"நட்பின் வழி ஓர் தாய்"
பறவைகள் கூட்டம் கூடி கூச்சலிடும் நேரம்,
குளிர் வந்து நெஞ்சில் சிலிர்ப்பூட்டும் காலம்,
நாம் வந்த பாதை, மலை ஒன்றை கண்டோம்,
அதன் உச்சம் கண்டுவிட ஆவல் ஒன்று கொண்டோம்.
சாகசங்கள் செய்திடவே நாம் கொண்ட பயணத்தில்,
என் மூச்சில் ஒரு யுத்தம், நீ சறுக்கும் சமயத்தில்,
உன் உயிரை நான் காப்பேன் என்று சொல்லி ஊக்குவித்தேன்,
உனைநோக்கி என் பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தேன்.
ஞாயிறு தன் முகம் காட்டி புன்னகையும் பூத்திருக்க,
இளம்வெயிலின் கதிர்கள் பட்டு நம் மேனி வேர்த்திருக்க,
நாம் செய்த முயற்சியாலே தென்பட்டது இலக்கு ஒன்று,
மார்தட்டி கூவி சொன்னோம் வெற்றி எங்கள் தோழன் என்று.
மலையுச்சி உனை ஏற்றி என் பதற்றம் இறக்கி வைத்தேன்,
என் வெற்றி உனில் கண்டு என் பாதம் எடுத்து வைத்தேன்,
கல்லொன்று சறுக்கிவிட, உயிர் நாடி உறைந்து போக,
இறுதி நொடி ஆழம் தனை, என் உயிரில் நான் உணர்ந்தேன்.
எதிர்காலம் இருள் சூழ, கனவுகள் யாவும் கதையாக,
என் முடிவை நான் ஏற்க, எனில் நானே தயாராக,
முடிந்து விட்ட சோகக்கதை, நான் உணரும் வேளையிலே,
கரம் ஒன்று பாய்ந்து வந்து பற்றியது என் கரத்தை.
பத்துமாதம் வயிற்ச்சுமந்து, பெற்றெடுக்கும் தாய் போல,
உன் கரத்தில் எனை சுமந்து, உயிர் கொடுத்த என் தோழா,
நீயும் இனி என் தாய் தான், என்று சொல்லி போற்றிடுவேன்,
நிகரில்லா நம் நட்பை, கண்ணீர் கொண்டு வாழ்த்திடுவேன்.
-குரு-