Author Topic: அன்னை தெரேசா  (Read 4559 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அன்னை தெரேசா
« on: February 15, 2012, 08:42:42 PM »
அன்னை தெரேசா


"ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ"


பிறப்பு
 
ஆகத்து 26, 1910
 அஸ்கப், ஓட்டோமான் பேரரசு (இன்றைய ஸ்கோப்ஜி, மாசிடோனியக் குடியரசு)
 
இறப்பு
 
செப்டம்பர் 5 1997 (அகவை 87)
 கொல்கத்தா, இந்தியா
 
தேசியம்
 
அல்பேனியன் / இந்தியன்
 

பணி
 
ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி, மனித நேய ஆர்வலர்
 
அறியப்படுவது
 
பிறர் அன்பின் பணியாளர் சபையின் நிறுவுனர்



அன்னை தெரேசா (ஆகஸ்டு 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில்(கல்கத்தா) மிஷினரீஸ் ஆப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவர் ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர்.
 
1970 ஆம் ஆண்டுகளுக்குள் இவர் சிறந்த பரோபகாரி எனவும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட மேல்கம் முக்கெரிட்ஜ் -ன் சம்திங்க் பியுடிஃபுல் ஃபார் காட் என்ற விளக்கப்படமும் ஒரு காரணமாகும். இவர் 1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசும், 1980 ஆம் ஆண்டில் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னாவும் பெற்றார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை விரிந்து கொண்டே சென்று, அவரது மரணத்தின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எச்ஐவி/எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும்.
 
பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகள் இவரை புகழ்ந்து வந்திருக்கின்றன. எனினும் பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்துள்ளார். இத்தகைய விமர்சனங்கள் கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ், மைக்கேல் பேரன்டி, அரூப் சட்டர்ஜி போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாலும் அவரது உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் என்ற குற்றச்சாட்டினையும், மதமாற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்ட அவரது யுத்திகளாகக் கருதி எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளாகும். பல மருத்துவப் பத்திரிகைகள், அவரது நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பிய வண்ணமும் இருந்தன.
 
மரணத்திற்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-ஆல் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா என்று பட்டம் சூட்டப்பட்டார்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அன்னை தெரேசா
« Reply #1 on: February 15, 2012, 08:44:58 PM »
தொடக்க வாழ்க்கை

ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் "ரோஜா அரும்பு" என்று பொருள்) ஆகஸ்டு 26, 1910 அன்று ஒட்டோமன் சாம்ராஜ்யத்தின் அஸ்கப் (தற்போது மேசிடோனியக் குடியரசின் ஸ்கோப்ஜி)இல் பிறந்தார். ஆகஸ்டு 26 ஆம் தேதி பிறந்த போதிலும், அவர் திருமுழுக்குப் பெற்ற ஆகஸ்டு 27 ஆம் தேதியையே தனது உண்மைப் பிறந்தநாளாகக் கருதினார்.[4] அல்பேனியாவின் ஷ்கோடரில் வாழ்ந்து வந்த குடும்பமான நிக்கல் மற்றும் டிரானா போஜாக்சியுவின் குழந்தைகளில் இளையவர் இவர்.[5] அவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 ஆம் ஆண்டில், ஸ்கோப்ஜி அல்பேனியாவிற்கு வெளியே தள்ளப்பட்ட ஒரு அரசியல் கூட்டத்திற்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு ஆக்னஸுக்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார். அவரது மரணத்திற்குப் பின், அவரது தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.[6] ஜோன் கிராப் க்ளூகாஸின் வாழ்க்கை வரலாற்றின்படி குழந்தைப் பருவத்தில் ஆக்னஸ் மதபோதகர்களாலும் அவர்களது சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதுக்குள் தெய்வ நம்பிக்கையுள்ள ஒரு வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.[7] தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மத பிரசாரகராக தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்த்தாரிலர்.[8]
 
இந்தியாவின் பள்ளிக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க லொரேட்டோ சகோதரிகள் பிரயோகிக்கும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, அயர்லாந்தின் ரத்ஃபர்ன்ஹாமில் உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு முதலில் சென்றார் ஆக்னஸ்.[9] 1929 ஆம் ஆண்டு அவர் இந்தியாவை வந்தடைந்து இமய மலை அருகே உள்ள டார்ஜீலிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார்.[10] கன்னிகாஸ்திரிகளுக்கான முதன்மை மத பிரமாணங்களை அவர் மே 24, 1931 அன்று எடுத்துக்கொண்டார். அவ்வமயம் மதபிரசாரகர்களின் காவல் புனிதரான தெரேசா டி லிசியுவின் பெயரைத் தனக்குத் தெரேசா எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.[11][12] கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது அர்ப்பணிப்பு பிரமாணங்களை 1937, மே 14 ஆம் தேதி எடுத்துக் கொண்டார்.
 
பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமதிகமாய் கலங்கச் செய்தது.1943-ன் பஞ்சம், துயரத்தையும் சாவையும் அந்நகரத்துக்குக் கொணர்ந்தது என்றால் 1946-ன் இந்து/முஸ்லிம் வன்முறை அந்நகரத்தை நம்பிக்கையின்மையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அன்னை தெரேசா
« Reply #2 on: February 15, 2012, 08:48:56 PM »
பிறர் அன்பின் பணியாளர் சபை



பிறர் அன்பின் பணியாளர் சபைத் துறவிகள்


செப்டம்பர் 10, 1946 இல் வருடாந்திர தியானத்திற்காக கல்கத்தாவிலிருந்து, டார்ஜீலிங்கின் லொரேட்டோ கன்னிமடத்திற்கு தெரேசா பயணம் மேற்கொண்டிருந்த பொழுது அவருக்கு நேர்ந்த உணர்வு பின்னர் அவர் அதனை "அழைப்பினுள் நேர்ந்த அழைப்பு" என வர்ணிக்க வைத்தது. "நான் கன்னிமடத்தை விட்டு வெளியேறி, ஏழைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டே அவர்களுக்கு உதவ வேண்டும். அது ஒரு கட்டளை. தவறுவது விசுவாசத்தை மறுதலிப்பதற்கு ஒப்பானது."[17] 1948 ஆம் ஆண்டில் ஏழைகளுடனான தனது ஊழியத்தை ஆரம்பித்தார் அவர். பாரம்பரிய லொரேட்டோவின் அங்கியைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் நடமாடினார். தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர், பட்டினியால் வாடுவோர் போன்றவர்களின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அவரது முயற்சிகள் விரைவிலேயே பிரதம மந்திரி உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.
 
தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் கஷ்டங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் சௌகர்யத்திற்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதினார்.
 



 
Our Lord wants me to be a free nun covered with the poverty of the cross. Today I learned a good lesson. The poverty of the poor must be so hard for them. While looking for a home I walked and walked till my arms and legs ached. I thought how much they must ache in body and soul, looking for a home, food and health. Then the comfort of Loreto [her former order] came to tempt me. 'You have only to say the word and all that will be yours again,' the Tempter kept on saying ... Of free choice, my God, and out of love for you, I desire to remain and do whatever be your Holy will in my regard. I did not let a single tear come.
 

 

1950 அக்டோபர் 7 ஆம் தேதி, பிறர் அன்பின் பணியாளராக பிற்காலத்தில் உருவெடுக்கப் போகும் சபையை துவக்க தெரெசாவுக்கு அனுமதி கிடைத்தது.[23] அதன் கடமையாக அவர் கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப் படாதவர்களெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்." கல்கத்தாவில் 13 உறுப்பினர்களையே கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டது இது. இன்று 4000,௦௦௦க்கும் மேலான அருட்சகோதிரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தர்ம ஸ்தாபனங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்காக பரிதவிப்பதாய் இருக்கிறது.
 
1952 ஆம் ஆண்டில் கல்கத்தா நகரத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை தெரேசா இறப்பின் வாயிலிலிருப்போருக்கு, முதல் இல்லத்தை ஏற்படுத்தினார். இந்திய அதிகாரிகளின் துணை கொண்டு அவர் புழக்கமற்ற ஒரு இந்து கோயிலை ஏழைகளுக்கான நல்வாழ்வு மையமாக மாற்றி, அதற்கு இறப்பின் வாயிலிலிருப்போருக்கான காளிகாட் இல்லம் (தி காளிகாட் ஹோம் பார் தி டையிங்) என்று பெயரிட்டார். பின்னர் அதனை சுத்த இதயமுடையோர்களின் காளிகாட் இல்லம் என்று மாற்று பெயரிட்டு அழைத்தார் (காளிகாட், தி ஹோம் ஆப் தி பியூர் ஹார்ட்-நிர்மல் ஹ்ரிதை)[25]. இவ்வில்லத்திற்கு கொண்டு வரப்படுபவர்கள் மருத்துவக் கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்களாயும், அவர்கள் சார்ந்துள்ள மதச்சடங்குகளுடன் கூடிய கௌரவமான மரணத்தையடையும் வாய்ப்பைப் பெற்றவர்களாகவும் இருந்தனர். இஸ்லாமியர்களுக்கு திருக்குர்ஆனும், இந்துக்களுக்கு கங்கைஜலமும், கத்தோலிக்கர்களுக்கு இறுதிச் சடங்குகளும் கிடைத்தன. "அழகியதொரு மரணம் என்பது விலங்குகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் அன்புக்காட்பட்ட, பிறரால் வேண்டப்பட்ட தேவதூதர்களைப் போன்ற உணர்வைப் பெற்றபின் மரிப்பது." என்பதே அவரது கூற்றாகும்.அன்னை தெரேசா விரைவில் ஹேன்சன்ஸ் டிசீஸ் எனப்படும் தொழுநோயால் அவதிப்படுபவர்களுக்குரிய நலவாழ்வு மையமான ஷாந்தி நகரைத் (சமாதானத்தின் நகரம்) துவக்கினார். தி மிஷினரீஸ் ஆப் சேரிட்டி கல்கத்தா முழுவதும் மேலும் பல தொழுநோய்க் கூர்நோக்கு மருந்தகங்களைத் தோற்றுவித்து, அவற்றின்மூலம் மருந்துபொருட்கள், காயங்களைக் கட்டும் துணிகளையும், உணவையும் விநியோகித்து வந்தது.
 
பிறர் அன்பின் பணியாளர் தொலைந்து போன குழந்தைகளைப் பெருமளவில் ஏற்றுக்கொள்கையில், அக் குழந்தைகளுக்கென ஒரு இல்லத்தை அமைப்பதற்கான அவசியத்தை அன்னை தெரேசா உணரப் பெற்றார். 1955 ஆம் ஆண்டில் அவர் நிர்மலா சிசு பவனையும், தி சில்ட்ரென்ஸ் ஹோம் ஆப் தி இமாக்குலேட் ஹார்ட்டையும் அனாதைக் குழந்தைகளுக்காகவும், வீடற்ற இளைஞர்களுக்காகவும் தொடங்கினார்.[28]
 
இவ்வமைப்பு விரைவிலேயே புது பணியாளர்களையும், தர்மத்திற்கான நன்கொடைகளையும், ஈர்க்கத் தொடங்கி 1960 ஆம் ஆண்டுகளில் நல்வாழ்வுமையங்களையும், அநாதை இல்லங்களையும், தொழுநோயாளிகள் தங்குமிடங்களையும் இந்தியா முழுவதும் ஆரம்பித்தது. அன்னை தெரேசா பின்னர் இதனை உலகம் முழுவதும் விஸ்தரித்தார். இந்தியாவுக்கு வெளியே இவ்வமைப்புக்கான முதல் இல்லம் 1995 ஆம் ஆண்டில் வெனிஸுயெலா நாட்டில் ஐந்து அருட்சகோதரிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.[29] அதனைத்தொடர்ந்து 1968 ஆம் ஆண்டில் ரோமிலும், தான்சானியாவிலும், ஆஸ்திரியாவிலும் தொடங்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டுகளில் இவ்வமைப்பு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கணக்கற்ற நாடுகளில் இல்லங்களையும், தர்ம ஸ்தாபனங்களையும் நிறுவியது. அவரது தத்துவமும், அமலாக்கும் விதமும் சிலரது விமர்சனத்திற்குள்ளாயின. அன்னை தெரேசாவை விமர்சித்தவர்கள் அவருக்கெதிராகக் காட்டுவதற்கு எள்ளளவேனும் ஆதாரம் இல்லை என்று கூறும்போதே டேவிட் ஸ்காட் அன்னை தெரேசா வறுமையை அடியோடு ஒழிக்க முனையாமல், மக்களை உயிர்வாழ வைப்பதோடு தன் சேவையை நிறுத்திக் கொண்டார் எனக் கூறுகிறார். வேதனையைப் பற்றிய அவரது கருத்துக்களைக் குறித்தும் அவர் விமர்சனத்திர்க்குள்ளானார். ஆல்பெர்டா ரிபோர்டின் ஆய்வுக்கட்டுரையின்படி வேதனைக்குள்ளாவது மக்களை இறை இயேசுவுக்கருகில் கொணரும் என்று அவர் நினைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில், நோய் முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் கவனிப்பின் தரம், தி லேன்சட் ,தி பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் போன்ற மருத்துவ பத்திரிகைகளின் விமர்சனத்துக்குள்ளானது. இவை தோலடி ஊசிகளின் மறு உபயோகத்தையும், அடிப்படை வசதிகளின்மையையும், குளிர்ந்த நீர் குளியலை அனைத்து நோயாளிகளுக்கும் பிரயோகிப்பதையும், முறையான நோய்க் கண்டறிதலைத் தடுக்கும் நடைமுறைக்கொவ்வாத அணுகுமுறையையும் குறைகூறின.
 
1963 ஆம் ஆண்டில் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி சகோதரர்கள் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1976 இல் அருட்சகோதரிகளின் தியானக் கிளை தோற்றுவிக்கப்பட்டது. சாமான்ய கத்தோலிக்கர்களும், கத்தோலிக்கர் அல்லாதவர்களும், அன்னை தெரேசாவின் சக ஊழியர்களாகவும், நோய்வாய்ப்பட்ட அல்லது வேதனைப்படுகிற சக ஊழியர்களாகவும், சாமான்ய மிஷினரீஸ் ஆப் சேரிட்டிகளாகவும் பதிவு செய்யப்பட்டனர். பாதிரியார்கள் பலரின் கோரிக்கைகளை ஏற்று 1981 ஆம் ஆண்டில், பாதிரியார்களுக்கான கார்பஸ் கிறிஸ்டி இயக்கத்தையும்,[34] 1984 ஆம் ஆண்டில், தந்தை ஜோசப் லாங்போர்டுடன் இணைந்து தி மிஷினரீஸ் ஆப் சேரிட்டி பாதர்ஸ்[35] என்ற அமைப்பையும் தொடங்கினார். இதன் நோக்கம் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் அலுவல் குறிக்கோள்களை, பாதிரியார்த்துவத்துக்கு கீழ்பட்ட ஆதாரங்களோடு இணைப்பது. 2007 ஆம் ஆண்டுக்குள் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி ஏறத்தாழ 450 அருட் சகோதரர்களையும், 120 நாடுகளில் 60000 சேவை மையங்கள், பள்ளிகள் மற்றும் தங்குமிடங்களை இயக்கிக் கொண்டிருக்கும் 5000 000 அருட்சகோதரிகளையும் கொண்டிருந்தது.[

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அன்னை தெரேசா
« Reply #3 on: February 15, 2012, 08:50:27 PM »
அயல்நாட்டு தர்ம நிகழ்வுகள்.
 
1982 இல் பெய்ரூட்டின் கடும் முற்றுகையைத் தொடர்ந்து, அன்னை தெரேசா இஸ்ராயேல படைகளுக்கும் பாலஸ்தீன கொரில்லாகளுக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்து முன்னோடித் தாக்குதலுக்குள்ளான ஒரு மருத்துவமனையினுள் சிக்கிக் கொண்டிருந்த 37 குழந்தைகளை மீட்டார். செஞ்சிலுவை சங்கத்தாருடன் சேர்ந்து யுத்த பகுதியினூடே பாழ்படுத்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று இளம் நோயாளிகளை வெளியேற்றினார்.
 
1980 களின் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவின் அதீத வரவேற்புக்குப் பின் ஆரம்பத்தில் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியை உதாசீனப்படுத்திய கம்யுனிச நாடுகளில் பல திட்டங்களை வகுத்து தனது முயற்சிகளை விஸ்தரித்தார். கருக்கலைப்பு மற்றும் விவாகரத்துக்கு எதிரான அவரது உறுதியான நிலைப்பாட்டின் மீதான விமர்சனங்கள் அவரை பாதிக்கவில்லை. "யார் என்ன சொன்னாலும் சரி, நீங்கள் அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு உங்கள் வேலையைச் செய்தாக வேண்டும்.
 
அன்னை தெரேசா எத்தியோப்பியாவின் பசித்தோருக்கும், செர்னோபிலின் அணுக்கதிர்களின் தாக்கத்துக்காளானவர்களுக்கும், அர்மீனியாவின் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கும், உதவி செய்யவும் ஊழியஞ்செய்யவும் பயணித்தார். 1991-ல், முதன்முறையாகத் தனது பூர்வீகத்தை வந்தடைந்த அவர் அல்பேனியாவின் டிரானாவில் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி அருட்சகோதரர்கள் இல்லத்தைத் தொடங்கினார்.
 
1996 க்குள் அவர் ஏறத்தாழ 100 நாடுகளில் 517 தொண்டு நிறுவனங்களை நடத்திவந்தார்.[42] நாளடைவில் ஏழைஎளியோருக்குத் தொண்டாற்றும் அன்னை தெரேசாவின் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி வெறும் பன்னிரண்டு மையங்களிலிருந்து, உலகம் முழுவதும் 450 நாடுகளில் ஆயிரக்கணக்கான மையங்களாக வளர்ந்தது. அமெரிக்காவின் முதல் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி தெற்கு பிராங்க்ஸிலும், நியுயார்க்கிலும் நிறுவப்பட்டது. 1984 க்குள் இவ்வமைப்பு நாடு முழுவதும் 19 மையங்களை இயக்கியது.
 
அவர் நன்கொடை பணத்தை செலவழிக்கும் விதம் சிலரது விமர்சனத்துக்குள்ளானது. கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ் மற்றும் ஜெர்மானிய சஞ்சிகையான, ஸ்டேர்ன் போன்றவை அன்னை தெரேசா நன்கொடைப்பணத்தை வறுமையை ஒழிப்பதற்கும், தனது நல்வாழ்வு மையங்களின் நிலைமையை உயர்த்துவதற்கும் பயன்படுத்த எண்ணாமல், புதிய கன்னியர் மடங்களைத் திறப்பதிலும் மதப்பிரசாரத்திற்கும் மட்டுமே பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர்.
 
மேலும் அன்னை தெரேசாவால் ஏற்கப்பட்ட சில நன்கொடைகள் வந்த விதமும் விமர்சனத்துக்குள்ளாயின. ஹைதியின் எதேச்சாதிகார, நேர்மையற்ற டியுவேலியேர் குடும்பத்தில் இருந்து நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டு வெளிப்படையாக அவர்களைப் புகழ்ந்திருக்கிறார். கீட்டிங் பைவ் ஊழல் என்றழைக்கப்பட்ட ஏமாற்று சுரண்டல் திட்டத்தோடுத் தொடர்புடைய சார்லஸ் கீட்டிங்கிடமிருந்து 1.4 மில்லியன் டாலர்களைப் பெற்றுக் கொண்டு அவர் கைதாவதற்கு முன்னும் பின்னும் அவரை ஆதரித்தவர் அன்னை தெரேசா. லாஸ் ஏஞ்சல்ஸின் [[மாவட்ட துணை வழக்கறிஞர் பால் டர்லி, கீட்டிங்கால் திருடப்பட்ட ஏழை தச்சனொருவனைப் போன்றோரின் பணத்தை, தெரேசா அவரிடமிருந்து நன்கொடையாகப் பெற்ற பணத்தை வைத்து திரும்பக் கொடுக்கக் கோரி எழுதினார். நன்கொடைப் பணம் என்னவாயிற்று என்றும் தெரியவில்லை, டர்லிக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
 
கோலெட் லிவர்மூர் எனும் முன்னாள் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி உறுப்பினர் அவ்வமைப்பை விட்டுத் தான் வெளியேறியதற்கான காரணங்களை அவரது புத்தகமான ஹோப் என்ட்யுர்ஸ்: லீவிங் மதர் தெரேசா, லூஸிங் பெய்த் அண்ட் ஸெர்ச்சிங் பார் மீனிங் என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார். அன்னை தெரேசா சிறந்த தைரியமானவராக இருந்தபோதிலும், அவரது துன்பத்தின் சாஸ்திரம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று லிவர்மோர் எண்ணினார்.மதபோதனைகளை விட செயல்கள் மூலம் நற்செய்தியைப் பரப்புதலின் முக்கியத்துவத்தை அன்னை தெரேசா அவரது சீடர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தபோதிலும், அந் நிறுவனத்தின் சில நடைமுறைகளுடன் தான் ஒத்துப்போக முடியவில்லை என்று லிவர்மூர் கூறுகிறார்.அதற்கு அவர் கூறும் எடுத்துக்காட்டுகளாவன, நியமிக்கப்பட்ட கால அட்டவணைக்கு மாறாக உதவி வேண்டுபவர்கள் அருட்சகோதரிகளை அணுகும்போது, உதவி செய்ய மறுத்தல், அவர்கள் சந்திக்கிற வியாதிகளை போக்குவதற்குத் தேவையான மருத்துவ பயிற்சிகளை அருட்சகோதரிகள் நாடுவதைத் தடைசெய்வது (ஆண்டவர் பெலவீனர்களையும் அறிவிலிகளையும் பலப்படுத்துகிறார் எனக் கூறிக் கொண்டு), மற்றும் நண்பர்களை விட்டு தொலைவில் தரப்படுகிற இடமாற்றம் போன்ற நியாயமற்ற தண்டனைகள் வழங்குவது. மதச்சார்பற்ற புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளைப் படிப்பதிலிருந்து தடைசெய்வதன்மூலமும், சுதந்திரமான எண்ணங்கள் மற்றும் பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் ஆகியவற்றை பொருட்படுத்தாத கீழ்படிதலை வலியுறுத்துவதன் மூலமும், மிஷினரீஸ் ஆப் சேரிட்டி அதன் அருட்சகோதரிகளை குழந்தைகளைப் போல் மாற்றி விட்டது என்கிறார் லிவர்மூர்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அன்னை தெரேசா
« Reply #4 on: February 15, 2012, 08:52:12 PM »
ஆரோக்கியக் குறைபாடும் மரணமும்
 
1983-ல் போப் இரண்டாம் ஜான் பாலை ரோமையில் சந்தித்த பொழுது அன்னை தெரெசாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 1989-ல் இரண்டாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு அவருக்கு செயற்கை துடிப்புமூலம் பொருத்தப்பட்டது. 1991-ல் மெக்சிகோவில், நிமோனியாவுடனான போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டார்.மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால் இவ்வமைப்பின் அருட்சகோதரிகள் இரகசிய வோட்டின் மூலம் அவர் அப்பணியிலேயே தொடர்ந்திருக்க செய்தனர். அமைப்பின் தலைவியாகத் தொடர அன்னை தெரேசா ஒப்புக்கொண்டார்.
 
ஏப்ரல் 1996-ல் அன்னை தெரேசா கீழே விழுந்து அவரது காறை எலும்பு முறிந்தது. ஆகஸ்டில் மலேரியாவினாலும், இதய கீழறைக் கோளாற்றினாலும் அவதிப்பட்டார்.இதய அறுவைசிகிச்சைக்குட்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. அவரைப் பற்றிய இன்னொரு விமர்சனம், நோயில் விழுந்தபொழுது தனது மருந்தகங்களில் ஒன்றில் சிகிச்சை பெறாமல், கலிபோர்னியாவின் அனைத்து வசதிகளுமுடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்தது. மார்ச் 13, 1997 ல் அவர் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விடுபட்டு செப்டம்பர் 5, 1997-ல் மரணமடைந்தார். கல்கத்தாவின் ஆர்ச்பிஷப் ஹென்றி செபாஸ்டியன் டி 'சூசா, இதய கோளாறுகளினால், அன்னை தெரேசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபொழுது, அவர் அலகையின் பிடியில் இருக்கலாமெனத் தான் எண்ணிய காரணத்தால் அவரது அனுமதியோடு அவரை மந்தரிக்கும்படி ஒரு பாதிரியாரை பணித்ததாகக் கூறியுள்ளார்.
 
அவரது மரணத்தின் போது, அன்னை தெரேசாவின் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி 123 நாடுகளின் 610 சேவை மையங்களை இயக்கி வரும் 4,000 க்கும் மேலான அருட் சகோதரிகளையும், [மேற்கோள் தேவை][61] 300 உறுப்பினர்களைக் கொண்ட சக அருட் சகோதர அமைப்பையும் [மேற்கோள் தேவை], 10,000 த்திற்கும் மேலான சாமான்ய தொண்டர்களையும் கொண்டிருந்தது. [மேற்கோள் தேவை] இவை எச் ஐ வி/எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான நலவாழ்வு மையங்களையும், இல்லங்களையும்,அன்னசத்திரங்களையும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைமையங்களையும், தனி உதவியாளர்களையும், அநாதைமடங்களையும், பள்ளிகளையும் உள்ளடக்கியது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அன்னை தெரேசா
« Reply #5 on: February 15, 2012, 08:53:43 PM »
உலக அங்கீகாரமும் வரவேற்பும்

இந்தியாவில் வரவேற்பு
 
1962 ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பே இந்திய அரசால் அன்னை தெரேசா அடையாளங்காணப்பட்டுள்ளார். 1972-ல், பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவகர்லால்நேரு விருது, 1980-ல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா உட்பட பிரதான இந்திய உயர்விருதுகளை அடுத்ததடுத்த பத்தாண்டுகளில் பெற்று வந்தார்.
 
அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992 ல் வெளியிடப்பட்டது.
 
அன்னை தெரசாவைப் பற்றிய இந்தியாவின் கருத்துகள் ஒரே சீராக சாதகமானவைகள் அல்ல. கல்கத்தாவில் பிறந்து வளர்ந்து லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது விமர்சகரான அரூப் ச்சேட்டர்ஜி அவர் வாழ்ந்த காலத்தில் கல்கத்தாவின் முக்கிய அங்கமாக இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அன்னை தெரேசா தனது சொந்த ஊரான கல்கத்தாவின் புகழைக் குலைத்து விட்டதாகக் குறை கூறுகிறார் அரூப் ச்சேட்டர்ஜி.[51] இந்துக்களின் உரிமையை அவ்வப்போது எதிர்த்து வந்ததால், அவரது சமூகமும், ரூபமும் இந்திய அரசியல் சமுதாயத்தில் எரிச்சலை உண்டுபண்ணின. பாரதிய ஜனதா கட்சி கிறிஸ்துவ தலித்துக்கள் விஷயத்தில், அவரோடு மோதிய போதிலும், அவரது மரணத்தின் போது அவரைப் புகழ்ந்து, இறுதி சடங்கிற்குத் தனது பிரதிநிதியை அனுப்பியது. ஆனால் விஸ்வ இந்து பரிஷத்தோ, அரசு மரியாதையுடன் கூடிய உடல் தகனம் செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.அதன் நிர்வாகி கிரிராஜ் கிஷோர், "அவரது முதல் கடமை கிறிஸ்துவத்திற்கே இருந்தது" என்றுக் கூறினார் . பொது நல சேவை தற்செயலானது. மேலும் அவர் கிறிஸ்துவர்களுக்கு சாதகமானவரென்றும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு இரகசிய ஞானஸ்நானங்கள் மேற்கொள்ளுபவரென்றும் குற்றஞ்சாட்டினார். ஆனால் ப்ரண்ட் லைன் பத்திரிகையளித்த முதல் பக்கமரியாதையில் இக்குற்றச்சாட்டுகளை அப்பட்டமான தவறாக நிராகரித்துள்ளது. அவரது சேவையைப் பற்றிய மக்களின் கல்கத்தாவாசிகளின் எண்ணத்தில், எந்த தாக்கத்தையும் இவை விளைவித்துவிடவில்லை என்றும் கூறியிருக்கிறது. இப்புகழ்மாலையை சூட்டிய ஆசிரியர் அவரது தன்னலமற்ற சேவை செய்யும் சக்தியையும், தைரியத்தையும் புகழ்ந்தபோதிலும், பொது கூட்டங்களில் அவர் கருக்கலைப்பை எதிர்ப்பதையும், அதை அரசியல் நோக்கமில்லாததாகக் காட்டிக்கொள்வதையும் குறை கூறியுள்ளார். அண்மையில், இந்திய நாளேடான தி டெலிக்ராப் அவர் வறியவர்களின் துன்பத்தைப் போக்க ஏதேனும் செய்தாரா அல்லது உணர்வுபூர்வமாக நெறிகளைத் தூண்டும் நோக்கத்தோடு, நோயாளிகளையும் இறப்போரையும் பராமரித்து வந்தாடு நின்று விட்டாரா என்பதைக் குறித்து விசாரிக்கும்படி ரோமைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
 
செப்டம்பர் 1997 ல் இறுதிச்சடங்கிற்கு முன்னதாக ஒரு வார காலம் அன்னை தெரேசாவின் உடல் கொல்கத்தாவின் புனித தோமையார் ஆலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அனைத்து மத ஏழைகளுக்கும் அவர் ஆற்றிய தொண்டுக்குப் பரிகாரமாக, இந்திய அரசின் ராணுவ மரியாதையுடன் கூடிய உடல் தகனம் செய்யப்பட்டது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அன்னை தெரேசா
« Reply #6 on: February 15, 2012, 08:57:31 PM »
ஏனைய உலக நாடுகளில் வரவேற்பு


அமெரிக்க ஜனாதிபதி ரோனல்ட் ரீகன் அன்னை தெரெசாவுக்கு சுதந்தரத்துக்கான அதிபரின் பதக்கத்தை 1985 ல் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.

தெற்காசிய மற்றும் கிழக்காசிய சேவைகளுக்காக 1962-ல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் ரமோன் மேக்சேசே விருதைப் பெற்றார். அயல்நாடுகளில் தாழ்த்தப்பட்ட ஏழைகளின் மீதான கருணை நிறைந்த கவனத்தையும், அதற்காகவே அவர் வழிநடத்திச் செல்லும் புதிய சபையையும் இவ்விருதின் தர்மகர்த்தாக்களின் குழுமம் அங்கீகரிக்கிறது என்று விருதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 1970 களின் தொடக்கத்திற்குள் அன்னை தெரேசா அனைத்துலக பிரபலமானார். 1969 ன் விளக்கப்படமான மேல்கம் முக்கேரிட்ஜ்-ன், சம்திங்க் பியுடிபுல் பார் காட் -ம், அதே தலைப்புடைய அவரது புத்தகமும் அவரது புகழுக்கு வித்திட்டவைகளில் முக்கியமானவை ஆகும். முக்கேரிட்ஜ் அந்நேரத்தில் ஒரு ஆன்மீக பயணத்தில் ஆழ்ந்திருந்தார்.[55] அச்செய்திப்படத்தின் படப்பிடிப்பின் போது மோசமான ஒளியமைப்பு சூழ்நிலையில், குறிப்பாக இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் படப்பிடிப்புக் குழுவினரின் உபயோகத்திற்கு ஏற்றதாக இல்லை. ஆனால் இந்தியாவிலிருந்து திரும்பிய பின்னர் அக கட்சிதொகுப்பு மிக நல்ல ஒளியமைப்புடன் வந்திருந்தது. அன்னை தெரேசாவிடமிருந்தே வந்த தெய்வீக ஒளியர்ப்புதம் இது என முக்கேரிட்ஜ் பறைசாற்றினார்.[56] அப்படப்பிடிப்புக் குழுவின் மற்றவர்கள் அது புதுவித அதிநுண்ணிய வகை கோடாக் படச்சுருளால் ஏற்பட்ட விளைவே என்றெண்ணினர்.முக்கேரிட்ஜ் பின்னர் கத்தோலிக்கராக மாறி விட்டார்.
 
இவ்வேளையில் கத்தோலிக்க உலகம் முழுவதும் அன்னை தெரேசாவைப் பகிரங்கமாகப் புகழ ஆரம்பித்தனர். 1971-ல் அருட் தந்தை ஆறாம் சின்னப்பர், சமாதானத்துக்கான முதல் அருட் தந்தை 23 ம் அருளப்பர் பரிசை, அவரது ஏழை எளியோர் சேவையையும் கிறிஸ்துவ தர்ம பறைசாற்றலையும், சமாதான முயற்சியையும் பாராட்டி அவருக்கு அளித்தார்.[58] அதன் பிறகு பேசெம் இன் டெர்ரிஸ் விருதைப் பெற்றார் தான் மரித்தநாளிலிருந்து அன்னை தெரேசா புனிதத்துவத்தினை நோக்கி வேகமாக முன்னேறி தற்பொழுது முக்தி பேறினை எட்டியிருக்கிறார்.
 
அன்னை தெரேசா அரசாங்கங்களாலும், மக்கள் அமைப்புகளாலும் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய சமுதாயத்திற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் செய்த சேவைக்காக, 1982-ல் அவர் ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் கௌரவ தோழர் என்ற விருதைப் பெற்றார்.[60] இங்கிலாந்தும், அமெரிக்காவும் அடுத்தடுத்து விருதுகள் வழங்கிய பின் 1983-ல், இங்கிலாந்தின் ஆர்டர் அப் மெரிட் என்ற விருதும், நவம்பர் 16 1996 ல், அமெரிக்காவின் கௌரவக் குடியுரிமையும் கிடைத்தன. அன்னை தெரேசாவின் பூர்விகமான அல்பேனிய நாடு அவருக்கு 1994 ஆம் ஆண்டு தேசத்தின் தங்க மரியாதையை அளித்து கௌரவப்படுத்தியதோடல்லாமல்[49] 1991-ல் குடியுரிமையும் அளித்திருந்தது. இதையும் ஹைதி அரசளித்த இன்னொரு விருதையும் அவர் ஏற்றுக்கொண்டது விமர்சனத்துக்குள்ளானது. அன்னை தெரேசா டியுவேலியர்களையும், சுரண்டலுக்குப் பேர் போன தொழிலதிபர்களான சார்லஸ் கீட்டிங் மற்றும் ராபர்ட் மேக்ஸ்வல் போன்றோர்களையும் ஆதரித்ததால் இடதுசாரிகள் உட்பட அனைவரின் விமர்சனத்துக்கும் உள்ளானார். கீட்டிங்கின் விவகாரத்தில் அவ்வழக்கின் நீதிபதியிடம் இரக்கத்தைக் காட்ட வலியுறுத்தி எழுதினார்.
 
மேற்க்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களும் இந்திய பல்கலைக்கழகங்களும் அவருக்கு கௌரவப் பட்டங்களை அளித்தன.[49] ஏனைய குடிமக்கள் விருதுகளாவன, மனிதநேயம், சமாதானம் மற்றும் சகோதரத்துவ விருத்திக்காக பல்சான் விருது (1978),[62] மற்றும் ஆல்பெர்ட் ஷ்வேய்த்சர் அனைத்துலக விருது ஆகியன.
 
1979 ல், அன்னை தெரேசா சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார். சமாதானத்தின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அவர் அதற்காகும் $192,000 நிதியை இந்தியாவின் ஏழைகளுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.[64] அதற்கு அவர் கொடுத்த காரணம் இவ்வுலக விருதுகள் உலகத்தின் ஏழைகளுக்கு உதவ வழிகோலும் பட்சத்தில் மட்டுமே முக்கியமானதாகக் கருதப்படும் என்பதே. அன்னை தெரேசா பரிசை பெற்ற பொழுது அவரிடம் ,"உலக சாமாதானத்தை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?", என்றுக் கேட்டனர்.அதற்கு அவர்,"வீட்டிற்கு போய் உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்"என்று கூறினார். இக்கருத்தை வலியுறுத்தி தனது நோபல் நன்றியுரையில் . "உலகம் முழுவதும் ஏழை நாடுகளில் மட்டுமல்ல, மேற்க்கத்திய நாடுகளிலும் கூட ஏழ்மையானது அகற்றுவதற்கு மிகக் கடினமானதாகவே இருக்கிறது என்றுரைத்தார்.தெருவில் பசித்திருக்கும் மனிதன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு ஒரு தட்டு சாதமோ, ஒரு ரொட்டித்துண்டையோ கொடுத்து நான் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். அவனது பசியைத் நான் தீர்த்து விட்டேன். ஆனால் வெளியேற்றப்பட்ட ஒரு மனிதன், யாருக்கும் தேவையற்றவனாக, அன்பு செய்யப்படாதவனாக, கலங்கியவனாக, சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டவனாக இருக்கும் போது அத்தகையதொரு ஏழ்மையே என்னை அதிகம் பாதிக்கிறது. அதையே நான் மிகக் கடினமாக உணர்கிறேன்."மேலும் அவர் கருக்கலைப்பு உலக சமாதானத்தை அழிக்கும் மிகப் பெரிய காரணியெனக் கூறி வந்தார்.
 
அவரது இறுதி நாட்களில் மேலை நாடுகளின் ஊடகங்களிடையே சில எதிர்மறை விளைவுகளை ஈர்க்க நேர்ந்தது. பத்திரிகையாளர் கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ் அன்னை தெரேசாவின் உத்வேகமுள்ள விமர்சகராவார். பிரிட்டிஷ் சேனல் 4 க்காக, அன்னை தெரேசாவைப் பற்றிய விளக்கப்படமான ஹெல்'ஸ் ஏஞ்சல்ஸ் -ல் சக எழுத்தாளராகவும் வர்ணனையாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இது அரூப் சேட்டர்ஜியின் தூண்டுதலால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியாக இருந்த போதிலும், படத்தின் உணர்வுபூர்வமான அணுகுமுறை அவருக்கு மனநிறைவை தரவில்லை.அவரது விமர்சனங்களை ஹிச்சன்ஸ் 1995 ஆம் ஆண்டுப் புத்தகமான தி மிஷினரி பொசிஷன் என்ற நூலில் விவரித்துள்ளார்.
 
உயிரோடிருக்கும்பொழுது அன்னை தெரேசாவும் அவரது அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றெழுத்தாளர்களும், தனது விசாரணைகளில் பங்கெடுக்க மறுத்ததாகவும், அவர் மேலை நாட்டு பத்திரிகையாளர்களின் விமர்சன கருத்துகளுக்கு எதிராகத் தன்னைப் பாதுகாக்கத் தவறிவிட்டார் என்றும் சேட்டர்ஜி கூறுகிறார். எடுத்துக்காட்டாக, அவர் பிரிட்டனின் தி கார்டியனில் வெளிவந்த, "அன்னை தெரேசாவின் அநாதை இல்லங்களில் காணப்படும் ஒட்டுமொத்த உதாசீனத்தையும், உடல் மற்றும் உணர்ச்சிகளின் தவறான பிரயோகத்தையும்", கடுமையாகத தாக்கி எழுதப்பட்ட விரிவான செய்தியையும், மற்றொரு விளக்கப்படமான மதர் தெரேசா: டைம் ஃபார் சேஞ்ச்? பல ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. சேட்டர்ஜி, ஹிச்சன்ஸ் இருவருமே தங்களது கருத்துக்களுக்காக விமர்சனத்துக்குள்ளாயினர்.
 
ஸ்டேர்ன் எனும் ஜெர்மானிய சஞ்சிகை அன்னை தெரேசாவின் முதல் நினைவுநாளில் ஒரு விமர்சனக் கட்டுரையை வெளியிட்டது. இது பண விஷயங்களைக் குறித்தும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்பட்ட விதத்தைப் பற்றியுமானது. மருத்துவப் பத்திரிகைகளும் வெவ்வேறானக் கண்ணோட்டங்களிலிருந்து, நோயாளியின் தேவைகளில் முதன்மையானவற்றைக் கருதுவதினால் எழும் விமர்சனங்களை அவரை மையமாக வைத்து வெளியிட்டன. நியு லெஃப்ட் ரெவ்யு பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினரான தாரிக் அலி மற்றும் அயர்லாந்தில் பிறந்த புலன் விசாரணைப் பத்திரிகையாளரான டோனல் மேக்கின்டைர் போன்றோர் ஏனைய விமர்சகர்களாவர்.
 
மதசார்பற்ற சமூகங்களிலும் மதவாத சமூகங்களிலும் அவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிட்ட இரங்கல் செய்தியில் மேலான குறிகோட்களுக்காக அதிக நாள் வாழ்ந்த ஒரு அரிய, தனி தன்மை பெற்ற நபர் அன்னை தெரேசா எனவும் ஏழை எளியோர், நோயாளிகள்,தாழ்த்தப்பட்டோர் ஆகியோரின் நலத்திற்காக அவரது வாழ்க்கை முழுவதுமான பிரயத்தனம் மனிதகுல மேம்பாட்டிற்கான சேவைகளின் மிகப் பெரிய எடுத்துக்காட்டாகும்." எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.[68] முன்னாள் ஐ நா சபையின் பொதுச் செயலாளர் ஜேவியேர் பெரேஸ் டி கியுல்லர்,"அவரே ஐ நா சபையாவார்,அவர் உலகத்தின் சமாதானமாக இருந்தார்" என்றுக் கூறினார்.[68] அவரது வாழ்ந்த காலத்திலும், மறைந்த பின்னும் அன்னைத் தெரேசாவை அமெரிக்காவில் பரவலாகப் புகழப்பட்ட தனிப்பெரும் நபர் என கேல்லப் போல் எனப்படும் கருத்துக்கணிப்பு காலங்காலமாகக் கணித்து வந்திருக்கிறது. 1999-ல், அமெரிக்காவில் நடத்தப்பட்ட மற்றொரு கருத்துக்கணிப்பில் இருபதாம் நூற்றாண்டின் அதிகமாகப் புகழப்பட்ட பெண்மணி என கணிக்கப்பட்டுள்ளார். அனைத்து பதில்களையும் விட அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்று மிக குறைந்த வயதில் புகழ் பெற்றவர்கள் என்ற அணியைத் தவிர அனைத்து மக்கள் தொகை இனங்களிலும் முதலிடம் பிடித்தார் அன்னை தெரேசா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அன்னை தெரேசா
« Reply #7 on: February 15, 2012, 09:01:51 PM »
ஆன்மீக வாழ்வு
 
அவரது செயல்களையும், சாதனைகளையும் பகுத்தாய்ந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கேட்டார்: "மானுட சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தத் தேவையான பலனும் விடாமுயற்சியும் அன்னை தெரெசாவுக்கு எங்கிருந்து வந்தது? அவர் அதனை பிரார்த்தனையிலும் இயேசு கிறிஸ்துவையும் அவரது பரிசுத்த வதனத்தையும், புனிதமான இருதயத்தையும் தியானிப்பதிலிருந்து பெற்றுக் கொண்டார்."தனிப்பட்ட முறையில் அன்னை தெரேசா தனது மத நம்பிக்கைகளில் அநேக சந்தேகங்களையும் போராட்டங்களையும் கொண்டிருந்தார். இது ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் அவரது வாழ்க்கையின் முடிவுபரியந்தம் வரை நீடித்தது. அவ்வமயம், "அவர் தனது மனதினுள்ளோ, நற்கருணையினுல்லோ எவ்வித தெய்வீகப் பிரசன்னத்தையும் உணர்ந்ததில்லை." என்கிறார், அவரது புனிதத்துக்காகப் பிரயாசைப்படுபவரான அருட் தந்தை பிரையன் கொலோடிச்சக்.அன்னை தெரேசா இறைபிரசன்னத்தைக் குறித்தும் தனது விசுவாசமின்மையைக் குறித்தும் ஆழமான சந்தேகங்களைக் கொண்டிருந்தார்.
 

 
Where is my faith? Even deep down ... there is nothing but emptiness and darkness ... If there be God—please forgive me. When I try to raise my thoughts to Heaven, there is such convicting emptiness that those very thoughts return like sharp knives and hurt my very soul ... How painful is this unknown pain—I have no Faith. Repulsed, empty, no faith, no love, no zeal, ... What do I labor for? If there be no God, there can be no soul. If there be no soul then, Jesus, You also are not true.
 


ச்செக் குடியரசின் ஒலோமோக்கில் உள்ள வென்செஸ்லஸ் சதுக்கத்தின் ஒரு கட்டடத்தில் அமைந்த அன்னை தெரேசாவுக்கர்ப்பணிக்கப்பட்ட நினைவு பெயர்ப் பலகைக் கல்.


இக்கூற்றினை முன்னிட்டு அவரது புனிதத்துவத்திற்குப் பிரயாசைப்படுபவரான (அவரது அர்ச்சிப்பிற்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்கும் அதிகாரி) அருட் தந்தை.பிரையன் கொலோடிச்சக் அவரது வாழ்க்கையின் அர்த்தத்தை சிலர் தவறாகப் புரிந்துகொள்ளும் அபாயமிருப்பதாகவும், ஆனாலும் ஆண்டவர் அவர் மூலமாக செயலாற்றுகிறார் என்ற அவரது விசுவாசம் எள்ளளவேனும் குறையவில்லை எனவும் ஆண்டவரின் அருகாமையிலிருக்கிறோம் என்ற உணர்ச்சி குறைபாட்டால் அவர் புலம்பினாலும் அவரது பிரசன்னத்தைக் குறித்து அவர் கேள்வியெழுப்பியதில்லை எனத் தெரிவித்துள்ளார். வேறு சில புனிதர்களுக்கும் இத்தகைய மதரீதியான சந்தேக அனுபவங்கள் இருந்ததுண்டு.இவற்றை ஆவிக்குரிய சோதனைகளாகக் கத்தோலிக்கர்கள் கருதுகின்றனர். அன்னை தெரேசா அல்லாத மற்றொரு தெரேசா, புனித தெரேசா டி லிசியுவின் ஒன்றுமில்லாத இரவுகள் (நைட் ஆப் நத்திங்க்னஸ்)இதைப் போன்றதாகும்.[74] அவர் வெளிக்காட்டிய சந்தேகங்கள் அவரது புனிதத்துவத்துக்கு இடையூறாக இருக்குமென்ற சிலரது தவறான அபிப்ராயங்களுக்கு மாறாக இத்தகையதொரு நிலைமை புனிதத்துவமடைந்த விசுவாசிகளுக்கு சகஜமானது.
 
பத்துவருட சந்தேகத்திற்குப் அன்னை தெரேசா ஒரு குறைந்த கால விசுவாச மீட்சியை வெளிக்காட்டினார். 1958 ன் இலையுதிர்காலத்தில் திருத்தந்தை பன்னிரண்டாம் பையஸ் மரணத்தின் பொழுது, அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக நடத்தப்பெற்ற திருப்பலியில் அவர், தான் நீண்ட இருளிலிருந்தும், இனம்புரியாத பாடுகளிலிருந்தும் விடுவிக்கப்பெற்று விட்டதாகக் கூறினார். எனினும் ஐந்து வாரங்களுக்குப் பிறகு விசுவாசக் குறைபாட்டுக்குள் மீண்டும் நுழைந்து விட்டதாக விவரித்தார்.
 
அன்னை தெரேசா பாவசங்கீர்த்தனத்தைக் கேட்கும் குருவானவர்களுக்கும், தலைமை பொறுப்பு வகிப்போருக்கும், 66 ஆண்டுகளாகப் பல கடிதங்கள் எழுதியுள்ளார்.தனது கடிதங்களைப் பற்றி மக்கள் அறியவரும் பட்சத்தில், "இறை இயேசுவைக் காட்டிலும் என்னைப் பற்றிய எண்ணத்தின் ஆக்கிரமிப்பிலாழ்ந்து விடுவர்", என்ற கவலையுடையவராய் அவற்றை அழித்து விடக் கேட்டுக் கொண்டார். எனினும் இக்கோரிக்கையின் பிறகும் இத்தகைய கடிதத் தொடர்புகள் தொகுக்கப்பட்டு மதர் தெரேசா: கம் பி மை லைட் (டபுள் டே).ஆவிக்குரிய நண்பர் ஒருவரான அருட்திரு.மைக்கேல் வேன் டெர் பீட்டுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு எழுதினார், "இறைஇயேசு உம்மீது தனிப்பட்ட அன்பை உடையவராயிருக்கிறார். ஆனால் எனக்கோ, என்னைச் சூழ்ந்துள்ள அளப்பறிய அமைதியும் வெறுமையும் என்னை பார்த்தும் பார்க்காதவளைப் போலவும், கேட்டும் கேட்காதவளைப் போலவும், ஜெபத்தில் நாவை அசைத்தும் பேச்சற்றவளாகவும் இருக்கச் செய்கின்றன... ஆண்டவரது செயலே என்னுள் ஓங்கும்படிச் செய்ய எனக்காக உம்மை ஜெபிக்க வேண்டுகிறேன்.
 
பல புதிய கருத்துக்கள் அன்னை தெரேசாவின் எழுத்துக்களை விசுவாசத்தின் இக்கட்டின் அடையாளமாகக் குறிப்பிடுகின்றன. கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ் போன்ற அன்னை தெரேசாவின் விமர்சகர்கள், அன்னை தெரேசாவின் எழுத்துக்களை, அவரது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் செயல்களுக்கும் மாறாக விளம்பரத்துக்காக உருவாக்கப்பட்ட பொய்யான வெளித்தோற்றத்திற்கான ஆதாரங்கள் எனக் கருதினார். ஹிச்சன்ஸ் இவ்வாறு எழுதுகிறார், "இப்படியாக எது நிதர்சனமானது: தங்கள் கதாநயகிகளுள் ஒருவர் தனது விசுவாசத்தின் சுவடுகளை இழந்துவிட்டார் எனும் உண்மையை விசுவாசிகள் தைரியமாக எதிர்கொள்வதா அல்லது விசுவசிப்பதை நிறுத்திவிட்ட ஒரு குழம்பிய மூதாட்டியை விளம்பர முத்திரையாக தொடர்ந்து சபை நிறுத்துவதா?" ஆனால் கம் பி மை லைட் -ன் பதிப்பாசிரியர் பிரையன் கொலோடிச்சக் போன்றவர்கள், 16 ஆம் நூற்றாண்டு ஆன்மீகவாதியான புனித சிலுவை அருளப்பர் "ஆன்மாவின் இருண்ட காலத்தை" சில ஆன்மீகவாதிகளின் வளர்ச்சியின் குறிப்பிட்டதொரு நிலையாகக் கருதியதுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.[55] இக்கடிதங்கள் அவரது புனிதத்துவத்தை எட்டும் பிரயாசத்திற்குத் தடையாக இருக்கப்போவதில்லை என வாடிகன் தெரிவித்துள்ளது.[77] உண்மையில் அவரது புனிதத்துவத்துக்காகப் பிரயாசைப்படும் அருட்சகோதரர் பிரையன் கொலோடிச்சக் என்பவரே இப்புத்தகத்தின் பதிப்பாசிரியராவார்.
 
டியெஸ் கேரிடஸ் எஸ்ட் என்ற தனது முதலாம் சுற்றறிக்கையில் திருத்தந்தை பதினாறாம் பெனெடிக்ட் கல்கத்தாவின் அன்னை தெரேசாவைப் பற்றி மூன்று முறை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது சுற்றறிக்கையின் முக்கிய கருத்து ஒன்றை தெளிவுபடுத்த அவரது வாழ்க்கையைப் பயன்படுத்தியுள்ளார். "கல்கத்தாவின் ஆசீர்வதிக்கப்பட்ட தெரேசாவின் சான்றில், ஆண்டவருக்கு ஒதுக்கப்படும் ஜெப நேரம் நம்மைச் சுற்றியிருப்போருக்காற்றும் உபயோகமுள்ள அன்புப் பணியில் இருந்து விலகிவிடாமல் நம்மைக் காப்பதோடல்லாமல் அப்பணியின் குறைவற்ற ஊற்றாகும்."அன்னை தெரேசா குறிப்பிடுகிறார், "மனதின் பிரார்த்தனையாலும், வேதத்தை வாசிப்பதாலும் மட்டுமே பிரார்த்தனையெனும் வெகுமதியை நாம் பயிரிட முடியும்."
 
அன்னை தெரேசாவின் சபைக்கும் பிரான்சிஸ்கன் சபைகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லாத போதிலும் புனித பிரான்சிஸ் அசிஸியாரின் தீவிர பக்தையாகவிருந்த காரணத்தால், அவரது அசைவுகளும் வாழ்க்கையும் பிரான்சிஸ்கன் சபையின் தாக்கத்தைக் கொண்டிருக்கும். மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் அருட்சகோதரிகள் புனித பிரான்சிஸ் அசிஸியாரின் சமாதானத்துக்கான ஜெபத்தை நற் கருணைக்குப் பிந்தைய நன்றியறிதலின் பொழுது கூறுகின்றனர். மேலும் பல பிரமாணங்களும், பரிந்துரைகளும் இவ்விரு சபைகளுக்கும் பொதுவானவையே. புனித பிரான்சிஸ் அசிஸியார் ஏழ்மையையும், புனிதத்தையும், கீழ்படிதலையும் கிறிஸ்துவுக்கொப்புக்கொடுத்தலையும் வலியுறுத்தினார். அவரும் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஏழைகளுக்கு குறிப்பாக தொழுநோயாளிகளுக்கு ஒப்புக்கொடுத்தவராவார்
                    

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218404
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அன்னை தெரேசா நோபல் பரிசு பெற்றதற்கு காரணம் (மறு பதிவு )!!!!!




அன்பிற்கும் நோபல் பரிசு வழங்க பெற்று இருப்பது உண்மையில் பாராட்ட கூடிய விசையம் அன்பையே மையமாக வைத்து வாழ்ந்து காட்டிய அன்னை தெரேசா தான் வாழ்கையே அன்பிற்காக அர்பணித்தவர்

அன்னை தெரேசா (ஆகஸ்டு 26, 1910 - செப்டம்பர் 5, 1997), ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரிஆவார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின்கொல்காத்தாவில்(கல்கத்தா) மிஷினரீஸ் ஆப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் இவர். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவர் ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர்.

1970 களுக்குள் இவர் சிறந்த பரோபகாரி எனவும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்று உலகம் முழுவதும் புகழப்படமேல்கம் முக்கெரிட்ஜ் -ன்
சம்திங்க் பியுடிஃபுல் ஃபார் காட் என்ற விளக்கப்படமும்ஒரு காரணமாகும். இவர் 1979-ல் சமாதானத்துக்கான நோபல் பரிசையும், 1980-ல் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னாவையும் பெற்றார். அன்னை தெரேசாவின் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி விரிந்து கொண்டே சென்று, அவரது மரணத்தின் போது 123 நாடுகளின் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எச் ஐ வி/எய்ட்ஸ்,தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும்.

பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகள் இவரை புகழ்ந்து வந்திருக்கின்றன. எனினும் பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்துள்ளார்.இத்தகைய விமர்சனங்கள் கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ், மைக்கேல் பேரன்டி, அரூப் சட்டச்சர்ஜி போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாலும் அவரது உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் என்ற குற்றச்சாட்டினையும், மதமாற்றத்தைக்குறிக்கோளாகக்கொண்ட அவரது யுத்திகளாகக் கருதி எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளாகும். பல மருத்துவப் பத்திரிகைகள், அவரது நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பிய வண்ணமும் இருந்தன