யானைகளின் தேசத்தில் பிளிரல் சப்தம்
நிலைத்துப்போனது
சதா துப்பாக்கிகள் துப்பிய
தோட்டாக்களைத்தின்று ஒரு சமூகம் மூர்ச்சையானது..
.
யாழ் பல்கலைக்கழகத்தின்
ஸ்வரக்கம்பிகள் அறுந்துகிடக்கிறது...
யார் யாரோ அரியணைகளை
அமைதியைச்சாெல்லி ஏறினார்கள்
ஆணவத்தின் உச்சத்தைத்தொட்டபோது
ஆட்களையே அறுத்துப்பலிகொண்டார்கள்..
.
எங்கோ ஏதோ ஒரு தேசத்தில்
யாரோ ஒருவனின் மூர்க்கமான
வரலாற்றுப்பிழைக்கு
இங்கே வந்து யாதுமறியா
பிஞ்சு நெஞ்சங்களை
பிய்த்தெறிவதில் என்ன நியாயமோ
இது யாருக்காகவென்பதை
உலகமறியத்தருவாய் இறைவா..
.
அமைதியை போதிக்கும் மார்கத்தில்
அரக்கர்களுக்கென்ன தேவை இறைவா..
அமைதியான சனங்களின்மீது
அத்துமீறச்சொன்னாயா இறைவா...
.
அநியாயமாய் செய்யப்படும் ஒரு கொலை
மனிதகுல முழுமையையும் கொல்வதற்குச்சமம் என அநியாயக்காரர்களை வேதத்தால்
அடித்தாயே இறைவா...
அநியாயக்காரர்களை அழிக்காமல்
அநியாயம் எப்படி தீரும் இறைவா..
.
எதைச்சொல்லி என்ன ஆறுதல்
கூறிவிட இயலும்
வார்த்தைகளின்றி வழி தெரியாமல்
விழி பிதுங்கி நிற்கிறது என் சமூகம் இறைவா..
.சந்தேகித்து சந்தேகித்து
வாழ்ககையே சந்தேகத்தால்
சூழந்து நிற்கிறது இறைவா...
.
நட்பும் இல்லை நாடும் இல்லை
நாட்டமும் இல்லை என
அநாதைகளாக்கப்பட்ட மக்களின் முன்
அநாதைகளாய் நிற்கிறது இறைவா...
.
கண்ணெட்டும் தூரம்வரை கார்பபரேட் உலகம்
எல்லைகளில்லாத பயங்கரவாத உலகம்
இல்லாது போகிறது மனிதநேய உலகம்
யாருக்கும் யாருக்குமான
சண்டையில் களங்களும் களிகளும்
நாங்களாய் இருக்கிறோம்...
.
என்று தணியுமோ இந்த
அநியாயக்காரர்களின் இரத்த வெறி
அன்றுதான் உலகம் உன்னுடையதாகும்
என்னுடையதாகும் எங்களுடையதாகும்....
.
அநியாயக்காரர்களை
எங்களைவிட்டும் அந்நியப்படுத்திவிடு இறைவா...
அமைதியான வாழ்க்கையை
அனைவருக்கும் அளித்துவிடு இறைவா...