அடர்ந்த இருள் பிசுபிசுத்த ரோடு
தடதடத்து தேங்கி நின்றது என் வண்டி ஓர் சுடுகாட்டின் ஓரம்..
தேங்கி நின்ற காரிலிருந்து இறங்கி சுற்றும் முற்றும் நோக்கினேன்
சாவின் மணம் வீசும் சுடுகாடு
ஊளை சதைகள் சிதையில் எரியும் நாற்றம்
பிண ஊதுபத்திகளின் நாற்றம்
நாய்களின் தொடர் ஊளையிடல்
எனக்கொன்றும் பயமில்லையே...
மறுபடி காரில் ஏறி விசையை முடுக்கினேன்
ஒரு முறை உயிர்பெற்று, மீண்டும் அடங்கியது வண்டி
ஒளிர்ந்து உயிர்பெற்ற காரின் விளக்கொளியில்
தூரத்தில் ஒரு வெள்ளுருவம்!!!
சாட்சாத்...சந்தேகமே வேண்டாம்..
அது…அது... நிச்சயமாக பேயே தான்!
தடதடத்தது கால்கள்..
எனக்கொன்றும் பயமில்லையே...
கண்களை கசக்கி உற்று நோக்கினேன்
ஒன்றுமேயில்லை…பிரமை தான் போல
நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில்
திடீரென கார் ஜன்னலின் பக்கத்தில்
அதே உருவம்
திக்கென ஒரு கணம் திடுக்கிட்டது மனம்
பயப்படாதே பயப்படாதே மானங்கெட்ட மனசே
எனக்கொன்றும் பயமில்லையே...
ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.
ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட்ட நான்
என்ன வேண்டும் என்று கேட்டேன்....கேட்டதாக தான் நினைக்கிறேன்...
வெறும் காற்று தான் வந்ததோ...
பயப்படாதே... பயப்படாதே முணுமுணுத்தது மனம்
அடச்சீ சனியனே
எனக்கொன்றும் பயமில்லையே என்றேன்.
ஊருக்கு செல்லும் வழியில் இறக்கி விட சொன்னது..
தாழிட்ட காரின் கதவுக்கெல்லாம் அது காத்திருக்கவில்லை, ஏறி அமர்ந்து கொண்டது..
சிதை நாற்றம்…ஊதுபத்தி நாற்றம்….சம்பங்கி பூவின் நாற்றம்
கார் ஸ்ப்ரே எடுத்து அடித்து விட்டேன்
முறைத்து பார்த்தது...புண்படுத்திவிட்டோமோ...
பீதியிலேயே காரை மீண்டும் முடுக்கினேன்..
இல்லை.. இல்லை.. எனக்குத்தான் பயமில்லையே..
நானும் திரும்பி முறைத்தேன்.
சும்மா தானே வர்ர.. ஏதாவது பேசு என்றது
நானும் என் சொந்த கதை சோக கதையை கூறிக்கொண்டே வந்தேன்
பெட்ரோல் விலையேற்றம், தக்காளி விலையேற்றம்,
மனைவியின் தொல்லை,மாமியார் தொல்லை,
பக்கத்து வீட்டுக்காரன் தொல்லை...
மெல்லிய விசும்பல்…திரும்பி பார்த்தேன்,
'ஒரு மனுசனுக்கு இவ்வளவு பிரச்சனையா?'
என் சோக கதையை கேட்டு அழுது கொண்டிருந்தது..
இந்த முறை நிஜமாகவே பயமாகவேயில்லை..
டிஸ்ஸூ பேப்பரை எடுத்து நீட்டினேன்...
மூக்குறிஞ்சி கொண்டு,
சுடுகாட்டில் பழைய பேய்கள் புது பேய்களுக்கு செய்யும் அநியாயங்களை சொல்லி புலம்பிக் கொண்டே வந்தது..
இடப் பிரச்சனை, ஈகோ பிரச்சனை,
'மாத்து துணி கூட இல்ல, எத்தனை நாள் வெள்ளை ட்ரஸ்ல சுத்துறது..’
மெல்லிய விசும்பல் சத்தம்...
இந்த முறை நான் தான் அழுது கொண்டிருந்தேன்..
'ஒரு பேய்க்கு இவ்வளவு பிரச்சனையா..?'
'நான் தலை சீவி எத்தனை நாளாச்சு தெரியுமா?'என்றது,
தலை இருக்கிறதா என்ன இதுக்கு?
நிமிர்ந்து பார்க்கலாம் தான், எனக்கு தான் பயமில்லையே...
"ஹ்ம்ம்...இருந்தென்ன லாபம், செத்து தொலையலாம் என்றேன் நான்"
"செத்தென்ன லாபம், இருந்தே தொலையலாம என்றது அது!"
என்னவொரு தத்துவம், என்றபடி திரும்பி பார்த்தேன்
அருகில் யாருமேயில்ல...
அதே இருள் அடர்ந்த ரோடு…அதே நாய்களின் ஊளையிடல்....
அதே சுடுகாடு...பிண ஊதுபத்திகள்...
தூரத்தில்.... அகோரமான அதே வெள்ளுருவம்....
பயமா... எனக்கா... ச்சே ச்சே…