மாங்கனி கண்ணதாசனின் க(ன்)னி காவியம், சில சரித்திரக் குறிப்புகளை வைத்துக் கொண்டு அவரால் படைக்கப்பட்ட இந்த காவியம் பெரும்பேர் பெற்றது..
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறைச்சென்ற பொழுதில் சிறையில் அவரால் படைக்கப்பட்ட காவியமே இது, இதன் இன்னொரு சுவாரஸ்யம் இந்தக் காவியத்தை எழுத கண்ணதாசன் எடுத்துக்கொண்டது வெறும் ஆறு நாட்கள், அதுவும் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமே அவர் எழுத அமருவாராம்..
இந்த காவியம் நாற்பது பாடல் கொண்டது, நாற்பது பாட்டிலும் நாற்பது சம்பவங்கள் நிறைந்திருக்கும்.. எழுதி இரண்டு வருடம் கழித்தே இந்தக் காவியம் புத்தகமானது..
மாங்கனியை நான் என் நடையில் என் வார்த்தைகளில் எழுத வெகு நாளாய் ஆசையுற்றிருந்தேன்.. கண்ணதாசனே இதைக் காவியமாக தான் எழுதி இருக்கிறார், மீண்டும் இதை தொடர்கவிதையாக எழுத என்னக் காரணம் ?
காரணம் இதுதான், நான் தமிழ் படிக்க ஆரம்பித்த காலம் முதல் காவியங்களில் கதைகளில் வெகு சில பாத்திரப் படைப்புகளை ரசித்திருக்கிறேன் கண்ணகி மாதவி மணிமேகலை பதுமை தமயந்தி என்பன சில அதில்..
கண்ணகி - மாதவி என்று வரும் போது எனக்கு இருவரையும் சமமாய் பிடிக்கும்..
அன்னைக் கண்ணகி எந்த அளவுக்கு கற்பில் சிறந்தவளோ அந்த அளவுக்கு மாதவியும் கற்புடையவளே..
அன்னைக் கண்ணகி பிறப்பால் நற்குலத்தாள், கன்னியியம் கற்பியம் என்று கட்டுப்பாடுகள் பல்துக்குள் வளர்ந்தவள்.. அதனால் அவள் வாழ்வின் நன்நெறிப்படி கணவன் இல்லாத தருணத்திலும் வாழ்ந்தாள்..
மாதவி அப்படி இல்லை கணிகையர் குலத்தில் பிறந்தவள், அவள் வாழ்வுக்கு எந்தக் கட்டுப்பாடுமில்லை, யாருடனும் எப்போதும் அவள் வாழ அவள் சமுதாயத்தில் இடமுண்டு வசதி உண்டு, இப்படி கட்டுப்பாடு இன்றி வாழ்கிறாள் என்று அவளை உலகம் இடித்தோ இழித்தோ பேசப்போவதில்லை இருந்தும் அவள் கற்புடையவளாய், கொண்ட கோவலனுக்கு மட்டும் மனைவியாய் வாழ்ந்தாளே அந்த கற்பு எனக்கு அவள்மீது அதிகமாய் மரியாதையைக் கூட்டியது..
இதைப் போல சில பாத்திரப் படைப்புகளை காதலித்திருக்கிறேன், அப்படி நான் காதலித்த முதல் பெண் மாங்கனி, இந்த பாத்திரப் படைப்பு கண்ணதாசனின் கற்பனைப் படைப்புதான் சரித்திரத்தில் இந்த பெயரோ ஆளோக் கிடையாது.. மாங்கனியின் காதல் தோற்ற போது அவளைவிட நான் அதிகமாய் அழுதேன்.. அதற்கு பிறகு நான் காதலித்த மற்றொரு பெண் கல்கி அருளிய சிவகாமி சபதத்தின் சிவமாகி.. என்னை அழவைத்த அடுத்த ஒரு நாயகி சிவகாமி இவளையும் நான் அதிகமாய் காதலித்தேன் இந்த கதையைப் படிக்கிறப் போது நரசிம்ம பல்லவனாய் நடமாடியவன் நாந்தான்..
மாங்கனிப் பற்றி சொல்லும் போது கண்ணதாசன் ஒரு இடத்தில் சொல்லியது இதுதான், இந்த காவியத்தைப் படைக்கும் போது என் உணர்ச்சி ஓட்டத்தை நான் கட்டுப்படுத்த விரும்பவில்லை.. அதனால் வார்த்தைகள் இலக்கணத்தின் வரையரைக்குள் வந்தமரவில்லை.. செந்நாப்புலவர்களே மன்னித்துவிடுங்கள் என்றுச் சொன்னார்..
காவியத்தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெரும் தலைவன்
என்று பாடிய என் காதல் கவிஞனாலேயே உணர்ச்சி ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், நானோ சிறுவன் உணர்ச்சிகள் கட்டவிழ்ந்து மாங்கனியைக் காதலித்ததில் தவறென்ன வியப்பென்ன இருக்கிறது..
அதனாலேயே இந்த காவியத்தை என் மொழிகளில் எழுத ஆசைப்பட்டேன், கண்ணதாசன் அளவுக்கு சுவையாய் தரமுடியாது என்றாலும் என் முழு திறனையும் முயற்சியையும் கொட்டி எழுத முயற்சிப்பேன்..
வழக்கம் போல் அன்பு உறவுகளின் ஊக்கமும் உற்சாக பின்னூட்டமும் கிடைக்கும் என்று நம்புகிறேன்..