பயறு வகைகள் உடலுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் அதில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. ஆகவே அவற்றை வைத்து, மதிய வேளையில் ஒரு குழம்பு செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதிலும் காராமணியை குழம்பு வைத்தால், அதன் சுவையே தனி தான்.
சரி, இப்போது அந்த காராமணியை வைத்து எப்படி குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
காராமணி - 1 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு (ஊற வைத்து கரைத்தது)
தக்காளி - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காராமணியை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்க வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வறுத்த காராமணியை போட்டு, அதில் 2 கப் தண்ணீர் விட்டு, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பிறகு மற்றொரு வாணயிலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, வரமிளகாய், சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் சாம்பார் பொடி, புளித் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி விட வேண்டும்.
பின்பு வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்
. இப்போது அருமையான சுவையில் காராமணி கறி ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.