‘யார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர்(விஷத்தை கையில் வைத்துக்கொண்டு)நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக்கொண்டேயிருப்பார்.’நூல்: (ஸஹீஹ் முஸ்லிம்-175)
நாகரீகம் என்ற போர்வையில் பல தீமைகளை நாமே தேடிக்கொள்கின்றோம். இன்று எம் இளைஞர்களில் அதிகமானோர் புகைப்பிடித்தல், போதைப்பொருட்கள் உப யோகித்தல் மற்றும் இது போன்ற பல தீமைகளை நாகரீகம் என்று பறைசாற்றிக்கொண்டு தவறான பாதைக்கு தாமாகவே இழுத்துச் செல்லப்படுவதை காணக்கூடியதாகவுள்ளது. இந்த நூற்றாண்டில், ஒரு பில்லியன் மக்கள் புகைப்பழக்கம் தொடர் பான நோய்களால் இறக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம்(WHO) தன்னுடைய ஆய்வில் கூறுகின்றது.
இன்று எமது நகர்ப்புறங்களில் நவீன உணவகம் என்ற பெயரில் நடன உணவகமாக மாறி விட்ட பல நடன விடுதிகள் இளைய சமுதாயத்தினை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. மெல்லிய விளக்கொளியில் இன்றைய இளைஞர், யுவதிகள் கூத்தும், கும்மாளமுமாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு போதைப் பொருட் களை எந்தெந்த வழியிலெல்லாம் பயன்படுத்தலாம் என்று தனி வகுப்பே நடத்தப்படுகின்றது.
மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் இவ்விதமான பழக்கங்கள் சிறு குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. காரணம் அவர்கள் தமது வீடுகளை மதுச்சாலைகளாக ஆக்கிக் கொண்டமையேயாகும். எமது நாட்டின் சில பகுதிகளிலும் இப்பழக்கம் நடைபெறுவதை எம்மால் அறியக்கூடியதாக வுள்ளது. இதனை பார்க்கும் வீட்டில் உள்ள பிள்ளைகள் சிறு வயதிலேயே ‘குடிமக்களாக’ மாறிவிடுகின்றனர்! பெரும்பான்மையானோர் 17 வயதில் இருந்து 25 வயதுக்குள் தான் இப்பழக்கத்தை பழகுகின்றனர்.
வெளியில் தனி இடங்க ளெடுத்து தங்குவதும், நண்பர்கள் அறையை நாடிச் செல்வதும் தொழில் நிமித்தம் வெளியே செல்வதும் மதுபானம் மற்றும் போதைவஸ்துக்களை பாவிப்பதற்கும், நெறிபிறழ்வை ஏற்படுத்தக்கூடிய வகையிலான திரைப்படங் களைப் பார்ப்பதற்கும் மற்றும் புகைத்தல் போன்ற பல்வேறு தீய செயல்களில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பாக அமைகின்றது. இவற்றிற்கு யார் காரணம்? பெற்றோர்களே! சிந்தியுங்கள்!
போதைவஸ்துக்கள் பாவனையால் ஏற்படும் தாக்கங்கள்:
நிகோடின், பென்சோபைரின் போன்ற புற்று நோயை உருவாக்கக்கூடிய நச்சுப் பொருட்கள் புகையிலையில் உள்ளன. புகைப்பிடிக்கும்போது புகையுடன் சேர்த்து இந்த நச்சுப் பொருட்களும் புகைப்பவரின் இரத்தத்தில் கலக்கின் றன. இதனால் உடலின் அனைத்துப் பாகங்களும் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பாக உள்ளது. போதைப் பொருள்களை உபயோகப்படுத்துவதால் மன அழுத்தம், நிம்மதியற்ற நிலை, எரிச்சல், உடற்சோர்வு, நரம்புத்தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் இது போன்ற பல நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அத்துடன் இவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடவும் காரணமாக அமைந்து விடுகிறது.
புற்றுநோய், மாரடைப்பு மற்றும் இதர பால்வினை நோய்களை இப் போதைப்பொருட்கள் பழக்கம் உள்ளவர்கள் தானாகவே தேடிக்கொள்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுடன் தொடர்புபட்டிருக்கின்ற ஏனையவர்களுக்கும் உதாரணமாக அவரதுமனைவி, குழந்தைகள், குடும்பம், நண்பர்களுக்கும் இவ்வாறான நோய்கள் வர வாய்ப்புண்டு. இதனால் அதிகம் பாதிப்படை யக்கூடியவளாக மனைவி காணப்படுகின்றாள். சில வேளைகளில் கருச்சிதைவு, குறைப்பிரசவம மற்றும் மூளைவளர்ச்சி குன்றிய குழந்தை இது போன்ற பல பாதகமான நிகழ்வுகள் நடப்பதற்கு இதுவே காரணமாக அமைந்துவிடுகிறது.
புகை பிடிப்பவர்களில் பெரும்பான்மையானோர் அப்பழக்கத்தை விட்டொழித்து விடவேண்டும் என்று நினைத்து முடியாமல் சிரமப்படு கிறார்கள் என்பதுதான் உண்மை. இப் புகையிலைப் பழக்கத்தினால் உலகில் ஆண்டு தோறும் சுமார் 50 இலட்சம்பேர் புகைப் பழக்கத்திற்கு பலியாகின்றனர். இந்நிலை இப்படியே தொடர்ந்து நீடித்தால் எதிர்வரும் காலங்களில் ஆண்டுக்கு ஒருகோடி பேர் பலியாகக் கூடிய நிலைமை தோன்றலாம் என மருத்துவர்களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
Khaleej Times என்ற பத்திரிகையில் 29.06.2007 அன்று வெளியான செய்தியில் தற்போது வளைகுடா நாடுகளில் அதிகமான இடங்களில், சிஸா அதாவது கண்ணாடி குடுவைகளில் வைத்து புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை ஒரு தடவை இழுத்தால் 10 சிகரெட்டினை ஒரே தடவையில் புகைத்தால் என்ன மாதிரியான உடல் உபாதைகள் ஏற்படுமோ அதனை விட அதிகமான பாதிப்புகள் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதனால் வாய்ப்புற்றுநோய் வருவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தை அறிந்திருந்தும் போதை வேண்டும் என்பதற்காக அதிகமாக பாவிக்கின்றார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக உலகில் பெண்களும் சிகரெட் புகைக்கும் பழக்கம் அதிகமாகி வருகிறது. இது அவர்கள் உயிர்வாழும் நாட்களில் ஒவ்வொரு நொடியையும் குறைத்துக் கொண்டே போகிறது என்பது அவர்களுக்குத் தெரியுமா?
‘போதை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வொன்றும் சாராயமாகும் சாராயமெல்லாம் தடுக்கப்பட்டதாகும்.;’ (ஆதாரம்: ஸஹீ.ஹ் முஸ்லீம்-3822).
‘இறைனிவன் தூதர் எதை உங்களிடம் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதைவிட்டும் விலகிக் கொள்ளுங்கள்.’ (அல்குர்ஆன் 59:7)
அன்பின் வாசகர்களே!
எமது கடைகள், உணவகங்களில் இவ்வாறான இறைவன் தடுத்த பொருட்களை விற்பதை விட்டும் முற்றாக தவிர்ந்துகொள்ள வேண்டும். நாம் போதைப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் சேர்க்கின்ற சொத்துக்கள் தடுக்கப்பட்டதாகும். அதனை உண்பதால் எமது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படமாட்டாது. எனவே நாம் முற்று முழுதாக தவிர்ந்து கொள்ளவேண்டும். இவற்றுக்கெதிராக சமூகத்தை வழிப்பூட்டி வழிநடத்தவேண்டிய சிலரும் இச்செயல்களில் ஈடுபடுவதுதான் மிக வேதனைக்குரிய விடயமாகும். இறைவன் எம்மனைவரையும் இத்தீய செயலைவிட்டும் காத்தருள்வானாக!