80
« Last post by Shreya on February 24, 2026, 07:04:18 AM »
கலையின் மகுடம்
பொன் ஒளியின் பின்னணியில்,
சிலையென நின்றிருக்கும்
சிங்காரக் கலைமகளே!!
கலை என்பதே இதுதானோ,
கடவுளைக் காணும் மார்க்கம்?
மேகம் சுமந்து வந்த மயிலின் தோகையோ,
சிலைக்குள் உயிர் தந்து ஆடும் சிவசக்தி தானோ?
அந்த ஒற்றைக்காலில் அவள் நிற்கும் நேர்த்தி,
எந்தச் சூழலிலும் கலங்காத அவள் நிதானத்தை
உவமையாய்ச் சொல்கிறது..
விரிந்திருக்கும் அவள் விரல் முத்திரைகள்
வெறும் கலை மட்டுமல்ல,
ஆயிரம் கவலைகளைத் தள்ளிவைக்கும் அவள்
மனவலிமையின் அடையாளம்!!
அமைதிக்குள்ளே ஒரு புரட்சியை
அவள் ஆட்டம் சுமந்து நிற்கிறது..
நிமிர்ந்து நிற்கும் அவளின் அந்தத் தோரணை,
யாரோடும் பணியாத அவளின் சுயமரியாதை!!
சலங்கை சத்தமும் அவள் சலனமில்லாத
மன உறுதியை சொல்கிறது..
பரதமே நீயாகி ஆடுகிறாய் இங்கே,
பரவசத்தில் மூழ்கி நிற்கின்றோம் நாங்கள்!!
தாளத்தில் லயித்து நீ ஆடும் ஒவ்வொரு நொடியும்,
தனித்துவப் பெண்ணாக நிமிர்ந்து நிற்கிறாய்..
உன் கலையே உன் மகுடம்,
உன் அசைவுகளே உனக்கான ஆகாயம்!!!