ஒளவையார் அருளிய
மூதுரை
ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை
கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.
(பதவுரை) துப்பு ஆர் - பவளம் போலும் (சிவப்பாகிய), திருமேனி - திருமேனியையும், தும்பிக்கையான் - துதிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின், பாதம் - திருவடிகளை, பூக்கொண்டு - (அருச்சிக்க) மலர் எடுத்துக்கொண்டு,தப்பாமல் - நாடோறும் தவறாமல், சார்வார் தமக்கு - அடைந்துபூசை செய்வோருக்கு, வாக்கு உண்டாம் - சொல்வளம் உண்டாகும்; நல்ல மனம் உண்டாம் - நல்ல சிந்தனை உண்டாகும்; மாமலராள் - பெருமை பொருந்திய செந்தாமரைப்பூவில் இருக்கும் இலக்குமியின், நோக்கு உண்டாம் - அருட்பார்வை உண்டாகும்; மேனி - அவர் உடம்பு, நுடங்காது -(பிணிகளால்) வாட்டமுறாது.
விநாயகக் கடவுளின் திருவடிகளைப் பூசிப்பவர்க்குக் கல்வியும், செல்வமும், நலமும் உண்டாகும்.
------------------------------------------------------------------------------------------------------------
பயன் கருதாது அறஞ்செய்க
1 நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
(பதவுரை) நின்று - நிலைபெற்று, தளரா - சோராமல், வளர் - வளர்கின்ற, தெங்கு - தென்னையானது, தாள் உண்ட நீரை - தன் அடியால் உண்ட தண்ணீரை, தலையாலே - தன் முடியாலே, தான் தருதலால் - (சுவையுள்ள இளநீராக்கித்) தானே தருதலால், ஒருவற்கு -(நற்குணமுடைய) ஒருவனுக்கு, நன்றி செய்தக்கால் - உதவி செய்தால், அந்நன்றி - அவ்வுதவியை, என்று தருங்கொல் - அவன் எப்பொழுது செய்வானோ, என வேண்டா - என்று ஐயுற வேண்டுவதில்லை.
நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால், அவனுஞ் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதாம். (1)
------------------------------------------------------------------------------------------------------
நல்லவர்க்குச் செய்த உதவி
2 நல்லா ரொருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மே லெழுத்துப்போற் காணுமே-அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மே லெழுத்திற்கு நேர்.
(பதவுரை) நல்லார் ஒருவர்க்கு - நற்குணமுடைய ஒருவர்க்கு, செய்த உபகாரம் - செய்த உதவியானது, கல்மேல் எழுத்துபபோல் - கருங்கல்லின்மேல் வெட்டப்பட்ட எழுத்தைப் போல, காணும் - அழியாது விளங்கும்; அல்லாத - நல்ல வரல்லாத, ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு - அன்பில்லாத மனமுடையார்க்கு, ஈந்த உபகாரம் - செய்த உதவியானது, நீர்மேல் எழுத்திற்கு - நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு, நேர் - ஒப்பாக (அழிந்துவிடும்).
நல்லவருக்குச் செய்த உபகாரம் என்றும் நிலைபெற்று விளங்கும்; தீயவருக்குச் செய்த உபகாரம் செய்த அப்பொழுதே அழிந்துவிடும் எ - ம.் (2)
---------------------------------------------------------------------------------------------------------
இளமையில் வறுமை
3. இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவி லினியவும்-இன்னாத
நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.
(பதவுரை) இளமை - (இன்பத்தைத் தரும்) இளமைப் பருவத்தில், வறுமை வந்து எய்தியக்கால் - வறுமை வந்து அடைந்தால், இன்னா - அது துன்பத்தைத் தருவதாகும், இன்னா அளவில் - துன்பத்தைத் தரும் முதுமைப் பருவத்தில், இனியவும் - இனியனவாகிய பொருள்களும், இன்னாத - துன்பத்தைத் தருவனவாம்; (அவை) நாள் அல்லா நாள் (சூடுதற்குரிய) காலமல்லாத காலத்தில், பூத்த நல்மலரும் - மலர்ந்த நல்ல மலரையும், ஆள் இல்லா மங்கைக்கு அழகும் - (அனுபவித்தற்குக்) கணவன் இல்லாத மங்கையின் அழகையும், போலும் - ஒக்கும்.
ஏ: அசை. அழகும் என்பதில் உம்மை தொக்கது.வறுமைக் காலத்து இளமையும், முதுமைக் காலத்துச் செல்வமும் துன்பம் விளைவிப்பன எ - ம். (3)
----------------------------------------------------------------------------------------------------------
மேன்மக்கள் இயல்பு
4. அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
(பதவுரை) பால் - பாலினை, அட்டாலும் - காய்ச்சினாலும், சுவையிற் குன்றாது - அஃது இனிய சுவையிற் குறையாது; சங்கு - சங்கினை, சுட்டாலும் - சுட்டு நீறாக்கினாலும், வெண்மை தரும் - அது வெண்ணிறத்தையே கொடுக்கும் (அவைபோல), மேன் மக்கள் - மேலோர், கெட்டாலும் - வறுமையுற்றாலும், மேன் மக்களே - மேலோராகவே விளங்குவர்; நண்பு அல்லார் - நட்பின் குணமில்லாத கீழோர், அளவளாய் நட்டாலும் - கலந்து நட்புச் செய்தாலும், நண்பு அல்லர் - நண்பராகார்.
பால் சங்கு என்னும் இரண்டும் மேன்மக்களுக்கு உவமைகளாக வந்தன. மேலோர் வறுமையுற்றபொழுது முன்னையினும் சிறந்து விளங்குவரென்பது உவமைகளாற் புலனாகின்றது. ஏ: தேற்றப் பொருட்டு.
மேலோர் வறுமையுற்றாலும் மேலோரே; கீழோர் கலந்து பழகினாலும் நண்பராகார் எ - ம். (4)
------------------------------------------------------------------------------------------------------------
காலமறிந்து நடத்தல்
5. அடுத்து முயன்றாலு மாகுநா ளன்றி
எடுத்த கருமங்க ளாகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்
பருவத்தா லன்றிப் பழா.
(பதவுரை) தொடுத்த - கிளைத்த, உருவத்தால் நீண்ட - வடிவத்தால் நீண்ட, உயர் மரங்கள் எல்லாம் - உயர்ந்த மரங்களெல்லாம், பருவத்தால் அன்றி - பழுக்குங்காலம் வந்தாலல்லாமல், பழா - பழுக்கமாட்டவாம்; (அதுபோல) அடுத்து முயன்றாலும் - அடுத்தடுத்து முயற்சி செய்தாலும், ஆகுநாள் அன்றி - முடியுங்காலம் வந்தால் அல்லாமல், எடுத்த கருமங்கள் - மேற்கொண்ட காரியங்கள்; ஆகா - முடியாவாம்.
எந்தச் செயலும் முடியுங் காலத்திலேதான் முடியும்; ஆகையால் அக்காலம் அறிந்து தொடங்க வேண்டும் எ-ம். (5)