சனிபிரதோஷத்தின் பெருமையை எடுத்துக் கூறுங்கள்?
பிரதோஷம் என்பது ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (1) நித்ய பிரதோஷம், (2) பட்சப் பிரதோஷம், (3) மாச பிரதோஷம், (4) மஹா பிரதோஷம், (5) ப்ரளய பிரதோஷம். "பிரதோஷம்' என்றால் அனைத்துக் குற்றங்களும் பாவங்களும் சிவபெருமானால் பொறுத்து மன்னிக்கக்கூடிய காலமாகும். ஜாதகத்தில் ஏதாவது குற்றங்கள் இருந்தால் திருமணத்தடை, புத்திரப்பேறின்மை, கடன் போன்ற கஷ்டங்கள் ஏற்படுகின்றன. பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதகக் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 24 நிமிடங்கள், பின்பு 24 நிமிடங்கள் ஆக 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும். இது நித்ய ப்ரதோஷம். வளர்பிறை திரயோதசி திதி மாலைப் பொழுது பட்ச பிரதோஷமாகும். தேய்பிறைத் திரயோதசி திதியின் மாலைப்பொழுது மாச பிரதோஷமாகும். சனிக்கிழமையன்று தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது தான் மஹா பிரதோஷம் என்று குறிப்பிடப்படுகிறது. இதனை சனி மஹாபிரதோஷம் என்றும் கூறுவர்.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது ஏற்பட்ட விஷத்தை சிவபெருமான் தாமே உட்கொண்டு உலகைக் காப்பாற்றிய நாள் இது. மற்றைய பிரதோஷங்களில் உபவாசம் (சாப்பிடாமல் இருப்பது) இருக்க இயலாதவர்கள் சனி பிரதோஷத்தன்றாவது உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல ÷க்ஷமங்களும் உண்டாகும். ஐந்தாவதாகிய பிரளய பிரதோஷம் என்பது இந்தக் கலியுகம் முடிந்து அனைத்து உலகங்களையும் சிவபெருமான் தம்மகத்தே ஒடுக்கிக் கொள்வதாகும்.