பூக்கின்ற பூக்கள்
அனைத்தும் எனக்காக
பூத்ததாய் ஒரு நினைப்பு
அள்ளி சூடினேன்
ஆசை தீர....
பார்க்கும் வண்ணங்கள் யாவும்
என் மேனிக்கு ஏற்றதாய் எண்ணி
எல்லா வண்ணங்களிலும்
ஆடை அணிந்தேன்
அளவில்லாமல்...
கைகள் குலுங்க
கண்ணாடி வளையல்கள்
கை வலித்து, கையை கிழித்து
காயப்படுத்தியும் காரணம்
இல்லாமல் விருப்பம்..
அணு அளவும் குறையாமல்....
கோவிலுக்கு சென்று...
நெற்றி நிறைய செந்தூரம்..
சந்தனம், குங்குமம்..திருநீர்
என்று நெற்றியில் கோலமிட்டு
குறும்பாய் கண்ணாடியில்
கண்சிமிட்டும் குழந்தையாய்
இருந்த எனக்கு திருமணம்
என்றார்கள்.....
ஆயிரம் கனவுகளுடன்
காலடி வைத்தேன்..
பேரிடியாய் ஒரே மாதத்தில்
எல்லாம் முடிந்து
மறைந்தும் போனான்
என்னவன்......
இன்றும் என் ஆசைகள்
குறையவில்லை...
பார்க்கும் பூக்கள்...
வண்ணவண்ண ஆடைகள்..
கண்ணை கூசும்
கண்ணாடி வளையல்கள்...
கோவிலில் தரும் குங்குமம்
மீது எல்லாம்.....
ஆனாலும் இவற்றை
எனக்கு தர மறுக்கும்
என்னை சூழ்ந்தவர்கள்...
காரணம்???
நான் விதவையாம்....
ஆம் என் ஆசைகளை
மண்ணில் புதைத்த
விதவை நான்....