எதுவுமே
நம் கையில் இல்லாத போது
இந்த நேசித்துத் தொலைக்கும்
ஓர் அசட்டு
உரிமையை மட்டும் நமக்குத்
தந்திருக்கும் இவ்வாழ்வு எவ்வளவு
வக்கிரம் கொண்டதாக இருக்கும்
எதாவது
ஓர் காரணப் பிடியில் சிக்கி எப்படியும்
இந்த நேசம் சுக்குநூறாய்
ஒருநாள் நொறுக்கப்பட்டு விடும் என்று
நன்றாகத் தெரிந்திருந்தும் இப்படி நேசித்த நாம் எவ்வளவு பெரிய
முட்டாள்களாக இருந்திருக்கிறோம்
எல்லாவற்றையும் தாண்டி,
அனைத்தையும்மீறி,
நான் உன்னைக் கடைசி வரை
நேசித்துக் கொண்டே இருப்பேன்
என்பது உனக்கும் கூட நன்றாகத்
தெரிந்திருக்கும்
நேசித்துக் கொண்டு ஏதோவோர்
நெடுந்தூர நினைவாக மட்டுமே
இருப்பேன் என்பதுதான் உனக்காக
இந்த ஜென்மத்தில் அமைத்துத்
தரப்பட்ட சிறப்பான சாபம்
அதையும்வெளிக்காட்டி நாடகம்,
நடிப்பென்று ஓராயிரம் ஏச வார்த்தை
கேட்க முடியாமல் வெளிக்காட்டிக்
கொள்ளாமலே இருக்க வேண்டி
ஓர் அவசியம் என்னில்திணிக்கப்பட்டு
இருப்பதே எனக்கான சாபம்
நல்லவேளை நீயென்னோடு
சேர்ந்து கஷ்டப்படுவாயோ என்று
இத்தனை நாள் பயந்துக் கொண்டிருந்த
கவலைஇனியில்லை
அவ்வளவே
இவ்வாழ்வின்
விமோசனம்