ஒரு மதகுரு ஆலயத்தில் சொற்பொழிவாற்றினார். "மனிதர்களே நீங்கள் பாவிகளாக இருக்கிறீர்கள். உங்கள் பாவங்களுக்காக இறைவன் நிச்சயம் உங்களை தண்டிப்பான். இறைவனுடைய தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமானால் என்னிடம் ஒரு பாவமன்னிப்பு சீட்டு இருக்கிறது.ஒரு சீட்டு 50 ரூபா தான். அதை வாங்குங்கள்." என்று சொன்னார்.
50 ரூபாவில் பாவமன்னிப்பா? எத்தனை மலிவு?
கூட்டம் முண்டியடித்துக்கொண்டு பாவமன்னிப்பு சீட்டை வாங்கியது.
ஒருவன் மட்டும் இரண்டு சீட்டுக்கள் கேட்டான்.
மதகுரு " ஒரு சீட்டு போதுமே. யார் இந்த மடையன்? எதற்கு இரண்டு சீட்டுக்கள் கேட்கிறான்? நமக்கென்ன, பணம் கொடுக்கிறான்.வாங்கிக்கொள்வோம்" என்று நினைத்த படி அவனுக்கு இரண்டு சீட்டுக்கள் கொடுத்தார்.
நல்ல வியாபாரம். மதகுரு மகிழ்ச்சியுடன் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட்டார், அடுத்த ஊரில் கடை விரிக்க.
வழியில் காடு. திடீரென ஒருவன் கையில் கத்தியுடன் அவர் முன் தோன்றினான்,
"பணமூட்டையை கொடுத்துவிடு, இல்லாவிட்டால் கத்தியால் குத்திவிடுவேன்" என்று பயமுறுத்தினான்.
மதகுரு அதிர்ந்து போனார். "பாவி மதகுருவையே கொள்ளையடிக்கிறாயே இந்த பாவம் உன்னை சும்மாவிடாது"
என்று அலறினார்.
"அதைப்பற்றி நீ கவலைப்படாதே. இந்த பாவம் என்னை ஒன்றும் பண்ணாது" என்றான் அவன்.
அதெப்படி சாத்தியம்? என்று கேட்டார் மதகுரு.
"நான் இதற்காக பாவமன்னிப்பு சீட்டு வாங்கியிருக்கிறேன். அதுவும் உன்னிடமே வாங்கியிருக்கிறேன். ஒருவன் உன்னிடம் இரண்டு சீட்டுகள் வாங்கினானே,னினைவிருக்கிறதா? அது நான் தான். ஒரு சீட்டு செய்த பாவங்களுக்கு. இன்னொன்று செய்யப்போகும் பாவங்களுக்கு." என்றான் அவன்.
மதகுருவால் எதும் பேச முடியவில்லை. உள்ளுக்குள் தன்னையும், அவனையும் சபித்துக்கொண்டு பணமூட்டையை அவனிடம் கொடுத்தார்.
இது ஒரு கற்பனை கதை தான். ஆனால் எதார்த்தமானது.
ஒரு காலத்தில் மதங்கள் பாவம் செய்யாதீர்கள் பாவம் செய்தால் நிச்சயம் தண்டிக்கப்படுவீர்கள் என்று எச்சரித்தன. மனிதனும் பாவம் செய்ய பயப்பட்டான். காலம் செல்லச் செல்ல மதங்கள் தங்கள் மதங்களை பரப்புவதற்காக பலப்பல பாவமன்னிப்பு கொள்கைகளை பரப்ப ஆரம்பித்தன.
இதை நம்பு உன் பாவங்கள் பரிசுத்தம் ஆகும். இப்படி செய்தால் பாவங்கள் போய்விடும் என்று சொல்ல ஆரம்பித்தன.
மனிதர்களும் பார்த்தார்கள், காசா பணமா? வெறும் நம்பிக்கை தானே. பாவங்கள் போக எத்தனை இலகுவான வழி என அந்த மதங்களில் சேர ஆரம்பித்தார்கள்.
மதங்களும் பிரபலமடைந்தன. பாவங்களும் பெருக ஆரம்பித்தன.
வெறும் நம்மிக்கை எப்படி பாவங்களை போக்கும்?
சில மதங்கள் இந்த குளத்தில் மூழ்கு பாவம் போகும், இந்த கங்கையில் நீராடு பாவங்கள் சுத்தமாகும் என்று சொல்கிறது.
இது எப்படி சாத்தியமாகும்?
நாம் பாவம் செய்துவிட்டு கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்பதால் பாவங்கள் எப்படி இல்லாமல் போகும்? நாம் யாருக்கு பாவம் செய்தோமோ அவருக்கு பரிகாரம் செய்து அவரிடம் பாவமன்னிப்பு கேட்டால் தானே அந்த பாவதுக்கு பரிகாரம் கிடைக்கும்.
நான் எந்த மதத்தையும் இழிவுபடுத்த இதை கூறவில்லை. இறைவன் நிச்சயம் இருக்கிறான்.அவனை சம்மந்தப்படுத்தி உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளை பின்னற்ற வேண்டாம் என்பதற்கே இதை எழுதுகிறேன்.