திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள புகழ்பெற்ற பிறவி மருந்தீசர் கோயிலில இருந்த சக்தி வாய்ந்த மரகத லிங்கம் கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் திருடப்பட்டது.
இதேபோல் வேலூர் காவிரிப்பாக்கம் அருகே உள்ள சிறுகரும்பூரில் உள்ள சுந்தர காமாட்சி சமேத திரிபுராந்தக ஈஸ்வரர் கோயிலில் இருந்த ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த மரகத லிங்கம் கடந்த ஜூலை மாதம் திருடு போனது.
இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், “மரகத லிங்கத்தை வணங்கினால் நினைத்த காரியம் நடக்கும் என்பதால், இந்தக் கோயில்களுக்கு ஏராளமான வி.ஐ.பி.க்கள் வருவதும், கோயிலில் அமர்ந்து மணிக்கணக்காக தியானம் செய்து லிங்கத்தை வழிபடுவதும் வழக்கமாக இருந்தது.
கோயிலில் வந்து வழிபட்டாலே நினைத்ததை வழங்கும் சக்தி படைத்த மரகத லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபட்டால், நினைத்ததை நினைத்தவுடன் சாதிக்கும் வல்லமை கிடைக்கும் எனக் கருதிய யாராவது இதனை திருடிச் சென்றிருக்கலாம்” என சந்தேகம் எழுப்பியுள்ளனர். சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?
பதில்: கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வணங்குவது மிகப்பெரிய தோஷத்தை ஏற்படுத்தும். அந்தக் குடும்பத்தினருக்கு சந்ததி இல்லாமல் போகும், பாரம்பரியம் தழைக்காது.
பண்டைய காலத்தில் மக்கள் அனைவரும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மன்னர்கள் பல அரிய கலைச்சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டிக் கொடுத்தனர். அதில் வைக்கப்படும் சிலைகளும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை வடிவமைத்தனர்.
அந்தக் காலத்தில் லிங்கத்தை அரண்மனையில் கூட வைத்து மன்னர்களால் வழிபட முடியும் நிலை இருந்தது. ஆனால் மக்களின் நலன் கருதி அவற்றை கோயில்களில் வைத்து மன்னர்கள் வழிபட்டனர். இதுபோல் மக்களுக்காக அளிக்கப்பட்ட கோயில் சிலைகளை திருடுவதும், அதை வீட்டில் வைத்து வழிபடுவதும் கடும் பாவத்திற்கு ஆளாக்கும்.
சிவன் சொத்து குல நாசம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்கு காரணம், சிவன் சொத்தை அபகரித்துச் சென்றால் சம்பந்தப்பட்டவரின் குடும்பம் நாசமாகும் என்பதேயாகும். அப்படியிருக்கும் போது சிவன் சிலையை திருடிச் சென்று வீட்டில் வைத்துக் கொண்டால் அவர்களின் குடும்பம் ஏழேழு ஜென்மத்திற்கும் பாவம் சுமக்க நேரிடும்.