Author Topic: எது அழகு ?  (Read 401 times)

Offline KuYiL

எது அழகு ?
« on: March 25, 2019, 06:27:32 AM »
          எது அழகு
                             
ஒரு கையில் பிஸ்சா மறு கையில் பெப்சி
கழுத்தில்  தொங்கும் அடையாள அட்டை 
ஆளும் பாதி  , ஆடையும் பாதி
கண்கட்டி வித்தை காட்டும்
கையடக்க கைபேசியில்
காலத்தோடு சேர்த்து 
எதிர்காலத்தையும் தொலைத்தாய்!

பிறந்த மண்ணின் நிறம் தானே
என் இனத்தின் அடையாளம் “
என்ற பகுத்தறிவு இல்லாவிடில்
நான்கு நாட்களில் தொப்பை குறைத்து
மூன்று நாட்களில் முத்துப்பற்கள் தெரிய
இரண்டு  நாட்களில் கேசம்  வளர்த்து
ஒரே நாளில் உலக அழகி “
இப்படி விளம்பரத்தின் வியாபாரத்திற்கு
விட்டில் பூச்சிகளாய் வீழ்வாய்!

"எண்ணி துணிக கருமம் " என் தமிழ் வாத்தியார்
பிரம்படிக்கு பயந்து மனப்பாடம் செய்த குறள்!
துணிவதற்கு முன் எண்ணியிருந்தால்
ஏன் பொள்ளாச்சி சம்பவம் நடந்திருக்கும் !
உண்மை என்னவென்றால்.....
தமிழ் ,  நீதி போதனை  வகுப்புகளை
கணக்கு  வகுப்புகள்
கடன் வாங்கி இன்று வரை
திருப்பி தரவே இல்லை!


முன்னுரை கொடுத்த தாயும்
முகவரி கொடுத்த தந்தையும்
அள்ளியெடுத்த அத்தையும்
வாரி கொடுக்கும் மாமனும் - இனி
உன் முக நூலாய் இருக்கட்டும் !

நட்பை சொல்லி கெடுக்கும் நண்பனை விட
கற்பை சொல்லி கொடுக்கும் தாயே தெய்வம்
அழகு உங்கள் வீரத்தில் ஜொலிக்கட்டும்!
அழகு உங்கள் பேச்சில் ஒலிக்கட்டும்!
அழகு உங்கள் திறமையில் மிளிரட்டும்!
« Last Edit: March 27, 2019, 12:49:37 PM by சாக்ரடீஸ் »