2
« Last post by Oonjal on Today at 03:12:42 PM »
பக்கத்து ஊர் கோவிலில் இன்று 10 ம் நாள் தெப்பத்திருவிழா போகலாம் என்று அப்பா சொன்னவுடன் நானும் அம்மாவும் சந்தோஷமாக தயாரானோம். நான் பட்டு பாவாடை சட்டை தான் போடுவேன் என்று அடம் பிடித்து எனக்கு பிடித்த மாம்பழ கலர் பட்டு பாவாடை காவி கலர் சட்டையும் போட்டு கிளம்பினேன்.அம்மா தலை வாரி ரெட்டைசடை போட்டு பிச்சிப்பூவும் கனகாம்பரம் பூவும் சேர்த்து கட்டிய பூவை வைத்து விட்டார்கள். கை நிறைய கண்ணாடி வளையலை எடுத்து போட்டேன். நான் வெளியே போகும் போது எல்லாம் வைக்கும் திஷ்டி பொட்டை அம்மா வைத்து விட்டார்கள். நாங்கள் தயார் என்று சொன்னதும் அப்பா வீட்டை பூட்டி பஸ் நிலையம் அழைத்து சென்றார்.பஸ் எப்போ வரும் என்று எட்டி எட்டி பார்த்து கொண்டு இருந்தேன். சிறிது நேரத்தில் பஸ் வர அதில் ஏறி பக்கத்து ஊரில் சென்று இறங்கினோம். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அந்த கூட்டத்தில் நாங்களும் கலந்து நடந்தோம். சிறிது தூரத்தில் கோவில் வாசல் தெரிந்தது. உள்ளே சென்று சாமி தரிசனம் பார்த்தோம்.
ஒவ்வொரு சாமியாக கும்பிட்டு விட்டு வெளியே வந்தோம். கோவில் வெளியே எங்கு பார்த்தாலும் கடைகள் .அதை சுற்றிலும் மக்கள் பிடித்ததை வாங்கி கொண்டு இருந்தார்கள். நானும் அம்மாவும் முதல் கடையில் நுழைந்தோம். கலர் கலரா கண்ணாடி வளையல்கள், விதவிதமான சடைமாட்டிகள், சின்ன சின்ன விளையாட்டு பொருட்கள் ,nailpolish எல்லாம் பார்த்ததும் ஆசை ஆசையாய் எனக்கு பிடித்ததை எடுத்து அம்மாவிடம் கொடுத்தேன்.
அடுத்த கடையில் கலர் கலர் பலூன்கள் பறந்து கொண்டு இருந்ததைப் பார்த்து அங்கு ஓடினேன். பிடித்த கலரில் எல்லாம் பலூனை எடுத்து அப்பாவிடம் நீட்டினேன். கடைக்காரரிடம் பணத்தை கொடுத்து விட்டு அடுத்த கடை பக்கம் போனோம். கலர் கலரான குளிர்பானங்கள் விற்பனை நடந்து கொண்டிருந்து. எனக்கு பிடித்த மாம்பழ juice வாங்கி குடித்து கொண்டிருக்கும் போது மக்கள் எல்லாரும்" தெப்பம் எடுக்க போறாங்க ஓடி வாங்க "என்று சத்தமிட்டபடி ஓடினார்கள் .நாங்களும் கூட சேர்ந்து ஓடினோம்.
அங்கு இருந்த கூட்டத்தில் எனக்கு தெப்பம் தெரியவே இல்லை .அப்பா என்னை தோளில் தூக்கி வைத்து கொண்டார். தடிமனான கயிறை நிறைய பேர் சேர்ந்து இழுக்க தெப்பத் தேர் நகர ஆரம்பித்தது .தண்ணீரில் தேர் போவதை கண்டு நான் சந்தோசத்தில் கைகள் தட்டி ஆர்ப்பரித்தேன். பல சுற்றுகள் சுற்றி முடியவும் மக்கள் கலைந்து சென்றனர். நாங்களும் வீட்டுக்கு கிளம்பலாம் என்று வரும் வழியில் அன்னதானம் வழங்கி கொண்டிருந்தார்கள் .அங்கு சென்று அமர்ந்தோம். வாழை இலையில் சுடசுட கலவை சாதம் பரிமாறினார்கள். சாப்பிட்டு விட்டு பஸ் நிலையம் வந்தோம். பஸ் ஏறி வீடு வந்து சேர நடுசாமம் தாண்டிவிட்டது. அன்றைய நாள் சந்தோசம் நீண்ட நாட்கள் மனதில் நிலைத்து இருந்தது.