என் மனதில் ஆயிரம் ஆயிரம் கற்பனைகள்.
நானும் அவரும் சேர்ந்து மகிழ்வுறும் நிமிடங்களை.
நினைத்து நினைத்து நெஞ்சமெல்லாம் பூரித்து நின்றேன்.
அவன் இசைக்க போகும், சுந்தர பண்ணிசையில்..
நான் என் மனம் உருகி, என்நிலை மறந்த நிலையில்..
அவன் கைகோர்த்து சதிராட.. காத்து கிடந்தேன்..
அவன் வரும் தருணத்துக்கு காத்திருந்து காத்திருந்து
என் கால்களும் உணர்வில்லாது. மரத்து போயின..
நிச்சயம் வருவான்.. என நம்பிக்கையில் காத்திருந்தேன்..
என் அடி மனதில் ஓர் எண்ணம் மட்டும் திடமாக..
உறுதியாக வேரூன்றி இருந்தன.. எனக்காக அவனும்
அங்கே மனம் உருகி.. ஏங்கி தவித்து காத்திருப்பான்..
எல்லைபாதுகாப்பு பணி செல்லும் முன்னே.. அவன்..
என் சின்ன செவிகள் மட்டும் கேட்டும் படி. மொழிந்த
அந்த வார்த்தை.. நினைத்து நினைத்து மனமுறுகினேன்..
என்று அவன் வருவானோ.. என்று என் கை கோர்ப்பானோ..
என்ன கதை சொல்வானோ.. எங்கனம் எனை நாணமுற செய்வானோ..
கட்டுக்கடங்காத கற்பனையில் நீந்தி நீந்தி திளைத்தேன்..
அந்த பொன்னான நாளும், என் கைபேசியை தட்டியது..
எனை முழுதாய் ஆட்கொண்ட அவனின் குறும்செய்தி - கண்ணே,
உன் படபடக்கும் விழி நோக்க, நாளை வருகின்றேன்.
அவனின் செய்தி பார்த்த என்னிரு கருவிழிகளும்,
வண்ண வண்ண நிறங்களில் ஜொலித்தன..- இப்போதே,
அவன் முக பார்க்க, ஏங்கி வாசலை பார்த்து நின்றேன்.
என் சின்னசிறு இருதயத்தில் குட்டி குட்டி சிறகுகள் முளைத்து
அவனை நோக்கி பட படவென பறக்க தொடங்கின..
நில் மனமே நில்.. அவசரம் வேண்டாமென அடக்கிவைத்தேன்.
பணியின் மொத்த விடுப்பு நாட்கள் முழுதும்
அவனுடன் நான்.. என்னுடன் அவன்... ஐயோ...
நினைக்க நினைக்க..மனமகிழ்ச்சியில் திளைத்தேன்.
எப்போது நாளை வருமே காத்திருந்து, என் நீல கண்களும்
சிவந்து போயிருந்தது... அவர் என் விழி பார்க்கையில்,
நிறம்மாற பூவாய் இருக்க எண்ணி, நித்திரை வரவழைத்தேன்..
காலை பொழுதும் மெல்ல மெல்ல புலர்ந்தது..
அவர் விரும்பும் நீலவண்ண உடையில்
நானும் எனை அழகாக அலங்கரித்து கொண்டேன்
வீட்டின் வாயில் மணியோசையும் கேட்டது..
தலைவாயில் நோக்கி மிதந்து வரும் மேகமென
வேகமாக துள்ளி குதித்து பறந்து ஓடினேன்..
சிரித்த முகத்துட்டேன் கதவின் தாழ்திறந்தேன்.
அங்கே நான் கண்ட காட்சிகள் கண்டு மிரண்டு நின்றேன்.
சொந்தம் பந்தம் எல்லாம் வாசலில் கூடி நிற்க திகைத்துநின்றேன்.
பாவி பொண்ணே.. தங்க சிலையாட்டம் நிக்கிறாளே..
இவள தவிக்க விட்டுட்டு அவனை மட்டும் இப்படி..
அந்த படுபாதக எமன் கூட்டிட்டு போயிட்டானே..
என் தலை கிறுகிறுக்க, கண்களில் உருவங்கள் நிழலாட
அவர்களின் பேச்சுக்கள் என் காதுகளை தழுவியது..
அவன் வந்த ரயில் குண்டு வெடிப்பில் சிக்கி சிதறியதாம்.
நிலைமையை புரிந்து கொள்ள மறுத்தது என் மனம்.
நிலை தடுமாறி.. கால்களில் வலுவின்றி தடுமாறினேன்.
எனை தாங்கிய பூமியே, இன்று எனை கைவிட்டதுஏனோ..
என் மனக்கண்களில், அவன் மலர்ந்த முகம் மின்ன..
நாங்கள் கண்ட கனவுகள் ஒன்று ஒன்றாக நிழலாட.
கண்களில் கருமேக சூழ, நிலைகுலைந்து வீழ்ந்தேன்..
அவன் கை கோர்க்க, மீளா துயில் கொண்டேன்..
அவன் முகம் காண, மீளா துயில் கொண்டேன்..
என்னுயிர் அவனுடன் சேர, மீளா துயில் கொண்டேன்..