்பறிந்தேன் என்பது தொடங்கிப் புண்ணியராசன் தன் முற்பிறப்பாகிய ஆபுத்திரனுக்கு நிகழ்ந்தவற்றை அகக்கண்ணின் முன் கண்டு கூறுவன மதுரையில் ஆபுத்திரன் அமுதசுரபி பெற்ற வரலாறு பாத்திர மரபு கூறிய காதையில் கூறப்பட்டுள்ளது. பவம்-பழவினைத் தொகுதி; பிறப்புக்குக் காரணமான சார்பு

இதுவுமது

148-157: உணர்வில்...........யிருப்ப

(இதன் பொருள்) உணர்வில் தோன்றி உரைப்பொருள் உணர்த்தும் மணிதிகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி-உயர்திணை உயிர்களின் உள்ளுணர்வினுள் எழுந்தருளி அவர்க்கு இன்றியமையாத சொல்லின் பொருள்களை உணர்த்துகின்ற பளிக்கு மணியில் திகழ்ந்து விரிகின்ற ஒளி போன்று வெண்மையான ஒளியையுடைய திருமேனி படைத்த கலைமகளே நின்னுடைய திருவடிகள்; தேவர் ஆயினும் பிரமர் ஆயினும் நாமாசு கழூஉம் நலங்கிளர் திருந்து அடி-தேவர்களாயிருந்தாலும் பிரமர்களாயிருந்தாலும் அவர்களுடைய நாவினது குற்றத்தைப் போக்கி நலந்தோற்றுவிக்கும் அழகிய தெய்வத் தன்மையுடைய அடிகளாதலால் எளியேன்; பிறந்தபிறவிகள் பேணுதல் அல்லது-எத்தனை பிறப்புப் பிறந்தாலும் அவற்றை வழிபாடு செய்து வாழ்வதல்லது; மடந்தை மறந்து வாழேன் என்று ஏத்தி-நா மடந்தையே மறந்து கணப்பொழுதும் வாழ்கிலேன் கண்டாய் என்று சொல்லி வாழ்த்தி; மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து தென் மேற்கு ஆகச் சென்று-அப் புண்ணியராசன் மணிமேகலையோடு அவ்விடத்தினின்றும் எழுந்துதென்மேற்றிசையிலே சென்று; திரை உலாம் கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர் தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப-அத் திசையில் எதிர்ப்பட்ட அலை உலாவுகின்ற கோமுகி என்னும் பெயரையுடைய பொய்கையினது கரையிடத்தே ஒரு தூய மலரையுடைய புன்னை மரம் நிற்கின்ற துறையிடத்தே அப் புன்னை நிழலில் இளைப்பாறி இராநிற்ப; என்க.

(விளக்கம்) கலைமகள் உணர்விற்கு உணர்வாய் நின்று சொற்பொருள் உணர்த்தும் தெய்வம் என்கின்றான். கலைமகள் வெண்ணிறம் உடையள் ஆதலின் பளிக்கு மணியின் ஒளியை உவமை கூறினான்; மணிமுத்து எனினுமாம். தெய்வங்களுக்கும் நலமுண்டாக்கும் திருந்தடி நின்னுடைய அடி ஆதலால் யானும் அவற்றைப் பேணுதல் அல்லது மறந்து வாழேன் என்றான்; பிறந்த பிறவிகள்-பிறக்கும் பிறவிகள் தோறும் என்றவாறு.

தீவதிலகை என்னும் தெய்வம் தோன்றிப் புண்ணியராசனைப் புகழ்தல்

158-167: ஆபுத்திரன்.........இவைகாண்

(இதன் பொருள்) ஆபுத்திரனோடு ஆயிழை இருந்தது காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி-அவ்வாறு ஆபுத்திரனாகிய புண்ணியராசனோடு மணிமேகலை புன்னை நீழலின்கண் வீற்றிருந்த தனை அத் தீவகத்தின் காவற்றெய்வமாகிய தீவதிலகை கண்டு பெரிதும் மகிழ்ந்து திருவுருவங்கொண்டு அவர்கள் முன்னிலையில் சென்று புண்ணியராசனை நோக்கி; அருந்து உயிர் மருந்து முன் அம் கையில் கொண்டு பெரும் துயர் தீர்த்த அப் பெரியோய் வந்தனை-உயிர்கள் உண்ணும் உணவாகிய உயிர் மருந்தினைச் சுரந்து வழங்கும் அமுதசுரபியை முன்பு அகங்கையில் ஏந்திக் கொண்டு ஆருயிர்களின் பெரிய பசித்துன்பத்தைத் தீர்த்தருளிய அந்த ஆபுத்திரனாகிய பெரியோய் நீ மாறிப் பிறந்தும் ஈண்டு வந்துற்றனை; அந்நாள் நின்னை அயர்த்துப் போயினர் பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி-அந்தக்காலத்திலே உன்னை மறந்து மரக்கலம் ஏறிப்போனவர்களில் சிலர் பிற்றை நாளில் நினைவு கூர்ந்து மீண்டும் இங்கு வந்து நீ உண்ணா நோன்பின் உயிர் நீத்த தன்மையை அறிந்து வருந்தி; நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண்- நீ உண்ணா நோன்பிருந்த இடத்திலேயே தாமும் உண்ணா நோன்பிருந்து உடம்பினது எலும்புக் கூடுகள் இதோ கிடக்கின்றன இவற்றையும் காண்பாயாக அப்பாலும் ஆங்கு அவர் இட உண்டு அவர் உடன் வந்தோர் ஏங்கி மெய்வைத்தோர் என்பும் இவை காண்-அவ்வாறிறந்த செட்டி மக்கள் உணவு கொடுப்ப உண்டு அவரோடு வந்தவர்கள் அவர் இறந்தமை கண்டு துன்பத்தால் ஏங்கி இவ்விடத்தே இறந்தோரும் சிலர் உளர் அவர்கள் எலும்புக் கூடுகளும் இதோ கிடக்கின்றன இவற்றையும் காண்பாயாக என்றாள்; என்க.

(விளக்கம்) உயிர் மருந்து-அமுதசுரபி:ஆகுபெயர். அங்கை அகங்கை; உள்ளங்கை. அப்பெரியோர் என்றது அவ்வாபுத்திரன் ஆகிய பெரியோய் என்றவாறு. அந்நாள் என்றது முற்பிறப்பிலே மதுரையிலிருந்து மரக்கலமேறி இத் தீவத்தை அடைந்த அந்த நாளிலே என்றவா. பெற்றிமை என்றது உண்ணாநோன்போடு உயிர்பதிப் பெயர்த்தமையை; இவ் வரலாறு பாத்திர மரபு கூறிய காதையில் கூறப்பட்டுள்ளது. நீன்குறி-நீயிருந்த இடம். அவ்விடத்துத் தாமும் உண்ணா நோன்புடன் இருந்து அவரும் உயிர்நீத்தனர் என்னும் பொருளும் தோன்ற நின்குறி இருந்து தம்முயிர் நீத்தோர் என்றாள். இட உண்டவர்-உணவு கொடுக்க வாங்கி உண்டவர். மெய் வைத்தோர் என்றது இறந்தோர் என்றவாறு. என்பு-எலும்பு.

தீவதிலகை புண்ணியரசனுக்கு அவனது முற்பிறப்பின் உடல் என்பினைக் காட்டல்

168-174: ஊர்திரை.............ஆயினை

(இதன் பொருள்) ஊர்திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப ஆய் மலர்ப்புன்னை அணி நிழல் கீழால்-ஊர்ந்து வருகின்ற அலைகள் கொணர்ந்து சேர்த்த இவ்வுயர்ந்த மணல் புதைத்து விட்டமையால் அழகிய மலரையுடைய இப் புன்னை மரத்தின் நிழலில் இம் மணற்குவியலின் கீழே அன்புடை ஆர் உயிர் அரசற்கு அருளிய என்புடை யாக்கை இருந்தது காணாய்-அன்புடைய தனது உயிரைப் புண்ணியராசனாகிய உனக்கு வழங்கிவிட்ட எலும்புகளையுடைய உடம்பு உங்கே கிடந்தது அதனையும் நீ கண்டு கொள்வாயாக, இவ்வாற்றால் நீ தானும்; நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்-நின்னுடைய உயிரையும் கொன்றொழித்தனை நின்னுடைய உயிரையும் கொன்றொழித்தனை நின்னுடைய உயிர் வருந்து மென்பதற்கிரங்கிப் பிற்காலத்தே நின்னைக் காண வந்த அன்புமிக்க பிறருடைய உயிர்களையும் கொன்றொழித்தாய்; கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை-இவ்வாறு பல கொலைகள் செய்த தீவினையாளன் அல்லையோ நீ அங்ஙனமிருந்தும் நீ அரசனாகப் பிறந்துள்ளனையே இஃதொரு வியப்பிருந்தவாறு! என்று அத் தெய்வம் புண்ணியராசனுக்குச் சொல்லி வியந்து என்க.

(விளக்கம்) ஊர்திரை: வினைத்தொகை. ஆய் மலர்-அழகிய மலர். அன்புடை ஆருயிர் அரசற்கு அருளிய என்புடை யாக்கை என்றது அந்த யாக்கையிலிருந்த உயிரே இப்பொழுது புண்ணியராசனுடைய உயிராயிருப்பதுபற்றி ஆபுத்திரன் யாக்கை உயிருடன் இருக்கும் பொழுது ஆற்றாமாக்களுக்கு உண்டி கொடுத்ததூஉமின்றி இறக்கும் பொழுது தன்னுயிரை அரசன் ஒருவனுக்கு வழங்கியது என்னும் நயம்பட உரைத்தமை உணர்க. பல உயிர்களைக் கொன்றும் கொற்றவன் ஆயினை என்றது மருட்கை அணி. கொலைவன்-கொலைத் தொழிலாளன் இதனை வஞ்சப்புகழ்ச்சி எனலுமாம்.

தீவதிலகை மணிமேகலைக்குக் கூறுதல் புகார் நகரம் கடல் கோட்படுதல்

175-186: பலர்................கொடுத்தலும்

(இதன் பொருள்) பலர்தொழு பாத்திரம் கையின் ஏந்திய மடவால் நல்லாய் நின் தன் மாநகர் கடல் வயிறு புக்கது-பின்னர் அத் தீவதிலகை மணிமேகலையை நோக்கிப் பலராலும் தொழத்தகுந்த மாபெரும் பாத்திரமாகிய அமுதசுரபியைக் கையில் ஏந்துதற்குரிய செய்தவமுடைய மணிமேகலை நல்லாய் ஒன்று கேள்! அஃதாவது உன்னுடைய பெரிய நகரமாகிய பூம்புகார் நகரம் கடலில் அழுந்தி மறைந்தது காண்; காரணம் கேளாய்-அங்ஙனம் மறைந்ததற்குரிய காரணத்தையும் கூறுவல் கேட்பாயாக; நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள் பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள்-நாக நாடென்னும் நல்ல நாட்டை ஆள்பவனாகிய வளைவணன் என்னும் அரசனுடைய மகள் பீலிவளை என்னும் பெயரை உடையவள் மகளிருள் மாண்பு மிக்கவன் ஆவாள்; பனிப்பகை வானவன் வழியில் தோன்றிய புனிற்று இளம் குழவியொடு பூங்கொடி பொருந்தி கதிரவனாகிய தெய்வத்தின் மரபிலே பிறந்ததும் ஈன்றணிமைக் காலத்ததுமாகிய தன் பச்சிளங் குழவியோடே பூங்கொடி போல்வாளாகிய அப் பீலிவளை இம் மணிபல்லவத் தீவகத்தில் வந்து; இத்தீவகம் வலம் செய்து தேவர்கோன் இட்ட மாபெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி இம் மணிபல்லவத்தீவை வலம் வந்து பின்னர் அதனுள்ளே தேவேந்திரனால் இடப்பட்ட மிகவும் பெருமையுடைய புத்த பீடிகையையும் கண்டு அதனையும் வலம் வந்து வணங்கி ஏத்தும்பொழுது; கம்பளச் செட்டி கலம் வந்து இறுப்ப-கம்பளச் செட்டி என்னும் ஒரு வணிகனுடைய மரக்கலமானது இத் தீவின் துறையில் வந்து தங்கா நிற்ப; அங்கு அவன் பால் சென்று அவன் திறம் அறிந்து-அப் பீலிவளை தன் குழவியோடு அவ் வணிகன்பால் சென்று அவ் வணிகன் காவிரிப்பூம்பட்டினத்து வணிகன் என்பதனையும் அவன் மரக்கலம் அப்பொழுது அந் நகரத்திற்கே போக விருக்கிறது என்னும் அவனுடைய வரலாறு முழுவதும் தெரிந்துகொண்ட பின்னர்; இவன் கொற்றவன் மகன் கொள்க எனக் கொடுத்தலும்-வணிகனே இம் மைந்தன் உன்னுடைய அரசனாகிய நெடுமுடிக்கிள்ளியினுடைய மகனாவான் ஆகவே இவனை அவன்பால் சேர்ப்பித்தற் பொருட்டு இக் குழந்தையை நீ ஏற்றுக்கொள், நீ அந் நகரத்திற்குச் சென்றவுடன் அவ்வரசன்பால் ஒப்பித்திடுக என்று அறிவுறுத்துக் கொடா நிற்ப; என்க. 

(விளக்கம்) பாத்திரம்-அமுதசுரபி மாநகர்-காவிரிப்பூம் பட்டினம். கடல் வயிறு புகுதலாவது கடல் கோட்படுதல், மேலே காவிரிப்பூம்பட்டினம் கடல் வயிறு புகுந்தமைக்குக் காரணம் கூறப்படுகின்றது நாக நன்னாடாள்-வளைவணன் பனிப்பகை வானவன் கதிரவன். பீலிவளை-கதிரவன் குலத்தோன்றலாகிய நெடுமுடிக்கிள்ளிக்குக் கருக்கொண்டு ஈன்ற மகவாதலின் கதிரவன் வழியில் தோன்றிய குழவி என்றாள். புனிறு-ஈன்றணிமைக் காலம். தீவகம்-மணிபல்லவம். பீடிகை-புத்த பீடிகை. இறுப்ப-தங்க அவன் திறம்-அச் செட்டி பூம்புகார் நகரத்திற்குப் போகின்றவன் என்பது முதலிய வரலாறு. கொற்றவன்: நெடுமுடிக்கிள்ளி. கொற்றவன் மகன் இவன் கொள்க என்றது நின் கொற்றவன் மகனாதலின் இவனைக் கொடுபோய் அக் கொற்றவன்பால் கொடுத்திடுக என்னும் குறிப்புப் பொருள் கொண்டு நின்றது.

இதுவுமது

187-197: பெற்ற.......ஒழிந்தது

(இதன் பொருள்) பெற்ற உவகையன் பெருமகிழ்வு எய்தி-இத்தகையதொருபேறு பெற்றமையால் மகிழ்ந்தவன் அம் மகவினைப் பார்த்து மேலும் பெரிதும் மகிழ்ந்து; பழுது இல் காட்சி பைந்தொடி புதல்வனை தொழுதனன் வாங்கி-குற்றமற்ற தோற்றத்தையுடைய அப் பீலிவளை ஈந்த மகவினைக் கைதொழுது ஏற்றுக்கொண்டு தன் மரக்கலத்திற்கு வந்து; துறை பிறக்கு ஒழிய கலம் கொண்டு பெயர்ந்த அன்றே-அத் துறை பின்னே கிடக்கும்படி தன் மரக்கலத்தைச் செலுத்திக் கொண்டு போன அற்றை நாளிலே; கார் இருள் இலங்குநீர் அடை கரை அக்கலம் கெட்டது-கரிய இருளையுடைய இரவிலே விளங்குகின்ற அலைநீர் சென்றடைகின்ற கரை இருளையுடைய இரவிலே விளங்குகின்ற அலைநீர் சென்றடைகின்ற கரை மருங்கில் அம் மரக்கலம் உடைந்தொழிந்தது; கெடுகல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது வடிவேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப-மூழ்கிய அம் மரக்கலத்தினின்றும் உய்ந்து கரையேறிய மாந்தர் சென்று பீலிவளை கொடுத்த குழவியை இழுந்துவிட்ட செய்தியை வடித்த வேலேந்திய நெடுமுடிக்கிள்ளி மன்னவனுக்கு அறிவியா நிற்ப; மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன் நல்மணி இழந்த நாகம் போன்று-அச்செய்தி கேட்ட அச் சோழ மன்னவன் தன் மகவிற்கு நேர்ந்த அக் கேட்டினைப் பொறாதவனாய் நல்ல மணியை இழந்துவிட்ட யாகப்பாம்பு போலே; கானலும் கடலும் கரையும் தேர்வுழி வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது-அக் குழந்தையைக் காணும் பொருட்டுக் கடற்கரைச் சோலையிலும் கடலினூடும் கரை மருங்கினும் தேடித் திரிகின்றபொழுது இந்திரவிழா வெடுத்தலை அப் பூம்புகார் நகரம் ஒழிவதாயிற்று என்றாள்; என்க.

(விளக்கம்) பழுதில் காட்சிப் புதல்வனை. பைந்தொடி புதல்வனை எனத் தனித்தனி கூட்டுக. தொழுதனன்: முற்றெச்சம். பிறக்கு ஒழிய பின்னே கிடப்ப. கரை மருங்கில் கலம் கெட்டது என்க. கெடுகல மாக்கள்-கெட்ட கலத்தினின்றும் உய்ந்து கரையேறிய மாக்கள் என்க. கெடுத்தது-இழந்த செய்தியை. வடிவேலையுடைய நெடுமுடிக்கிள்ளி என்க. தேர்வுழி-தேடித்திரிகின்ற பொழுது. வானவன் விழாக்கோள்-இந்திர விழாச் செய்தலை.

இதுவுமது

198-206: மணிமேகலா............புக்கனர்

(இதன் பொருள்) மணிமேகலா தெய்வம் மற்று அது பொறஅள் அணி நகர் தன்னை அலைகடல் கொள்க என சாபம் இட்டனன் இது பட்டது-மணிமேகலா தெய்வமானவள் இந்திரவிழாச் செய்யாமையாகிய அக் குற்றத்தைப் பொறாமல் சினந்து அழகிய அந் நகரத்தை அலையையுடைய கடல் கவர்ந்து கொள்வதாக என்று சாபமிட்டனள் இதுவே அதற்குரிய காரணமாம்; கடவுள் மாநகர் கடல் கொள் பெயர்ந்த வடிவேல் தடக்கை வானவன் போல-தேவர்கள் வாழும் அமராபதி நகரத்தைக் கடல் கவர்ந்து கொள்ளா நிற்ப அந் நகரத்தினின்றும் தனியே புறம் போந்த வடித்த வேலையுடைய பெரிய கையையுடைய இந்திரனைப் போல; விரி திரை வந்து வியல் நகர் விழுங்க உலக மன்னவன் ஒரு தனி போயினன்-விரிகின்ற அலைகளையுடைய கடல் பெருகி வந்து அகன்ற தன் தலைநகரத்தைக் கவர்ந்து கொண்டமையாலே நிலவுலகத்தை ஆளும் அச் சோழ மன்னன் பெரிதும் தமியனாய் உய்ந்து போயினன்; அருந்தவன் தன்உடன் ஆயிழை தாயரும் வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்-அரிய தவத்தினையுடைய அறவணவடிகளாருடன் மணிமேகலாய் நின்னுடைய தாயராகிய மாதவியும் சுதமதியும் மனம் வருத்தம் இல்லாமல் அந் நிகழ்ச்சியை முன்னரே யறிந்து அந் நகரத்தினின்றும் புறப்பட்டுச் சென்று வஞ்சிமாநகரினுள் புகுந்தனர்.

(விளக்கம்) அது பொறாஅள்-விழாக்கோள் ஒழிந்த அக் குற்றத்தைப் பொறாளாய் என்க. நகர்-பூம்புகார். இது பட்டது என மாறுக. பட்டது-நிகழ்ந்தது. கடவுள் மாநகர் -அமராபதி. வானவன் இந்திரன். கடவுள் மாநகர் கடல் கொளப் பெயர்ந்த வானவன் என்றது இல்பொருள் உவமை. வியல்நகர்-அகன்ற நகரம். உலக மன்னவன்: நெடுமுடிக்கிள்ளி. அருந்தவன் என்றது அறவணவடிகளாரை. அடிகளாருடன் நின் தாயரும் வருந்தாது ஏகினர் என்றது அறவணர் இந் நகரம் கடல்கோட்படும் என்று முற்படவே அறிந்து போக அவருடன் வருந்தாது ஏகினர் என்பதுபட நின்றது.

தீவதிலகை மறைந்து போதல்

207-213: பரப்பு..........போயபின்

(இதன் பொருள்) பரப்பு நீர் பவ்வம் பலர் தொழக் காப்போன் உரைத்தன-பெரும் பரப்பாகிய நீரையுடைய கடலைப் பலரும் கை தொழும்படி காவல் செய்கின்ற மணிமேகலா தெய்வத்தால் இவ் வரலாறு எனக்குக் கூறுப்பட்ட செய்திகளாம்; கேட்க உருகுவை ஆயின்-இன்னும் அத் தெய்வத்தின் செய்தி கேட்க ஆர்வம் கொண்டு மனம் உருகி நிற்பாயானால்; நின் மன் உயிர் முதல்வனை-நின்னுடைய உயிர் இப் பிறப்பெடுத்தற்கு உரிய முதல்வன் ஒருவனை; மணிமேகலா தெய்வம் முன் நாள் எடுத்ததும் அந் நாள் ஆங்கு அவன் அற அரசு ஆண்டதும்-அந்த மணிமேகலா தெய்வம் பண்டொரு காலத்தே கடல் நடுவே உடைந்த மரக்கலத்தினின்றும் எடுத்துக் கரையேற்றி விடுத்ததும் அந்த நாளிலே அவ் வணிகன் அறங்களுக்கு அரசாகிய புண்ணிய தானமென்னும் பேரறத்தைச் செய்ததும் பிறவும் ஆகிய செய்திகளை எல்லாம்; மறு பிறப்பாட்டி-மறுபிறப்புணரும் மணிமேகலாய் நீ; அறவணன் தன்பால் வஞ்சி உள் கேட்பை என்று-அறவணவடிகளிடத்தே வஞ்சி நகரத்தின்கண் கேட்டறிகுவை என்று சொல்லிவிட்டு; அந்தரத் தீவகத்து அருந்தெய்வம் போயபின்-அச் சிறு தீவகத்தின் அரிய காவற்றெய்வமாகிய அத் தீவதிலகை மறைந்து போனபின்னர்; என்க

(விளக்கம்) பவ்வம்-கடல். காப்போள்-காக்கும் மணிமேகலா தெய்வம்; இவை காப்போளால் எனக்குக் கூறப்பட்டன. உருகுவை-கேட்க விரும்பி உளம் உருகுவையாயின் என்க. கேட்கவுறுகுவை என்றும் பாடம்; இதற்கு, கேட்டற்கு அமைவாயானால் எனப் பொருள் கூறுக. மன்னுயிர் முதல்வன் என்றது கோவலன் குலத்தில் முன்னோனாகிய ஒரு வணிகனை. முன்னாளெடுத்தது என்றது பண்டொரு காலத்தில் மரக்கல முடைந்து கடலில் நீந்தி வருந்திய காலத்தில் எடுத்துப் பாதுகாத்த செயலை. அறவரசாண்டது-புண்ணியதானம் செய்தது. இதனை

நாத னாவோ ளளிநீர்ப் பரப்பின்
எவ்வமுற் றான்றன தெய்வ்வந் தீரெனப்
பவ்வத் தெடுத்துப் பாரமிதை முற்றவும்
அறவர சாளவு மறவாழி யுருட்டவும்
பிறவிதோ றுதவும் பெற்றிய ளென்றே
சாரண ரறிந்தோர் காரணங் கூற

என இந் நூலில்(29: 24-29) வருதலாலும் சிலப்பதிகாரத்தில் 15-31 ஆம் அடியினும் காண்க. மறுபிறப்பாட்டி-பழம் பிறப்பை உணர்ந்த சிறப்புடைய மணிமேகலாய் என்று விளித்தவாறு. அந்தரத் தீவகம்-சிறு தீவாகிய மணிபல்லவம். அருந்தெய்வம்: தீவதிலகை.

புண்ணியராசன் மணலையகழ்ந்து தனதுடலின் என்புக் கூட்டைக் கண்டு மயங்குதல்

214-220: மன்னவ.........மயங்க

(இதன் பொருள்) மன்னவன் இரங்கி-புண்ணியராசன் தனது முற்பிறப்பின் உடம்பு இம் மணலின் கீழ் உளது என்றது கேட்டுத் துன்புற்று அதனைப் பார்த்தற் பொருட்டு; மணிமேகலை உடன் துன்னிய தூமணல் அகழத் தோன்றி-அம் மணிமேகலையுடன் தானும் அங்குச் செறிந்த தூயமணலை அகழுதலாலே காணப்பட்டு; ஊண் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி தான் பிணி அவிழாத் தகைமையது ஆகி-அவ்வுடம்பானது தனது தசையின் பிணிப்பு அவிழ்ந்து மறைந்தொழிதலால் அவ்வுடலின் என்புக்கூடு ஒடுங்கித் தான் தனது கோப்புக் குலையாத தன்மையுடையதாய்; வெள் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி-வெண்மையான சுண்ணச் சாந்து பூசப்பெற்று அவ்விடத்திலே இருத்தல் போல இருந்த தன்மையைக் கொண்டிருக்கின்ற தன் முற்பிறப்பாகிய ஆபுத்திரனின் உருவத்தைப் பார்த்து அதன்கண் உண்டான பற்றுக் காரணமாக; மன்னவன் மயங்க-அவ் வரசன் மயங்கா நிற்ப.

(விளக்கம்) மன்னவன்-புண்ணியராசன். மணிமேகலையுடன் என்றதனால் மணிமேகலையும் அவ்வறவோன் உடம்பைக் காண விரும்பிப் புண்ணியராசனோடு அத் தூமணலை அகழ்ந்தனள் என்பது பெற்றாம். ஊன் பிணி-தசைப்பற்று. தான்-உடம்பின் எலும்பு. சுதை-சுண்ணச்சாந்து. இருக்கையின்-இருத்தல் போல. படிவம்-உருவம் மன்னவன் அவ்வுடம்பு தன்னுடையதென்னும் பற்றுக் காரணமாக மயங்கினன் என்பது கருத்து.

மணிமேகலை புண்ணியராசனை மயக்கந்தீர்த்துச் செவியறிவுறுத்தல்

220-231: மணிமேகலை..........இல்என

(இதன் பொருள்) மணிமேகலை எழுந்து இலக்கு இதழ் தாரோய் என் உற்றனையோ-அது கண்ட மணிமேகலை எழுந்து விளங்குகின்ற மலர்மாலையை அணிந்த மன்னவனே! இங்ஙனம் மயங்குதற்கு இங்கு யாது தீங்கு வந்து எய்தப் பெற்றனை; நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது-நின்னுடைய நாட்டிற்கு வலிய வந்து யான் உன்னை இம் மணிபல்லவத்திற்கு அழைத்து வலிய வந்து யான் உன்னை இம் மணிபல்லவத்திற்கு அழைத்து வந்தது நின்னை இவ்வாறு மயக்குவித்தற்கன்று காண்; மன்னா நின் தன் மறு பிறப்பு உணர்த்தி அந்தரத் தீவினும் அகன் பெரும் தீவினும் நின் பெயர் நிறுத்த-வேந்தே! உன்னுடைய பழம்பிறப்பை உணர்வித்து இரண்டாயிரம் சிறுதீவுகளிடத்தும் அகன்ற நான்கு பெருந்தீவுகளிடத்தும் நின்னுடைய புகழை நிலைநிறுத்தற் பொருட்டே காண்; நீள் நிலம் ஆளும் அரசர் தாமே அருள் அறம் பூண்டால் புரை தீர்த்தற்கு பிறபொருளும் உண்டோ-நெடிய நிலவுலகத்தை ஆளுகின்ற அரசர்கள் தாமே புத்த பெருமான் திருவாய்மலர்ந்தருளிய அருளறத்தை மேற்கொண்டு ஒழுகுவாராயின் பின்னர் இவ்வுலகத்தில் குற்றம் தீர்த்தற்குரிய பொருள் பிற உண்டாகுமோ? யாண்டும் அருளறமே தழைத்தோங்குவதாம்; அறம் எனப்படுவது யாது என கேட்பின் மறவாது இதுகேள்-அவ் வருளறந்தான் எத்தகையதென்று வினவுவாயாயின் கூறுவன் மறவாமல் இதனைக் கேட்பாயாக. அஃதாவது,மன் உயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல் என-உடம்பொடு நிலைபெற்று வாழும் உயிர்களுக்கெல்லாம். இன்றியமையாது வேண்டப்படுவன உணவும் உடையும்உறைவிடமும் ஆகிய இம் மூன்றுமே யன்றி இன்றியமையாததாகக் கண்ட பொருள் பிறிதொன்றுமில்லை ஆதலால் இவற்றை அவ்வுயிர்களுக்கு வழங்குவதே அருளறம் எனப்படுவது காண் என்று மணிமேகலை அறிவுறுத்தா நிற்ப; என்க.

(விளக்கம்) அருள் என்னும் அன்பீன் குழவீ பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு (குறள், 757) என்பது பொய்யா மொழி யாகலின் பொருட் செல்வம் மிக்க அரசரே அருளறத்தைப் பேணமுற்படின் அவ்வறம் முட்டுப்பாடின்றி நடைபெறுவதாம்; மேலும் அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்பது முதுமொழியாகலின் குடி மக்களும் அருளறத்தை அவாவி மேற்கொள்வர். இங்ஙனம் நிகழின் உலகின்கண் துன்பமே இல்லையாய் இம் மண்ணுலகமே பொன்னுலகாய்த் திகழ்வதாம் என ஈண்டு மணிமேகலை புண்ணியராசனுக்கு அறம் அறிவுறுத்தனள் என்க.

புண்ணியராசன் கூற்று

231-239: காவலன்.......தானென்

(இதன் பொருள்) காவலன் உரைக்கும்-அது கேட்ட புண்ணியராசன் மணிமேகலைக்குக் கூறுவான்; என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் நல்நுதல் உரைத்த நல்அறம் செய்கேன்-என்னுடைய நாட்டிலும் பிறருடைய நாட்டிலும் நல்ல நெற்றியையுடைய நீ கூறிய இவ்வருளறத்தையான் நன்கு செய்வேன், மேலும்; என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை நின்திறம் நீங்கல் ஆற்றேன் யான் என்-என்னுடைய பழம் பிறப்பினை அறிவுறுத்தி என்னை நீ இப்பொழுது வேறொரு அறிவாளனாகப் படைத்துவிட்டாய், இவ்வாற்றால் எனக்குத் தாயும் தெய்வமும் ஆகின்ற உன்னைப் பிரிந்து யான் என்னூருக்குச் செல்ல ஆற்றுகிலேன் யான் என் செய்கோ என்று வருந்த; அணி இழை-அது கண்ட மணிமேகலை அவ்வரசனை நோக்கி; புன்கண் கொள்ளல்-வேந்தே! நீ இவ்வாறு துன்புறாதேகொள்; நின் மன் பெரும் நல் நாடு-அரசே! நின்னை அரசனாகவுடைய நினது பெரிய நல்ல நாட்டிலுள்ள உயிர்களெல்லாம்; நீ போந்ததற்கு இரங்கி வாய் எடுத்து அழைக்கும் நீ இங்கு வந்ததற்கே பெரிதும் வருந்தி உன்னை வாயால் கூப்பிட்டு அழைக்குங்காண் ஆதலால்; வங்கத்து ஏகுதி-நீ இங்குக் காலந்தாழ்த்தாது நின் மரக்கலத்திலேறி நின் நாட்டிற்குச் செல்வாயாக; வஞ்சியுள் செல்வன் என்று அந்தரத்து எழுந்தனள்-யானும் வஞ்சிமா நகரத்தினுள் செல்லுவேன் காண் என்று சொல்லி வானத்திலே எழுந்து பறந்தனள் என்பதாம்.

(விளக்கம்) ஆயினும் எண்ணிடைச் சொல் நன்னுதல்: முன்னிலைப் புறமொழி சிற்றறிவுடைய என் பழம் பிறப்பையு முணர்த்தி அருளறத்தையும் அறிவுறுத்து என்னைப் பேரறிஞனாய் அறவோனாய் நீ புதுவோனாகவே படைத்துவிட்டனை ஆதலால் எனக்குத் தெய்வமும் தாயும் போல்வாயாகிய உன்னைப் பிரிந்து செல்லலாற்றேன் என்று இப் புண்ணியராசன் வருந்துவது அவனது பேரன்பை நன்கு புலப்படுத்துகின்றது. ஈண்டுக் கம்பர் காவியத்தில் இராமனைப் பிரியலாற்றாது வருந்திய குகன் என்னும் வேடன் கூறுகின்ற

கார்குலாம் நிறத்தான் கூறக் காதல னுணர்த்து வானிப்
பார்குலாஞ் செல்வ நின்னை யிங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வ னேன்யா னின்னலி னிருக்கை நோக்கித்
தீர்கிலே னான தைய செய்குவ னடிமை யென்றான்
             (கம்ப-அயோ. கங்கை-44)

அன்புரையைப் பெரிதும் ஒத்துளது.

புன்கண்-துன்பம் நின் நன்னாடு நின்னை வாயால் கூவியழைக்கு மாதலால் நீ ஏகுதி என்றவாறு. புகார் கடல் வயிறு புக்கமையின் வஞ்சியுள் செல்வன் என்றாள் என்க.

இனி, இக் காதையை அரசன், புகுந்து வணங்கிக் கேட்டு, இவன் யார் என்னக் கஞ்சுகன், ஈங்கு வந்தனள் என்றலும் இளங்கொடி, வருவாய் என்று புகன்று எழுந்து இருந்து போகி வலங்கொண்டு பீடிகையைக் காண்டலும் அதனைத் தொழுது அவள் வலங்கொள்ள, அப் பீடிகை உணர்த்த, பணிந்து, போன்றது என்று ஏத்தி வலங்கொண்டு இன்னணமாக, இறைவனும் விட்டுப் புக்குக் கேட்டு எய்தி நினைந்து கள்ளாட்டிகழ்ந்து சாற்றி, விளைந்தது என்று கூற, மந்திரி சனமித்திரன் தொழுதேத்தி மன்னவ மதிமாறோர்ந்தனை என்ற முதுமொழி கூற. முதல்வன் கேட்டு, காத்தில் நின்கடன் என்று கூறிக் கூஉய்க் கரை யெய்தி ஏறினன். அக்கலம் சென்று சார்ந்திறுத்தலும் பூங்கொடி பொருந்தி மகிழ்வெய்தி வலஞ்செய்து, பீடிகை இது எனக் காட்ட மன்னவன் வலங்கொண்டு ஏத்தினன்; அவனுக்குப் பீடிகை பிறவியைக் காட்ட, மன்னவன், மறந்து வாழேன் என்று ஏத்தி மணிமேகலையுடன் எழுந்து சென்று இருப்ப, தெய்வதம் கண்டு உவந்தெய்தி, பெரியோய், வந்தனை; உடலென்பு இவைகாண், என்புமிவைகாண்; காணாய்; கொன்றாய்; கொண்டு அரசன் ஆயினை, மடவரனல்லாய், நகர் கடல் வயிறு புக்கது, காரணங்கேளாய்; மணிமேகலா தெய்வம் சாபமிட்டனள்; இது பட்டது; உலக மன்னவன் போயினன்; தாயரும் புக்கனர்; கேட்க உருகுவையாயின். வஞ்சியுட்கேட்பை என்று தெய்வம் போயபின் மன்னவன் இரங்கிப் படிவம் நோக்கி மயங்க, மணிமேகலை எழுந்து, கண்டதுஇல் என, காவலன் உரைக்கும்; அங்ஙனம் உரைப்பவன், நீங்கலாற்றேன் யான் என. அணியிழை, ஏகுதி; செல்வன் என்று எழுந்தனளென இயைத்திடுக.

ஆபுத்திரனோடு மணிபல்லவ மடைந்த காதை முற்றிற்று.


Offline Anu

Re: மணிமேகலை
« Reply #26 on: February 28, 2012, 10:10:09 AM »
26. வஞ்சிமாநகர் புக்க காதை

(மணிமேகலை கண்ணகி கோட்டமடைந்து வஞ்சிமாநகர் புக்க பாட்டு)

அஃதாவது: மணிமேகலை மணிபல்லவத்தினின்றும் வான் வழியாகச் சேரநாட்டுத் தலைநகரமாகிய வஞ்சிமா நகரத்திலே புகுந்த செய்தியும் அங்குக் கண்ணகித் தெய்வத்தையும் கோவலன் திருவுருவத்தையும் வணங்கிய செய்தியும் கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண் வஞ்சி நகரத்தில் புகுந்த மணிமேகலை தணியாக் காதல் தாய் கண்ணகியையும் கொடைகெழு தாதை கோவலன் தன்னையும் குறித்துச் சேரன் செங்குட்டுவன் திருக்கோயிலெடுத்து அவர்களுக்கு நிறுவியுள்ள திருவுருவங்களைக் காண்டற்குப் பெரிதும் விரும்பி அத்திருக்கோயிலில் புகுந்து அவர்களை வணங்கி நின்று தாமாகிய கண்ணகியை நோக்கி,

அற்புக்கட னில்லாது நற்றவம் படராது
கற்புக்கடன் பூண்டு நுங்கடன் முடித்த
தருளல் வேண்டுமென் றழுது முன்னிற்ப.

அதுகேட்ட அப்பத்தினித் தெய்வம் தன் மகளாகிய மணிமேகலைக்கு அவள் வினவிய வினாக்களுக்குப் பொருத்தமான விடைகூறுதலும், தாய் அன்பு கெழும இக்காதையில் கூறப்பட்டிருக்கின்றன.

இக்காதையின்கண் கண்ணகி கோவலர்களின் பழம்பிறப்பு வரலாறும் சேரன் செங்குட்டுவன் வடதிசையிற் சென்று அங்குள்ள கனகவிசயர் முதல் பல வடவாரிய மன்னரை வென்ற செய்தியும் கனகவியசர் முடிமிசைப் பத்தினித் தெய்வத்திற்குக் கடவுள் உருச்சமைக்கக் கல்லேற்றி வாகை சூடிவருதலும் பிறவுந் நயம்படக் கூறப்படுகின்றன.

அணி இழை அந்தரம் ஆறா எழுந்து
தணியாக் காதல் தாய் கண்ணகியையும்
கொடை கெழு தாதை கோவலன் தன்னையும்
கடவுள் எழுதிய படிமம் காணிய
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து
வணங்கி நின்று குணம் பல ஏத்தி
அற்புக் கடன் நில்லாது நல் தவம் படராது
கற்புக் கடன் பூண்டு நும் கடன் முடித்தது
அருளல் வேண்டும் என்று அழுது முன் நிற்ப
ஒரு பெரும் பத்தினிக் கடவுள் ஆங்கு உரைப்போள்  26-010

எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள்
மதுராபதி எனும் மா பெருந் தெய்வம்
இது நீர் முன் செய் வினையின் பயனால்
காசு இல் பூம்பொழில் கலிங்க நல் நாட்டுத்
தாய மன்னவர் வசுவும் குமரனும்
சிங்கபுரமும் செழு நீர்க் கபிலையும்
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள்
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டுப்  26-020

பல் கலன் கொண்டு பலர் அறியாமல்
எல் வளையாளோடு அரிபுரம் எய்தி
பண்டக் கலம் பகர் சங்கமன் தன்னைக்
கண்டனர் கூறத் தையல் நின் கணவன்
பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும்
தீத் தொழிலாளன் தெற்றெனப் பற்றி
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு
குற்றம் இலோனைக் கொலைபுரிந்திட்டனன்
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி
ஏங்கி மெய்பெயர்ப்போள் இறு வரை ஏறி  26-030

இட்ட சாபம் கட்டியது ஆகும்
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன்
மேற் செய் நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம்
அவ் வினை இறுதியின் அடு சினப் பாவம்
எவ் வகையானும் எய்துதல் ஒழியாது
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு
யாங்கணும் இரு வினை உய்த்து உமைப் போல
நீங்கு அரும் பிறவிக் கடலிடை நீந்தி  26-040

பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர்
மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு
ஒரு பெருந் திலகம் என்று உரவோர் உரைக்கும்
கரவு அரும் பெருமைக் கபிலை அம் பதியின்
அளப்பு அரும் பாரமிதை அளவு இன்று நிறைத்து
துளக்கம் இல் புத்த ஞாயிறு தோன்றிப்
போதிமூலம் பொருந்தி வந்தருளி
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து
பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்
அந் நிலை எல்லாம் அழிவுறு வகையும்  26-050

இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி
எண் அருஞ் சக்கரவாளம் எங்கணும்
அண்ணல் அறக் கதிர் விரிக்கும்காலை
பைந்தொடி! தந்தையுடனே பகவன்
இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின்
துன்பக் கதியில் தோற்றரவு இன்றி
அன்பு உறு மனத்தோடு அவன் அறம் கேட்டு
துறவி உள்ளம் தோன்றித் தொடரும்
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்
அத் திறம் ஆயினும் அநேக காலம்  26-060

எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம்
நறை கமழ் கூந்தல் நங்கை! நீயும்
முறைமையின் இந்த மூதூர் அகத்தே
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு
மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய
பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய்
இன்னது இவ் இயல்பு எனத் தாய் எடுத்து உரைத்தலும்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உருக் கொள்க என
மை அறு சிறப்பின் தெய்வதம் தந்த  26-070

மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய்
தேவ குலமும் தெற்றியும் பள்ளியும்
பூ மலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து
நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும்
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும்
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில்
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன்
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
போர்த் தொழில் தானை குஞ்சியில் புனைய
நில நாடு எல்லை தன் மலை நாடென்ன  26-080

கைம்மலைக் களிற்று இனம் தம்முள் மயங்க
தேரும் மாவும் செறி கழல் மறவரும்
கார் மயங்கு கடலின் கலி கொளக் கடைஇ
கங்கை அம் பேர் யாற்று அடைகரைத் தங்கி
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து
கனக விசயர் முதல் பல வேந்தர்
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை
சிமையம் ஓங்கிய இமைய மால் வரைத்
தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச்
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்
வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க
பொன் கொடிப் பெயர்ப் படூஉம் பொன் நகர்ப் பொலிந்தனள்
திருந்து நல் ஏது முதிர்ந்துளது ஆதலின்
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என்  26-094

உரை

வஞ்சி நகரத்தில் மணிமேகலை கண்ணகி கோட்டம் புகுந்து கைதொழுதல்

1-9 : அணியிழை...........நிற்ப

(இதன் பொருள்) அணியிழை அந்தரம் ஆறா எழுந்து-மணிமேகலை வான் வழியாக எழுந்து பறந்து வஞ்சி மாநகரம் நோக்கி விரைபவள்; தணியாக் காதல் தாய் கண்ணகியையும் கொடைகெழு தாதை கோவலன் தன்னையும்-ஒரு பொழுதும் குறைவில்லாத காதலையுடைய தன் தாயாகிய கண்ணகித் தெய்வத்தையும் வள்ளன்மை பொருந்தி தன் தந்தையாகிய கோவலனையும்; கடவுள் எழுதிய படிமம் காணிய வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து-தெய்வமாகச் சமைத்த திருவுருவங்களைக் காணுதற்கெழுந்த விருப்பம் செலுத்துதலாலே அவ்வஞ்சி நகரத்தில் அத்தெய்வங்கள் எழுந்தருளி இருக்கின்ற திருக்கோயிலின் முன்னர் இழிந்து கோயிலுள் புகுந்து; வணங்கி நின்று குணம் பல ஏத்தி-பேரன்போடு திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்து நின்று அவர்களுடைய பெருந்தகைக் குணங்கள் பலவற்றையும் புகழ்ந்து பாராட்டி அவருள் கண்ணகித் தெய்வத்தை முன்னிலைப்படுத்துக் கூறுபவள்; அற்புக் கடன் நில்லாது நல்தவம் படராது கற்புக் கடன் பூண்டு நும் கடன் முடித்தது அருளல் வேண்டும் என்று அழுது முன் நிற்ப-அன்னையே! நீவிர் கற்புடை மகளிர்க்குரிய அன்பின் வழி நின்று செய்யும் கடமையின் வழியினில்லாமலும் அங்ஙனம் நிற்கலாற்றதார் செல்லும் தவநெறியிற் செல்லாமலும் கற்புடைமையைக் கடமையாகப் பூண்டு அதன் ஆற்றலை வெளிப்படுத்துதலே அப்பொழுது செய்யத் தகுவதென்று அதனையே செய்து முடித்தற்குக் காரணம் காண்இலேன், அதனைக் கூறியருளுதல் வேண்டும் என்று சொல்லி அன்பினால் அழுது கைதொழுது அத்தெய்வத் திருமுன்னர் நிற்ப; என்க.

(விளக்கம்) அணியிழை : மணிமேகலை. அந்தரம்-வானம். ஆறாக எனவும் தணியாத எனவும் வருதல் வேண்டிய பெயரெச்சங்களின் ஈற்றுயிர்மெய் தொக்கன; செய்யும் விகாரம்: தாயாகிய கண்ணகி என்க. தாயாகிய கண்ணகி கற்புடைமையின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதுயர்ந்து விளங்கினாற்போலத் தாதையாகிய கோவலன் வள்ளன்மையால் விளங்கி இருந்தான் ஆதலின் அச்சிறப்புத் தோன்றக் கொடைகெழு தாதை கோவலன் என்றார். கோவலனுடைய கொடைச்சிறப்பினைச் சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையின் (40) மங்கல மடந்தை என்பது தொடங்கி (61) இம்மை செய்தன யான் அறிநல்வினை என்னுமளவும் நிகழ்கின்ற மாடல மறையோன் கூற்றானும் உணர்க. எனவே இருவரும் தெய்வத் திருவுருவம் கோடற்கியன்ற இரு பெருஞ்சிறப்புகளையும் இப்புலவர் பெருமான் விதந்தோதினமை நுண்ணிதின் உணர்க. படிமம்-உருவம். கோட்டம்-கண்ணகியின் கோயில். சிலப்பதிகாரத்தில் தலைமைப் பற்றிச் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குத் திருவுருச் சமைத்தமை மட்டுமே கூறப்பட்டது. ஈண்டு இக்காதையினால் கண்ணகி திருவுருவத்தோடு கோவலனுக்கும் திருவுருச் சமைத்திருந்ததும் பெற்றாம் அற்புக்கடனில்லாது என்றது உலகின்கண் கற்புடை மகளிர் கணவனை இழந்த காலத்தே அத்துன்பம் பொறாது உயிர் நீப்பர். இன்றேல் தீயிற் புகுந்து உயிர் நீப்பர். இது தலையாய அன்புடையார் செயல் ஆதலின் நீவிர் தந்தை இறந்துழி இவ்வாறு உயிர் நீத்திலீர் என்பாள் அற்புக்கடனில்லாது என்றாள்.

இனி, இடையாய அன்புடையோர் மறுமையினும் தங்கணவரோடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம்படுவர். நீயிர் அதுவும் செய்திலீர் என்பாள் நற்றவம் படராது என்றாள். கற்புக்கடன் பூண்டு நீவிர் கற்புடைய மகளிர்க்குரிய கடமையாகிய தகைசான்ற சொற்காத்தல் என்பது பற்றி நுங்கணவனுக்குப் பழியின்மை காட்டுதற்கு அரசவையேறி வழக்குரைத்தீர் அதூஉம் சாலும் அப்பாலும் தீவினை சில செய்தற்குக் காரணம் அறிந்திலேன். அக்காரணத்தை அறிவித்தருளுக என்பாள் கற்புக்கடன் பூண்டு நுங்கடன் முடித்தது அருளல் வேண்டும் என்று அழுது முன்னின்றனள் என்க.

இதன்கண் நுங்கடன் முடித்தது அருளல் வேண்டும் என்புழி நுங்கடன் முடிந்ததன்கண் மிகை செய்தற்குக் காரணம் கூறுதிர் என்பது குறிப்பெச்சப் பொருளாம். இதுபற்றியே மணிமேகலை அழுது வினவினள் என்க. மேலும் கண்ணகியும் இவ்வினாவிற்கே சிறப்பாக விடையிறுத்தலாலும் இக்குறிப்புப் பொருள் வலியுறுதல் உணர்க.

இனி, கற்புடை மகளிர் கணவனை இழந்துழிச் செய்யுங் கடமைகளைக் கூறிக் கண்ணகி நல்லாள் மிகை செய்தமையையும் இந்நூலின் கண் 2ம் காதையில்,

காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகி னுயிர்த்தகத் தடங்கா
தின்றுயி ரீவ ரீயா ராயின்
நன்னீர்ப் பொய்கையி னளியெரி புகுவர்
நளியெரி புகாஅ ராயி னன்பரோ
டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்
தத்திறத் தாளு மல்லளெம் மாயிழை
கணவற் குற்ற கடுந்துயர் பொறாஅள்
மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்
கண்ணீ ராடிய கதிரிள வனமுலை
திண்ணிதிற் றிருகித் தீயழற் பொத்திக்
காவலன் பேரூர் கனையெரி மூட்டிய
மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை

எனவரும் மாதவி கூற்றலும் உணர்க. ஈண்டு மாதவி கண்ணகி மதுரையை எரியூட்டியதனைக் கண்ணகியின் பெருமையாகக் கருதினள். மணிமேகலையோ இக்காதையில் அதனை ஒரு குற்றமாகக் கருதி வினவுகின்றாள். இவ்வாற்றல் மாதவியினும் கண்ணகியினுங் காட்டில் மணிமேகலை சான்றாண்மையில் சிறந்தவள் ஆதல் கருதி இன்புறற்பாலதாம்.

கண்ணகி மணிமேகலைக்குக் கூறும் மறுமொழி

10-18 : (ஒருபெரும்...........உறுநாள்)

(இதன் பொருள்) ஒரு பெரும் பத்தினிக் கடவுள் ஆங்கு உரைம்போள்-இந்நிலவுலகிற்கே தனக்குவமையில்லாத ஒரு பெரும் பத்தினிக் கடவுளாகிய அக்கண்ணகி நல்லாள் அன்புடை அம்மகளுக்கு விடை கூறுபவள் அருமை மகளே கேள்; எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது வெம்மையின் மதுரை வெவ்அழல் படும் நாள்-எமக்குக் கடவுளாகிய உன் தந்தைக்கு நேர்ந்த கொலைத் துன்பங் கேட்டுப் பொறுக்க ஒண்ணாமையால் எழுந்த சினம் காரணமாக மதுரை மாநகரத்தை யாம் வெவ்விய தீக்கிரையாக்கிய பொழுது; மதுராபதி எனும் மாபெரும் தெய்வமானது எம்முன் தோன்றி நங்காய் நுமக்குற்ற இவ்விடுக்கண் நீங்கள் முற்பிறப்பிலே செய்த தீவினையின் பயன் காண், அத்தீவினை தான் யாதெனின்; காசு இல் பூம்பொழில் கலிங்க நல் நாட்டுத் தாய மன்னவர் வசுவும் குமரனும் சிங்கபுரமும் செழுநீர் கபிலையும் அங்கு ஆள்கின்றோர்-அற்றமில்லாத பூம்பொழில்களையுடைய கலிங்கமென்னும் நல்ல நாட்டின்கண் தம்முள் தாயத்தாராகிய அரசர் வசுவென்றும் குமரன் என்றும் உளராயினர் அவர் முறையே சிங்கபுரமென்னும் நகரத்திலும் செழிப்புடைய நீர்வளமுடைய கபிலபுரமென்னுந் நகரத்திலும் அங்கங்கிருந்து அரசாட்சி செய்கின்றவர்கள் தம்முன் பகைத்து; அடல்செரு உறுநாள்-ஒருவரையொருவர் கொல்லுதற்கியன்ற போர்த்தொழில் நிகழ்த்துகின்ற காலத்திலே; என்க.

விளக்கம் : நிலவுலகிலேயே கண்ணகிக்கு நிகரான கற்புடை மகளிர் இலர் ஆதலின் தனக்குவமை இல்லாத பத்தினி என்பது தோன்ற ஒரு பெரும் பத்தினிக் கடவுள் என்றார். எம்மிறை என்றது எமக்கு இறைவனாகிய உன் தந்தை என்பதுபட நின்றது. இடுக்கண் என்றது கோவலன் கொலையுண்டமையை. வெம்மையின்-சினத்தினால். அழல் படும்நாள்-அழல்படுத்திய நாள். நீர் என்றது கோவலனை உளப்படுத்தித் தெய்வம் கூறியபடியாம். இது நீர் முன் செய்வினை என்பது தொடங்கி (22) ஒழியாது என்னுமளவும் மதுராபதி என்னும் தெய்வம் கூறியதனை ஈண்டுக் கண்ணகித் தெய்வம் கொண்டு கூறுகின்றபடியாம். மதுராபதி-மதுரை நகரத்துக் காவல் தெய்வம். காசு-குற்றம். தாயமன்னவர்-ஒரு குடியிற் பிறந்த அரசர்கள். வசுவென்பான் சிங்கபுரத்தினும் குமரன் கபிலபுரத்தினும் இருந்து ஆள்கின்றோர் என்றவாறு.

இதுவுமது

19-28 : மூவிரு.........இட்டனன்

(இதன் பொருள்) மூ இரு காவதம் முன்னுநர் இன்றி யாவரும் வழங்கா இடத்தில்-ஆறு காவதத்தொலைவு இடைநிலத்தே முற்பட்டுச் செல்வோர் இல்லாமையால் மாந்தர் எவரும் வழங்குதலின்றிக் கிடந்த பாழ்வெளியிலே; பொருள் வேட்டு பல்கலன் கொண்டு பலர் அறியாமல் எல் வளையாளோடு அரிபுரம் எய்தி-பொருளீட்டுதற்குப் பெரிதும் அவாவிப் பல்வேறு அணிகலன்களைக் கபிலபுரத்தில் வாங்கிக் கொண்டு தன் போல் வணிகர் பலரும் அறியாவண்ணம் ஒளிபொருந்திய வளையலணிந்த தன் மனைவியோடே இரவின்கண் பகர் சங்கமன் தன்னை-தான் விற்கக் கொண்டுவந்த பண்டமாகிய அணிகலன்களை விலை கூறி விற்கின்ற சங்கமன் என்னும் வணிகனை; கண்டனர் கூற-கூறுதலாலே; தையல் நின் கணவன் பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் தீத்தொழிலாளர்-நங்கையே! உன் கணவனாகிய அரசன்பால் தொழில் செய்யும் பரதன் என்னும் பெயரையுடைய தீவினையாளன்; தெற்றென பற்ற மன்னற்கு இவன் ஒற்றன் என உரைத்து-விரைவாகச் சென்று அவ்வணிகனைப் பற்றிக் கொண்டு போய் அரசனுக்குக் காட்டி இவன் வணிகனல்லன் கபிலபுரத்தினின்றும் வந்த ஒற்றனாவான் என்று பொய் சொல்லி; குற்றம் இலோனை கொலை புரிந்திட்டனன்-சிறிதும் குற்றமில்லாத அவ்வணிகனைக் கொலை செய்வித்திட்டான்; என்க.

(விளக்கம்) காவதம்-ஒரு நீட்டலளவை. போர் நிகழும் இடமாதலின் அவ்வழியே யாரும் முற்பட்டுச் செல்வதில்லை ஆதலின் அவ்விடம் மக்கள் வழக்கற்றுக் கிடந்தது என்க. சங்கமன் பொருள் வேட்கை காரணமாக மனைவியோடு அணிகலன்களைக் கபிலபுரத்திற் கொண்டு இருளிலே சிங்கபுரத்திற்குச் சென்று விற்றனன் என்க. அரிபுரம்-சிங்கபுரம். பண்டமாகிய கலம் என்க. பண்டம்-பொன் என்பாரு முளர். பகர்தல்-விற்றல். சங்கமன் : பெயர். தையல்:விளி. பார்த்திபன் தொழில். அரசியலில் வகிக்கும் உத்தியம். பரதன்-கோவலனுடைய முற்பிறப்பின் பெயர். மன்னற்கு-வசு என்னும் அரசனுக்கு. குற்றமிலோன் என்றது சங்கமனை.

இதுவுமது

29-37 : ஆங்கவன்..........ஒழியாது

(இதன் பொருள்) ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி ஏங்கி மெய் பெயர்ப்போள்-அப்பொழுது அச்சங்கமனுடைய மனைவியாகிய நீலி என்பவள் அழுது பூசலிட்டுத் துன்பத்தால் ஏங்கி உயிர் விடுபவள்; இறு வரை ஏறி இட்டசாபம் கட்டியது ஆகும் உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும்-பெரியதொரு மலையுச்சியில் ஏறி நின்று நுமக்கு இட்ட சாபமானது நும்மைக் கட்டியுளதாம் முற்பிறப்பிற் செய்த அத்தீவினையானது இப்பொழுது நும்பால் வந்து சினந்து தன் பயனை ஊட்டாது ஒழியாது காண் என்கின்ற;  மெய்ம்மை கிளவி விளம்பிய பின்னும் சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்-உண்மையான மொழியை அம்மதுராபதித் தெய்வம் எனக்குக் கூறிய பின்னரும் பெருஞ்சினங் கொண்டு வளமான மதுரைமாநகரத்தைத் தீயினால் சிதைத் தொழிந்தேன்; மேல் செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேம்-அன்புடைய மகளே யானும் உந்தையும் முற்பிறப்பிலே செய்த நல்வினையின் பயனாக வானவர்களாய் விண்ணுலகத்திலே சென்றேம்; அவ்வினை இறுதியின் அடுசினப்பாவம் எவ்வகையானும் எய்துதல் ஒழியாது-அந்நல்வினையின் முடிவில் மதுரையை அழித்தற்குக் காரணமான சினத்தாலுண்டான தீவினை எந்த வகையிலேனும் தன் பயனை ஊட்டுதற் பொருட்டு எம்மை வந்தடையாமல் போகாது; என்க.

(விளக்கம்) ஆங்கவன்-அச்சிங்கபுரத்தில் வாணிகம் செய்த சங்கமன். அழுதனள்: முற்றெச்சம். அரற்றுதல்-பூசலிடுதல். மெய் பெயர்த்தல்-உடம்பினின்றும் உயிரைச் செயற்கை முறையால் போக்குதல். இறுவரை-பெரிய மலை. உம்மை-முற்பிறப்பு. விண்ணவராகிச் சென்றேம் என்றவாறு. அவ்வினை-அந்நல்வினை. அடுசினம்: வினைத்தொகை.

இதுவுமது

38-47 : உம்பர்............அருளி

(இதன் பொருள்) உம்பர் இல் வழி-அந்நல்வினை இறுதியின் வானுலகத்தின் கண் ஏது நிகழ்ச்சி எமக்கில்லையாய பொழுது; இம்பரில் பல்பிறப்பு யாங்கணும் இருவினை உய்த்து உமைப்போல நீங்கரும் பிறவிக் கடல் இடை நீந்தி பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர்-இவ்வுலகத்தின்கண் பல்வேறு பிறப்புகளினும் நல்வினையும் தீவினையுமாகிய இருவினைகளாலும் செலுத்தப்பட்டு மக்கட் பிறப்பிலுள்ள உங்களைப் போலவே யாங்களும் உய்ந்து கரையேறுதற்கரிய பிறவியாகிய கடலின்கண் நீந்திப் பிறந்தும் இறந்தும் உழலா நிற்பேம் பின்னர்; மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு ஒரு பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் கரவு அரும் பெருமை கபிலையம்பதியில்-மறந்தேனும் மழை பெய்யாதொழியாத மகதமென்னும் அழகிய நாட்டிற்கே ஒரு பெரிய திலகம் போல்வது என்று சான்றோர்களால் கூறப்படுகின்ற யாரானும் மறைத்தற்கரிய சிறப்பினையுடைய கபிலை என்கின்ற அழகிய நகரத்தின்கண்; அளப்பரும் பாரமிதை அளவு இன்று நிறைத்து துளக்கம் இல் புத்த ஞாயிறு தோன்றி போதி மூலம் பொருந்தி வந்து அருளி-அளத்தற்கியலாத பாரமிதைகளை அளவில்லாமல் நிறைத்து நடுக்கமில்லாத புத்தபெருமானாகிய கதிரவன் தோன்றி அரசமரத்தின் நிழலின்கண் வீற்றிருந்தருளி; என்க.

(விளக்கம்) உம்பர்-வானுலகம். இவ்வழி-ஏது நிகழ்ச்சி இல்லாத பொழுது என்க. இருவினை-நல்வினையும் தீவினையும். உமைப்போல என்றது உங்களைப் போல மக்களாக என்றவாறு. தாம் இப்பொழுது தெய்வப் பிறப்புடைமை தோன்ற இங்ஙனம் பிரித்தோதினள். உழல்வோம் என்றது கோவலனை உளப்படுத்தியவாறாம். கபிலபுரம் மகதநாட்டின் தலைநகராதலின் அதனை உரவோர் ஒரு பெரும் திலகம் என்று உரைப்பார் என்பது கருத்து. கபிலபுரம் கபிலர் என்னும் முனிவர் தவஞ்செய்தமையால் அப்பெயர் பெற்றது என்பர். இதனைக் கபிலவஸ்து எனவும் வழங்குவர். பாரமிதை என்பதன் பொருள் கரையேறுதற்ரியது என்பதாம். அஃதாவது பிறவிக் கடலினின்றும் கரையேறுதற்குரியது என்றவாறு. இது பத்து வகைப்படும். அவையாவன: தானம், சீலம், பொறை, வீரியம், தியானம், உணர்ச்சி, உபாயம், அருள், வலி, ஞானம் என்னும் இப்பத்துமாம். இவற்றை,

தானஞ்சீல மும்பொறை தக்கதாய வீரியம்
மூனமில் தியானமே யுணர்ச்சியோடு பாயமும்
மானமில் லருளினைவ் வைத்தலேவ லிம்மையுஞ்
ஞானமீரைம் பாரமீதை நாடுங்கா லிவைகளும்   (நீலகேசி-354)

எனவரும் நீலகேசியானு முணர்க. புத்த ஞாயிறு-புத்தனாகிய கதிரவன். போதி மூலம்-அரசமரத்தின் அடி.

இதுவுமது

48-59 : தீதறு..................ஆகுவம்

(இதன் பொருள்) தீது அறு நால்வகை வாய்மையும் தெரிந்து-பிறப்பறுதற்குக் காரணமான நான்கு வகைப்பட்ட வாய்மைகளையும் நன்கு தெரிந்து; பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்-பேதைமை முதலிய பன்னிரண்டு வகைப்பட்ட நிதானங்கள் பிறக்கும் முறைமையையும்; அந்நிலை எல்லாம் அழிவுறும் வகையும் இற்று என இயம்பி-அப்பன்னிரண்டு சார்புகளும் அழிவெய்துகின்ற தன்மைமையும் தனித்தனியே இத்தன்மைத்து எனக் கூறி; குற்ற வீடு எய்தி-காம வெகுளி மயக்கங்களாகிய குற்றங்களினின்றும் விடுதலை பெற்று நின்று; எண்ணரும் சக்கரவாளம் எங்கணும் அண்ணல் அறக்கதிர் விரிக்கும் காலை-எண்ணற்கியலாத உலகமெங்கும் தலைமைத் தன்மையுடைய அப்புத்தபெருமான் அறமாகிய ஒளியைப் பரப்புகின்ற காலத்தே; பைந்தொடி தந்தை உடனே பகவன் இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின்-மணிமேகலாய்! யான் உன் தந்தையோடு சென்று பூம்புகார் நகரத்தே அப்புத்த பகவானுடைய இந்திரனால் நியமிக்கப்பட்ட அரங்குகள் ஏழனையும் தொழுது வணங்கிய நல்வினை காரணமாக; துன்பக்கதியில் தோற்றரவு இன்றி அன்பு உறும் மனத்தோடு அவன் அறம் கேட்டு-துன்பமுறுதற்குக் காரணமான நரக விலங்குப் பிறப்புகளில் பிறவாமல் அப்புத்த பெருமானிடத்து அன்புறுகின்ற நெஞ்சத்தோடே அப்புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளுகின்ற நல்லறங்களைக் கேட்டு அது காரணமாக; துறவி உள்ளம் தோன்றி தொடரும் பிறவி நீத்த பெற்றிவள் ஆகுவம்-துறத்தற்கியன்ற நன்னர் நெஞ்சம் தோன்றப் பெற்று அது பற்றுக்கோடாகக் கொண்டு அநாதியாகத் தொடர்ந்து வருகின்ற பிறவியாகிய அலைகளையுடைய பெரிய கடலை நீந்தி உய்ந்து வீடுபேறு பெறும் தன்மையை உடையேம் ஆகுவேம் என்றாள்; என்க.

(விளக்கம்) தீது-பிறப்பு. நால்வகை வாய்மை-துன்பம் முதலியன. பன்னிருசார்பு-பேதைமை முதலிய பன்னிரண்டு நிதானங்கள். அழிவுறுவகை-அந்நிதானங்கள் அழிவுறும் முறைமை. இற்றென என்னும் ஒருமையை வாய்மை முதலியவற்றோடு தனித்தனி ஒட்டுக. குற்றத்தினின்றும் விடுதலை பெறுதலைக் குற்றவீடெய்தி என்றார். குற்றம்-காம, வெகுளி மயக்கங்கள். சக்கரவாளம்-உலகம். அண்ணல்-தலைமைத் தன்மை. இதனை அறத்திற்கேற்றினும் அமையும். புத்த ஞாயிறு என்றமையால் அறத்தைக் கதிர் என்றார். பைந்தொடி : முன்னிலைப் புறமொழி. தந்தை-நின் தந்தை; கோவலன். பகவன்-புத்தப்பெருமான். இந்திரனால் இயற்றப்பட்ட விகாரம் என்க. விகாரம்-அரங்கு. இவை பூம்புகார் நகரத்திலுள்ளவை. இதனை,

பணையைந் தோங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழ லறவோன் றிருமொழி
அந்தர சாரிக ளறைந்தனர் சாற்றும்
இந்திர விகார மேழுடன் போகி

எனவரும் சிலப்பதிகாரத்தானும் (10:11-4) உணர்க.

இதுவுமது

60-67 : அத்திறம்...........உரைத்தலும்

(இதன் பொருள்) அத்திறம் ஆயினும்-அப்படி இருந்தாலும்; அநேக காலம்-நீண்ட காலம் இங்குத் தெய்வமாக விருந்து; எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம்-எவ்வகைப்பட்ட மக்களுக்கும் சித்தி செய்து கொண்டிருப்பேம்; நறை கமழ் கூந்தல் நங்கை-மணங்கமழும் கூந்தலையுடைய மகளிருள் சிறந்த; நீயும் முறைமையின் இந்த மூதூர் அகத்தே அவ்வவர் சமயத்து அறிபொருள் கேட்டு-நீதானும் முறைமையாக இந்தப் பழைய வஞ்சி மாநகரத்தின்கண் உள்ள சமயக்கணக்கர் பலரையும் தனித்தனியே கண்டு ஒவ்வொரு சமயக்கணக்கரும் அவரவர் சமய நெறியின் வாயிலாய் மெய்ப்பொருளாக அறிந்த பொருள்களைக் கேட்டறிந்து; மெய்வகை இன்மை நினைக்கே விளங்கிய பின்னர்-அவர் கூறும் பொருளெல்லாம் உண்மையில்லாமை உனக்கே விளக்கமான பின்னர்; பெரியோன் பிடகநெறி கடவாய்-புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளிய பிடக நூல் நெறியைக் கடவா தொழுகுவாய் காண்; இவ் இயல்பு இன்னது என தாய் எடுத்து உரைத்தலும்-உனக்கு எதிர்காலத்தே நிகழவிருக்கும் ஏதுநிகழ்ச்சியின் தன்மை இத்தன்மையதாம் என்று தாயாகிய கண்ணகித் தெய்வம் எடுத்துக் கூறாநிற்பவும் என்க.

(விளக்கம்) இருத்தி-சித்தி. அஃதாவது தம்மை வந்து வரம் வேண்டுவோர்க்கு வேண்டுவன வழங்குதல் முதலியன. நறைகமழ் கூந்தல் என்றது நங்கை என்னும் பெயர்ச்சொல்லுக்கு வாளாது இயற்கை அடைமொழியாய் நின்றது. மூதூர் என்றது வஞ்சி நகரத்தை. அறிபொருள்-ஆராய்ந்தறிந்து துணிந்த பொருள். மெய்வகை இன்மை-உண்மையில்லாமை. பெரியோன்:புத்த பெருமான். பிடகநெறி-பிடகம்; புத்தாகமங்களுக்குப் பெயர். அவை வினையபிடகம் சூத்திரபிடகம் அபிதர்மபிடகம் என மூன்று வகைப்படும். பிடகம்-கூடை என்னும் பொருட்டு. எனவே மூன்று வகைப்பட்ட அறமாகிய பொருளை நிரப்பி வைத்துள்ள கூடை போன்றவை என்பது கருத்து. இவ்வியல்பு இன்னது என்றது பிடகநெறி கடவாது நீ ஒழுகும் இவ்வியல்பு எதிர்காலத்தே இன்னதாம் என்றவாறு. தாய் : கண்ணகி. எடுத்துரைத்தலும் என்றது அவள் வினவாத பொருளையும் விதந்தெடுத்துக் கூறாநிற்ப என்றவாறு.

மணிமேகலை வேற்றுருக்கொண்டு வஞ்சி நகரத்துள்ளே புகுதல்

68-79 : இளையள்...........புனைய

(இதன் பொருள்) மையறு சிறப்பின் தெய்வதம்-குற்றமற்ற சிறப்பினையுடைய மணிமேகலா தெய்வம் தன்பால் அருள்கூர்ந்து; இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் விளைபொருள் உரையார் வேற்றுரு கொள்க எனத் தந்த-தன்னை நோக்கி நீ வஞ்சிமாநகரத்திற் சென்று சமயக்கணக்கரிடம் அறிபொருள் வினவும் பொழுது அவர் நின்னை இளமையுடையள் பெண்பாலாள் என்று கருதி உனக்கு அவர்கள் தம் சமயநெறியால் விளைந்த துணிபொருளைக் கூறுதற்கு ஒருப்படார் ஆதலின் அவரை வினவும்பொழுது அவர் நன்கு மதிக்கும்படி வேற்றுருக் கொள்வாயாக என்று சொல்லித் தானே வலியக் கொடுத்த; மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவாய்-மந்திரத்தை ஓதி ஒரு மாதவன் வடிவம் மேற்கொண்டவளாய் மணிமேகலை; தேவகுலமும் தெற்றியும் பள்ளியும் பூமலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து-அவ்வஞ்சி நகரத்தே தெய்வத் திருக்கோயில்களிலும், மேடைகளிலும், தவப்பள்ளிகளிலும், பூவாகிய மலர்களையுடைய சோலைகளிடத்தும், குளக்கரைகளிடத்தும் நெருங்கி, நல்தவ முனிவரும் கற்று அடங்கினரும் நல்நெறி காணிய தொல்நூல் புலவரும் எங்கணும் விளங்கிய எயிலபுற இருக்கையில்-நல்ல தவத்தையுடைய துறவோரும் மெய்ந் நூல்களைக் கற்று மனம் பொறி வழிச் செல்லாமல் அடங்கப்பெற்ற சான்றோரும் நல்ல அறநெறியைக் கண்ட பழைய நூல்களைப் பயின்று முதிர்ந்த புலவர்களும் எவ்விடத்தும் இருந்து விளங்குகின்ற மதிலின் புறத்தேயுள்ள இருப்பினையுடைய; செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் பூவா வஞ்சியில்-செங்குட்டுவன் என்னும் செங்கோலரசன் தலைநகரமாகிய அவ்வஞ்சி மாநகரத்தில்; போர்த்தொழில் தானை குஞ்சியில் பூத்தி வஞ்சி புனைய-போர்த்தொழிலில் வன்மையுடைய படை மறவர்கள் தமது முடியின்கண் மலர்ந்த வஞ்சிப் பூவாகிய போர்ப் பூவினைச் சூடா நிற்ப; என்க.

(விளக்கம்) இளையள்...........கொள்கென என்று மணிமேகலா தெய்வம் கூறியதனை இந்நூலில் 10ஆம் காதையில் (79-80) காண்க. தெய்வதம்: மணிமேகலா தெய்வம். மந்திரம்-வேற்றுருக் கொள்வதற்குரிய மந்திரம். தேவகுலம்-கோயில். தெற்றி-மேடை. பள்ளி-தவப்பள்ளி. காணிய-கண்ட. எயிற்புற இருக்கை-மதிலின் புறத்தேயுள்ள இருப்பிடம். பூத்த வஞ்சி-பகைவர் நிலத்தைக் கைக்கொள்ள நினைந்து போர் மேல் செல்லும் மறவர்கள் அணிந்து கொள்ளும் அடையாளப்பூ. பூவா வஞ்சி என்பதற்கு; முரணாகப் பூத்த வஞ்சி என்றார். பூவா வஞ்சி என்றது வஞ்சி நகரத்தை; வெளிப்படை. குஞ்சி-குடுமி.

இதுவுமது

80-85 : நிலநாடு.......இழிந்து

(இதன் பொருள்) நிலநாடு எல்லை தன் மலை நாடு என்ன-படை செல்லும் முல்லை நிலத்தையுடைய நாடு முழுதும் தனக்குரிய மலைகள் செறிந்த சேரநாடு போலத் தோன்றும்படி; கை மலைகளிற்று இனம் தம் உள்முயங்க-கையையுடைய மலைகளைப் போன்ற களிற்றி யானைப்படைகள் தம்முள் செறிந்து செல்லா நிற்ப; தேரும் மாவும் கழல்செறி மறவரும் கார் மயங்கு கடலின் கலிகொள கடைஇ-தேர்ப்படையும் குதிரைப்படையும் வீரக்கழல் கட்டிய காலாட்படையும் ஆகிய நால்வகைப் படையையும் முகில் முழக்கத்தோடு கூடிய கடல்போல முழங்கும்படி செலுத்திச் சென்று; கங்கை அம் பேர் யாற்று அடைகரை தங்கி வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து-கங்கை என்னும் அழகிய பேரிய மாற்றினது நீரடை கரையின்மேல் தங்கியிருந்து வங்கமாகிய ஓடங்களில் ஏறி அதன் வடகரையில் இறங்கி; என்க.

(விளக்கம்) மலைநாடு என்றமையால் நிலநாடு என்றது முல்லை நிலம் என்பதாயிற்று. யானைகள் மலைகளைப் போலச் செறிந்து போதலால் முல்லை நிலமும் குறிஞ்சி நிலம் போலத் தோன்றிற்று என்றவாறு. கைம்மலை என்றது கையையுடைய மலை போன்ற களிற்றினம் என்றவாறு. மா-குதிரை. கழல்-வீரக்கழல். கார்-முகில். கலி-முழக்கம். கடைஇ-கடவி; செலுத்தி. வங்க நாவி: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. வங்கமாகிய நாவி என்க. அஃதாவது ஓடம். ஓடத்திலேறி வடகரையில் இழிந்து என்க.

மணிமேகலை வஞ்சி நகரத்துள் புகுந்து தங்குதல்

86-94 : கனக...........படுத்தற்கென்

(இதன் பொருள்) கனக விசயர் முதல் பல வேந்தர் அனைவரை வென்று-கனகனும் விசயனும் முதலிய பல வேந்தர் வந்தெதிர்ந்தோர் எல்லாரையும் போர்க்களத்திலே வென்று; அவர் அம்பொன் முடிமிசை சிமையம் ஓங்கிய இமைய மால்வரை தெய்வக் கல்லும்-கனக விசயராகிய அவ்வாரிய மன்னருடைய அழகிய பொன்முடி சூடுதற்குரிய தலையின்மேல் குவடுகள் உயர்ந்துள்ள இமயமென்னும் பெரிய மலையின்கண் அடித்தெடுத்த பத்தினித் தெய்வவுருவம் செய்தற்கியன்ற கல்லையும்; தன் திரு முடிமிசை பொன்செய் வாகையும் சேர்த்திய சேரன்-தன்னுடைய அழகிய முடியின்மேல் பொன்னால் செய்த வாகைப்பூ மாலையையும் ஏற்றிய சேரன் செங்குட்டுவனாகிய; வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க-வில்லினால் பெரும் வலிமையை விரும்பும் அம்மன்னவனுடைய புகழ் பெரிதும் விளங்கும்படி; திருந்து நல் ஏது முதிர்ந்து உளது ஆதலின்-தான் மேன்மேலும் திருந்துதற்குக் காரணமான நல்ல பழவினை முதிர்ந்துளது ஆதலின்; பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு-பிறப்பின்கண் பொருந்திய துன்பம் முதலிய நான்கு வாய்மைகளையும் உலகத்திற்கு அறிவுறுத்தும் பொருட்டு; பொற்கொடி பெயராகிய வஞ்சி என்னும் பெயரையுடைய அழகிய நகரத்தின்கண் போலிவுற்றிருந்தனள் என்பதாம்.

(விளக்கம்) கனகவிசயர் என்பவர் செந்தமிழ் மறவரின் ஆற்றல் அறியாமல் தமக்குரிய ஆரிய நாட்டின்கண் ஒரு திருமணப்பந்தரில் இகழ்ந்தனர். இதனை ஒற்றர் வாயிலாய்ச் சேரன் செங்குட்டுவன் அறிந்திருந்தனன். பின்னர்ச் சில நாளிலேயே பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்குத் திருவுருச் சமைத்தற்கு இமயத்திலாதல் பொதியிலாதல் கல் கொள்ளுதல் நன்றென அறிஞர் கூறக்கேட்டு இமயத்திலேயே கல்லெடுத்துக் காவா நாவின் கனகவிசயர் முடித்தலையில் ஏற்றிக் கொணருவல் என்று வஞ்சினங்க கூறிச் சேரன் செங்குட்டுவன் வடநாட்டின் மேல் படையெடுத்துப் போய்த் தான் கூறிய வஞ்சினம் தப்பாமல் கனகவிசயர் முடிமேல் இமயக்கல்லை ஏற்றிக் கொணர்ந்தான். இவ்வரலாறு ஈண்டுச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் இவ்வரலாறு வஞ்சிக் காண்டத்தில் விரிவாகக் கூறப்பட்டிருத்தல் காணலாம். திறம்வெய்யோன்-வலிமையை விரும்புவோன். அவன் புகழ் தாயாகிய கண்ணகியாலே முன்னம் விளக்க மெய்தியது. அப்புகழே மேலும் விளக்கமெய்தும்படி அத்தெய்வத்தின் திருமகளாகிய மணிமேகலையும் அந்நகரத்திலே புகுந்து பொலிவுற்றிருந்தாள் என்க. பொற்கொடி பெயர்ப்படூஉம் பொன்நகர் என்றது வஞ்சி நகரத்தை.

இனி, இக்காதையை அணியிழை, எழுந்து புகுந்து நின்று ஏத்தி, அருளல் வேண்டும் என்று அழுது நிற்ப, பத்தினிக்கடவுள் உரைப்பாள்; அங்ஙனமுரைப்பவளாகிய தாய், இவ்வியல்பு இன்னது என எடுத்துரைத்தலும், மணிமேகலை ஓதி வடிவாய்ப் பொன்னகர்ப் பொலிந்தனனென இயைத்திடுக.

வஞ்சிமாநகர் புக்க காதை முற்றிற்று.


Offline Anu

Re: மணிமேகலை
« Reply #27 on: February 28, 2012, 10:14:10 AM »
27. சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதை

அஃதாவது-இதன்கண் வஞ்சிமா நகரத்தின்கண் புகுந்து பொலிவுற்றிருந்த மணிமேகலை சமயக்கணக்கர் பலரையும் கண்டு அவரவர் சமயத்திற்கியன்ற காட்சிகளைக் கேட்டுணர்தற்குப் பெரிதும் விரும்பி அவர்களைத் தனித்தனியே கண்டு அவற்றை வினவித் தெரிந்து கொண்ட செய்திகளைக் கூறுகின்ற செய்யுள் என்றவாறு.

நவை அறு நன் பொருள் உரைமினோ என
சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து
வைதிக மார்க்கத்து அளவை வாதியை
எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்பு என
வேத வியாதனும் கிருதகோடியும்
ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர்
பத்தும் எட்டும் ஆறும் பண்புறத்
தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர்
காண்டல் கருதல் உவமம் ஆகமம்
ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு  27-010

ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு
எய்தி உண்டாம் நெறி என்று இவை தம்மால்
பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும்
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும்
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும்
நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால்
சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று
துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து
உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி  27-020

பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி
சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது
கிட்டிய தேசம் நாமம் சாதி
குணம் கிரியையின் அறிவது ஆகும்
கருத்து அளவு ஆவது
குறிக்கொள் அனுமானத்து அனுமேயத்
தகைமை உணரும் தன்மையது ஆகும்
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம்
பொது எனப்படுவது சாதன சாத்தியம்
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும்  27-030

கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன்
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல்
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால்
நிச்சயித்து அத் தலை மழை நிகழ்வு உரைத்தல்
முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு
இது மழை பெய்யும் என இயம்பிடுதல்
என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம்
தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி
மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்  27-040

உவமம் ஆவது ஒப்புமை அளவை
கவய மா ஆப் போலும் எனக் கருதல்
ஆகம அளவை அறிவன் நூலால்
போக புவனம் உண்டு எனப் புலங்கொளல்
அருத்தாபத்தி ஆய்க்குடி கங்கை
இருக்கும் என்றால் கரையில் என்று எண்ணல்
இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிற்கு
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல்
ஐதிகம் என்பது உலகு மறை இம் மரத்து
எய்தியது ஓர் பேய் உண்டு எனத் தௌிதல்  27-050

அபாவம் என்பது இன்மை ஓர் பொருளைத்
தவாது அவ் இடத்துத் தான் இலை என்றல்
மீட்சி என்பது இராமன் வென்றான் என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம் எனக் கூறல்
எட்டு உள பிரமாண ஆபாசங்கள்
சுட்டுணர்வொடு திரியக் கோடல் ஐயம்
தேராது தெளிதல் கண்டு உணராமை
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல்  27-060

நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது
எனைப் பொருள் உண்மை மாத்திரை காண்டல்
திரியக் கோடல் ஒன்றை ஒன்று என்றல்
விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல்
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா
மையல் தறியோ? மகனோ? என்றல்
தேராது தெளிதல் செண்டு வெளியில்
ஓராது தறியை மகன் என உணர்தல்
கண்டு உணராமை கடு மாப் புலி ஒன்று
அண்டலை முதலிய கண்டும் அறியாமை  27-070

இல் வழக்கு என்பது முயற்கோடு ஒப்பன
சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல்
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்குத் தீப்
புணர்ந்திடல் மருந்து எனப் புலம் கொள நினைத்தல்
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று
பிறர் சொலக் கருதல் இப் பெற்றிய அளவைகள்
பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர்   27-080

தாம் பிருகற்பதி சினனே கபிலன்
அக்கபாதன் கணாதன் சைமினி
மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம்
உவமானம் அருத்தாபத்தி அபாவம்
இவையே இப்போது இயன்று உள அளவைகள்
என்றவன் தன்னை விட்டு இறைவன் ஈசன் என
நின்ற சைவ வாதி நேர்படுதலும்
பரசும் நின் தெய்வம் எப்படித்து? என்ன
இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமய்க்  27-090

கட்டி நிற்போனும் கலை உருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும்
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும்
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன்
பேர் உலகு எல்லாம் பிரம வாதி ஓர்
தேவன் இட்ட முட்டை என்றனன்
காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன்
கற்பம் கை சந்தம் கால் எண் கண்   27-100

தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு
உற்ற வியாகரணம் முகம் பெற்றுச்
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு
ஆதி அந்தம் இல்லை அது நெறி எனும்
வேதியன் உரையின் விதியும் கேட்டு
மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற
எத் திறத்தினும் இசையாது இவர் உரை என
ஆசீவக நூல் அறிந்த புராணனை
பேசும் நின் இறை யார்? நூற்பொருள் யாது? என
எல்லை இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்  27-110

புல்லிக் கிடந்து புலப்படுகின்ற
வரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து
உரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு
அவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப்
பெய் வகை கூடிப் பிரிவதும் செய்யும்
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின
மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும்
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்
அவ் வகை அறிவது உயிர் எனப் படுமே
வற்பம் ஆகி உறும் நிலம் தாழ்ந்து   27-120

சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய்
இழினென நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீத்
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம்
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால்
ஆதி இல்லாப் பரமாணுக்கள்
தீதுற்று யாவதும் சிதைவது செய்யா
புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா
முது நீர் அணு நில அணுவாய்த் திரியா
ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா  27-130

அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும்
குலாம் மலை பிறவாக் கூடும் பலவும்
பின்னையும் பிரிந்து தம் தன்மைய ஆகும்
மன்னிய வயிரமாய்ச் செறிந்து வற்பமும் ஆம்
வேய் ஆய்த் துளைபடும் பொருளா முளைக்கும்
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம்
நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின்
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உறும்  27-140

துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே
இக் குணத்து அடைந்தால் அல்லது நிலன் ஆய்ச்
சிக்கென்பதுவும் நீராய் இழிவதும்
தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும்
ஆய தொழிலை அடைந்திடமாட்டா
ஓர் அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர்
தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர்
மாலைப் போதில் ஒரு மயிர் அறியார்
சாலத் திரள் மயிர் தோற்றுதல் சாலும்
கருமம் பிறப்பும் கரு நீலப் பிறப்பும்  27-150

பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்
என்று இவ் ஆறு பிறப்பினும் மேவி
பண்புறு வரிசையின் பாற்பட்டுப் பிறந்தோர்
கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர்
அழியல் வேண்டார் அது உறற்பாலார்
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும்
அது மண்டலம் என்று அறியல் வேண்டும்
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும்
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும்  27-160

பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும்
கருவில் பட்ட பொழுதே கலக்கும்
இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத் தகும்
முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது
மற்கலி நூலின் வகை இது என்ன
சொல் தடுமாற்றத் தொடர்ச்சியை விட்டு
நிகண்ட வாதியை நீ உரை நின்னால்
புகழும் தலைவன் யார்? நூற்பொருள் யாவை,
அப் பொருள் நிகழ்வும் கட்டும் வீடும்
மெய்ப்பட விளம்பு என விளம்பல் உறுவோன்  27-170

இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன்
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும்
அதன்மாத்திகாயமும் கால ஆகாயமும்
தீது இல் சீவனும் பரமாணுக்களும்
நல்வினையும் தீவினையும் அவ் வினையால்
செய்வுறு பந்தமும் வீடும் இத் திறத்த
ஆன்ற பொருள் தன் தன்மையது ஆயும்
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும்
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று
நுனித்த குணத்து ஓர் கணத்தின் கண்ணே  27-180

தோற்றமும் நிலையும் கேடும் என்னும்
மாற்று அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம்
நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்
நிம்பத்து அப் பொருள் அன்மை அநித்தயம்
பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம்
இயற்றி அப் பயறு அழிதலும் ஏதுத்
தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய்
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா
அப்படித்தாகி அதன் மாத்திகாயமும்
எப் பொருள்களையும் நிறுத்தல் இயற்றும்   27-190

காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும்
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும்
ஆக்கும் ஆகாயம் எல்லாப் பொருட்கும்
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும்
சீவன் உடம்போடு ஒத்துக் கூடி
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும்
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும்
சீர்சால் நல்வினை தீவினை அவை செயும்
வரு வழி இரண்டையும் மாற்றி முன்செய்
அரு வினைப் பயன் அனுபவித்து அறுத்திடுதல்  27-200

அது வீடு ஆகும் என்றனன் அவன்பின்
இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன்
தனை அறிவு அரிதாய் தான் முக் குணமாய்
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய்
எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம் எனச்
சொல்லுதல் மூலப் பகுதி சித்தத்து
மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு
அதன்கண் ஆகாயம் வெளிப்பட்டு அதன்கண்
வாயு வெளிப்பட்டு அதன்கண் அங்கி
ஆனது வெளிப்பட்டு அதன்கண் அப்பின்  27-210

தன்மை வெளிப்பட்டு அதில் மண் வெளிப்பட்டு
அவற்றின் கூட்டத்தில் மனம் வெளிப்பட்டு
ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும்
ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும்
வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும்
அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும்
தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும்
நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்
சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய்
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என  27-220

ஆக்கிய இவை வெளிப்பட்டு இங்கு அறைந்த
பூத விகாரத்தால் மலை மரம் முதல்
ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து
வந்த வழியே இவை சென்று அடங்கி
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும்
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம்
அறிதற்கு எளிதாய் முக் குணம் அன்றி
பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி
எப் பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி
அப் பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்  27-230

ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய்
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன்
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம்
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம்
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் எனச்
செயிர் அறச் செப்பிய திறமும் கேட்டு  27-240

வைசேடிக! நின் வழக்கு உரை என்ன
பொய் தீர் பொருளும் குணமும் கருமமும்
சாமானியமும் விசேடமும் கூட்டமும்
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது
குணமும் தொழிலும் உடைத்தாய் எத் தொகைப்
பொருளுக்கும் ஏது ஆம் அப் பொருள் ஒன்பான்
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம்
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும்
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும்  27-250

சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை
மாசு இல் பெருமை சிறுமை வன்மை
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம்
என்னும் நீர்மை பக்கம் முதல் அனேகம்
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும்
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான்
போதலும் நிற்றலும் பொதுக் குணம் ஆதலின்
சாதலும் நிகழ்தலும் அப் பொருள் தன்மை  27-260

ஒன்று அணு கூட்டம் குணமும் குணியும் என்று
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே
பூத வாதியைப் புகல் நீ என்னத்
தாதகிப் பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மதுக் களி பிறந்தாங்கு
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அவ் உணர்வு அவ் அப் பூதத்து அழிவுகளின்
வெவ் வேறு பிரியும் பறை ஓசையின் கெடும்
உயிரொடும் கூட்டிய உணர்வு உடைப் பூதமும்
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும்  27-270

அவ் அப் பூத வழி அவை பிறக்கும்
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும்
உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும்
இம்மையும் இம்மைப் பயனும் இப் பிறப்பே
பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு
நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன்
பிறந்த முன் பிறப்பை எய்தப் பெறுதலின்
அறிந்தோர் உண்டோ? என்று நக்கிடுதலும்  27-280

தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும்
மையல் உறுவார் மனம் வேறு ஆம் வகை
ஐயம் அன்றி இல்லை என்றலும் நின்
தந்தை தாயரை அனுமானத்தால் அலது
இந்த ஞாலத்து எவ் வகை அறிவாய்?
மெய்யுணர்வு இன்றி மெய்ப் பொருள் உணர்வு அரிய
ஐயம் அல்லது இது சொல்லப் பெறாய் என
உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள் உரைத்து
ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்கு என்  27-289

உரை

1-4 : நவை..........இயம்பென

(இதன் பொருள்) சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து-இவ்வாறு வஞ்சிமா நகரத்தின்கண் புகுந்து மாதவன் வடிவில் பொலிவுற்றிருந்த மணிமேகலை அந்நகரத்தின் கண் சமய நூலுணர்ந்த ஆசிரியர்மார்கள் தம் பக்கலிலே சென்று; நவையறுகன் பொருள் உரைமினோ என எய்தினள்-அச்சமயக்கணக்கர்களைத் தனித்தனியே கண்டு நும்முடைய சமயத்தில் உயிரின் பிறவிப்பிணி அறுதற்குக் காரணமான மெய்ப்பொருளைக் கூறுமின் என வினவப் புகுந்தனள்; வைதிக மார்க்கத்து அளவைவாதியை எய்தி-முதன் முதலாக வேதநெறியினை மேற்கொண்டொழுகும் அளவைவாதியின்பாற் சென்று அவனை நோக்கி; நின் கடைப்பிடி இயம்பு என-ஐயனே! நீ நின் சமயத்தில் கடைப்பிடித்தொழுகும் நின் நூற்பொருளை எனக்குக் கூறுவாயாக என வேண்டாநிற்ப என்க.

(விளக்கம்) நவை-துன்பம்; அஃதீண்டுப் பிறப்பின் மேனின்றது. நன்பொருள்-ஈண்டுத் தத்துவம். சமயக் கணக்கர்-சமய நூலுணர்ந்து அதனைப் பரப்புபவர். உரைமினோ என எய்தினவளாகிய மணிமேகலை என்க. வைதிக மார்க்கம்-வேதத்தின்கண் கூறப்பட்டுள்ள சமயநெறி. அளவை வாதி-காட்சி முதலிய அளவைகளால் ஆராய்ந்தே மெய்ப்பொருளை அறிதல் கூடும் என்னும் கொள்கை உடையவன். கடைப்பிடி-துணிபொருள்.

அளவை வாதியின் கூற்று அளவைகளும் அவற்றின் ஆசிரியர்களும்

5-13 : வேதவியாதனும்..........வேண்டும்

(இதன் பொருள்) வேதவியாதனும் கிருதகோடியும் ஏதம் இல்சைமினி எனும் இவ்வாசிரியர்-அதுகேட்ட அளவைவாதி (மணிமேகலையாகிய) மாதவனை நோக்கித் துறவியே அவ்வாறே கூறுவேன் என்று கூறுபவன் வேதவியாதனும் கிருதகோடியும் குற்றமில்லாத சைமினியும் என்று கூறப்படுகின்ற எம்மாசிரியன்மார் நிரலே; பத்தும் எட்டும் ஆறும் தத்தம் வகையால் தாம் பண்புஉற பகர்ந்திட்டனர்-பத்தளவையும் எட்டு அளவையும் ஆறளவையும் ஆகத் தாம் தாம் ஆராய்ந்து கண்ட முறைமையினாலே அவரவரே விளக்கிக் கூறினர். எங்ஙனம் கூறினர் எனின்; காண்டல் கருதல் உவமம் ஆகமம் ஆணடைய அருத்தாபத்தியோடு இயல்பு ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு எய்தி உண்டாம் நெறி என்று-காட்சியும் கருதலும் ஆகமமும் ஆகிய இவற்றின் அப்பாலாகிய அருத்தாபத்தியும் ஐதிகமும் மீட்சி ஒழிவறிவும் எய்தி உண்டாம் நெறியும் அளவைகள் என்று அறிவித்து; இவை தம்மால் பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும்-இப்பத்தளவைகளாலும் அளந்து மெய்ப்பொருளின் இயல்பினை மாந்தர் அறிந்து கொள்ளவேண்டும் என்று செவியறிவுறுத்தனர் என்றான் என்க.

(விளக்கம்) வியாதன் என்னும் பெயருடைய முனிவர் பலர் உளராதலின் இவ்வியாதன் அவருள் வேதத்தை வகுத்துமுறை செய்த வியாதனை என்பது தோன்ற வேதவியாதன் என்று விதந்தோதினர் என்னை? மாயாவாதமும் பாற்கரியவாதமும் கிரீடாப்பிரமவாதமும் சத்தப்பிரமவாதமும் சத்தப்பிரமவாதமும் என்னும் நால்வேறுவகைப்பட்ட ஏகான்மவாத நூல் செய்த வியாசனும் உத்தர மீமாஞ்சை மதநூல் செய்த வியாதனும் மகாபாரதம் என்னும் இதிகாசமியற்றிய வியாதனும் என இப்பெயருடைய வியாத முனிவர் பலர் உளராதலும் இவர்க்கெல்லாம் பத்தளவைகள் உடம்பாடன்மையின் ஈண்டுக் கூறப்பட்ட, வேதவியாதர் அவர்களுள் ஒருவர் அல்லாமை அறிக. கிருதகோடி என்பவரைப் போதாயனர் எனவும் கிருதகோடி கவி எனவும் கூறுவார் உளர் என்பாரும் உளர். சைமினி என்பவர் வேதத்தில் கருமகாண்ட ஆராய்ச்சி செய்தற்கெழுந்த நூலாசிரியர் என்பர். வேதவியாதன் பத்தளவையும், கிருதகோடி எட்டளவையும், சைமினி ஆறளவையும், பகர்ந்திட்டனர் என்க. காண்டல் எனினும் காட்சி எனினும் ஒக்கும் கருதல் எனினும் கருத்து எனினும் ஒக்கும். அனுமானம் என்பதுமது நியாய நுலாசிரியர் ஆகிய கவுதம முனிவர் முதலியோர் உவமம் காண்டல் முதல் ஆகமம் ஈறாக உள்ள நான்களவைகளுள் ஏனைய அளவைகள் அடங்கும் ஆதலின் இவையே சிறப்புடையன. பிற சிறப்பில்லன என்பாரும் உளர் என்பது பற்றி ஆண்டைய அருத்தாபத்தியோடு எனப் பிரித்துக் கூறினர். ஐதிகம்-உலகுரை. அபாவம்-இன்மை. மீட்சியொழிவறிவு-மீட்சியினால் ஒழிந்த பொருளை அழியும் அளவை; பாரிசேடம் என்பதும் அது அபாவம்: இன்மையால் ஒரு பொருளை இல்லை என்று துணிவது. உண்டாம் நெறி எனினும் சம்பவம் எனினும் ஒக்கும் என்று செவியறிவுறுத்தனர் என்க.

1-காட்சியளவையின் வகை முதலியன

14-24 : மருளில்.................அறிவதாகும்

(இதன் பொருள்) மருள்இல் காட்சி ஐவகையாகும்-மயங்குதற்கு இடனில்லாத காட்சி அளவைதானும் ஐந்து வகைப்படுவதாம் அவை வருமாறு: கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் மூக்கால் நாற்றமும் நாவால் சுவையும் மெய்யால் ஊறும் நண்ணிய இவை எனச் சொன்ன இவை-கண் செவி மூக்கு நா மெய் என்னும் ஐம்பொறிகளுள் வைத்துக் கண்ணால் நிறமும் செவியால் ஓசையும் மூக்கினால் நாற்றமும் நாவினால் சுவையும் மெய்யினால் ஊறும் ஆகிய இப்புலன்கள்; நண்ணிய எனச் சொன்ன-வந்துற்ற பொழுது அவ்வப் பொறிகளாலே இப்புலன்கள் உணரப்படும் என்று சான்றோரால் சொல்லப்பட்ட படி இப்பொறிகளால் நிரலே; கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று-பார்த்தும் கேட்டும் மோந்தும் உண்டும் தீண்டியும்; துக்கமும் சுகமும் என துயக்கு அற அறிந்து-உணர்ந்து பார்த்து இப்புலன்கள் தரும் நுகர்ச்சியைத் துன்பமென்றாதல் இன்பமென்றாதல் தடை சிறிதுமின்றி உணர்ந்து; உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி-உயிரும் கருவிகளும் நெஞ்சும் ஆகிய இவை பழுதில்லாமலும்; பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றியும்-பொருளில் பயின்றுணரும் உணர்ச்சியினோடே பயிலப்படுகின்ற பொருளும் இடமும் ஆகிய இவற்றானும் பழுதில்லாமலும்; சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது-சுட்டலும் பிறழ்தலும் இரட்டுற நினைதலும் ஆகிய குற்றம் பிறவாமலும்; கிட்டிய தேசம் நாமம் சாதிகுணம் கிரியையின் அறிவதாகும்-காணப்படும் பொருளைச் சார்ந்த இடம் பெயர் சாதி குணம் தொழில் என்னும் இவற்றால் நன்கறியும் அறிவே காட்சியளவை எனப்படுவதாம் என்க.

(விளக்கம்) மயக்கக் காட்சி அளவை ஆகாதென்பதற்கு மருளில் காட்சி என விதந்தார்; மருள் காட்சியாவது

பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு
மருளானு மாணாப் பிறப்பு  (குறள்-351)

என்பதனானும் உணர்க. காட்சி ஐந்தே இவற்றின்மேல் இல்லை என்பார் ஐந்து வகை ஆகும் என்று தொகுத்துக்கூறி மேலே அவற்றை வகுத்தோதுகின்றனர்.

இனி, காண்டல் என்பது கண்ணினது தொழிலாகவும் ஏனையவற்றிற்கும் பொருந்துவ தெங்ஙனமெனின்; ஈண்டுக் காண்டல் என்பது விளங்கவறிதல் என்னும் பொருள்மேனின்றது. என்னை! வேதங்கரை கண்டான் என்புழியும் காலமுன்று மவை கண்டு கூறியவன் என்புழியும், கண்டுரைப்பின் என்புழியும், சூத்திரப் பொருள் கண்டான் என்புழியும்,

செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா
ருயிரிற் றலைப் பிரிந்த வூன்      (குறள்-258)

என்புழியும் அஃதப் பொருட்டாதலுணர்க.

கண் முதலிய பொறிகள் ஐந்தும் காட்சி முதலிய புலன்கள் ஐந்தும் அளவைவாதிகள் தோன்றுதற்கு முன்பே உலக வழக்கில் வழங்கப்பட்டு வருதல் தோன்ற கண்ணால் வண்ணமும்........ஊறும் எனச் சொன்ன இவை என்று முன்னையோர் மேலிட்டுக் கூறினர். நண்ணிய என்பதனை வண்ணம் முதலிய புலன்கள் ஐந்தனோடும் பொருந்த இடைநிலை விளக்கமாக்கிக் கூறிக்கொள்க. என்னை? நிறம் முதலிய புலன்கள் பொறிகளை வந்துற்றபொழுது அறிவதல்லது அவை வாராதபொழுது அறியமாட்டாமையின் என்க. இனி செவி முதலிய பொறிகட்கும் இஃதொக்கும். கட்பொறி சேய்மையிற் சென்றும் தனக்குரிய புலனைப் பற்றும் என்பாரும் உளராலோ எனின் அற்றன்று. அவர் கொள்கை போலி என்றொழிக. கண் முதலியவற்றோடு காணல் முதலியவற்றை நிரல் நிரையாகக் கொள்க. துயக்கு-தடை; சோர்வு எனினுமாம். வாயில் ஆகிய கருவிகள் பழுதுபட்டிருந்தால் காட்சியளவை பயனின்றாதலின் ஊறின்றி என்றார். ஒளி என்றது உயிரினது உணர்வை இஃதுணராதார் ஒளி ஞாயிறு திங்கள் தீ ஆகிய ஒளிகள் என்றார். இவ்வுரை போலி. என்னை? கண்ணொழிந்த செவி மூக்கு நா மெய் என்னும் நான்கு பொறிகளும் தத்தம் புலன்களைக் கோடற்கண் ஞாயிறு முதலியவற்றின் ஒளி வேண்டாமை நுண்ணிதின் உணர்க. இதனை,

இருளாக மூடுஞ்சு ழுத்தியி லிராத்திரியி
லிரவிசுட ரற்ற பொழுது
மருளாமலிருளையும் பொருளையுந் தெரிகின்ற
வகைகொண்டு சித்தாகுமே  (கைவல்யம்-414)

எனவரும் செய்யுளால் உணர்க. பொருள்-காட்சிப் பொருள். சுட்டல்-பொருள் உண்மை மாத்திரை காண்டல். திரிதல்-ஒன்றை மற்றொன்றாகக் கருதல். கவர் கோடல்-கண்டபொருளை இரட்டுறவே கருதல் (ஐயுறுதல்). சாதி-ஒருநிகரனவாகிய பல பொருட்குப் பொதுவாவதொருதன்மை.

2. கருத்தளவு

25-28: கருத்தளவு.............முதல்ஆம்

(இதன் பொருள்) கருத்தளவாவது-இனி அனுமான அளவை எனப்படுவது; குறிக்கொள் அனுமானத்து அனுமேயத் தகைமை உணரும் தன்மையதாகும்-ஏதுவுக்குப் பிறப்பிடமான குறியாகக் கொண்டு ஆராய்ச்சியினாலே சாதிக்கப்படும் பொருளின் உண்மையை உணர்த்தும் தன்மையுடையதாகும்; அது-இங்ஙனமாகிய அக்கருத்தளவை; மூவகை உற்று பொது எச்சம் முதல்ஆம்-பொது வென்றும் எச்சமென்றும் முதலென்றும் மூன்று பெயர் பெறுவனவாம்.

(விளக்கம்) கருத்தளவு-அனுமானப் பிரமாணம். அனுமானமாவது சாத்தியத்தை ஒழியச் சம்பவியாததாகிய சாதனத்தால் சாத்தியத்தைப் பற்றிப் பிறக்கும் ஞானமாகும் என்பர் நீலகேசி உரையாசிரியர் (நீலதரும-செய் 92). அனுமேயம் ஆராய்ந்துணரப்படுவது. அது மூவகை உற்று என மாறுக.

இதுவுமது

29-40 : பொது..............உணர்தல்

(இதன் பொருள்) பொது வெனப்படுவது-இவற்றுள் பொதுக் கருத்தளவை என்று கூறப்படுவது; சாதன சாத்தியம் இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும்-ஏதுவும் துணி பொருளும் ஆகிய இவை இரண்டும் தம்முள் தொடர்பின்றி இருந்தவிடத்தும்; கானம் கடம் திகழ்யானை ஒலி கேட்டோன்-காட்டில் நின்றும் வருகின்ற மதத்தால் விளங்கும் யானையினது பிளிற்றொலியைக் கேட்டவன் ஒருவன்; உடங்கு எழில் யானை அங்கு உண்டென உணர்தல்-அவ்வொலியோடு ஒருங்கே எழுச்சியுடைய மானையானது அக்காட்டின்கண் உண்டு என்று உணர்ந்து கொள்ளுதலாம்; எச்சம் என்பது வெள்ள ஏதுவினால் அத்தலை மழை நிகழ்வு நிச்சயித்து உரைத்தல்-இனி எச்சம் என்னும் கருத்தளவை மாற்றில் பெருகிவரும் வெள்ளமாகிய ஏதுவினால் அவ்வியாது தோன்றுதற்கிடனான சேயதாகிய அவ்விடத்தே மழை பெய்திருக்க வேண்டும் என்று துணிந்து கூறுதல்; முதல் என மொழிவது-இனி முதல் என்று கூறப்படும் கருத்தளவையாவது; கருகொள் முகில் என்று கூறப்படும் கருத்தளவையாவது; கருகொள் முகில் கண்டு இது மழை பெய்யும் என இயம்பிடுதல்-சூல்கொண்டு வருகின்ற மேகத்தைப் பார்த்து இம்மேகம் ஒருதலையாக மழை பொழியும் என்று துணிந்து கூறுதலாம்; என்னும் ஏதுவின் ஒன்று முக்காலம் தன்னில் ஒன்றின் சார்ந்து உளது ஆகி-என்று இங்ஙனம் கூறப்படுகின்ற மூன்று ஏதுக்களுள் வைத்து யாதேனும் ஒன்று இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலங்களுள் வைத்து ஒரு காலத்தைப் பொருத்தி உளதாகா நிற்பவும்; மாண்ட உயிர் முதல்-அறிவினால் மாட்சிமைப்பட்ட உயிராகிய வினை முதலும் முன் காண்டல் அளவைக்குக் கூறப்பட்டபடி உணர்வும் கருவிகளும் ஆகிய இவற்றால் குற்றம் இலதாய் இருந்து; காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்-தான் காட்சியால் கண்ட பொருளை ஏதுவாகக் கொண்டு ஆராய்ந்து, கண்டிலாத பொருளுண்மையை உணர்ந்து கொள்ளுதலாம் என்றான் என்க.

(விளக்கம்) பொது-இதனைக் காரணனுமானம் எனவும் பூர்வானுமானம் எனவும் கூறுப. பொது முதலிய இம்மூன்றன் இயல்பையும்,

இடித்து மின்னி இருண்டு மேக
மெழுந்த போதிது பெய்யுமென்
றடுத்த தும்அகில் சந்த முந்தி
அலைத்துவார்புனல் ஆறுகொண்
டெடுத்து வந்திட மால்வ ரைக்க
ணிருந்து கொண்டல் சொரிந்ததென்று
முடித்ததும் இவை காட்சி யன்றனு
மான மென்று மொழிந்திடே

எனவரும் (சிவ, சித்தி. பரபக்கம் உலோகாயதன் மதமறுதலை, 2) செய்யுளானும் உணர்க. அந்நுவயம்-சேர்க்கை. அஃதாவது காரண காரியங்களுக் கிடையே இயற்கையாக அமைந்த தொடர்பு. கடம்-மதம். கானம்-காடு. உடங்கு-ஒருங்கு. எச்சம்-இதனைச் சேடானுமானம் எனவும் காரியானுமானம் எனவும் கூறுப. வெள்ளம் ஆகிய ஏது என்க. மழைநிகழ்வு-மழைபெய்தமை. கருக்கொள் முகில்-சூல் கொண்ட மேகம். இது-இம்மேகம். காண்டற் பொருள்-கண்ணால் கண்ட பொருள். கண்டிலது-காணப்படாத பொருள்.

3. உவமம், 4. ஆகமம், 5. அருத்தாபத்தி, 6. இயல்பு, 7. ஐதிகம்.

41-50 : உவமை...................தெளிதல்

(இதன் பொருள்) உவம மாவது-உவமஅளவை என்று சொல்லப்படுவது; ஒப்புமை அளவை-கண்டதும் காணாததுமாகிய இரண்டு பொருள்களின்கண் கிடந்த பொதுத்தன்மைகொண்டு கேள்வி அறிவினால் பண்டு காணாத பொருளை உணர்ந்து கொள்ளுதலாம், அஃதாவது; கவயமா ஆபோலும் என-கவயமா என்னும் காட்டு விலங்கினை அறியாதான் ஒருவனை அது பசுவைப் போன்றிருக்கும் என்று கேள்வியுற்றிருந்தவன் பின்னர்க் காட்டின்கண் ஆப்போன்றதொரு விலங்கைக் கண்டு இதுவே கவயமா என; கருதல்-துணிதலாம்; ஆகம அளவை-இனி நூல் அளவையாவது; அறிவன் நூலால் போக புவனம் உண்டு என புலங்கொளல்-வினையின் நீங்கி விளங்கிய அறிவினையுடைய நூலாசிரியன் நூலின்கண் ஓதியிருத்தல் கண்டு இவ்வுலகிற்கப்பால் துறக்கமும் நரகமுமாகிய வேறு உலகங்களும் உண்டு என்று துணிதல்; அருத்தாபத்தி-அருத்தாபத்தி என்னும் அளவையாவது; ஆய்க்குடி கங்கையிருக்கும் என்றால்-ஒருவன் இடையர் வாழும் சேரி கங்கையின்கண் உளது என்று கூறியவழி; கரையில் என்று எண்ணல்-அது கேட்டவன் கங்கை என்னும் சொல் கரை என்னும் பொருட்டு ஆகும். ஆதலின் கங்கையாற்றின் கரையில் இடைச்சேரி உளது என்று துணிதல்; இயல்பு-இனி இயல்பு என்னும் அளவையாவது; யானைமேல் இருந்தோன்-யானைமேல் ஏறி அதனைச் செலுத்துதற்கு அமைந்திருந்தோன் ஒருவன் கொடு என்று கையை நீட்டிய பொழுது அது கேட்டோன் அவன் கேட்கும் பொருள் தோட்டியே என்றறிந்து; தோட்டிக்கு அயல் ஒன்று ஈமாது அதுவே கொடுத்தல்-தான் துணிந்த தோட்டிக்கு வேறாக மற்றொன்றனையும் கொடாமல் அத்தோட்டியையே கொடுத்தல் ஆகும்; ஐதிகம் என்பது உலகுரை-இனி ஐதிக அளவை என்பது செவி வழியாக வருகின்ற உலகுரையே ஆம் அஃதாவது; இம்மரத்து எய்தியது ஓர் பேய் உண்டு என-உலகத்தோர் ஒரு மரத்தைக் குறித்து இம்மரத்தின்கண் உறைவதொரு பேய் உளது என்று நெடுநாளாகக் கூறிவருதலால் அது கேட்டோர் அங்ஙனமே அம்மரத்தில் ஒரு பேய் உளது என்று துணிதலாம் என்றான் என்க.

(விளக்கம்) உவமை-இருபொருளின்கண் கிடந்த ஒப்புமைத்தன்மை. இதனை ஒக்கும் இது எனக் கேட்டிருந்த ஒருவன் இதற்கும் அதற்கும் உள்ள ஒப்புமையைக் கண்டு பண்டு கண்டறியாத அதனை அவ்வொப்புமை காரணமாக அறிந்து கொள்ளுதல். கவயமா-ஆமா-காட்டுப்பசு. இது நாவால் நக்கியே பிறஉயிரைக் கொன்றுவிடும் ஒரு கொடிய விலங்கு. இக்காரணத்தால் இதுபற்றி உணர்த்தலும் உணர்தலும் வேண்டிற்று கண்ணன் கருமுகில் போல் வண்ணன் எனக் கேட்டவன் அவ்வுவமையால் அக்கண்ணனை அவ்வண்ணமுடையோனாகக் கருதி உணரும் உணர்ச்சியும் இவ்வளவையின் பாற்படும். ஆகமம்-முதனூல். அறிவன் என்றது வினையின் நீங்கி விளங்கிய அறிவனை. என்னை? அவனே நூல் செய்யும் தகுதி உடையன் ஆகலின் என்க. இதனை,

வினையி னீங்கி விளங்கி வறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்  (தொல்.மரபி.96)

என்பதனானு முணர்க. போகபுவனம்-உயிர்கள் இவ்வுலகத்தே செய்யும் நல்வினை தீவினைகட்குரிய பயனாகிய இன்பதுன்பங்களை நுகர்தற்குரிய உலகங்கள், இப்போகபுவனங்கள் சமயங்கள்தோறும் மாறுபடும் எனினும் எல்லாச் சமயத்தார்க்கும் பொருந்தப் பொதுமறை செய்த அறிவன் நூலாகிய திருக்குறளினும்,

அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்          (குறள்-121)

எனவரும் குறளின்கண் போகபுவனம் கூறப்பட்டிருத்தலும் உணர்க. இனி அருத்தாபத்தியின் இயல்பை வரும் செய்யுளால் உணர்க.

அடுத்துல கோதும் பொருளருத் தாபத்தி யாமதுதா
னெடுத்த மொழியினஞ் செப்புவ தாகுமிவ் வூரிலுளர்
படைத்தவ ரென்னிற் படையா தவருமுண் டென்றுமிவன்
கொடுப்பவனென்னிற் கொடாதாரு முண்டென்றுங் கொள்வதுவே (சிவ.சித்தி.அளவை-உரை)

எனவரும்,

பகலுண்ணான் பருத்திருப்பான் என்புழி இவன் இரவில் நன்கு உண்ணுவான் என்றுணர்வதும் அஃது. இயல்பளவைக்கு இங்ஙனமே,

மாமே லிருந் தொருகோறா வெனிற்சுள்ளிக் கோறாலும்
சோமே லிருந்தொரு கோறாவெனிற் றரலே துணிந்து
பூமேவு கண்ணமுத் தங்கோல் கொடுத்தலும் பூதலத்தே
நாமேவி யல்பென்று கூறுவர் நல்லசொன் னாவலரே

(என்றும் வரும் மேற்படி சிவசித்தி அளவை உரை மேற்கோள்) எனவரும் செய்யுளினும் கூறப்பட்டிருத்தல் உணர்க. இனி ஐதிக அளவைக்கு,

கொன்பயில் வேலைக் கடல்புடை சூழுங் குவலயத்தோ
ரன்புட னாலி லலகையுண் டென்பர்க ளென்பதுவு
மின்பயில் புற்றில் விடநாக முண்டென்ப ரென்பதுவும்
என்பர்க ணாவல ரென்பது மைதிக மென்பர்களே

எனவரும் செய்யுளின்கண் வேறுமோர் எடுத்துக்காட்டு வருதலும் உணர்க.

8. அபாவம், 9. மீட்சிஒழிவறிவு, 10. உண்டாம் நெறி, என்னும் அளவைகள்

51-56 : அபாவம்..............கூறல்

(இதன் பொருள்) அபாவம் என்பது-அபாவ வளவை என்று சொல்லப்படுவது; இன்மை ஓர் பொருளை அவ்விடத்துத் தவாது தான் இலை என்றல்-அஃதாவது ஒரு பொருள் ஓரிடத்தில் உளதாகத் துணிந்து அங்கு நன்கு தேடியபின் அப்பொருள் அங்கு இல்லாமை கண்டு அப்பொருள்தான் தேடிய அவ்விடத்தே இல்லை என்று துணிந்து அப்பொருளைத் தான் தேடிய அவ்விடத்தே தனது தெளிவு கெடாதபடி தானே இல்லையென்று துணிதல்; மீட்சி என்பது-மீட்சி அளவை என்று சொல்லப்படுவது வருமாறு; இராமன் வென்றான் என-இராமன் வெற்றி பெற்றனன் என்ற சொல் கேட்டவளவிலே; மாட்சிஇல் இராவணன் தோற்றமை மதித்தல்-அறமாண்பில்லாத இராவணன் தோற்றொழிந்தான் என்பதனையும் துணிதல்; உள்ள நெறி என்பது-உண்டாம் நெறி என்று கூறப்பட்ட அளவையாவது; நாராசத் திரிவில் கொள்ளத்தகுவது காந்தமெனக் கூறல்-இருப்புக்கோலின் சுழற்சியினாலே அறிந்து கொள்ளத்தக்கது அவ்விரும்பின்கண் காந்தம் உண்மை என்று துணிதல்;

(விளக்கம்) ஓரிடத்தே ஒருபொருள் இருக்கக்கூடும் என்று ஆராய்பவன் அப்பொருள் அங்கு இல்லை என்று துணிதலுக்கு அப்பொருளின் இன்மையே காரணமாதலின் அதுவும் ஓர் அளவையாயிற்று. தவாது என்றது தனது துணிவு பிழைபடாமல் என்றவாறு. துணிவாவது அப்பொருள் அவ்விடத்து இல்லை என்பது. இவ்வளவையை என்று மபாவம் முன் அபாவம் ஒன்றினென்றபாவம் எனப் பல்வேறுவகையானும் வகுத்து ஆராய்தலும் உண்டு. மீட்சியொழிவு அறிவு என்பதனை ஈண்டு மீட்சி என்றே ஓதியது மீட்சி அளவை என்றும் அது வழங்கப்படும் என்பது அறிவித்தற்கு. இதனை ஒழிபளவை எனவும் பாரிசேடவளவை எனவும் கூறுப. இவ்வளவைக்குச் சித்தியாரில் மறைஞான தேசிகர் எடுத்துக்காட்டும் செய்யுள் வருமாறு-

சீரா ரொழிபென்று செப்பப் படுவது திண்புவிமேற்
போராடி நின்று பொருதா ரிருவர்தம் போர்க்களத்துப்
பாரா ரிராகவன் வென்றா னெனிற்றன் பரிசழிந்து
நேரா மிராவணன் றேற்றசொல் லாகி நிகழ்வதுவே

எனவரும், இனி உண்டாநெறி எனினும் உள்ளநெறி எனினும் சம்பவ அளவை எனினும் ஒரு பொருளன. இதன் இயல்பினைச் சிவ.சித்தி-சுப அளவை மேற்கோளாக வரும்.

துயக்கற வுண்மை யென நா வலர்க டுணிந்துரைப்ப
தியற்கைப் பொருளினை யிற்றென லாமிது தானுரைக்கின்
வியக்குற்ற கால்சலிக் குந்தீச் சுடும்விய னீர்குளிரும்
வயக்குற்ற மண்வலி தென்றுபட் டாங்கு வழங்குவதே

எனும் பாட்டானுணர்க.

பிரமாண பாசங்கள்

57-61 : எட்டுள............நிகழ்வ

(இதன் பொருள்) பிரமாண பாசங்கள்-அளவைப் போலிகளும்; எட்டு உள-எட்டு இருக்கின்றன, அவையாவன; சுட்டு உணர்வொடு திரியக்கோடல் ஐயம் தேராதுதெளிதல் கண்டுணராமை-சுட்டுணர்வும் திரியக்கொள்ளுதலும் ஐயமும் தேராதுதெளிதலும் கண்டும் உணராமையும் ஆகிய இவற்றோடு; எய்தும் இல்வழக்கு உணர்ந்ததை உணர்தல் நினைப்பு என நிகழ்வ-சேரும் இல்வழக்கும் உணர்ந்ததை உணர்தலும் நினைப்பும் என்று நிகழ்கின்ற இவ்வெட்டுமாம் என்றான் என்க.

(விளக்கம்) பிரமாணபாசங்கள் எட்டுள என மாறுக. இது தொகுத்துக் கூறல் என்னும் உத்தி. பிரமாணபாசங்கள்-அளவைப் போலிகள். மேலே சுட்டுணர்வு.......நினைப்பன நிகழ்வ என்னுந்துணையும் வகுத்து மெய்ந்நிறுத்தல் என்னும் உத்தி.

அளவைப் போலியின் இலக்கணம்

61-77 : சுட்டுணர்வு...............அளவைகள்

(இதன் பொருள்) சுட்டுணர்வு எனப்படுவது-இனி இவ்வளவைப் போலிகள் எட்டனுள் வைத்துச் சுட்டுணர்வென்னும் அளவைப் போலியாவது; ஏனைபொருளுண்மை மாத்திரை காண்டல்-அறியப் புகுந்த எல்லாப் பொருள்களையும் அவற்றின் உண்மை மாத்திரம் கண்டொழிதலாம்; திரியக்கோடல் ஒன்றை ஒன்று என்றல்-திரியக்கோடல் என்பது ஒன்றை மற்றொன்றாகக் கருதல்; விரிகதிர் இப்பியை வெள்ளியென்று உணர்தல்-அஃதாவது விரிகின்ற ஒளியையுடைய சிப்பியைச் சிப்பி என்றுணராமல் வெள்ளி என்னும் உலோகமாக உணர்வது போல்வனவாம்; ஐயம் என்பது-ஐயம் என்னும் அளவைப் போலியாவது; ஒன்றை நிச்சயியா-கண்டதொரு பொருளைத் தேற்றமாகக் காணாத; மையல் தறியோ மகனோ என்றல்-மயக்கத்தால் தான் கண்ட பொருள் கட்டையோ மகனோ என்று ஐயுற்றுமொழிதல் போல்வது; தேராது தெளிதல்-தேராது தெளிதல் என்னும் அளவைப் போலியாவது; செண்டு வெளியில் தறியை ஓராது மகன் என உணர்தல்-செண்டு வெளியின்கண் நடப்பட்டுள்ள கட்டையை ஆராய்ந்து பாராமல் மகன் என்று உணர்ந்தொழிதல் போல்வதாம்; கண்டு உணராமை-கண்டுணராமையாவது ஒரு பொருளைக் கண்ணாற் கண்டு வைத்து அப்பொருளின் இயல்பு உணராதொழிதலாம், அது வருமாறு; கடுமா புலி ஒன்று அண்டல் கண்டும் அறியாமை-ஒருவன் தன்னைக் கொன்றொழிக்கும் கொடிய விலங்காகிய புலி ஒன்று அணுகி வருதல் கண்டும் அதனால் வரும் தீமையை உணராமை முதலிய போலிக் காட்சியாம்; இல்வழக்கு என்பது-இல்வழக்கென்னும் அளவைப் போலியாவது; முயல் கோடு ஒப்பன சொல்லின் மாத்திரத்தான் கருத்தில் தோன்றல்-முயற்கொம்பு என்பது போலும் பொருள்கள் வாய்மையில் இல்பொருளாகவும் சொற்கேட்ட துணையால் ஓர் உள் பொருள் போலக் கருத்திற்குப் புலப்படுதலாம்; உணர்ந்ததை உணர்தல்-உணர்ந்ததை உணர்தல் என்னும் அளவைப் போலியாவது ஒருவன் நன்குணர்ந்ததனேயே வாளாது மீண்டும் அளவை கூறி உணர்த்துதல், அஃதாவது; உறுபனிக்கு தீப்புணர்ந்திடல் மருந்து என புலங்கொள நினைத்தல்-பிறன் ஒருவனுக்கு மிக்க பனிதரும் துன்பத்திற்குத் தீக்காய்தல் மருந்தென்று கூற முற்படுதல் போல்வன; நினைப்பு எனப்படுவது-நினைத்தல் என்னும் அளவைப் போலியாவது; பிறர் காரணம் நிகழாது நினக்கு இவர் தாயுந் தந்தையும் என்று சொல கருதல்-ஒருவன் காரணமின்றியே உனக்கு இவர் தாயும் தந்தையுமென்று அறிவித்தல் கேட்டு அக்கூற்றினைத் துணிதலாம்; இப்பெற்றிய அளøவைகள்-யான் கூறிய அளவைகள்இத்தன்மையன என்றான்; என்க.

(விளக்கம்) எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது பற்றி ஒரு பொருளின் உண்மை மட்டும் கண்டொழிதலால் பயனில்லை ஆகலின் சுட்டு அளவைப் போலியாயிற்று. திரியக்கோடல்-இதனை விபரீதக் காட்சி எனவும் கூறுப. ஐயம்: ஒரு பொருளைச் சுட்டுணர்வால் கண்டவன் அதனை அதுவோ இதுவோ என்று ஐயுறுதல். இவையெல்லாம் காட்சிப் போலிகள் என்னை? மெய்க்காட்சி மாசறு காட்சி ஐயம் திரிவு இன்றி விகற்பம் முன்னா ஆசு அற அறிவதாகும், என்பவாகலின் இவையெல்லாம் போலி ஆயின என்க. தேராது தெளிதல் என்பது-ஆராயாது தெளிதலும் பிழைபடுதல் உண்டாதலின் போலியாயிற்று. அளவைகள் நன்மை எய்தும் பொருட்டாகலின் புலியைக் கண்டவன் அதனால் தனக்குவரும் கேட்டை உணராமையால் அதுவும் போலியாயிற்று. அண்டலை என்புழி ஐகாரம் சாரியை. அதனால் எய்தும் தீமையை நன்குணர்த்தும் பொருட்டுப் புலியை எடுத்துக்காட்டினார். பரத்தை முதலியோரைக் கண்டு காமுறுவோர் காட்சியும் அவரால் வரும் தீமை உணராமையின் அக்காட்சியும் அளவைப் போலி என்றற்கு முதலிய கண்டும் அறியாமை என்றார். முயற்கோடு ஒப்பன என்றது ஆகாயப்பூ கழுதைக்கொம்பு காக்கைப் பல் முதலிய இல்பொருள் வழக்குகளையும் அகப்படுத்து நின்றது. இவை சொற்றொடர் மாத்திரையே அன்றிப் பொருள் இல்லாதன ஆகவும் பொருள் போல உள்ளத்தில் தோன்றுதலின் போலியாயிற்று. இக்காட்சி மானதக் காட்சி ஆதலின் கருத்தில் தோன்றல் என்றார். அளவையின்றியும் உலகத்தார் உணர்தற்கு எளிய பொருளை அளவையால் உணர்த்துதலும் போலி என்பார் உணர்ந்ததை உணர்த்தல் என்றார். இஃதுணராது உணர்ந்ததை உணர்தல் எனப்பாடந்திருத்தி உணர்ந்திருந்ததனையே மறித்தும் உணர்தல் என்று உரை கூறி அதனைக் குற்றம் என்று கூறுவார் உரை போலியாம் என்க. என்னை? உணர்ந்ததனை மறித்தும் உணராதார் இவ்வுலகத்தே வாழ்தல் அரிதாகலின் அஃது போலியாதல் எங்ஙனம்? இனி, தான் உணர்ந்ததனை ஆராய்ந்து தெளிய முற்படுவார் யாரே உளர்? இங்ஙனம் இதற்குக் கூறும் விளக்கமும் போலி என்க. நினைப்பு-பிறர் சொன்னதனை நினைத்தல். பிறர் கூற்று பொய்யாதலும் கூடுமாதலின் அதனால் உண்டான நினைப்பும் போலியாயிற்று.

சமயக்கணக்கர்களும் அளவைகளும்

78-86 : பாங்குறும்..............தன்னைவிட்டு

(இதன் பொருள்) பாங்கு உறும்-இவ்வளவைப் பகுதியை மேற்கொள்ளுகின்ற சமயங்கள்; உலோகாயதம் பவுத்தம். சாங்கியம் வைசேடிகம் மீமாஞ்சகமாம்-உலோகாயதமும் பவுத்தமும் சாங்கியமும் வைசேடிகமும் மீமாஞ்சையும் ஆகும்; சமய ஆசிரியர் தாம்-முறையே இச்சமயங்களுக்கு ஆசிரியர் ஆவார்; பிருகற்பதி சினன் கபிலன் அக்கபாதன் கணாதன் சைமினி-பிருகற்பதியும் புத்தனும் கபிலனும் அக்கபாதனும் கணாதனும் சைமினியும் என்னும் இம்முனிவர்களாவார்; மெயப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் உவமானம் அருத்தாபத்தி அபாவம்-இச்சமயங்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற அளவைகள் தாமும் மெய் முதலிய பொறிகளால் உணரப்படும் காட்சியளவையும் கருதலளவையும் நூலளவையும் உவம அளவையும் அருத்தாபத்தி அளவையும் அபாவ அளவையும் ஆகிய; இப்போது இயன்றுள அளவைகள்-இந்த ஆறு அளவைகளே இப்பொழுது நிரலே அச்சமயக்கணக்கர்களால் வழங்கப்பட்டு வருகின்ற அளவைகளாகும்; என்றவன் தன்னைவிட்டு-என்று அறிவித்தவனாகிய அளவை வாதியை விட்டு மாதவன் வடிவில் அப்பால் செல்லும் மணிமேகலை என்க.

(விளக்கம்) பாங்கு-பகுதி. இவ்வளவைகளின் பகுதி என்க. இவற்றை நிரலே உலோகாயத சமயத்திற்கு ஆசிரியன் பிருகற்பதி, அச்சமயத்திற்கு அளவை காட்சி அளவை மட்டுமே எனவும், பவுத்தத்திற்குப் புத்தன் ஆசிரியன் எனவும் காட்சியும் கருதலும் பவுத்த சமயத்திற்கு அளவை எனவும், சாங்கியத்திற்கு ஆசிரியன் கபிலன் எனவும், அளவைகள் காட்சி கருதல் நூல் ஆகிய மூன்றும் எனவும், நையாயிகத்திற்கு ஆசிரியன் அக்க பாதன், அளவைகள் காட்சி கருதல் நூல் உவமை ஆகிய நான்கும் எனவும், வைசேடிகத்திற்கு ஆசிரியன் கணாதன் எனவும், அளவைகள் காட்சி கருதல் நூல் உவமை அருந்தாபத்தி ஆகிய ஐந்தும் எனவும், மீமாஞ்சகத்திற்கு ஆசிரியன் சைமினி எனவும், அளவைகள், சாட்சி முதல் அபாவம் ஈறாகக் கூறப்பட்ட ஆறுமாம் எனவும் கொள்க. இவையே இப்போது வழங்குவன. எனவே ஏனைய நான்கு அளவைகள் கைவிடப்பட்டன என்றவாறும் ஆயிற்று. மீமாஞ்சையின் ஆசிரியரான சைமினி என்பவர் தாம் கண்ட ஆறளவைகளையும் கைக்கொண்டனர் என்பதனை மீமாஞ்சைச் சருக்கம் (மெய்ஞ்ஞான விளக்கம்-39) மூன்றாம் செய்யுளில்,

காணுதல் கருத லொப்புக் கட்டுரை பொரு ளபாவ
மேணுறு பிரமாணங்க ளிவை யாறே

என்பதனானும் உணர்க. என்றவன்-அளவை வாதி.

சைவவாதி

86-95 : இறைவன்.............உரைத்தனன்

(இதன் பொருள்) இறைவன் ஈசன் என நின்ற சைவவாதி நேர்படுதலும் எவ்வுலகத்திற்கும் முழு முதற்கடவுள் பரசிவமே என உட்கொண்டு அந்நெறி நின்றொழுகும் சைவவாதி தன் எதிரே வருதலும் அவனே நோக்கி; பரசும் நின் தெய்வம் எப்படித்து என்ன-ஐயனே! நீ வழிபடுகின்ற கடவுள் எத்தகையது கூறுக என்று வினவ; இயமானன் இருசுடரோடு ஐம்பூதம் என்று எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய் கட்டி நிற்போனும்-உயிரும் ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டு ஒளி மண்டிலங்களோடு நிலம் நீர் தீ வளி வெளி ஆகிய இவ்வெட்டு வகைப்பொருள்களும் தனக்கு உயிரும் உடம்புமாகப் படைத்துக் கொண்டு அவற்றின் உள்ளும் புறமும் தன் ஆணையால் கட்டி அவையே தானாய் நிற்பவனும்; கலை உருவினேனும்-மறைமொழியே தனக்கு உருவமாக உடையவனும்; படைத்து விளையாடும் பண்பினேனும்-உலகங்களைப் படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் இடையறாது செய்து விளையாடுகின்ற அருட்பண்பை உடையவனும்; துடைத்து துயர்தீர் தோற்றத்தோனும்-உயிர்களின் மலத்தைத் துடைத்துத் துன்பத்தைத் தீர்க்கின்ற பெருந்தகைமையை உடையோனும்; தன்னில் வேறு தான் ஒன்று இல்லோனும்-தன்னில் பிறிதாக வேறு ஒரு பொருளும் இல்லாதவனும் ஆகிய; அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன்-அத்தகைய சிவபெருமானே எமக்குக் கடவுளாவான் என்று கூறினன் என்க.

(விளக்கம்) பரசுதல்-வழிபடுதல். எப்படித்து-எத்தன்மைத்து. இருசுடர்-ஞாயிறும் திங்களும். இயமானன்-உயிர். இருசுடரோடு........கட்டிநிற்போனும் எனவரும் இதனோடு,

இரு நிலனாய்த் தீயாகி நீரும் ஆகி
இயமானனாய் எறியுங் காற்றும் ஆகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாய்அட்ட மூர்த்தி ஆகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறர் உருவும் தம் உருவும் தாமே யாகி
நெருநிலையாய் இன்றாகி நாளை ஆகி
நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே

எனவரும் திருநாவுக்கரசருடைய திருத்தாண்டகம் ஒப்புநோக்கற்பாலது. உயிரும் இருசுடரோடு என முன்னர்க் கூட்டுக. உயிர்களே தனக்கு உயிராகவும் ஏனைய பூதங்கள் தனக்குடம்பாகவும் என்பான் இயமானனும் ஐம்பூதமும் இருசுடரும் உயிரும் யாக்கையுமாய்க் கட்டி நிற்போனும் என்றான். இக்கருத்தினை அவையே தானாய் எனவரும் சிவஞான போதத்தானும் உணர்க. கலை என்றது-மறைமொழியை. அஃதாவது திருவைந்தெழுத்து மந்திரத்தை என்க. இதனை,

மந்திர மதனிற் பஞ்ச மந்திரம் வடிவ மாகத்
தந்திரம் சொன்ன வாறிங் கென்னெனிற் சாற்றக் கேள்நீ
முந்திய தோற்றத்தாலும் மந்திர மூலத் தாலும்
அந்தமில் சத்தி யாதிக் கிசைத்தலு மாகு மன்றே

எனவரும் (சிவ-சித்தி-சுப-செய்-79) செய்யுளானும் உணர்க.

இனி, கலை 38-என்றும் இவை சிவபெருமானுடைய உறுப்புகளாக உள்ளவை என்பவாதலின் கலை உருவினேன் என்றானெனினுமாம். என்னை? ஐயாற தன்மிசை எட்டுத்தலையிட்ட மையில்வான் கலை மெய்யுடன் பொருந்தி என வருதலும் காண்க (திருச்சிற்றம்பல-1.பேர்). படைத்து விளையாடும் பண்பினோன் என்பதனோடு, காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி எனவரும் திருவெம்பாவையை ஒப்பு நோக்குக துடைத்தல்-மூலமலத்தை நீக்குதல். துயர்-பிறவித்துன்பம். தோற்றம்-பெருந்தகைமை. தான் ஒன்றிலோன் என்புழி, தான்:அசை.

பிரமவாதி

96-97 : பிரமவாதி............என்றனன்

(இதன் பொருள்) பிரமவாதி பேர் உலகு எல்லாம்-பெரிய அண்டங்களாகிய உலகங்கள் எல்லாம்; ஓர் தேவன் இட்ட முட்டை என்றனன்-ஒப்பற்ற பிரமதேவனால் இடப்பெற்ற முட்டைகள் என்று கூறினன் என்க.

(விளக்கம்) மணிமேகலை சைவவாதியைவிட்டு அப்பால் எதிர்ப்பட்ட பிரமவாதியை வினவ அவன் இங்ஙனம் கூறினன் என்பது கருத்து. பின்வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.

வைணவவாதி

98-99 : காதல்...............உரைத்தனன்

(இதன் பொருள்) கடல்வணன் புராணம் காதல் கொண்டு ஓதினன்-கடல் போலும் நீலநிறமுடைய விட்டுணுவின் புராணத்தை அன்புற்று ஓதியுணர்ந்த வைணவவாதி இவ்வுலகமெல்லாம்; நாரணன் காப்பு என்று உரைத்தனன் திருமாலால் காக்கப்படுதலின் அவனே முழுமுதற் கடவுள் என்று கூறினான் என்க.

(விளக்கம்) காதல்-இறையன்பு. அவனே முழுமுதற் கடவுள் என்பது குறிப்புப் பொருள். ஓதினன்-பெயர்.

வேதவாதி

100-105 : கற்பம்................கேட்டு

(இதன் பொருள்) கற்பம் கை சந்தம் கால் எண்கண் தெற்று என் நிருத்தம் செவி சிக்கை மூக்கு உற்ற வியாகரணம் முகம் பெற்று-கற்பம் கையாகவும் சந்தோவிசிதி காலாகவும் சோதிடம் கண்ணாகவும் தெளிவாக உள்ள நிருத்தம் காதாகவும் சிக்கை முக்காகவும் அதனையுடைய வியாகரணம் முகமாகவும் இவ்வாறு உறுப்புகளையும் பெற்று; சார்பின்-தோன்றா ஆரணவேதக்கு ஆதி அந்தம் இல்லை-தான் ஒன்றினின்றும் பிறவாத சிறப்பினையுடைய ஆரணமாகிய வேதத்திற்குத் தோற்றமும் இறுதியும் இல்லை ஆதலின்; அது நெறி எனும் வேதியன் உரையின் விதியும் கேட்டு-அது கூறும் நெறியே வீடெய்துவிக்கும் நன்னெறி என்று கூறுகின்ற வேதவாதியின் விதியையும் கேட்டறிந்த பின்னர் என்க.

(விளக்கம்) கற்பம் முதலிய ஆறும் வேதாங்கம் என்பவாதலின் இங்ஙனம் உருவகிக்கப்பட்டன. சந்தம்-சந்தோவிசிதி. எண் என்றது சோதிடத்தை. இனி, இது பற்றி ஆசிரியர் நச்சினார்க்கினியர் இம்முறைமையினைச் சிறிது வேறுபடுத்தி ஆறங்கமாவன உலகியற் சொல்லையொழித்து வைக்கச் சொல்லையாராயும் நிருத்தமும், அவ்விரண்டையு முடனாராய்ந்த ஐந்திரத் தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம், பாரத்துவாசம், ஆபத்தம்பம், ஆத்திரேயம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வராகம் முதலிய கணிதங்களும் எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும் செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம் (தொல்-புறத்-20-உரை) என்பர். சார்பில் தோன்றாமையாவது அனாதிநித்தியம் என்றவாறு. இதனை நீலகேசியின்கண்,

நாத்திக மல்லது சொல்லலை
யாயின்மு னான்பயந்த
சாத்திர மாவது வேதகின்
றேவாது தான்சயம்பு
சூத்திரி நீயது வல்லைய
லாமையிற் சொல்லுகிலாய்
போத்தந்தி யோவதன் றீமையென்
றான்பொங்கிப் பூதிகனே    (வேத 826)

எனவரும் பூதிகன் கூற்றாலும்,

முன்னுள மறைகள் எனவரும் சங்கற்ப மாயாவதி மதத்தானும் வேதம் அநாதி நித்தியம் எனவரும் பரிமேலழகர் (குறள்-543) உரையானும் உணர்க. வேதக்கு: சாரியையின்றி உருபு புணர்ந்தது. வேதியன், வேதவாதி.

மணிமேகலை உட்கோளும் செயலும்

106-109 : மெய்த்திறம்.............யாதென

(இதன் பொருள்) மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற எத்திறத்தினும் இவர் உரை இசையாது என-அது கேட்ட மணிமேகலை நூல் வழக்கும் உலக வழக்கும் எனக்கூறப்படுகின்றவற்றுள் எந்த வழக்கத்திற்கு அளவைவாதி முதலிய இச்சமயக்கணக்கர் மொழிகள் பொருந்தா என்றுணர்ந்தவளாய் அப்பால்; ஆசிவக நூல் அறிந்த புராணனை-ஆசீவக சமய நூலை நன்கு கற்றுணர்ந்த புராணன் என்னும் தலைவனை அணுகி, பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என-ஐய நின்னாற் கூறப்படும் உன்னுடைய இறைவன் யார் நின் நூல் கூறும் நன்பொருள் யாது என்று வினவா நிற்ப என்க.

(விளக்கம்) மெய்த்திறம்-நூல் வழக்கு. வழக்கென்றது உலக வழ்கினை. மெய்த்திறம் வழக்கு நன்பொரள் வீடெனும் இத்திரம் தத்தம் இயல்பினின் காட்டும் சமயக்கணக்கரும் என விழாவறை காதையினும் (11-13) வருதல் உணர்க. ஆசீவக நூல் நன்குணர்ந்த சமயக்கணக்கர் தலைவனைப் புராணன் என்று வழங்குவது வழக்கம் என்பது நீலகேசியில் துறவோர் தலைவனைப் பூரணன் என்பதனாலும் ஈண்டும் பூரணன் என்பதே புராணன் எனக் கோடற்கும் இடன் இருந்தலானும் உணரலாம்.

காரணம் வேண்டாக் கடவுட் குழாந்தன்னிற்
பேருணர் வெய்திப் பெரிதும் பெரியவன்
பூரண னென்பான் பொருவறக் கற்றவ
னாரணங் கன்னாட்கறிய வுரைக்கும் (நீலகேசி, ஆசீவக-668)

எனவே பூரணன் என்பதே விகாரத்தாலாதல் பிழைபட்டதால் ஈண்டுப் புராணன் என்றாயிற்று என்று கோடல் மிகையன்று என்க.

ஆசிவகவாதி

110-119 : எல்லையில்............படுமே

(இதன் பொருள்) எல்லைஇல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் புல்லிக் கிடந்து புலப்படுகின்ற வரம்பில் அறிவன் இறை-அது கேட்ட ஆசீவக சமயத் தலைவனாகிய புராணன் அவ்வினாக்களுக்கு விடை இறுப்பவன்:-எல்லையில்லாமல் கிடக்கின்ற பொருள்களில் எல்லாம் அங்கிங்கெனாதபடி எங்கும் எக்காலத்தும் பொருந்திக் கிடந்து பொறிகளுக்குப் புலப்படுகின்ற அனந்தஞானம் உடையவனாகிய மற்கலிதேவன் என்பவனே எம்மால் வழிபடுகின்ற கடவுளாவான்; நூல் பொருள்கள் ஐந்து-எமது நூலாகிய நவகதிர் என்பதன்கண் கூறப்பட்ட பொருள்கள் ஐந்தேயாம், அவைதாம்; உரம் தரும் உயிரோடு ஒரு நால்வகை அணு-அறிவைத் தருகின்ற உயிரணுவோடு நான்கு வகை அணுக்களுமாம்; அவ்வணு உற்றும் கண்டும் உணர்ந்திட-அவ்வுயிரணுவானது தீண்டியும் பார்த்தும் உணர்த்திடும்படி; பெய் வகை கூடி பிரிவதும் செய்யும் நிலம், நீர், தீ, காற்று என நால்வகையின-ஊழ் கூட்டியவாறு தம்முள் கூடிப்பின் பிரிதலையும் செய்யும் நிலஅணுவும் நீரணுவும் தீயணுவும் காற்று அணுவும் என்று கூறப்படும் நாலுவகை அணுக்களும்; மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும் வெவ்வேறாகி விரிவதும் செய்யும்-அவ்வணுக்கள் மலை எனவும் மரம் எனவும் உடம்புகள் எனவும் கூறுங்கால் கூடி ஒன்றாகத் திரள்வதனையும் செய்யும், பிரியுங்கால் வேறு வேறாகி விரிவதனையும் செய்யும்; அவ்வகை அறிவது உயிரெனப்படும்-இங்ஙனம் ஆவதனை அறிவதுதான் உயிர் என்று சொல்லப்படும் என்றான் என்க.

(விளக்கம்) பொருள்கள்-காட்சிப்பொருள்கள். வரம்பில் அறிவு-அனந்தஞானம். இறைவன் என்றது மற்கலி தேவனை. நூல் என்றது அச்சமய நூலாகிய நவகதிர் என்பதனை. அந்நூல் ஒன்பது அதிகாரங்களை உடைத்தாகலின் அப்பெயர் பெற்றது. பொருள்கள் என்றது தத்துவங்களை. இவர் உயிரையும் அணுவென்றே கொள்வர். ஏனை அணுக்களோடு கூடுங்கால் ஏனைய அணுக்களுக்கும் அறிவூட்டும் அணு உயிரணுவே என்பான் உரந்தரும் உயிரோடு என அதனைப் பிரித்தோதினான். அவ்வணு என்றது உயிரணுவை. உயிரணு கூடுவதும் பிரிவதும் ஊழின் செயல் என்பான் பெய்வகைக் கூடிப்பிரிவதும் செய்யும் என்றான். உயிரணு மலை முதலியனவாக ஏனைய அணுக்களோடு கூடித் திரள்வதும் விரிவதும் செய்யும் என்றான். அறிவது உயிர் எனப்படுமே என்றதனால் ஏனை அணுக்கள் அறிவில்லா அணுக்கள் என்றானும் ஆயிற்று. இதுகாறும் உயிரோடு கூடிய ஏனைய அணுக்களையும் அவற்றுள் உயிரணுவின் இயல்பினையும் உணர்த்தியபடியாம். மேலே ஏனை நால்வகை அணுக்களின் இயல்பு கூறுகின்றான்.

நில அணுக்கள் முதலியவற்றின் இயல்பு

120-124 : வற்பம்.........கடன்

(இதன் பொருள்) நிலம் வற்பமாகி உறும்-நிலஅணு வன்மை உடையதாய்ச் செறியும்; நீர் தாழ்ந்து சொல்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது-நீரணு வீழ்ச்சியுற்றுச் சொல்லப்படுகின்ற தன்மையோடு சுவையும் உடையதாய் இழின் என்னும் ஒலியோடு நிலத்தைச் சேர்ந்து அதன்கண் அழுந்திப் போவதாம்; தீ தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து-இனித் தீ அணு சுடுதலும் மேனோக்கிச் செல்லுதலும் ஆகிய இயல்புகளை உடையதாம்; காற்று விலங்கி அசைத்தல் கடன்-காற்றிற்குக் குறுக்காக இயங்கிப் பிற பொருள்களை அசைப்பது இயல்பாம் என்றான் என்க.

(விளக்கம்) இவ்வணுக்களின் இயல்பை,
நிலநீ ரெரிகாற் றுயிரி னியல்பும்
பலநீ ரவற்றின் படுபா லவைதாம்
புலமா கொலியொன் றெழிய முதற்காஞ்
சலமா யதுதண் மையையே முதலாம்  (நீல.ஆசீவ-675)

எனவும்,

எறித்தன் முதலா யினதீ யினவாம்
செறித்த லிரையோ டிவைகாற் றினவா
மறித்தல் லறிதல் லவைதா முயிராம்
குறித்த பொருளின் குணமா லிவையே   (நீல.ஆசிவ-676)

எனவும் வரும் செய்யுளானும் இவற்றிற்கு யாம் எழுதிய உரைகளானும் விளக்கங்காண்க. வற்பம்-வன்மை. உறும்-செறியும். இழின்என என்பது ஒலிக்குறிப்பு. மேற்சேரியல்பு-மேலெழும் இயல்பு. அசைத்தல் என்றமையால் பிறபொருளை அசைத்தல் என்க. கடன்-ஈண்டு இயல்பு என்னும் பொருட்டு.

இதுவுமது

124-134 : இவை...........ஆகும்

(இதன் பொருள்) ஆதிஇல்லா பரம அணுக்கள் இவை-அனாதியாக உள்ள மிகவும் நுணுகிய இவ்வணுக்கள் கூடிப்பிரியும் செயல்களால் மரம் மலை உடம்பு முதலியனவாய்; வேறு இயல்பு எய்தும் விபரீதத்தால்-வேறு வேறாகும் தன்மையால் உண்டாகும் மாற்றங்காரணமாக; யாவதும் தீது உற்று சிதைவது செய்யா புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா-தம்மியல்பில் சிறிதும் கெடுதலும் சிதைதலும் இல்லை அன்றியும், இக்கூட்டரவினால் புதிதாகத் தோன்றுதலும் ஓரணு மற்றோர் அணுவினுள் புகுவதும் இல்லை; முதுநீர் அணுநில அணுவாய் திரியா ஒன்று இரண்டாகி பிளப்பதும் செய்யா அன்றியும் அவல் போல் பரப்பதும் செய்யா-அனாதியாகிய இவ்வணுக்களுள் நீரணு நிலவணுவாகத் திரியவும் மாட்டா ஓரணு இரண்டாகப் பிளந்து போதலும் இல்லை, அல்லாமலும் இவை தமக்கியல்பான வட்ட வடிவத்தினின்று (நெருக்குண்ணுதல் காரணமாக) அவல் போன்ற தகட்டு வடிவமாய் விரியவும் மாட்டா; பலவும் உலாவும் தாமும் உயர்வதும் செய்யும் குலாம் மலை பிறவா கூடும்-இவ்வணுக்கள் பலவும் இயங்குதலும் தாழ்தலும் உயர்தலும் ஆகிய இச்செயல்களைச் செய்யும், மேலும் தம்முள் கூடும் மலையும் பிறவுமாகிய பொருள்களாகவும் கூடும்; பின்னையும் பிரிந்து தம் தன்மையவாகும்-மறுபடியும் பிரிந்துழித் தமக்கியல்பான நுண்ணணுக்களாகி விடும் என்றான் என்க.

(விளக்கம்) காற்றணுக்கள் உலாவும் நீரணு தாமும் ஆழும் தீயணு உயரும் நிலஅணு குலாம் என்று கொள்க. மலை முதலிய உலகப்பொருள்களாகக் கூடும் என்பது கருத்து. தந்தன்மை-தமக்கியல்பான நுண்ணணுவாம் தம்மை என்க. இனி இதனை,

அணுமே யினவைந் தவைதா மனைத்துங்
குணமே யிலவாங் குழுவும் பிரியு
முணன்மே யினுமுள் புகுதல் லுரையேங்
கணமே யெனினும் மொருகா லமிலை        (நீல.ஆசீவ-677)

எனவரும் செய்யுளானும் உணர்க.

இதுவுமது

134-145: மன்னிய..............மாட்டா

(இதன் பொருள்) மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம்-இவ்வணுக்கள் நிலைபெற்ற காழ்ப்பாய்த் தம்முள் செறிந்து பெரிதும் வன்மை உடைய மரமுமாம்; வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும்-மூங்கில் போன்ற உட்டுளையுடைய புற்களாகவும் முளைக்கும்; தேயாமதிபோல் செழுநில வரைப்பாம்-நிறைத் திங்கள் போன்று வளமான நில உலகமாகவும் திரளும்; நிறைந்த இவ்வணுக்கள் பூதமாய் நிகழின் குறைந்தும் ஒத்தும் கூடாவரிசையின்-இவ்வாறு செறிந்த இவ்வணுக்கூட்டம் தமக்கு வேண்டிய அளவில் குறைந்தாதல் ஒத்தாதல் கூடமாட்டா, அவை கூடுங்கால் தமக்குரிய முறைமையாலே; ஒன்று முக்கால் அரை காலாய் உறும்-ஒன்றும் முக்காலும் அரையும் காலும் ஆகக்கூடும்; துன்றும் மிக்கதனால் பெயர் சொல்லப்படும்-இங்ஙனம் கூடுமிடத்தே அக்கூட்டத்துள் மிகுந்துள்ள அணுக்களாலே பெயர் கூறப்படும்; இக்குணத்து அடைந்தால் அல்லது-ஈண்டுக் கூறப்பட்ட பண்பினால் தம்முள் கூடினாலலலது இவை நிலனாய் சிக்கென்பதுவும் நீராய் இழிவதும் தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும் ஆயதொழிலை அடைந்திட மாட்டா-நிலமாகிச் செறிவதும் நீராகி ஒழுகுவதும் நெருப்பாகிச் சுடுவதும் காற்றாகி வீசுவதும் ஆகிய இத்தொழில் செய்யும் ஆற்றலை அடைந்திட மாட்டா என்றான் என்க.

(விளக்கம்) வைரம் என்றது மரத்தின் காழ்ப்பினை. துளை-உள் துளை. வேய் முதலிய பொருளாய் முளைக்கும் என்க. நிலமாகுங்கால் வட்ட வடிவிற்றாய்த் திரளும் என்பான் தேயாமதிபோல் என்று உவமை எடுத்தோதினான். இதனால் நிலம் வட்டவடிவிற்று என்னும் அறிவு பண்டைக்காலத்தும் இருந்தமை புலனாம். இனி, பூதமாய் நிகழ்வதாவது-நிலனாய் நீராய்த் தீயாய்க் காற்றாய் ஒலியாய் நிகழ்வது. இவ்வணுக்கள் பூதங்களாய் ஆகும்போது அவ்வவ்வணுத்திரள் அவ்வப்பூதமாதற்கு வேண்டிய அளவில் கூடும், குறைந்து கூடமாட்டா; பிற அணுக்களின் கூட்டத்தோடு ஒப்பவும் கூடா என்பான் குறைந்தும் ஒத்தும் கூடும் கூடா வரிசையில் கூடும் என்றான். வரிசை-முறைமை. கூடுங்கால், உயிரை ஒழிந்த ஏனைய அணுக்கள் கூடும் இடத்து நிலம் முதலிய நான்கு அணுக்களும் கூடும் ஓரணுவை விட்டு மூன்றணு தம்மில் கூடி நில்லாது, இரண்டணுக்களோடு இரண்டணுவாகக் கூடும். இரண்டும் மூன்றுமாகக் கூடா என்பது கருத்து. இனி ஒன்று முக்கால் அரை காலாய் உறும் என்னும் இதனையே பிறிதோர் ஆற்றால் கூறுவதும் உண்டு. அம்முறைமையாவது நிலத்தில் நாற்றம் உருவம் பரிசம் என்னும் நான்கும் நீரில் சுவை உருவம் ஊறு என்னும் மூன்றும் தீயில் உருவம் ஊறு என்னும் இரண்டும் காற்றில் ஊறு மட்டும் பொருந்தும் என வேறுவாய்பாட்டானும் கூறுப. அஃதாவது நான்கும் மூன்றும் இரண்டும் ஒன்றும் என்றது ஈண்டு ஒன்று முக்கால் அரை காலாய் உறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை

ஒன்றினை ஒருவி மூன்றங் குற்றிடா திரண்டு விட்டு
நின்றிடா திரண்டு கூடும் நெறி நிலம் நான்கு நீர் மூன்று
இன்றிரண் டழல்கா லொன்றாய் இசைந்திடும் பூமி யிவ்வா
றென்றுநீர் தீகா லாகி ஈண்டுவ தென்றி யம்பும் (சிவ,சித்தி.பரபக்கம்.ஆசிவகன் மதம். 7)

எனவரும் செய்யுளான் உணர்க. மிக்கதனால் பெயர் சொல்லுவதாவது நில அணுமிக்கிருந்தால் நிலம் என்றும் நீரணுயிக்கிருந்தால் நீர் என்றும் இவ்வாறு மிக்கதனால் பெயர் பெறும் என்றவாறு. மேலே சொன்ன முறைப்படி இவ்வணுக்கள் கூடாவிடின் நிலம் முதலியன வன்மையுற்றுத் தாங்குதல் ஒழுகுதல் முதலிய தத்தம் தொழிலைச் செய்யும் திறம் பெறா என்று கொள்க.

இதுவுமது

146-157 : ஓரணு..............இயல்பு

(இதன் பொருள்) ஓர் அணு தெய்வக் கண்ணோர் உணர்குவர்-இவ்வணுக்களில் தனித்ததோர் அணுவைக் கேவலஞானம் என்னும் தெய்வக்கண் உடையோர் மட்டுமே காண்பர்; ஏனோச் அத்தெய்வக்கண் பெறாத மாந்தர் அவ்வணுக்கள்; பூதத்திரட்சியுள் தேரார்-பூதமாகத் திரண்ட வழியும் ஓரணுவைக் கண்டுணரார், இஃது எங்ஙனமெனின்; மாலைப்போதில் ஒரு மயிர் அறியார்-ஒளி மழுங்கிய மாலைப்பொழுதின்கண் தனித்து ஒரு மயிரை அறியமாட்டாதார்க்கு; சாலத்திரள் மயிர் தோற்றுதல் சாலும்-மிகத் திரண்ட மயிர்க்கற்றை காணப்படுதல் போலாம்; கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும் பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் போன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் என்று இ துறு பிறப்பினும் மேவி-கரியபிறப்பும் கருநீலப் பிறப்பும் பசிய பிறப்பும் செம் பிறப்பும் பொன் பிறப்பும் வெண் பிறப்பும் என்று கூறப்படும் இந்த ஆறுவகைப் பிறப்புகளினும் பொருந்தி; பண்பு உறு வரிசையின்பால் பட்டுப் பிறந்தோர்-தன்மையால் ஒன்றற்கொன்று மிகுகின்ற ஈண்டுக் கூறிய முறைமையின்படி பிறவியுட்பட்டுப் பிறந்தவர்கள், இறுதியாக; கழிவெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர்-வெண் பிறப்பினுள்ளும் மிக்க வெண் பிறப்பில் பிறந்து இறுதியாக வீட்டுலகத்தில் புகுவர்; அழியல் வேண்டார் அது உறற்பாலார்-துன்பம் உற்று நெஞ்சழிதலை விரும்பாத மக்களே அவ்வீட்டுலகத்தை எய்துதற்குரியராவார். இது செம்போக்கின் இயல்பு-இங்ஙனம் கூறும் இது பிறப்புற்றுப் படிப்படியாக உயர்ந்து போகும் நெரிய போக்கின் தன்மையாம் என்றான் என்க.

(விளக்கம்) இதனோடு,

வெண்மைநன் பொன்மை செம்மை நீல்கழி வெண்மை பச்சை
உண்மையிவ் வாறின் உள்ளும் கழிவெண்மை ஓங்கு வீட்டின்
வண்மைய தாகச் சேரும் மற்றவை உருவம் பற்றி
உண்மையவ் வொட்டுத் தீட்டுக் கலப்பினில் உணரும் என்றான்  (சிவ.சித்தி.பரபக்கம், ஆசீவகன்மதம், அ)

எனவரும் செய்யுளையும்,

மணிபுயிர் பொன்னுயிர் மாண்ட வெள்ளியின்
அணியுயிர் செம்புயி ரிரும்பு போலவாம்
பிணியுயி ரிறுதியாப் பேசி னேனினித்
துணிமின் மெனத்தொழு திறைஞ்சி வாழ்த்தினார்  (சீவக-3111)

எனவரும் செய்யுளையும் நினைக. கரும்ம் பிறப்பு முதலிய ஆறு பிறப்புகளும் ஒன்றற்கொன்று உயர்ந்த பிறப்பாம். இங்ஙனமே ஆருகத சமயத்திலும் ஒன்றறிவுயிர் முதலாக உயிர்கள் பிறந்து உயர்வன என்னும் கொள்கையும் உண்டு. கழிவெண் பிறப்பு என்றது மக்கட் பிறப்பினும் மெய்யுணர்வு உடைய மேலாய பிறப்பினை என்க.

இதுவுமது

157-166 : இதுதப்பும்.........விட்டு

(இதன் பொருள்) இதுதப்பும் அது மண்டலம் என்று அறியல் வேண்டும்-இவ்வாறு உயிர்கள் பிறப்புற்றுச் செம்போக்காக உயரும். இம்முறை தவறினால் பின்னரும் கீழ்க் கீழ்ப் பிறப்புகளில் புகுந்து சுழல்வதாம், அங்ஙனம் சுழல்வதனை மண்டலித்தல் என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும்; பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் உறுமிடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் பெரிது அவை நீக்கலும்-உயிர்கள் இவ்வாறு பிறந்துழலுங்கால் அவை செல்வம் முதலியவற்றைப் பெறுதலும் அவற்றை இழத்தலால் வறுமை உறுதலும் இவை வந்துறும் காலத்தே தப்பாமல் வந்துறுதலும் இவற்றால் இன்பதுன்பங்களை நுகர்தலும் மிகவும் அவ்வின்ப துன்பங்கள் நீங்கிப் போகலும்; பிறத்தலும் சாதலும் கருவிற்பட்ட பொழுதே கலக்கும்-பிறத்தலும் இறத்தலும் ஆகிய இவையெல்லாம் நிகழ்தற்குக் காரணமான பழவினைகளும் அவ்வுயிர்கள் தாம் வயிற்றில் கருவாகும் பொழுதே அவ்வுயிரோடு கலந்துவிடும்; இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத்தகும்-பிறந்தபின் நுகரும் இன்பங்களும் துன்பங்களும் ஆகிய இவை தாமும் அணுக்கள் என்றே கொள்ளத்தகும்; முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது-உயிர்கள் முற்பிறப்பிலே செய்தமையால் உளதாகிய பழவினையே பின்னர்ப் பிறக்கும் பிறப்பின்கண் ஊட்டுவதாம்; மற்கலி நூலின் வகை என்ன-எங்கள் இறைவனாகிய மற்கலி தேவனுடைய நூலாகிய நவகதிரில் கூறப்பட்ட பொருளின் வகை இதுவேயாம் என்று அறிவுறுத்த; தடுமாற்ற சொல் தொடர்ச்சியைவிட்டு-முன்னுக்குப்பின் முரணுகின்ற அந்த ஆசீவக வாதியோடு சொல்லாடுகின்ற தொடர்பினைக் கைவிட்டு அப்பால் என்க.

(விளக்கம்) பெறுதல்-உணவு உடை உறையுள் முதலிய பேறுகள். இடையூறு-நல்குரவு பிணி முதலியன. உறும் இடம்-அவை வந்தெய்தும் செவ்வி. அவை என்றது பேறுமுதலாகச் சுகம் ஈறாக உள்ளவற்றை. உயிர் கருவில்பட்டபொழுது கலக்கும் என்க. இன்பதுன்பம் பொறி புலன் முதலியவற்றால் ஆதலின் அவையும் அணுவாகும் என்றவாறு. தடுமாற்றச்சொல் தொடர்ச்சி என மாறுக. இதனை,

பேறிழ விடையூ றின்பம் பிரிவிலா திருக்கை மற்றும்
வேறொரு நாட்டிற் சேறல் விளைந்திடு மூப்புச் சாதல்
கூறிய எட்டும் முன்னே கருவினுட் கொண்டதாகும்
தேறிய ஊழிற் பட்டுச் செல்வதிவ் வுலகம் என்றான்

எனவும்,

புண்ணிய பாவம் என்னும் இரண்டணுப் பொருந்த வைத்தே
எண்ணிய இவற்றி னோடும் ஏழென எங்களோடு
நண்ணிய ஒருவன் கூறும் ஞானமிவ் வாற தென்று
கண்ணிய கருத்தி னோர்கள் கதியினைக் காண்பா யென்றான்

எனவும் வரும் செய்யுமோடு ஒப்பு நோக்குக. (சிவ-சித்தி-பர-ஆசீவ-1-10).

நிகண்டவாதி

167-176 : நிகண்ட....................திறத்த

(இதன் பொருள்) நிகண்டவாதியை நின்னால் புகழும் தலைவன் யாக நூல் பொருள் யாவை நீ உரை-அப்பால் மாதவன் வடிவில் நின்ற அம்மணிமேகலை நிகண்டவாதியை எய்தி ஐய! நின்னால் வணங்கி வாழ்த்தப்படுகின்ற கடவுள் யார்? உனது நூலும் அவை கூறும் பொருள்களும் யாவை? அவற்றை எனக்குக் கூறுதி, மேலும்; அப்பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் மெய்ப்பட விளம்பு என-அப்பொருள் நிகழ்ச்சிகளையும் கட்டு வீடு என்னும் இவற்றின் இயல்புகளையும் வாய்மையாக விளக்கிக் கூறுவாயாக என்று வேண்டா நிற்ப; விளம்பல் உறுவோன்-அது கேட்ட அந்நிகண்டவாதி அவ்வேண்டுகோட்கிணங்கி அவற்றை விளக்கிக் கூறத் தொடங்குபவன்; இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன்-தேவேந்திரனாலும் தொழப்பெறுகின்ற சிறப்பையுடைய அருகனே எங்கள் கடவுளாவான்; தந்த நூல்-அவன் அருளிய நூல் அங்காகமம் முதலிய மூன்றுமாம், அவற்றில் கூறப்பட்ட; பொருள்-பொருள்களாவன; தன்ம அத்திகாயம் கால ஆகாயமும் தீது இல் சீவனும் பரம அணுக்களும்-தன்மாத்தி காயமும் அதன்மாத்தி காயமும் காலமும் ஆகாயமும் அழிவற்ற உயிரும் நுண்ணணுக்களும்; நல்வினையும் தீவினையும்-நல்வினைகளும் தீவினைகளும்; அவ்வினையால் செய்உறு பந்தமும் வீடும் இத்திறத்த-அந்த இருவகை வினைகளாலும் செய்து கொள்ளுகின்ற கட்டும் வினையை ஒழித்தலால் உண்டாகின்ற வீடும் என்னும் இப்பத்து வகையினவாம் என்றான் என்க.

(விளக்கம்) நிகண்டவாதி-சமண சமயத்துள் இரண்டுவகை உண்டு. முற்கூறப்பட்ட ஆசீவகர் ஒருவகை. நிகண்டவாதிகள் ஒருவகை. திகம்பரத்துவத்தால் இருவரும் ஒத்து, அனேகாந்தவாதத்தில் மாறுபடுதலால் இவர் இருவகையினர் ஆயினர் என்க. இந்திரர் பவணேந்திரர் முதலியோர். இவர் பவணேந்திரர் நாற்பத்திருவரும் வியந்தரேந்திரர் முப்பத்திருவரும் கற்பேந்திரர் இருபத்திருவரும் திங்கள் ஞாயிறும் நரேந்திரனும் மிருகேந்திரனும் ஆகிய நூற்றுவரும் ஆவர். நூல் அங்காகமம் பூர்வாகமம் பகுசுருதி ஆகமம் என்னும் மூன்றுமாம். காலால காயம்-காலமும் ஆகாயமும் என்க. உயிர் நித்தியம் என்பான் தீதில் சீவனும் என்றான். தீதில் பரம அணுக்களும் என இரண்டற்கும் இயைப்பினும் ஆம். பந்தம்-கட்டு. நல்வினையும் தீவினையும் ஆகிய இருவினையும் பந்தத்திற்குக் காரணமாகலின் நல்வினையும் தீவினையும் ஆகிய அவ்வினைகளால் செய்யுறு பந்தமும் என்றான். பந்தம் அறுதலே வீடாகலின் வீடு என்று வாளா கூறினான். இவற்றை,

ஆண்டவ னோது நூல்களிற் பதார்த்த மையிரண் டுளவவை யனாதி
காண்டகு காலஞ் சீவன்றன் மாத்தி காயமோ டதன்மாத்தி காயம்
வேண்டுவ தான புண்ணியம் பாவம் விசும்புபுற் கலம்பந்தம் வீடென்
றீண்டுத லுறுமா லின்னவை படைப்ப தின்றியே யியலுமற் றன்றே

எனவரும் (மெய்ஞ்ஞான விளக்கம் 7) செய்யுளானும் உணர்க.

இதுவுமது

177-182 : ஆன்ற...............உரித்தாம்

(இதன் பொருள்) ஆன்ற பொருள் தன் தன்மையதாயும் தோன்று சார்வு ஒன்றின் தன்மையதாயும்-இங்ஙனம் அமைந்த பொருள் தனக்கியல்பாகிய பண்புடையதாயும், தனக்குச் சார்பாகத் தோன்றிய பொருள் ஒன்றனது பண்பை உடையதாயும்; அநித்தமும் நித்தமும் ஆகி நின்று நுனித்த குணத்து-நிலையாமையும் நிலையுதலும் உடையதாகி நின்று இத்தகையதாக ஆராய்ந்தறியப்பட்ட பண்பு காரணமாக; ஓர் கணத்தின் கண்ணே தோற்றமும் நிலையும் கேடு என்னும்-ஒரு கணப்பொழுதிலே காணப்படுதலும் நிலைபெறுதலும் அழிதலும் என்று கூறப்படுகின்ற; மாற்று அரும் மூன்றும் ஆக்கலும் உரித்தாம்-தவிர்க்கவியலாத இந்த மூன்று பண்புகளையும் உண்டாக்குதற்கும் உரிமை உடையதாம் என்க.

(விளக்கம்) இதனை, பொருளோடு நிலையுதலுடைய குணமும்; நிலையாமையுடைய குணமும் பொருளும், காட்டல் வேண்டுமெனின்; கடல் என்னும் பொருளில் நீரின் குணமாகிய குளிர் முதலியன அதன் நிலைக்குணங்களாம். கடலின் முழக்க முதலியன நிலையாக் குணங்கள், இவ்விரு வேறு குணங்களையுடைய கடல் பொருளாம். அன்றியும், பொன் என்னும் பொருளில் நிறமும் திண்மையும் கவர்ச்சியும் முதலாயின நிலைக்குணமாம். வள்ளம் முடி வளை முதலியன நிலையாக் குணங்களாம்; இங்ஙனம் இருவேறு குணங்களையும் உடைய பொன், பொருளாம். இவற்றுள் நிலைக்குணங்களின் நிலையுதற்றன்மையையும் நிலையாக் குணங்களின் நிலையாமையையும் உணர்க. இங்ஙனமாதலின் பொருள் நிலைத்தலும் நிலையாமையும் உடைத்தாம் என்றவாறு. (நீலகேசி: 114)

இனி ஓர் கணத்தில் ஒரு பொருள் தோற்றமும் நிலையும் கேடும் ஆகிய மூன்றனையும் எய்தும் என்பதனை-

உருவப் பிழம்பப் பொருளென்
றுரைப்பனிப் பாறயிர்மோர்
பருவத்தி னாம்பரி யாயப்
பெயரென்பன் பாலழிந்து
தருவித் துரைத்த தயிருரு
வாய்மும்மைத் தன்மையதாந்
திருவத்த தென்பொரு ளாதலைத்
தேர தெளியிதென்றாள்  (நீல-327)

எனவரும் செய்யுளானும் அதற்கு உருவப் பிழம்பாகிய புற்கலத்தைப் பொருள் என்பேன், பால் தயிர் முதலாயின அதனது பரியாயம் என்பேன், பாற்பரியாயத்து நின்ற புற்கலப் பொருள் தயிர்ப் பரியாயமடைந்து பரிணமித்தலின் தோற்றம் நிலையுறுதி என்னும் மூன்றையும் உடையதாய் நின்னாற் குற்றங்கூறப்படாத பெருமைத்தாம் என் பொருள் இதனைத் தெளி, என்றாள் என்க. எனவரும் எமதுரையானும் உணர்க.

இதுவுமது

183-194 : நிம்பம்..................புரிவிற்றாகும்

(இதன் பொருள்) நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்-வேம்பின் வித்து வேம்பாகவே முறைத்து வளர்வது அதன் நிலையுதல் பண்பாம்; நிம்பத்து அப்பொருள் அன்மை அநித்தியம்-முளையின்கண் விதை காணா தழிதல் நிலையாமையாம்; பயற்றுத்தன்மை கெடாது கும்மாயம் இயற்றி அப்பயறு அழிதலும் காண்க-இனி, பயறு தன்மை கெடாமலே கும்மாயத்தை உண்டாக்கித் தனது உருவம் கெட்டொழிதலும் காண்க; ஏதுத்தருமாத்திகாயம்-இந்நிகழ்ச்சிக்குக் காரணமான தருமாத்திகாயம் என்பது; தான் எங்கும் உளதாய் பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியம் ஆம்-அவ்வாறு நடத்துதற்கு ஏற்ப அதுவும் நித்தியப்பொருளாம்; அதன்மாத்திகாயமும் அப்படித்தாகி-அதன்மாத்திகாயம் என்னும் பொருளும் அப்படியே நித்தியப் பொருளாய்; எப்பொருள்களையும் நிறுத்தல் இயற்றும்-எல்லாப் பொருள்களையும் நிலைநிறுத்துதலைச் செய்யும்; காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் மேலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் ஆக்கும்-இனி, காலம் என்பது கணம் என்னும் குறிய நிகழ்ச்சியையும் அப்பாலும் அக்கணத்தைக் கொண்டு கற்பம் என்று சொல்லுகின்ற நீண்டதொரு நிகழ்ச்சியையும் உண்டாக்குவதாம்; ஆகாயம் எல்லாப் பொருட்கும் பூக்கும் இடங்கொடுக்கும்-ஆகாயம் என்பது எல்லாப் பொருள்களும் மலர்தற்கு இடங்கொடுக்கின்ற பண்புடையதாகும் என்றான் என்க.

(விளக்கம்) இனி, நிம்பம்-வேம்பு. நிம்பம்........அழிதலும் என்னும் இப்பகுதியை,

உருவப் பிழம்பப் பொருளென்
றுரைப்பனிப் பாறயிர்மோர்
பருவத்தி னாம்பரியாயப்
பெயரென்பன் பாலழிந்து
தருவித் துரைத்த தயிருரு
வாய்மும்மைத் தன்மையதாந்
திருவத்த தென்பொரு ளாதலைத்
தேர தெளியிதென்றாள்       (நீல-327)

எனவரும் செய்யுளானும்,

பெற்றது தானுங்கும் மாயத்
திரிபு பயற்றியல்பே
யிற்ற திதுவென திட்டமென்
பாயிவ் விருமையினுந்
தெற்றெனத் தீர்ந்தோர் பொருளென்னை
தேற்றனித் தேற்றலையேன்
மற்றது வாமை மயிரெனச்
சொல்லுவன் மன்னுமென்றான்   (நீல-322)

எனவும் வரும் செய்யுளானும் உணர்க. இனி, பொருள் நிகழ்ச்சிக்கு ஏதுவெனக் கூறிய தருமாத்திகாயம் அதன்மாத்திகாயங்களின் இயல்புகளை,

அத்தியாய மூர்த்தியா யளவி றேசியாய்
ஒத்தள வுலகினோ டுலக லோகமாம்
தத்துவந் தனைச் செய்து தம்மத் தம்மமா
மத்திகள் செலவோடு நிலையிற் கேதுவாம்

எனவும்,

அச்சுநீர் தேரொடு மீனை யீர்த்திடா
அச்சுநீ ரன்றியத் தேரு மீன்செலா
அச்சுநீர் போலத்தம் மத்தி சேறலை
இச்சையு முயற்சியு மின்றி யாக்குமே

எனவும், அந்தரத் தறுபத்து மூன்ற தாகிய
இந்திர படலமு நிரைய மேழ்களு
மந்திர மலைமண்ணு மற்று நின்றிடா
அந்தமி னிலையதம் மத்தி யில்லையேல்

எனவும்,

பறவையின் சிறகொடு பாத நின்றுழி
நெறியினாற் செலவொடு நிலையை யாக்குமால்
உறவிபுற் கலமிவை யோட நிற்றலைச்
செறிவுறத் தம்மத்தம் மத்தி செய்யுமே

எனவும் வரும் (மேரு மந்தர. வைசய 88, 10, 11, 12) செய்யுள்களானும் உணர்க. கணம் எனினும் கணிகம் எனினும் ஒக்கும். கற்பம்-ஊழி. ஈண்டுக்கூறிய காலத்தின் சிற்றளவினையும், பேரளவினையும் கால நீ வேண்டாயாய் கணிகமும் கற்பமும் சாலமும் புனைந்துரைத்தி என வரும் (நீல-297) செய்யுட்கு வரும் விளக்க உரையின்கண்-

இனி, கணம் என்பது ஏழு செங்கழு நீரிதழை யொரு குறட்டிலடுக்கி வலியுடையோனொருவன் மிகவுங் கூரியதோர் உளி வைத்துக் கூடமிட்டுப் புடைத்தால் ஆறாம் புரையற்று ஏழாம் புரையிற் செல்லும் கால வளவாம்; கற்பமாவது ஒரு யோசனை யகன்றுயர்ந்ததொரு வைரமலை. கருவுடையாள் பட்டாடை தேய்க்கப்பட்டுக் கையறத் தேயும் கால வளவாம் என்பது பவுத்தர் கொள்கை என்பதனானும் உணர்க. பூக்கும் இடம்-விரியும் இடம். புரிவு-தன்மை, செயல் எனினுமாம். உளவென்ற பொருட்கெலாம் இடங்கொடுத்துடன் தளர்வின்றி நிற்பது ஆகாயம் என்பது மேருமந்தர புராணம். ( செய்.63)

இதுவுமது

195-201: சீவன்.............அவன்

(இதன் பொருள்) சீவன் உடம்போடு ஒத்துக்கூடி தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும்-உயிரானது பழவினையால் தனக்கெய்திய உடம்போடு இரண்டறக் கலந்து கெடாத சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் புலகன்களை நுகரும்; ஓர் அணு புற்கலம் புறஉரு ஆகும்-உயிரல்லாத ஓர் அணு புற்கலம் ஆம் இவ்வணுவே உயிர்க்கு உடம்பாகவும் ஐம்பெரும் பூதங்களாகவும் திரண்டுள்ள புறப்பொருள்களாகும்; சீர்சால் நல்வினை தீவினை அவை செய்யும் வருவழி. இரண்டையும் மாற்றி-உயிர்க்குச் சிறப்புப் பொருந்துகின்ற நல்வினையையும் துன்பம் தருகின்ற அவை செய்வதற்கும் வருவதற்கும் வாயில்களாகிய ஊற்று செறிப்பு இரண்டனையும் அடைத்து மாற்றி; முன் செய் அருவினைப் பயன் அனுபவித்து அறுத்திடுதல்-முன்னே செய்யப்பட்ட விலக்குதற்கரிய பழவினைகளை நுகர்ந்து அவற்றலாய கட்டை அவிழ்த்து விடுதல்; அது வீடு ஆகும் என்றனன் அவன்-அங்ஙனம் கட்டற்ற அந்நிலையே உயிர்க்கு வீடாகும் என்று கூறினன் நிகண்டவாதி என்க.

(விளக்கம்)

ஓர் அணுவே புற்கலமாம் அவ்வணுவின் திரட்சியே உயிருக்கு உடம்பும் நுகரும் பொருள்களும் ஆகிய புறஉருவங்களாம் என்றவாறு. எனவே அணுக்களின் திரட்சியே சுவை முதலிய புலன்களும் அவற்றின் நிலைக்களனாகிய ஐம்பெரும் பூதங்களும் ஆகிய உயிரில் பொருள்கள் என்றனாம். சீர்சால் நல்வினை எனவே பழிசால் தீவினை எனக் கொள்ளவைத்தான். செய்யும் வழி வரும்வழி என இரண்டையும் என்க. செய்யும் வழி அவா வரும் வழி-அஃது ஊற்று எனப்படும். மாற்றுதல்-அது செறிப்பு எனப்படும் பழவினையை நுகர்ந்து அறுத்திடுதல் உதிர்ப்பு எனப்படும். வீடு காதி அகாதி என்னும் வினைகளினின்றும் நீங்கி விடுதலை பெறுதல். அது-அங்ஙனம் அறுத்திட்டநிலை. அவன்-அந்நிகண்டவாதி. இதனை,

பெரும்பாவ மறத்துய்த்துப் பெறுதும்யாம் வீடென்னோ
மரும்பாவ காரிநீ யாவர்வா யதுகேட்டாய்
வரும்பாவ மெதிர்காத்து மன்னுந்தம் பழவினையு
மொருங்காக வுதிர்த்தக்கா லுயிர்த்தூய்மை வீடென்றாள் (நீல-313)

எனவரும் செய்யுளோடு ஒப்புக்காண்க.

சாங்கியவாதி

201-211 : பின்............வெளிப்பட்டு

(இதன் பொருள்) பின்-அப்பால் மணிமேகலை அந்நிகண்டவாதியை விட்டுச் சாங்கிய சமயத் தலைவனை எதிர்ப்பட்டு வினவிய வழி அவன்; இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன்-யான் கூறப்போவது எம்முடைய சாங்கிய மதத்திற்கியன்ற நன்பொருள் என்று சொல்லி அவற்றை எடுத்துச் சொல்லுபவன்; தனை அறிவரிதாய் தான் முக்குணமாய் மனநிகழ்வு இன்றி-தான் அருவமாதலின் மனத்தால் பற்றப்படாததாய்; மாண்பு அமை பொதுவாய் எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடமெனச் சொல்லுதல் மூலப்பகுதி சித்தத்து-எப்பொருளுக்கும் தானே காரணம் சிறப்பமைந்த பொதுப் பொருளாய்க் கருத்துப் பொருளும் காட்சிப்பொருளும் ஆகிய எல்லாப் பொருள்களும் பிறத்தற்கிடன் என்று எம்முடைய நூலாற் சொல்லப்பட்டது மூலப்பகுதி என்னும் சித்தமாம்; (சித்தத்து) மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு-மான் என்று கூறப்பட்ட புத்தி தத்துவம் வெளிப்பட; அதன்கண் அங்கி ஆனது வெளிப்பட்டு-அவ்வான வெளியினூடே காற்றுத்தோன்றா நிற்ப அக்காற்றினின்றும் தீயானது வெளிப்பட; அதன்கண் அப்பின் தன்மை வெளிப்பட்டு-அத்தீயினின்றும் நீரின் தன்மை வெளிப்பட; அதின் மண் வெளிப்பட்டு-அந்நீரினின்றும் மண்ணின் தன்மை வெளிப்பட இவ்வாறு ஐம்பெரும்பூதங்களும் வெளிப்பட்டனவாக என்க.

(விளக்கம்) தனை என்றது மூலப்பகுதியை. முக்குணம்-சாத்துவீகம், இராசதம், தாமதம் என்பன. இனை மனத்திற்கும் முதலாதலின் அதனாற் பற்றப்படா தென்பான் மன நிகழ்வின்றி என்றான். மாண்பு-தான் ஒன்றின் காரியம் ஆகாமல் தானே எல்லாப் பொருளுக்கும் முதலாம் சிறப்பு. முக்குணங்களின் பிழம்பே மூலப்பகுதியாதலின் பொதுவாய் என்றான். மூலப்பகுதி ஆகிய சித்தத்து என்க. எனவே சித்தம் என்பதும் அதற்குப் பெயர் என்பது பெற்றாம். சொல்லுதல்-சொல்லப்படுவது. மான்-மகத்தத்துவம். அதனை மகான் எனவும் கூறுப. புத்தி என்பதும் அதற்கொரு பெயர் என்பான் மானென்றுரைத்த புத்தி என்றான். வெளிப்பட்டு எனவரும் செய்தெ னெச்சங்களைச் செயவென் னெச்சங்களாகத் திரித்துக் கொள்க. அங்கி-தீ. அப்பின் தன்மை என்றது அப்பு என்னும் பெயராந் துணையாக நின்றது. அப்பு-நீர்.

இதுவுமது

212-221: அவற்றின்.............வெளிப்பட்டு

(இதன் பொருள்)  அவற்றின் கூட்டத்தின் மனம் வெளிப்பட்டு ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும்-அவ்வைம்பூதக் கூட்டரவின்கண் மனம் என்னும் தத்துவம் தோன்றா நிற்பப் புலன்களோடு கட்டுண்ணும் மனத்தினின்றும் அகங்கார வேற்றுமைகளும்; ஆகாயத்தின் செவி ஒலி விகாரமும்-ஆகாயத்தின் பண்பாகிய செவிக்குப் புலப்படும் ஒலி வேற்றுமைகளும்; வாயுவின் தொக்கும் ஊறு எனும் விகாரமும்-காற்றினின்றும் மெய்யென்னும் பொறியும் அதற்குப் புலனாகும் ஊற்றுப் புலவேற்றுமைகளும்; அங்கியில் கண்ணும் ஒளியுமாம் விகாரமும்-நெருப்பினின்றும் கட்பொறியும் அதற்குப் புலனாம் ஒளி வேற்றுமையும்; தங்கிய அப்பில் வாய்சுவை எனும் விகாரமும்-நிலத்தின்கண் தங்கியுள்ள நீரினின்றும் வாய் என்னும் பொறியும் அதற்குப் புலனாம் சுவை என்னும் புலவேற்றுமையும்; நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்-மண்ணினின்றும் மூக்கு என்னும் பொறியும் அதற்குப் புலனாம் நாற்றப்புல வேற்றுமையும் பிறக்கும் என; சொலப்பட்டு அவற்றில் தொக்கு விகாரமாய்-எமது நூலின்கண் சொல்லப்பட்டுப் பின்னரும் ஈண்டுச் சொல்லப்பட்ட பொறிகளுள் வைத்து மெய்யின் வேறுபாடாய்; வாக்கு பாணி பரத பாயுரு உபத்தம் என ஆக்கிய இவை வெளிப்பட்டு-சொல்கைகால் எருவாய் கருவாய் என்ற தொழிற்கருவிகள் ஆக வியற்றப்பெற்ற இவ்வைந்தும் தோன்றும் என்றான் என்க.


Offline Anu

Re: மணிமேகலை
« Reply #28 on: February 28, 2012, 10:17:24 AM »
28. கச்சிமாநகர் புக்க காதை

(இருபத்தெட்டாவது தாயரோடு அறவணடிகளையுந் தேர்ந்து கச்சிமாநகர்க்கட் சென்ற பாட்டு.)

இதன்கண்: மணிமேகலை வஞ்சிநகரத்தே இருந்து அந்நகரத்தின்கண் சமயக்கணக்கர் உறையும் இடத்தே சென்று, அளவை வாதிமுதல் பூதவாதி ஈறாக உள்ள சமயக்கணக்கர்களைத் தனித்தனியே கண்டு அவ்வவர் சமயக் கருத்துகளையெல்லாம் வினவி நன்கு தெரிந்து கொண்ட பின்னர், மாதவியையும் சுதமதியையும் அறவணடிகளையும் காண விரும்பி அந்நகரத்தின் உள்ளே புகுந்து பல்வேறு காட்சிகளையும் கண்டு செல்பவள், அங்கொரு தவப்பள்ளியின்கண் தவம் செய்து கொண்டிருந்த தன் மூதாதையாகிய மாசாத்துவானைக் கண்டு தன் வரலாறுகளையும் கூறிப் பவுத்த தருமத்தை கேட்டற்கு விரும்பி அறவணடிகளைத் தேடிக்கொண்டு வந்தனையும், அம்மாசாத்துவானுக்கு அறிவித்த செய்தியும், மாசாத்துவான் தான் வஞ்சி நகரத்திலே தங்குதற்கு உரிய காரணத்தை மணிமேகலைக்கு அறிவித்துக் காஞ்சி நகரத்தில் மழையின்மையால் மன்னுயிர்கள் பசிப்பிணியால் வருந்தி மாய்கின்றன; நீ அந்நகரத்தை எய்தி அவ்வுயிர்கள் ஓம்புதல் வேண்டும் என்று வேண்டிக்கொண்ட செய்தியும், அவன் வேண்டுகோட் கிணங்கிய மணிமேகலை வஞ்சி நகரத்திலிருந்து வான் வழியாகக் காஞ்சி நகரம் புகுந்த செய்தியும், அந்நகரத்தில் புத்த பீடிகையின் மருங்கிருந்து அந்நகரத்தின்கண் பசிப்பிணியால் வருந்தும் மன்னுயிர்களை வரவழைத்து அவற்றிற்கு நல்லுணவளித்துக் காப்பாற்றிய செய்தியும், அந்நிகழ்ச்சியைக் கேட்டுத் தன்னைக் காண வந்த மாதவியையும் சுதமதியையும் அறவண வடிகளையும் கண்டு அன்பு பொங்க அவர் அடிகளில் வீழ்ந்து வணங்கி அவர்களுக்கு அமுதசுரபியில் சுரந்த அறுசுவை உண்டி நல்கி அளவிலாது மகிழ்ந்த செய்தியும் கூறப்படும்.

ஆங்கு தாயரோடு அறவணர்த் தேர்ந்து
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின்
வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும்
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து
சுருங்கைத் தூம்பின் மனை வளர் தோகையர்
கருங் குழல் கழீஇய கலவை நீரும்
எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும்
தம் தமில் ஆடிய சாந்து கழி நீரும்
புவி காவலன் தன் புண்ணிய நல் நாள்
சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும்  28-010

மேலை மாதவர் பாதம் விளக்கும்
சீல உபாசகர் செங் கை நறு நீரும்
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைத்து
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும்
உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால்
செறித்து அரைப்போர் தம் செழு மனை நீரும்
என்று இந் நீரே எங்கும் பாய்தலின்
கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும்
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி
தாமரை குவளை கழுநீர் ஆம்பல்   28-020

பூமிசைப் பரந்து பொறி வண்டு ஆர்ப்ப
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில்
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த
வெள்ளிக் குன்றம் உள் கிழிந்து அன்ன
நெடு நிலைதோறும் நிலாச் சுதை மலரும்
கொடி மிடை வாயில் குறுகினள் புக்கு
கடை காப்பு அமைந்த காவலாளர்
மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும்  28-030

பல் மீன் விலைஞர் வெள் உப்புப் பகருநர்
கள் நொடையாட்டியர் காழியர் கூவியர்
மைந் நிண விலைஞர் பாசவர் வாசவர்
என்னுநர் மறுகும் இருங் கோவேட்களும்
செம்பு செய்ஞ்ஞ்அரும் கஞ்சகாரரும்
பைம்பொன் செய்ஞ்ஞ்அரும் பொன் செய் கொல்லரும்
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும்
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும்
தோலின் துன்னரும் துன்ன வினைஞரும்
மாலைக்காரரும் காலக் கணிதரும்   28-040

நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப
நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும்
பாணர் என்று இவர் பல் வகை மறுகும்
விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரோடு
இலங்கு மணி வினைஞ்அர் இரீஇய மறுகும்
வேத்தியல் பொது இயல் என்று இவ் இரண்டின்
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும்
பால் வேறு ஆக எண் வகைப் பட்ட
கூலம் குவைஇய கூல மறுகும்
மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்   28-050

போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும்
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும்
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும்
மறையோர் அருந் தொழில் குறையா மறுகும்
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும்
எனைப் பெருந் தொழில் செய் ஏனோர் மறுகும்
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்
புதுக் கோள் யானையும் பொன் தார்ப் புரவியும்  28-060

கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும்
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும்
வேணவா மிகுக்கும் விரை மரக் காவும்
விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும்
சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும்
கோலம் குயின்ற கொள்கை இடங்களும்
கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமோடு
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும்
இந்திர விகாரம் என எழில் பெற்று   28-070

நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர்
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள்
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன்
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும்
தானப் பயத்தால் சாவக மன்னவன்
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும்
செல்வற் கொணர்ந்து அத் தீவகப் பீடிகை
ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும்
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள  28-080

அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு
இறவாது இப் பதிப் புகுந்தது கேட்டதும்
சாவக மன்னன் தன் நாடு எய்த
தீவகம் விட்டு இத் திரு நகர் புகுந்ததும்
புக்க பின் அந்தப் பொய் உருவுடனே
தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும்
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம்
செவ்விது அன்மையின் சிந்தை வையாததும்
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும்  28-090

சொல்லினள் ஆதலின் தூயோய்! நின்னை என்
நல்வினைப் பயன்கொல் நான் கண்டது? எனத்
தையல் கேள் நின் தாதையும் தாயும்
செய்த தீவினையின் செழு நகர் கேடுற
துன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன்
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்
மனைத்திறவாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன்  28-100

புரிந்த யான் இப் பூங் கொடிப் பெயர்ப் படூஉம்
திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய்
குடக் கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை
விடர்ச் சிலை பொறித்த வேந்தன் முன் நாள்
துப்பு அடு செவ் வாய்த் துடி இடையாரொடும்
இப் பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள்
இலங்கா தீவத்துச் சமனொளி என்னும்
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும்
தரும சாரணர் தங்கிய குணத்தோர்
கரு முகில் படலத்துக் ககனத்து இயங்குவோர்  28-110

அரைசற்கு ஏது அவ் வழி நிகழ்தலின்
புரையோர் தாமும் இப் பூம்பொழில் இழிந்து
கல் தலத்து இருந்துழி காவலன்விரும்பி
முன் தவம் உடைமையின் முனிகளை ஏத்திப்
பங்கயச் சேவடி விளக்கி பான்மையின்
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம்
பாத்திரத்து அளித்துப் பலபல சிறப்பொடு
வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின்
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும்
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை  28-120

இன்ப ஆர் அமுது இறைவன் செவிமுதல்
துன்பம் நீங்கச் சொரியும் அந் நாள்
நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழி முறை
முன்னோன் கோவலன் மன்னவன் தனக்கு
நீங்காக் காதல் பாங்கன் ஆதலின்
தாங்க நல் அறம் தானும் கேட்டு
முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றி
தன்னான் இயன்ற தனம் பல கோடி
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்து
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய  28-130

வான் ஓங்கு சிமையத்து வால் ஒளிச் சயித்தம்
ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இத்
தண்டாக் காட்சித் தவத்தோர் அருளிக்
காவிரிப் பட்டினம் கடல் கொளும் என்ற அத்
தூ உரை கேட்டுத் துணிந்து இவண் இருந்தது
இன்னும் கேளாய் நல் நெறி மாதே!
தீவினை உருப்பச் சென்ற நின் தாதையும்
தேவரில் தோற்றி முன்செய் தவப் பயத்தால்
ஆங்கு அத் தீவினை இன்னும் துய்த்துப்  28-140

பூங்கொடி! முன்னவன் போதியில் நல் அறம்
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கிக்
காதலி தன்னொடு கபிலை அம் பதியில்
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும் என்று
அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச்
சொல் பயன் உணர்ந்தேன் தோகை! யானும்
அந் நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன்
நின்னது தன்மை அந் நெடு நிலைக் கந்தில் துன்னிய
துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ?
தவ நெறி அறவணன் சாற்றக் கேட்டனன்  28-150

ஆங்கு அவன் தானும் நின் அறத்திற்கு ஏது
பூங்கொடி! கச்சி மா நகர் ஆதலின்
மற்று அம் மா நகர் மாதவன் பெயர் நாள்
பொன் தொடி தாயரும் அப் பதிப் படர்ந்தனர்
அன்னதை அன்றியும் அணி இழை! கேளாய்
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின்
அந் நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர்
இன்மையின் இந் நகர் எய்தினர் காணாய்
ஆர் உயிர் மருந்தே! அந் நாட்டு அகவயின்  28-160

கார் எனத் தோன்றிக் காத்தல் நின் கடன் என
அருந் தவன் அருள ஆய் இழை வணங்கித்
திருந்திய பாத்திரம் செங் கையின் ஏந்திக்
கொடி மதில் மூதூர்க் குடக்கண் நின்று ஓங்கி
வட திசை மருங்கின் வானத்து இயங்கித்
தேவர் கோமான் காவல் மாநகர்
மண் மிசைக் கிடந்தென வளம் தலைமயங்கிய
பொன் நகர் வறிதாப் புல்லென்று ஆயது
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை
பொன் கொடி மூதூர்ப் புரிசை வலம் கொண்டு  28-170

நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து
தொடு கழல் கிள்ளி துணை இளங் கிள்ளி
செம் பொன் மாச் சினைத் திருமணிப் பாசடைப்
பைம் பூம் போதிப் பகவற்கு இயற்றிய
சேதியம் தொழுது தென்மேற்கு ஆக
தாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும்
வையம் காவலன் தன் பால் சென்று
கைதொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன்
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள்
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள்  28-180

 அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு
தங்காது இப் பதித் தருமதவனத்தே
வந்து தோன்றினள் மா மழை போல் என
மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி
கந்திற்பாவை கட்டுரை எல்லாம்
வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி
ஆய் வளை நல்லாள் தன்னுழைச் சென்று
செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ
கொங்கு அவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ
நலத்தகை நல்லாய்! நல் நாடு எல்லாம்  28-190

அலத்தல்காலை ஆகியது அறியேன்
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி
உயங்காதொழி நின் உயர் தவத்தால் ஓர்
காரிகை தோன்றும் அவள் பெருங் கடிஞையின்
ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின்
தாங்கா மாரியும் தான் நனி பொழியும்
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால்
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது  28-200

பார் அகம் விதியின் பண்டையோர் இழைத்த
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என
பொய்கையும் பொழிலும் புனைமின் என்று அறைந்து அத்
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது
இவ் இடம் என்றே அவ் இடம் காட்ட அத்
தீவகம் போன்ற காஅகம் பொருந்திக்
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள்
பண்டை எம் பிறப்பினைப் பான்மையின் காட்டிய
அங்கு அப் பீடிகை இது என அறவோன்  28-210

பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து
தீவதிலகையும் திரு மணிமேகலா
மா பெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு
ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்திப்
பங்கயப் பீடிகை பசிப் பிணி மருந்து எனும்
அங்கையின் ஏந்திய அமுதசுரபியை
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின்  28-220

மொய்த்த மூ அறு பாடை மாக்களில்
காணார் கேளார் கால் முடம் ஆனோர்
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர்
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும்
பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும்
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய்
பெருந் தவர் கைப் பெய் பிச்சையின் பயனும்
நீரும் நிலமும் காலமும் கருவியும்   28-230

சீர் பெற வித்திய வித்தின் விளைவும்
பெருகியதென்ன பெரு வளம் சுரப்ப
வசித் தொழில் உதவி வளம் தந்தது என
பசிப் பிணி தீர்த்த பாவையை ஏத்திச்
செல்லும்காலை தாயர் தம்முடன்
அல்லவை கடிந்த அறவண அடிகளும்
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி
நல் அறச்சாலை நண்ணினர் சேறலும்
சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி
நன்று என விரும்பி நல் அடி கழுவி  28-240

ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகைப்
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்டபின்
பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து
வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம் என
மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என்  28-245

உரை

(இதன் கண் 1 முதல் 98 ஆம் அடிவரையில் மணிமேகலை நகரத்தில் புகுந்து செல்பவள் கண்டு செல்லும் காட்சிகளின் வண்ணனையாய் ஒரு தொடர்.)

மணிமேகலை வஞ்சியில் அகநகரத்துள்ளே புகுந்து செல்லுதல்

1-4 : ஆங்கு..................கடந்து

(இதன் பொருள்) ஆங்கு தாயரோடு அறவணர் தேர்ந்து-அவ்வஞ்சி மாநகரத்தின்கண் மணிமேகலை ஐவகைச் சமயமும் அறிந்த பின்னர் அப்பொழுதே தன்னையீன்ற தாயும் செவிலித்தாய் போல்பவளும் ஆகிய மாதவியும் சுதமதியும் ஆகிய தாயர் இருவரையும் அறவண அடிகளாரையும் காண்டற கெழுந்த தன் அவாக்காரணமாக, அவரைத் தேடிப் புறப்படுபவள்; வாங்குவில் தானை வானவன் வஞ்சியின் வேற்று மன்னரும் உழிஞை வெம்படையும் போல-வளைந்த வில்லேந்திய படைகளையுடைய சேர மன்னனுடைய வஞ்சி நகரத்தின்மேல் வந்த பகை மன்னர்களும் உழிஞைப்பூச் சூடிய வெவ்விய படைகளும் போல; புறம் சுற்றிய புறக்குடி கடந்து புறத்தே சூழ்ந்துள்ள புறக்குடி இருப்புகளைக் கடந்து போய் என்க.

(விளக்கம்) சுதமதியும் மாதவி போன்று மணிமேகலையின்பால் தாயன்பு மிக்கவள் ஆதலின் அவளையும் உளப்படுத்தித் தாயர் என்று பன்மையில் ஓதினர். உழிஞைப்படை-மதில் வளைக்கும் பகைமன்னர் படை. அவர் உழிஞைப்பூ சூடிவருதல் மரபு. புறக்குடி-புறநகர். இது நால்வகைப்பட்ட வீரரும் செறிந்திருக்கும் இடமாதலின் இங்ஙனம் உவமை எடுத்தோதினர்.

அகழியின் மாண்பு

5-22 : சுருங்கை............உடுத்து

(இதன் பொருள்) மனைவளர் தோகையர்-தமது அகநகரத்தின்கண் தமது மாடமனையுள்ளிருந்து மயில்தோகை போலும் கூந்தலையுடைய மகளிர் தமது; கருங்குழல் கழீஇய-கரிய கூந்தலைக் கழுவி விட்டமையால்; சுருங்கைத்தூம்பின் சுருங்கையாகிய துளை வழியே வந்து கலந்த நறுமணமுடைய; கலவை நீரும்-பல்வேறு மணங்கலந்த நன்னீரும், தந்தம் இல் எந்திரவாவியில் இளைஞரும் மகளிரும் ஆடிய சாந்துகழி நீரும்-தங்கள் தங்கள் இல்லத்தின் உள்ளே அமைத்த எந்திர வாவியின்கண் இளைய ஆடவரும் மகளிரும் ஒருங்கே நீராடியமையால் அவர் அணிந்த நறுமணச் சாந்துகள் கழிக்கப்பெற்ற மணநீரும்; புவிகாவலன் தன் புண்ணிய நல்நாள் சிவிறியும் கொம்பும் சிதறும் விரை நீரும்-உலகங் காவலனாகிய தம்மரசன் பிறத்தற்கியன்ற புண்ணியத்தையுடைய நல்ல நாளிலே அந்நகரமாந்தர் மகிழ்ச்சியால் ஒருவர்மேல் ஒருவர் சிவிறியும் கொம்பும் ஆகிய நீர் வீசும் கருவிகளால் சிதறிய நறுமணக் கலவை நீரும்; மேலை மாதவர் பாதம் விளக்கும் சீல உபாசகர் செங்கை நறுநீரும்-மக்கட் பிறப்பின் மேலெல்லையாகத் திகழும் பெரிய தவவொழுக்கமுடைய துறவோரின் திருவடிகளை விளக்குகின்ற தமக்குரிய நல்லொழுக்கத்தை மேற்கொண்ட இல்லறத்தோர் சிவந்த கைகளால் பெய்யும் நறிய நீரும்; அறம்செய் மாக்கள் அகில் முதல் புகைத்து நிறைந்த பந்தர் தசும்பு வார்நீரும்-அறம் செய்கின்ற மாந்தர் அகில் முதலிய மணப்புகை எடுத்து நீர்ச்சால்களில் நிறைத்துள்ள தண்ணீர்ப் பந்தல்களில் அச்சால்களினின்றும் ஒழுகும் நன்னீரும்; உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் செறித்து அரைப்போர் தம் செழுமனை நீரும்-உறுப்புகள் மாறுபடாமல் சேர்த்தற்கியனற் நறுமணப் பொருளைச் சேர்த்துச் சாத்தம்மியில் இட்டுச் சாந்தரைக்கின்ற தொழிலாளருடைய செழிப்புடைய இல்லத்தினின்றும் வருள் நீரும், என்று இந்நீரே எங்கும் பாய்தலின்-என்று இங்குக் கூறப்பட்ட இத்தகைய நறுமணம் கமழும் நீரே அந்நகரத்தினின்றும் எத்திசையினும் தன்னுள் வந்து பாய்தலாலே; கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும்-தன்னுள் வாழும் சினந்த முதலைகளும் இடங்கரு மீன்களும்; ஒன்றிய புலஒழி உடம்பினவாகி-தம் பிறப்போடு பொருந்திய தமக்கியல்பான புலால் நாற்றம் ஒழிந்து நறுமணமே கமழும் உடம்பை உடையனவாகா நிற்பவும்; தாமரை குவளை கழுநீர் ஆம்பல் பூமிசைப் பரந்து-தாமரையும் நீலமலரும் செங்கழுநீர் மலரும் ஆம்பல் மலரும் ஆகிய பன்னிற மலர்களும் தன் மேற்பரப்பெல்லாம் பரந்து விளங்கா நிற்பவும் பொறி வண்டு ஆர்ப்ப-பொன்னிறம் முதலிய பல்வேறு நிறத்தால் அமைந்த புள்ளிகளையுடைய வண்டுகள் எங்கும் முரன்று திரியா நிற்பவும் இவ்வாற்றால்; இந்திர தனு என இலங்கு அகழ உடுத்து-இந்திர வில் போன்று பல்வேறு நிறத்தோடு விளங்குகின்ற அகழியாகிய அழகிய ஆடையை உடுத்துக் கொண்டு என்க. 

(விளக்கம்) சுருங்கைத் தூம்பு-அந்நகரத்திலே பெய்யும் மழை நீரும் இல்லங்களில் மாந்தர் பயன்படுத்தும் நீரும் வெளியேறுதற் பொருட்டு நிலத்தின் கீழ்க்கல்லாலும் சுண்ணத்தாலும் இயற்றப்பெற்ற நீரோடும் குழாய் வழிகள். இதனால் அக்காலத்தே நிலத்தின்கீழே நீர்க்குழாய்கள் அமைந்திருந்த நனி நாகரிகச் சிறப்புணர்க.

நீணிலம் வகுத்து நீர் நிரந்துவந் திழிதரச்
சேணிலத் தியற்றிய சித்திரச் சுருங்கைசேர்
கோணிலத்து வெய்யவாங் கொடுஞ்சுறத் தடங்கிடங்கு (சீவக-142)

எனச் சிந்தாமணியினும் வருதல் காண்க.

மனைவளர் தோகையர் என்றதனால் இல்லத்தின் உள்ளேயே நீராடிக் குழல் கழுவிய நீர் என்பது கொள்க. குழல்-கூந்தல். அது மயிர்ச்சந்தன மணமும் மலர் மணங்களும் விரவியிருத்தலின் கலவை நீர் என்றார். இனி மகளிர் கருங்குழல் கழுவிய மணக்கலவை நீருமாம். என்னை-

பத்துத் துவரினு மைந்து விரையினும்
முப்பத் திருவகை யோமா லிகையினும்
ஊறின நன்னீ ருரைத்தநெய் வாசம்
நாறிருங் கூந்த னலம்பெற வாட்டி  (சிலப் 6 : 76-79)

என்பதனானும் அறிக. எந்திரவாவி வேண்டும்பொழுது நீர் பெருக்கவும் கழிக்கவும் பொறிகள் அமைக்கப்பட்ட செய் நீர்நிலை. இஃது இல்லத்தின் ஊடேயே அமைக்கப்படுவதாம். இவ்வாவியில் செழுங்குடிச் செல்வராகிய இளைஞரும் மகளிரும் தம் தம் இல்லத்தினூடேயே சேர்ந்து நீராடி மகிழ்வர் ஆதலின் தம் தம் இல் ஆடிய என்றார். இல்-மனை. இஃதுணராதார் தந்தமில் என்பதற்குப் பொருள் காண தொழிந்தார். புவி காவலன் புண்ணிய நன்னாள் என்றது மன்னன் பிறந்த நாளை. சிவிறி கொம்பு என்பன நீர் சிதறும் கருவிகளுள் சில. மாந்தருள் மாதவரே மேல் எல்லையின் வரம்பு ஆதலின் மேலை மாதவர் என்றார்; ஐகாரம் சாரியை. சீல உபாசகர்-பவுத்தருள் இல்லறத்தார். இவர் ஐந்து சீலங்களை மேற்கொண்டு ஒழுகுபவர். அவையாவன: கொல்லாமை பொய் சொல்லாமை களவின்மை காமமின்மை இரவாமை என்னும் இவ்வைந்து ஒழுக்கங்களுமாம். இவை இல்லறத்தார் மேற்கொள்ளற்பாலன ஆதலின் அவரை, சீல உபாசகர் என்றார். தசும்புதல்-கசிதலுமாம். உறுப்பு-புகையுறுப்பு. அவையாவன நேர்கட்டி செந்தேன் நிரியாசம் பச்சிலை ஆரம் அகில் உறுப்போடு ஆறு என்பன (சிலப்-5 : 14 உரைமேற்;) கந்த உத்தி என்பது, கலவை செய்தற்கியன்ற முறைகளைக் கூறுகின்ற நூற்பெயர் எனக்கோடலுமாம். எனவே, நூன் முறைப்படி செறித்து அரைப்போர் எனினுமாம். கராம், இடங்கர் என்பன முதலை வகை. கலவை நீரானும் மலரானும் பல்வேறு நிறத்தோடு கிடக்கும் அகழிக்கு வானவில் உவமையாயிற்று.

மதில் அரணும் மாடவாயிலும்

23-28 : வந்தெறி...........புக்கு

(இதன் பொருள்) வந்து எறி பொறிகள் வகை மாண்புடைய பகைவர் வந்துற்றபோது தாமே இயங்கி வந்து அவரைக் கொல்லுகின்ற பொறிகளின் வகையினால் சிறப்புடைய; கடிமதில் ஓங்கிய இடைநிலை வரைப்பின்-காவலையுடைய மதில் ஓங்கி நிற்கின்ற இடைநிலத்திலே; பசுமிளை பரந்து-பசுமையுடைய காவற்காடு பரந்து செறியப்பட்டு; பல்தொழில் நிறைந்த-பலவாகிய சிற்பத்தொழில் நிறைந்துள்ள; வெள்ளிக்குன்றம் உள் கிழிந்தன்ன-வெள்ளிமலையானது நடுவிடம் கிழிந்தாற் போலத் தோன்றுகின்ற; நெடுநிலை தோறும் நிலாச்சுதை மலரும்-நெடியநிலைகள் அமைத்த இடந்தோறும் நிலாப்போன்று சுண்ண ஒளி விரிதற்கிடனான; கொடியிடை வாயில் குறுகினள் புக்கு-வானத்தே உயர்த்திய கொடிகள் செறிந்த மாடவாயிலை எய்தி உள்ளே புகுந்து என்க.

(விளக்கம்) வந்து எறிதல் பகைவர் வந்தவுடன் தாமே இயங்கிவந்து அப்பகைவரைக் கொல்லும் பொறிகள் என்க. இப்பொறி வகைகளை

...................வளைவிற் பொறியும்
கருவிர லூகமுங் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் னுலையுங் கல்லிடு கூடையும்
தூண்டிலுந் தொடக்கு மாண்டலை யடுப்பும்
கவையுங் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமுங் கைபெய ரூசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவுஞ் சீப்பு முழுவிறற் கணையமும்
கோலுங் குந்தமும் வேலும் பிறவும்   (சிலப் 14: 207-216)

எனப் பிறர் ஓதுமாற்றானு முணர்க.

இடைநிலை வரைப்பு-அகழிக்கும் மதிலுக்கும் இடைக் கிடந்த நிலப்பரப்பு. மிளை-காவற்காடு. தொழில் நிறைந்த நெடுநிலை எனவும், குன்றம் உள் கிழிந்தன்ன நெடுநிலை எனவும் தனித்தனி கூட்டுக.

மறுகுகள்

29-43 : கடை...............மறுகும்

(இதன் பொருள்) கடை காப்பு அமைந்த காவலாளர் மிடை கொண்டு இயங்கும் வியன்மலி மறுகும்-வாயில் காத்தற்கமைந்த காவல் மறவர் செறிந்து இயங்குகின்ற அகலம் மிக்க தெருவும்; பல்மீன் விலைஞர் வெள்உப்பு பகருநர் கள்நொடையாட்டியர் காழியர் கூவியர்-பல்வேறு மீன்களையும் விற்கின்ற பரதவரும் உப்பிவிற்கும் உமணரும் உமட்டியரும் கள்விற்கும் வலைச்சியரும் பிட்டுவாணிகரும் அப்பவாணிகரும்; மைந்நிண விலைஞர் பாசவர் வாசவர் என்னுகர் மறுகும்-ஆட்டிசைறச்சி விற்போரும் இலை அமுதிடுவோரும் பஞ்சவாசம் விற்போரும் என்று கூறப்படுபவராகிய சிறு வாணிகர் தெருவும்; இருங்கோ வேட்களும் செம்பு செய்ஞ்ஞரும் கஞ்சகாரரும் பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய்கொல்லரும்-பெரிய மட்கலவாணிகராகிய குயவரும் செம்பு கொட்டிகளும் வெண்கலக் கன்னாரும் பசிய பொன்னால் அணிகலன் செய்வோரும் பொன் செய்கின்ற உருக்குத் தட்டாரும்; மரங்கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் வரந்தர எழுதிய ஓவியமாக்களும்-மரம் வெட்டித் தொழில் செய்யும் தச்சரும் சிற்பாசாரியரும் வழிபடுவார்க்கு வரந்தருகின்ற தெய்வத்தன்மை தோன்ற எழுதிய ஓவியங்களையுடைய சித்திரகாரிகளும்; தோலின் துன்னரும் துன்னவினைஞரும் மாலைக்காரரும் காலக் கணிதரும்-தோல் தைக்கும் செம்மாரும் ஆடை தைக்கும் தையற்காரரும் காலங்கணிக்கின்ற கணிவரும்; நலந்தரு பண்ணும் திறனும் வாய்ப்ப நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும் பாணர் என்று இவர் பல்வகை மறுகும்-அழகு தருகின்ற பெரும் பண்ணும் சிறு பண்ணும் பொருந்த அவற்றை மூவகை இடமும் யாழும் மிடறும் ஆகிய இவற்றில் நிகழும்படி இசைத்துக் காட்டும் பாணரும் என்று இவரெல்லாம் வாழுகின்ற பலவகைப்பட்ட தெருக்களும் என்க.

(விளக்கம்) மிடை கொள்ளுதல்-செறிவு கொள்ளுதல். வியன்மலி அகலமிக்க. பாசவர்-கயிறு திரித்து விற்பார், பச்சிறைச்சி சூட்டிறைச்சி விற்பாருமாம். இலையமுது-வெற்றிலை. வாசம்-மணப்பொருள். வாசவர்-மணப்பொருள் விற்போர். அவை-தக்கோலம் தீம்புத் தகைசால் இலவங்கம், கப்பூரஞ் சாதியோடைந்து மாம். கோவேட்கள்-குயவர். இவர் வாணிகம் பெரிது என்பது தோன்ற இருங்கோ வேட்கள் என்றார். தட்டார் இருவகைப்படுவர். அவருள் பைம்பொன் செய்ஞ்ஞரும் என்றது பணித் தட்டாரை. பொன் செய் கொல்லர் என்றது, பொன்னை உருக்கி மாசகற்றும் உருக்குத் தட்டார் இரும்பு செய்கொல்லர் முதலியோரை. கொல் தச்சர்ர-கொஃறச்சர் என நிலைமொழி ஈற்று லகரம் ஆய்தமாகத் திரிந்தது. மண்ணீடு-சிற்பம். ஓவியத்தில் தெய்வப்பண்பு திகழ எழுதும் கலைத்திறம் தோன்ற வரந்தர எழுதிய ஓவிய மாக்கள் என்றார். தோலின் துன்னர் என்றது-செம்மாரை. இக்காலத்துச் சக்கிலியர் என்பர். இவரின் வேறுபடுத்துதற்குத் துன்ன வினைஞர் என்றார். இவர் ஆடை முதலியன தைக்கும் தையல்காரர். நலம்-அழகு, இன்பமுமாம். பண்-பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி என்னும் பெரும்பண். திறம்-அவற்றின் கிளைகள். நிலம்-பண் பிறக்கும் நிலைக்களம். அவை எழுத்தும் அசையும் சீரும் ஆம். இனி மந்தம் உச்சம் சமம் என்னும் மூன்று இடமுமாம். கலம்-யாழ். கண்டம்-மிடறு. ஈண்டுக் கூறப்பட்ட தொழிலாளர் தனித்தனித் தெருவில் வாழ்ந்தனர் என்பது தோன்ற என்று இவர் பல்வகை மறுகும் என்றார்.

இதுவுமது

44-53 : விலங்கரம்..............மறுகும்

(இதன் பொருள்) விலங்கரம் பொரூஉம் போழ்கரோடு இலங்குமணி வினைஞர் இரீஇய மறுகும்-வளைந்த வாளரம் கொண்டு அறுக்கும் வெள்ளிய சங்குகளைப் பிளப்பவரோடு விளங்குகின்ற முத்துக் கோக்கும் தொழிலாளர் தங்கிய தெருவும்; சீவத்தியல் பொதுவியல் என்று இவ்விரண்டின் கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும்-வேத்தியலும் பொதுவியலும் என்று வகுத்துக் கூறப்படுகின்ற இவ்விரண்டு வகையினும் அமைந்த ஆடல்கலை இலக்கணமெல்லாம் அறிந்துள்ள ஆடல் மகளிர் வாழுகின்ற தெருவும், பால் வேறு ஆக எண் வகைப்பட்ட கூலங் குவைஇய கூலமறுகும்-பகுதி இரண்டாக எட்டு வகைப்பட்ட கூலங்களைக் குவித்துள்ள கூலக்கடைத் தெருவும்; மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்-மரகதரும் சூதரும் வேதாளிகரும் குடியிருக்கின்ற தெருவும்; போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்-காமவின்பத்தைப் பேணிப் பெருக்கும் பொது மகளிர் வாழுகின்ற அழகிய தெருவும்; கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை வண்ண அறுசுவையர் வளம் திகழ் மறுகும்-காண்போர் கண்ணொளி புகுதாத நுண்ணிய நூலால் நெய்யும் கைத்தொழிலையுடைய பல்வேறு வண்ணங்களை உடைய ஆடைநெய்யும் தொழிலாளர் வாழுகின்ற செல்வத்தால் திகழுகின்ற தெருவும் என்க.

(விளக்கம்) விலங்கு-வளைவு. அரம்-வாளரம். போழ்நர்-அறுத்துப் பிளப்போர் சங்கறுப்பாரோடு இயைத்துக் கூறுதலின் ஈண்டு இலங்கு. மணி என்றது முத்து என்பது பெற்றாம். கூத்து வேத்தியலும் பொதுவியலும் என இருவகைப்படும். வேத்தியலை அகக்கூத்தென்றும் பொதுவியலைப் புறக்கூத்தென்பாரும் பிற கூறுவாரும் உளர். கூத்தியர்-நாடகக் கணிகையர். கூலங்கள் இரண்டு பகுதியாக ஒவ்வொரு பகுதியினும் எட்டு எட்டு வகை உள்ளன ஆதலின்பால் வேறு ஆக எண் வகைப்பட்ட கூலாம் என்றார். அவை வருமாறு: நெல்லு புல்லு வரகு தினை சாமை இறுங்கு தோரையொடு கழைவிளை நெல்லே இவ்வெட்டும் ஒருபாற்படும் கூலங்கள். இனி எள்ளுக் கொள்ளுப் பயறுழுந்து அவரைகடலை துவரை மொச்சை என்றாங்கு உடன் இவை முதிரைக் கூலத்துணவே என்னும் இவ்வெட்டும் ஒருவகைக் கூலம் என்க. குவைஇய-குவித்த. மாகதர்-இருந்தேத்துவார். சூதர்-நின்றேத்துவார். வேதாளிகர்-பலவகைத் தாளத்திலாடுவார்; சூதர் வாழ்த்த மாகதர்நுவல வேதாளிகரொடு நாழிகை இசைப்ப எனவும் (மதுரைக்-670-671) மாகதப்புலவரும் வைதாளிகரும் சூதரும் எனவும் (சிலப். 26:74-5) பிற சான்றோரும் ஓதுதலுணர்க. போகம் புத்தலாவது காமயின்பத்தைப் போற்றிப் பெருக்கிக் காட்டுதல். பொதுவர்-பொதுமகளிர். நுழைகல்லா-நுழையாத. அறுவையர்-புடைவை விற்போர்; நெய்வோருமாம்.

இதுவுமது

54-65: பொன்னுரை................இடங்களும்

(இதன் பொருள்) பொன் உரை காண்போர் நன்மனை நறுகும்-பொன்னை உரைத்து அதன் மாற்றினை அறிந்து கூறுவோர் வாழுகின்ற அழகிய இல்லங்கள் அமைந்த தெருவும்; பல்மணி பகர்வோர் மன்னிய மறுகும்-பல்வேறு வகைப்பட்ட மாணிக்கம் முதலிய மணிகளை விற்கும் மணிவாணிகர் நிலைத்திருந்து வாழும் தெருவும்; மறையோர் அருந்தொழில் குறையா மறுகும்-வேதியர் தமக்குரிய ஓதலும் ஓதுவித்தலும் முதலிய அரிய தொழில் குறைபடாத தெருவும்; அரைசியல் மறுகும் அமைச்சியல் மறுகும்-அரசு ஆள்பவர் வாழுகின்ற தெருவும் அமைச்சியலோர் வாழுகின்ற தெருவும்; ஏனைப் பெருந்தொழில் செய் ஏனோர் மறுகும்-ஏனைய தானை நடத்துதல் முதலிய பெரிய தொழில்களைச் செய்கின்ற தானைத் தலைவர் முதலியோர் வாழுகின்ற தெருவும்; மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்-ஊர் மன்றங்களும் ஊரம்பலங்களும் முச்சந்தியும் நாற்சந்தியும்; புதுக்கோள் யானையும் பொற்றார் புரவியும் கதிக்கு உறவடிப்போர் கவின்பெறு வீதியும்-காட்டினின்றும் புதிதாகப் பிடித்துக் கொணர்ந்த யானைகளையும் பொன்னால் ஆகிய சதங்கை மாலை பூட்டிய குதிரைகளையும் அவ்வவற்றின் செலவிற்குப் பொருந்தப் பயிற்றும் யானைப்பாகரும் குதிரைப்பாகரும் வாழுகின்ற அழகுடைய வீதியும்; சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும்-மிக உயர்ந்து அருவி வீழ்கின்ற செய்குன்றங்களும்; வேணவாமிகுக்கும் விரைமரக்காவும்-தன்பால் புகுந்தவருடைய வேட்கையாகிய அவாவினை மிகுவிக்கும் இயல்புடைய நறுமண மலர்களை உடைய இளமரச் சோலைகளும்; விண்ணவர் தங்கள் விசும்பிடம் மறந்து நண்ணுதற்கு ஒத்த நல்நீர் இடங்களும்-தம்பால் வந்துற்ற தேவர்களும் தங்களுக்குரிய வானுலகத்தை மறந்து மீண்டும் வருவதற்குத் தகுந்த இன்பங்களை நல்கும் அழகிய நீர்நிலைகள் அமைந்த இடங்களும் என்க.

(விளக்கம்) பொன் உரை காண்டல்-பொன்னைக் கட்டளைக் கல்லின்கண் உரைத்து மாற்றறிதல். மணி-மாணிக்கம் முதலியன. மறையோர் தொழில்-ஓதல் ஓதுவித்தல் வேட்டம் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்னும் இவ்வறுவகைத் தொழிலுமாம். அரைசு-பெருநில மன்னரும் குறுநில மன்னரும்; ஏனை-எனை என முதல் குறுகியது; பெருந்தொழில் படைத்தொழில் முதலியன. மன்றம் பொதியில் என்பன ஊர்ப்பொது விடங்கள். இவ்விடங்களிலே ஊர் மக்கள் ஒருங்கு கூடியிருந்து வழக்காடுதல் அறங்கூறுதல் ஊர்ப்பொதுப் பணிகளை ஆராய்தல் முதலியன செய்வர். இவற்றுள் மன்றம் என்பது மரநிழலையுடைய வெளியென்றும் பொதியில் என்பது புதியவர் வந்து தங்கும் ஊர்ப்பொதுக் கட்டிடத்தை உடையது என்றும் கொள்க. பொதியிலில் அருட்குறியாகக் கல்தறிநட்டு அதனை வணங்குவதும் அக்கால வழக்கம்: இவற்றுள் தாதெரு மன்றம் என்னும் வழக்கானும், பாசிலை பொதுளியபோதி மன்றம் (சிலப்-23:79) என்பதனானும் மன்றம் என்பதன் இயல்பையும்,

கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்   (பட்டினப்-244-249)

என்பதனான் பொதியிலின் இயல்பையும் உணர்க. இக்காரணத்தால் இவற்றைச் சான்றோர் மன்றமும் பொதியிலும் என இணைத்தே கூறுதல் காணலாம். (முருகு-224; மணிமே-20:30.) சந்தி-முச்சந்தி; ஐஞ்சந்தியுமாம். சதுக்கம். இந்நகர வண்ணனை பெரும்பாலும் சொல்லாலும் பொருளாலும் சிலப்பதிகாரத்தில் இந்திர விழா வெடுத்த காதையில் பூம்புகார் நகர வண்ணனையையே ஒத்திருத்தல் காண்க. கதிக்குற வடித்தல்-போர் முதலியவற்றில் யானையும் புரவியும் செல்லுதற்குப் பொருந்துமாறு இவற்றின் நடையைத் திருத்திப் பயிற்றுதல். செய்குன்றம்-செயற்கை மலை. வேணவா-வேட்கையால் உண்டாகிய அவா. விரை மரம்-மணமலர் தரும் மரம்.

இதுவுமது

66-68 : சாலை...................வேடமொடு

(இதன் பொருள்) சாலையும் கூடமும் தமனிய பொதியிலும்-அறக்கோட்டமும் பொன்னாலியன்ற அறங்கூறும் அவையமும்; கோலம் குயின்ற கொள்கை இடங்களும்-இன்னோரன்ன சிற்பம் முதலியவற்றால் அழகு செய்யப்பெற்ற கோட்பாடமைந்த இடங்களும் ஆகிய இவற்றையெல்லாம்; கொண்ட வேடமொடு கண்டு மகிழ்வுற்று-அம்மணிமேகலை தான் முன்னர் மேற்கொண்ட மாதவன் வடிவத்தோடே சென்று கண்டு பெரிதும் மகிழ்ந்து என்க.

(விளக்கம்) சாலை-அறக்கோட்டம். கூடம் என்றது கனகம், வெள்ளி முதலியவற்றாலியன்ற கூடங்களை.

கண்ணெலாங் கவர்வன கனக கூடமும்
வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும்
தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ
மண்ணினா லியன்றில மதலை மாடமே  (சூளாமணி : நகர-7)

எனவருதலுமறிக. தமனியப் பொதியில் என்றதனால் மேலோர் இருந்து அறங்கூறும் மன்றம் என்பது பெற்றாம். பொன்னம்பலம் என்னும் வழக்கும் உணர்க. கொண்டவேடம்-மாதவன் உருவம். மணிமேகலை தான் மேற்கொண்ட வேடமொடு கண்டு மகிழ்வுற்று என எழுவாய் பெய்தும் மாறிக் கூட்டியும் கொள்க.

மணிமேகலை மாசாத்துவான் மாதவம் புரிவோனைக் காண்டலும் தன் வரலாறு உணர்த்தலும்

69-74 : அந்தர................பணிந்து

(இதன் பொருள்) அந்தரசாரிகள் அமர்ந்து இனிது உறையும் இந்திர விகாரம் என எழில் பெற்று-புகாரிடத்தே வானத்து இயங்கும் ஆற்றல் பெற்ற பவுத்தத் துறவிகள் தங்கி இனிதாக வாழுகின்ற இந்திரன் மனத்தால் இயற்றப்பெற்ற இந்திரவிகாரம் என்னும் பெயருடைய அரங்குகள் போன்று அழகெய்தி அவ்வஞ்சிமா நகரத்தே அமைந்ததும்; நவைஅறு நாதன் நல்அறம் பகர்வோர் உறையும் பள்ளி-குற்றமற்ற தலைவனாகிய புத்தர் திருவாய் மலர்ந்தருளிய நன்மை தரும் அறவுரைகளைச் செவியறிவுறுத்தும் துறவோர் வதிவதுமாகிய ஒரு தவப்பள்ளியைக் கண்டு; இறைவனை நல்லாள் புக்கு-முன்கையில் வளையணிதற்கியன்ற இளமையை உடைய அம்மணிமேகலை நல்லாள் அதனுட் புகுந்து அப்பள்ளியின்கண்; கோவலன் தாவத மாதவம் புரிந்தோன் பாதம் பணிந்து-தன் தந்தையாகிய கோவலனை ஈன்ற தந்தையாகிய மாசாத்துவான் கோவலன் மறைவின் பின் துறவியாய் அங்கு வந்து பெரிய தவஒழுக்கம் பூண்டிருப்பவனைக் கண்குளிரக் கண்டு அவனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி எழுந்து பின்னர் என்க.

(விளக்கம்) அந்தரசாரிகள்-தவவாற்றல் மிக்கு வானத்திலே இயங்கும் வன்மை பெற்ற துறவோர். இந்திர விகாரம் காவிரிப்பூம்பட்டினத்தில் புத்த சைத்தியத்தின்கண் அமைந்த ஏழு அரங்குகள். அவை வஞ்சியின்கண் பவுத்தத் துறவிகள் உறையும் பள்ளிக்கு உவமையாக எடுக்கப்பட்டன. இறைவனை நல்லாள் என்றது மணிமேகலையை. இங்ஙனம் கூறியது குறிப்பாக அவளது இளமையை விதத்தற் பொருட்டாம். கோவலன் தாதையாகிய மாசாத்துவான் துறவியாய் அங்கு வந்து தவம் புரிந்தோனைக் கண்டு வணங்கி என்பது கருத்து.

இதுவுமது

74-84 : தன்பாத்திர.........புகுந்ததும்

(இதன் பொருள்) தன் பாத்திர தானமும்-பின்னர்த் தன் மூதாதையாகிய அத்துறவிக்குத் தனது வரலாற்றைக் கூறுகின்ற மணிமேகலை தன் கையில் ஏந்தியுள்ள அமுதசுரபி என்னும் பிச்சைப் பாத்திரத்தினால் செய்யப்படும் அன்னதானத்தின் சிறப்பும்; தானப் பயத்தால் சாவக மன்னவன் ஊனம் ஒன்றி இன்றி-அந்த தானத்தைச் செய்த பயன் காரணமாக ஆபுத்திரன் சாவக நாட்டு மன்னவன் புண்ணியராசனாய்ப் பிழை ஒன்றும் நிகழா வண்ணம்; உலகு ஆள் செல்வமும்-உலகத்தை ஆளுகின்ற அரசச் செல்வம் பெற்ற சிறப்பும்; செல்வன் கொணர்ந்து அத்தீவகப் பீடிகை ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும்-செல்வனாகிய அச்சாவக மன்னனை அழைத்து வந்து மணி பல்லவம் என்னும் தீவின்கண் அமைந்த புத்த பீடிகையைச் சோர்வின்றிக் காட்டுதலாலே அம்மன்னவன் தன் பழம் பிறப்பினை உணர்ந்த செய்தியும்; உணர்ந்தோன் முன்னர் உயர்தெய்வம் தோன்றி-பிறப்புணர்ந்த அப்புண்ணியராசன் முன் உயர்ந்த பண்பமைந்த தீவதிலகை என்னும் தெய்வம் எழுந்தருளி; மனங்கவல் கொடுத்ததும் மாநகர் கடல் கொள-அத்தெய்வம் மனக்கவலையைத் தீர்த்து ஆறுதல் அளித்ததும் பெரிய நகரமாகிய காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொள்ளா நிற்ப அக்கடல்கோளால்; இறவாது அறவணவடிகளும் தாயரும் ஆங்குவிட்டு இப்பதிப்புகுந்தது கேட்டதும்-இறந்துபடாமல் அறவண அடிகளும் மாதவியும் சுதமதியும் ஆகிய தாயர் இருவரும் அப்பட்டினத்தைவிட்டு இவ்வஞ்சி மாநகரத்தின்கண் வந்து புகுந்த செய்தியை அத்தீவதிலகை என்னும் தெய்வம் கூறத்தான் கேட்டறிந்து கொண்ட செய்தியும்; சாவக மன்னன் தன் நாடு எய்த தீவகம்விட்டு இத்திருநகர்ப் புகுந்ததும்-சாவக மன்னனாகிய புண்ணியராசன் தனது நாட்டை அடையா நிற்பத் தான் அம்மணி பல்லவத் தீவைக் கைவிட்டு வேற்றுருக் கொண்டு இவ்வஞ்சியாகிய செல்வத்தலை நகரத்திலே புகுந்த செய்தியும் என்க.

(விளக்கம்) பாத்திரம்-அமுதசுரபி. தானப்பயம்-முற்பிறப்பிலே ஆபுத்திரனாக இருந்து இவ்வமுதசுரபியால் அன்னதானம் செய்த நல்வினைப்பயன் என்க. ஆபுத்திரன் சாவக மன்னவனாய்ப் பிறந்து என்க. செல்வன்:சாவக மன்னன். உணர்ந்தோன்: பெயர். கவல்-கவலை. மாநகர்-பூம்புகார். தாயார்-மாதவியும், சுதமதியும். இப்பதி-வஞ்சி நகரம். தீவகம்-மணிபல்லவம்.

இதுவுமது

84 - 92 : புக்கபின்................என

(இதன் பொருள்) புக்கபின் - இவ்வஞ்சி நகரத்தில் புகுந்த பின்னர்; அந்த பொய் உரு உடனே-யான் முன்னர்க் கந்திற் பாவை கூறியவாறு எடுத்துக் கொண்டிருந்த பொய்யாகிய அந்த மாதவன் வடிவத்தோடே; தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும்-சமயவாதிகள் உறைவிடம் சென்று வினவத்தகுந்த அளவைவாதி முதலிய சமயக்கணக்கர்களுடைய தத்துவங்களை வினவிக் கேட்டறிந்து கொண்ட செய்தியும்; அவ்வவர் சமயத்து அறிபொருள் எல்லாம்-அவ்வச்சமயக் கணக்கர் அவரவர் சமயம் சார்பாக அறிந்து கூறிய தத்துவம் எல்லாம்; செவ்விது அன்மையின் சிந்தை வையாததும்-தெளிவுடையன அல்லாமையால் அவற்றையெல்லாம் தான் தன்னெஞ்சத்தே கொள்ளாமல் கைவிட்டொழிந்த செய்தியும் பின்னர்; நாதன் நல்லறம் கேட்டலை விரும்பி-சிறந்த சமயத் தலைவனாகிய புத்தபெருமான் திருவாய் மலர்ந்தருளிய நன்மையுடைய அறங்களைக் கேட்டறிந்து கொள்ளுதலைப் பெரிதும் விரும்பி; மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும்-அவ்வறங் கூறுதலின்கண் சிறப்புமிக்க பெருந்துறவியாகிய அறவணவடிகளாரைத் தேடித் தான் அவ்விடத்திற்கு வந்த முறைமையினையும்; சொல்லினள் ஆதலின்-எடுத்து அம்மாசாத்துவானுக்கு அறிவித்தாள் ஆதலால் அது கேட்ட அம்மாதவனாகிய மாசாத்துவானும், வியத்தகும் இச்செய்திகளைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தவனாய்; தூயோய் நின்னை நான் கண்டது என் நல்வினைப்பயன் கொல் என-அம்மணிமேகலையை நோக்கி நங்காய் இவ்வாறெல்லாம் சிறத்தற்குக் காரணமான மனத்தூய்மை உடையோயே! நின்னை யான் இங்ஙனம் எளிதில் கண்டதற்குக் காரணம் யான் செய்த நல்வினைப் பயனேயாம் என்று அவளைப் பாராட்டி என்க.

(விளக்கம்) முன்னரே கந்திற்பாவை தனக்கறிவித்திருந்த வேற்றுரு என்பது தோன்ற அந்தப் பொய்யுரு எனச் சேய்மைச் சுட்டால் சுட்டினள். செவ்விது: பன்மை ஒருமை மயக்கம். நாதன் என்றது சமயத் தலைவர்களுள் தலைசிறந்தவன் என்பதுபட நின்றது. அவன் : புத்தபெருமான். மாதவன் என்றது அறவணவடிகளை. அவர் அறங்கூறுதலில் வல்லவர் என்பதனை மறவண நீத்த மாசறு கேள்வி அறவணவடிகள் அடிமிசை வீழ்ந்து..........உரவோன் அருளினன் எனத் தன் தாயாகிய மாதவி கூற்றாகவும் கேட்டிருந்தனள் ஆதலின் அம்மாதவனைத் தேடி வந்த வண்ணமும் என்றாளாயிற்று. மணிமேகலை இத்தகைய பேறு பெறுதற்குக் காரணம் அவளது மனத்தூய்மையே ஆதலின் அக்கருத்துத் தோன்ற, தூயோய் என்று விளித்தான். நல்லோரைக் காண்பதுவும் நன்றே என்பது பற்றி அங்ஙனம் காண்டற்கும் முன்னை நல்வினையே காரணம் என்பான், நின்னைக் கண்டது என் நல்வினைப்பயன் என்றான் கொல்; அசைச் சொல்.

மாசாத்துவான் மணிமேகலைக்குத் தன் வரலாறு கூறுதல்

93-102 : தையல்...........கேளாய்

(இதன் பொருள்) தையல் கேள் நின் தாதையும் தாயும் செய்த தீவினையின் செழுநகர் கேடு உற துன்பு உற விளிந்தமை கேட்டு-தவம் செய்த தவமாகிய தையலே! யான் ஈங்கு வரும் காரணமும் கேட்பாயாக! நின்னுடைய அன்புத் தந்தையும் தாயும் ஆகிய கோவலனும் கண்ணகியும் முற்பிறப்பில் செய்த தீவினை காரணமாக வளமிக்க மதுரை மாநகரம் தீக்கிரையாகி அரசிழந்து கேடெய்தும்படியும் யாமும் தாமும் பெரிதும் துன்புறும்படியும் இறந்த செய்தியைக் கேட்டு ஆற்றேனாய் அவலமுற்று; சுகதன் அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்-இவ் உலக நிலையாமை முதலிய மெய்யறிவு பெற்று அவ்வறிவு காரணமாகப் புத்தபெருமானுடைய அன்பினை முதலாகக் கொண்ட அருளறத்திற்குத் தகுதி உடையேன் ஆயினமையின்; மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து-இல்லின்கண் இருந்து செய்யும் வாழ்க்கையின் இன்பம் வறும் பொய் என்பதனை என் பட்டறிவினாலேயே அறிந்துகொண்டு; செல்வமும் யாக்கையும் தினைத்தனையாயினும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே-இம்மை வாழ்க்கைக்கு இன்றியமையாதன என்று கருதப்படுகின்ற செல்வமும் உடம்பும் உயிர் முகந்து கொண்டுவந்த வினை அளவில் நிற்பன அன்றி அவ்வினை ஒழிந்தால் ஒரு தினை அளவு பொழுதேனும் இவ்வுலகின்கண் நிலைத்திரா என்று நன்கு நெஞ்சத்தின்கண் உறுதியாக உணர்ந்து; மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன்-மாறுபாடில்லாத பவுத்த சமயங்கூறும் அறத்தை மேற்கொண்டு அந்நெறியில் பெரிய இத்தவத்தை மேற்கொண்டொழுகலானேன்; புரிந்த யான் இப்பூங்கொடி பெயர்ப் படூஉம் திருந்திய நல்நகர் சேர்ந்தது கேளாய்-அவ்வாறு ஒழுகிய யான் வஞ்சி என்னும் பூங்கொடியின் பெயரையுடைய அறத்தால் நன்கு திருந்திய அழகிய இந்த நகரத்தை எய்தற்குரிய காரணமும் இனிக் கூறுவேன் கேட்பாயாக என்றான் என்க.

(விளக்கம்) தையல்-அன்புடையோர் மகளிரை விளித்தற்கியன்தோரின் சொல். தன்னினும் கோவலன் கண்ணகி இருவரும் மணிமேகலைக்கு அன்புரிமை மிக்கார் என்பது தோன்ற மகனும் மருகியும் என்னாது நின் தாதையும் தாயும் என்றான். மாசாத்துவான் பேரருளாளன் ஆதலின் தனது துன்பத்திற்குக் காரணம் தன் மகனும் மருகியும் இறந்தமையினும் அவர் காரணமாகச் செழுநகர் கேடுற்றமை கேட்டதே முதன்மை உடைத்து என்பது தோன்றச் செழுநகர் கேடுற விளிந்தமை என்றான். இங்ஙனமே சிலப்பதிகாரத்தினும் மாசாத்துவானுடைய துறவறத்தைச் செங்குட்டுவனுக்கு அறிவிக்கின்ற மாடல் மறையோன் கூற்றாக-

மைந்தற் குற்றது மடந்தைக் குற்றதும்
செங்கோல் வேந்தற் குற்றதுங் கேட்டுக்
கோவலன் றதை கொடுந்துய ரெய்தி
மாபெருந்த தானமா வான்பொரு ளீத்தாங்
கிந்திர விகார மேழுடன் புக்காங்
கந்தர சாரிக ளாறைம் பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று
துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும்   (27:88-65)

எனவரும் பகுதி ஒப்புநோக்கி உவத்தற்பாலதாம். சுகதன்-புத்தன். யான் இயல்பாகவே அன்புகொள் அறத்திற்கு எனினுமாம். அருகன்-அணுக்கமானவன். தகுதி உடையோன் எனினுமாம். மலையா அறம்-மாறுபடாத அறம் என்றது அருளறத்தை. என்னை?

நல்லாற்றா னடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை (குறள்-242)

எனவரும் பொய்யாமொழியும் காண்க.

இனி, முன்பின் மலையா மங்கல மொழி என அவ்வறம் போற்றப்படுதலும் உணர்க. (மணி-30: 261). கொடி-வஞ்சி. தான் வருதற்கு இதுவும் ஒரு காரணம் என்பது தோன்ற, திருந்திய நன்னகர் என்றான்.

இதுவுமது

103-113 : குடக்கோ..........இருந்துழி

(இதன் பொருள்) குடக்கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை விடர்ச்சிலை பொறித்த வேந்தன்-முத்தமிழ் நாட்டினுள் வைத்து மேலை நாட்டு மன்னனும் சேரர்குடித் தோன்றலும் குட்டநாட்டார் கோவாகிய பெருந்தகையும் வடவரை வென்று வான்றோய் இமயத்தின்கண் தனது இலச்சினையாகிய வில்லினைப் பொறித்த வேந்தனும் ஆகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்; முன்னாள் துப்பு அடு செவ்வாய் துடி இடையாரொடும் இப்பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள்-முற்காலத்தே ஒருநாள் பவளம் போன்ற சிவந்த வாயையும் உடுக்கை போன்ற இடையினையும் உடைய இளமகளிரோடும் விளையாடுதற் பொருட்டு இந்தப் பூம்பொழிலிலே புகுந்து ஆடி ஆங்கோரிடத்தே இருந்த பொழுது; இலங்காதீவத்து சமனொளி என்னும் சிலம்பினை எய்தி வலங்கொண்டு மீளும் தரும சாரணர் தங்கிய குணத்தோர்-இலங்கை என்னும் தீவின்கண் புத்தபெருமான் திருவுரு அமைந்த சமனொளி என்னும் பெயரையுடைய மலையினை அடைந்து அதனை வலஞ் செய்து வணங்கி மீள்பவரும் தரும சாரணரும் நிலைபெற்ற அருட்பண்புடையோரும்; ககனத்து கருமுகில் படலத்து இயங்குவோர் புரையோர் தாமும்-வானத்தில் கரிய முகில் குழாத்தினூடே வடதிசை நோக்கிச் செல்பவருமாகிய மேன்மையுடைய அத்துறவோர் தாமும்; அரைசற்கு அவ்வழி ஏது நிகழ்தலின்-அச்சேரமன்னனுக்கு அப்பொழுது ஆகூழ் நிகழ்தலாலே, இப்பூம்பொழில் இழிந்து கல் தலத்து இருந்துழி-அம்மன்னவன் தங்கியிருந்த இந்தப் பூம்பொழிலின்கண் வானத்தினின்றும் இறங்கிவந்து ஒரு கற்பாறையின் மேல் அமர்ந்திருந்த பொழுது என்க.

(விளக்கம்) குடக்கோவும் சேரலனும் பெருந்தகையும் ஆகிய வேந்தன் என்க. இவனை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என வரலாற்று நூலோர் கூறுவர். இவன் வரலாறு பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தில் காணப்படும். இவனைச் சோழன் (குளமுற்றத்துத் துஞ்சிய) கிள்ளி வளவன் வென்றான் எனக் கூறுங்கால் மாறோக்கத்து நப்பசலையார் இச்சேரனை-

பொன்படு நெடுங்கோட் டிமையம் சூட்டியவேம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் (புறநா.39)

என, பெருமிதம் படப்பேசுவர்; இளங்கோ விடர்ச்சிலை பொறித்த விறலோன் என்று ஓதுவர். துப்பு-பவளம். சூடி-உடுக்கை. சமனொளி என்பது மலையின் பெயர். தரும சாரணர் என்பவர் யாண்டும் சென்று மக்களுக்குப் புத்தர் அறத்தை அறிவுறுத்தும் தொண்டு பூண்ட துறவோர் ஆவர். குணம் என்றது அருள் மேனின்றது. வலங்கொண்டு மீளும் சாரணர் வடதிசை நோக்கிக் ககனத் தியங்குவோர் என்க. புரையோர்-துறவோருள்ளும் உயர்ந்தோர் என்பதுபட நின்றது. அத்துறவோர் இப்பூம்பொழிலில் இறங்க வேண்டும் என விரும்பி இறங்கினாரிலர். அரசன் ஆகூழே அவரை இறங்கும்படி செய்தது என்பது கருத்து. கற்றலம்-கற்பாறையாகிய இடம்.

இதுவுமது

113-122 : காவலன்..........அந்நாள்

(இதன் பொருள்) காவலன் முன் தவம் உடைமையின் முனிகளே விரும்பி ஏத்தி பங்கயச் சேவடி விளக்கி-அத்துறவோர் வரவுணர்ந்த அச்சேரமன்னன்றானும் முற்பிறப்பிலே செய்த தவப்பயன் காரணமாக அம்முனிவர்களைப் பெரிதும் விரும்பிப் புகழ்ந்து வழிபாடு செய்து அம்முனிவருடைய தாமரை மலர் போன்ற சிவந்த அடிகளை நீரால் கழுவி; பான்மையின் அங்கு அவர்க்கு அறுசுவை நால்வகை அமிழ்தம் பாத்திரத்து அளித்து-சிறந்த பண்பினோடு அவ்விடத்தேயே அம்முனிவர்களுக்கு ஆறுவகைச் சுவையோடு கூடிய நால்வேறு வகைப்பட்ட உணவுகளையும் துறவோர்க்கு அளிக்கத் தகுந்த உண்கலத்திலே பெய்து கொடுத்து உண்பித்து; பல பல சிறப்பொடு வேந்து அவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலில்-பின்னரும் அம்முனிவர்களுக்குப் பலப்பல சிறப்புகளையுஞ் செய்து அம்மன்னன் தன் அரசியல் சுற்றத்தாரோடும் கூடி வாழ்த்தி வணங்குதலாலே அம்முனிவர்களும்; இறைவன் செவி முதல்-அவ்வேந்தனுடைய செவியின்கண்; அறத்தகை முதல்வன் அருளிய-அறத்தின் திருவுருவமாகிய தமது சமய முதல்வன் புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளிய; பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும் வாய்மை இன்ப ஆர் அமுது-உயிர்களுக்குப் பிறப்பின்கண் எய்தும் துன்பத்தின் இயல்பும் அவை பிறவாமையுற்ற பொழுது எய்தும் இன்பத்தின் இயல்பும் இவற்றிற்குரிய காரண காரியங்களின் இயல்பும் ஆகிய மெய்க்காட்சிகள் என்னும் இன்பமேயான பெறுதற்கரிய அறவமுதத்தை; துன்பம் நீங்கச் சொரியும் அந்நாள்-அனாதி காலமாகத் தொடர்ந்து வருகின்ற அம்மன்னவனுடைய துன்பமெல்லாம் நீங்கிப்போம்படி அம்முனிவர்கள் சொற்பொழிவு செய்யும் அந்த நாளிலே என்க.

(விளக்கம்) காவலன்-இமயவரம்பன். முனிகள்-தரும சாரணர். பான்மை-பண்புடைமை. அறுசுவை நால்வகை அமிழ்தம்-கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என்னும் ஆறுசுவையும் பொருந்தச் சமைத்த உண்பனவும், தின்பனவும், நக்குனவனவும், பருகுவனவுமாகிய நால்வகை உணவு. பிறவா இன்பம்-பிறவாமையினால் எய்தும் வீட்டின்பம். அறத்தகை முதல்வன் என்றது புத்தனை. வாய்மை-நால்வகை உண்மைகள். அவையாவன:

துன்பம் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய வுரையே வாய்மை நான் காவது  (மணிமே, 30-186-188)

என்பன,

இறைவன்-அரசன்.

இதுவுமது

123-136 : நின்பெரு..............இருந்து

(இதன் பொருள்) நின்பெருந் தாதைக்கு ஒன்பது வழிமுறை முன்னோன் கோவலன்-உன்னுடைய பேரன்புசால் தந்தையாகிய கோவலனுக்கு ஒன்பது தலைமுறைக்கு முன்னம் நங்குலத்திலே கோவலன் என்பான் ஒருவன் வாழ்ந்திருந்தான், அவன்; மன்னவன் தனக்கு நீங்காக் காதல் பாங்கனாதலின்-அவ்வரசனுக்கு ஒருபொழுதும் ஒழியாத அன்புடைய தோழனாய் இருந்தமையால்; தாங்கா நல்அறம் தானும் கேட்டு-ஏற்றுக் கோடற்கரிய நன்மை மிக்க அவ்வறவுரைகளைத் தானும் ஆர்வத்துடன் கேட்டமையால் மெய்யுணர்வு பெற்று; முன்னோர் முறைமையில் படைத்ததை அன்றி தன்னான் இயன்ற பலகோடிதனம்-தன் முன்னோர்கள் அறநெறி நின்று ஈட்டி வைத்த பொருளை அல்லாமலும் தன்னால் ஈட்டப்பெற்ற பற்பல கோடியாகிய நிதியங்களையும்; எழுநாள் எல்லையுள் இரவலர்த்து ஈத்து-ஒரு கிழமை முடிவதற்குள் வறியவர்க்கு வாரி வழங்கி விட்டு; தொழுதவம் புரிந்தோன்-உலகம் தொழுவதற்குக் காரணமான தவத்தை மேற்கொண்டவன்; சுகதற்கு வான் ஓங்கு சிமையத்து இயற்றிய வால் ஒளி சயித்தம்-புத்தனுக்கு வானுற உயர்ந்த மலை உச்சியில் எடுத்த வெள்ளிய ஒளியையுடைய திருக்கோயில்; ஈனோர்க்கு எல்லாம் இடர்கெட இயன்றது-இவ்வுலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் துன்பம் தீரும்படி தெய்வத்தன்மை உடையதாகத் திகழ்கின்றதாதலின்; கண்டு தொழுது ஏத்துங் காதலின் வந்து-அதனைக் கண்ணாரக் கண்டு தொழுது ஏத்துங் காதலின் வந்து-அதனைக் கண்ணாரக் கண்டு தொழுது வாழ்த்த வேண்டும் என்றெழுந்த அன்பினாலே இந்நகரத்திற்கு வந்து மீண்டும் நம் மூதூருக்குச் செல்லக் கருதினேனாக அக்கருத்தினை அறிந்த; இத்தண்டாக் காட்சித் தவத்தோர் அருளி-இங்குறைகின்ற தடையில்லாத மெய்க்காட்சியையுடைய துறவோர்கள் என்பால் அருள் கூர்ந்து; காவிரிப்பட்டினம் கடல் கொளும் என்ற-நீ செல்லுதற்குக் கருதுகின்ற காவிரிப்பூம்பட்டினமானது கடலால் கொள்ளப்படும் என்றறிவுறுத்த; அத்தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது-அம்முனிவருடைய வாய்மையேயாகிய அவ்வறிவுரையைக் கேட்டுத் தெளிந்தமையாலேயே யான் இந்நகரத்திலே இருப்பது என்றான் என்க.

(விளக்கம்) நமது மரபில் ஒன்பது தலைமுறைக்கு முன்னர் உன் தந்தை பெயருடன் ஒருவனிருந்தான்; அவன் அரசனுக்கு நண்பன். அரசன் அறம் கேட்குங்கால் தானுங் கேட்டு மெய்யுணர்வு பெற்று இரவலர்க்கு ஈத்துத் தவம் புரிந்தான். அவன் மலை உச்சியில் புத்தனுக்கு ஒரு கோயில் எடுத்திருந்தான். அக்கோயில் இவ்வுலகத்தார் இடர்தீர்ப்ப தொன்றாய் இருந்தது. அதனைத் தொழ ஈண்டு வந்தேன், மீளுங்கால் தவத்தோர் காவிரிப்பூம் பட்டினம் கடல் கோட்படும் என்றனர். அதனைத் தெளிந்தமையே யான் இங்கிருத்தற்குக் காரணம் என்றான் என்க.

பெருந்தாதை-அன்பினால் பெரிய தாதை என்க. தாங்காத என்னும் பெயரெச்சத்தீறு கெட்டது. முறைமை-அறநெறி. எழுநாள் எல்லை-என்பது ஓர் உலகவழக்கு. விரைந்து செய்தான் என்பது கருத்து. எழுநாள் எல்லையுள் என்னும் வழக்கு இப்பொழுதும் (ஒரு வாரத்திற்குள்) ஒரு கிழமைக்குள் என வழங்குதல் உணர்க. வால் ஒளிச் சயித்தம் என்றமையால் வெள்ளியாலியன்ற சயித்தம் எனக்கோடலுமாம். தண்டாக் காட்சி என்றது முக்காலமும் உணரும் மெய்க்காட்சியை. தூஉரை-மெய்யுரை.

இதுவுமது

137-147 : இன்னும்............கேட்குவன்

(இதன் பொருள்) நல்நெறி மாதே பூங்கொடி இன்னுங் கேளாய்-நல்லற நெறியிலே செல்லும் ஆற்றல் வாய்ந்த நங்கையே பூங்கொடி போலும் மெல்லியலோயே இன்னும் யான் கூறுவன் கேட்பாயாக; தீவினை உருப்ப சென்ற நின் தாதையும் முன்செய் தவப்பயத்தால் தேவரில் தோற்றி-முன்செய் தீவினை உருத்து வந்து தன்பயனை ஊட்டுதலாலே கொலை உண்டுபோன நின் தந்தையாகிய கோவலனும் முன் செய்த தவப்பயனால் போக பூமியில் தேவரில் ஒருவனாகத் தோன்றினானேனும் அப்பயன் முடிவுற்றபின்; ஆங்கு அத்தீவினை இன்னும் துய்த்து-அம்மதுரையிடத்தே ஊட்டிக் கழிந்த அத்தீவினையின் எச்சத்தை மீண்டும் இந்நிலவுலகத்தே பிறந்து துய்த்துக் கழித்த பின்னர்; முன் அவன் போதியின் நல்லறம் தாங்கிய தவத்தால்-முன்பு அக்கோவலன் மெய்யறிவினால் நல்ல அறங்களை மேற்கொண்டொழுகிய தவங்காரணமாக; தான் தவம் தாங்கி கபிலையம்பதியில் காதலி தன்னோடு நாதன் நல்லறம் கேட்டு வீடு எய்தும் என்று-தானே அத்தவத்தை மேற்கொண்டு கபிலை நகரத்தில் தன்னை ஒருபொழுதும் பிரியாத காதலியாகிய கண்ணகியோடு கூடிப் புத்தனுடைய நல்லறங்களைக் கேட்டு வீட்டுலகம் புகுவான் என்னும்; அற்புதக் கிளவி அறிந்தோர் கூற-அற்புதமான மொழியை அறியும் திறம் படைத்த துறவோர் கூறுதலாலே; தோகை சொல் பயன் உணர்ந்தேன்-மயில் போல்வாய் அவர் கூறிய சொல்லின் பயன் வாய்மையேயாம் என்று உணர்ந்துள்ளேன்; யானும் அந்நாள் ஆங்கு அவன் அறநெறி கேட்குவன்-யானும் முனிவர் கூறிய அந்தக் காலத்திலே அக்கபில நகரத்தில் அப்புத்தர் கூறும் அறங்கேட்டு வீடெய்துவேன் காண் என்றான் என்க.

(விளக்கம்) நன்னெறி மாதே என்றது அவளுடைய ஆற்றலைப் பாராட்டியபடியாம். தீவினை யுருப்பச் சென்ற நின்றதை என்றது இறந்துபோன நின் தாதை என்றவாறு. முற்செய் தவப்பயத்தால் தேவரிற்றேற்றி என மாறுக. ஆங்கு அத்தீவினை என்றது மதுரையில் உருத்துவந்து ஊட்டிய தீவினை யொழிய எஞ்சிய அத்தீவினையே இன்னும் நிலத்தில் பிறந்து துய்த்து என்க. பூங்கொடி: விளி, முன் அவன் என்று கண்ணழித்துக் கொள்க. இதனாற் கூறியது கோவலன் முன்னொரு பிறப்பில் புத்தன் போதியின் கீழ் இருந்து சொன்ன நல்லறம் கேட்டு அதனை மேற்கொண்டு ஒழுகிய தவப்பயன் காரணமாகத் தானே தவந்தாங்கி மீண்டும் இனியொரு பிறப்பில் காதலியோடு அக்கபில நகரத்தில் நாதன் நல்லறம் கேட்பன் என்றும் வீடெய்துவன் என்றும் அறிவுறுத்தபடியாம். புத்தர் காலந்தோறும் பிறந்து அறம் உரைத்தலுண்மையின் முன்னும் ஒரு புத்தன்பால் அறங்கேட்டவன் அதன் பயனாகப் பின்னும் இனித் தோன்றும் புத்தன்பால் அறங்கேட்டு வீடெய்துவன் என்பது கருத்தாகக் கொள்க. இவ்வுண்மையை-

இறந்த காலத் தெண்ணில் புத்தர்களுஞ்
சிறந்தருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது
ஈரறு பொருளி னீந்தநெறி (30:14-16)

என்பதனானு மறிக.

இனி இப்பகுதிக்கு இக்கருத்துணராது கூறும் உரை முன்பின் முரணிய போலியுரையாதல் உணர்க.

தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
யஃதிலார் மேற்கொள் வது  (குறள்-242)

என்பதுபற்றி முன் தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி என்றார். இனி, கபிலையம்பதியில் பிறந்த நாதனாகிய புத்தனுடைய அறத்தைக் கேட்டு வீடெய்தும் எனக் கோடலுமாம். அற்புதக் கிளவி பின் நிகழ்வனவற்றை அறிந்து கூறும் கிளவி என்க. தோகை: விளி.

இதுவுமது

148-154 : நின்னதி...........படர்ந்தனர்

(இதன் பொருள்) நின்னது தன்மை அ நெடுநிலை கந்தில் துன்னிய துவதிகன் உரையின் துணிந்தனை அன்றே-இனி நினக்கு நிகழவிருக்கும் எதிர்கால நிகழ்ச்சியின் தன்மையை நீதானும் சம்பாபதியின் கோட்டத்தில் நின்ற அந்த நெடிய நிலையினையுடைய தூணில் உறைகின்ற துவதிகன் என்னும் கடவுட் பாவை உனக்குரைத்தமையால் அறிந்துள்ளனை அல்லையோ? அங்ஙனம் அறிந்த செய்தியை எனக்கு; தவநெறி அறவணன் சாற்றக் கேட்டனன்-தவநெறி நின்றொழுகும் அறவணவடிகள் கூறக் கேட்டறிந்துளேன்; ஆங்கு அவன் தானும் நின் அறத்திற்கு ஏது பூங்கொடி கச்சிமா நகர் ஆதலின்-அவ்வறவண அடிகளார் நினது அறத்திற்கு ஏது நிகழ்ச்சிக்குரிய இடம் பூங்கோடி போல்வாய் அக்கச்ச மாநகரமே ஆதலின் அதனை முன்னரே உணர்ந்து; மற்று அம்மாநகர் மாதவன் பெயர்நாள் பொற்றொடி தாயரும் அப்பதிப் படர்ந்தனர்-அந்தக் கச்சிமா நகரத்திற்கு நின்பொருட்டுப் பெரிய தவத்தையுடைய அவ்வறவணவடிகளார் இந்நகரத்தினின்றும் அக்கச்சி மாநகரத்திற்கு சென்ற காலத்தில் நின்னுடைய தாயராகிய மாதவியும் சுதமதியும் அவரோடு அக்கச்சி மாநகரத்திற்குச் சென்றனர் என்றான் என்க.

(விளக்கம்) துவதிகன்-சம்பாபதியின் கோட்டத்துக் கந்திற் பாவை. கந்திற்பாவை நினக்கு வருவதுரைத்ததனை. அறவணன் சாற்ற யான் கேட்டேன் என்றவாறு. ஏது-ஏது நிகழ்ச்சி. அஃதாவது ஊழ்வினை உருத்து வந்து தன் பயனை ஊட்டும் நிகழ்ச்சி. நின் ஏது நிகழ்ச்சிக்கு இடமாகிய கச்சி நகரத்திற்கு அறவணன் நின் பொருட்டே சென்றனன் என்பது கருத்து. பொற்றொடி: விளி.

மாசாத்துவான் மணிமேகலையை வேண்டுதல்

155-162 : அன்னதை..........வணங்கி

(இதன் பொருள்) அன்னதை அன்றியும் அணி இழை கேளாய்-யான் உனக்குக் கூறிய அச்செய்தியை அல்லாமலும் யான் உனக்கு அறிவுறுத்த வேண்டிய செய்தியும் ஒன்றுளது, மகளிர்க்கெல்லாம் அணிகலன் போல்பவளே அதனையும் கூறுவேன் கேட்பாயாக, அஃதென்னையெனின்; பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து-பொன் மதில் சூழ்ந்த காஞ்சி மாநகரமும் அதனைச் சூழ்ந்த நாடும் அழகு கெட்டு; மன் உயிர் மடிய மழைவளம் காத்தலின்-அங்கு நிலைபெற்ற உயிர்கள் உணவின்றி இறந்தொழியும்படி மழையானது தான் செய்யும் வளத்தைச் செய்யாதொழிதலின்; அந்நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் இன்மையின் இந்நகர் எய்தினர் காணாய்-அம்மாநகரத்திலே துறவோர்க்கு உண்டி கொடுப்போர் இல்லாதொழிந்தமையின் அத்துறவோரெல்லாம் இடபொழுது இவ்வஞ்சி நகரத்தில் வந்து குழுமி இருக்கின்றனர் காண்; ஆருயிர் மருந்தே அ நாட்டு அகவயின் கார் எனத் தோன்றி காத்தல் நின்கடன் என-இவ்வாறு பசிப்பிணியுழந்து சாதலுறும் அரிய உயிரினங்களுக்கு அமிழ்தத்தைப் போன்ற நீ இப்பொழுது அந்தக் காஞ்சி நாட்டகத்தில் முகில் போலத் தோன்றி அவற்றின் பசிப்பிணி அகற்றிக் காப்பது நினக்குக் கடமைகாண் என்று; அருந்தவன் அருள ஆயிழை வணங்கி-செய்தற்கரிய தவத்தை மேற்கொண்டவனாகிய அம்மாசாத்துவான் திருவாய்மலர்ந்தருள அது கேட்ட மணிமேகலை அவ்வேண்டுகோட் கிணங்கி அவனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி விடை கொண்டவளாய் என்க.

(விளக்கம்) அணி இழை-அணி இழை போல்வோய் என்க. மாதர் குலத்திற்கெல்லாம் அணிகலன் போல விளங்குதலின் இவ்வாறு விளித்தான். காஞ்சி நாடு-காஞ்சி நகரத்தைத் தலைநகராகக் கொண்டமைந்த நாடு-அஃதாவது தொண்டை நாடு. இவ்வேண்டுகோளால் அவனது அருட்பண்பு விளக்கமாம். இவன் இல்லறத்தினும் வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் இயல்புடையவனாய் இருந்தமை சிலப்பதிகாரத்தில் காணப்படும். துறவியான பின் இவன் அருள் எவ்வுயிர்மாட்டும் பரந்து பட்டுச் செல்லுதலை ஈண்டுணர்க. இவ்வாறு ஆக்கமுறுவது உயிர்க்கியல்பு. இதனை, அருளொடு புணர்ந்த அகற்சி என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். மாதவர்க்கும் ஐயம் இடுவோர் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கதெனக் கொண்டு அந்நகரின் வறுமை மிகுதி உணர்த்தினர் எனக் கோடலுமாம். ஆருயிர் மருந்தே என்று விளித்தான் இச்செயற்கரிய செயல் செய்தற்குரிய ஆற்றலும் கருவியும் நின்பால் உள என்றுணர்த்துதற்கு. பவுத்தத் துறவிகளுக்கு இதுவே தலையாய கடன் என்பான் நின் கடன் என்றான். கைமாறு வேண்டா கடப்பாடு என்பவாகலின் அவ்வாறாகிய கார் எனத் தோன்றி என்றான். மழை கரந்தமையான் உண்டான இத்துன்பத்தைத் துடைத்தற்கு நின்னாலேயே இயலும் என்பான், கார் எனத் தோன்றி என்றான் எனினுமாம். இதனால் போந்தது, உலகு புரப்பதற்கு மாரி மட்டும் உளதன்று; நீயும் உளை எனப் புகழ்தல் என்க. ஆயிழை-அதற்குடன்பட்டு வணங்கி என்க.

மணிமேகலை வஞ்சி நகரத்தினின்றும் வானத்தியங்கிக் காஞ்சி மாநகரத்தை எய்துதல்

163-176 : திருந்திய...........எய்தலும்

(இதன் பொருள்) திருந்திய பாத்திரம் செங்கையின் ஏந்தி-அழகிய அமுதசுரபி என்னும் பாத்திரத்தை அன்னம் வழங்கிச் சிவந்துள்ள தன் கையில் ஏந்திக் கொண்டு; கொடி மதில் மூதூர் குடக்கண் நின்று ஓங்கி வடதிசை மருங்கின் வானத்து இயங்கி-வெற்றிக்கொடி உயர்த்தப்பட்ட மதிலையுடைய பழைய நகரமாகிய வஞ்சி நகரத்தின் மேற்றிசையில் நின்றும் வானின்கண் எழுந்து அந்நகரின் வடதிசைப் பக்கலிலே அவ்வானத்தின் வழியாக வலமாகச் சென்று; தேவர் கோமான் காவல் மாநகர் மண்மிசைக் கிடந்தென வளந்தலை மயங்கிய-தேவேந்திரனுடைய காவலமைந்த பெரிய நகரமாகிய அமராவதி நிலத்தின்கண் இழிந்து எல்லா வளங்களும் தன்பாலே பொருந்தும்படி பண்டு கிடந்த; பொன் நகர் வறிதா புல் என்று ஆயது கண்டு உளங்கசிந்த ஒள் தொடி நங்கை-அழகிய அக்காஞ்சி மாநகரம் மழைவளம் காத்தலின் பாழ்பட்டதாய்க் காட்சிக் கின்னததாய்ப் புற்கென்று மாறியதனைப் பார்த்து இரக்கத்தால் உள்ளம் உருகிய ஒளி உடைய பொன் வளையல் அணிதற்கியன்ற பெண்ணினத்தில் தலைசிறந்த அம்மணிமேகலை; பொன் கொடி மூதூர் புரிசை வலங்கொண்டு-அழகிய கொடியாடுகின்ற பழைய நகரமாகிய அத்தலைநகரத்தின் மதிலையும் வலம் செய்து; நடுநகர் எல்லை நண்ணினள் இழிந்து-அந்நகரத்தின் நடுவிடத்தின் நேராக எய்தி நிலத்தில் இறங்கி அவ்விடத்தினின்றும்; கழல்தொடு கிள்ளி துணை இளம் கிள்ளி-வீரக்கழல் கட்டிய சோழ மன்னனாகிய கிள்ளி என்பானுடைய தம்பி இளங்கிள்ளி என்பவன்; செம்பொன் மாசிலை திருமணி பாசடை பைம்பூம் போதி பகவற்கு இயற்றிய-சிவந்த பொன்மயமான பெரிய கிளைகளையும் அழகிய மரகதமணி போன்ற நிறமுடைய பசிய இலைகளையும் புதிய மலர்களையும் உடைய அரசமரத்தின் கீழிருந்து அறங்கூறிய புத்தபெருமானுக்கு எடுத்த; சேதியம் தொழுது தென்மேற்காக தாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும்-திருக்கோவிலையும் வலம் வந்து கைகூப்பித் தொழுது வணங்கி அக்கோயிலினின்றும் தென் மேற்றிசையில் சென்று ஆங்குள்ள பூந்துகள் உதிர்ந்து நிலத்தை அழகு செய்யும் பூம்பöõழிலின்கண் புகுந்து உறையா நிற்பவும்; என்க.

(விளக்கம்) பாத்திரம்-அமுதசுரபி. காஞ்சி நகரத்தில் பசியால் மடியும் மன்னுயிரை ஓம்புதற்கு அதுவே கருவியாகலின் அதனைத் திருந்திய பாத்திரம் என விதந்தார். அன்னம் வழங்கிச் சிவந்த கை என்க. மூதூர்-வஞ்சி நகரம். குடக்கண்-மேற்குப் பக்கம். நகரத்தின் மேற்குப் பக்கத்திலிருந்து வானத்தில் உயர்ந்து அக நகர்க்கு நேரே வான்வழி இயங்காமல் வடக்கே சென்று அந்நகரத்தை வலம் செய்து வான் வழியே இயங்கினள் என்றவாறு. என்னை? அவ்வஞ்சி, கற்புத்தெய்வத்தின் திருக்கோயிலையும் புத்த சைத்தியத்தையும் அறம் பகர்வோர் உறையும் பள்ளியையும் இன்னோரன்ன சிறந்த இடங்களைத் தன்பால் கொண்டிருத்தலான் அங்ஙனம் வலம் செய்து போதல் வேண்டிற்று என்க. தேவர்கோமான்..........பொன்னகர் என்னுந்துணையும் மணிமேகலை கூறாக அந்நகரம் மழைவளம் காத்தற்கு முன்பிருந்த நிலைமையை நூலாசிரியர் நம்மனோர்க்கு அறிவுறுத்தபடியாம். இதனோடு,

ஆயிரங் கண்ணோ னருங்கலச் செப்பு
வாய்திறந் தன்ன மதிலக வரைப்பின்  (சிலப்-14: 68-69)

எனவும்,

அளந்து கடையறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ளுலகம் கவினிக் காண்வர
மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை  (மதுரை-கா : 697-69)

எனவும் பிற சான்றோர் கூற்றுகள் ஒப்புநோக்கற் பாலன. மாசாத்துவான் கூறியபடி அப்பொன்னகர் வறிதாப் புல்லென்றாயது கண்டு மணிமேகலை உளங் கசிந்தனள் என்க. அவளது அருளறத்தின் பெருமை அக்கசிவினால் அறியப்படும். அந்நகரமும் புத்த சைத்தியமும் பிறவும் தன்பாற் கொண்டுள்ளமையின் அதனையும் வலங்கொண்டு அகநகரம் புகுந்தனள் என்பது கருத்து. துணை-தம்பி. கிள்ளி-சோழமன்னன் ஒருவன். இளங்கிள்ளி அவன் தம்பி. செம்பொன்.......போதி எனவரும் இதனோடு-சுடர் மரகதப் பாசடைப் பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும், போதி (வீர. யாப்பு-11, மேற்கொள்) எனவரும் செய்யுட்பகுதியை ஒப்புநோக்குக. போதிப் பகவன் என்றது புத்தனை. சேதியம்-சைத்தியம்; கோயில்.

மணிமேகலை வருகையைக் கஞ்சுகன் கூறக்கேட்ட இளங்கிள்ளி மகிழ்ந்து அவளைக் காண விழைதலும் கருதுதலும்

177-187 : வையம்..........சென்று

(இதன் பொருள்) கஞ்சுகன் வையங் காவலன் தன்பால் சென்று கைதொழுது இறைஞ்சி உரைப்போன்-மணிமேகலையின் வருகையை யுணர்ந்த கஞ்சுகமகன் ஒருவன் உலகங்காக்கும் மன்னவனாகிய இளங்கிள்ளியின்பால் விரைந்து சென்று கை குவித்துத் தொழுது தான் வந்த காரியம் கூறுபவன் வேந்தர் பெருமானே; கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் நாவலம் தீவில் தான் நனிமிக்கோள்-கோவலனுடைய மகளும் பவுத்தத் துறவோர் மேற்கோடற்குரிய அருளறமாகிய குண விரதத்தை மேற்கொண்டொழுகுபவளும் இந்த நாவலந்தீவின்கண் இதுகாறும் தோன்றிய மகளிருள் வைத்துத் தனக்குவமையாவார் யாருமில்லாத சிறப்புடையவளும் ஆகிய மணிமேகலை இப்பொழுது; மாமழை போல் அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு தங்காது இப்பதி தரும தவ வனத்தே வந்து தோன்றினள் என-இவ்வற்கடக் காலத்தில் கரிய மழை முகில் வந்தாற் போலத் தனது அகங்கையில் ஏந்திய அமுதசுரபியென்னும் அத்தெய்வத்தன்மை பொருந்திய பாத்திரத்தோடு வேறெவ்விடத்தும் தங்கியிராமல் இக்காஞ்சிமாநகரத்தின் கண் அறங்கேட்கும் தவவனமாகிய பூம்பொழிலின்கண் தானே வந்து புகுவாளாயினள் என்று பெரிதும் மகிழ்ந்து அறிவிப்ப; மன்னனும் விரும்பி கந்திற்பாவை கட்டுரை எல்லாம் வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி-அது கேட்ட வேந்தனும் அவள் வரவினை மிகவும் விரும்பி என் திறத்திலே கந்திற்பாவை கூறிய பொருள் பொதிந்த மொழியெல்லாம் வாய்மையாக நிகழ்கின்றன என்று அக்கந்திற்பாவையை வாழ்த்திப் புகழ்ந்து பாராட்டி; மந்திரச் சுற்றமொடு ஆய்வளை நல்லாள் தன் உழைச்சென்று-தன் அமைச்சராகிய அரசியல் சுற்றஞ்சூழ அம்மணிமேகலையைக் காணத் தானே அவள் இருக்கும் இடத்தே சென்று வாழ்த்திய பின்னர் என்க.

(விளக்கம்) வையங்காவலன் என்றது சோழன் இளங்கிள்ளியை. கஞ்சுகன்-மெய்ப்பை (சட்டை) இட்ட ஒருவகை அரசியல் பணியாளன்; தூதனுமாம். மடந்தை ஈண்டுப் பருவம் குறியாது மகள் என்னும் முறைப்பெயராய் நின்றது. குணவதம்-அருளுடைமை காரணமாக மேற்கொள்ளும் விரதங்கள். அவை கொல்லாமை, இன்னா செய்யாமை, ஊனுண்ணாமை முதலியன. வதம்-விரதம். நாவலந்தீவு-கன்னியாகுமரிக்கும் இமயமலைக்கும் இடையே கிடக்கும் நிலப்பரப்பு. நனிமிக்கோள்: ஒரு பொருள் பன்மொழி. அங்கை-அகங்கை (உள்ளங்கை). பலருக்கு உண்டி வழங்கும் அமுதசுரபியைத் தனக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு தனித்துத் தங்காமல் எனக்கோடலுமாம். பதி-நகரம். தருமதவ வனம்-அறங்கேட்டற்கும் தவம் புரிதற்கும் தகுந்த பொழில். வந்து தோன்றினள் என்றது, இப்பதி செய்த தவத்தால் தானே வந்து தோன்றினள் என்பதுபட நின்றது. மாமழை போல் என்றான் நம் பசிப் பிணிக்கு மருந்தாக வந்தாள் என்பதும் கைம்மாறு கருதாது வந்தாள் என்பதும் தோன்ற. மன்னனும் விரும்பி என்புழி கஞ்சுகனே அன்றித் தானும் விரும்பினான் என இறந்தது தழீஇ நிற்றலின் உம்மை-எச்ச உம்மை. கந்திற்பாவையை வந்தித் தேத்தி என்க. மணிமேகலையின் வரவினை யாம் பெரிதும் விரும்புகின்றேம் என்பதறிவித்தற்கு மந்திரச் சுற்றமொடு சென்றான் என்றவாறு. வாழ்த்திப் பின் என அறுத்துக் கூறிக்கொள்க.

மன்னவன் மணிமேகலைக்குப் புத்த பீடிகையின் வரலாறு கூறி அதனைக் காட்டுதல்

188-199 : செங்கோல்..........பலவால்

(இதன் பொருள்) நலத்தகை நல்லாய்-நன்மையான பெருந்தகைமையுடைய மாதர் திலகமே; செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ கொங்கு அவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ-எனது செங்கோல் யான் அறியாமலே வளைந்தொழிந்ததோ? அன்றி மாதவர் தாம் செய்யும் தவ ஒழுக்கம் பிழைபட்டொழிந்ததோ அன்றி நறுமணம் பரப்புகின்ற கூந்தலையுடைய குலமகளிரின் கற்பொழுக்கம் குறை பட்டொழிந்ததோ; அறியேன் நன்னாடு எல்லாம் அலத்தற்காலே ஆகியது அறியேன்-காரணம் அறிகின்றிலேன் பண்டு நன்னுடாய் இருந்த இத்தொண்டை நாடு முழுவதும் இப்பொழுது வறுமையால் மன்னுயிர் வருந்தும் வற்கடக் காலமுடையதாக மாறிவிட்டது, இவ்வல்லலே அகற்றுதற்கு வழியும் அறியேனாய்; மயங்குவேன் முன்னர் ஓர் மாதெய்வம் தோன்றி  உறங்காது ஒழிநின் உயர்தவத்தால் ஓர் காரிகை தோன்றும்-நெஞ்சம் மயங்குகின்ற என் கண் முன்னே ஒரு சிறந்த தெய்வம் எளிவந்து தோன்றி அரசே இங்ஙனம் வருந்தாதொழி, முன்பு நீ செய்த உயர்ந்த தவப்பயனாக ஒரு தவமகள் இங்குத் தானே வந்தெய்துவாள்; அவள் பெரும் கடிஞையின் ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்-அவள் அங்கையில் ஏந்திவரும் பெரிய பிச்சைப் பாத்திரத்தில் சுரக்கின்ற உணவினால் அகன்ற உனது நாட்டிலுள்ள உயிரினம் எல்லாம் உய்யுங்காண்! மேலும்; ஆங்கு அவள் அருளால் அமரர்கோன் ஏவலின் தாங்கா மாரியும் தான் நனிபொழியும்-அப்பொழுது அவள் ஆற்றுகின்ற அருளறத்தின் பயனாக அமரர் கோமானாகிய இந்திரன் ஏவுதலாலே நினது நாடு தாங்குதற்கியலாதபடி மழை தானும் மிகுதியாகப் பெய்வதாம்; அன்னாள் இந்த அகநகர் புகுந்த பின்னாள் நிகழும் பேர் அறம் பலவால்-அத்தவமகள் இக்காஞ்சி மாநகரத்தின் உள்ளே புகுந்த பின்னர் வருகின்ற நாள்களிலே நிகழவிருக்கின்ற பெரிய அறச்செயல்களும் மிகப்பலவாம் எனவும் என்க.

(விளக்கம்) கோல்நிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை
மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயி ரென்னும் தகுதியின் றாகும்      (7:8-12)

என முன்னும் வந்தமை உணர்க. அறியேன் என்பதனை முன்னும் கூட்டுக. மயங்குதல்-திகைத்தல். அருளுடைமை பற்றி மாதெய்வம் என்றன்; உண்டி சுரத்தல் பற்றிப் பெருங்கடிஞை என்றவாறு. ஆருயிர் மருந்து-உணவு. அகனிலம்: அன்மொழித் தொகை; உயிர்கள் என்க. அமரர்கோன்-இந்திரன். அன்னாள்-அத்தவமகள்.

200-210 : கார்வறம்..............இதுவென

(இதன் பொருள்) கார்வறங் கூரினும் நீர்வறங் கூராது-அக்காலத்தே மழை பெய்யாதொழியினும் யாறு முதலியவற்றில் நீர்ப்பெருக்கு வற்றாது; பாரக விதியின் பண்டையோர் இழைத்த கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியோடு மாமணிபல்லவம் ஈங்கு வந்தது என-மேலும் அத்தெய்வம் எம்மை நோக்கி நீவிர் இந்நிலவுலகத்தில் அமைந்த சிற்பவிதியின்படி முன்னோர் இயற்றிய கோமுகி என்னும் மிக்க நீரினையுடைய பொய்கையோடே சிறந்த மணிபல்லவத்தீவே இந்நகரத்திற்கு வந்துள்ளது என்று வியக்கும்படி; பொய்கையும் பொழிலும் புனைமின் என்று அறைந்து அத்தெய்வதம் போயபின் மரம் செய்து அமைத்தது இ இடம் என்று அ இடம் காட்ட-பொய்கையும் பொழிலும் உண்டாக்குங்கள் என்று கூறிய அத்தெய்வம் மறைந்துபோன பின்னர் யாங்களும் அத்தெய்வம் கூறியவாறே உண்டாக்கி வைத்தது இவ்விடத்தே என்று கூறி அரசன் மணிமேகலையை அழைத்துப்போய் அவ்விடத்தைக் காட்டுதலாலே; அத்தீவகம் போன்ற காவகம் பொருந்தி கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள்-அம்மணிபல்லவத்தீவின் கண் அமைந்த பொழிலையே ஒத்த அப்பூம்பொழிலின் ஊடே புகுந்து அங்கமைந்த பொய்கையையும் கண்டமையாலே உளம் மகிழ்ந்த அம்மணிமேகலை அரசனை நோக்கி அங்கு; பண்டை எம் பிறப்பினை பான்மையின் காட்டிய அப்பீடிகை இது என-அம் மணிபல்லவத்தின்கண் எம்முடைய பழம்பிறப்பினைப் பண்போடு காட்டிய அந்தப் புத்தபீடிகையின் தன்மை இத்தகையது என்று கூறுதலாலே என்க.

(விளக்கம்) கார்-முகில். பாரக விதி என்றது மணிபல்லவத்தில் கோமுகி முதலியன வானவர் விதியில் அமைக்கப்பட்டன ஆதலின் நீயிர் அங்ஙனம் செய்யமாட்டாமையின் பாரக விதியினாலே செய்திடுக என்றறிவித்தற்பொருட்டு. புனைமின் என்றது அரசனுக்குரிய அமைச்சர் முதலியோரையும் உளப்படுத்திக் கூறியபடியாம். அத்தீவகம்-அம்மணி பல்லவம். அங்கு பீடிகை இது-அம்மணிபல்லவத்தில் யான் கண்ட புத்தபீடிகையின் இலக்கணம் உடையது இது என்றவாறு. எனவே அவ்வாறு இங்கும் ஒரு பீடிகை செய்மின் எனக்குறிப்பினால் அறிவித்தவாறாயிற்று. அப்பீடிகையின் இலக்கணம் வருமாறு-

விரிந்திலங் கவிரொளி சிறந்துகதிர் பரப்பி
உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித்
திசைதொறும் ஒன்பான் முழநில மகன்று
விதிமா ணாடியின் வட்டங் குயின்று
பதும சதுர மீமிசை விளங்கி
அறவோற் கமைந்த ஆசனம் (8:44-41)

என்பதாம்.

கிள்ளிவளவன் பீடிகையும் கோயிலும் சமைத்து விழவும் சிறப்பும் எடுத்தல்

210-216 : அறவோன்............ஏத்தி

(இதன் பொருள்) அறவோன் பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து-அதுகேட்டு அறவாழி அந்தணனாகிய புத்தபெருமானுடைய செந்தாமரை மலர் போன்ற திருவடிச் சுவடுகளை உடைய பீடிகையை அவ்விலக்கண முறைமையின் இயற்றி; தீவதிலகையும் திருமணிமேகலா மாபெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு ஒத்த கோயில்-மணிபல்லவத்தில் உறைகின்ற தீவதிலகை என்னும் தெய்வமும் திருமகளை ஒத்த மணிமேகலை என்னும் மிகவும் பெரிய தெய்வந்தானும் வணங்கித் தொழுது வாழ்த்துதற்குப் பொருந்திய திருக்கோயிலும்; உளத்தகப் புனைந்து விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற-மணிமேகலை கருத்திற்கேற்ப இயற்றி ஆங்குப் புத்தபெருமானுக்கு நாள் விழாவும் சிறப்பு விழாவும் அவ்வேந்தன் நிகழ்த்துதலானே; தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி-மக்களும் தேவரும் முனிவரும் பிறரும் தொழத்தகுந்த பெருந்தகைப் பெண்ணாகிய மணிமேகலைதானும் வலம்வந்து அப்பீடிகையினிடத்தே கிடந்த புத்தருடைய திருவடித் தாமரைகளைக் கைகூப்பித் தொழுது வணங்கி வாழ்த்திய பின்னர் என்க.

(விளக்கம்) அறவோன்-புத்தன். பங்கயப் பீடிகை-பங்கயம் போன்ற திருவடிச் சுவடுகள் பதித்த பீடம். பான்மை-மணிமேகலை கூறிய இலக்கணம். இம்மணிமேகலையின் வேறுபடுத்துதற்கு முன்னும் பின்னும் அடை புணர்த்துத் திருமணிமேகலா மாபெரும் தெய்வம் எனல் வேண்டிற்று. மணிமேகலையின் உளந்தகப் புனைந்து என்க. விழவும் சிறப்பும்-நித்தல் விழவும் சிறப்பும் விழவும். மாதர்: மணிமேகலை.

மணிமேகலை உண்டி வழங்குதல்

217-227 : பங்கய.............ஈண்டி

(இதன் பொருள்) பங்கயப் பீடிகை அங்கையின் ஏந்திய பசிப்பிணி மருந்தெனும் அமுதசுரபியை வைத்து நின்று-தொடக்கத்தே புத்தருடைய திருவடித்தாமரைச் சுவடுகிடந்த அப்பீடிகையின் மேல் தன் அகங்கையின்கண் ஏந்தியிருந்த உயிர்களை வருத்தும் பசிப்பிணிக்கு மருந்தென்று போற்றப்படுகின்ற அமுதசுரபியை வைத்துப் பின்னர் அதன் பக்கலிலே நின்று; எல்லா உயிரும் வருக என-நாற்றிசையினும் வாழும் எல்லா உயிர்களும் உண்க வருக என்று அன்புடன் அழைக்கும்; பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின்-அரவின் படம் போன்ற அல்குலை உடைய ஓவியப் பாவை போல்வாளாகிய அம்மணிமேகலையினுடைய அன்புமொழியைக் கேட்டு; மொய்த்த மூஅறு பாடை மாக்களின் காணார் கேளார் கால்முடம் ஆனோர் பேணாமாக்கள் பேசார் பிணித்தோர் படிவ நோன்பியர்-அவ்விடத்தே வந்து குழுமிய பதினெட்டு மொழிகள் வழங்கும் நாடுகளிலே பிறந்தமையால் வேறு வேறு மொழி பேசுகின்ற அம்மக்களும் அம்மக்கள் குழுவினுள் வைத்துக் குருடரும் செவிடரும் கால் முடமாயினோரும் பேணுவார் யாரும் இல்லாதவரும் வாய் பேசாத வூமரும் நோயால் பிணிக்கப்பட்டோரும் தவவேடமும் நோன்பு உடையோரும்; பசி நோய் உற்றோர் மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும் பன்னூறு ஆயிரம் விலங்கின் தொகுதியும் மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி-ஆனைத் தீ என்னும் பசி நோயால் பற்றப்பட்டவரும் சோம்பலால் வறுமையுற்ற மாக்களும் ஆகிய எல்லா மக்களும் பல நூறாயிரம் வகைப்பட்ட விலங்குக் கூட்டமும் பிறவுமாகிய உடலொடு நிலைபெற்ற இயங்கியல் உயிர்கள் முழுவதும் அவ்விடத்தே வந்து ஒருங்கே கூடாநிற்ப என்க.

(விளக்கம்) பாவை : மணிமேகலை. மூஅறு பாடை-பதினெட்டு வகை மொழி. அவை நாவலந் தீவில் ஆரியம் முதலாக அருந்தமிழ் ஈறாக அமைந்த பதினெட்டு வகை மொழிகள். பாடை-(பாஷை மொழி. பேணுமாக்கள்-பேணத்தகுந்தவர் இல்லாத எளியோர். பிணித்தோர் மடிநல் கூர்ந்த என்பதற்கு மடியை உடை என்று கொண்டு மடிநல் கூர்ந்த மாக்கள்-உடையின்றித் துன்பம் எய்திய மக்கள் என்று உரை கூறி விளக்கத்தில் மடிமையால் வறுமையுறுவோரை அருளுவது மடிமையாகிய தீவினையை வளர்க்கும் செய்கையால் அறமாகா தொழிதலின் சோம்புதலால் வறுமையுற்ற மாக்கள் என்றால் பொருந்தாமை அறிக; என்று விளக்குவாரும் உளர். இவருடைய இவ்வுரையை நல்லுரை என்று விளக்குவாரும் உளர். இவருடைய இவ்வுரையை நல்லுரை என்று கொள்வார் தம்பால் வரும் வறுமையாளரை எல்லாம் நன்கு ஆராய்ந்துணர்ந்து அவர் வறுமை மடியால் வந்தது அன்று என்று நன்கு தெரிந்து கொண்ட பின்னரே ஏதேனும் ஒரு பிடி சோறிடுவதாயினும் இடுவாராக. இவ்வுரை போலி என்பது எமது கருத்து. மேலும் மணிமேகலை அமுதசுரபியில் உணவு சுரப்பதல்லது உடைகளும் தோன்றும் என்று கூறப்படாமையின் உடையின்றித் துன்பம் எய்திய மக்கள் வந்தமை என்பது பொருந்தாமை உணர்க. ஈண்டி-ஈண்ட.

இதுவுமது

228-235 : அருந்தி.............காலை

(இதன் பொருள்) அருந்தியோர்க்கு எல்லாம் ஆருயிர் மருந்தாய்-ஏற்று உண்டோர் எல்லாருக்கும் பெறுதற்கரிய உயிரைப் பிணி தீர்த்து வளர்க்கின்ற மருந்தாய்; பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும் நீரும் நிலமும் காலமும் கருவியும் சீர்பெற வித்திய வித்தின் விளைவும் பெருகியது என்ன-பெரிய தவ ஒழுக்கமுடையோர் கையின்கண் பெய்யப்பட்ட பிச்சையின் பயனும் நீர் நிலம் காலம் கருவி என்னும் இவை குறைவின்றிச் சீர்த்தவிடத்தே விதைக்கப்பட்ட வித்தினது விளைவும் பன்மடங்கு பெருகினாற் போல; வசி பெருவளம் சுரப்ப தொழில் உதவி வளம் தந்தது என-மழையானது உலகத்தில் மிக வளம் பெருகும்படி தனது பெய்தல் தொழிலைச் செய்து தனது வளமாகிய நீசை வழங்கினாற் போலவும் நாளுக்குநாள் மிகுதியாக உணவினை வழங்கி உயிர்களின்; பசிப்பிணி தீர்த்த பாவையை ஏத்திச் செல்லுங்காலே-பசியாகிய துன்பத்தைத் தீர்த்தவளாகிய அம்மணிமேகலையை அவ் உயிர்கள் கைதொழுது ஏத்தாநிற்ப இங்ஙனம் நிகழும் காலத்தே என்க.

(விளக்கம்) அமுதசுரபியில் சுரக்கின்ற உணவு உயிரின் சாவினைத் தடுக்கும் மருந்தா தலோடன்றிப் பெரியோர்க்கு ஈந்த தானத்தின் பயன் போலவும் நீர் முதலியவற்றால் சீர்த்த விடத்தே விதைத்த விளைவு போலவும் அவ்வுயிர்களுக்குப் பெரிதும் ஆக்கமும் தந்தது. அவை அறம் பொருள் இன்பம் வீடு என்பன என்க. பாவையை அவ்வுயிர்கள் ஏத்தி என்க. ஏத்தி என்னும் எச்சத்தை ஏத்த எனத் திருத்திக் கொள்க.

மணிமேகலை இருக்குமிடத்திற்கு அறவண அடிகளும் மாதவியும் சுதமதியும் வருதல்

235-239 : தாயர்...........வணங்கி

(இதன் பொருள்) தாயர் தம்முடன் அல்லவை கடிந்த அறவண அடிகளும்-மணிமேகலை நாணுதற்கு அவாவிய மாதவியும் சுதமதியும் ஆகிய தாயர் இருவரோடும் நல்லறம் அல்லாதவற்றையெல்லாம் துவரத் துடைத்த அறவண அடிகளாரும்; மல்லல் மூதூர் மன்னுயிர் முதல்வி நல்அறச்சாலை நண்ணினர் சேறலும்-வளம்மிக்க பழையதாகிய காஞ்சி மாநகரத்தின்கண் மணிமேகலை வரவினையும் செயலையும் கேள்வியுற்று உடம்போடு நிலைபெற்றுள்ள உயிர்களுக்கெல்லாம் அந்நிலைபேற்றிற்குக் காரணமாய் இருக்கின்ற அம்மணிமேகலையின் அருள் அறம் நிகழுகின்ற அக்கோட்டத்தை அணுகிச் செல்லா நிற்ப அவர் வரவு கண்ட அம்மணிமேகலை தானும்; சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி-எதிரே சென்று வரவேற்று அவர்களுடைய அழகிய அடிகளிலே விழுந்து வணங்கி அழைத்து வந்து என்க.

(விளக்கம்) அல்லவை-அறமல்லாதவை. மணிமேகலை வருகையின் பின் அந்நாட்டில் மழைவளமும் உண்டாயது என்பது தோன்ற மல்லன் மூதூர் என்றார். நல்லறம் என்றது உண்டி வழங்குதலை. முதல்வி-காரணமானவள். நண்ணினர்: முற்றெச்சம். சேறல்-செல்லுதல். சென்று என்றது எதிர்சென்று என்றவாறு. அவர்-மூவரையும்.

மணிமேகலை அம்மூவருக்கும் உணவு முதலியன கொடுத்து மனமகிழ்ந்து வணங்கி உண்மை உருவம் கொள்ளல்

240-245 : நன்றென..........கலையென்

(இதன் பொருள்) நன்று என விரும்பி-தான் செய்த தவமும் நன்றேயாயிற்று என்று கருதி ஆர்வத்தோடு அவர்களுடைய; நல்லடி கழுவி ஆசனத்து ஏற்றி-நலந்தரும் திருவடிகளை நீரால் கழுவித் தவத்தோர்க்கியன்ற இருக்கைகளை ஈந்து அவற்றின் மேல் இருப்பித்து; பொழுதினில் அறுசுவை நால்வகை போனகம் ஏந்தி-உண்ணுதற்கேற்ற காலம் அறிந்து அம்மூவர்க்கும் தனது அமுதசுரபியிற் சுரந்த


Offline Anu

Re: மணிமேகலை
« Reply #29 on: February 28, 2012, 10:21:05 AM »
29. தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதை

(இருபத்தொன்பதாவது மணிமேகலை, காஞ்சி மாநகர்க்கட் சென்ற பின்னர் அறவண வடிகளும் தாயருஞ் செல்ல அவரைக் கண்டு இறைஞ்சித் தருமங் கேட்ட பாட்டு)

அஃதாவது மணிமேகலை பவுத்த சமயத்தின்கண் பிக்குணிக்குக் (பெண்துறவிக்கு) கூறி உள்ள எட்டுக் கட்டளைகளையும் மேற்கொள்வதாகிய தவக்கோலம் தாங்கி அறவண அடிகளாரிடத்தே அச்சமயத்தார்க்கு உரிய அறங்களைக் கேட்டறிந்த செய்கையைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண் அறவண வடிகளார் தம்மை வணங்கிய மணிமேகலையை வாழ்த்தி அவளுக்குத் தாம் கச்சிநகரத்திற்கு வந்த வரலாறு கூறுபவர்: பீலிவளை பெற்ற மகவினைக் கடலில் கெடுத்ததும், அதுகேட்ட சோழமன்னன் வருத்தமுற்று அம்மகவினைத் தேடி அலைந்த காரணத்தால் தன் நகரத்தில் தான் செய்யக்கடவ இந்திர விழாவை மறந்தமையும் அதனால் மணிமேகலா தெய்வம் அந்நகரத்தைக் கடல் கொள்க என்று சபித்ததும் தனக்கு விழாச் செய்யாமையால் இந்திரனும் சாபமிட்டானாக இவ்வாற்றல் புகார் நகரம் கடல்கோள் பட்டதும், இங்ஙனம் ஆகும் என்று யாம் முன்பே தெரிந்து இக்காஞ்சி நகரத்திற்கு மாதவி சுதமதி என்னும் மகளிரோடு இந்நகரத்திற்கு வந்தேம் என்று அறிவித்ததும் அதுகேட்ட மணிமேகலை தான் மாதவன் உருவங்கொண்டு வஞ்சிமாநகரம் அடைந்த செய்தியும், அந்நகரத்தில் பல்வேறு சமயக்கணக்கர்களைக் கண்டு அவர் தம் சமய நன்பொருள்களைக் கேட்டறிந்த செய்தியையுங்கூறி அவர் கூறிய பொருள்கள் தன் மனத்திற்குப் பொருந்தாமையால் தாமரையும் அறவண அடிகளாரையும் காண்டற்கு விரும்பிக் கச்சிமாநகர் புக்க செய்தியையும் அவ்வடிகளார்க்கு உரைத்தலும், அதுகேட்ட அடிகளார் மணிமேகலை வேண்டுகோட் கிணங்கிப் புத்தர் அறங்களை மணிமேகலைக்குச் செவியறிவுறுத்துதலும் பிறவும் கூறப்படுகின்றன.

இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன்
வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன்
தன் மகள் பீலிவளை தான் பயந்த
புனிற்று இளங் குழவியைத் தீவகம் பொருந்தி
தனிக் கலக் கம்பளச் செட்டி கைத் தரலும்
வணங்கிக் கொண்டு அவன் வங்கம் ஏற்றிக்
கொணர்ந்திடும் அந் நாள் கூர் இருள் யாமத்து
அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும்
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனைக் காணாது  29-010

அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வுற்று
விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத்
தன் விழாத் தவிர்தலின் வானவர் தலைவன்
நின் உயிர்த் தந்தை நெடுங் குலத்து உதித்த
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள்
முன்னிய வங்கம் முங்கிக் கேடுற
பொன்னின் ஊசி பசுங் கம்பளத்துத்
துன்னியதென்னத் தொடு கடல் உழந்துழி
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா
வழுவாச் சீலம் வாழ்மையின் கொண்ட  29-020

பான்மையின் தனாது பாண்டு கம்பளம்
தான் நடுக்குற்ற தன்மை நோக்கி
ஆதி முதல்வன் போதி மூலத்து
நாதன் ஆவோன் நளி நீர்ப் பரப்பின்
எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர் எனப்
பவ்வத்து எடுத்து பாரமிதை முற்றவும்
அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும்
பிறவிதோறு உதவும் பெற்றியள் என்றே
சாரணர் அறிந்தோர் காரணம் கூற
அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரைத்  29-030

தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும்
அன்றே கனவில் நனவென அறைந்த
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம்
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும்
பகரும் நின் பொருட்டால் இப் பதிப் படர்ந்தனம்
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி
பொன் திகழ் புத்த பீடிகை போற்றும்
தீவதிலகையும் இத் திறம் செப்பினள்
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே  29-040

வேற்றுருக் கொண்டு வெவ் வேறு உரைக்கும்
நூல் துறைச் சமய நுண் பொருள் கேட்டே
அவ் உரு என்ன ஐ வகைச் சமயமும்
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்
அடிகள்! மெய்ப்பொருள் அருளுக என்ன
நொடிகுவென் நங்காய்! நுண்ணிதின் கேள் நீ
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே
ஏதம் இல் பிரத்தியம் கருத்து அளவு என்னச்
சுட்டுணர்வைப் பிரத்தியக்கம் எனச் சொலி
விட்டனர் நாம சாதி குணம் கிரியைகள்  29-050

மற்று அவை அனுமானத்தும் அடையும் என
காரண காரிய சாமானியக் கருத்து
ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது
கனலில் புகைபோல் காரியக் கருத்தே
ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில்
ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற
பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம்
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில்
பக்கம் இம் மலை நெருப்புடைத்து என்றல்
புகையுடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது  29-060

வகை அமை அடுக்களை போல் திட்டாந்தம்
உபநயம் மலையும் புகையுடைத்து என்றல்
நிகமனம் புகையுடைத்தே நெருப்புடைத்து என்றல்
நெருப்புடைத்து அல்லாது யாதொன்று அது புகைப்
பொருத்தம் இன்று புனல்போல் என்றல்
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய்
வைதன்மிய திட்டாந்தம் ஆகும்
தூய காரிய ஏதுச் சுபாவம்
ஆயின் சத்தம் அநித்தம் என்றல்
பக்கம் பண்ணப்படுதலால் எனல்   29-070

பக்க தன்ம வசனம் ஆகும்
யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது
அநித்தம் கடம் போல் என்றல் சபக்கத்
தொடர்ச்சி யாதொன்று அநித்தம் அல்லாதது
பண்ணப் படாதது ஆகாசம் போல் எனல்
விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க
அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது
இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை என்றல்
செவ்விய பக்கம் தோன்றாமையில் எனல்
பக்க தன்ம வசனம் ஆகும்   29-080

இன்மையின் கண்டிலம் முயற்கோடு என்றல்
அந் நெறிச் சபக்கம் யாதொன்று உண்டு அது
தோற்றரவு அடுக்கும் கைந் நெல்லிபோல் எனல்
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்
இவ்வகை ஏது பொருள் சாதிப்பன
என்னை காரியம் புகை சாதித்தது? என்னின்
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும்
அன்னுவயத்தாலும் நெருப்பு இலா இடத்துப்
புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும்
புகஈ நெருப்பைச் சாதித்தது என்னின்  29-090

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான
ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்
மேல் நோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப
தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்
அன்னுவயம் சாதிக்கின் முன்னும்
கழுதையையும் கணிகையையும்
தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே
அன்னுவயம் கண்டான் பிற்காலத்து
கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை  29-100

அனுமிக்க வேண்டும் அது கூடா நெருப்பு
இலா இடத்துப் புகை இலை எனல் நேர் அத்
திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின்
நாய் வால் இல்லாக் கழுதையின் பிடரில்
நரி வாலும் இலையா காணப்பட்ட
அதனையே கொண்டு பிறிதோர் இடத்து
நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல்
அரிதாம் அதனால் அதுவும் ஆகாது
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும்
திட்டாந்தத்திலே சென்று அடங்கும்   29-110

பக்கம் ஏது திட்டாந்தங்கள்
ஒக்க நல்லவும் தீயவும் உள அதில்
வௌிப்பட்டுள்ள தன்மியினையும்
வௌிப்பட்டுள சாத்திய தன்மத்திறம்
பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும்
தன்கண் சார்த்திய நயம் தருதல் உடையது
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான்
சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றைப்
பற்றி நாட்டப்படுவது தன்மி
சத்தம் சாத்திய தன்மம் ஆவது   29-120

நித்த அநித்தம் நிகழும் நல் ஏது
மூன்றாய்த் தோன்றும் மொழிந்த பக்கத்து
ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும்
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம்
சாதிக்கின் பொருள் தன்னால் பக்கத்து
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல்
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின்
ஒத்த அநித்தம் கட ஆதி போல் எனல்
விபக்கம் விளம்பில் யாதொன்று யாதொன்று
அநித்தம் அல்லாதது பண்ணப் படாதது  29-130

ஆ அகாசம் போல் என்று ஆகும்
பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும்
நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய்
விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு
மிகத் தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க
ஏதம் இல் திட்டாந்தம் இரு வகைய
சாதன்மியம் வைதன்மியம் என
சாதன்மியம் எனப்படுவது தானே
அநித்தம் கட ஆதி அன்னுவயத்து என்கை
வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம்  29-140

எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை
இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன
தீய பக்கமும் தீய ஏதுவும்
தீய எடுத்துக்காட்டும் ஆவன
பக்கப் போலியும் ஏதுப் போலியும்
திட்டாந்தப் போலியும் ஆஅம் இவற்றுள்
பக்கப்போலி ஒன்பது வகைப்படும்
பிரத்தியக்க விருத்தம் அனுமான
விருத்தம் சுவசன விருத்தம் உலோக
விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர   29-150

சித்த விசேடணம் அப்பிரசித்த
விசேடியம் அப்பிரசித்த உபயம்
அப்பிரசித்த சம்பந்தம் என
எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம்
கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்
சத்தம் செவிக்குப் புலன் அன்று என்றல்
மற்று அனுமான விருத்தம் ஆவது
கருத்து அளவையை மாறாகக் கூறல்
அநித்தியக் கடத்தை நித்தியம் என்றல்
சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல்  29-160

என் தாய் மலடி என்றே இயம்பல்
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை
இலகு மதி சந்திரன் அல்ல என்றல்
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல்
அநித்த வாதியா உள்ள வைசேடிகன்
அநித்தியத்தை நித்தியம் என நுவறல்
அப்பிரசித்த விசேடணம் ஆவது
தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை
பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனைக்
குறித்து சத்தம் விநாசி என்றால்   29-170

அவன் அவிநாசவாதி ஆதலின்
சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும்
அப்பிரசித்த விசேடியம் ஆவது
எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற
பௌத்தனைக் குறித்து ஆன்மாச் சைதனியவான்
என்றால் அவன் அநான்ம வாதி
ஆதலின் தன்மி அப்பிரசித்தம்
அப்பிரசித்த உபயம் ஆவது
மாறு ஆனோர்க்குத் தன்மி சாத்தியம்  29-180

ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல்
பகர் வைசேடிகன் பௌத்தனைக் குறித்து
சுகம் முதலிய தொகைப் பொருட்குக் காரணம்
ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும்
தாம் இசையாமையின் அப்பிரசித்த உபயம்
அப்பிரசித்த சம்பந்தம் ஆவது
எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல்
மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம்
கூறில் அவன்ன் கொள்கை அஃது ஆகலில்
வேறு சாதிக்க வேண்டாது ஆகும்   29-190

ஏதுப் போலி ஓதின் மூன்று ஆகும்
அசித்தம் அநைகாந்திகம் விருத்தம்ம் என
உபய அசித்தம் அன்னியதர அசித்தம்
சித்த அசித்தம் ஆசிரய அசித்தம்
என நான்கு அசித்தம் உபய அசித்தம்
சாதன ஏது இருவர்க்கும் இன்றி
சத்தம் அநித்தம் கண் புலத்து என்றல்
அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல்
சத்தம் செயலுறல் அநித்தம் என்னின்  29-200

சித்த வௌிப்பாடு அல்லது செயலுறல்
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்
சித்த அசித்தம் ஆவது
ஏது சங்கயமாய்ச் சாதித்தல்
ஆவி பனி என ஐயுறா நின்றே
தூய புகை நெருப்பு உண்டு எனத் துணிதல்
ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்
ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின்
ஆகாசம் பொருள் அல்ல என்பாற்குத்  29-210

தன்மி அசித்தம் அநைகாந்திகமும்
சாதாரணம் அசாதாரணம் சபக்கைக
தேசவிருத்தி விபக்க வியாபி
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி உபயைகதேச விருத்தி
விருத்த வியபிசாரி என்று ஆறு
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும்
ஏதுப் பொதுவாய் இருத்தல் சத்தம்
அநித்தம் அறியப்படுதலின் என்றால்
அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும்  29-220

செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ?
ஆகாசம் போல நித்தத்து அறிவோ?
என்னல் அசாதாரணம் ஆவது தான்
உன்னிய பக்கத்து உண்டாம் ஏதுச்
சபக்க விபக்கம் தம்மில் இன்றாதல்
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
என்னின் கேட்கப்படல் எனும் ஏதுப்
பக்கத்து உள்ளதாயின் அல்லது
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின்
சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம்  29-230

சபக்கைகதேச விருத்தி விபக்க
வியாபி ஆவது ஏதுச் சபக்கத்து
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும்
உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடைத்
தோன்றாதாகும் அநித்தம் ஆகலின்
என்றால் அநித்தம் என்ற ஏதுச்
செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்கம்
மின்னினும் ஆகாசத்தினும் மின்னின்
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின்
அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் கடம் போல்  29-240

அழிந்து செயலில் தோன்றுமோ? மின் போல்
அழிந்து செயலில் தோன்றாதோ? எனல்
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி ஆவது ஏது விபக்கத்து
ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல்
சத்தம் செயலிடைத் தோன்றும் அநித்தம் ஆதலின் எனின்
அநித்த ஏதுச் செயலிடைத் தோன்றற்கு
விபக்க ஆகாயத்தினும் மின்னினும்
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்துக் காணாது
சபக்கக் கட ஆதிகள் தம்மில்   29-250

எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல்
அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றாதோ? கடம்போல்
அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றுமோ? எனல்
உபயைகதேச விருத்தி ஏதுச்
சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி
ஓர் தேசத்து வர்த்தித்தல் சத்தம்
நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின்
அமூர்த்த ஏது நித்தத்தினுக்குச்
சபக்க ஆகாச பரமாணுக்களின்
ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம்   29-260

பரமாணுவின் நிகழாமையானும்
விபக்கமான கட சுக ஆதிகளில்
சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும்
ஏகதேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று
அமூர்த்தம் ஆகாசம்போல நித்தமோ?
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ? எனல்
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய்
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல்
சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின்
ஒத்தது எனின் அச் செயலிடைத் தோன்றற்குச்  29-270

சபக்கமாயுள்ள கட ஆதி நிற்க
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
சத்தத்துவம் போல் எனச் சாற்றிடுதல்
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல
விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பின்
தன்மச் சொரூப விபரீத சாதனம்
தன்ம விசேட விபரீத சாதனம்
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
தன்மி விசேட விபரீத சாதனம்
என்ன நான்கு வகையது ஆகும் அத்  29-280

தன்மச் சொரூப விபரீத சாதனம்
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து
உருவம் கெடுதல் சத்தம் நித்தம்
பண்ணப்படுதலின் என்றால் பண்ணப்
படுவது அநித்தம் ஆதலின் பண்ணப்பட்ட
ஏதுச் சாத்திய தன்ம நித்தத்தை விட்டு
அநித்தம் சாதித்தலான் விபரீதம்
தன்ம விசேட விபரீத சாதனம்
சொன்ன ஏதுச் சாத்திய தன்மம்
தன்னிடை விசேடம் கெடச் சாதித்தல்  29-290

கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள்
எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால்
சயன ஆசனங்கள் போல என்றால்
தொக்கு நிற்றலின் என்கின்ற ஏதுச்
சயன ஆசனத்தின் பராத்தம்போல் கண் முதல்
இந்தியங்களியும் பரார்த்தத்தில் சாதித்துச்
சயன ஆசனவானைப் போல் ஆகிக்
கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய்ச்
சாதிக்கிற நிர் அவயவமாயுள்ள
ஆன்மாவைச் சாவயவமாகச்   29-300

சாதித்துச் சாத்திய தன்மத்தின்
விசேடம் கெடுத்தலின் விபரீதம்
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
தன்மியுடைய சொரூப மாத்திரத்தினை
ஏதுத் தானே விபரீதப்படுத்தல்
பாவம் திரவியம் கன்மம் அன்று
குணமும் அன்று எத் திரவியம் ஆம் எக்
குண கன்மத்து உண்மையின் வேறாதலால்
சாமானிய விசேடம்போல் என்றால்
பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய்  29-310

நின்றவற்றின்னிடை உண்மை வேறு ஆதலால் என்று
காட்டப்பட்ட ஏது மூன்றினுடை
உண்மை பேதுப்படுத்தும் பொதுவாம்
உண்மை சாத்தியத்து இல்லாமையினும்
திட்டாந்தத்தில் சாமானியம் விசேடம்
போக்கிப் பிறிதொன்று இல்லாமையானும்
பாவம் என்று பகர்ந்த தன்மியினை
அபாவம் ஆக்குதலான் விபரீதம்
தன்மி விசேட விபரீத சாதனம்
தன்மி விசேட அபாவம் சாதித்தல்   29-320

முன்னம் காட்டப்பட்ட ஏதுவே
பாவம் ஆகின்றது கருத்தாவுடைய
கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம்
ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம்
கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன
தாமே திட்டாந்த ஆபாசங்கள்
திட்டாந்தம் இரு வகைப் படும் என்று முன்
கூறப்பட்டன இங்கண் அவற்றுள்
சாதன்மிய திட்டாந்த ஆபாசம்
ஓதில் ஐந்து வகை உளதாகும்   29-330

சாதன தன்ம விகலமும் சாத்திய
தன்ம விகலமும் உபய தன்ம
விகலமும் அநன்னுவயம் விபரீதான்
னுவயம் என்ன வைதன்மிய திட்
டாந்த ஆபாசமும் ஐ வகைய
சாத்தியா வியாவிருத்தி
சாதனா வியாவிருத்தி
உபயா வியாவிருத்தி அவ்வெதிரேகம்
விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள்
சாதன தன்ம விகலம் ஆவது   29-340

திட்டாந்தத்தில் சாதனம் குறைவது
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
ஆதலான் காண்புற்றது பரமாணுவில் எனின்
திட்டாந்தப் பரமாணு
நித்தத்தோடு மூர்த்தம் ஆதலான்
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பிச்
சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும்
சாத்திய தன்ம விகலம் ஆவது
காட்டப்பட்ட திட்டாந்தத்தில்   29-350

சாத்திய தன்மம் குறைவுபடுதல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
புத்திபோல் என்றால்
திட்டாந்தமாகக் காட்டப்பட்ட
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம்
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும்
உபய தன்ம விகலம் ஆவது
காட்டப்பட்ட திட்டாந்தத்திலே   29-360

சாத்திய சாதனம் இரண்டும் குறைதல்
அன்றியும் அது தான் சன்னும் அசன்னும்
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள
உபய தன்ம விகலம் ஆவது
உள்ள பொருட்கண் சாத்திய சாதனம்
கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
கடம் போல் எனின் திட்டாந்தமாகக்
காட்டப்பட்ட கடம் தான் உண்டாகிச்  29-370

சாத்தியமாய் உள நித்தத்துவமும்
சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும்
அசன்னா உள்ள உபய தன்ம விகலம்
இல்லாப்பொருட்கண் சாத்திய சாதனம்
என்னும் இரண்டும் குறையக் காட்டுதல்
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம்
ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும்
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும்  29-380

இரண்டும் ஆகாசம் அசத்து என்பானுக்கு
அதன்கண் இன்மையானே குறையும்
உண்டு என்பானுக்கு ஆகாசம் நித்தம்
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும்
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம்
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே
இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல்
சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின்
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும்
அன்னுவயம் சொல்லாது குடத்தின்கண்ணே  29-390

கிருத்த அநித்தம் காணப்பட்ட
என்றால் அன்னுவயம் தெரியாதாகும்
விபரீதான்னுவயம் வியாபகத்துடைய
அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல்
சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனின்
யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என
வியாப்பியத்தால் வியாபக்கத்தைக் கருதாது
யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என
வியாபகத்தால் வியாப்பியத்தைக் கருதுதல்
அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை  29-400

இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம்
வைதன்மிய திட்டாந்தத்துச்
சாத்தியா வியாவிருத்தி ஆவது
சாதன தன்மம் மீண்டு
சாத்திய தன்மம் மீளாதுஒழிதல்
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்
யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது
அமூர்த்தமும் அன்று பரமாணுப் போல் எனின்
அப்படித் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் ஆதலின்  29-410

சாதன அமூர்த்தம் மீண்டு
சாத்திய நித்தம் மீளாதுஒழிதல்
சாதனா வியாவிருத்தி ஆவது
சாத்திய தன்மம் மீண்டு
சாதன தன்மம் மீளாது ஒழிதல்
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது
அமூர்த்தமும் அன்று கன்மம்போல் என்றால்
வைதன்மிய திட்டாந்தமாகக்
காட்டப்பட்ட கன்மம்   29-420

அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின்
சாத்தியமான நித்தியம் மீண்டு
சாதனமான அமூர்த்தம் மீளாது
உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட
வைதன்மிய திட்டாந்தத்தினின்று
சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும்
உண்மையின் உபயா வியாவிருத்தி
இன்மையின் உபயா வியாவிருத்தி
என இருவகை உண்மையின்
உபயா வியாவிருத்தி உள்ள பொருட்கண்  29-430

சாத்திய சாதனம் மீளாதபடி
வைதன்மிய திட்டாந்தம் காட்டல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்
என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
அமூர்த்தமும் அன்று ஆகாசம்போல் என்றால்
வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட
ஆகாசம் பொருள் என்பாற்கு
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான்
சாத்திய நித்தமும் சாதனமா உள்ள
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின்  29-440

உபயா வியாவிருத்தி ஆவது
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
என்ற இடத்து யாதொன்று யாதொன்று அநித்தம்
மூர்த்தமும் அன்ன்று ஆகாசம் போல் என
வைதன்மிய திட்டாந்தம் காட்டில்
ஆகாசம் பொருள் அல்ல என்பானுக்கு
ஆகாசம் தானே உண்மை இன்மையினால்
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும்
மீட்சியும் மீளாமையும் இலையாகும்
அவ்வெதிரேகம் ஆவது சாத்தியம்   29-450

இல்லா இடத்துச் சாதனம் இன்மை
சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம்
நித்தம் பண்ணப்படாமையால் என்றால்
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
பண்ணப்படுவது அல்லாது அதுவும்
அன்று எனும் இவ் வெதிரேகம் தெரியச்
சொல்லாது குடத்தின்கண்ணே பண்ணப்
படுதலும் அநித்தமும் கண்டேம் ஆதலான்
என்னின் வெதிரேகம் தெரியாது
விபரீத வெதிரேகம் ஆவது   29-460

பிரிவைத் தலைதடுமாறாச் சொல்லுதல்
சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்
என்றால் என்று நின்ற இடத்து
யாதோர் இடத்து நித்தமும் இல்லை அவ்
இடத்து மூர்த்தமும் இல்லை எனாதே
யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அவ்
இடத்து நித்தமும் இல்லை என்றால்
வெதிரேகம் மாறுகொள்ளும் எனக் கொள்க
நாட்டிய இப்படி தீய சாதனத்தால்
காட்டும் அனுமான ஆபாசத்தின்
மெய்யும் பொய்யும் இத்திற விதியால்
ஐயம் இன்றி அறிந்து கொள் ஆய்ந்து என்  29-472

உரை

(இதன் கண் 1 முதல் 36 ஆம் அடிகாறும் அறவணர் தம்மை வணங்கிய மணிமேகலையை வாழ்த்துதலும் தாமும் மாதவியும் சுதமதியும் ஆகிய மூவரும் காஞ்சி மாநகரத்திற்கு வருதற்குரிய காரணமும் கூறுவதாய ஒரு தொடர்.)

அறவண அடிகளார் மணிமேகலைக்குக் கூறுதல்

1-2 : இறைஞ்சிய.............உரைப்போன்

(இதன் பொருள்) அறந்திகழ் நாவின் அறவணன் இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி-நல்லறமே நாளும் விளங்குகின்ற செந்நாவினையுடைய அறவண அடிகளார் தம் திருவடிகளிலே வீழ்ந்து என் மனப்பாட்டறம் வாய்வதாக என்றுட் கொண்டு வணங்கிய இளங்கொடி போல்வாளாகிய மணிமேகலையை நீடுழி வாழ்க என்று வாழ்த்திப் பின்னர்; உரைப்போன்-தாம் காஞ்சி நகரத்திற்கு வரநேர்ந்த காரணத்தைக் கூறத்தொடங்குவோர் என்க.

(விளக்கம்) இறைஞ்சுதல்-வணங்குதல். தம்பால் அணுகுவோர்க்கெல்லாம் நாளும் நல்லறமே நவின்று தழும்பேறிய நல்ல நாவினன் அவ்வறவணன். இவனே மணிமேகலைக்கு ஞானாசிரியனாய் அவள் ஊழ் கூட்டுவித்தது என அவ்வாசிரியன் மாண்புணர்த்துவார் அறந்திகழ் நாவின் அறவணன் என்று விதந்தார். அறவணன் என்னும் அவன் பெயர் இயற்பெயரன்று, சிறப்புப் பெயர். அச்சிறப்பு அறந்திகழ் நா உடைமையே என்பதும் இதனால் அறிவுறுத்தவாறாம் என்க.

இதுவுமது

3-12 : வென்வேற்...........மறப்ப

(இதன் பொருள்) நாக நாடு ஆள்வோன் தன் மகள் பீலிவளை நாகநாட்டை ஆளும் அரசனுடைய மகளாகிய பீலிவளை என்பவள்; வென்வேல் கிள்ளிக்குத் தான் பயந்த புனிற்று இளங்குழவியை-வெற்றிவேலை உடைய நெடுமுடிக்கிள்ளி என்னும் சோழமன்னனுடன் காதற்கேண்மை கொண்டு வயிறு வாய்த்து அவனைப் பிரிந்து போய்த் தான் ஈன்று அணிமைத்தாகிய பச்சிளங்குழந்தையை; தீவகம் பொருந்தி-மணிபல்லவத்தீவை எய்தி; தனிக்கலக் கம்பலச்செட்டி கைத்தரலும்-கடலின்கண் ஒற்றை மரக்கலத்தோடு அத்தீவின் மருங்கின் வந்த கம்பளச் செட்டி என்னும் காவிரிப்பூம் பட்டினத்துச் செட்டியின்பால் கையடை செய்து கொடுத்து அக்குழவியை அதன் தந்தையிடத்து ஒப்புவிக்குமாறு கூற; அவன் வணங்கிக் கொண்டு வங்கம் ஏற்றி கொணர்ந்திடும் அந்நாள் கூர்இருள் யாமத்து-பீலிவளையை அச்செட்டி வணங்கி ஏற்றுக் கொண்டு அக்குழவியைத் தன் மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டு வருகின்ற அந்த நாளின் மிக்க இருளையுடைய நள்ளிரவிலே; அம்பி அடைகரைக்கு அணித்தா கெடுதலும்-அம்மரக்கலம் காவிரிப்பூம்பட்டினத்துக் கடல் கரைக்கு அணித்தாக வரும்பொழுது கெட்டொழிந்ததாக; மரக்கலம் கெடுத்தோன்-தன் மரக்கலத்தை இழந்த அச்செட்டி அக்குழவியையும் காணப்பெறானாய் உடைமரம் பற்றி உய்ந்து கரை ஏறி அச்செய்தியை; அரைசற்குணர்த்தலும் அவன் அயர்வு உற்று விரைவனன் தேடி விழாக்கோள் மறப்ப-சோழ மன்னனுக்கு அறிவித்தலும் அதுகேட்ட அம்மன்னவன் மகவன்பினால் பெரிதும் வருந்தி விரைந்து அக்குழந்தையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுதலாலே தான் தன் முன்னோர் முறைப்படி தன் நகரத்தின்கண் இந்திரவிழா எடுத்தலை மறந்தொழிய என்க.

(விளக்கம்) வென்வேல்-வெற்றிவேல். கிள்ளி-நெடுமுடிக்கிள்ளி. பீலிவளையின் வரலாறு இருபத்தைந்தாம் காதையில் (178-185) காண்க. புனிறு-ஈன்றணித்தாங் காலம். தீவகம்-மணிபல்லவம். தனிக்கலம்-ஒற்றை மரக்கலம்; கம்பலச் செட்டி, காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்பவனாதலின் அவன்பால் கையடை செய்தனள் என்க. பீலிவளை தன்னாட்டரசியாதலின் கம்பலச் செட்டி வணங்குதல் வேண்டிற்று. வங்கம்-மரக்கலம். அணித்தக என்க. அம்பி-மரக்கலம். மைந்தன்-குழவி என்னும் பொருட்டு. அரைசன்; நெடுமுடிக்கிள்ளி. தேடி-தேட. விழாக்கோள்-விழாச் செய்தலை மேற்கொள்ளுதல்.

இதுவுமது

13-22 : தன்விழா............நோக்கி

(இதன் பொருள்) வானவர் தலைவன் தன் விழாத் தவிர்தலின்-அமரர் அரசனாகிய இந்திரன் தனக்குரிய திருவிழா கைவிடப்பட்டமையின்; நின் உயிர்த்தந்தை நெடுங்குலத்து உதித்த மன்உயிர் முதல்வன் மகர வேலையுள் முன்னிய வங்கம் முங்கிக் கேடுற-மணிமேகலாய்! நினக்கு உயிர் போன்ற தந்தையாகிய கோவலனுடைய நெடிய குலத்தில் முன்பு தோன்றியவனும் மன்னுயிர்கட்கெல்லாம் பேரருள் செய்யும் தலைவனும் ஆகிய வணிகன் ஒருவன் சுறாமீன்கள் திரிகின்ற கடலினுள் முற்பட்டியங்கிய தன் மரக்கலம் முழுகிக் கெட்டமையால்; பொன்னின் ஊசி பசுங் கம்பளத்து துன்னியத என்னதொடு கடல் உழந்துழி-பொன்னாலியன்ற சிறிய ஊசி ஒன்று பச்சை நிறமான மாபெரும் சம்பளத்தின்கண் பொருந்தினாற் போன்று தோண்டப்பட்ட மாபெரும் கடலின்கட் கிடந்து நீந்தி வருந்திய பொழுதும்; எழுநாள் எல்லை இடுக்கண்வந்து எய்தா வழுவாச்சீலம் வாய்மையின் கொண்ட பான்மையின்-ஏழு நாள் முடியும் அளவும் தன் உயிர்க்கு இறுதியாகிய சாத்துன்பம் வந்து உறாமைக்குக் காரணமான பிறழாத சீலத்தையும் நால்வகை வாய்மையோடு மேற்கொண்டு அவ்வணிகன் ஒழுகினமையால்; தனது பாண்டு கம்பளம்தான் நடுக்குற்ற தன்மை நோக்கி-(இந்திரன்) தன்னுடைய வெண்ணிறக் கம்பளமாகிய இருக்கை தானே நடுங்குதலுற்ற தன்மையை அறிந்து என்க.

(விளக்கம்) வானவர் தலைவன்  மன்னுயிர் முதல்வன் மேற்கொண்ட பான்மையினால் தனது கம்பளம் நடுக்குற்ற தன்மை நோக்கி என இயைக்க, தந்தை: கோவலன். முதல்வன் என்றது, கோவலன் முன்னோனாகிய ஒரு வணிகன். முங்கி-முழுகி. பொன்னூசி-வணிகனுக்கும், பசுங்கம்பளம்-கடலுக்கும் உவமை. பொன்னின் ஊசி மரக்கலத்திற்கு உவமை என்பாரும் உளர். அவர் மன்னுயிர் முதல்வன் பொன்னின் ஊசி பசுங்கம்பளத்துத் துன்னியதென்ன தொடுகடல் உழந்துழி என்னும் உவமையில் பொன்னிறமான மேனி படைத்த வணிகன் கடல் நீரின் மேல் நீந்துதற்கு உவமையாகுங்கால் தோன்றும் அழகினை உணர்ந்திலர். வங்கத்திற்குப் பொன்னூசியை உவமை என்று சொல்லி அப்பொன்னையும் இரும்பாக்குதலின் அழகொன்றும் இன்மை உணர்க. தொடுகடல்:வினைத்தொகை. கடல்-சகரரால் தோண்டப்பட்டது என்னும் வழக்குப்பற்றி தொடுகடல் என்றார். உழத்தல்-வருந்தி நீந்துதல். உழந்துழியும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. இடுக்கண் என்றது-சாதலை. எய்தாமைக்குக் காரணமான சீலத்தையும் வாய்மையினையும் அவ்வணிகன் மேற்கொண்ட பான்மையினால் இந்திரனுடைய பாண்டு கம்பளம் நடுக்குற்றது என்றவாறு. எனவே இப்பாண்டு கம்பளம் அறத்தால் மிக்கோருக்கு இருக்கை ஆகும் தெய்வத்தன்மை உடைத்தாகலின் நிலவுலகின்கண் அறத்தால் மிக்கோருக்கு இடுக்கண் வந்துற்ற காலத்தே அது பொறாமல் நடுங்கும் இயல்புடையது என்பது பெற்றாம். இனி இங்ஙனமே இப்பாண்டுகம்பளம் தன்மேல் அமரும் அறவோனாகிய இந்திரனுங் காட்டில் அறத்தின் மிக்கோர் உருவாகும் பொழுதும் தன்மேல் இருக்கும் இந்திரனைத் தாங்குதல் பொறாமல் (புதிதாக உருவாகின்ற அவ்வறவோனைத் தாங்குதற் பொருட்டு) நடுங்கும் என்பதனைப் பாத்திர மரபு கூறிய காதையில் 28-29 : இந்திரன் பாண்டு கம்பளம் துளக்கியதாகலின் என்பதனாலும் அறிதல் கூடும். வாய்மை-நால்வகை வாய்மை. பாண்டு கம்பளம்-வெள்ளைக் கம்பளம். நோக்கி என்றது மனத்தால் ஆராய்ந்து என்றவாறு. கோவலனுடைய முன்னோன் இடையிருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல் உடைகலப்பட்டு கடலின்கண் சிலநாள் நீந்திய செய்தியை இளங்கோவும் ஓதுதல் (சிலப்-15:28 ஆம் அடி முதலாக) உணர்க.

இதுவுமது

23-29 : ஆதி................கூற

(இதன் பொருள்) ஆதி முதல்வன் போதி மூலத்து நாதன் ஆவோன்-ஆதி முதல்வனாகிய புத்த தேவன் போதியின் கீழ் இருந்து அருளிச் செய்த அறங்களை உலகத்திற்கு எடுத்தோதும் வழி நிலைத் தலைவன் என்னும் போதிசத்துவன் ஆகும் தகுதியை இனிப் பெறப்போகின்ற ஒரு வணிகன்; நளிநீர்ப் பரப்பின் எவ்வமுற்றான் தனது-செறிந்த நீர்ப்பரப்பாகிய கடலின்கண் தனது கலம் முழுகிவிட்டமையால் துன்பம் உறுவானுடைய; எவ்வம் தீர் என-துன்பத்தை நீ சென்று தீர்த்து உய்விப்பாயாக என்று தன் பக்கலில் இருந்த தெய்வத்திற்குப் பணித்தமையாலே அத்தெய்வம் சென்று அவ்வணிகனே; பவ்வத்து எடுத்து-அக்கடலினின்றும் கரையேற்றிய பின்னர் அவன்; பாரமிதை முற்றவும்-பாரமிதை பத்தானும் நிரம்பவும்; அற அரசு ஆளவும் அறஆழி உருட்டனும் அறம் நிலவும் அரசாட்சி செய்யவும் அறமாகிய சக்கரத்தை உருட்டவும்; பிறவிதோறு உதவும் பெற்றியள் என்றே சாரணர் அறிந்தோர் காரணங் கூற-அந்த வணிகனுக்குப் பின்னர் நிகழும் பிறப்புகள்தோறும் உதவி செய்யும் தன்மையன் ஆயினள் அப்பெண் தெய்வம் என்று அந்தரசாரிகள் ஆகிய சாரணருள் இந்நிகழ்ச்சியை அறிந்தவர் நின்பெயருக்குக் காரணமாகக் கூறுதலாலே என்க.

(விளக்கம்) புத்தர்கள் கவுதம புத்தருடைய காலத்துக்கு முன்னரே உலகின்கண் அறம் குறைந்த காலந்தோறும் பிறந்து அவ்வப்போது மீண்டும் அறத்தை நிலைநாட்டிச் சென்றனர்; அவ்வாறு தோன்றினோர் எல்லாம் ஆதி புத்தர் அருளிய அறத்தையே மீண்டும் பரப்பினர் ஆதலின் அவரெல்லாம் புத்தர் அவதாரம் என்றே மதிக்கப்பட்டனர். இவரைப் போதி சத்துவர் என்றும் கூறுவர். போதி சத்துவர் என்பதன் பொருள்-ஞானத்தின் ஆற்றலை முழுதும் பெற்றவர் என்பதாம். எனவே ஈண்டு மரக்கலம் முழுகிக் கடலில் மிதந்த வணிகன் இப்பிறப்பில் வழுவாச் சீலம் வாய்மையிற் கொண்ட பான்மையினன் ஆதலின் எதிர்காலத்தே புத்தனாகும் தகுதியுடையோன் ஆவான்; அவன் செய்த அறமே ஏழுநாள் காறும் அலைகடலில் உயிர்போகா வண்ணம் காத்து வருகின்றது ஆயினும் அலைகடலில் அவன் இன்னும் நீந்தி வருந்தா வண்ணம் காத்தல் நம் கடன் என்பான் தன் அருகிருந்த தெய்வத்தை நோக்கி நீ சென்று எவ்வம் தீர் என்று பணித்தான். இவ்வரலாறு இந்நூலின்கண் கூறப்பட்டமையின் அவற்றையே ஈண்டும் பாட்டிடை வைத்தலின் ஓதுவோர் குறிப்பாக உணர்ந்து கொள்ளக்கூடும் என்று கருதிச் சொல் பல்கா வண்ணம் சுருக்கமாகவே நூலாசிரியர் கூறுதல் உணர்க. பாரமிதை உடம்பு நேரவும் உறுப்பே நேரவும் பொருள் நேரவும் தானம் முதல் ஞானமீறாக உள்ள பத்தும் நிரம்புதல். பெற்றியள்-தன்மையள். சாரணருள் அறிந்தோர் கூற என்க.

இதுவுமது

30-36 : அந்த..............படர்ந்தனம்

(இதன் பொருள்) அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை-அவ்வாறு தன் குல முதல்வனுக்கு அத்தெய்வம் செய்த உதவியின் நினைவுக்குறியாக அம்மணிமேகலை என்னும் தெய்வத்தின் பெயரை; நினை தந்தை இட்டனன்-உனக்கு உன் தந்தை சூட்டினன்; தையல் நின் துறவியும் அன்றே கனவில் கனவு என அறைந்த மெல்பூ மேனி மணிமேகலா தெய்வம் என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து தையால்! நின்னுடைய துறவறச் செய்தியையும் அற்றை நாளிலேயே நின் தாயாகிய மாதவியின் கனவிலே நனவுபோலத் தோன்றி அறிவித்தருளிய மெல்லிய மலர் போன்ற அம்மணிமேகலா தெய்வம் சாபம் இட்டாற் போன்றே அவ்விழாவிற்குரிய இந்திரன் இட்ட சாபத்தாலே; நகர் கடல் கொள்ள-அக்காவிரிப் பூம்பட்டினமாகிய நகரத்தைக் கடல் விழுங்கிக் கொள்ளுதலால்; நின் தாயரும் பகரும் யானும் நின் பொருட்டால் இ பதி படர்ந்தனம்-உன்னுடைய தாயராகிய மாதவியும் சுதமதியும் நினக்கு அறங்கூறுதற்குரிய யானும் உனக்கு அறங்கூறவும் உன்னைக் காணவும் இக்காஞ்சி மாநகரத்திற்கு வந்தேம் என்றார் என்க.

(விளக்கம்) உதவி-தன் முன்னோனுக்கு உயிர் தந்த உதவி. அவள்-அம்மணிமேகலா தெய்வம். நினை தந்தை இட்டனன் என மாறி நினக்கு என இரண்டனுருபை நான்காவதாகத் திரித்துக் கொள்க. தையல் : அண்மை விளி. துறவி-துறவு நிகழ்ச்சி. அன்றே என்றது நினக்கு நின்தந்தை பெயர் சூட்டிய அற்றை நாள் இரவே என்றவாறு. கனவில் நனவு என என்றது நனவில் வந்து சொல்வது போல விளக்கமாக என்றவாறு. தெய்வத்திற்கு ஒப்ப அவன் இடுசாபம் என்றதனால் தெய்வமும் சாபமிட்டமை பெற்றாம். இது பாட்டிடைவைத்த குறிப்புப் பொருள். மணிமேகலா தெய்வம் மாதவியின் கனவில் தோன்றி நீ காமன் கையறக் கடுநவை அறுக்கும் மாபெரும் தவக்கொடி ஈன்றனை என்றே நனவே போலக் கனவகத் துரைத்தேன் ஈங்கு இவ்வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று அந்தரத்து எழுந்து ஆங்கு அருந்தெய்வம் போயபின் என (7:36-40) முன்னம் வந்தமையானும் உணர்க. அவன் : இந்திரன். நகர்-காவிரிப்பூம்பட்டினம். பகரும் யானும் என மாறுக. இதனால் மணிமேகலைக்கு அறங்கூறும் செயல் தம்முடையதாம் என அடிகளார் முன்னரே இருத்தி ஞானத்தால் உணர்ந்திருந்தனர் என்பது பெற்றாம். நின் பொருட்டால் என்றது நினக்கு அறங்கூறும் பொருட்டும் நின்னைக் காணும்பொருட்டும் என இரு பொருளும் பயந்து நின்றது. பதி : காஞ்சிமா நகரம். படர்ந்தனம் : தன்மைப் பன்மை வினைமுற்று.

மணிமேகலை வேண்டுகோள்

37-45 : என்றலு.............என்ன

(இதன் பொருள்) என்றலும்-என்று கூற அது கேட்ட மணிமேகலை; அறவணன் தாள் இணை இறைஞ்சி பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் தீவதிலகையும் இத்திறம் செப்பினள் ஆதலின்-அறவண அடிகளாரின் திருவடிகளை வணங்கி அடிகேள்! பொன்னொளி விளங்குகின்ற புத்தபீடிகையை நாளும் வழிபட்டுப் போற்றுகின்ற தீவதிலகை என்னும் தெய்வமும் அம்மணிபல்லவத் தீவின்கண் இச்செய்திகளை இவ்வாறே அறிவித்தனள். ஆதலால் அவள் கூறியவாறே; அனை அணிநகர் மருங்கே வேறு உருக்கொண்டு வெவ்வேறு உரைக்கும் நூல் துறை சமய நுண் பொருள் கேட்டே-அந்த அழகிய வஞ்சி மாநகரத்தின் பக்கலிலே எனது பெண்ணுருவம் சுரந்து மாதவனாகிய மாற்றுருவம் கொண்டு சென்று அவ்விடத்தே தம்முள் மாறுபட்டு வேறு வேறாகக் கூறுகின்ற சமயநூல் வழிப்பட்ட பல்வேறு சமயக்கணக்கரிடத்தும் அவ்வவர் சித்தாந்தமாகிய நுண்பொருள்களை வினவிக் கேட்ட பின்னர்; ஐவகைச் சமயமும் அ உருவெனை செவ்விது அன்மையில் சிந்தையின் வைத்திலேன்-அவற்றை யான் ஆராய்ந்து பார்த்தவிடத்தே அளவை வாதம் முதலிய ஐந்து வகையினுள் அடங்கும் அச்சமயக்கணக்கர் சித்தாந்தம் அனைத்தும் யான் மேற்கொண்டுள்ள அம்மாதவன் வடிவம் போன்றே பொய்யாய்ச் செம்மை உடையன அல்லாமை காணப்பட்டமையின் அவை மறக்கற்பாலன் என்று துணிந்து என் சிந்தையின்கண் வையாதுவிடுத்தேன் ஆதலின்; அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன-இப்பொழுது அடிகள் எனக்கு மெய்யேயாகிய செம்பொருளை அறிவித்தருளுக என்று வேண்டா நிற்ப என்க.

(விளக்கம்) புத்த பீடிகை-மணிபல்லவத்தில் அமைந்த புத்தபீடிகை. தீவதிலகை என்னும் தெய்வமும் இச்செய்திகளை இவ்வாறே கூறினாள் என்றாள். இவற்றை யான் முன்னரே அறிந்தளேன் என்றறிவித்தற்கு. அணிநகர் என்றது-வஞ்சி நகரத்தை ஐவகைச் சமய நுண் பொருளும் வெறும் பொய் என்பதற்குத் தான் கொண்டிருந்த அப்பொய்யுருவமாகிய அம்மாதவன் உருவத்தையே உவமை எடுத்துக்கூறிய அழகு உணர்க. சமயம் என்னும் சாதியொருமை பற்றி செவ்விது என்று ஒருமை முடிபேற்றது. பன்மை ஒருமை மயக்கம் என்பாரும் உளர்.

(46 ஆம் அடியாகிய இது முதல் இக்காதை முடியுங்காறும் அறவண அடிகளார் மணிமேகலைக்கு அறம் செவியறிவுறுத்துதலாய் ஒரு தொடர்)

அறவணர் அறங்கூறத் தொடங்குதல்

46-56 : நொடிகுவெ.................பிற

(இதன் பொருள்) நங்காய் நொடிகுவென் நீ நுண்ணிதின் கேள்-நங்கையே! நீ விரும்பியவாறே யான் உனக்கு அம்மெய்ப்பொருளைச் சொல்லுவேன் நீயும் விழிப்புடன் கூர்ந்து கேட்பாயாக; ஆதி சினேந்திரன் ஏதம் இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன அளவை இரண்டே-ஆதி பகவனாகிய புத்தர் தலைவன் குற்றம் இல்லாத காட்சி அளவையும் குற்றமில்லாத கருத்தளவையும் என்று அளவைகள் இரண்டே என்று வரையறை செய்துள்ளான்; சுட்டு உணர்வை பிரத்தியக்கம் எனச் சொலி நாம சாதி குணகிரியைகள் விட்டனர்-அவ்விரண்டனுள் ஐம்பொறிகளால் தனித்தனியே அவ்வவற்றிற்குரிய புலன்களைச் சுட்டி உணர்ந்து கொள்ளுதல் மட்டுமே காட்சி அளவையாம் என்று அறுதியிட்டுக் கூறி அளவைவாதி முதலியோர் கூறுகின்ற பெயர் வகை பண்பு செயல் முதலியவற்றைக் காட்சி அளவையோடு கூட்டாது ஒழித்து விட்டனர், ஏற்றுக்கெனின்; மற்று அவை அனுமானத்தும் அடையும் என-அப்பெயர் முதலியன காட்சி அளவைக்கு மட்டுமே உரியன ஆகாமல் கருத்தளவையினும் எய்தும் எனக் கருதியதனாலாம், இனி; காரண காரிய சாமானிய கருத்து ஓரின் பிழைக்கையும் உண்டு-அவர் கருத்தளவையினும் காரணக் கருத்தளவை காரியக் கருத்தளவை சாமானியக் கருத்தளவை என்று வகைப்படுத்திக் கூறும் கருத்தளவைகளைக் கூர்ந்து ஆராயுமிடத்து அவையும் பிழைபடுதலும் உண்டு; பிழையாததும் உண்டு-அவற்றில் பிழைபடாத அளவையும் ஒன்றுண்டு, அஃது யாதெனின்; கனலில் புகைபோல் காரியக் கருத்து-நெருப்பின் காரியமாகிய புகைபோன்ற காரியத்தை ஏதுவாகக் கொள்ளுகின்ற கருத்தளவை ஒன்றுமேயாம்; ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் ஆன முறைமையின்-பிறர் கூறுகின்ற ஏனைய அளவைகள் எல்லாம் ஆராய்ச்சியால் தோன்றுகின்ற முறைமை காரணமாக; அனுமானமாம் பிற-கருத்தளவையின்கண் அடங்குதலின் கருத்தளவை என்றலே அமையும் என்றார் என்க.

(விளக்கம்) நொடிகுவென்-சொல்லுவேன்; ஆதி சினேந்திரன் என்றது முதன் முதலாகப் பவுத்த சமயத்தை உலகில் பரப்பியவன். அந்த ஆதிப்புத்தன் காட்சி அளவையும் கருத்தளவையும் என இரண்டு அளவைகளே கொண்டனன். இவற்றுள் குற்றம் உடையனவும் உள. அவை கொள்ளப்படா என்பார் ஏதும் இல் பிரத்தியம் கருத்தளவு என்றார். ஏதும் இல் கருத்தளவு என்றும் பிரத்திய அளவு என்றும் இச்சொற்களை இரண்டிடத்தும் கூட்டிக் கொள்க. பிரத்தியம்-பிரத்தியக்கம் என்பதன் சிதைவு. பிரத்தியக்கம் எனினும் காட்சி எனினும் ஒக்கும். கருத்து எனினும் அனுமானம் எனினும் ஒக்கும். இனி, காட்சி காண்டல் என்பன சவிகற்பக் காட்சிக்கும் பொதுவாதலால் பிரத்தியம் சுட்டுணர்வாய் வேறுபடுவது பற்றி மொழி பெயர்க்கா தொழிந்தார் என உணர்க என்பாரும் உளர். அங்ஙனமாயின் அவரே பிரத்தியம் என்னும் சொல்லுக்குக் காட்சி என்று பொருளுரைத்தல் போலியாம்; மேலும் காட்சி அளவைக்குச் சுட்டல் திரிதல் கவர்கோடல் சுட்டுணர்வொடு திரியக்கோடல் என்றும் ஐயம் தேராது தெளிதல் கண்டுணராமை என்றும் கூறியவாற்றால் அறிக என்று அவர் கூறிய விளக்கமும் போலியாம். என்னை? காட்சி அளவைக்குப் பவுத்தர்கள் இக்குற்றங்களைக் கூறார் ஆதலின் காட்சிக்கு இங்ஙனம் குற்றம் கூறுவார் அளவை வாதி முதலியோராவார். பவுத்தர்கள் குற்றமும் ஒன்று உளது என அதனை விலக்குதற்கு ஈண்டு ஏதம் இல் பிரத்தியம் என்றார். காட்சிக்கு உரிய குற்றம் பிரத்தியக்க விருத்தம் என்பதாம். அதன் இயல்பினைச் சிறிது போக்கிக் கூறுவதும், ஆதி சினேந்திரனால் கொள்ளப்பட்ட காட்சி அளவை வேறு பிறர் கூறும் காட்சி அளவை வேறு என்பது தோன்ற, சுட்டுணர்வைப் பிரத்தியக்கம் எனச்சொல்லி அதற்கு ஏனையோர் கூறும் குணமும் குற்றமும் கொள்ளாது விட்டனர் என்றார். எனவே ஈண்டுச் சுட்டுணர்வு என்று அறவணர் கூறுகின்ற காட்சி அளவையின் இயல்பு வேறு, அளவை வாதிகள் கூறுகின்ற காட்சி அளவையின் இயல்பு வேறு என்றுணர்தல் வேண்டும். அளவை வாதிகள் சுட்டு என்பது காட்சி. அளவையின் ஒரு குற்றமாகக் கொண்டனர். ஈண்டுச் சுட்டுணர்வே ஏதம் இல் காட்சி என்று அறவணவடிகள் கூறுதலைக் கூர்ந்து நோக்காது இதற்கும் அளவை வாதிகள் கூறுகின்ற சுட்டிற்கும் வேறுபாடு உணரமாட்டாமல் இரண்டிற்கும் ஒரு படித்தாக உரைகூறும் கூற்றுப் போலியாம் என்க. மேலும் இப்பிரத்திய அளவைக்கு அவர்கள் கூறும் விளக்கம் எல்லாம் பொருந்தாதனவேயாம். அவற்றை அவர் உரை நோக்கி உணர்க.

இனி, பவுத்தர்கள் கூறுகின்ற வாயில் ஊறு நுகர்வு என்னும் மூன்றன் கூட்டரவினால் உண்டாகும் உணர்வே காட்சி அளவை என்று கொள்வர். எனவே அவருடைய அறிவுக் கந்தமும் நுகர்ச்சிக் கந்தமும் ஒன்றுபடுங்கால் உயிரின் உணர்வு தெரிவது காட்சி அளவை என்று கொண்டனர் என்பது 30 ஆம் காதையினும் விளக்குவாம். ஈண்டுச் சுட்டுணர்வு என்பதும் நுகர்ச்சிக் கந்தத்தையேயாம் என்றுணர்க. நுகர்ச்சிக் கந்தம் எனினும் வேதனை எனினும் ஒக்கும். எனவே சிவஞான சித்தியாரில் தன்வேதனைக் காட்சி என்பது மட்டுமே அவர் கூறுகின்ற சுட்டுணர்வு அல்லது பிரத்தியக்கம் என்றறிக. இனி, காண்டல் வாயில் மனம் தன் வேதனையோடு யோகக் காட்சியெனச் சைவ வாதிகள் கூறுகின்ற நால்வகைக் காட்சிகளுள் தன்வேதனைக் காட்சி ஒன்றுமே பவுத்தர்களுக்குக் காட்சி அளவையாம் என்பது பெற்றாம். இனி அளவைவாதிகள் காட்சி அளவைக்குக் கூறுகின்ற நாமசாதி குணக்கிரியைகள் கருத்தளவைக்கும் செல்லுதலின் அவற்றைக் கைவிட்டனர். இனி அனுமானத்திற்குக் கூறுகின்ற காரணகாரிய சாமானியங்களும் பிழைபடும் என அவற்றையும் பவுத்தர்கள் கைவிட்டனர். இனி அனுமானத்திற்குக் கூறுகின்ற காரணகாரிய சாமானியங்களும் பிழைபடும் என அவற்றையும் பவுத்தர்கள் கைவிட்டனர். ஆயினும் அவற்றுள் கனலில் புகைபோல் என வருகின்ற காரியானுமானம் மட்டும் பவுர்த்தர்களுக்கும் உடன்பாடேயாம். இவற்றை யன்றி அளவை வாதிகள் கூறுகின்ற ஏனைய உவமம் ஆகமம் அருத்தாபத்தி ஐதிகம் அபாவம் மீட்சி யொழிவறிவு எய்தியுண்டாம் நெறி என்னும் எட்டளவைகளும் கருத்தளவின்கண் அடங்குவனவாதலின் அவற்றை வேறளவையாகக் கொள்ளுதல் இலேம் என்பார் ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் ஆன முறைமையின் அனுமானமாம் என்றார். பிற: அசைச் சொல்.

கருத்தளவையின் உறுப்புகளும் அவற்றின் இயல்புகளும்

57-67 : பக்கம்...................ஆகும்

(இதன் பொருள்) பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம் நிகமனம் என்ன ஐந்து உள-இனி இரண்டாவதாகிய கருத்தளவைக்கு மேற்கோளும் ஏதுவும் எடுத்துக் காட்டும் உபநயமும் நிகமனமும் என்று கூறப்படுகின்ற ஐந்து உறுப்புகள் உள்ளன; அவற்றில் பக்கம் இம்மலை நெருப்பு உடைத்து என்றல்-அவ்வைந்தனுள் முன்னிறுத்தப்ப்ட்ட மேற்கோள் ஆவது இந்த மலை நெருப்பினை உடையதாம் என்று கூறுதல்; ஏது-அங்ஙனம் கூறுதற்கு ஏதுவாவது; புகை உடைத்து ஆதலால் எனல்-இம்மலை தன்னிடத்தே புகை உடையதாய் இருத்தலால் எனல் அம்மேற்கோளுக்குப் பொருந்திய ஏதுக்கூறியவாறாம்; திட்டாந்தம் வகை அமை அடுக்களை போல்-இனித் திட்டாந்தம் எனப்படுவது பலவகையாக அமைந்த அடுக்களை போன்று என ஒன்றினை எடுத்துக் காட்டுதல்; உபநயம் மலையும் புகை உடைத்து என்றல்-இனி உபநயம் ஆவது இம்மலையும் புகையுடையது என்று கூறுதல்; நிகமனம் ஆவது புகை உடையது எதுவோ அது நெருப்பும் உடையது ஆம் என்று கூறுதல்; நெருப்புடைத்து அல்லாது யாதொன்று அது புகைப்பொருத்தம் இன்று புனல்போல் என்றல்-யாதொரு பொருள் நெருப்புடையது அல்லாத பொருளோ அது புகைப் பொருத்தமும் இல்லாததாம் நீர் போல என்று கூறுதல்; மேவிய பக்கத்து மீட்சி மொழியாய்-பொருந்திய மேற்கோளின் நின்றும் எதிர்மறைச் சொல்லாய்; வைதன்மிய திட்டாந்தம் ஆகும்-எதிர்மறை எடுத்துக்காட்டாகும் என்றார் என்க.

(விளக்கம்) பக்கம்-மேற்கோள். ஏது-கருவி. திட்டாந்தம்-எடுத்துக்காட்டு, உபநயம்-துணிந்தது துணிதல், நிகமனம்-நிலை நாட்டுதல் என நிரலே தமிழில் கூறிக்கொள்க. இனி எதிர்மறை எடுத்துக் காட்டாவது: நிலை நாட்டிய தொன்றனை மேற்கோளின் மறுதலைப் பொருள் ஒன்றனை எடுத்துக் காட்டுமாற்றானும் உறுதியூட்டுதல். இங்ஙனம் கூறும் எடுத்துக்காட்டை வைதன்மிய திட்டாந்தம் என்பர். ஈண்டு மேற்கோளாகிய நெருப்பிற்கு மறுதலைப் பொருளாகிய புனலின்கண் புகையின்மையில் அதனை எடுத்துக் காட்டுதல் காண்க. மீட்சி மொழி-மறுதலைச் சொல், என்றது புனலை. புனல்-நீர். வைதன்மிய திட்டாந்தம்-எதிர்மறை எடுத்துக்காட்டு. எனவே முன் கூறிய எடுத்துக்காட்டாகிய அடுக்களை உடன்பாட்டு எடுத்துக்காட்டு என்பார், வகை அமை அடுக்களை என்றார். வகை-பண்பு வகை எனவே அதனைச் சாதன்மிய திட்டாந்தம் என்ப.

இதுவுமது

68-76 : தூய................என்க

(இதன் பொருள்) தூய காரிய ஏது சுபாவம் ஆயின்-இனி மேற்கோளைச் சாதிப்பதில் சிறந்ததாகிய காரிய ஏது மேற்கோளுக்கு இயல்பாய பண்பாயின்; சத்தம் அநித்தம் என்றல் பக்கம்-ஒலி அழியும் பொருள் என்பது மேற்கோள்; பண்ணப்படுதலால் எனல் பக்கதன்ம வசனமாகும்-செய்யப்படுவதால் என்றல் மேற்கோளின் இயல்பு கூறும் மொழியாகும்; யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது அநித்தம் கடம் போல் என்றல்-யாதொரு பொருள் யாதொரு பொருள் பண்ணப்படுவதோ அப்பொருள் அழியும் பொருளாகும் குடம்போல் என்று கூறுதல் மேற்கோளோடு தொடர்ச்சியுடைய உடன்பாட்டு மொழியாம்; யாதொன்று அநித்தம் அல்லாதது பண்ணப்படாதது ஆகாசம் போல் எனல்-யாதொரு பொருள் அழியாத பொருளாய் இருக்குமோ அப்பொருள் ஒருவரால் செய்யப்படாத இயற்கைப் பொருளாகவும் இருக்கும் வானம் போல் என்று கூறுதல்; விபக்க தொடர்ச்சி மீட்சி மொழி என்க-மேற்கோளின் மறுதலைப் பொருளொடு தொடர்புடைய மறுதலை மொழி என்றார் என்க.

(விளக்கம்) முன்னர் அளவை வாதிகள் கூறும் காரணம் காரியம் சாமானியம் என்னும் முவ்வகை அனுமானங்களும் ஆராயுமிடத்துப் பிழைபடுதலும் உண்டு, அவற்றுள் காரியானுமானத்தில் அவ்வளவைவாதிகள் கனலில் புகைபோல் என்று கூறும் காரியானுமானம் மட்டும் ஒரோ வழி, பிழைபடாதது ஆதலும் கூடும் என்றார் ஈண்டு அவர் கூறும் அவ்வனுமானம் போல எவ்வாற்றானும் பிழைபடாத காரியானுமானம் இது என்பார் தூய காரிய ஏது சுபாவம் ஆயின் சத்தம் அநித்தம் என்றால் என்றார். இங்ஙனம் கூறுமிடத்து சத்தம் அநித்தம் என்பது மேற்கோள். பண்ணப்படுதலால் என்பது ஏது. இவ்வேது மேற்கோளின் தன்மையை அறிவுறுத்துதலின் அதுவே மேற்கோளின் தன்மையைக் கூறும் மொழியாகவும் அமைதலின் அதனைப் பக்கதன்ம வசனம் ஆகும் என்றார். யாதொன்று யாதொன்று கடம் போல் என்றல் தன் மேற்கோளோடு தொடர்புடைய மொழியாகிய எடுத்துக் காட்டாகும். இதற்கு எதிர்மறை எடுத்துக்காட்டு ஆகாசம் ஆம். சபக்கம் உத்தேசமாக எடுத்துக் கொண்ட மேற்கோள்; இதன் மறுதலை விபக்கம் என்றறிக. மீட்சிமொழி: எதிர்மறைச் சொல்.

இதுவுமது

77-84 : அநன்னு............ஆகும்

(இதன் பொருள்) அநன்னு வயத்தில் பிரமாணமாவது-பொருளும் ஏதுவும் சேர்ந்திராத இடத்தில் அவற்றின் இன்மையைக் காண்டற்கு அளவையாவது; இவ்வெள் இடைக்கண்-இந்த வெற்றிடத்தில்; குடம் இலை என்றால் செவ்விய பக்கம்-இந்த வெற்றிடத்தில் குடம் இல்லை என்று துணிதல் செம்மையான மேற்கோளாகும்; தோன்றாமை இல் எனல்-காணப்படாமையால் இல்லை என்று கூறும் ஏது; பக்க தன்ம வசனமாகும்-மேற்கோளின் தன்மை உணர்த்தும் மொழியாகும்; இன்மையின் கண்டிலம் முயற்கோடு (போல்) என்றல் அந்நெறிச் சபக்கம்-இல்லாமையால் யாம் கண்டிலேம் முயற்கொம்பைக் காணமாட்டாமை போல என்பது அவ்வழியில் உடன்பாட்டு மேற்கோள் தொடர்ச்சி எடுத்துக்காட்டாகும்; யாதொன்று உண்டு அது தோற்றரவு அடுக்கும்-யாதொரு பொருள் ஓரிடத்தில் உளதாம் அது காட்சிக்குப் புலப்படும்; கை நெல்லி போல் எனல் ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்-அகங்கையில் இருக்கின்ற நெல்லிக்கனி போல என்று மொழிதல் இதற்கேற்ற மறுதலை மீட்சி மொழி என்று கூறலாம் என்றார் என்க.

(விளக்கம்) அநன்னுவயம்-பொருளும் ஏதுவும் இல்லாமை. அவ்வில்லாமையைத் துணிதலே ஈண்டு மேற்கோளாம் என்க. அதற்குப் பொருள் தோன்றாமையே ஏதுவாயிற்று. இல் பொருளுக்குத் தோன்றாமையே இயல்பும் ஆயிற்று என்பார் இல்லை என்றால் பக்கம் எனவும் தோன்றாமையால் இல்லை என்றல் அவ்வில்லாமையின் இயல்புணர்த்தும் மொழியும் ஆதல் உணர்க. இன்மையால் கண்டிலம் முயற்கொம்பினைக் காணமாட்டாமைபோல என்றது மேற்கோளைத் தொடர்ந்து வந்த எடுத்துக்காட்டு என்பார் அந்நெறிச் சபக்கம் என்றார். இன்மைக்கு உண்மை மறுதலையாகலின் தோன்றுதலும் கைநெல்லிபோல் என்னும் எடுத்துக்காட்டும் அநன்னுவயத்தில் மேற்கோளின் மறுதலையைத் தொடர்ந்து வந்த மொழிகள் ஆயின என்க.

அறவண அடிகள் பிறர்தம் மதங்கூறி மறுத்தல்

85-95 : இவ்வகை.............வேண்டும்

(இதன் பொருள்) இவ்வகை ஏது பொருள் சாதிப்பன-மணிமேகலாய் ஈண்டு யாம் கூறியவாறே ஏதுவினால் துணிபொருள் சாதிக்கப்படுவனவாம்; காரியம் புகை சாதித்தது என்னை என்னின்-அளவைவாதி முதலியோரைக் காரியானுமானத்தில் காரியமாகிய புகை துணிபொருளை எவ்வண்ணம் சாதித்தது என்று வினவின் அவர் யாம் மேலே கூறியவாறு கூறாமல் பின்வருமாறு கூறுவர்; புகை உளவிடத்து நெருப்பு உண்டு என்னும் அன்னுவயத்தாலும்-புகை இருக்குமிடத்தே சாதன சாத்தியம் ஒருங்கிருத்தல் என்னும் அன்னுவயத்தாலும்; நெருப்பிலா இடத்து புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும்-நெருப்பு இல்லாத இடத்தில் புகையும் இல்லை என்னும் எதிர்மறையானும்; புகைஇ-புகையானது; நெருப்பைச் சாதித்தது என்னின்-நெருப்புண்மையை அறிவித்தது என்பர், இங்ஙனம் கூறின்; நேரிய புகையின் நிகழ்ந்து உண்டான ஊர்த்தச் சாமம் கவுடிலச் சாமம்-நுணுகிய புகையின் வாயிலாய் நிகழ்ந்து உண்டான மேல்நோக்கிய செலவும் வளைந்து செல்லும் செலவும் என்னும் இருவகைக் காரியங்களே; வாய்த்த நெருப்பின் வருகாரியம் ஆதலின்-தமக்குக் காரணமாக வாய்த்த நெருப்பினின்றும் தோன்றி வருகின்ற காரியங்கள் ஆதலின்; மேல் நோக்கிக் கறுத்து இருப்ப-மேல் நோக்கிச் சென்று கறுத்திருப்பனவும்; பகைத்திருப்ப தாமே-இவ்வாறு மேல் நோக்கிச் செல்லுதலினின்றும் மாறுபட்டு வளைந்து சென்று வெளுத்திருப்பனவும் ஆகிய காரியங்களால் உண்டான பொருள்கள் தாமும்; நெருப்பைச் சாதிக்க வேண்டும்-தாம் தோன்றிய நிலைக்களத்தே நெருப்புண்மையை அறிவித்தல் வேண்டும் அன்றோ? அக்காரியங்கள் தோன்றும் நிலைக்களத்தில் நெருப்பில்லாமையின் அக்காரியானுமானம் பொருந்தாது என்றார் என்க.

(விளக்கம்) அறவண அடிகள் முன்னர் ஏனையோர் கூறும் காரண காரிய சாமானியக் கருத்து ஓரின் பிழைக்கையும் உண்டு எனவும் அவற்றுள் பிழையாதது கனலில் புகைபோல் காரியானுமானம் என்று உடன்பட்டார்; அங்ஙனம் உடன்பட்டவர் கனலில் புகைபோல் காரியானுமானங்களும் பக்கம் முதலிய ஐந்து உறுப்புகளால் ஆராய்ந்து காண்போர்க்கே பிழைபடாததாம் என 59 ஆம் அடி முதலாக 67 ஆம் அடி இறுதியாகத் தாமே ஆராய்ந்து காட்டினர். ஈண்டு அவ்வாறன்றி அன்னுவயத்தாலும் வெதிரேகத்தாலும் காரியானுமானம் துணி பொருளைச் சாதிக்கும் என்பார் கூற்றைத் தாமே எடுத்துக் கூறி அவர் கூற்றுப் பிழைபடுமாற்றைக் காட்டி மறுத்தவாறாம். காரியம் புகை-காரியமாகிய புகை. அன்னுவயம்-சாதன சாத்தியம் ஒருங்கிருத்தல். நேரிய புகை-நுண்மையான புகை. புகைவாயிலாய் நிகழ்ந்துண்டான ஊர்த்தசாமமும் கவுடிலச்சாமமும் என்னும் இருவகைக் காரியங்கள் என்றவாறு. ஊர்த்தசாமம் கவுடிலச்சாமம் என்பன நிரலே மேல்நோக்கிச் செல்லும் காரியம் வளைந்து படர்ந்து செல்லும் காரியம் என்னும் பொருளுடையன. இக்காரியங்களால் உண்டாக்கப்பட்ட பொருள் வானத்தே கறுத்த பிழம்புகளாகவும், வெள்ளிய பிழம்புகளாகவும் கரிய பிழம்புகளாகவும் மேல்நோக்கிச் செல்லுவனவாகவும் படர்ந்து செல்லுவனவாகவும் இருப்பன புகையே அன்றிப் பிறவும் உள; அவை நெருப்பினின்றும் தோன்றுவன அல்ல; ஆகவே அக்காரியங்கள் இருந்தும் அவை நெருப்பைச் சாதிக்க மாட்டாமையின் அவர் கூறும் முறை பிழைபடுதல் அறிக; என்று அறிவுறுத்தபடியாம். இது காரியத்தை மறுத்தவாறு. கறுத்திருப்ப கைத்திருப்ப என்பன பலவறி சொல். அவை புழுதிப்படலமும் முகிற்படலமும் பனிப்படலமும் பிறவுமாம் என்க. இவற்றில் அக்காரியங்கள் உளவாதலும் உணர்க.

அன்னுவயத்திற்கு மறுப்பு

96-101 : அன்னு................கூடா

(இதன் பொருள்) அன்னுவயம் சாதிக்கின்-இனிச் சாதன சாத்தியம் ஒருங்கிருத்தலாகிய அன்னுவயங் கண்டான் பின்னர் அவற்றுள் சாதனத்தை மட்டும் கண்டுழி அதனோடு சாத்தியமும் இருத்தல் வேண்டும் என்று துணியின்; முன்னும் கழுதையையும் கணிகையையும் தம்மில் ஒரு காலத்து ஓர் இடத்தே அன்னுவயம் கண்டான்-முன்னொரு காலத்தே ஒரு கழுதையையும் ஒரு கணிகை மகளையும் ஓர் இடத்தே அணுகி நிற்கக்கண்டவன் ஒருவன்; பின் காலத்துக் கழுதையைக் கண்டு அவ்விடத்தே கணிகையை அனுமிக்க வேண்டும்-பின்னொரு காலத்தே பிறிதோரிடத்தே கழுதையை மட்டும் கண்டு அவ்விடத்தே கணிகையும் இருப்பாளாகத் துணிதல் வேண்டும்; அதுகூடா-அங்ஙனம் துணிதல் கூடாமையின் அதுவும் பிழைபடுதல் அறிக என்றார் என்க.

(விளக்கம்) அன்னுவயத்தால் பொருளுண்மை சாதிக்கக் கூடுமானால் கழுதையையும் கணிகையையும் அன்னுவயம் கண்டான் பின்னொரு காலத்தே கழுதையைத் தனித்துக் கண்டவன் அங்குக் கணிகையும் இருத்தல் வேண்டும் என்று, துணிதல் வேண்டும் என்று நகைச்சுவை பட மறுத்தவாறாம். அனுமித்தல்-துணிதல்.

வெதிரேகத்தை மறுத்தல்

101-108 : நெருப்பு..................ஆகாது

(இதன் பொருள்) நெருப்பு இலா இடத்து புகை இலை எனல் நேர் அத்திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின்-இனி நெருப்பு இல்லாத இடத்தில் புகையும் இல்லையாம் எனல் போன்ற அந்தச் சிறப்பு மிக்க எதிர்மறை துணிபொருளைச் சாதிக்கும் என்றலோ; நாய் வால் இல்லா கழுதையின் பிடரின் நரி வாலும் இலையாக் காணப்பட்ட அதனையே கொண்டு-ஒருவன் ஓரிடத்தே ஒரு காலத்தே கழுதையின் பிடரி மயிரைக் கண்டு இது நாய் வாலோ அல்லது நரியின் வாலோ என்று ஐயுற்று அணுகிப்பார்க்குமிடத்தே ஆண்டு நாய் வாலும் நரி வாலும் இல்லையாகக் காணப்பட்ட அக்காட்சியையே ஏதுவாகக் கொண்டு; பிறிதோர் இடத்து நரி வாலின் நாய் வாலை அனுமித்தல் அரிதாம் அதனால் அதுவும் ஆகாது-அவன் மற்றொரு காலத்தே வேறோரிடத்தே ஒரு வாலைக் கண்டவன் அது நரிவால் இல்லையாதல் கண்டு இது நாய் வாலும் இல்லை எனத் துணிதல் வேண்டும், அதுவும் இயலாதாம் ஆதலினால் இவ்வெதிர்மறைக் கருத்தளவையும் அளவையாகமாட்டாது என்றார் என்க.

(விளக்கம்) நெருப்பிலா இடத்துப் புகை இல்லையாம்; ஆகவே எம் மலையிடத்துப் புகையுளதோ அங்கு நெருப்பும் இருத்தல் வேண்டும் என்று துணிதற்கு இவ்வெதிர்மறை ஏதுவாதலின் இதனையும் அளவையாகக் கொள்வர் அளவை வாதிகள். அவ்வெதிர்மறை ஏதுவினை ஈண்டு அறவண அடிகளார் எடுத்துக் காட்டி நகைச்சுவை தோன்ற மறுத்தல் உணர்க. காணப்பட்ட வால் நாய் வால் ஆதலும் கூடுமாதலின் அதுவும் ஆகாது என்றவாறு. இவ்வாற்றால் கருத்தளவைக்குப் பிறர் கூறும் காரியமும் அன்னுவயமும் வெதிரேகமும் ஆகிய உறுப்புகள் போலி என்றறிவித்த படியாம். திருத்தகு வெதிரேகம் என்றது இகழ்ச்சிக் குறிப்பு.

பக்கம் முதலிய ஐந்துறுப்புகளுள் மூன்றுறுப்புகளே பவுத்தர் மேற்கொள்வர் என்றல்

109-112 : ஒட்டிய...........உள

(இதன் பொருள்) உபநயம் நிகமனம் இரண்டும் ஒட்டிய-நங்காய் முன்பு முதலாகக் கூறப்பட்ட கருத்தளவையின் உறுப்புகள் ஐந்தனுள் இறுதியில் நின்ற உபநயமும் நிகமனமும் ஆகிய இரண்டுறுப்புகளும் தருக்கவாதி முதலிய பிற சமயக்கணக்கர்களால் சேர்க்கப்பட்டவையாம்; திட்டாந்தத்திலே சென்று அடங்கும்-எடுத்துக்காட்டு என்னும் உறுப்பிலே அவ்விரண்டும் புக்கு அடங்குவனவாம் ஆகவே; பக்கம் ஏது திட்டாந்தங்கள்-நம்மனோர் இப்பொழுது மேற்கொள்வன மேற்கோளும் ஏதுவும் எடுத்துக்காட்டும் ஆகிய மூன்றுறுப்புகள் மட்டுமேயாம்; ஒக்க நல்லவும் தீயவும் உள-அம்மூன்றனுள் தம்முள் ஒப்ப நல்லனவும் தீயனவும் ஆகிய உறுப்புகளும் உளவாம் என்றார் என்க.

(விளக்கம்) உபநயம் நிகமனம் இரண்டும் ஒட்டிய என மாறுக. ஓட்டிய-பிறரால் ஓட்டப்பட்ட. அவ்வாறு ஓட்டி ஐந்துறுப்பினையும் பயில வழங்குபவர் நையாயிகரும் வைசேடிகரும் பிறரும் என்க. தருக்க நூலோர் ஆகிய அவர்-

உரைசெய்பிர திக்கினையு மேதுவுமு தாகரண முபந யம்பின்
பரவிநிக மனமுமெனும் படித்தாகு மேத்துவா பாச மப்பாற்
கருதிலவை யைவகையாஞ் சித்தவிசித் தத்தொடனே காந்தி கஞ்சீர்ப்
பிரணரணச் சமமொடுகா லாத்தியா பதிட்டமெனப் பேசலாமே (மெய்ஞ்ஞான : 48ஆம் சருக்)
என்பர்.

அறவணர் கருத்தளவையின் தாம் மேற்கொண்டுள்ள பக்கம் முதலிய மூன்றுறுப்புகளின் இயல்புகளை இனிக்கூறத் தொடங்குகின்றார்

112-117 : அதில்..........நாட்டுக

(இதன் பொருள்) அதில்-அவற்றுள்; வெளிப்பட்டுள்ள தன்மியினையும் வெளிப்பட்டுள சாத்திய தன்மத்திறம்-தன் மாற்றாருடன் சொற்போர் செய்தமையால் அனைவரும் காணும்படி வெளிப்பட்டிருக்கின்ற அத்துணிபொருளின் பண்புத்தன்மையையும்; பிறிதில் வேறாம் வேறுபாட்டினையும்-பிறபொருள்களில் நின்றும் வேறாகும் வேற்றுமையையும்; தன்கண் சார்த்திய நயந்தருதல் உடையது நன்கு என் பக்கம் என நாட்டுக-தன்னிடத்தே ஏறட்டுக் கொண்டிருக்கின்றதொரு நன்மையைத் தருவது எதுவோ அது நன்று என்று கூறப்படுகின்ற மேற்கோள் என்று உள்ளத்தில் பதித்துக் கொள்வாயாக என்றார் என்க.

(விளக்கம்) அதில் : ஒருமைப் பன்மை மயக்கம். சொற்போரின் பொருட்டுப் பலரும் அறிய எடுத்துச் சொல்லிய தன்மி என்பார் வெளிப்பட்டுள்ள தன்மி என்றார். தன்மி என்றது சாத்தியத்தை. அஃதாவது துணிபொருளை என்க. தன்மத்திறம் அதற்கியல்பாம் தன்மை. பிறிது என்றது மேற்கோளின் மறுதலைப் பொருளை. தன்கண் சார்த்துதலாவது-தன்பால் உடையதாய் இருத்தல். அவ்வேறுபாடுடைமையை மேற்கோளுக்கு ஆக்கந் தருதலின் அவ்வாக்கத்தை நயம் என்றார். வெளிப்பட்டுள்ள தன்மையினைத் தன்கண் சார்த்திய நயம் எனவும் பிறிதில் வேறாம் வேற்றுமையைத் தன்கண் சார்த்திய நயம் எனவும் தனித்தனி கூறிக் கொள்க. நன்கென் பக்கம் என்றது முன்னர் நல்லவும் தீயவுமாகிய பக்கங்களுள் நல்லனவாகியவற்றுள் ஒன்றாகிய பக்கம் என்றவாறு. ஈண்டு விரித்துக் கூறிய நயம் இரண்டனுள் முன்னது ஒற்றுமை நயம். பின்னது வேற்றுமை நயம் என்க.

இதுவுமது

117-124 : அதுதான்...........விடுதலும்

(இதன் பொருள்) அதுதான்-அங்ஙனம் நாட்டுதலாவது; சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றைப்பற்றி நாட்டப்படுவது-சத்தமானது அநித்தம் என்றாதல் நித்தம் என்றாதல் தான் மேற்கொண்டுள்ள இவ்விரண்டனுள் ஒன்றை ஏதுவானும் எடுத்துக்காட்டானும் சாதித்து நிறுத்துவதாம்; தன்மி சத்தம்-இதன்கண் தன்மியாவது சத்தமாம்; சாத்திய தன்மமாவது-ஈண்டு துணிந்த பொருளின் தன்மமாவது; நித்தா நித்தம்-நித்தமாதல் அநித்தமாதல் இவ்விரண்டனுள் தான் மேற்கொண்டதே துணிபொருளின் தன்மமாம்; நிகழும் நல் ஏது மூன்றாய்த் தோன்றும்-இங்ஙனம் கூறப்பட்ட மேற்கோளுக்கு நிகழா நின்ற நல்ல ஏதுவும் மூன்றுவகையாகக் காணப்படும், அவையாவன; மொழிந்த பக்கத்து ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும் விபக்கத்து இன்றியே விடுதலும்-எடுத்துக் கொண்ட மேற்கோளில் சிறப்பாகப் பொருந்தி நிற்றலும் அதனைச் சார்ந்து வந்த மேற்கோளிலும் பொருந்தி நிற்றலும் மறுதலை மேற்கோளின்கண் இல்லாதொழிதலும் என்னும் இம்மூவகையும் ஆம் என்றார் என்க.

(விளக்கம்) சத்தம் : எழுவாய். அநித்தம் நித்தம்-சத்தமானது அநித்தம் என்றாதல் நித்தம் என்றாதல் தான் மேற்கொண்ட தொன்றைப் பற்றி வாதிட்டு நிலைநாட்டுவது என்க. அங்ஙனம் நிலைநாட்டுங்கால் தான் நாட்டிய பண்பினை ஏற்றுக்கொள்வது சத்தமே யாதலின் தன்மி சத்தம் என்றார். சத்தத்திற்கு உரித்தாக நாம் மேற்கொள்ளும் இருவகைப் பண்புகளுள் ஒன்றே சாத்திய தன்மமாம் என்பது கருத்து. மேற்கோளைச் சாதித்தற்கு நம்மால் கூறப்படும் ஏதுக்கள் மூன்றுவகைப்படும் என்று அறிவித்தவாறு. மொழிந்த பக்கத்து வாதத்திற்கு எடுத்து மொழிந்த மேற்கோளின்கண் என்க. சபக்கம் தன் மேற்கோளின் சார்பாக வரும் மேற்கோள். அவ்வேது அங்ஙனம் வரும் துணைமேற் கோளிலும் இருக்கும், விபக்கம் மறுதலை மேற்கோள். அதன் கண் ஏதுவின் இன்மை உளதாம். இவ்வாற்றால் ஏது மூன்று வகைப்படும் என்றராயிற்று. பக்கத்தினும் சபக்கத்தினும் உண்மை வகையால் இரண்டு ஏதுக்களும் விபக்கத்தில் இன்மை வகையால் ஓர் ஏதுவும் ஆக மூன்றாம் என்க. விபக்கத்தில் ஏதுவின் இன்மையே ஓர் ஏதுவாக மேற்கோளைச் சாதிப்பது உணர்க.

ஏதுக்களின் விளக்கம்

124-135 : சபக்கம்..................என்க

(இதன் பொருள்) சபக்கம் சாதிக்கில்-துணை மேற்கோளால் தான் எடுத்துக் கொண்ட மேற்கோளைச் சாதிக்குமிடத்தே; பொருள் தன்னால்-தான் எடுத்துக்காட்டும் பொருளால்; பக்கத்து ஓதிய பொதுவகை-தான் மேற்கொண்ட பொருளுக்கு ஓதிய பொதுத்தன்மை அத்துணை மேற்கோளாடும்; ஒன்றி இருத்தல்-பொருந்தியிருத்தல், அஃதாவது; சத்த அநித்தம் சாத்தியம் ஆயின்-மேற்கொண்ட சத்தத்திற்கு அநித்தம் சாத்திய தன்மம் ஆகுமிடத்தே அச்சத்தத்தோடு; ஒத்த அநித்தம் கடாதி போல் எனல்-ஒத்த தன்மத்தையுடைய தன்மியாகிய குடம் போல் என்று கூறுதல் இதற்கு; விபக்கம் விளம்பில்-மறுதலை மேற்கோள் கூறின்; யாதொன்று யாதொன்று அநித்தம் அல்லாதது பண்ணப்படாதது ஆஅ காசம் போல் என்றாகும்-யாதொரு பொருள் யாதொரு பொருள் அழிவில்லாததோ அப்பொருள் ஒருவரால் செய்யப்படாத பொருளும் ஆம் வானத்தைப்போல் என்று எடுத்துக்காட்டுக் கூறப்படுவதாம். இங்ஙனம் கூறுங்கால்; பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும் நண்ணிய பக்கம் சபக்கத்திலுமாய்-பண்ணப்படுவதும் தொழிலிடத்தே தோன்றுவதும் ஆகிய இரண்டு ஏதுக்களும் பொருந்திய மேற்கோளிடத்தும் துணை மேற்கோளிடத்துமாய் உளவாகி; விபக்கத்து இன்றி-மறுதலை மேற்கோளிடத்தே இல்லாமல்; அநித்தத்தினுக்கு-சாதிக்கப்பட்ட சாத்தியதன்மமாகிய அநித்தத்திற்கு; மிகத் தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க-மிகவும் ஆக்கம் தருகின்ற ஏதுவாக விளங்கிற்று என்று கூறுக என்றார் என்க.

(விளக்கம்) சபக்கம் துணி பொருளை வற்புறுத்துதற்கு எடுத்துக் காட்டுகின்ற துணைமேற்கோள். பொருள்-துணிபொருள். பொதுவகை-பொதுத்தன்மை. சத்த அநித்தம் ஒலியின் நிலையாமை. சாத்தியம் என்பது நிலையாமை உடையது என்று துணிவது. ஒலி தோன்றிய பொழுதே அழிதலின் ஏது ஊன்றி நிற்றல் காண்க. துணைமேற்கோளாகிய குடத்தின்கண் அந்நிலையாமை உண்டாதலும் காண்க. விபக்கம் ஆகாசம் என்றது ஈண்டுப் பிறர் தம்மதம் மேற்கொண்டு கூறியபடியாம். என்னை? பவுத்தருக்கு ஆகாசம் ஒரு பூதம் என்றல் உடன்பாடன்மையின் என்க. விபக்கம்-மறுதலை மேற்கோள். அதன்கண் துணிபொருளின் இன்மையே ஏதுவாய் அதற்கு ஆக்கம் தருதல் காண்க.

நல்ல எடுத்துக்காட்டுகள்

(136-142) : ஏதமில்............ஒத்தன

(இதன் பொருள்) ஏதம் இல் திட்டாந்தம் இருவகைய-குற்றமில்லாத எடுத்துக்காட்டுகள் இரண்டு வகைப்படுவனவாம், அவையாவன; சாதன்மியம் வைதன்மியம் என-சாத்திய தன்மத்தை உடையதும் அஃதில்லாததும் என்று கூறப்படுவன இவற்றுள்; சாதன்மியம் எனப்படுவது அன்னுவயத்து அநித்தம் கடாதி என்கை-சாதன்மிய திட்டாந்தம் என்பது சாத்திய தன்மத்தோடு தானும் ஒத்திருக்கும் வகையில் நிலையாமை உடையன என்று குடம் முதலியவற்றை எடுத்துக்காட்டுதல்; வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம் எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை-வைதன்மிய திட்டாந்தமாவது, சாத்திய தன்மைத் திறம் இல்லாத இடத்தில் மேற்கோள் தன்மமாகிய ஏதுவும் இல்லாதொழிதல்; இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன-இத்தன்மைகள் மேற்கூறிய நல்லேதுக்களோடு பெரிதும் ஒத்தன என்றார் என்க.

(விளக்கம்) சாதன்மியம்-துணி பொருளோடு ஒத்த பண்புடைமை. வைதன்மியம்-துணிபொருள் பண்பிற்கு மறுதலையாதல் (அஃதாவது அநித்தம் அல்லாதது-பண்ணப்படாதது. ஆகாசம் போல் என்று முன்னும் வந்தமை உணர்க) நல்ல சாதனம் என்றது முன் கூறிய நல்லேதுக்களை.

மேற்கோட் போலியும் ஏதுப் போலியும் எடுத்துக்காட்டுப் போலியும்

143-153 : தீய.............என

(இதன் பொருள்) தீயபக்கமும் தீய ஏதுவும் தீய எடுத்துக்காட்டும் ஆவன-குற்றமுடைய மேற்கோளும் குற்றமுடைய ஏதுவும் குற்றமுடைய எடுத்துக்காட்டும் ஆகிய இவை; பக்கப்போலியும் ஏதுப் போலியும் திட்டாந்தப் போலியும் ஆஅம்-மேற்கோட் போலியும் ஏதுப்போலியும் போலி எடுத்துக்காட்டும் என்பனவாம்; இவற்றுள் பக்கப் போலி ஒன்பது வகைப்படும்-இவற்றுள் மேற்கோட் போலி ஒன்பது வகைப்படும், அவை; பிரத்தியக்க விருத்தம் அனுமான விருத்தம் சுவசன விருத்தம் உலோக விருத்தம் ஆகம விருத்தம்-காட்சி முரணும் கருத்து முரணும் தன்மொழி மாறுபாடும் உலக மலைவும் நூல் முரணும்; அப்பிரசித்த விசேடணம் அப்பிரசித்த விசேடியம் அப்பிரசித்த உபயம் அப்பிரசித்த சம்பந்தம் என-பண்பு விளங்காமை சிறப்பு விளங்காமை பண்பும் சிறப்பும் ஒருங்கே விளங்காமை விளக்கமில்லாத தொடர்பு எனப்படும் இவ்வொன்பதுமாம் என்றார் என்க.

(விளக்கம்) பிரத்தியக்கம் விருத்தம்-காட்சி முரண். அனுமானம்-கருத்து. சுவசனம்-தன்சொல். உலோகம்-உலகம். இது சான்றோர் என்னும் பொருட்டு. ஆகமம்-நூல். அப்பிரசித்தம்-விளங்காமை. விசேடணம்-பண்பு. விசேடியம்-சிறப்பு. உபயம் என்றது பண்பும் சிறப்பும் ஆகிய இரண்டும் என்றவாறு.

பக்கப் போலியின் விளக்கம்

154-166 : எண்ணிய...............நுவறல்

(இதன் பொருள்) எண்ணிய இவற்றுள்-ஈண்டு எண்ணித் தொகுக்கப்பட்ட மேற்கோள் போலிகளுள் வைத்து; பிரத்தியக்க விருத்தம் கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்-கருதிய காட்சி அளவையோடு முரண்படக் கூறுதலாம், அஃதாவது; சந்தம் செவிக்குப் புலன் அன்று என்றல்-ஒலி செவிக்குப் புலப்படாது என்பது போலவன; மற்று அனுமான விருத்தம் ஆவது கருத்து அளவையை மாறாகக் கூறல் அநித்தியக் கடத்தை நித்தியம் என்றல்-இனிக் கருத்தளவை முரணாவது கருத்தளவிற்கு மாறுபடக் கூறதல், அது அழியும் தன்மையுடைய குடத்தை அழியாதது என்று கூறுதல்; சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் என் தாய் மலடி என்றே இயம்பல்-தன் சொல் முரணாவது ஒருவன் தான் எடுத்துச் சொல்லும் சொல்லே பொருள் முரண்படச் சொல்லுதல், அது என்னை ஈன்றாள் மலடி என்று கூறுதலாம்; உலக விருத்தம் உலகின் மாறு ஆம் உரை இலகும் மதி சந்திரன் அல்ல என்றல்-இனி உலக மலைவு ஆவது சான்றோருடைய சொல் மரபிற்கு முரணாகின்ற மொழி அது விளங்கும் மதி என்னும் சொல் சந்திரன் என்ற பொருளை உடையதன்று என்று கூறுதல், ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல் அநித்தவாதியாய் உள்ள வைசேடிகன் அநித்தியத்தை நித்தியம் என நுவறல்-நூல் முரணாவது ஒருவன் தன் சமய நூல் கருத்திற்கு முரணாகக் கூறுதல், அஃதாவது பொருளுக்கு நிலையாமை கூறும் கொள்கை உடையவனாகிய வைசேடிகவாதி தன் நூற் கருத்திற்கு முரணாக நிலையாமையுடைய தொன்றனை நிலையுதலுடைத்து என்று கூறுதல் என்க.

(விளக்கம்) கண்ணிய-கருதிய, காட்சி-காட்சி அளவை. அநித்தியக் கடம்-அழியும் இயல்புடைய குடம். மதி அறிவின் மேல் செல்லாமைக்கு இலகுமதி என்றார். அல்ல-அன்று. நுவறல்-கூறுதல்.

இதுவுமது

167-178 : அப்பிர.........சித்தம்

(இதன் பொருள்) அப்பிரசித்த விசேடணம் ஆவது-விளக்கமில் பண்பாவது; தம் தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை-சொற்போர் புரிவோர் தங்கள் தங்களுடைய எதிரிக்குத் தாம் வற்புறுத்தும் துணிபொருள் விளங்காது மொழிதல். அதுவருமாறு; பவுத்தன் மாறாய் நின்ற சாங்கியனைக் குறித்து சத்தம் விநாசி என்றால்-வாதிடுகின்ற பவுத்தன் ஒருவன் தனக்கு மாறுபட்டிருக்கின்ற சாங்கியன் ஒருவனைச் சுட்டிச் சொற்போரிடும் பொழுது ஒலி அழிதன் மாலைத்து என்று கூறினால்; அவன் அவிநாசவாதி ஆதலின் சாத்திய விநாசம் அப்பிரசித்தமாகும்-அச்சாங்கியன் பொருள் நிலையுதலுடைத்து என்னும் கொள்கை உடையவன் ஆதலின் பவுத்தன் கூறிய துணிபொருளின் பண்பாகிய அழிவு அச்சாங்கியனுக்கு விளக்க விளக்கமில்லாத சிறப்பாவது; எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி இருத்தல்-தன் மாற்றானுக்குத் தான் கூறும் மேற்கோளின் சிறப்பு விளக்கமின்றி இருத்தல், அஃதாவது; சாங்கியன் மாறாய்நின்ற பவுத்தனைக் குறித்து ஆன்மா சைதனியவான் என்றால் அவன் அநரன்மவாதி ஆதலின் தன்மி அப்பிரசித்தம்-சாங்கியவாதி ஒருவன் தனக்கு எதிரியாய் நின்ற பவுத்தனோடு வாதிடுபவன் அவனை நோக்கி உயிர் அறிவுடைத்து என்று கூறின் அப்பவுத்தன் உயிர் என்பதொன்றில்லை என்னும் கொள்கை உடையவன் ஆதலால் அவனுக்குச் சாங்கியன் எடுத்து மொழிந்த தன்மியாகிய உயிர் விளக்கமற்ற தாம் என்க.

(விளக்கம்) அப்பிரசித்தம்-விளக்கமில்லாமை. விசேடனம் என்றது ஈண்டுச் சாத்திய வசனத்தை. சாங்கியன் காணப்படும் பொருள் எல்லாம் உள் பொருளே என்னும் கொள்கை உடையவன். மேலும் எப்பொருளும் காரண உருவத்தினின்றும் காரிய உருவத்திற்கும், காரிய உருவத்தினின்றும் மாறுவதேயன்றி அழிவதில்லை என்னும் கோட்பாடுடையன் ஆதலின் அவன் அவினாசி ஆதலால் என்றார். விசேடியம்-தன்மி. மாறாய் நின்ற பவுத்தன்-எதிரியாய் நின்று சொற்போர் புரியும் பவுத்தன். ஆன்மா-உயிர். சைதன்யம்-அறிவுடையது. அநான்மவாதி-உயிர் என்று ஒரு பொருள் இல்லை என்னும் கொள்கை உடையவன். ஆன்மா சைதன்யவான்-என்புழி, ஆன்மா-தன்மி. சைதன்யம்-தன்மம். எனவே ஆன்மா என்பது எதிரிக்கு அப்பிரசித்தம் ஆயிற்று என்க.

இதுவுமது

179-185 : அப்பிர...........உபயம்

(இதன் பொருள்) அப்பிரசித்தம் உபயமாவது-அப்பிரசித்த உபயம் என்னும் குற்றமாவது; மாறு ஆனோற்கு தன்மி சாத்தியம் ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல்-எதிரிக்கு மேற்கோளும் துணிபொருளும் ஆகிய இரண்டும் நெஞ்சத்தில் புகாமல் விளக்கமில்லாதிருத்தல், அதுவருமாறு; பகர் வைசேடிகன் பவுத்தனைக் குறித்து-வாதிடுகின்ற வைசேடிகன் எதிரியாகிய பவுத்தனை நோக்கி; சுகம் முதலிய தொகைப் பொருட்குக் காரணம் ஆன்மா என்றால்-இன்பம் முதலியனவாகத் தொகுத்துக் கூறப்படுகின்ற பொருள்களுக்கெல்லாம் காரணமாவது உயிரே என்று கூறினால்; தாம் சுகமும் ஆன்மாவும் இசையாமையில் அப்பிரசித்த உபயம்-பவுத்த சமயத்தினர் இன்பம் முதலிய தொகைப் பொருளையும் அவற்றிற்கு காரணமாகிய உயிரையும் உள்பொருள் என்று ஒப்புக்கொள்ளாமையினால் மேற்கோளும் ஏதுவுமாகிய இரண்டும் விளங்காமை என்னும் குற்றமாம் என்க.

(விளக்கம்) உபயம் என்றது மேற்கொளும் துணிபொருளும். பகர் வைசேடிகன்-வாதிடுகின்ற வைசேடிகன்; வினைத்தொகை. பவுத்தன் என்றது எதிரியாகிய பவுத்தன் என்பதுபட நின்றது. சுகம் முதலிய தொகைப் பொருளாவன-

அறிவரு ளாசை யச்ச மானம்
நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்புவப் பிரக்க நாண் வெகுளி
துணிவழுக் காறன் பெளிமை யெய்த்தல்
துன்ப மின்ப மிளமை மூப்பிகல்
வென்றி பொச்சாப் பூக்க மறமதம்
மறவி யினைய வுடல்கொ ளுயிர்க்குணம்

என்னும் இவை. தன்மியாகிய உயிர் பவுத்தனுக்கு உடன்பாடன்மையின் அதன் தன்மமாகிய சுகம் முதலியனவும் உடன்பாடாகாமல் இரண்டும் விளங்காவாயின.

இதுவுமது

186-190 : அப்பிர............ஆகும்

(இதன் பொருள்) அப்பிரசித்த சம்பந்தம் ஆவது-அப்பிரசித்த சம்பந்தம் என்று சொல்லப்படுகின்ற குற்றமாவது விளக்கமில்லாமையால்; எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல்-தனக்கு மாறாய் நின்று வாதிடுகின்ற பகைவனுக்குப் பொருந்திய துணிபொருளைத் தானே சாதித்துக் கொடுத்தல், அதுவருமாறு; மாறாம் பவுத்தற்கு சத்த அநித்தம் கூறின அவன் கொள்கை அஃதாகலில்-பொருள்கள் நித்தம் என்னும் கொள்கை உடையான் ஒருவன் தனக்கு மாறுபட்டு நிற்கும் பவுத்தனொடு வாதிடுங்கால் ஒலி அழியும் இயல்புடைத்து என்று கூறுவானாயின்; அப்பவுத்தனுடைய கொள்கைகளே அதுவாயிருத்தலால் வேறு சாதிக்க வேண்டாதாகும்-அவ்வெதிர் தன் கொள்கையை வாதியே துணிந்து கூறிவிட்டமையின் தான் ஒன்று கூறிச் சாதிக்க வேண்டாததாகி முடிதலால் இஃது அப்பிரசித்த சம்பந்தம் என்னும் குற்றமாம் என்க.

(விளக்கம்) வாதி எதிரியின் கொள்கை தனக்கு விளக்கமின்மையின் அவன் கொள்கையோடியைதலின் இக்குற்றம் அப்பிரசித்த சம்பந்தம் எனப்பெயர் பெற்றது என்க. இனி இவ்வாறு பிரதிவாதியின் கொள்கையை வாதி சாதித்துக் கொடுத்தல் அரிதல் காணப்படுவதொன்றாகலின் அப்பெயர் பெற்றது எனக் கருதுவாரும் உளர். இதனால் வாதி தனக்கே தோல்வி உண்டாக்கிக் கொள்ளுதலின் இது குற்றமாயிற்று என்க.

ஏதுப்போலி

191-202 : ஏதுப்போலி..........ஆகும்

(இதன் பொருள்) ஏதுப்போலி ஓதின்-இனி ஏதுப்போலி என்னும் குற்றமுடைய ஏதுக்களை வகுத்துக் கூறுமிடத்து; அசித்தம் அநைகாந்திகம் விருத்தம் என மூன்று ஆகும்-அசித்தம் என்றும் அநைகாந்திகம் என்றும் விருத்தம் என்றும் மூன்று வகைப்படும்; அசித்தம் உபயாசித்தம் அன்னியதா சித்தம் சித்தா சித்தம் ஆசிரயா சித்தம் என நான்கு-இனி அவற்றுள் அசித்தம் என்னும் ஏதுப்போலி உபயா சித்தம் என்றும் அன்னியதா சித்தம் என்றும் சித்தா சித்தா சித்தம் என்றும் ஆசிரயா சித்தம் என்றும் நான்கு வகைப்படும்; அந்நாகைனுள்; உபயா சித்தம் சாதன ஏது இருவர்க்கும் இன்றி சத்தம் அநித்தம் கடபுலத்து என்றால்-உபயா சித்தம் எனப்படுவது மேற்கோளைச் சாதித்தற்குரிய கருவியாகக் கூறப்பட்ட ஏதுவானது வசதியும் பிரதிவாதியுமாகிய இருவர் திறத்தினும் ஏதுவாதலின்றிப் பயனில் சொல்லாயொழிதல், அதுவருமாறு; ஒலி நிலையாமை உடைத்து ஏற்றாலெனின் அது கண்ணுக்குப் புலப்படுதலால் என்று கூறுதல்; அன்னிய தாசித்தம்-அன்னியதாசித்தம் என்னும் குற்றமாவது; மாறாய் நின்றற்கு உன்னிய ஏது அன்றாய் ஒழிதல்-வாதி தன்னோடு மாறுபட்டு நின்ற பிரதிவாதிக்கு ஏதுவாகும் என்று நினைத்துக் கூறியவண்ணம் ஏதுவாகாமல் ஒழிதலாம், அதுவருமாறு; சாங்கியனுக்கு சத்தம் அநித்தம் செயல் உரல் என்னில்-பவுத்தன் ஒருவன் தன்னோடு மாறாய் நிற்கின்ற சாங்கியனை நோக்கி ஒலி நிலையாமை உடைத்து ஏற்றாலெனில் அது செயற்கையினால் தோன்றுதலால் என்று ஏதுக் கூறுவானாயின் அவ்வேதுவானது; சித்த வெளிப்பாடு அல்லது செயலுறல் உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்-எப்பொருளும் மூலப்பகுதியினின்றும் ஒன்றினொன்றாகத் தாமே வெளிப்படுவதல்லது செயலில் தோன்றும் என்னும் கொள்கையைக் கைவிட்டுவிட்ட சாங்கியனுக்கு அவ்வேது நிகதம் அல்லாமையின் அன்னியதாசித்தம் என்னும் ஏதுப்போலியாம் என்றார் என்க.

(விளக்கம்) ஏதுப்போலி-குற்றமுடைய ஏதுக்கள். அவை வகையால் மூன்றாய், விரியால் பலவாம் என்க. அசித்தம் ஏதுவாகா தொழிதல். அஃது உபயாசித்தம் முதலிய நான்காய் வரியும் என்க. அவற்றுள் வாதி கூறுகின்ற ஏது தனக்கும் பிரதிவாதிக்கும் ஏதுவாகாதொழிதல். உபயாசித்தம்-சத்தம் கண்ணுக்குப் புலப்படுதலால் அநித்தம் என்றாற் போல்வது என்பார் சத்தம் அநித்தம் கட்புலத் தென்றல் என்றார். கண்ணுக்குப் புலப்படுதலால் என்று கூறிய ஏது தவறாகலின் இருவர்க்கும் ஏதுவாகாதொழிந்து காண்க. அல்நியத அசித்தம் எனக் கண்ணழித்துக் கொள்க. அல்நியதம்-ஒருதலை ஆகாமை. மாறாய் நின்றற்கு-பிரதிவாதிக்கு. இதற்கு எடுத்துக்காட்டு, சாங்கியனுக்கு சத்தம் அநித்தம் என்பதற்கு அது செயலிடைத் தோன்றுதலை ஏதுவாகக் காட்டுதல். சாங்கியன் சத்தம் சித்தம் என்னும் மூலப்பகுதியினின்றே எல்லாப் பொருளும் நிரலே தோன்றி ஒடுங்கும் என்னும் கொள்கை உடையன் ஆதலின் அது செயலின்கண் தோன்றும் என்பது ஒருதலையன்று. தானேயும் வெளிப்படும் என்னும் கொள்கை உடையன் ஆதலின் அவனுக்கு இவ்வேது அன்னியதமாய் அசித்தமாயிற்று என்க. இதற்கு அன்னிதரா சித்தம் எனப் பாடந்திருத்தி அன்னியதரன்-வாதி பிரதிவாதி இருவரில் ஒருவன் என்று பொருள் கூறுவாரும் உளர். இஃது ஏனைய குற்றங்களுக்கும் பொதுவாகலின் அவர் உரை போலியாதல் உணர்க. சத்தம் வியஞ்சனம் உள் வழித்தோன்றி இவ்வழிக் கெடும் என்பது சற்காரிய வாதியாகிய சாங்கியன் கொள்கையாதலின் மேகங்களினின்றும் இடி முதலிய ஒலி செய்வோர் இல்லாமலும் தோன்றுதலால் நியதியுட்படாமையுமுணர்க. இருட்கண்ணதாகிய குடத்தினுருவம் விளக்கு வந்த வழி விளங்கி அல்லுழி விளங்காமை போல, ஓசையும் இதழ்நா அண்ண முதலிய அவ்வக் கருவிகளின் தொழிற்பாடு நிகழ்ந்தவழி விளங்கியும் அல்லுழி விளங்காமையும் மாத்திரையேயன்றித் தோன்றி யழிதலின்மையான், அது போலியேது வென்றொழிக எனவரும் சிவஞான பாடியம் சூ-உ சிவஞான உரை விளக்கம் நோக்குக. சாங்கியனுக்கு இஃது அன்னியதா சித்தம் என்னும் குற்றமாகும் என்றவாறு.

இதுவுமது

203-206 : சித்தா...........துணிதல்

(இதன் பொருள்) சித்தா சித்தம் ஆவது-சித்தா சித்தம் என்று கூறப்படுகின்ற ஏதுப்போலியாவது; ஏது சங்கயமாய் சாதித்தல்-வாதியானவன் தான் சாதிக்கத் துணிந்த மேற்கோளைச் சாதித்தற் பொருட்டு எடுத்துக் கூறாநின்ற ஏதுவினைத் தானே ஐயுற்ரவன் தெளியாமுன்பே ஐயத்திற்கிடமான அவ்வேது வினைக்கொண்டே மேற்கோளைச் சாதித்தலாம். அஃகாமாறு; ஆவி பனியென ஐயுறாநின்றே தூய புகை நெருப்பு உண்டு எனத்துணிதல்-தான் கண்ட பொருள் புகையோ பனிப்படலமோ என்று தன்னுள் ஐயுற்று அது தெளிதற்கு முன்பே; தூய புகை என்று துணிந்தான்போல-அதனை ஏதுவாகக் காட்டி அது தோன்றுமிடத்தே நெருப்பு உண்டு என்று கூறி நிலை நாட்டுதல் போல்வன என்றார் என்க.

(விளக்கம்) சித்தாசித்தம் துணிவும் துணியாமையும். சங்கயம்-சம்சயம்; ஐயம். ஏது துணியப்படாமையின் துணிந்த பொருளும் ஐயுறப்படுமாதலின் இவ்வேது சித்தா சித்தம் என்னும் குற்றத்தின் பாற்படும் என்றவாறு.

இதுவுமது

207-211 : ஆசிரயா...........அசித்தம்

(இதன் பொருள்) ஆசிரயா சித்தம்-ஆசிரயா சித்தம் என்னும் ஏதுப்போலியாவது; மாறானவனுக்கு ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்-தன்னோடு மாறுபட்டுச் சொற்போர் நிகழ்த்துகின்ற எதிரிக்குப் பொருந்திய மேற்கோள் இல்லாமையை அறிவிக்கின்ற ஏதுவைக் கூறிக் காட்டுதல், அதுவருமாறு; வசதி ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின்-சாங்கியன் ஒருவன் தனக்குமாறாய் நின்ற பவுத்தனை நோக்கி வெளி என்னும் பூதம் ஒலி என்னும் குணத்தை உடைத்தாதலால் உள் பொருளாம் என்னுமிடத்து; ஆகாசம் பொருள் அல்ல என்பாற்கு தன்மி அசி