பொடுபோக்காய் நேசித்தாலும்
யார்மீதான கோபங்களுக்காகவோ வேண்டி பொரிந்து விழுந்தாலும்
எதிர்பார்ப்புக்களை
உதாசீனம் செய்தாலும்
இடைவிடாது குறைகள் சொன்னாலும் ஒன்றும் தெரியாது உங்களுக்கென்று
மட்டம் தட்டினாலும்
செய்தவைகள் குறித்து குறைக்கூறினாலும்
நம் வெற்றிகளின்போது முன்னிற்க முயலாமல் பெருமிதம் கொண்டும்
நம் இழப்புகளின் போது
நமக்காக தவித்தழுதும்
இல்லாமைகளில் நமக்காய்
ஆதரவுக்கரம் நீட்டியும்
தர்க்கம் பேசி நமக்கான அன்பில்
குறைகள் செய்யாமலும்
மாற்றங்கள் ஏதும் முயலாமலே
நமக்காகவே அன்பு செய்யும்
தேவதை அம்மா...
அன்பென்பது கொடுத்து எடுத்தலாம்.. அம்மாவின் அன்பென்பது எடுத்தல்
மட்டுமே ஆன அமுதசுரபி.
தாயின் காலடியில் சொர்க்கம்
ஆம் சொர்க்கத்தின் மீதிருந்தே நேசம்செய்பவர்கள் அம்மாக்கள்..
தாய் எனும் பெயரினை என் வாழ்வில் உவமையாக மட்டுமே உணர முடிந்திருக்கிறது இதுவரை...
இந்த இடத்தில் நமக்கு ஆறுதலாக இருந்திருப்பார்களோ..!!
இது போன்ற நேரத்தில் நமக்கு சாதகமாக வாழ்ந்திருப்பார்களோ..!! என்று...
நேரில் நானிதுவரை உணர்ந்ததும் இல்லை, இறைவன் அவருக்கோர் உறவுப்பலனை உணர்ந்திடும் வரத்தை அளித்திடவும் இல்லை...
இறக்கும் தருவாயிலும் எனக்கும், அன்னைக்கும் இடையிலும் எத்தனையோ இடைவெளிகள்...
ஏனோ, அந்த இடைவெளியை நிரப்ப என்னாலும் முடியவில்லை, அவரும் அதற்கு முயற்சிக்கவில்லை போலும்...
இதுவரை நிலாச்சோறு அறிந்திடாமலே, அன்னை மடி உறக்கம் பெற்றிடாமலே,
உச்சி முகர்ந்திடும் அவள் மூச்சுக்காற்று மணம் முகர்ந்திடாமலே...
தவறு திருத்தித் தண்டிக்கையில் தப்பிச் செல்லக் குறும்பு செய்யாமலே,
ஆறுதல் இன்றி அலைக்கழிக்கையில் தலைத்தழுவும் கரம் பற்றிடாமலே...
துயிலுறக்கும் அவர்க்குரல் தாலாட்டோசைக் கேட்டிடாமலே,
எனக்காய் அவர் சிந்திடும் ஒரு துளி கண்ணீரைத் கூட சேமித்திராமலே...
கல் நெஞ்சக்காரனாய், கலங்காமலிருந்துக் காலம் கடத்திக் கொண்டிருக்கிறேன்...
பெருங்கூட்டமே என் துணையாய் நட்பு, உறவு என்று பல்வேறு அங்கங்களாய் இருக்கின்றனர்.
எனினும், தாய்ப் பாசம் என்பதனைத் துளியளவும் அறியாத நிலையிலும்,
இச்சுவைக்குக் காரணம் என் தாயின் கைப்பக்குவம் என்று நண்பனொருவன் உணவைக் காட்டிக் கூறுகையிலும்,
எம்மகன் இவனென்று ஏதேனும் ஓர் தாய் குறிப்பிட்டு காட்டுகையிலும் தான், ஏனோ என் கண்களில் வெள்ளப்பெருக்கு..!!
என்னையறியாது சிலதுளிக் கண்ணீரைச் சிந்தித் தரை நனைப்பதில், அன்னையவள் நினைவலைகளுக்கு அத்தனை ஆனந்தம் போலும்...
#இருந்திருக்கலாம்_அம்மா_என்னுடனே.!!😔