கடல் அலை நீராவியாக மாறி,ஒரு மேகமாக உருவாகி,அந்த மேகம் இழந்த தன் உறவுகளை தேடி மெல்ல மெல்ல நகர்ந்து,
மரங்கள், செடிகள்,கொடிகளை பார்த்து சிரித்து கொண்டே தூரத்தில் இருக்கும் தன் காதலனான மலையை பார்த்து, தன் அழகான கருப்பு நிறத்தில் உருமாறி ,ஓடி சென்று அனைத்து முட்டி மோதி கொண்டு, தன் ஆனந்தக் கண்ணீரை, மழையாக பொழிகிறது இந்த பூமிக்கு...!
காடுகளை அழித்து வீடுகள் கட்டும் மானிடா.!
காட்டுயானைகள் பசியாற நாட்டு தோட்டத்துக்குள் புகுகின்றன.பறவைகள் குழாயடி ஓரத்திலும் ,கொல்லைப்புறத்தில் ,
தவம் கிடக்கின்றன தாகம் தீர்க்க...!
தண்ணீர் குடிப்பதற்காக,நன்னீர் மீன்கள்
மல்யுத்தம் போட்டு,மாண்டு போனது.!
வறண்ட குளமது,மீன்களின் மயானமானது...!
ஊருக்கு மைதானமானது. அந்த வறண்ட குளத்தில் வறட்சியை அறியா வாலிபர்கள்
வாலிபால் ஆடுகின்றனர்..!
மரங்களின் ஆக்ஸிஜனை சுவாசித்து
இயற்கை தாயை நேசித்து வாழ வேண்டிய மனிதன்,மரங்களை அழித்தும், கனிம வளங்களை சுரண்டியும்,இறைவன் படைத்த இயற்கையை நாசப்படுத்தி விட்டு
மழைக்கு மன்றாடுகிறான் மனிதன்..!
தண்ணீருக்காக மாநிலங்களுக்கிடையே
பனிப் போர் நடப்பதால்
விவசாயம் செய்வதே பெரும்பாடு..!
இது மூன்றாம் உலகப்போராக மாறுவது கண்கூடு..!
பூமியின் புதல்வர்களே,போருக்கு விதை போடாமல்,நீருக்கு விதை போடு,
நிலத்தடி நீர் அது,பூமியின் ரத்தம்..!அது இல்லையேல்,நின்றுபோகும் மனித சத்தம்..!
இயற்கையுடன் சேர்ந்து வாழ கற்று கொள்..!
இல்லையேல் இயற்கையுடன் சேர்ந்து அழியவும் மனதை தேற்றிக்கொள்..!
மழை வந்தால் குடை தேவைப்படுகிறது,
வெயில் அடித்தால் ஒதுங்குவதற்கு நிழலாக மரம் தேவைப்படுகிறது,எனவே ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்,நம்மையும் நம் மண்ணையும் காப்போம்,இயற்கையை நேசிப்போம்...!