புறநானூறு, 46.(அருளும் பகையும்!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வஞ்சி.
துறை: துணை வஞ்சி.
========================================
நீயோ, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்தலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கண்நோ வுடையர்
கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே.
அருஞ்சொற்பொருள்:-
அல்லல் = துன்பம்
இடுக்கண் = துன்பம்
மருகன் = வழித்தோன்றல்
புலன் = அறிவு
புன்கண் = துன்பம்
அழூஉம் அழாஅல் = அழுகின்ற அழுகை
மன்று = மன்றம்
மருளல் = வெருளுதல், அஞ்சுதல்
புன்தலைச் சிறாஅர் = சிறிய தலையையுடைய சிறுவர்கள்
விருந்து = புதிது
வேட்டது = விரும்பியது
செய்ம்மே = செய்வாயாக
இதன் பொருள்:-
நீயோ=====> மறந்த
நீயோ, புறாவும் துன்பம் மட்டுமல்லாது மற்ற உயிர்களின் துன்பத்தையும் நீக்கிய சிபியின் வழித்தோன்றல். இவர்களோ, அறிஞர்களின் வறுமைக்கு அஞ்சித், தம்மிடத்து உள்ளவற்றைப் பகிர்ந்து உண்ணும் இரக்க குணமுள்ளவர்களின் மரபினர். யானைகளைக் கண்டு அழாமல், இளமையால் மகிழ்பவர்கள்தான்
புன்தலை=====> செய்ம்மே
இந்தச் சிறிய தலையையுடைய சிறுவர்கள். கூடியிருப்போரைப் புதியவராகக்கண்டு வருந்தும் புதியதோர் வருத்தமும் உடையவர். நான் சொல்வதைக் கேள், ஆனால், பின் உன் விருப்பப்படியே செய்க.
பாடலின் பின்னணி:-
கிள்ளிவளவன், தன் பகைவனாகிய மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலின் கீழே இட்டுக் கொலை செய்ய முயன்றான். அதைக் கண்ட கோவூர் கிழார், சிறுவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க விரும்பி இப்பாடலை இயற்றினார். “நீ, ஒருபுறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே அளித்த சிபியின் வழித்தோன்றல். இவர்கள் புலவர்களுக்குப் பெருமளவில் ஆதரவளித்த மலையமானின் சிறுவர்கள்; இவர்களைத் துன்புறுத்தாமல் விட்டுவிடு. நான் கூற விரும்பியதைக் கூறினேன். நீ உன் விருபபப்ப்டி செய்.” என்று கிள்ளிவளவனிடம் கோவூர் கிழார் முறையிடுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
மலையமானின் சிறுவர்களைக் கொலை செய்யவிருக்கும் கிள்ளிவளவனிடம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறி கோவூர் கிழார் அவனைச் சமாதானப் படுத்துவதால், இப்பாடல் துணை வஞ்சி என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று.
“புலன் உழுது உண்மார்” என்பது அறிவையே தம் தொழிலாகக் கொண்டவர்கள் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.
”புல்” என்னும் சொல்லுக்குச், ”சிறுமை”, ”அற்பம்” என்று பொருள். இங்கு, “புன்தலைச் சிறாஅர்” என்பது அவர்கள் மிகவும் சிறியவர்கள் என்பதை வலியுறுத்துவதற்காகக் கூறப்பட்டுள்ளது.