இருப்பவை குறித்து
சிரத்தைக்கொள்ளாத
சராசரி மனிதத்தனம் குறித்து
அச்சம் கொள்கிறேன்..
உன் அன்பெனும்
வாழ்நாள் சிறை வேண்டிடும்
ஒரு வரம் வேண்டவே விழைகிறேன்..
சிறையும் வரமும் என
எதிர் பொருள்தரும்
சொல்முரண்கள் கொண்டு
என்ன சொல்லவிழைகிறாய் என
கேள்வி தொடுக்கிறாய்?
பரிமாணங்களில் குறைவிலாது பரிணாமங்களாய் அலரும்
சலித்துப்போகா
தீராக்காதலாகும் சாசுவதம் வேண்டுவேன் என்கின்றேன்
அதனால் என்ன?.
நீ எனை விடுத்து
நகரும்நிலை வரினும்
உனக்காயெனில் மகிழ்வேன் என
பதில் இயம்புகிறாய்.
இலக்கு நோக்கி நகருகையில்
நீ என்பது பிரார்த்தனை,
அதன் ஏற்ப்பென்பது
நிலைகள் தாண்டிய உனைநீங்கா வரம்
உன் அன்பு விட்டகலா
ஒரு புள்ளியில்
நிலையாகிடட்டும்
என் பயண இலக்கு...