சோறும் இறங்கவில்லை..
தொண்டைக் குழியில்
பச்ச தண்ணியும் போகவில்லை..
மாமன் நினைப்புல
மயிலு நான்
காத்திருக்கேன் தவிப்புல ..
வயக்காட்டுல
கரிச்சாங் குருவி
கத்துதய்யா..
வீட்டுக்குள்ள ஒருத்தி
மனசு ஏங்குதய்யா...
பரிசம் போட்டு,
பந்தக்கால் நட்டு,
பீப்பி ஊதி
விருந்து வைக்கணும் ஊருக்குள்ள..
மாலை மாத்தி
மூணு முடிச்ச
கழுத்துல ஏந்தி
நிக்கணும் நான் மேடையில..
பாவி மவ
உறங்காமத்தான் முழிச்சிருக்கேன்..
ஆவி போனாலும்
உம் மடியில தான்
நான் கிடப்பேன் ..
பொருத்தமான சோடியினு ஊருக்குள்ள பேச்சிருக்கு..
மருதைக்கு போகையில
தாலி ஒன்னு நீ வாங்கு..
அர்த்த சாமத்திலும்
கனவுல நீ வருகிறாய்...
கனவுல வந்து நீ
பூச்சூட்டி அழகு பார்க்கிறாய்..
காத்திருந்து காத்திருந்து கார்த்திகையும் கரைஞ்சு போச்சு..
பாத்திருந்து பாத்திருந்து மார்கழியும் உதிந்து போச்சு..
தைப் பிறந்தா
வழி பிறக்குமாம்
எஞ்சோட்டு பொண்ணு ஒருத்தி சொன்னா..
மச்சானே உன்
மனம் திறந்தா
நாம ஜோடியாவே ஆகிக்கலாம்...
சித்திரை வரை
சிறுக்கி மவ காத்திருப்பேன்..
செல்ல மாமன் நீ
வரலைனா உன் வீட்டு முன்
தீக்குளிப்பேன் ..