71
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-005 (நெஞ்சில் நின்ற திரைப்படம் - தமிழ் )
« Last post by VenMaThI on March 29, 2026, 10:56:08 PM »மீண்டும் ஒரு தாமதமான பதிவு
இந்த வாரம் நம்ம நெஞ்சம் மறப்பதில்லை தலைப்பை பார்த்தவுடன் என் மனக்கண்முன் வந்த திரைப்பட காட்சிகள்... மனதில் நின்ற திரைப்படம் இது என்பதை எனக்கு விளக்கியது..
இந்த மாதிரியான ஒரு திரைப்படம் எவ்வளவு பேருடைய மனதை தட்டியது என எனக்கு தெரியவில்லை ஆனால் நிச்சயமாக சொல்வேன் எங்கோ யாரோ ஒருவருடைய தற்கொலை எண்ணத்தை கண்டிப்பாக இப்படம் மாற்றியிருக்கும்...
ஆம்..
நான் குறிப்பிடும் திரைப்படம்.. 1992 ஆம் ஆண்டு திரு கே.பாலசந்தர் எழுதி, இயக்கிய 'வானமே எல்லை '...
இதில் ராஜேஷ்.. மதுபாலா.. ஆனந்த் பாபு, ரம்யா கிருஷ்ணன், பானுபிரியா, பப்லு பிருத்திவிராஜ், விசாலி கண்ணதாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.
வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளால் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்யும் ஐந்து கதாபாத்திரங்களைப் பற்றிய கதை...
நீதிபதியாக பணியாற்றும் தனது தந்தை லஞ்சம் வாங்குவதை தெரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் ஒரு வாலிபன்...
வயது முதிர்ந்த ஒருவரை தந்தையின் கட்டாயத்தால் மனதிற்கு பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு முதலிரவன்று வெளியேறும் ஒரு கன்னி...
செல்வந்தரான ஒரு தந்தை.. எழயை காதலிக்கும் மகன்... மகனின் காதலை முறியடிக்க... மகனின் காதலியின் தாயை மணமுடித்து... காதலியை தன் மகனின் தங்கையாக்கியதால் குடும்பத்தை விட்டு வெளியேறும் ஒரு வாலிபன்..
தொடர்வண்டி பயணத்தின்போது நான்கு அறக்கர்களால் கற்பழிக்கப்பட்டு வண்டியிலிருந்து தூக்கி வீசப்படும் ஒரு பெண்...
தான் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காத விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறும் ஒரு இளைஞன்...
இவர்கள் ஐவரும் தற்கொலை செய்ய செல்லும் இடத்தில் சந்தித்து தங்கள் கதைகளை பகிர்ந்துவிட்டு.. சரி இன்னும் 100 நாட்கள் நாம் ஒன்றாக சுதந்திரமாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு பின் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்கின்றனர்..
காலம் பதில் சொல்லும் என்ற கூற்றுக்கு இணங்க... இறுதியில் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு... வாழ்க்கையை வாழ்ந்து காட்டலாம் என்று வாழ தொடங்கும் கதை....
இந்த திரைப்படத்தில் ஒவொருவரும் தங்களுடைய காதபாத்திரத்தை நடித்தார்கள் என்று கூறுவதை விட வாழ்ந்துள்ளார்கள் என்று கூறலாம்...
நான் ஏன் வாழவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு 'நீ ஏன் சாகவேண்டும் ' என்ற எதிர் கேள்வியை கேட்கும்படியான ஒரு படம்...
கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு தன் இசையால் உயிரூட்டியுள்ளார் மரகதமணி...
இப்படத்தில் 8 பாடல்கள் அமைந்துள்ளன அதில் என்றுமே என் மனதில் ஒலிக்கும் பாடல்கள்.
.ஜன கண மன என ஜதி சொல்லும் நேரம்....
நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்...
நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே...
சோகம் இனி இல்லை இனி வானமே எல்லை...
திரு SPB மற்றும் திருமதி சித்ரா அவர்களின் குரல் வளத்தால் மெருகேறிய இப்பாடல்கள் என்றுமே கேட்பவர் மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை...
இயக்குநர் சிகரம் பாலசந்தர் தான் இயக்கிய படங்களில் தனக்குப் பிடித்த 10 படங்களில் ஒன்றாக இப்படத்தைக் குறிப்பிட்டுள்ளார்..
இப்படத்திற்கு 1992-ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது - மற்றும்
தமிழக அரசின் திரைப்பட விருதுகளில், கதை எழுத்தாளருக்கான விருது ஆகியவை வழங்கப்பட்டுள்ளன....
இளைஞர்களின் மனநிலையையும், சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் ஒரு உணர்ச்சி பயணம். வாழ்க்கையில் எத்தனை சவால்கள் வந்தாலும், நம்பிக்கையை இழக்காமல் முன்னேற வேண்டும் என்பதையே இந்த படம் நமக்கு உணர்த்துகிறது. இறுதியில், எல்லைகளைக் கடக்க வேண்டியது வெளியில் அல்ல, நம்முள் தான் என்பதை இந்த படம் நம்மிடம் நினைவூட்டுகிறது.
வானமே எல்லை” என்ற தலைப்பைப் போலவே, மனிதனின் கனவுகளுக்கு எல்லையே இல்லை என்பதைக் கற்றுக்கொடுக்கும் ஒரு நினைவிலிருக்கும் படைப்பாக இது திகழ்கிறது.
காதல்.. கல்லூரி களாட்டாக்கள்... கொள்ளை... Gangster... போன்ற படங்களுக்கு மத்தியில்... சமூகத்திற்கும் இன்றைய இளைஞர்களுக்கும் ஒரு positivity கொடுக்கக்கூடிய ஒரு படமாக இப்படத்தை நான் கருதுகிறேன்....
(சோகம் இனி இல்லை
அட இனி
வானமே எல்லை
தூரம் இனி இல்லை
அட இனி
வானமே எல்லை
அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
பாடும் பட்சி
நாங்கள் வாழும் கட்சி.....)

Recent Posts







