4
« Last post by Shreya on January 27, 2026, 10:58:03 PM »
உன் விரல் பிடித்து பள்ளிக்கு சென்ற காலம் அது
இன்றும் நினைவிருக்கிறது..
வீட்டுக்கு வந்ததும் அந்த டெலிவிஷன் ரிமோட்டிற்காக
தினம் ஒரு யுத்தமே நடக்கும் நம்மிடையே!
அடிதடி முட்றிப் போய் கோபத்தில் உன்னை கடித்தேனே
என் பற்களின் தடம் உன் கையில் ஆழமாய் பதியும்...
அதற்காக அம்மாவிடம் நான் வாங்கிய அடிகள்..!
கடைக்கு செல்ல சொன்னால் நீ அசைந்து கொடுக்க மாட்டாய்
உன் வேலையையும் நான் செய்த போது பொங்கியது ஆத்திரம்.
ஆனாலும்... அக்காவை விட என்மேல் ஒரு தனி பாசம்
உன் மௌனமான செயல்களில் நான்
எப்போதுமே உணர்ந்திருக்கிறேன்..!
என் தோழர்களுக்கெல்லாம் உன்னை கண்டாலே சிம்ம சொப்பனம்
யாரும் அறியாமல் உனக்கு “ஹிட்லர்” என பெயர் வைத்தோம்!
என் முதல் காதலை நீ மிரட்டி முடித்து வைத்த போது
உன் மேல் வந்த வெறுப்பை விட நீ என் மேல் வைத்து
இருந்த அக்கறையை உணர்ந்தேன்..!
கல்லூரி செல்லும் அவசரத்திலும் என்னை இறக்கி விட நீ வந்ததும்
பிரேக் வயரை கையால் பிடித்து விபத்தில் நம்மை மீட்டாயே...
அன்று உன் சமயோசித புத்தியை கண்டு மிரண்டு போனேன்.
யாரோ ஒருவன் என்னை அசிங்கமாய் கிண்டல் செய்ய
அழுது கொண்டிருந்தேன் அம்மாவிடம்
“இரு வரேன்” என ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டு
அவனை தேடி சென்று நீ கொடுத்த அடியும் பதிலடியும்...
அங்கே தான் அண்ணா, உன் அன்பு என்னை தாக்கியது..!
அம்மா மேல் நீ வைத்திருந்த உயிரான பாசமும்
ஆபீஸ் போகும் போதும் அம்மா உனக்கு ஊட்டி விட்டதும்...
ஓர கண்ணால் பார்த்து நான் பொறாமை பட்டிருக்கிறேன்!
“அவன் மட்டும் தான் உனக்கு புள்ளையா?” என அம்மாவிடம் சண்டை போட்டுக் ஊட்டி விட சொன்னது ஒரு காலம்.
நண்பர்களை வீட்டு வாசலோடு நிறுத்தும் உன் அந்த தெளிவு
இன்றும் என் மனதில் ஒரு பெருமிதமான பாடமாய் இருக்கிறது..!
ஊரில் உன் அந்த முதல் நடனம்...
ஒட்டுமொத்த தெருவும் கைதட்டிய போது உன் தங்கையாய்
ஒரு பெருமிதம் உன் திறமை கண்டு!
“ட்ரெஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என நீ சரி செய்யும் போது
உன் அக்கறையில் ஒரு தகப்பனை நான் கண்டிருக்கிறேன்..!
நீ எனக்காக முதன் முதலாக வாங்கித் தந்த அந்த 1100 மொபைலும்...
எப்போதும் ஆனாலும் நீ செக் செய்த போது கோபம் வந்தாலும்
அதற்கு பின்னால் இருந்த பயம் எனக்கு புரிந்தது..!
நீ பாட ஆரம்பித்ததில் இருந்து
நான் இன்றும் உனது தீவிர ரசிகை தான் அண்ணா!
அக்கா திருமண மேடையில் நீ பாடிய அந்த நொடிகள்
என் வாழ்வின் அழகான பக்கங்கள்.
நீ வாங்கித் தந்த அந்த முதல் புடவை இன்னும் இருக்கிறது
உன் நினைவுகளை தாங்கியபடி என் அலமாரியில்..!
நண்பர்களோடு திருமணத்திற்கு செல்கிறேன் என பொய்
சொல்லி விட்டு விபத்தில் கை ஒடிந்து வந்த போது என்
கோபம் உன்னை பார்த்த மறு நொடி கரைந்தது...
உன்னை வண்டியில் வைத்து நான் அழைத்து சென்ற போது
“தங்கச்சி நல்லா ஓட்டுறியே” என நீ சொன்ன அந்த ஒற்றை பாராட்டு...
காலங்கள் ஓடினாலும் இன்றும் அது என் நினைவில்..!
அன்று வாங்கிய அந்த பழைய பிளாக் காரில் பயணித்த சுகம்
இன்று நீ வைத்திருக்கும் காரிலும் மாறவே இல்லை!
ஒரு சின்ன சண்டையில் “என்னை நீ புரியவில்லையே” என
உனக்காக என் உயிரையே விட துணிந்தேனே...
உன் மேல் இருந்த கோபமல்ல அது... என்னை நீ தவறாய்
நினைத்து விடக் கூடாதென்ற அந்த பெரும் வலி..!
முதல் முறை உன்னை பிரிந்து நான் சென்ற போது
கல் போன்ற உன் கண்களில் வழிந்த அந்த கண்ணீர்...
அன்றே என் உயிர் ஒரு நொடி பிரிந்து போனது அண்ணா!
இன்று நாம் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும்
மனதில் உன் நிழல் அப்படியே தான் இருக்கிறது..!
மீண்டும் ஒரு முறை உன்னை நேரில் பார்த்தால் போதும்..
அப்படியே ஓடி வந்து உன்னை கட்டிக்கொள்ள வேண்டும்!
“ஏண்டா இத்தனை நாள் பேசல?” என உன்னை கோபித்து
உன் மார்பில் சாய்ந்து அழுது தீர்க்க வேண்டும்!
ஆயிரம் கோபங்கள் இருந்தாலும்... உன் தங்கை இன்றும்
உன் அதே சின்ன பெண் தான்...
உன் அன்பிற்காக ஏங்குபவள்!!