Author Topic: வீடு வாஸ்து சாஸ்திரப்படி உள்ளதா என்பதை அறிய சில வழிகள்...  (Read 1071 times)

Offline kanmani

இந்த உலகத்தில் வாழும் எந்த ஒரு மனிதனுக்கும் ஏழை மற்றும் பணக்காரர் வித்தியாசமின்றி வாழ்வதற்கு கண்டிப்பாக ஒரு இருப்பிடம் தேவை. மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் கூட உணவு, உடை மற்றும் இருப்பிடம் என்று குடியிருக்கும் வீட்டில் தான் முடிகிறது. பொதுவாக குடியிருக்கும் வீடானது தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் ஆகிய நான்கு மூலங்களை என்றென்றும் பெற்று நலமாக வாழ்வதற்கு உதவும் இடமாகும்.

 இப்படி பாடுபட்டு கட்டிய வீடு வாழும் காலத்திலும், வாழ்ந்த பின்னரும் சுபிட்சம் நிலைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது மனித இயல்புதான். இப்படிப்பட்ட மனித எண்ணங்களை நிறைவேற்ற ஒரு அற்புதமான கருவியாக இருக்கும் கட்டிடக்கலை அறிவியல் தான் வாஸ்து சாஸ்திரம். இந்த வாஸ்து சாஸ்திரம், இயற்கையின் விதிகள் எப்படி மனித வாழ்க்கையை பாதிக்கும் என்பதை கணக்கிடும் ஒரு அறிவியல் முறையாகும்.

 எனவே இன்றைய உலகில் வாஸ்து சாஸ்திரம் வீடு கட்டுபவர்களுக்கும், ஏற்கனவே வீடு கட்டியவர்களுக்கும் மனதில் ஒரு விதமான திருப்தியைக் கொடுக்கும் வகையில், அனைவரும் உச்சரிக்கும் மந்திரச் சொல்லாக விளங்குவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

 மேலும் இந்த வாஸ்து சாஸ்திரம் பூமியின் காந்த சக்தியை மையமாகக் கொண்ட எட்டு திசைகளை கணக்கில் கொண்டும், ஐம்பெரும் பூதங்களான காற்று, நிலம், நீர், நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் இயக்கங்களைக் அடிப்படையாகக் கொண்டும், வாஸ்து புருஷரின் மண்டலத்தையும் மற்றும் அது கொண்டுள்ள 45 தெய்வங்களைக் கொண்டும் கணிக்கப்படுகிறது.

 இப்போது அந்த வாஸ்து சாஸ்திரத்தை முறையாக பயன்படுத்தி, உங்கள் வீடு உள்ளதா என்பதை அறிய சில வாஸ்து சாஸ்திர அம்சங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். வாஸ்து சாஸ்திரத்தின் முக்கிய அம்சங்கள்: வாஸ்து சாஸ்திரம் 8 திசைகளை அடிப்படையாகக் கொண்டு, எந்தெந்த இடங்களில் வீட்டின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லிவிடும். அதன்படி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய இடங்கள் பின்வருமாறு:

* வீடு அமைந்துள்ள திசை - தென் மேற்கு
* வீட்டின் முன்பக்க கதவு/வாசல் - வட கிழக்கு
* சமையலறை - தென் கிழக்கு
* பெரியவர்கள் படுக்கும் படுக்கையறை - தென் மேற்கு
* குழந்தைகள் படுக்கும் படுக்கையறை - வட மேற்கு
* விருந்தினர் அறை - வட மேற்கு * சாப்பிடுவதற்கான அறை உள்ள திசை - கிழக்கு
* ஆழ்துளை கிணறு/தண்ணீர் தொட்டி இருக்குமிடம் - வட கிழக்கு
* வேலையாட்கள் தங்கும் இடம் - வட மேற்கு
* கழிவறை - வட மேற்கு

 மேற்கண்டவாறு வீட்டின் அமைப்புகள் இருந்தால், மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல், திசையை அடிப்படையாகக் கொண்ட வாஸ்து சாஸ்திரம், ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு கடவுளை வைத்திருக்கிறது. அதன்படி, வடக்கு திசை - செல்வத்தின் கடவுளான குபேரரின் இடமாகவும், தெற்கு - எமதர்மரின் இடமாகவும், கிழக்கில் இந்திரரும், சூரியக் கடவுளும், மேற்கில் மழை மற்றும் நீரின் கடவுளான வருணருக்குமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

 மேலும் வட கிழக்கு மூலை சிவபெருமானுக்கு சொந்தமாக இருப்பதால் ஈசானி மூலை என்றும், தென் கிழக்கு அக்கினி பகவானின் இடமாகவும், வட மேற்கு பகுதி வாயுவிற்கு சொந்தமானதாகவும், தென் மேற்கு பகுதி நமது முன்னோர்களுக்காகவும் மற்றும் வீட்டின் மத்திய பகுதி படைப்புக் கடவுளான பிரம்மாவிற்காகவும் ஒதுக்கி வைத்திருக்கிறது. எனவே இதற்கேற்றாற் போல் வீடானது இருந்தால், வீட்டில் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும்.