26-36 : யாழுங் குழலுஞ் ......... இசையோன்றானும்
(இதன்பொருள்) யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு யாழ்ப்பாடலும் குழற்பாடலுந் தாளவகைகளும் மிடற்றப் பாடலும் தாழ்ந்த இசையினையுடைய தண்ணுமையும் கூத்தாடுதலும் பயின்று வல்லவனாய், இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து இவற்றோடு பொருந்திய தாகச் செய்யப்பட்ட உருக்களை (இசைப்பாடல்களை) இசை கொள்ளும்படியும் சுவைபொருந்தும்படியும் புணர்க்கவும் வல்லவனாய்; வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி - இசைப்பாட்டிற்கும் கூத்திற்கும் உரிய திணைப் பொருள் தோன்ற மூவகை யியக்கத்தானும் இயக்கவும் வல்லனாய்; தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து-நந்தாய் மொழியாகிய செந்தமிழின் செல்வங்களாகின்ற இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்னும் நான்கு வகைப்பட்ட சொற்களினும் செந்தமிழோசையே திகழ்வதைக் கடைப்பிடியாகக் கொண்டு; தேசிகத் திருவின் ஓசையெல்லாம் ஆசின்று உணர்ந்த அறிவினன் ஆகி - நந்தாய் மொழிக்கியல்பான செப்பலோசை முதலிய இசையிலக்கணங்களையும் குற்றந்தீரப் பயின்றுணர்ந்த அறிவினையும் உடையனாய்; கவியது குறிப்பும் பகுதிப் பாடலும் கொளுத்துங்காலை - இயற் புலவன் நினைவும், நாடகப் புலவன் ஈடு வரவுகளும் இவற்றுக்கு அமைந்த பாடல்களும் தம்மிற் புணர்ப்பிக்குமிடத்தே; வசையறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் - குற்றந்தீர்ந்த நூல்வழக்காலே வகுக்கவும் விரிக்கவும் வல்லனுமாயுள்ள; அசையாமரபின் இசை யோன்தானும் - தளராத ஊக்கத்தையுடைய இசைப்புலவனும் என்க.
(விளக்கம்) யாழ் குழல் என்பன ஆகுபெயர். அவை கருவியாகப் பாடுகின்ற பாடல்களைக் குறித்து நின்றன. யாழ் குழல் என்னும் இவையும் தண்ணுமை முதலியனவும் நந்தமிழகத்திலேயே மிகப் பழைய காலத்திலே தோன்றிய இன்னிசைக் கருவிகளாகும். சங்க நூல்களிலே பேரியாழ் என்றும் சீறியாழ் என்றும் இருவகை யாழ்களும் குழலும் கூறப்பட்டுள்ளன. பெரும்பாணாற்றுப்படையும் சிறு பாணாற்றுப்படையும் பேரியாழும் சீறியாளும் உடைய பாணர்களைப் பற்றிய ஆற்றுப் படைகளேயாகும். பத்துப்பாட்டின்கண் யாழ் குழல் முதலிய இசைக் கருவிகளின் அமைப்பும் அவற்றின் உறுப்புகளும் பல் வேறிடங்களிலே விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றை யன்றி முல்லை நிலத்தில் வாழும் ஆயர் குழலும் வில்வடிவமான யாழும் செய்து அவற்றைக் குயின்று இசைபாடி மகிழ்ந்திருந்த செய்தியும் பத்துப்பாட்டிற் காணப்படுகின்றது. இதனை,
தொடுதோல் மரீஇய வடுவாழ் நோனடி
விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை
உறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல்
மேம்பா லுரைத்த வோரி யோங்குமிசைக்
கோட்டவும் கொடியவும் விரைஇக் காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி
ஓன்றம ரூடுக்கைக் கூழா ரிடையன்
கன்றமர் நிரையொடு கானத் தல்கி
அந்நு ணவிர்புகை கமழக் கைமுயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்
இன்றீம் பாலை முனையின் குமிழின்
புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்
புல்லார் வியன்புலம் போகி
எனவரும் பெரும்பாணாற்றுப் படைப் பகுதியால் அறியலாம் (176-84)
கன்றமர் நிரையொடு கானத்தே வதியும். ஒன்றமர் உடுக்கையோடு கூழ் ஆரும் இவ் வெளிய இடையன் தான் தீக்கடைகின்ற (கொள்ளிக்கட்டை) ஞெலி கோலாலே மூங்கிலிலே பல துளைகளை இட்டுக்கொண்டு பாலைப்பண் என்னும் இசையைப் பாடினன் எனவும் அங்ஙனமே உட்டுளையுடைய குமிழங் கொம்பினை வில்லாக வளைத்து மரற்புரி நரம்பினை நாணாகக் கட்டி அந்த நாணைத் தனது விரலாலே தெறித்துப் பல்வேறிசைகளையும் எழுப்பிக் குறிஞ்சி என்னும் பண்ணை இசைத்தான் எனவும் இச்செய்யுள் கூறுகின்றது. இதனையே வில்யாழ் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.
ஒப்பற்ற இசைக் கருவிகளாக வரலாறறியாத காலந்தொட்டுத் தமிழகத்திலே வழங்கி வருகின்ற குழலையும் யாழையும் முதன் முதலாகக் கண்டுபிடித்த பெருமை நிரலே முல்லைநில மக்களாகிய ஆயர்க்கும் குறிஞ்சி நிலமக்களாகிய வேட்டுவர்க்குமே உரியதாம் என்னும் ஓருண்மையை மேலே காட்டிய பெரும்பாணாற்றுப்படையீனின்றும் யாம் தெரிந்து கொள்கின்றோம்.
காட்டின்கண் உலர்ந்த மூங்கிலிலே வண்டுகள் துளைத்த துளையின் வழியே காற்றுப் புகும்போது இன்னிசை பிறப்பதனை அறிந்த ஆயர்கள் அம் மூங்கிலைத் துணித்துத் தாமே தீக்கடை கோலாலே பல துளைகளையிட்டு ஊதிப் பல்வேறு வகையான இசைகளை எழுப்பி மகிழ்வாராயினர். அங்ஙனமே விலங்குகளை வேட்டை யாடுவோர் வில்லினது நாணினின்று அதனை விரலாற்றெறிக்கும் போது இன்னிசை பிறத்தலை அறிந்து அவ்வொலி தானும் உட்டுளையுடைய குமிழங் கொம்பை வில்லாக வளைத்துக்கட்டிய வழி, பின்னும் இனிமையுடையதாதலை யுணர்ந்த பின்னரே அதனையும் ஓரிசைக் கருவியாக ஆயர்கள் பயன்படுத்தலாயினர்.
இனி, குழலிலே பல துளை யிடுவதன் வாயிலாகப் பல்வேறிசைகளை உண்டாக்குதல் கூடுமாகலான் இக் கூழாரிடையன் தானே இயற்றிக் கொண்ட கருந்துளைக் குழலின் குரல் துத்தம் முதலிய பல்வேறு இசைகளை எழுப்பிப் பாலைப்பண்ணை வாசித்தல் பொருந்துமன். குமிழங் கொம்பிற் கட்டிய ஒற்றை நாணில் (நரம்பில்) பல்வேறு இசை வேண்டுகின்ற குறிஞ்சிப்பண்ணை எழுவி இசைத்தான் என்றல் பொருந்தா தென்னின்; அறியாது கூறினை, அவ்வொற்றை நரம்பில் ஏழிசையும் எஞ்சாது பிறப்பித்தல் கூடும். எங்ஙனம் எனின், நாண்குரலைக் குரலிசையாகச் சுதிசெய்து கட்டிய பின்னர் :
வில்யாழினது ஒரு நுனியை மார்பிலே ஊன்றவைத்து மற்றொரு நுனியை இடக்கையாற் றழுவிக்கொண்டு தெறிக்குங்கால் அவ்விடக்கை விரலாலே கீழ்நோக்கி நரம்பை வில்லில் அழுத்த ஒலி வேறுபடுமன்றே? இங்ஙனமே கீழ்க் கீழ் இறங்கி ஆறிடங்களிலே நரம்பை அழுத்தி வலக்கை விரலாற் றெறிக்க எஞ்சிய ஆறிசைகளும் பிறக்குமாகலின் இவ்வாற்றானே அவ்விடையன் குறிஞ்சிப்பண் இசைத்தனன் என்க. இந் நுணுக்கமறியாது ஆசிரியர் விபுலானந்த வடிகளார் இவ்வில்யாழைப்பற்றிப் பயனிலாது தம் மனம் போனவாறு பொருந்தாத கற்பனை பலவும் செய்து போந்துளார். அதனை அவர் தம் யாழ் நூலிலே காண்க.
இனி, முல்லை நிலத்தும் குறிஞ்சியினும் எளிய ஆயரிடத்தும் வேடரித்தும் பிறந்து பின்னர்ப் பல்வேறு சீர்திருத்தங்களும் பெற்ற யாழ்கள் பேரியாழும் சீறியாழும் என இருவகைப்படும். இவற்றுள் பேரியாழ் வலிவும் மெலிவும் சமனுமாகிய மூவகை யியக்கத்திற்கும் இயக்கொன்றிற்கு ஏழ் நரம்பாக மூவேழ் - அஃதாவது இருபத்தொரு நரம்புகளையுடையதாம். சீறியாழ் ஏழ் நரம்புகளை யுடையதாம். ஈண்டு நரம்பென்பது கோல்களை. அவையாவன: நரம்புகளை அழுத்துங் கருவிகளை. அவற்றை இக்காலத்தார் மெட்டுக்கள் என்பர். பேரியாழ் இருபத்தொரு மெட்டுக்களையும் சீறியாழ் ஏழு மெட்டுக்களையும் உடையன என்க. இவை சங்ககாலத்து யாழ்கள்.
இனி, சிலப்பதிகாரத்துக் காலத்தே சீறியாழ் பின்னும் சீர் திருத்தம் செய்யப் பெற்றுப் பதினான்கு கேள்விகளை (மெட்டுக்களை) உடையதாயிற்று. அடிகளார் இங்ஙனம் திருத்தம் பெற்ற யாழினைச் செம்முறைக் கேள்வி என்று குறிப்பிடுவர். இது பதினான்கு கேள்விகளையுடையது. ஆதலால் இதனை ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி என்பர். இனி, பழைய வுரையாசிரியர் தங்கள் காலத்து வழக்கிலிருந்த யாழ்களைப்பற்றியே உரை விரிக்கின்றனர். அவை அனைத்தும் சிலப்பதிகாரத்திற்குப் பொருந்துவனவாகக் கோடற்கிடமில்லை. பொருந்துவனவற்றைக் கொள்க, பொருந்தாதனவற்றை விடுக. அப்பழைய வுரை வருமாறு:
26. யாழ் நால்வகைப்படும் : அவை பேரியாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என்பன. இவை நாலும் பெரும்பான்மைய. சிறுபான்மையான் வருவன பிறவுமுள. என்னை?
பேரியாழ் பின்னு மகரஞ சகோடமுடன்
சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினார் - தார்பொலிந்து
மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே
பின்னு முளவே பிற
என்றாராகலின்
இந்நால்வகை யாழிற்கும் நரம்பு கொள்ளுமிடத்துப் பேரியாழுக்கு இருபத்தொன்றும் மகர யாழிற்குப் பத்தொன்பதும் சகோட யாழிற்குப் பதினாலும் செங்கோட்டியாழிற்கு ஏழுங் கொள்ளப்படும். என்னை?
ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே
நின்றபதி னான்கும் பின்னேழும் - குன்றாத
நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே
மேல்வகை நூலோர் விதி
என்றாராகலின்
இனி, இவ்வியா ழென்னும் ஒன்றிற்கு அமைந்த பலவுறுப்பாகிய
கோட்டின தமைதியுங் கொளுவிய வாணியும்
ஆட்டிய பத்தரின் வகையும் மாடகமும்
தந்திரி யமைதியும் சாற்றிய பிறவும்
முந்திய நூலின் முடிந்த வகையே
என்றொரு நூற்பாவை எடுத்துக்காட்டி அடியார்க்கு நல்லார் வகுக்கப் பட்டனவெல்லாம் கானல் வரியில் குற்றம் நீங்கிய யாழ் என்பதன்கண் விரியக் கூறுதும் என்றனர். அவ்வுரை கிடைத்திலது.
26. குழல் என்றது குழல் கருவியாகப் பாடும் பாடலை. ஆகு பெயர்.
(யாழின் பெயரை வீணை என்ற வடமொழியாக மாற்றி அதனையே இக்காலத்துப் பயில வழங்குதல் போன்று பழைய உரையாசிரியர் காலத்தே குழல் என்னும் இனிய தமிழ்ப்பெயரை விடுத்து அதனை வங்கியம் என்று இசைவாணர்கள் பயில வழங்கியமையால் அடியார்க்கு நல்லார் குழல் என்ற தமிழ்ச் சொல்லிற்கு வங்கியம் எனப் பொருள் எழுதுதல் வேண்டிற்று. இச்சொல் நூலின்கண் யாண்டும் காணப்பட்டிலது.)
(அடியார்க்) குழல் வங்கியம்; அதற்கு மூங்கில் சந்தனம் வெண்கலம் செங்காலி கருங்காலி யென ஐந்துமாம், என்னை?
ஓங்கிய மூங்கி லுயர்சந்து வெண்கலமே
பாங்குறுசெங் காலி கருங்காலி - பூங்குழலாய்
கண்ண னுவந்த கழைக்கிவைக ளாமென்றார்
பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து
என்றாராகலின்
இவற்றுள் மூங்கிலாற் செய்வது உத்தமம். வெண்கலம் மத்திமம் ஏனைய அதமமாம். மூங்கில் பொழுது செய்யும்; வெண்கலம் வலிது; மரம் எப்பொழுதும் ஒத்து நிற்கும்.
இதன்கண் மூங்கில்பொழுது செய்யும் என்றது வெப்பதட்பங்களால் மாறுபடுகின்ற வேனில் முதலிய பெரும் பொழுதுகளையும் வைகறை முதலிய சிறு பொழுதுகளையும், வேய்ங்குழலின் இசை தனது மாற்றத்தாலே காட்டும் என்றவாறு. இதனால் இதுவே தலையாயது என்றவாறு. என்னை? பொழுதுகட்கும் இசைக்கும் இயைபுண்மையால் அவ்வியை பினை வேய்ங்குழலிற் காண்டல் கூடும் என்பது கருத்து என்க.
(அடியார்க்) இக் காலத்துக் கருங்காலி செங்காலி சந்தனம் இவற்றாற் கொள்ளப்படும்; கருங்காலி வேண்டும் என்பது பெரு வழக்கு. இவை (இம் மூன்று வகை மரங்களையும்) கொள்ளுங்கால் உயர்ந்த ஒத்த நிலத்திற் பெருக வளர்ந்து நாலு காற்று மயங்கின் நாதமில்லை. யாமாதலான், மயங்கா நிலத்தின்கண், இளமையும் நெடும் பிராயமும் (முதுமையும்) ஒரு புருடாயுப்புக்க (நூறாண்டு) பெரிய மரத்தை வெட்டி ஒரு புருடாகாரமாக ஓராட்பருமனும் நீளமும் உடையதாகச் செய்து, அதனை நிழலிலே ஆற இட்டுவைத்துத் திருகுதல் பிளத்தல் போழ்ந்துபடுதலின்மையை யறிந்து ஓர் யாண்டு சென்ற பின் இலக்கண வகையான் வங்கியம் செய்யப்படும். என்னை?
உயர்ந்த சமதலத் தோங்கிக்கா னான்கின்
மயங்காமை நின்ற மரத்தின் - மயங்காமே
முற்றிய மாமரந் தன்னை முதறடிந்து
குற்றமிலோ ராண்டிற் கொளல்
என்றாராகலின்.
இதன் பிண்டி யிலக்கணம் (பிண்டி-துண்டு) நீளம் இருபது விரல், சுற்றளவு நாலரை விரல். இது துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஒரு பாதி மரனிறுத்திக் கடைந்து வெண்கலத்தாலே அணைசுபண்ணி (அணைசு-மூடி) இடமுகத்தை யடைத்து வலமுகம் வெளியாக விடப்படும். என்னை?
சொல்லு மிதற்களவு நாலைந்தாஞ் சுற்றளவு
நல்விரல்க ணாலரையா நன்னுதலாய் - மெல்லத்
துளையளவு நெல்லரிசி தூம்பிட மாய
வளைவலமேல் வங்கிய மென்
என்றாராகலின்
இனித் துளையளவிலக்கணம்: - அளவு (நீளம்) இருபது விரல்; இதிலே தூம்பு முகத்தின் இரண்டு நீக்கி முதல்வாய் விட்டு, இம்முதல் வாய்க்கு ஏழங்குலம் விட்டு, வளைவாயினும் இரண்டு நீக்கி நடுவில் நின்ற ஒன்பது விரலினும் எட்டுத் துளையிடப்படும். இவற்றுள் ஒன்று முத்திரை யென்று கழித்து நீக்கி நின்ற ஏழினும் ஏழுவிரல் வைத்து ஊதப்படும். துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும்; என்னை?
இருவிரல்க ணீக்கி முதல்வாயேழ் நீக்கி
மருவு துளையெட்டு மன்னும் - பெருவிரல்கள்
நாலஞ்சு கொள்க பரப்பென்ப நன்னுதலாய்
கோலஞ்செய் வங்கியத்தின் கூறு
என்றாராகலின்
இவ் வங்கியம் ஊதுமிடத்து வளைவாய் சேர்ந்த துளையை முத்திரையென்று நீக்கி முன்னின்ற ஏழினையும் ஏழு விரல்பற்றி வாசிக்க.
ஏழு விரலாவன - இடக்கையிற் பெருவிரலும் சிறு விரலும் நீக்கி மற்றை மூன்று விரலும், வலக்கையிற் பெருவிரலொழிந்த நான்கு விரலும் ஆக ஏழு விரலுமென்க. என்னை?
வளைவா யருகொன்று முத்திரையாய் நீக்கித்
துளையேழி னின்ற விரல்கள் - விளையாட்
டிடமூன்று நான்குவல மென்றார்கா ணேகா
வடமாரு மென்முலையாய் வைத்து
ஏழிசையாவன: சட்டம் ரிடபம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம் தைவதம் நிடாதமென்பன. இவை பிறந்து இவற்றுள்ளே பண்கள் பிறக்கும். என்னை?
சரிக மபதநியென் றேழெழுத்தாற் றானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் - தெரிவரிய
ஏழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை
என்றாராகலின். இத்தன்மைத் தாகிய குழலுமென்க.
ஈண்டுக் குழல்பற்றி இதுகாறும் கூறப்பட்டவை அடியார்க்கு நல்லார் உரை விளக்கமாம்.
இனி, இளங்கோவடிகளார் தம் காப்பியத்தின்கண், ஈண்டுச் சட்சம் முதலாகக் கூறப்படுகின்ற இசையின் பெயர்களை யாண்டும் கூறிற்றிலர்.
இவற்றை நிரலே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் பெயர்களாற் குறிப்பிடுதலே பண்டைத் தமிழ் நூலோர் வழக்கமாம்.
இனி, அடிகளார் இந்நூலிலேயே கூறியுள்ள முல்லைக்குழல், ஆம்பற்குழல் கொன்றைக்குழல் என்னும் இக் குழல்களைப்பற்றிப் பழைய உரையாசிரியர் யாதும் அறிந்திலாமை ஆய்ச்சியர் குரவைக் கண் இவற்றிற்கு இவர்கள் கூறுகின்ற உரைகளே உணர்த்துகின்றன. அவற்றை ஆண்டுக் காண்பாம்.
26. சீர் - தாளத்தின் அறுதி. இது முத்தமிழ்க்கும் பொதுவாகும். அதனானன்றே ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலின்கண் ஈரசை கொண்டு மூவசை புணர்ந்துஞ் சீர் இயைந்து இற்றது சீரெனப் படுமே என்றோதுவாராயினர். அசையும் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தலும் வல்லோ ராறே என்றோதியதும் சீர் முத்தமிழ்க்கும் பொதுவாம் என்பதை வலியுறுத்தும். மற்றுத் தாளம் என்பது பாணி தூக்கு சீர் என மூவகை உறுப்புடையதென்ப. பாணி-தாளந் தொடங்குங் காலம். தூக்கு-தாளம் நிகழுங்காலம். சீர்-தாளம் முடியுங்காலம் என்று நுண்ணிதின் இவற்றிற்கு வேறுபாடு கூறுவர்.
இனி, இடைத்தமிழில் சீர் என்பது செம்முறை உறழ்பே மெய்ந் நிலை கொட்டல், நீட்டல், நிமிர்த்தல் என்று கூறப்படுகின்ற வண்ணக் கூறுபாட்டையும் நாடகத் தமிழில் அகக் கூத்திற்கும் புறக்கூத்திற்கும் உரிய இருவகைத் தாளக் கூறுபாட்டையும் குறிக்கும் என்க. இச் சீர் தானே பாலைகளையும் பண்களையும் நிலைப்படுத்துத் தூய்தாகக் காட்டுங் கருவி என்ப. ஈண்டுப் பாலை என்றது குரல் முதலிய கேள்விகளை என்றுணர்க.
26. மிடறு - மிடற்றுப்பாடல். மாந்தர் உடம்பும் இசைக்குத் தலைசிறந்த கருவியாதலின், மிடற்றினைச் சாரீர வீணை என்பர். சரீர வீணை (எனப் பாட வேற்றுமையும் உண்டு) வடமொழியாளர் பிரம வீணை என்பதும் இக்கருத்துடையதே என்க. அஃதாவது இறைவனாற் படைக்கப்பட்ட இசைக்கருவி என்றவாறு. இறைவனாற் படைக்கப்பட்ட மாந்தருடம்பாகிய கருவியில் இசை பிறக்குங்கால்,
உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ பின்னர் மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும் எனவும், இவ்வாறு அகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே, எனவும், இசை அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார்.
ஈண்டு நரம்பின்மறையென்றது இசைத்தமிழிலக்கண நூலை என்க.
இயற்கையிலமைந்த இசைக்கருவியாகிய மக்கள் மிடற்றில் இசையைப் பிறப்பிக்குங்கால் மூலாதாரந் தொடங்கிய மூச்சைக் காலாற் கிளப்பிக் கருத்தால் இயக்கி ஒன்றெனத் தாக்கி இரண்டெனப் பகுத்துப் பண்ணீர்மைகளைப் பிறப்பித்தல் வேண்டும் என்பது அரும்பதவுரையாசிரியர் கூற்றால் அறியப்படும்.
இனி, இங்ஙனம் மூலாதாரந் தொடங்கிய எழுத்தின் நாதம், ஆளத்தியாய்ப்பின் இசையென்றும் பண்ணென்றும் பெயராம் எனவும்,
பாவோ டணைத லிசையென்றார் பண்ணென்றார்
மேவார் பெருந்தானம் எட்டானும் - பாவாய்
எடுத்தன் முதலா விருநான்கும் பண்ணிப்
படுத்தமையாற் பண்ணென்று பார்
எனவும், பல இயற்பாக்களுடனே நிறத்தை இசைத்தலால் இசை யென்று பெயராம் எனவும் அடியார்க்கு நல்லார் ஓதுவர்.
இதனால் பண் இசை என்பன காரணப் பெயர்கள் என்பது பெற்றாம். பண் எனினும் இராகம் எனினும் ஒக்கும். ஆளத்தி என்பதனை இக்காலத்தார் ஆலாபனம் என்று வழங்குவர்.
இனி, இசையை ஆளத்தி செய்யும்பொழுது மரகவொற்றால் அஃதாவது ம்ம் எனத் தொடங்கிப் பின்னர்க் குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் பாரித்துப் பாடவேண்டும் என்பர். இதனை,
மகரத்தின் ஒற்றாற் சுருதி விரவும்
பகருங் குறினெடில்பா ரித்து - நிகரிலாத்
தென்னா தெனாவென்று பாடுவரேல் ஆளத் நி
மன்னாவிச் சொல்லின் வகை
எனவரும் வெண்பாவான் உணர்க.
இதன்கண், தென்னா தெனா என்று பாடுவர் என்றதற்கு, தென்னா என்றும் தெனா வென்றும் இரண்டசைகளையும் தனித் தனியும் தென்னாதெனா என்று இரண்டனையும் கூட்டியும் பாடுவர் என்பது கருத்து.
இனி ஆளத்தி செய்தற்குரிய குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம் எனவும், நெட்டெழுத்துக்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஐந்துமாம் எனவும், மெய்யெழுத்துக்களுள் மகரமும் னகரமும் தகரமும் ஆகிய மூன்றுமே ஆளத்திக்குப் பொருந்தும் ஏனைய பதினைந்து மெய்களும் பொருந்தாதனவாம் என்றும் வரையறுத்தோதுவர். இக்காலத்தே தரன்னா, லலா ரார என்றெல்லாம் புகழ்படைத்த இசைவாணரும் பாடக் கேட்கின்றோம். ஆதலால், இவ்வரையறை கைவிடப்பட்டமை அறியலாம், இனி இவ்வரையறை யுண்மையை,
குன்றாக் குறிலைந்துங் கோடா நெடிலைந்தும்
நின்றார்ந்த மன்னகரந் தவ்வொடு - நன்றாக
நீளத்தா லேழு நிதானத்தா னின்றியங்க
ஆளத்தி யாமென் றறி
எனவரும் வெண்பாவானுணர்க.
ஈண்டு மந்நகரந் தவ்வொடு எனக் காணப்படுகின்ற (உ-வே-சா. ஐயரவர்கள் பதிப்பு) பாடம் பிழை என்பதும், அது மன்னகரம் எனத் திருத்திக் கோடற்பாலதென்பதும் ஆளத்தி தென்னா தெனா வென்று பாடுவர் என்பதனாலே உணரப்படும். இன்னும், இதனால் இக்காலத்தார் இராக ஆலாபனஞ் செய்யுமிடத்து அதனோடு விரவி வருகின்ற ச, ரி, க, ப, நி என்னும் ஐந்தெழுத்தும் பண்டைத் தமிழிசைக்கு விலக்குண்டமையும் நுண்ணுணர்வாற் கண்டு கொள்க.
இனி பெருந்தானம் எட்டானும்... எடுத்தன் முதலா இருநான்கும் பண்ணிப் படுத்தலாற் பண் என்று பார் என்றது, நெஞ்சும் மிடறும் நாக்கும் மூக்கும் அண்ணாக்கும் உதடும் பல்லும் தலையும் ஆகிய இசை பிறத்தற்குரிய எட்டானும், எடுத்தல் படுத்தல் நலிதல் கம்பிதம் குடிலம் ஒலி உருட்டு தாக்கு என்னும் எண்வகைத் தொழிலானும் பண்ணுதலாலே பண் என்று பெயராயிற்று என்று அறிக என்றவாறாம். பண் பிறக்குமிடம் பலவாயினும் சிறப்புப்பற்றி ஆகுபெயரால் மிடறு என்றோதப்பட்டது.
27. தாழ்குரல் தண்ணுமை-தாழ்ந்த இசையினையுடைய மத்தளம் என்னுந் தோற்கருவி. ஈண்டுத் தண்ணுமை என்றது அதனை யுள்ளிட்ட தோற்கருவிகள் அனைத்தையும் குறித்தபடியாம். அவற்றை,
பேரிகை படகம் இடக்கை உடுக்கை
சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை
திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை
தமருகம் தண்ணுமை தாவில் தடாரி
அந்தரி முழவொடு சந்திர வளையம்
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசானம் துடுமை சிறுபறை அடக்கம்
மாசில் தகுணிச்சம் விரலேறு பாகம்
தொக்க உபாங்கம் துடிபெரும் பறையென
மிக்க றநூலோர் விரித்துரைத் தனரே
எனவரும் நூற்பாவானுணர்க.
இவை, அகமுழவு அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலை முழவு என ஏழுவகைப்படும் என்பர்.
அவற்றுள் அகமுழவாவன-முன் சொன்ன மத்தளம் சல்லிகை இடக்கை கரடிகை பேரிகை படகம் குடமுழா என்பனவாம்.
அகப்புற முழவு-முன்சொன்ன மத்திமமான தண்ணுமை தக்கை தகுணிச்சம் முதலாயின.
புறமுழவு-அதமக் கருவியான கணப்பறை முதலாயின.
ஈண்டுக் கூறப்படாத நெய்தற்பறை முதலியன புறப்புறமுழவு எனப்படும்.
பண்ணமை முழவு என்பன-முரசு நிசாளம் துடுமை திமிலை என்னும் நான்குமாம். இவற்றை வீரமுழவு என்றும் விளம்புவர்.
நாண்முழவு - நாட்பறை. அஃதாவது நாழிகைப்பறை.
காலைமுழவு - துடி.
இனி, ஈண்டு அடிகளார் தண்ணுமை என்றது மத்தளத்தை. மத்து-ஓசை; தளம்-இடம். ஆகவே இசையிடனாகிய கருவிகட்கெல்லாம் தள மாதலான் மத்தளமென்று பெயராயிற்று என்பர் அடியார்க்குநல்லார். இக்காலத்தார் மிருதங்கம் என்பதும் இதுவேயாம். மத்தளம் முதலிய தோற்கருவிகள் மிடற்றுப் பாடல் கேட்போர்க்கு இனிது விளங்குதற் பொருட்டு அப்பாடலிசைக்கு அடங்கி ஒலித்தல் வேண்டுமாதலின் அவற்றைத் தாழ்ந்த இசையுடையனவாகச் சுதி கூட்டிக் குயிலுவர். ஆதலின், தாழ்குரற்றண்ணுமை என்றார். தண்ணுமை முதலிய தோற்கருவிகளைச் சுதிகூட்டுங்கால் அவற்றின் இடக்கண் இளியாய் (ப) வலக் கண் குரலாக (ச)க் கூட்டவேண்டும் என்பர். இதனை,
இடக்க ணிளியாய் வலக்கண் குரலாய்
நடப்பது தோலியற் கருவி யாகும்
எனவருஞ் செய்யுளானும் (சிந்தா-செய் 675-நச்சி உரை) அறியலாம்.
27- வரி- உருக்கள் (இசைப் பாடல்கள்) ஆடல் என்றது முற்கூறப்பட்ட அகக்கூத்தும் புறக்கூத்தும் பிறவுமாகியவற்றை. உரிப்பொருள் என்றது அகத்திற்குரிய புணர்தல் முதலியனவுமாம், புறத்திற்குரிய வஞ்சி முதலியனவுமாம். இசையாசிரியனாகலின் தன திசைக்குயிராகிய இவ்வுரிப்பொருளையும் நன்கு புலப்படுத்த வேண்டுமாகலின் உரிப்பொருளியக்கி என்றார். பழைய வுரையாசிரியர்கள் உரிமைப் பொருளாயமைந்த இயக்கம் நான்குமே ஈண்டு உரிப்பொருள் எனப்பட்டதாகக் கருதுவர்.
30. தேசிகத்திரு-நாட்டு மொழியாகிய செல்வம். அதன் ஓசை கடைப்பிடித்தலாவது, வடமொழி முதலிய வேற்றுமொழி வந்து விரவுங்கால் அவற்றைத் தமிழோசைப்படுத்து இசைத்தலை உறுதியாகக் கடைப்பிடித்தொழுகுதல். இயற்சொல் திரிசொல் திசைச் சொல் வடசொல் என்று சொல்லப்பட்ட சொற்கள் இசை பூணும் படியைக் கடைப்பிடித் தென்பர் பழையவுரையாசிரியரிருவரும்.
33. கவி-இயற்புலவன். இதனால் இசைவாணர்க்கும் கூத்தர்க்கும் பாடல் யாத்துக்கொடுப்போர் இயற்புலவரே யென்பது பெற்றாம். இயற்புலவன் அப்பாடலாலே வெளிப்படுத்த நினைத்த கருத்தின்னதென அறிந்து கோடல் இசைப்புலவனுக்கு இன்றியமையாமையின் கவியது குறிப்பும்...கொளுத்துங்காலை என்றார்.
34. கொளுத்துதல் - தனதிசை கொள்ளும்படி செய்தல்.
35. கேள்வி : ஆகுபெயர்; நூல் என்க. கேள்விக்கியைய வகுக்கவும் விரிக்கவும் வல்ல இசையோனும் என்க.
கவிஞன் அமைதி
(அஃதாவது மாதவி கூத்திற்குப் பாடலியற்றிய இயற்புலவனுடைய தன்மை என்றவாறு.)
37-38: இமிழ்கடல் ......... தன்மையனாகி
(இதன்பொருள்) இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய - முழங் குதலையுடைய கடல்சூழ்ந்த நிலவுலகத்தின்கண் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு மிந்த நாட்டின்கண் வாழ்கின்ற சான்றோரனைவரானும் அறியப்படுதற்குக் காரணமான; தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி - இயல் இசை நாடகம் என்னும் முத்திறத்துத் தமிழ்மொழியையும் எஞ்சாது கற்றுத் துறைபோய அறிவினையுடைய தன்மையையுடையவனாகி என்க.
(விளக்கம்) இமிழ்கடல் - வினைத்தொகை எனினுமாம். கடல் வரைப்பு - நிலவுலகம். நிலவுலகத்துள்ள நாடுகள் பலவற்றுள்ளும் தமிழகம் சிறந்ததொரு நாடு என்பது தோன்ற, இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் என வேண்டா கூறி வேண்டியது முடித்தார். தமிழகம் அந்நாட்டின்கண் வாழும் சான்றோர்க்கு ஆகுபெயர். என்னை? அறிவார் அவரேயாதலின்.
இனி, வடவேங்கடம் தென்குமரி யாயிடைக் கிடந்த தமிழ் கூறு நல்லுலகம் என்பது தோன்ற கடல்வரைப்பில் தமிழகம் என்றார். கடல் வரைப்பையுடைய நிலவுலகத்துள் வேங்கட முதலிய வரைப்பினையுடைய தமிழகம் என்பது கருத்தென்க.
இனித் தமிழ்தானும் இயல் இசை நாடகம் என முத்திறத்ததாய் முழுதும் அறிதற்கருமைத்தாகலின் அவ்வருமை தோன்றத் தமிழ் முழுதும் அறிந்த தன்மையன் என்றார். இப்பொருட்கு முழுதும் என்ற சொல்லை விதந்தெடுத்தோதி யுணர்க.
36-44: வேத்தியல் ......... நன்னூற்புலவனும்
(இதன்பொருள்) வேத்தியல் பொதுவியல் என்று இருதிறத்தின் நாட்டிய நன்னூல் கடைப்பிடித்து - வேத்தியல் என்றும் பொதுவியல் என்றும் இரு கூறுபடுத்துக் கூறப்பட்ட நாடக நூலிலக் கண விதிகளை நன்றாகக் கடைப்பிடித்து; இசையோன் வக்கிரித்து இட்டத்தை உணர்ந்து - இசைப்புலவன் ஆளத்தி செய்து அதன்கண் அவன் எய்தவைத்த பண்ணினது இயல்பினை நன்குணர்ந்து; ஆங்கு அசையாமரபின் அதுபட வைத்து - அவ்விசைப்புலவன் வைத்தபடியே தளராத இலக்கணமுறைப்படி அப்பண்ணினது நிறம் தனது கவியினிடத்தும் நன்கு விளங்கித் தோன்றவைக்க வல்லனாய்; மாற்றோர் செய்த வசைமொழி அறிந்து - பகைவர்களாற் செய்யப்பட்ட வசையின் அளவுகளையும் அறிந்து; நாத் தொலைவு இல்லாத நல்நூல் புலவனும் - அவை தன் கவியிடத்தே புகுதாவண்ணம் நாடகக்கவி செய்யவல்லவனும் அக் காரணத்தாற் பகைவர்க்குத் தோலாதவனும் இவற்றிற்கெல்லாம் காரணமாகிய நல்ல நூல்களையுணர்ந்த இயற்புலவனு மென்க.
(விளக்கம்) எழுத்துச் சொல் பொருள் முதலிய இயற்றமிழ்க்கியன்ற இலக்கணமெல்லாம் ஏனைய இசைத்தமிழ் நாடகத்தமிழாகிய இரண்டற்கும் வேண்டிய உருக்கள் என்னும் இசைப்பாடல்கட்கும் இன்றியமையாமையின் ஈண்டுக் கூறப்படும் புலவன் முத்தமிழும் கற்றுத்துறை போயவன் என்றார்.
இனி, வேத்தியல், பொதுவியல் என்பன நிரலே அகம்புறம் என்னும் இருவகைப் பொருணெறிப்பட்டவை என்பது அடியார்க்கு நல்லார் குறிப்பானும் உணரலாம்.
40. நாட்டிய நன்னூல் என்பதற்கு வேத்தியல் பொதுவியல் என்றிருவகைப்படுத்து நிறுவிய நல்ல நாடக நூல் எனக் கோடலுமாம். இசையோன் - இசைப்புலவன். வக்கிரித்து அதன்கண் இட்டத்தை என்க. வக்கிரித்தல், ஆளத்தி செய்தல். இட்டதை எனற்பாலது இட்டத்தை என விகாரமுற்றது. இட்டது - வைத்த பண்ணீர்மை என்க. அதனை உணர்தலாவது பண்ணுக்குரிய முதலும் முறைமையும் முடிவும் நிறைவும் குறைவும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும் நீர்மையும் என்னும் பதினொரு பாகுபாட்டினானும் அறிதல்.
இவற்றுள் முதல் என்பது, குரல் முதலிய ஏழிசைகளுள் வைத்து இன்ன பண்ணுக்கு இன்ன இசை முதலாகும் என்றறிவது. முறை-பண்கள் தோறும் அவ்விசைகள் நிற்கவேண்டிய முறை என்க. முடிவு-ஒவ்வொரு பண்ணையும் முடித்தற்குரிய இசைகள் என்க. நிறை முழுமையுடைய பண்கள். குறை - பண்ணியல் திறம் திறத்திற முதலியன என்க. கிழமை இன்ன பண்ணிற்கு இன்ன இசை பயிலப் பயின்றுவரும் உரிமையுடைத் தென்றறிதலென்க. வலிவு முதலிய மூன்றும் இயக்கவகைகள். வரையறை - இந்தப் பண் இந்தப் பொழுதிற் பாடப்படுவது என்னும் காலவரையறையும் இன்ன திணைக்கு இன்ன பண் உரித்தென்னும் வரையறையும் இன்னோரன்ன பிறவுமாம் என்க. நீர்மை என்றது இலக்கண வகையானன்றி ஒவ்வொரு பண்ணிற்கும் தனித்தனியே அமைந்ததோரின் பப்பண்பு, என்க. பாடலியற்றும் நன்னூற்புலவன் ஈண்டுக் கூறப்பட்ட பண்ணீர்மையறியானாயின் பண்ணுக்கியையப் பாடலியற்றலாகாமையின் இசையோன் வக்கிரித் திட்டத்தை யுணர்ந்து ஆங்கு அசையா மரபின் அதுபடவைத்து என்றார். அது என்றது பண்ணீர்மையை. பழைய வுரையாசிரியர் இருவரும் இதனையே தாள நிலையில் எய்த வைத்த நிறம் என்றார். நிறம் போறலின் நிறம் என ஆகுபெயராற் பெயர் மாத்திரையாலோதி யொழிந்தார் என்க. அதுபடவைத்தலாவது, இப்பாட்டிற்கு இந்தப் பண்ணே சிறந்துரிமையுடைய தென்று யாவரும் அறியும்படி பாட்டினை இயற்றுதல் என்க. பண்ணினமைந்த இப்பண்ணீர்மையையே திருவள்ளுவனார் கண்ணோடியைந்த கண்ணோட்டம் போல்வதெனக் கருதி இந்த நீர்மை பாட்டினது நீர்மையோடு இயைதல் வேண்டும் என்னும் கருத்துடையர் என்பதனை பண்ணென்னாம் பாடற்கியைபின்றேல் கண்ணென்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் எனவரும் திருக்குறளால் உணர்தல் கூடும்.
வசை - பாட்டுடைத் தலைவனுக்குச் சாவு முதலிய தீமைபயக்கும் தீச்சொற்கள். பாட்டினாலே தீமை செய்பவர் பகைவராதலின் மாற்றோர் செய்த வசைமொழி என்றார். அதனை அறிந்தென்றது அறிந்து அத்தகைய தீச்சொல் விரவாமல் பாட்டியற்ற வல்ல நன்னூற் புலவன் என்பதுபடக் கூறியபடியாம். நாத்தொலைதல் - பாட்டின்கண் இழுக்குக் கூறுவார்க்குத் தோற்றல். நாத்தொலைவில்லாமைக்கு நன்னூல் குறிப்பேதுவாய் நின்றது. குற்றமில்லாத வழியும் குற்றங்கூறும் புன்புலவர்க்கு நன்னூல் விதிகாட்டி வெல்லும் ஆற்றலுடைய புலவன் என்பது கருத்தென்க.
இன்னன் அல்லோன் செய்குவ னாயின்
தேற்றா மாந்தர் ஆரியம் போலக்
கேட்டார்க் கெல்லாம் பெருநகை தருமே
எனப் பழையவுரையாசிரியர் எடுத்துக்காட்டிய நூற்பாவும் ஈண்டுணரற்பாற்று.
தண்ணுமையோன் அமைதி
45-55: ஆடல் பாடல் ...... முதல்வனும்
(இதன்பொருள்)ஆடல் பாடல் இசையே தமிழே - முற்கூறப்பட்ட பல்வேறு வகைப்பட்ட கூத்துக்களும் பாட்டுக்களும் பல்வேறு வகைப்பட்ட இசைகளும் இயலிசை நாடகம் என்னும் மூன்று வகைப்பட்ட தமிழ்களும்; பண்ணே பாணி தூக்கே முடமே-எல்லாப் பண்களும் இருவகைத் தாளங்களும் எழுவகைத் தூக்குக்களும் இவற்றின் குற்றங்களும்; தேசிகம் - இயற்சொல் முதலிய நால்வகைச் சொற்கூறுபாடு; என்று இவை ஆசின் உணர்ந்து - என்று கூறப்பட்ட இவையிற்றி னியல்பெலாம் நுண்ணிதின் அறிந்து; கூடை நிலத்தைக் குறைவு இன்றி மிகுத்து - இசையாசிரியன் யாதானும் தான் பாடுகின்ற பாட்டினை இரட்டிக் கிரட்டியாகச் சேர்த்துப் பாடிய விடத்தே; அப்பாட்டு நெகிழாதபடி நிரம்ப நிறுத்தவும்; ஆங்கு வார நிலத்தை வாங்குபு வாங்கி - அவ்விடத்தே பெறுகின்ற இரட்டியை இசையாசிரியன் பகுத்துப் பாடிய வழி, அவன் பகுத்தவாறே நிற்குமளவு நிறுத்திக் கழிக்க வேண்டுமளவு கழிக்கவும் வல்லனாய்; வாங்கிய வாரத்து யாழுங் குழலும் ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப- இங்ஙனம் பாடப்படுகின்ற பாட்டின்கண் யாழிசையும் குழலிசையும் மிடற்றிசையும் இயைந்து நடக்கின்ற படியைக் கேட்போர் செவிக் கொள்ளும்படி; கூர் உகிர்க்கரணம் குறியறிந்து சேர்த்தி - தனது தண்ணுமையைத் தன் விரற்றொழிலாலே செவ்வியறிந்து முற்கூறப்பட்ட இசைகளோடு சேரும்படி குயின்று; ஆக்கலும் அடக்கலும் - அங்ஙனங் குயிலுங் கால் ஏனைய கருவிகளிற் குறையை நிரப்புதலும் மிகுதியை அடக்குதலும்; மீத்திறப்படாமை செய்து - குயில்வதோடன்றித் தனது தண்ணுமையிசை ஏனைய கருவிகளின் இசைகட்கு மிகாமற் குயிலுதலும் செய்து; சித்திரக்கரணம் சிதைவின்று செலுத்தும் - அங்ஙனம் செய்யுமிடத்துத் தனது கைத்தொழிலும் அழகுபெறச் செய்து காட்டலும் வல்லனாய்; அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும் - அழகு தக்கிருக்கின்ற தண்ணுமைக் கருவியினையும் பிறராற் செயற்கரிய தொழிற்றிறமும் அமைந்த ஆசிரியனு மென்க.
(விளக்கம்) ஆடல் பாடல் இசை தமிழ் பண் பாணி தூக்கு என்பன அவையிற்றின் இலக்கணங்களுக்கு ஆகுபெயராய் நின்றன. முடம் - குற்றம்.
48. கூடை நிலம் - இசையை இரட்டித்துப் பாடுமிடம் என்க. கூடை - ஐகார விகுதிபெற்ற தொழிற்பெயர். இரட்டிக்கிரட்டி - முன்னர் இரட்டித்ததனையே மீண்டும் இரட்டித்தல்.
49. வாரநிலம் - இரட்டிக்கும் வழி முழுவதும் இரட்டியாமல் ஒரு பகுதியை மட்டும் இரட்டிக்குமிடம் என்க. வாங்குபு வாங்கலாவது அங்ஙனம் பகுத்து இரட்டிக்கும்பொழுது இசையின்பம் கெடாமல் விடுமளவிற்கு விட்டுக்கொள்ளுமளவே கொண்டு இசைத்தல்.
50-52. யாழ் முதலியவற்றின் இசையைத் தனது தண்ணுமையிசை விழுங்கிவிடாமல் அவையோர் அவற்றை நன்கு கேட்கும்படி அடக்கி இசைக்க வல்லனாய் என்பார் வார நிலத்தை ......... சேர்த்தி, என்றார்.
இனி, இங்ஙனம் பிற குயிலுவக் கருவிகளின் இசையைக் கேட்போர் நன்கு கேட்கும்படி தண்ணுமையோன் தனது விரலானும் உகிரானுமே குயில்வதியல்பாகலின் கேட்பக் கூருகிர்க்கரணம் குறியறிந்து சேர்த்தி என்றார்.
53. மீத்திறம்படுதலாவது - தண்ணுமையிசை ஏனைய இசைகளை விழுங்கி விடுமளவிற்கு மிகுதல்.
54. தண்ணுமையோன் தொழில் செய்யும்பொழுது காட்சிக் கினிதாகச் செய்தல் இன்றியமையாமையின் சித்திரக்கரணம் என்றார்.
55. அத்தகு தண்ணுமை என்பதனை அங்ஙனம் குயிலுதற்குத் தகுந்த தண்ணுமை எனவும், அழகு தக்கிருக்கின்ற தண்ணுமை எனவும் இரட்டுற மொழிந்து இருபொருளுங் கொள்க.
குழலோன் அமைதி
56-69: சொல்லிய ............... குழலோன்றானும்
(இதன்பொருள்) சொல்லிய இயல்பினில் - இசை நூல்களிற் சொன்ன முறைமையாலே; சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து - சித்திரப் புணர்ப்பும் வஞ்சனைப் புணர்ப்பும் என்று சொல்லப்பட்ட இரண்டு கூற்றினையும் அறிந்து; புணர்ப்போன் பண்பின் - இசைக் கேள்விகளைப் புணர்க்கும் இசையாசிரியனை ஒத்த இசை யறிவுடையனாகி; வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து - ஏற்றம் இறக்கம் என்னும் இருவகையானும் இயல்கின்ற நான்கு வகைப்பட்ட வர்த்தனைகளானும் நூற்றுமூன்று பண்ணீர்மைகளையும் தந்நிலை குலையாமல் குயின்று காட்டவல்லனாய்; (ஆங்கு) ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின் ஒப்பக்கேட்கும் உணர்வினனாகி - இசை கூட்டப்பட்ட குரலும் இளியும் தம்முளியையத் தன் எஃகுச் செவியாலே கேட்டுணரும் ஆராய்ச்சி என்னும் தொழில்வன்மையுடையவனும்; பண் அமை முழவின் கண் நெறியறிந்து தண்ணுமை முதல்வன் தன்னொடும் பொருந்தி - பண்ணுதல் அமைந்த முழவின் இடக்கண் வலக்கண் இசைநெறியினையும் அறிந்து மேலும் தண்ணுமையாசிரியனோடும் தாளநிலையிலே பொருந்தி; வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து - பண்ணீர்மை மிக்க இளிக்கிரமமாக இசையை யாழிடத்தே நரம்பணிந்து; ஆங்கு இசையோன் பாடிய இசையின் இயற்கை - அவ்வழியே இசையாசிரியன் பாடிய பாட்டின் இயல்பை; வந்தது வளர்த்து வருவது ஒற்றி இன்புற இயக்கி-பாடுகின்ற பண்ணுக்குரியதாக வந்த கேள்வியைக் குறைவுபடாமல் நிறைவுசெய்தும் அப்பண்ணிற்குரியவல்லாத அயற்கேள்விகளின் வரவு நிகழாமற் பார்த்தும் அப்பண்ணிற்குரிய இன்பம் மிகும்படி செய்து; இசைபட வைத்து - இசைக்குரிய இலக்கணம் பதினொன்றனையும் நிரம்பக் காட்டி; வாரநிலத்தைக் கேடின்று வளர்த்து-நால்வகை இயக்கங்களுள் கேள்விக்கினிய வாரநடையினை மிகவும் வளர்வித்து; ஆங்கு ஈர நிலத்தின் எழுத்து எழுத்தாக வழு இன்று இசைக்கும் குழலோன் தானும் - அவ்வாறு வளர்த்துக் குயிலுங்கால் சொல்லொழுக்கமும் இசை யொழுக்கமும் பொருள்புலப்பாடு முடைமையால் பண்ணீர்மை மிக்க அவ்வார நடையிடத்தே மிடற்றுப் பாடலிற்போல இசையெழுத்துக்களை எழுத்துருவந் தோன்றுமாறு வழுவின்றிக் குயிற்றவல்லவனும் ஆகிய குழலாசிரியனும் என்க.
(விளக்கம்) (56-7) சித்திரமாகவும் வஞ்சனையாகவும் பொருந்திய புணர்ப்புக்கள் என்க. இவற்றுள் சித்திரப்புணர்ப்பாவது - இசை கொள்ளும் எழுத்துக்களின் மேலே வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப்போல நெகிழ்த்துப் பண்ணீர்மையுண்டாக நிறுத்துவது. வஞ்சனைப் புணர்ப்பாவது-இசைகொள்ளா எழுத்துக்களின்மேலே வல்லொற்று வந்தவழி (இசைகொள்ளா எழுத்துக் கரப்ப ஒற்றினை) மெல்லொற்றுப் போல நெகிழ்த்துப் புணர்த்தல். புணர்ப்போன் - பாடலாசிரியன்.
58. வர்த்தனை - குரல் முதலிய ஏழிசைகளையும் படிப்படியாக ஏற்றி இசைத்தலும் அங்ஙனமே படிப்படியாக இறக்கி இசைத்தலுமாம். இவை வலமுறையாக ஏறுதலும் மீண்டும் இறங்குதலும் இடமுறையாக இறங்குதலும் மீண்டும் ஏறுதலும் என நான்காயின என்க. இவற்றை ஆரோகணம் அவரோகணம் என்னும் பெயர்களானும் வழங்குவர்.
ஏற்றிய குரல் இளி என்றிரு நரம்பின் ஒப்பக்கேட்கும் உணர்வினன் ஆகி என்றது, இசை கூட்டப்பட்ட குரலிசையானது இளியிசையோடு பொருந்துவதனைத் தனது எஃகுச் செவியால் ஆராய்ந்து கேட்டறிகின்ற சிறந்த இசையுணர்வுடையவனும் ஆகி என்றவாறு. இதனால் ஆராய்தல் என்னும் இசைக்கரணத்திறம் கூறப்பட்டது. இதனைக் கானல் வரியின்கண் விளக்கிக் கூறுவாம்.
62. பண் - பண்ணுதல். அஃதாவது - இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய் இசை கூட்டப்படுதல். இனி, பல்வேறு வகை முழவுகளுள் வைத்துப் பண்பாடுதற்குக் குயில்தற்கமைந்த முழவு எனினுமாம். கண்நெறி அதன் இரண்டு கண்களினின் றெழுகின்ற இசைமுறைமை என்க.
தண்ணுமை, இதனை அடியார்க்கு நல்லார் மத்திமமான தண்ணுமை தக்கை தகுணிச்சம் முதலாயின என மத்திமமான கருவி என்பர். நூலாசிரியர் தண்ணுமையையே முதன்மையாகக் கொள்கின்றனர் என்பது அவர் செய்யுளால் அறியப்படும். இதுவே உத்தமமான மத்தளம் என்று கொள்க.
தண்ணுமை முதல்வன் றன்னொடும் என்ற உம்மையால் பொருந்து இடமும் பொருந்தி என்க.
வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து என்றது இசைகளை இளிக்கிரமமாக யாழின்கண் நிரல்பட அமைத்து என்றவாறு. அஃதாவது- குரல் முதல் தாரம் ஈறாகவுள்ள ஏழு கேள்விகட்குமுரிய நரம்புகள் இளிக்கிரமமாய் ஒலிக்குமானால் அவை பட்டடை எனப்படும் என்க. யாழின் தகைப்பில் ஒலிக்கும் நாண்குரலுக்கு இணைந்து இளியில் ஒலிக்கும் ஒலிக்கியைய ஒரு நரம்பழுத்துங்கோலை (மெட்டினை) வைத்துக் கட்டினால் அஃதொரு பட்டடை ஆகும். இங்ஙனம் வைத்த பட்டடையைக் குரலாகக் கொண்டு அதற்கு இளியாக இணைகின்ற ஒலியை ஆராய்ந்து மற்றுமொரு கோலை அமைத்துக் கட்ட அஃதொரு பட்டடையாகும். இக்கோலில் ஒலி துத்தமாக வமையும். இங்ஙனமே முறைப்படுத்து யாழின்கண் ஏழிசைகளையும் அமைப்பதே பட்டடையை யாழ்மேல் வைப்பதென்றறிக. இவ்வமைப்பினால் ஏழிசைகளும் தத்தம் நிறந்தோன்ற இசைக்குமாதலின் இதனை வண்ணப் பட்டடை என அடிகளார் ஓதினர். பட்டடை - அடிமணை. கோல் என்பதும் திவவு என்பதும் இப்பட்டடைகளையேயாம். இவை பண்டைக்காலத்தே வார்க்கட்டுகளாலே அமைக்கப்பட்டன. இத்திவவுகளில் இசை நரம்பினை அழுத்தி இசையை மாறுபடச் செய்வர் ஆதலின் திவவு நரம்பு துவக்கப்படுவது எனவும்; இத்திவவின்கண் அழுத்துவதனால் நரம்பினது இசை வலிவுபெறுவதலாலே திவ வென்பது - நரம்புகளை வலிபெறக் கட்டும் வார்க்கட்டு எனவும், (ஈண்டு நரம்பு இசைக்கு ஆகுபெயர்) பழையவுரையாசிரியர் உரைவரைந்தனர். இன்னும் இதுபற்றிய விளக்கங்களை இந்நூலில் எமது ஆராய்ச்சி முன்னுரையில் கண்டுதெளிக. ஈண்டுரைப்பிற் பெருகும். வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து ஆங்கு இசையோன் பாடிய இசை என இயைக்க.
65. வந்தது - இசையோன் பாடிய இசைக்கு நூன்முறைமையாலே வந்த கேள்வி. (சுரம்) வந்தது - சாதியொருமை. வருவது என்பதுமது.
66. இசை - இசைக்குரிய முதலும் முறையுமுதலாய பதினொரு வகைப்பட்ட இலக்கணம்: ஆகுபெயர்.
67. வாரநிலம் - நால்வகை இயக்கங்களுள் ஒன்று. முதனடை வாரம், கூடை, திரள் என்னும் நான்கும் இசையியக்கங்களாகும். இவற்றுள் முதனடை என்பது மிகவும் தாழ்ந்த செலவினை உடையதாம். அஃதாவது மிகுந்த காலச் செலவினையுடையதாம். இதனை விளம்ப காலம் என்றும் முதற்காலம் என்றும் இக்காலத்தார் கூறுவர். வாரம் என்பது அம்முதனடையினும் சிறிது முடுகி நடப்பது; இதனை, மத்திம காலம் என்றும் இரண்டாங்காலம் என்றும் கூறுவர். திரள் அதனினும் முடுகி நடப்பது. இதனைத் துரிதகாலம் அல்லது மூன்றாங் காலம் என்று வழங்குவர். திரள் மிகவும் முடுகிய நடையுடையது. இதனை, அதிதுரிதகாலம் அல்லது நான்காம்காலம் என்று இக்காலத்தார் கூறுவர். இவற்றுள், முதனடை மிகுந்த காலச் செலவுடையதாய் மெல்ல நடத்தலாலே கேட்போர்க்கு இன்பம் பயவாதொழிவதாம். நான்காவதாகிய திரள் நடை தனது மிகையான முடுகியல் நடை காரணமாகப் பாட்டின் பொருள் புலப்பாடும் இன்பஅமைதியும் இலதாம். ஆகவே இசைவாணரும் கேட்போரும் இடையிலுள்ள வார நடையினையும் கூடை நடையினையுமே பெரிதும் விரும்பிப் பாடுதலும் கேட்டலும் இயல்பாம். இவற்றுள்ளும் வாரப்பாடலை சொல்லொழுக்கமும் பொருள் புலப்பாடும் பெரிதும் இசையமைதியும் உடைத்தாம். இக்காரணத்தால் இவ்வார நடையையே பெரிதும் பாரித்துப் பாடுவர். கூடைநடை, சொற்செறிவும் இசைச்செறிவும் உடைத்தாயினும் பொருள்புலப்பாடிலதாம். இந்நடையை இடையிடையே இசைவாணர் சிறிது சிறிது மேற்கொள்ளுவர். ஈண்டு வாரநிலத்தைக் கேடின்று வளர்த்து எனவே, கூடை நிலத்தை இன்றியமையாத விடத்தே சுருக்கிப் பாடவேண்டும் என்பதும் கூறினாராயிற்றென்க. ஆங்கு ஈரநிலம் என்றது அவ்வாரநிலமாகிய பண்ணீர்மை கெழுமிய நடையிலே என்றவாறு. இசைமாத்திரையா யொழியாது இசைகட்குரிய எழுத்துருவமும் தோன்றக் குயிலும் ஆற்றலுடைய குழலோன் என்பார், எழுத்தெழுத்தாக வழுவின்றிசைக்கும் குழலோன் என்றார். இதனால் குழல் யாழ் முதலிய குயிலுவக் கருவியாளர் மிடற்றுப்பாடல் போன்று எழுத்துருவம் தோன்றத் தங் கருவிகளைக் குயிலுதல் வேண்டும் என்பது அடிகளார் கருத்தாத லுணரப்படும். ஆசிரியர் திருத்தக்கதேவர் தாமும் சிந்தாமணியின்கண் (காந்தருவதத்தை)
கருங்கொடிப் புருவ மேறா கயனெடுங் கண்ணு மாடா
அருங்கடி மிடறும் விம்மா தணிமணி யெயிறுந் தோன்றா
இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ
நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று ரைத்தார்
என்புழி இக்கருத்துடையார் என்பது நுண்ணிதின் உணர்க.
யாழாசிரியன் அமைதி செம்முறைக் கேள்வி
70-71: ஈரேழ் ......... வேண்டி
(இதன்பொருள்) ஈர் ஏழ் தொடுத்த - குரல் முதலிய ஏழிசைகளையும் இரண்டு தொடையலாக அமைத்து யாழ்களில் சிறந்த யாழாகச் செய்யப்பட்டமையாலே; செம்முறைக் கேள்வியின் - செம்முறைக் கேள்வியென்னும் சிறப்புப்பெயர் பெற்று விளங்கும் யாழ்க் கருவியினிடத்தே; ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி - ஒப்பற்ற இனிமையுடைய செம்பாலை முதலிய ஏழு பாலைப் பண்களையும் அவற்றினிடையே பிறக்கும் ஐந்து அந்தரப்பாலை என்னும் பண்களையும் அவற்றிற்குரிய இணைநரம்புகளையும் அணைவுறக் கொண்டு இயைத்து இசைத்தமிழுக்குரிய இலக்கணங்களிற் குறைபாடு சிறிதுமின்றி வட்டப்பாலையாக இசைத்து அந்நல்லவையின் கண் அரங்கேற்றிக் காட்டுதலைப் பெரிதும் விரும்பி என்க.
(விளக்கம்) ஈர் ஏழ் - பதினான்கிசைகள். ஏழிசைகளை இருநிரலாகத் தொடுக்கப்படுதல் தோன்றப் பதினான்கு தொடுத்த என்னாது ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி என்றார். அடிகளார் காலத்திற்கு முற்பட்ட சங்ககாலத்தே சீறியாழ், பேரியாழ் என இருவகை யாழ்களே இருந்தன. சீறியாழ் ஏழிசைகளையே உடையது. பேரியாழோ இருபத்தோரிசைகளை உடையதாயிருந்தது. மெலிவும் சமனும் வலிவும் ஆகிய மூவகை இயக்கங்களுக்கும் ஏழு நரம்புடைய யாழில் மென்மையாக வருடியும் சமனாக வருடியும் வலிந்து வருடியும் இசைவாணர்கள் பண் இசைத்து வந்தனர். இம்முறை முழுமையான இன்பந்தாராமை கண்டு ஓர் இயக்கத்திற்கு ஏழிசையாக மூன்றியக்கிற்கும் இருபத்தோரிசைகளைத் தொடையல் செய்து அமைத்துக்கொண்ட யாழே பேரியாழ் எனப்பட்டது. மற்று இந்த இருபத்தோரிசைகளையும் மிகவும் பயிற்சியுடைய ஆடவர்கள் மட்டுமே ஆரோசையாக மிடற்றும் பாடலிலே இசைக்க முடியும்; மகளிர் பாடுதற்கு இப்பேரியாழ் தகுதியுடையதாக இருக்கவில்லை. இக்காரணத்தாலே பெண்டிரும் எளிதிற் பாடுதற்கேற்றதாக யாழ்க் கருவியைப் பின்னரும் சீர்திருத்தம் செய்தல் இன்றியமையதாயிற்று. அங்ஙனம் சீர்திருத்தம் செய்யப்பட்ட யாழே ஈண்டு அடிகளார் கூறுகின்ற செம்முறைக் கேள்வி என்னும் செவ்விய யாழ் ஆகும். இதனை அடிகளார் ஈரேழ் கோவை என்றும் ஓரோரிடங்களில் செங்கோட்டியாழ் என்றும் வழங்குவர். அடிகளார் காலத்தே சகோடயாழ் என்னும் வழக்கிருந்திலது. இந்நூலில் ஓரிடத்திலேனும் அடிகளார் இப்பெயரை வழங்காமையே இதற்குச் சான்றாம்.
பேரியாழில் மூன்று கோவையாக மெலிவும் சமனும் வலிவுமாக நின்ற மூவகையியக்கமும் இச்செம்முறைக்கேள்வியில் மெலிவு நான்கும் சமன் ஏழும் வலிவு மூன்றுமாய்ப் பதினான் கிசைகளுள் அடங்கி நின்றன. இக்காரணத்தால் மெல்லியலாராகிய பெண்டிர்க்கும் இந்த யாழை யிசைத்துத் தம்மிடற்றானும் இனிதே பாடுதற்குத் தகுதியுடையதாயிருந்தது. மகளிர் பாடுதற் கேற்றதாக்க வேண்டும் என்னும் கருத்தாலேயே யாழ் இங்ஙனம் சீர்திருத்தப்பட்டமையின் பழைய உரையாசிரியரிருவரும் இந்த யாழினை, பெண்டிர்க்குரிய தானமுடைய பரடலியல் பொத்து அமைந்த சிறப்புடைத்து என்றுரை வகுப்பாராயினர் விபுலானந்தரை யுள்ளிட்ட பிற்காலத்து ஆராய்ச்சியாளரும் உரையாசிரியரும் இக் கருத்துணராது இதனைச் சகோட யாழ் எனவும், இது வடவர்நாட்டு இசைக் கருவி எனவும், பிறவும் தத்தம் வாய் தந்தன கூறுவாராயினர்.
இனி ஈர் ஏழ் என்றது இசைகளையே யன்றி நரம்புகளை அன்று. இக்காலத்தே இவை மெட்டுகள் என்று வழங்கப்படுகின்றன. ஆகவே, குரல் முதலிய ஏழிசைகளும் நரம்பு என்று வழங்கப்படும்போது அவ்வவற்றிற்குரிய மெட்டுகள் ஆகுபெயரால் அங்ஙனம் கூறப்படுகின்றன என்று குறிக்கொண்டுணர்ந்து கோடல் வேண்டும். மெட்டுகள் நிரலாகத் தொடுக்கப்படுதலின் அவை கோவை என்றும் தொடை என்றும் வழங்கப்படுதலும் உண்டு. இதுகாறும் கூறியவாற்றால் அடிகளார் கூறும் செம்முறைக் கேள்வி என்பது பதினான்கு மெட்டுக்களமைந்த ஒருவகை யாழ் என்பதுணரப்படும்.
பாலை - பெரும்பாலைகள். பாலை என்பது இசைத்தமிழில் குரல் முதலிய இசைகளையும் இவற்றாலியன்ற பண்களையும் குறிக்கும் என்றுணர்க. என்னை? இந்நரம்பில் பாலை பிறக்குமிடத்துக் குரல் நான்கு மாத்திரை பெறும் என்புழி இசையைக் குறித்தல் காண்க. (ஆய்ச்சியர் குரவை. 14. அடியார்க்குநல்லார் விளக்கவுரை) தாரத்துழை தோன்றப் பாலையாழ் என்புழிப் பண்ணைக் குறித்தலறிக. பாலையைக் கேள்வி என்றும் வழங்குவர். இக்காலத்தார் சுரம் என்பர். ஏழு பாலைகளையும் இக்காலத்தார் இராகம் என்பர். யாழை, வீணை என்னும் வழக்கு அடிகளார் காலந்தொட்டே யுளது. இஃதுணராதார் சிலர் யாழ் வேறு என்றும் வீணை வேறு என்றும் இப்பொழுது இங்குக் காணப்படும் வீணை வடநாட்டவர் கருவி. நமது யாழ் இறந்துபட்டது எனவும் கூறுவர். அவர் அளியரோ! அளியர்! அவர் கூற்று நமது பழைய காலத்து நீர் இறந்துபோயிற்று, இப்பொழுது நமது காவிரியில் ஓடுவது வடவாரியர் கொணர்ந்த சலமே என்றாற்போல்வதொரு பிதற்றுரையேயன்றிப் பிறிதில்லை யென்றொழிக.
இனி, பெரும்பாலைகள் ஏழாம், அவையாவன : செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை விளரிப்பாலை மேற் செம்பாலை என்பன. இவ்வேழும் ஏழிசைகளானும் இயல்வன ஆதலின் இவற்றைப் பெரும்பாலைகள் என்பர். இக்காலத்தே சம்பூரண இராகங்கள் என்பர்.
இப்பாலைப்பண்கள் ஆயப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை என நால்வகைப்படும். பழைய வுரையாசிரியர் ஈண்டு ஆயப்பாலையாய் நின்ற பதினாற் கோவை என்றது, குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் எனக் குரல் முதலாகத் தாரமீறாக நிரல்பட்டு நின்ற இரண்டு நிரல்களை என்க. ஆயப்பாலை எனினும் நேரிசைப்பாலை எனினும் ஒக்கும் ஆயப்பாலைக்கு இசைகள் குரல் முதற் றாரமீறாக நிற்கும் என்பதனை, குரல் முதல் தாரம் இறுவாய்க் கிடந்த நிரல் ஏழும் செம்பாலை நேர் எனவரும் (அடியார்க்கு நல்லார் உரை ஆய்ச்சியர் குரவை - 14) என்பதனால் அறிக.
இனி, ஆயப்பாலையாய் நின்ற இவ்வீரேழ் கோவையை வட்டப் பாலையாக இயக்குங்கால் இவ் வேழுபாலைகளும் பன்னிருபாலைகளாக இயக்கப்படும். ஈண்டு அடிகளார் யாழாசிரியனின் புலமைத் திறத்தை இவ்வட்டப்பாலையை இயக்குமாற்றால் அறிவுறுத்துகின்றார். வட்டப்பாலைகள் பன்னிரண்டாம். அவை பன்னிரண்டிராசிகளிடத்தும் பிறப்பனவாகக் கொள்ளப்படும். அங்ஙனம் கொள்ளுங்கால் இராசி மண்டிலங்கீறி அம்மண்டிலத்துள் ஏழு வீடுகளில் குரல் முதலிய ஏழிசைகளும் நிற்பனவாகவும் எஞ்சிய ஐந்து வீடுகளில் அந்தரக் கோல்கள் நிற்பனவாகவும் கருதிக் கொள்ளப்படும். அங்ஙனம் கொள்ளுங்கால் அவை இவ்வாறு நிற்கும்.
இனி இவையிற்றை யாழிற் கொள்ளுமிடத்து யாழினது (மேருவில்) தகைப்பில் இளியும் ஏனைய அதனைத் தொடர்ந்து நிற்பனவாகவும் தகைப்பினின்று இடபவிராசி முதலியன தொடர்ந்து நிற்பனவாகவும் கொள்ளப்படும்.
...
இடபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேடம்
------- ------- ----- ------- ------ ------ ---------- ------ ----- ------- ------ -------
இளி --- விளரி தாரம் ---- குரல் --- துத்தம் --- கைக்கிளை உழை ---
...
என, இங்ஙனம் கொள்க. கோடிட்ட இடங்கள் அந்தரக்கோல்களாகும்.
தாரத் தாக்கம்
72-81 : வன்மையில் ........... செம்பாலையாயது
(இதன்பொருள்) வன்மையில் கிடந்த தார பாகமும் - வட்டப் பாலையின் முடிவிடமாகிய வலிவியக்கில் நின்ற தாரம் என்னும் இசையணங்கிற்குரிய இரண்டலகில் ஓரலகினையும்; மென்மையில் கிடந்த குரலின் பாகமும் - அப்பாலை தொடங்குமிடமாகிய குரல் என்னும் இசைமகளுக்குரிய நாலலகில் இரண்டலகையும் கூட்டி இரண்டற்கும் இடைநின்ற; மெய்க்கிளை நரம்பில் - அந்தரக் கோலிலே மூன்றலகுடைய இசையை உண்டாக்கிய வழி அவ்விடத்தில்; கைக்கிளை கொள்ள-கைக்கிளை என்னும் இசையணங்கு தோன்றா நிற்பள்; பொற்புடைத் தளராத் தாரம் - பொலிவும் வலிவுமுடைய அத்தாரம் என்னும் இசையன்னை; கைக்கிளை ஒழிந்த பாகமும் விளரிக்கீத்து - அக்கைக்கிளை கொண்டு தன்பால் எஞ்சி நின்ற ஓரலகையும் தன்மருங்கே நின்ற விளரி என்பாளுக்கு வழங்கிவிட்டு; கிளைவழிப்பட்டனள் - தன் மகள் இல்லத்தை எய்தினள்; அங்கே கிளையும் - அவ்வில்லத்து வாழ்ந்த உழை என்பாளும்; தன் கிளை அழிவுகண்டு அவள் வயின் சேர-தன் மகளாகிய குரல் என்பாள் தன தலகில் இரண்டலகை யிழந்து அழிந்தமையாலே அவளிருந்த வீட்டை எய்தினள்; ஏனை மகளிரும் கிளைவழிச் சேர - இங்ஙனமே எஞ்சிய இசைமகளிர் தாமும் தத்தம் கிளைஞர் இல்லத்தை எய்தா நிற்றலாலே; மேலது உழையுளி கீழது கைக்கிளை - பண்டு குரல் முதலாகநின்ற இசை நிரலிரண்டும் இம்மாற்றத்தாலே உழைமுதலாகக் கைக்கிளை இறுதியாக அமைந்து நிரலே மெலிவு நான்கும் சமன் ஏழும் வலிவு மூன்றுமாய் உழைமுதலாக; வம்புறுமரபில் செம்பாலை யாயது-புதியதொரு முறைமையாலே செம்பாலை முதலிய பண்கள் தோன்றுவன வாயின என்க.
(விளக்கம்) 72-81; வன்மையிற் கிடந்த என்பது தொடங்கி அடிகளார் தாரத்தாக்கம் கூறுகின்றார். தாரத் தாக்கமாவது - தார விசையிலிருந்து இசை நிரல்களை மாறுபடுத்திக் கொள்ளுமாறு இசைக்கரணம் என்க. (80) மேலது உழையிளி என்பது, மேலது என்னும் ஒருமையோடு பொருந்தாமையின் இப்பாடம் பிழைபட்ட பாடம் என்று தோன்றுகின்றது. ஆய்ச்சியர் குரவை-14 அரும்பதவுரையில் உழையிளி என்பது உழைக்குப் பெயர், என ஒரு குறிப்புக் காணப்படுதலின் அதுவே, உழையிளி என ஈண்டுத் திரித்து எழுதப்பட்டதாகக் கருத இடனுளது. அதற்குக் காரணம் எமது முன்னுரையிற் காண்க. இனி இஃது என் சொல்லியவாறோ எனின்:
பண்டு குரல் முதலாக நின்ற இசை நிரலின்கண் இறுதியில் நின்ற தாரத்தில் ஓரலகையும் தொடக்கத்தில் நின்ற குரலில் இரண்டலகையும் கூட்டி இரண்டற்கு மிடையே மூன்றலகுடைய கைக்கிளை யிசையைத் தோற்றுவித்தக்கால் தார இசை அழிவுறும். மேனின்ற விளரி தாரத்தில் எஞ்சிய ஓரலகைப்பெற்றுத் துத்தமாகும்; இளி குரலாகும், உழை தாரமாகும், பண்டைக் கைக்கிளை விளரியாகும், துத்தம் இளியாகும், உழைகுரலாகும். இங்ஙனமாதற்கு இவற்றின் அலகுகளும் பொருந்துதலுணர்க. இதன் பயன் ஒவ்வோரிசையையும் ஐந்திடம் மேலேற்றி நிறுத்துதல் என்க. இதனை இக்காலத்தார் ச-ப, முறை என்பர். பண்டைக் காலத்தே வண்ணப்பட்டடை வைத்தல் என்ப. ஈண்டு அடிகளார் இசைகளை மகளிராக உருவகித்து அழகுற ஓதியுள்ளமை உணரற்பாலதாம்.
இசை திரிந்தவழிப் பாலைகள் திரிதல்
82-89 : இறுதியாதி ......... கிடக்கையின்
(இதன்பொருள்) இறுதி ஆதியாக ஆங்கு அவை பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது-ஈற்றில் நின்ற (தாரத்தாக்கத்தாலே) கைக்கிளை முதலாக இடமுறைப்பாலைகளுக்கு நூல் கூறிய முறைக் கிணங்க அவ்வவ்விசைகள் தாம்தாம் பெறுவதற் கியன்ற முறைமையாலே வந்த தன்மையில் நீங்காமல்; படுமலை செவ்வழி பகர் அரும்பாலை என - கைக்கிளை துத்தம் குரல் என்னும் மூன்றிசைகளும் நிரலே படுமலைப் பாலையாகவும் செவ்வழிப் பாலையாகவும் அடுத்துக் கூறப்படுகின்ற அரும்பாலையாகவும்; குரல் குரலாகத் தற்கிழமை திரிந்தபின் - ஒவ்வொன்றும் குரலாகத் தனக்குத் தனக்குரிய பாலைகளாகத் திரிவு பெற்ற பின்னர் (ஆங்கு); முன்னதன் வகையே - அவ்விடத்தே முன் போலவே; இளி முதலாகிய எதிர்படு கிழமையும் - எஞ்சிய இளி முதலிய மூன்றிசைகளும் இடமுறைப் பாலைகளுக்குத் தமக்குரிய முறையாலே; கோடி விளரி மேற்செம்பாலை என - இளிகுரலாக மேற் செம்பாலையும் விளரி குரலாக விளரிப்பாலையும் தாரம் குரலாகக் கோடிப்பாலையும் ஆகத் திரிந்தன; நீடிக்கிடந்த கேள்விக் கிடக்கையின் - இவ்வாறு படுமலைப்பாலை முதலாக மேற் செம்பாலை ஈறாகத் தொடர்ந்து கிடந்த இசைத் தொடரையுடைய யாழினிடத்தே என்க.
(விளக்கம்) இறுதி (பண்டு தாரம்) இப்பொழுது கைக்கிளை - ஈறு முதலாக எனவே, இவை இடமுறைப்பாலைகள் என்பது பெற்றாம். செம்பாலை முதலியன இடமுறையினும் வலமுறையினும் ஒரேவகையாகத் தொடர்ந்து வருதலை இதனாலறியலாம். இங்ஙனம் வருதலையே அடிகளார் வம்புறுமரபு என்றார் இஃதுணராது அடிகளார் ஈண்டுக் கூறியது வலமுறைப்பாலை என்பார் உரை போலியாம். இனி இவ்வாறு தாரத் தாக்கம் பெற்றபின்னர் இராசி மண்டலத்தில் இசைகள் மாறி நிற்பதனைக் கீழே காட்டிய இவ்விராசி மண்டிலத்தே காண்க.
...
-- இணை --- --- இணை --- இணை --- இணை --- --- இணை
------- ------- ----- ------- ------ ------ ---------- ------ ----- ------- ------ -------
குரல் துத்தம் துத்தம் கைக்கி கைக்கி உழை உழை இளி விளரி விளரி தாரம் தாரம்
------- ------- ------ ------- ------ ------ ---------- ------ ----- ------- ------ -------
இடபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேடம்
...
இன்னும் இப்பாலைகளினியல்பை ஆய்ச்சியர் குரவையில் விளக்குதும். ஆண்டுக் காண்க.
இணை நரம்பும் இயக்கும் மரபும்
90-94 : இணை நரம்புடையன ........ புலமையோனுடன்
(இதன்பொருள்) இணைநரம்பு உடையன அணைவுறக்கொண்டு - இந்த ஈரேழ் கோவையில் இணையிசையுடைய இசைகட்கு அவ்வவற்றிற்குரிய இணையிசையையும் இயைத்துக் கொண்டு; ஆங்கு - அவ்வழி, யாழ் மேற் பாலை இடமுறை மெலிய - யாழாசிரியன் தனது யாழின்கண் இயக்கும் அரும்பாலை முதலிய பாலைகளை இடமுறைப் பாலைகளாக இசைத்துச் செல்லாநிற்ப, குழல்மேல் கோடி வலமுறை வலிய-குழலோன் கோடிப்பாலை முதலிய பாலைகளைத் தனது குழலின்கண் வலமுறையாக இசைத்துச் செல்ல; வலிவும் சமனும் மெலிவும் எல்லாம் - வலிவியக்கும் சமனியக்கும் மெலிவியக்கும் என்று கூறப்படுகின்ற மூவகை யியக்கங்களை யுடைய இசைக் கூறுபாடுகளுக்கு எல்லாம்; பொலியக் கோத்த புலமையோனுடன் - நரப்படைவு கெடாமலும் பண்ணீர்மை முதலாயின கெடாமலும் அழகுறப் புணர்க்கவல்லனாய் இசை செய்யவல்ல யாழாசிரியனும் என்க.
(விளக்கம்) 90. இணை நரம்பு - இணைந்து நிற்கும் இரண்டிசைகள். முதலும் முடிவுமாய் நிற்கும் இசையுமாம். இணைநரம்பு எனினும் இணையிசை எனினும் இரட்டை யிசை எனினும் ஒக்கும். இணைகரம் புடையன அணைவுறக் கொண்டெனவே செம்பாலை முதலிய பெரும் பாலைகட்கு ஈற்றினும் தொடங்கிய இசை புணர்க்கப்படும் என்பது பெற்றாம்; மேலும் இணைநரம்பில்ல தனவும் சிலவுள என்பது பெற்றாம். அவை குரலும் இளியுமாம் என்பது பழையவுரையாசிரியர் உரையினாற் பெற்றாம். அது வருமாறு : இணைநரம்புடையன அணைவுறக் கொண்டாங்கென்றது. இப் பதினாற்கோவைப்பாலை நிலையினும் பண்ணுநிலையினும் இரட்டித்த குரல் குரலாகிய அரும்பாலையும், இளிகுரலாகிய மேற் செம்பாலையும்போல அல்லாத ஐந்துபாலையும் உழைகுரலாகச் செம்பாலைக்கு உழை பெய்தும் கைக்கிளை குரலாகப் படுமலைப் பாலைக்குக் கைக்கிளை பெய்தும் துத்தம் குரலாகச் செவ்வழிப் பாலைக்குத் துத்தம் பெய்தும் தாரம் குரலாகக் கோடிப்பாலைக்குத் தாரம் பெய்தும் பாடப்படும் என்றவாறு எனவரும்.
எனவே, குரலும் இளியும் இரட்டிக்கும் என்பது பெற்றாம். பெறவே யாழோன் தாரத்தாக்கத்தால் குரல் குரலாகிய அரும்பாலையிற் றொடங்கி நிரலே கோடிப்பாலை முதலியவற்றைத் தொடர்ந்து இடமுறையாக இசைத்து முடிக்கும்பொழுது அரும்பாலையிலே முடிப்பான் என்பதும் இங்ஙனமே குழலோன் தாரத்தாக்கஞ் செய்யப்படாது நின்ற இளிகுரலாகிய கோடிப்பாலையிற் றொடங்கி விளரிப்பாலை முதலியவற்றை நிரலே வலமுறைப்பாலைகளாக இடையிடையே இசைத்து இறுதியிலே தான் தொடங்கிய கோடிப்பாலையிலே முடிப்பான் என்பதும் பெற்றாம். பாலைநிலையில் இரட்டித்தலாவது - குரல் குரலாகவும் அக்குரலே தாரமாகவும் (ஈறாகவும்) கோடலாம். பண்ணுநிலையிலே இரட்டித்தலாவது அரும்பாலையிலே தொடங்கி முடிக்கும்பொழுதும் அரும்பாலையிலே முடித்தலாம். குழலோன் திறத்திலும் இளியும் கோடிப்பாலையும் இங்ஙனமே இரட்டும் என்க. இக்கருத்தறியாமல் விபுலானந்தர் தமது யாழ் நூலின்கண் இப்பகுதியில் பழையவுரையாசிரியர் மயங்கினார் எனத் தமது மயக்கத்தை அவ்வாசிரியர்பால் ஏற்றினர். இனி யாழோனும் குழலோனும் மாறி மாறி இடமுறையானும் (அவரோகணத்தானும்) வலமுறையானும் (ஆரோகணத்தானும்) மாறி மாறி இயக்குங்காலத்தே பாலைகள் கீழ் வருமாறு பிறப்பனவாம்.
யாழோன், இடமுறை குழலோன், வலமுறை
குரல்-அரும்பாலை .................
தாரம்-கோடிப்பாலை இளி-கோடிப்பாலை
விளரி-விளரிப்பாலை விளரி- விளரிப்பாலை
இளி-மேற்செம்பாலை தாரம்-மேற்செம்பாலை
உழை-செம்பாலை குரல்-செம்பாலை
கைக்கிளை-படுமலைப்பாலை துத்தம்-செவ்வழிப்பாலை
துத்தம்-செவ்வழிப்பாலை கைக்கிளை-படுமலைப்பாலை
குரல்-அரும்பாலை உழை-அரும்பாலை
........... இளி-கோடிப்பாலை
இப்பாலைகள் வலமுறையானும் இடமுறையானும் ஒன்றிவந்து முதலும் முடிவும் இணைந்து வட்டமாய் முடிவதனைக் கூர்ந்துணர்க. அந்தரக்கோல்களை இயக்கியவழி அவையைந்தும் பிறக்கும் என்க.
இனி அடிகளார் கூறியாங்குத் தாரத்தாக்கம் செய்து இணை நரம்பு அணைவுறக் கொள்ளுங்கால் அவை இராசி மண்டிலத்தே-இவ்வாறமையும்.
...
இடபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேடம்
------- ------- ----- ------- ------ ------ ---------- ------ ----- ------- ------ -------
குரல் துத்தம் துத்தம் கைக்கி கைக்கி உழை உழை இளி விளரி விளரி தாரம் தாரம்
------- ------- ----- ------- ------ ------ ---------- ------ ----- ------- ------ -------
-- அந்தரம் --- --- அந்தரம் --- அந்தரம் --- அந்தரம் --- --- அந்தரம்
...
பண்டைக் காலத்தே குரல் முதலியனவாகக் கூறப்பட்ட இக்கேள்விகள் இக்காலத்தே சட்சம் முதலிய பெயர்பெற்று நிற்றலைக் காணலாம். பெயர் மாற்றமேயன்றிப் பிற மாறுபாடில்லை. அவை:
குரல் சட்சம்
துத்தத்தினந்தரம் சுத்த இடபம்
துத்தம் சதுசுருதி இடபம்
கைக்கிளை சாதாரண காந்தாரம்
கைக்கிளையினந்தரம் அந்தர காந்தாரம்
உழை சுத்தமத்திமம்
உழையினந்தரம் பிரதிமத்திமம்
இளி பஞ்சமம்
விளரியந்தரம் சுத்ததைவதம்
விளரி சதுசுருதி தைவதம்
தாரம் கைசிகி நிடாதம்
தாரத்தினந்தரம் காகலி நிடாதம்
குரல் சட்சம்
எனநிற்கும்.
இவற்றை நோக்கின் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நந் தமிழிசை இற்றைநாள் இருந்தவாறே இருந்தவுண்மை தெரியவரும்.
இனி மேலே காட்டிய இசைகளில் அந்தரங்களை நீக்கிப் பன்னிருகால் தாரத்தாக்கம் செய்துழி 12*7: 84-ம் இறுதியில் இணைக்கும் பாலைகள் பன்னிரண்டும் இயல்பினமைந்த பாலை ஏழுமாய்ப் பண்கள் நூற்றுமூன்றாதலறிக. இவ்வாறன்றிப் பிறவாற்றானும் கூட்டித் தொகை செய்வாருமுளர்.
அரங்கின் அமைதி
95-113 : எண்ணிய நூலோர் ......... அரங்கத்து
(இதன் பொருள்) எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு - ஆராய்ந்து வரையப்பட்ட சிற்ப நூலாசிரியர் இலக்கணங்களிற் சிறிதும் வழுவாதபடி நாடகவரங்கம் அமைத்தற்கு முதற்கண் நிலத்தை ஓரிடத்தே வரையறை செய்துகொண்டு; புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழை கண்இடை ஒருசாண் வளர்ந்ததுகொண்டு-பொதியின் மலை முதலாய புண்ணியமுடைய மலைப்பக்கங்களிலே நெடிதாகி உயர வளர்ந்த மூங்கிலிடத்தே ஒரு கணுவிற்கும் மற்றொரு கணுவிற்கும் ஒருசாணீளமுடைத்தாக வளர்ந்த பகுதியைக் கைக்கொண்டு; நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும் கோல் இருபத்து நால் விரல் ஆக-சிற்ப நூல்களில் விதித்தமுறைப் படி அரங்கம் அமைத்தற்கு நிலம் அளக்கின்ற கோல் தலையாய வளர்ச்சியை யுடையவன் கைப்பெருவிரல் இருபத்துநாலு கொண்டது ஒருகோலாக நறுக்கி; எழுகோல் அகலத்து எண் கோள் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி-இக் கோலால் எழுகோல் அகலமும் எண்கோல் நீளமும் ஒருகோல் குறட்டுயரமும் உடையதாய்; உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நால்கோல் ஆக-தூணின்மிசை வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கினது அகலத்திற்கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்கு கோலாக உயரங் கொண்டு; ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய - இத்தன்மையவாகிய அளவிற்குப் பொருந்தவமைத்த இரண்டு வாயில்களுடனே விளங்கும்படி; தோற்றிய அரங்கில் செய்யப்பட்ட அவ்வரங்கினிடத்தே; தொழுதனர் ஏத்தப் பூதரை எழுதி மேல் நிலை வைத்து-கண்டோரெல்லாம் கைகுவித்து வணங்கிப் புகழுமாறு நால்வகை - வருணப்பூதரையும் ஓவியமாக வரைந்து மேலிடத்தே வைத்து, தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து - தூண்களின் நிழல நாயகப் பத்தியின்கண்ணும் அவையின்கண்ணும் விழாமற் புறத்தே விழுமாறு மாண்புடைய நிலைவிளக்கினை நிறுத்தி; ஆங்கு ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்து ஆங்கு - இடத்தூணிலையிடத்தே உருவு திரையாக ஒருமுக எழினியும் இரண்டு வலத்தூணிடத்தும் உருவுதிரையாகப் பொருமுக வெழினியும் மேற்கட்டுத் திரையாகக் கரந்துவரல் எழினியும் செயற்றிறத்தோடே வகுத்து; ஓவிய விதானத்து - ஓவியம் பொறிக்கப்பட்ட விதானத்தையும் உடைத்தாக; உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளைவுடன் நாற்றி - புகழ்பெற்ற முத்துக்களாலியன்ற சரியும் தூக்கும் தாமமு மாகிய மாலைகளைத் தூங்கவிட்டு; விருந்து படக் கிடந்த அருந்தொழில் அரங்கத்து - புதுமை யுடைத்தாக அமைக்கப்பட்ட செயற்கரிய தொழில் மாண்புடைய அவ்வரங்கத்தின்கண்ணே, என்க.
(விளக்கம்) (95) நூலோர் என்றது சிற்ப நூல்வல்லோரை, அவர் தாமும் அரங்கு செய்தற்கு நிலங்கொள்ளுங்கால் தெய்வத்தானமும் பள்ளியும் அந்தணரிருக்கையும் கூபமும் குளனும் காவுமுதலாகவுடையன நீக்கி, அழியாத இயல்பினையுடைத்தாய் நிறுக்கப்பட்ட குழிப்பூழி குழிக்கொத்துக் கல்லப்பட்ட மண், நாற்றமும் மதுரநாறி இரதமும் மதுரமாகித் தானும் திண்ணிதாய் என்பும் உமியும் பரலும் சேர்ந்த நிலம் களித்தரை உவர்த்தரை ஈளைத்தரை பொல்லாச் சாம்பல்தரை, பொடித்தரை என்று சொல்லப்பட்டன ஒழிந்து ஊரின் நடுவணதாகித் தேரோடும் வீதிகள் எதிர்முகமாக்கிக் கொள்ளல்வேண்டும் என்க.
இவற்றை:-
தந்திரத் தரங்கிங் கியற்றுங் காலை
அறனழித் தியற்றா வழகுடைத் தாகி
நிறைகுழிப் பூழி குழிநிறை வாற்றி
நாற்றமும் சுவையு மதுரமு மாய்க்கனம்
தோற்றிய திண்மை சுவட துடைத்தாய்
என்புமி கூர்ங்கல் களியுவ ரீளை
துன்ப நீறு துகளிவை யின்றி
ஊரகத் தாகி யுளைமான் பூண்ட
தேரகத் தோடுந் தெருவுமுக நோக்கிக்
கோடல் வேண்டு மாடரங் கதுவே
எனவரும் நூற்பாவான் உணர்க.
இனி நிலந்தான் வன்பால் மென்பால் இடைப்பாலென்று மூன்று வகைப்படும். வன்பாலாவது - குழியின் மண் மிகுவது; மென்பாலாவது - குறைவது; இடைப்பாலாவது - ஒப்பு. இவை பெரும்பான்மையாற் கொள்ளப்படும்.
இனி, இதன்கண் நாற்றம் - மண்ணினது நாற்றம்; சுவையும் மண்ணினது சுவையே என்றறிக. மதுரம் - இனிப்பு. மண் இனிப்புச் சுவையுடைத்தாதல் வேண்டும்; வேறு சுவைகள் தீமை பயப்பன என்ப; இதனை,
உவர்ப்பிற் கலக்கமாம் கைப்பின்வருங் கேடு
துவர்ப்பிற் பயமாஞ் சுவைகள் - அவற்றிற்
புளிநோய் பசிகாழ்ப்புப் பூங்கொடியே தித்திப்
பனிபெருகு மாவ தரங்கு
எனவரும் வெண்பாவா னறிக.
இனி, நாற்றம் என்பன கொள்ளிலை, செந்நெல், சண்பகம், சுரபுன்னை என்னும் இவற்றைப்போல் நாற்றமுடைய நிலம் சிறப்பாகும் என்ப. மற்றவை தீமைப்பால என்ப.
97. புண்ணிய நெடுவரை என்றது - பொதியின் மலைபோன்ற கடவுட் டன்மையுடைய மலைகளை.
100. விரல் - ஈண்டுக் கழிய நெடுமையும் கழியக் குறுமையு மில்லாத ஆடவர் கைப்பெருவிரல் என்க. இதனை,
ஒத்த வணுமுத லுயர்ந்துவரு கணக்கின்
உத்தமன் பெருவிரல் இருபத்து நாலுன
கோலே கோடல் குறியறிந் தோரே - பரதசேனாபதியார்.
எனும் நூற்பாவான் உணர்க.
இனி, அரங்கின் அகலம் நீளம் உயரம் இவற்றின் அளவுகளை,
அக்கோல் ஏழகன் றெட்டு நீண்டும்
ஒப்பால் உயர்வு மொருகோ லாகும் - செயிற்றியனார்.
என்பதனாலும், இத்தகைய அரங்கிற்கேற்ற வாயில்களின் உயரத்தை,
நற்கோல் வேந்தன் நயக்குறு வாயில்
முக்கோல் தானு முயரவு முரித்தே - செயிற்றியனார்.
என்பதனானும் அறிக.
105. அரங்கிற்குட் புகவும் புறப்படவும் இரண்டு வாயில் வேண்டுதலின் வாயில் இரண்டுடன் என்றார். ஏற்ற என்பதனை ஆண்டைக்குப் பொருந்திய இடங்கள் பிறவற்றையும் என்று பொருள்கொண்டு அடியார்க்குநல்லார் கரந்து போக்கிடனும் கண்ணுளர் (கூத்தர்) குடிஞைப் பள்ளியும் அரங்கமும் அதனெதிர் மன்னர் மாந்தரோடிருக்கும் அவையரங்கமும் இவற்றினைச் சூழ்ந்த புவிநிறை மாந்தர் பொருந்திய கோட்டியும் முதலாயினவும் கொள்க என்பர்.
106. தோற்றிய - செய்யப்பட்ட. தொழுதனர்; முற்றெச்சம். காண்போர் யாவரும் தொழுது ஏத்த என்றவாறு.
107. பூதர் - வருணப்பூதர், அவர் வச்சிரதேகன், வச்சிர தந்தன், வருணன், இரத்தகேசுரன் எனப்படுவார். இப்பூதர் நால்வரும் நிரலே நால்வகை வருணத்திற்கும் உரியர் என்ப. இப்பூதர்களின் உண்டியும் அணியும் ஆடையும் மாலையும் பிறவும் அழற்படு காதைக் கண் விளக்கமாகக் கூறப்படும். இங்ஙனம் பூதமெழுதி வைத்தலை,
கூறிய வுறுப்பிற் குறியொடு புணர்ந்தாங்கு
ஆடுநர்க் கியற்றும் அரங்கின் நெற்றிமிசை
வழுவில் பூத நான்கு முறைப்பட
எழுதின ரியற்ற லியல்புணர்ந் தோரே
எனவரும் நூற்பாவான் உணர்க.
108. புறத்தேயுள்ள விளக்குக் காரணமாக அரங்கின்கண் தூணிழல் வீழ்தலியல்பாகலின் அந்நிழலை அகற்றுதற் பொருட்டு அகத்தே நிலைவிளக்கு வைக்கப்படுமாதலின் தூணிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து என்றார்.
109. ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என்பன திரைச்சீலைகளின் வகை. இவற்றுள் ஒருமுக எழினி என்பது இடத்தூணிடத்தே தூங்கவிடப்பட்டுக் கயிற்றை உருவியவழி வலத் தூண் காறுஞ் சென்று மறைப்பது என்றும், பொருமுக எழினி என்பது வலத்தூண்கள் இரண்டின் மருங்கும் தூங்கவிடப்பட்ட இரண்டு திரைகள் என்றும், இவை உருவிய வழி இரண்டு பக்கலினுமிருந்து வந்து நடுவண் ஒன்றனோடொன்று இணையும் என்பதும் கரந்துவரல் எழினி என்பது கூத்தர் அவையோர்க்குப் புலப்படாமல் மறைந்து நின்று அமரர்கள் பேசுமாறு பேசுதற்கமைந்த திரைச்சீலை என்றும் பழையவுரையாசிரியர் உரைகளால் ஊகிக்கலாம்.
விதானம்-பந்தல். இப்பந்தலின்கண் ஓவியமெழுதி அழகுசெய்யப்படுதலின் சித்திரவிதானம் எனப்பட்டது.
111. உரைபெறு நித்திலத்து என்புழி உரை - புகழ்.
112. மாலை, தாமம், வளை என்பன முத்துமாலை வகைகள். இவற்றை நிரலே சரி, தூக்கு, தாமம் என்பர் அடியார்க்குநல்லார்.
113. விருந்து - புதுமை.
தலைக்கோல் அமைதி
114-128 : பேரிசை மன்னர் .......... வைத்தாங்கு
(இதன்பொருள்) பேரிமை மன்னர் பெயர் புறத்து எடுத்த சீர் இயல் வெள்குடை காம்பு நனி கொண்டு - பெரிய புகழையுடைய அரசர் எதிர்ந்து வந்து போர் செய்து ஆற்றாமையால் புறமிட்டு ஓடிய விடத்தே அவர் விட்டுப்போன அழகிய இயல்பினையுடைய அவருடைய வெண்கொற்றக் குடையினது காம்பினை நன்கு தலைக்கோலாக நறுக்கி எடுத்து; கண் இடை நவமணி ஒழுக்கி - கணுக்கள் தோறும் ஒன்பான்வகை மணிகளை ஒழுங்குறப் பதித்து; மண்ணிய நாவலம் பொலம் தகட்டு இடைநிலம் போக்கி - தூய்மை செய்த சாம்பூநதம் என்னும் பொன் தகட்டினாலே கணுக்கட்கு இடையிலுள்ள பகுதியை எதிர் எதிராக (வலம் புரியும் இடம் புரியுமாகச்) சுற்றிக்கட்டி; காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன் ஆக என-சோழ மன்னனுடைய அரண்மனைக்கண் காப்பமைத்து வைத்து இக்கோல் இந்திரன் மகன் சயந்தன் ஆகுக என்று நினைத்து; வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் - மறை மொழியாலே வாழ்த்தி வழிபடப் பெற்ற அந்தத் தலைக்கோலை; பொற் குடத்துப் புண்ணிய நல்நீர் ஏந்தி மண்ணிய பின்னர் - பொன்னாலியன்ற குடத்தின்கண் புண்ணியம் பயக்கும் காவிரியாற்றின் நீரை முகந்து கொணர்ந்து நீராட்டிப் பின்பு; மாலை அணிந்து - மலர் மாலை சூட்டி; நலம் தரும் நாளால் - இச்சடங்கிற்குப் பொருந்திய நல்ல நாளில்; பொலம் பூண் ஓடை அரசு உவா தடக்கையில் பரசினர் கொண்டு-பொன்னாற் செய்த பூண்களையும் பட்டத்தையுமுடைய பட்டவருத்தனமென்னும் அரச யானையினது கையில் வாழ்த்துடனே கொடுத்து; முரசு எழுந்து இயம்பப் பல்லியம் ஆர்ப்ப அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்-வீர முரசு முதலியன மூன்று முரசுகளும் ஒரு சேர எழுந்து முழங்கவும், இன்னிசைக் கருவிகள் பலவும் ஒரு சேர முழங்கவும் அரசனும் அவனோடு தொடர்புடைய அமைச்சர் முதலிய ஐம்பெருங் குழவினோடும்; அப் பட்டத்தி யானையோடும் தேர்வலம் செய்து - அணி செய்து மறுகிலே நிறுத்தப்பட்டுள்ள தேரினை வலம்வந்து; கவி கைக்கொடுப்ப - அத் தேர் மிசை நின்ற கவிஞனின் கையிலே அத்தலைக்கோலை அளிப்ப; ஊர்வலம் செய்து புகுந்து முன் வைத்து ஆங்கு - அக்கவிஞன்றானும் மன்னர் முதலியவரோடே ஊர்வலமாக வந்து அரங்கின்கட் புகுந்து அத்தலைக்கோலை எதிர்முகமாக வைத்தபின்னர், என்க.
(விளக்கம்) 114-5. பேரிசை மன்னர் என்றது பண்டு பற்பல போர்களினும் பகைவென்று வாகை சூடிப் பெரும்புகழ்படைத்திருந்த மன்னரை என்பதுபட நின்றது.
115. சீரியல் வெண்குடை என்றது - குடை மங்கலம் என்பது தோன்ற நின்றது, அஃதாவது:
தன்னிழலோர் எல்லோர்க்கும் தண்கதிராம் தற்சேரா வெந் நிழலோர் எல்லோர்க்கும் வெங்கதிராம், இன்னிழல்வேல் மூவா விழுப்புகழ்.... கோவாய் உயர்த்த குடை எனவரும், (புறப் - வெண்பா 222) பேரிசை மன்னர் என்றதற்கேற்பக் குடைக்கும் மங்கலம் கூறுவார் சீரியல் வெண்குடை என்றார்.
இனி, பேரிசை மன்னராகிய பகைவர் எயிற்புறத்து மிளைக்கண் கொண்ட மூங்கில் எனினுமாம் என்பார் அடியார்க்குநல்லார்.
இங்ஙனம் கூறியது ஆடுதற்குரிய கூத்து வேத்தியல் ஆதலின் பொதுவியலுக்கு மலையிற் கொண்ட மூங்கிலே அமையும் என்பர்.
116. நாவலம் பொலம்தகடு என்றது சாம்பூநதம் என்னும் பொன்னாலியன்ற தகட்டினை. பொற்றகட்டால் மலக்கமாகக் கட்டி என்பர் (அடியார்க்) மலக்கம் - மாறுபாடு; அஃதாவது வலமாகவும் இடமாகவும் சுற்றுதல் என்க.
119. இந்திரன் மகன் சயந்தன் என்பான் திருமுனி சாபத்தால் மண்ணிடை வந்து மூங்கிலாகித் தலைக்கோலுமாகிச் சாபநீங்கினன் என்பது வரலாறாகலின் தலைக்கோலை இந்திரன் மகனாக நினைத்து வழிபாடு செய்வது மரபாயிற்று.
120. இத்தலைக்கோலின் அளவினை,
புண்ணியமால் வெற்பிற் பொருந்துங் கழைகொண்டு
கண்ணிடைக் கண்சாண் கனஞ்சாரும் - எண்ணிய
நீளமெழு சாண்கொண்டு நீராட்டி நன்மைபுனை
நாளிற் றலைக்கோலை நாட்டு - பரதசேனாபதியார்.
எனவரும் வெண்பாவா னுணர்க.
121. புண்ணிய நன்னீர் என்றது காவிரி முதலிய கடவுட்டன்மை யுடைய யாற்றுநீரை.
122. முற்கூறிப் போந்த ஆடலாசிரியன் முதலாயினோர் அரங்கத்தின்கண்ணே இத்தலைக் கோலை வைத்துப் பொற்குடத்தால் நீராட்டிய பின் மாலைசூட்டி என்றியையு காண்க.
123. நலந்தரு நாள் என்றது ஆடற்கலைக்கு ஆக்கமான நலந்தரும் நன்னாள் என்றவாறு. அவை, பூராடம் கார்த்திகை பூரம் பரணி இரேவதி திருவாதிரை அவிட்டம் சித்திரை விசாகம் மகம் என்னும் இவை என்ப. நலந்தரு நாள் என்ற இலேசினால், இடபம் சிங்கம் துலாம் கற்கடகம் விருச்சிகம் மிதுனம் ஆகிய ஓரைகளும் கொள்க என்ப. என்னை?
பூராடங் கார்த்திகை பூரம் பரணிகலம்
சீராதி ரைஅவிட்டஞ் சித்திரையோ - டாருமுற
மாசி யிடப மரிதுலை வான்கடகம்
பேசிய தேள்மிதுனம் பேசு - மதிவாணர்.
என்பவாகலான் என்க.
123. பொலம்பூணும் ஓடையும் என உம்மை விரித்தோதுக. ஓடை - முகபடாம்; பட்டம் என்பதுமது.
124. அரசுவா - பட்டத்தியானை. பரசினர் - முற்றெச்சம்.
125. முரசு எழுந்து இயம்ப பல்லியம் எழுந்து ஆர்ப்ப என ஒட்டுக. எழுந்து இயம்பல் - மிக்கு ஒருசேர முழங்குதல். பல் இயம் என்றது இன்னிசைக் கருவிகளை,
126. அரைசு: போலி. ஐம்பெருங்குழு - அமைச்சர் முதலிய ஐந்துவகையான அரசியற் சுற்றம்.
127. தேரை வலம் செய்து அதன்கணின்ற கவிஞன் கையிற் கொடுப்ப என்க.
128. அரங்கினுட் புகுந்து என்க. இதற்கு,
பிணியுங் கோளு நீங்கிய நாளால்
அணியுங் கவினு மாசற வியற்றித்
தீதுதீர் மரபிற் றீர்த்த நீரான்
மாசது தீர மண்ணுநீ ராட்டித்
தொடலையு மாலையும் படலையுஞ் சூட்டிப்
பிண்ட முண்ணும் பெருங்களிற்றுத் தடக்கைமிசைக்
கொண்டு சென்றுறீஇக் கொடியெடுத் தார்த்து
முரசு முருடு முன்முன் முழங்க
அரசுமுத லான வைம்பெருங் குழுவும்
தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலஞ் செய்து புகுந்த பின்றைத்
தலைக்கோல் கோட றக்க தென்ப
என்றார் செயிற்றியனார் என, அடியார்க்குநல்லார் நூற்பா வொன்றனை எடுத்துக் காட்டியுள்ளார்.
அரங்கிற் புகுந்து ஆடுகின்ற இயல்பு
129-142: இயல்பினின் .............. ஆமந்திரிகை
(இதன்பொருள்) இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்-அரசன் முதலியோர் யாவரும் தத்தம் தகுதிக்கேற்ற இருக்கைகளில் முறைமைப்படி அமர்ந்த பின்னர்; குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப-குயிலுவக் கருவியாளர் தாம் நிற்கக்கடவ முறைமை தோன்ற அவரவர்க் கியன்றவிடத்தே நிற்ப; வலக்கால் முன் மிதித் தேறி அரங்கத்து வலத்தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி - நாடகக் கணிகையாகிய அரங்கேறுகின்ற மாதவி (அரங்கத்திலே கூத்தியர் வலக்கால் முற்பட இட்டேறிப் பொருமுக வெழினிக்கு நிலையிடனான வலப்பக்கத்துத் தூணிடத்தே சேர்தல் மரபு என்பதுபற்றி) அவ்விடத்தே சேர்ந்து; இ நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த தொல் நெறி இயற்கைத் தோரிய மகளிரும் - மாதவி நூன் மரபிற் கிணங்க ஏறியவாறே இடத்தூண் நிலையிடமாகிய ஒருமுக வெழினியிடம் பற்றிய பழைய நெறியியற்கையையுடைய தோரிய மடந்தையரும்; சீர் இயல் பொலிய நீர் அல நீங்க வாரம் இரண்டும் வரிசையில் பாட - நன்மையுண்டாகவும் தீமை நீங்கவும் வேண்டித் தெய்வப்பாடல் இரண்டினையும் மரபுப்படி பாடாநிற்ப; பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம் - அத் தெய்வப்பாடலின் இறுதியிலே இசைத்தற்குரிய இன்னிசைக் கருவிகள் எல்லாம் கூடிநின்று இசையா நிற்கும்; (அவை, எவ்வாறிசைத்தனவோ வெனின்) குழல்வழி நின்றது யாழ்-வேய்ங் குழலிசை வழியே யாழ் இசை நின்றது; யாழ்வழி தண்ணுமை தக நின்றது - அந்த யாழிசைக்குத் தக தண்ணுமையாகிய மத்தளவிசை நின்றது; தண்ணுமைப் பின்வழி நின்றது முழவு - மத்தளவிசையின் பின்வழியே குடமுழா என்னும் கருவியின் இசை நின்றது; முழவொடு கூடிநின்று இசைத்தது ஆமந்திரிகை-அம் முழவிசையோடு கூடிநின்று அவ்விசைக் கருவிகளின் இசைக் கூறுகளை ஆமந்திரிகை என்னும் கருவி அமைப்பதாயிற்று; என்க.
(விளக்கம்) 129. இயல்பினின் வழாஅ இருக்கை முறைமை என்றது அரசன் முதலியோர் அரங்கின் முன்னர் அவைக்கண் அவரவர் தகுதிக்கேற்ப வீற்றிருக்கும் முறைமையை என்க.
130. குயிலுவ மாக்கள் என்றது இடக்கை முதலிய தோற்கருவியாளரை. முறைமையிலே நிற்றலாவது. ஆடிடம் முக்கோல் ஆட்டுவார்க்கு ஒருகோல் பாடுநர்க் கொருகோல் குயிலுவர் நிலையிடம் ஒருகோல், என நாடக நூலிற் கூறிய முறைப்படி நிற்றல் என்க.
121-2. நாடகக் கணிகையர் அரங்கேறுங்கால் வலக்காலை முற்பட வைத்தேறி வலத்தூணிடத்தே நிற்றல் வேண்டும் என்பது நூல் வழக்கு ஆதலால் அவ்வழக்கிற் கிணங்க மாதவியும் ஏறினள் என்பது கருத்து.
133-4. மாதவி ஏறியவாறே தோரிய மகளிரும் தமக்கு நூல் கூறிய மரபிற்கேற்ப ஏறி இடத்தூணிடம் பற்றி நின்றனர் என்றவாறு.
தோரிய மகளிர் ஆவார் ஆடிமுதிர்ந்தவர் இதனை,
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்வோன்
தொன்னெறி மரபிற் றோரிய மகளே
எனவும்;
தலைக்கோல் அரிவை குணத்தொடு பொருந்தி
நலத்தகு பாடலு மாடலு மிக்கோள்
சொலப்படு கோதைத் தோரிய மகளே
எனவும், வரும் நூற்பாக்களானறிக.
135. சீரியல் பொலிய நிரல நீங்க என்பதற்குத் தாளவியல்பு பொலிவு பெறவும் அவதாளம் நீங்க எனவும் பொருள் கோடலுமாம்.
136. வாரம் இரண்டாவன - ஓரொற்றுவாரமும் ஈரொற்று வாரமுமாகிய செய்யுள் இரண்டுமாம். அவை தாளத்து ஒருமாத்திரையும் இரண்டுமாத்திரையும் பெற்றுவரும் என்பர். ஈண்டு வாரம் என்பது தெய்வப் பாடலை. அப்பாடலின் இறுதியிலே கூடிநின்றிசைக் கற்பாலனவாகிய கருவிகள் எல்லாம் இசைத்தன என்பது கருத்து.
தோரிய மகளிர் பாட என்றதனால் மிடற்றுப் பாடலும் கூறியவாறாயிற்று.
142. ஆமந்திரிகை - இடக்கை. இஃது இவ்விசைத் தொடரை முற்றுவிக்கும் ஒரு கருவிபோலும்.
இதுவுமது