ஓவியா நகர் சேலத்தை விட்டு கொஞ்சம் தள்ளியிருக்கிறது. நர்த்தனா டீச்சர் அங்கே குடிவந்து மூன்று மாதங்கள் முடிந்து விட்டன.
அங்கே இதுவரைக்கும் நிம்மதியைக் கெடுக்கிறவகையில் எந்தப் பிரச்சினையும் தலை தூக்கியதில்லை. ஆனால் இந்த ஒரு வாரமாய் மோகனரங்கம் என்பவனால் மனஅமைதி சுத்தமாக காணாமல் போய்விட்டது.
அவன் குடிப்பான். சீட்டாடுவான். பொண்ணுகளை தொந்தரவு பண்ணுவான். அவனுக்கு நர்த்தனாவின் மகள் மோகனா முறைப்பெண்ணாம். எவன் அவளை சீண்டினாலும் துண்டுதுண்டாக வெட்டி வீசி விடுவானாம்.
ஊருக்குள் அவன் இப்படி சொல்லிக்கொண்டிருக்கிற விஷயம் நர்த்தனாவின் காதுக்கு எட்டியதும் ஆத்திரமானாள். அந்த கோபம் தந்த துணிச்சலோடு அவன் இருப்பிடம் தேடிப்போனாள்.
ஆத்திரம் தலைக்கேற வந்தவளை எதிர்கொண்டான் மோகனரங்கம்.
`வாங்க டீச்சர். ஏது இவ்வளவு தூரம்?' என்று கேட்க இருந்தவனை அதற்குள் நர்த்தனாவின் ஆவேசக்குரல் அமைதியாக்கி விட்டது. அவள் பொரிந்தாள். "உன் மனசில என்னதான் நினைச்சிக்கிட்டிருக்கே? டீச்சருங்கன்னா கோழைங்க. மொசக்குட்டி மாதிரி சாதுவா இருப்பாங்கன்னு பாத்தியா? உனக்கும் எங்ககுடும்பத்துக்கும் என்ன ஒட்டுறவு இருக்கு? தேவையில்லாம என் பொண்ணு விஷயத்துல எதுக்காக தலையிடறே?''
இப்படி காரசாரமாய் நர்த்தனா கேட்டு முடிக்க, மோகனரங்கமோ கொஞ்சமும் வருத்தப்படாமல் பேசினான். "டீச்சர் நான் ரவுடி தான். எல்லா கெட்ட பழக்கமும் என்கிட்ட இருக்கு தான். ஆனா உங்க மேலயும் உங்க பொண்ணு மேலயும் எவ்வளவோ மரியாதை வெச்சிருக்கேன். இந்த வட்டாரத்துல இருக்கிற நிறைய இளந்தாரிப் பயலுக ஒரு தடவை உங்களைப்பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்போ நீங்களும் உங்க பொண்ணும் மட்டும் தான் தனியா இருக்கீங்கன்னும், அதனால நினைச்சதை சாதிக்கலாம்னும் பேசினதை கேட்டேன். அதுக்கப்புறம்தான் `மோகனா என் மொறைப்பொண்ணுன்னும் எவனாவது தப்பான நோக்கத்துல பார்த்தாலும் வெட்டுவேன்'னும் மிரட்டலா சொல்லி வெச்சேன். உயிருக்கு உத்தரவாதம் இல்லைன்னு தெரிஞ்சப்புறம் எந்தப் பயலுக்கு உங்க பொண்ணை தப்பான எண்ணத்தோட பார்க்க மனசு வரும்? உங்க குடும்ப பாதுகாப்புக்காகத்தான் அப்படியொரு பொய்யைச் சொன்னேன். நான் பொய் சொன்ன நோக்கம் தப்புன்னா என்னை எப்படி வேணும்னாலும் தண்டியுங்க டீச்சர்....''
அவன் சொல்லி முடிக்க, நர்த்தனா டீச்சர் கண்களில் பாசம் பளீரிட்டது. "நான் வரேன் தம்பி'' என்றாள், உரிமையாய்.