9
« Last post by Ninja on December 08, 2025, 11:20:37 PM »
நந்தனா,
எதோ ஒரு தெய்வ கணத்தில்
தூரிகையின் தாம்புகளாய்
வடிக்கப் பெற்றிருக்க வேண்டும்
உன் கண்கள்
எனது மதுக்கோப்பைகளையும்
எனது தற்கொலை கடிதங்களையும்
சிறிது தள்ளி வைத்து
அறுபட தயாராயிருக்கும்
இம்மீச்சிறு வாழ்வையும்
பிணைத்திருப்பது
கருணையின் எச்சங்களை
பரிசளிக்கும் உனதிரு கண்கள் தான்
என்பதை அறிவாயல்லவா.
நினைவுகளிலும், நிகழ்வுகளிலும்
பலர் விட்டுச் சென்ற தடங்களில்
தேய்ந்த சருகாய் கிடக்கும் என்னை
சல்லி வேராய்
இறுக பிடித்திருக்கும்
கண்களை சில விநாடிகள் மூடிக்கொள்
நந்தனா,
துளிர்க்கும் விதையென மாறும் விதி
எனக்கு இனி இல்லை.
எல்லாவற்றையும இலகுவாக்கிறது உன் பார்வை
எல்லாவற்றையும் ஒரே தராசில் வைக்கிறது
உன் பார்வை
எல்லாவற்றின் மீதும் பேரன்பை பொழிகிறது உன் பார்வை
அவ்வளவு நல்லவனில்லை நான் நந்தனா,
அவ்வளவு ஆதூரம் இல்லை என் கண்களில்.
விலகி ஓட யத்தனிப்பவனின்
வெற்றிடங்களை
உன் கருணை விழி கொண்டு நிரப்பாதே.
எல்லாவற்றையும் முதலிலிருந்து
துவங்க திராணியற்றவன் நான்.
என்னை மீட்டெடுக்கும் அத்தனை சாத்தியங்களையும்
நிகழ்த்திப் பார்க்காதே
கரையேற தத்தளிக்கும் படகல்ல நான்,
மீண்டெழ விரும்பாத உன் நினைவுகளின் ஆழத்திற்கு,
என்றாவது வரும் உன் கனவுகளின் ஓரத்திற்கு,
எப்பொழுதாவது என் புகைப்படம் பார்க்கும்பொழுது
உன் இதழோர புன்னகைக்குள்
மெல்ல மெல்ல அமிழ்ந்து போகும் சின்னஞ் சிறிய கூழாங்கல் நான்.
உன் கண்களை மூடிக் கொள்
நந்தனா,
எதோ ஒரு தெய்வ கணத்தில்
தூரிகையின் தாம்புகளாய்
வடிக்கப் பெற்றிருக்க வேண்டும்
உன் கண்கள்.