என்ன எழுதுவது ?
எப்படித் தொடங்குவது ?
என்னவென்று சொல்வது ?
முதல் வரி..............
இழப்பு என்பதா ?
இறப்பு என்பதா ?
இறுதி என்பதா ?
குபீர்! குபீர்! என்று என் வீட்டை நோக்கி
வருகிறது ஏவுகணைகள்.
சடார் சடார் என்று சரமாரியாகச் சரிகிறது
என் உறவுகளின் உடல்கள்.
தவழ்ந்து திரிகிறேன் வாய் பேச முடியாமல்.
நான் அழுது பார்க்கிறேன் அன்னையவள்
மடியில் சரிந்திட. நடப்பதற்கு எத்தனிக்கின்றேன்
தந்தை கையைப் பிடித்துவிட.
எங்கே அவர்கள் ?
-------------------------
நீடிக்கிறது மௌனம்
வரமாட்டார்கள் அவர்கள் என்னை அள்ளி
அணைத்திட மாட்டார்கள்.
சிதறிய உயிர்களின் இரத்த வெள்ளத்தில்
என்ன சாதி தெரிந்ததோ எனக்குப்
புலப்படவில்லை.
சிதறிய உயிர்களில் என்ன மதம்
தெரிந்ததோ என்னால்
உணரமுடியவில்லை.
இவர்கள் யார் ?
உழைத்து உழைத்து.........!
வலுவிழந்த தந்தைமார்களும்.
அடங்கி அடங்கி.........!
சலித்துப்போன பெண்கள்
குலத்தோரும்,
எண்ணி எண்ணி........!
நாளைய நாளைக் கனவு
காணும் இளைஞர் பட்டாளமும்,
எதிர்காலம் எமது கையில் என்று
காத்திருக்கும் மழலைச்
செல்வங்களும்,
இன்னும் சில நாட்கள் என்
பிள்ளைகளுடன் வாழ்ந்து விடலாம்
என்று உயிரைச் சமாதானப்படுத்தி
வைத்திருக்கும் வயோதிபர்களும்,
இப்படி என் கண் முன்னால்
கிடக்கிறது நிறைவேறாமல் போன
உயிர்களின் குமுறல்கள்.
வாழ்ந்து விடலாம் யாருக்காக ?
பேசி விடலாம் எதற்காக ?
பசி,தாகம், வலி
அதற்கு வழி அனாதையாகவாழ்ந்து விடுவது.
ஆனால் நான் வாழ்ந்து என்ன பயன் ?
வேண்டாம்.....
தாக்கட்டும்
ஆளப்பிறந்தவர்களின் ஏவுகணைகள்,
துளைக்கட்டும்
நான் என்ற கர்வம் வழி வந்த
மனிதர்களின் துப்பாக்கித்தோட்டாக்கள்,
சிதறடிக்கட்டும்
ஒற்றுமை வாழ்வை
விரும்பாமல் சிதறிப்போன இன வாதிகளின்
குண்டுகள்.
நான் வாழ்வதை விட வீழ்ந்து போகலாம்.
இந்த உலகம் என்னையும் பயன்படுத்தி விடும்
இன்னொரு யுத்தகளத்தில் என் சகோதரனையும்
அனாதை ஆக்கிவிட.
இறுதியாக ஒரு நொடி நான் மரணிக்கும்
இந்த இடத்தில்
நாளை மரம் ஒன்று முளைவிடும்.
அழித்து விடாதீர்கள் என் இரத்தத்தில்
செழிக்கட்டும் பறவைகளின் இருப்பிடம் .