Author Topic: ~ புறநானூறு ~  (Read 73275 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #255 on: April 04, 2014, 06:54:05 PM »
புறநானூறு, 256. (அகலிதாக வனைமோ!)
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: முதுபாலை.
==================================

கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!

அருஞ்சொற்பொருள்:-

கோ = குயவன்
சாகாடு = வண்டி
ஆரம் = ஆர்க்கால்
சுரம் = வழி
வியன் = பெரிய
மலர்தல் = விரிதல்
பொழில் = நிலம்
வனைதல் = செய்தல்

இதன் பொருள்:-

மண்பாண்டங்கள் செய்யும் குயவனே! மண்பாண்டங்கள் செய்யும் குயவனே! இப்பெரிய நிலத்தில், பெரிய இடங்களையுடைய பழைய ஊரின்கண் மண்பாண்டங்கள் செய்யும் குயவனே! வண்டியின் அச்சுடன் பொருந்திய ஆர்க்காலைப் பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல், என் கணவனுடன் பலவழிகளையும் கடந்து வந்த எனக்கும் சேர்த்து, அருள் கூர்ந்து பெரிய தாழி ஒன்றைச் செய்வாயோ!

பாடலின் பின்னணி:-

ஒரு பெண் தன் கணவனுடன் சென்றுகொண்டிருந்தாள். அவர்கள் சென்றுகொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப்படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #256 on: April 04, 2014, 06:54:58 PM »
புறநானூறு, 257. (செருப்பிடைச் சிறு பரல்!)
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வெட்சி.
துறை: உண்டாட்டு.
==================================

செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கண்
குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்
செவிஇறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
யார்கொலோ அளியன் தானே? தேரின்
ஊர்பெரிது இகந்தன்றும் இலனே; அரண்எனக்
காடுகைக் கொண்டன்றும் இலனே; காலைப்

புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்
கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்
சிலையின் மாற்றி யோனே; அவைதாம்
மிகப்பல ஆயினும் என்னாம்? எனைத்தும்
வெண்கோள் தோன்றாக் குழிசியொடு
நாள்உறை மத்தொலி கேளா தோனே

அருஞ்சொற்பொருள்:-

பரல் = கல்
அன்னன் = அத்தன்மையவன்
கணைக்கால் = திரண்ட கால்
அவ்வயிறு = திரண்ட கால்
பைங்கண் = குளிர்ந்த கண்
குச்சி = குச்சிப் புல்
குரூஉ = நிறம்
மோவாய் = தாடி
கவுள் = மயிர்
தேர்தல் = ஆராய்தல்
இகத்தல் = நீங்குதல்
புல்லார் = பகைவர்
நிரை = பசுக்கூட்டம்
சிலை = வில்
மாற்றுதல் = அழித்தல் (வெல்லுதல்)
கோள் = பரிவேடம் (வட்டம்)
குழிசி = பானை
உறைதல் = இறுகுதல்

இதன் பொருள்:-

செருப்புஇடை=====> காலை

செருப்பிடையே நுழைந்த சிறியகல், அணிந்தோர்க்குத் துன்பம் தருவதைப்போல், நம் தலைவன் பகைவர்க்குத் துன்பம் தருபவன். திரண்ட கால்களையும், அழகிய வயிற்றையும், அகன்ற மார்பையும், குளிர்ந்த கண்களையும், குச்சுப்புல் திரண்டு நிறைந்தது போன்ற, நிறம் பொருந்திய தாடியும், காதளவு தாழ்ந்த முடியும் உடையவனாய் வில்லுடன் கூடிய நம் தலைவன் இரங்கத்தக்கவன். ஆராய்ந்து பார்த்தால், இவன் ஊரைவிட்டு அதிகம் எங்கும் போகாதவன். பாதுகாப்பிற்காக காட்டுக்குள் இருப்பவனும் அல்லன். இன்றுகாலை,

புல்லார்=====> தோனே

தன் கையாற் குறித்து மெல்ல எண்ணி, ஆநிரைகளை மீட்க வந்தவர்களை வில்லால் வென்றான். ஆயினும் என்ன பயன்? அவன் வீட்டில், பானைகளில் பாலில்லை; தயிர் கடையும் ஒலியும் கேட்கவில்லை.

பாடலின் பின்னணி:-

இரு தலைவர்களிடையே பகை இருந்தது. ஒருவன் பசுக்களை மற்றொருவன் கவர்ந்தான். பசுக்களை இழந்தவன் அவைகளை மீட்க வந்தான். பசுக்களை கவர்ந்தவன் மீட்க வந்தவனை வென்று வெருட்டினான். வெற்றிபெற்ற தலைவன் தனக்கு உதவி செய்தவர்களோடு சேர்ந்து கள்ளுண்டு மகிழ்ந்தான். இவ்வாறு மகிழ்ச்சியோடு இருக்கும் கூட்டத்தில் ஒருவன், “நம் தலைவன் செருப்பில் பரல் போன்றவன். அவன் திரண்ட காலும், அகன்ற மார்பும், நல்ல மீசையும், காதளவு உள்ள தலைமுடியும், உயர்ந்த வில்லும், உடையவன். அவன் மிகவும் இரங்கத் தக்கவன். அவன் ஊரைவிட்டு எங்கும் செல்வதில்லை. அவன் பகைவர்களுக்கு அஞ்சி காடுகளை அரணாகக் கொள்வதில்லை. இன்று பகைவர்களுடைய பசுக்கள் இருக்கும் இடத்தை அறிந்து, அவற்றைக் கவர்வதற்கு ஏற்ற சூழ்ச்சியைச் செய்து, அவற்றைக் கவர்ந்தான்.” என்று வியந்து கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

”அவன் வீட்டில் பானைகளில் பாலில்லை; தயிர் கடையும் ஒலியும் கேட்கவில்லை” என்பதிலிருந்து, அவன் பசுக்களை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டான் என்று புலவர் கூறுவதாகத் தோன்றுகிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #257 on: April 22, 2014, 07:06:50 PM »
புறநானூறு, 258. (தொடுதல் ஓம்புமதி!)
பாடியவர்: உலோச்சனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வெட்சி.
துறை: உண்டாட்டு.
==================================

முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந்நிணப் பெருத்த
எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்,

புலம்புக் கனனே, புல்அணற் காளை;
ஒருமுறை உண்ணா அளவைப், பெருநிரை
ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் ; யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி முதுகள் சாடி;
ஆதரக் கழுமிய துகளன்
காய்தலும் உண்டுஅக் கள்வெய் யோனே

அருஞ்சொற்பொருள்:-

காரை = முள்ளுடன் கூடிய ஒரு செடி
பழன் = பழம்
ஏய்ப்ப = ஒப்ப
தெறித்தல் = முற்றுதல்
தேம் = தேன்
பச்சூன் = பசுமையான (நல்ல) ஊன்
நிறுத்த ஆயம் = கொண்டுவந்து நிறுத்திய ஆநிரை
பைந்நிணம் = பசுமையான தசை
தலைச் செல்லல் = எதிர்த்துச் செல்லுதல்
திமிர்தல் = பூசுதல்
புலம் = இடம்
அணல் = தாடி
தொடுதல் = உண்ணுதல்
துகள் = தூசி
காய்தல் = உலர்தல்

இதன் பொருள்:-

முட்கால்=====> திமிரிப்

அடிபக்கத்தில் முள்ளுடைய காரைச் செடியின் முதிர்ந்த பழத்தைப் போன்று நன்கு முதிர்ந்த கள்ளையுடைய கந்தாரம் என்னும் இடத்திலிருந்து தான் கொண்டுவந்து நிறுத்திய ஆநிரைகளுக்கு ஈடாகக் கள்ளை வாங்கிப் பருகி, வளமான ஊனைத் தின்று தன் எச்சில் கையை வில்லின் நாணில் துடைத்துவிட்டு,

புலம்புக்=====> வெய் யோனே

சிறிய தாடியையுடைய காளை போன்ற அந்த இளைஞன் இப்பொழுது வேறொரு இடத்திற்குச் சென்றிருக்கிறான். இங்குள்ளவர்கள் அனைவரும் ஒருமுறை கள் குடிப்பதற்குள், அவன் ஆநிரைகளைக் கவர்ந்துகொண்டு வந்துவிடுவான். அவன் கள்ளை விரும்புபவன்; வரும்பொழுது மிகுந்த தாகத்தோடு வருவான். அதனால், முதிர்ந்த கள் உள்ள சாடியிலிருந்து அனைவருக்கும் கள் கொடுப்பதைத் தவிர்த்து, அக்கள்ளை பாதுகாப்பாயாக.

பாடலின் பின்னணி:-

ஒருகால், உலோச்சனார் ஒரு தலைவனுடைய ஊருக்குச் சென்றார். அவன் பகைவருடைய நாட்டிற்குச் சென்று ஆநிரைகளை மீட்டு வந்ததைக் குறித்து அங்கு உண்டாட்டு நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன் மீண்டும் ஆநிரைகளைக் கவர்வதற்காக வேறொரு ஊருக்குச் சென்றிருந்தான். உலோச்சனார், கள் வழங்குபவனை நோக்கி, “முன்பு தலைவன் கந்தார நாட்டிற்குள் சென்று ஆநிரைகளைக் கொண்டுவந்து அவற்றை கள்விலைக்கு ஈடாக வழங்கினான். இன்று, மீண்டும் ஆநிரைகளைக் கவர்வதற்குச் சென்றுள்ளான். அவன் வரும்பொழுது கள் குடிக்கும் விருப்பத்தோடு வருவான். முதிர்ந்த கள் உள்ள சாடிஒன்றை அவனுக்காகப் பாதுகாத்து வைப்பாயாக.” என்று இப்பாடலில் கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #258 on: April 22, 2014, 07:08:29 PM »
புறநானூறு, 259. (புனை கழலோயே!)
பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: கரந்தை.
துறை: செருமலைதல். பசுக்களைக் கவர்ந்து சென்ற பகைவரை நெருங்கி அவர்கள் அஞ்சுமாறு போர் செய்தல்.
பிள்ளைப்பெயர்ச்சி. பறவைகள் குறுக்கே வந்ததால் சகுனம் சரியில்லாமல் இருந்தும், அதற்கு அஞ்சாது சென்று போர் செய்த வீரனுக்கு அரசன் கொடை புரிதல்.
==================================

ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்;
செல்லல்; செல்லல்; சிறக்கநின் உள்ளம்;
முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே

அருஞ்சொற்பொருள்:-

பெயர்தல் = போதல்
தலை கரந்து = தம்மை மறைத்துக்கொண்டு
ஒடுக்கம் = மறைந்திருத்தல்
செல்லல் = செல்லாதே
முருகு = தெய்வம், முருகன்
புலைத்தி = புலையனின் மனைவி
தாவுபு = தாவி
தெறித்தல் = பாய்தல்
ஆன் = பசு

இதன் பொருள்:-

இடுப்பில் விளங்கும் வாளையும், காலில் வீரக்கழலையும் அணிந்தவனே! பகைவர்கள் கவர்ந்த ஆநிரை, எருதுகளுடன் சென்றுகொண்டிருக்கின்றன. தெய்வத்தின் ஆற்றல் உடலில் புகுந்த புலைத்தியைப் போல் ஆநிரை துள்ளிக் குதித்துச் செல்கின்றன. அவற்றைக் கவர்ந்தவர்கள் அவற்றுடன் செல்லாது, இலைகளால் மூடப்பட்ட பெரிய காட்டுக்குள் ஒளிந்திருப்பதைக் காண்பாயாக. ஆகவே, இப்பொழுது அவற்றை மீட்கச் செல்லாதே. உன் முயற்சியில் நீ சிறப்பாக வெற்றி பெறுவாயாக.

பாடலின் பின்னணி:-

ஓரூரில், ஒரு தலைவனுடைய ஆநிரைகளை அவன் பகைவரின் வீரர்கள் கவர்ந்தனர். ஆநிரைகள் துள்ளிக் குதித்துச் செல்கின்றன. அவற்றைக் கவர்ந்த வீரர்கள் காட்டுக்குள் மறைந்திருக்கின்றனர். ஆநிரைகளை இழந்த தலைவன் அவற்றை மீட்பதற்கு ஆவலாக இருக்கிறான். அதைக் கண்ட புலவர் பெரும்பூதனார், “பகைவர்கள் காட்டுக்குள் மறைந்திருக்கின்றனர். ஆகவே, இப்பொழுது உன் ஆநிரைகளை மீட்கச் செல்ல வேண்டாம்.” என்று இப்பாடலில் அத்தலைவனுக்கு அறிவுறை கூறிகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #259 on: April 22, 2014, 07:10:37 PM »


புறநானூறு, 260. (கேண்மதி பாண!)
பாடியவர்: வடமோதங்கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: கரந்தை.
துறை: பாண்பாட்டு.
துறை: கையறு நிலை.
==================================

வளரத் தொடினும் வெளவுபு திரிந்து
விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்
தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்
உளரும் கூந்தல் நோக்கிக் களர
கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்

பசிபடு மருங்குலை கசிபுகை தொழாஅக்
காணலென் கொல்என வினவினை வரூஉம்
பாண! கேண்மதி யாணரது நிலையே
புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும் இரவுஎழுந்து
எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும்

கையுள போலும் கடிதுஅண் மையவே
முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்
நெடுநிரை தழீஇய மீளி யாளர்
விடுகணை நீத்தம் துடிபுணை யாக
வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து

வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வைஎயிற்று உய்ந்த மதியின் மறவர்
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையொடு வந்த உரைய னாகி
உரிகளை அரவ மானத் தானே

அரிதுசெல் உலகில் சென்றனன் உடம்பே
கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல
அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே;
உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே

மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே

அருஞ்சொற்பொருள்:-

வௌவுதல் = பற்றிக்கொள்ளுதல்
விளரி = இரங்கற் பண்
தொடை = யாழின் நரம்பு
தலைஇ = மேற்கொள்ளுதல்
உளர்தல் = தலைமயிர் ஆற்றுதல்
பசிபடு மருங்குல் = பசியுடைய வயிறு
கசிபு = இரங்கி
யாணர் = புதிய வருவாய், வளமை, செல்வம்
புரவு = கொடை
தொடுத்தல் = வைத்தல்
எவ்வம் = வருத்தம்
கடி = மிகுதி
தழீஇய = சூழ்ந்த
மீளி = வீரர்
நீத்தம் = வெள்ளம்
துடி = வலிமை
புணை = தெப்பம்
கோள் = கொள்ளப்பட்ட (பசு)
வை = கூர்மை
எயிறு = பல்
உரை = புகழ்
உரி = தோல்
ஆனது = அன்னது
ஆன = போல
கால் = காற்று
கம்பம் = அசைவு
வெறுக்கை = மிகுதி
படம் = திரைச் சீலை
மிசை = மேல்

இதன் பொருள்:-

வளர=====> வாழ்த்தி

ஓசை அதிகரிக்குமாறு இசைத்தாலும், நரம்புகள் திரிந்து, இரங்கற் பண்ணாகிய விளரிப் பண்ணே யாழிலிருந்து வருகிறது என்பதை நினைத்தால் நெஞ்சம் வருத்தம் அடைகிறது. வரும் வழியில், பெண் ஒருத்தி கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு எதிரில் வந்தாள். இவை தீய சகுனம் என்று நினைத்துக் களர்நிலத்தில் விளைந்த கள்ளிமரத்தின் நிழலில் இருந்த கடவுளை வாழ்த்தி,

பசிபடு=====> இரண்டும்

பசியோடு கூடிய வயிற்றோடு வருந்தித் தொழுது, “நான் காண வந்த தலைவனைக் காண முடியாதோ?” என்று கேட்கும் பாண! இந்த நாட்டின் செல்வத்தின் நிலையை நான் கூறுகிறேன். கேள்! தலைவன் நமக்கு அளித்தவற்றை வைத்து நாம் உண்ணலாம். அல்லது அவன் இல்லையே என்று எண்ணி வருந்தி, உயிர் வாழ்வதற்காக வேறு இடங்களுக்குச் சென்று இரக்கலாம். இவை இரண்டும்

கையுள=====> விடுத்து

நீ செய்யக்கூடிய செயல்கள். மிக அருகில் உள்ள ஊரில் தோன்றிய பூசலால், தலைவனுடைய ஊரில் இருந்த ஆநிரைகளைப் பகைவர்கள் கவர்ந்தனர். அவற்றை மீட்பதற்கு நம் தலைவன் சென்றான். ஆநிரைகளைக் கவர்ந்த மறவர், நம் தலைவன் மீது எய்த அம்பு வெள்ளத்தை தன் வலிமையை மட்டுமே துணையாகக் கொண்டு பகைவரைக் கொன்று,

வையகம்=====> மானத் தானே

ஆநிரைகளை, உலகம் வருந்துமாறு, தன்னை விழுங்கிய கூர்மையான பற்களையுடைய பாம்பின் வாயிலிருந்து திங்கள் மீண்டது போல் ஆநிரைகளை மீட்டுப் பெரும்புகழ் பெற்றான். ஆனால், தோலை உரித்துவிட்டுச் செல்லும் பாம்பு போல் அவன் மேலுலகம் சென்றான்

அரிதுசெல்=====> கல்மிசை யதுவே

அவன் உடல் காட்டாற்றின் அரிய கரையில், காற்றால் மோதி, அசைவோடு சாய்ந்த அம்பு ஏவும் இலக்குப்போல் அம்புகளால் துளைக்கப்பட்டு அங்கே வீழ்ந்தது. உயர்ந்த புகழ்பெற்ற நம் தலைவனின் பெயர், மென்மையான, அழகிய மயிலிறகு சூட்டப்பட்டு பிறருக்கு கிடைக்காத அரிய சிறிய இடத்தில் திரைச் சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட அழகான பந்தரின் கீழ் நடப்பட்ட கல்லின் மேலே பொறிக்கப்பட்டிருக்கிறது.

பாடலின் பின்னணி:-

ஒரு தலைவனின் ஆநிரைகளைப் பகைவர்கள் கவர்ந்து சென்றனர். அத்தலைவன், பகைவர்களை வென்று ஆநிரைகளை மீட்டு வந்தான். ஆனால், மீட்டு வரும்பொழுது அவன் பகைவர்களின் அம்புகளால் தாக்கப்பட்டான். அவன் தன்னுடைய ஊருக்கு வந்தவுடன் இறந்தான். அத்தலைவனைக் காண ஒருபாணன் வந்தான். அவன் வரும் வழியில் பல தீய சகுனங்களைக் கண்டான். ஆகவே, அவன் தலைவனைக் காண முடியாதோ என்று வருந்தினான். அவன் வருத்தத்தைக் கண்ட மற்றோர் பாணன், தலைவனைக் காண வந்த பாணனை நோக்கி, “ தலைவன் இறந்துவிட்டான். உனக்குத் தலைவன் அளித்த பொருளை வைத்து நீ வாழ்க. அல்லது வேறு புரவலரிடம் சென்று பொருள் பெறும் வழியைக் காண்க. தலைவனின் பெயர் நடுகல்லில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த நடுகல்லை வணங்கி வழிபட்டுச் செல்க.” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #260 on: April 22, 2014, 07:12:19 PM »


புறநானூறு, 261. (கழிகலம் மகடூஉப் போல!)
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: தெளிவாகத் தெரியவில்லை.
திணை: கரந்தை.
துறை: பாண்பாட்டு.
துறை: கையறு நிலை.
==================================

அந்தோ! எந்தை அடையாப் பேரில்
வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்
வெற்றுயாற்று அம்பியின் எற்று? அற்றுஆகக்
கண்டனென் மன்ற சோர்கஎன் கண்ணே;

வையங் காவலர் வளம்கெழு திருநகர்
மையல் யானை அயாவுயிர்த் தன்ன
நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்
பயந்தனை மன்னால் முன்னே; இனியே

பல்லா தழீஇய கல்லா வல்வில்
உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி
நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை
விரகுஅறி யாளர் மரபிற் சூட்ட
நிரைஇவண் தந்து நடுகல் ஆகிய

வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்
கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழிகல மகடூஉப் போல
புல்என் றனையால் பல்அணி இழந்தே

அருஞ்சொற்பொருள்:-

நறவு = மது
தண்டா = குறையாத
மண்டை = இரப்போர் பாத்திரம்
முரிவாய் = வளைவான இடம்
அம்பி = ஓடம்
எற்று = எத்தன்மைத்து
அற்று = அத்தன்மைத்து
திருநகர் = அழகிய அரண்மனை
மையல் = யானையின் மதம்
அயா உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல்
மை = ஆடு
ஓசை – ஓசையுடன் நெய்யில் வேகும் ஆட்டிறைச்சிக்கு அகுபெயராக வந்தது
புதுக்கண் = புதுமை (கண் – அசை)
செதுக்கு = வாடல்
செதுக்கண் = ஒளி மழுங்கிய கண்கள்
மன் – கழிவின்கண் வந்தது
ஆல் – அசை
பல்லா = பல்+ஆ = பல பசுக்கள்
தழீஇய = உள் அடக்கிக் கொண்டு
உழை = இடம்
கூகை = கோட்டான் (ஒரு வகை ஆந்தை)
ஆட்டி = அலைத்து
நாகு = இளம் பசுங் கன்று
விரகு = அறிவு
விடலை = தலைவன், வீரன்
மகடூஉ = மனைவி

இதன் பொருள்:-

அந்தோ=====> கண்ணே

ஐயோ! என் தலைவனின் பெரிய இல்லத்தின் கதவுகள் எப்பொழுதும் அடைக்கப்படாதவை. இரப்போரின் பாத்திரங்களில் வண்டுகள் மொய்க்கும் மது எப்பொழுதும் குறையாமல் இருக்கும். அங்குள்ள வளைந்த முற்றம், வந்தோர்க்குக் குறையாமல் அளிக்கும் அளவுக்கு மிகுந்த அளவில் சோறுடையதாக இருந்தது. எப்படி இருந்த அந்த இல்லம் இப்பொழுது நீரின்றி வற்றிய ஆற்றில் உள்ள ஓடம் போல் காட்சி அளிப்பதைக் கண்டேன். அதைக் கண்ட என் கண்கள் ஓளி இழக்கட்டும்.

வையங்=====> இனியே

முன்பு, உலகத்தைக் காக்கும் வேந்தருடைய செல்வம் மிக்க அழகிய அரண்மனையில் யானை பெருமூச்சு விடுவதைப் போன்ற ஓசையுடன் நெய்யில் வேகவைக்கப்பட்ட ஆட்டிறைச்சியை ஓளிமழுங்கிய கண்களுடன் வந்தவர்கள் எல்லாம் நிரம்ப உண்ணத் தந்தாய்; இப்பொழுது,

பல்லா=====> ஆகிய

பல பசுக்களின் கூட்டத்தை, வில்லைப் பயன்படுத்துவதை கற்கத் தேவையில்லாமல், இயற்கையாகவே வில்லைப் பயன்படுத்துவதில் வல்லவர்களான உன் பகைவர் கைக்கொண்டனர். அவர்கள், இறக்கப்போவதை அறிவிக்கும் வகையில் கூகைகள் தம் இனத்தைக் கூவி அழைத்தன. அவர்களை அழிப்பதற்கு இளம் பசுங் கன்றுகளின் முலை போன்ற தோற்றமுள்ள, மணமுள்ள கரந்தைப் பூவை, அறிவிற் சிறந்தோர் சூட்ட வேண்டிய முறைப்படி சூட்ட, பசுக்களைக் கவர்ந்தவர்களை அழித்தாய். இவ்வாறு, பசுக்களை மீட்டுவந்த தலைவன் இப்பொழுது இறந்து நடுகல்லாகிவிட்டதால்,

வென்வேல்=====> இழந்தே

அழுது, தலை மயிரைக் கொய்துகொண்டு, கைம்மை நோன்பை மேற்கொண்டு, வருத்தத்துடன், அணிகலன்களை இழந்த அவன் மனைவியைப் போல் அவன் அரண்மனை பொலிவிழந்து காணப்படுகிறது.

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஆவூர் மூலங் கிழார், ஒரு தலைவனைக் கண்டு பரிசில் பெற்றார். அவர், சிலகாலம் கழித்து மீண்டும் அவனைக் காணச் சென்றார். அவர் சென்ற பொழுது அவன் இறந்துவிட்டான். அவன் இல்லம் பொலிவிழந்து காணப்படுவதைக் கண்டு மனம் வருந்தி இப்பாடலை ஆவூர் மூலங் கிழார் இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

”கல்லா வல்வில்” என்பதில் ”வில்” என்பது வில்லேந்திய வீரரைக் குறிக்கிறது. ”கல்லா” என்பது, அவர்கள் வழிவழியாக வில்லைப் பயன்படுத்துவதில் திறமை மிகுந்தவர்களாகையால் அவர்கள் வில்லைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி பெறத் தேவையில்லை என்பதைக் குறிக்கிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #261 on: May 30, 2014, 01:47:02 PM »


புறநானூறு, 262. (தன்னினும் பெருஞ் சாயலரே!)
பாடியவர்: மதுரைப் பேராலவாயர்.
பாடப்பட்டோன்: தெளிவாகத் தெரியவில்லை.
திணை: வெட்சி.
துறை: உண்டாட்டு / தலைத் தோற்றம்.
==================================

நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;
பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்;
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று
நிரையோடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

அருஞ்சொற்பொருள்:-

நறவு = மது
தொடுதல் = இழிதல்
விடை = ஆடு
வீழ்த்தல் = விழச் செய்தல் (வெட்டுதல்)
பாசுவல் = பாசு+உவல்
பாசு = பசிய, உவல் = இலை
ஒன்னார் = பகைவர்
முருக்கி = முறித்து
என்னை = என்+ஐ= என் தலைவன்
உழையோர் = பக்கத்தில் உள்ளவர்கள்
சாயல் = இளைப்பு (சோர்வு)

இதன் பொருள்:-

மதுவைப் பிழியுங்கள்; ஆட்டை வெட்டுங்கள். பசிய இலைகளால் வேயப்பட்ட சிறிய கால்களுடைய பந்தரில் ஈரமுடைய புதுமணலைப் பரப்புங்கள்; பகைவரின் தூசிப்படையை அழித்துத் திரும்பிவரும் தனது படைக்குப் பின்னே நின்று, ஆநிரைகளுடன் வரும் என் தலைவனுக்குப் பக்கத்தில் துணையாக உள்ள மறவர்கள் அவனைவிட மிகவும் சோர்வுடன் இருப்பார்கள்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், மதுரைப் பேராலவாயர் தலைவன் ஒருவனைக் காணச் சென்றார். அப்பொழுது, அத்தலைவன் பகைவர் நாட்டிலிருந்து பசுக்களைக் கவர்ந்துவரச் சென்றிருந்தான். அவன் வரவுக்காக மதுரைப் பேராலவாயர் காத்திருந்தார். சிறிது நேரத்தில், தலைவன் தன் துணைமறவர்களுடனும், தான் கவர்ந்த பசுக்களுடனும் திரும்பி வந்தான். அங்குள்ள மக்கள் பெரும் ஆரவாரத்துடன் அவனை வரவேற்றனர். தலைவனின் வெற்றியைப் பாராட்டி அங்கே ஒரு உண்டாட்டு நடைபெற்றது. அந்த உண்டாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை, இப்பாடலில் மதுரைப் பேராலவாயர் கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #262 on: May 30, 2014, 01:47:57 PM »
புறநானூறு, 263. (களிற்றடி போன்ற பறை!)
பாடியவர்: தெரியவில்லை.
பாடப்பட்டோன்: தெரியவில்லை.
திணை: கரந்தை.
துறை: கையறு நிலை.
==================================

பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது
வண்டுமேம் படூஉமிவ் வறநிலை ஆறே
பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே

அருஞ்சொற்பொருள்:-

இரும் = பெரிய
சேறல் = செல்லல்
ஓம்புதல் = தவிர்த்தல்
வண்டர் = வீரர்
வறநிலை = வறண்ட தன்மை
கொல்புனல் = கரையை அரிக்கும் நீர்
விலங்குதல் = தடுத்தல்
கல் = நடுகல்

இதன் பொருள்:-

பெரிய யானையின் காலடி போலத் தோன்றும் ஒருகண்ணுடைய பறையையுடைய இரவலனே! நீ அந்த வழியாகச் சென்றால், அங்கே ஒரு நடுகல் இருக்கிறது. அதைத் தவறாமல் வழிபட்டுச் செல்க. அது “வண்டர்” என்னும் ஒருவகை வீரர்கள் மிகுதியாக உள்ள கொடிய வழி. அங்கே, பல ஆநிரைகளைக் கவர்வதற்கு வந்தவர் திரும்பி வந்து போரிட்டனர். போர்த்தொழிலைத் தவிர வேறு எதையும் கற்காத இளைய வீரர்கள் போரிலிருந்து நீங்கினார்கள். ஆனால், தலைவன், பகைவர்களின் வில்களிலிருந்து வந்த அம்புகள் அனைத்தையும், கரையை அரிக்கும் நீரைத் தடுக்கும் அணை போல் தடுத்தான். அவன் நடுகல் அங்கே உள்ளது.

பாடலின் பின்னணி:-

தலைவன் ஒருவன் ஆநிரைகளை மீட்டு வரும்வழியில் ஆநிரைகளைக் கவர்ந்தவர்களின் அம்புகளால் தாக்கப்பட்டு உயிர் துறந்தான். அவனுக்கு நடுகல் வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வழியே செல்லும் பாணன் ஒருவனை நோக்கி, “ நீ அந்த நடுகல்லை வழிபட்டுச் செல்வாயாக” என்று இப்பாடலில் புலவர் கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #263 on: May 30, 2014, 01:48:41 PM »
புறநானூறு, 264. (இன்றும் வருங்கொல்!)
பாடியவர்: உறையூர் இளம்பொன் வாணிகனார்.
பாடப்பட்டோன்: தெரியவில்லை..
திணை: கரந்தை.
துறை: கையறு நிலை.
==================================

பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும்; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே

அருஞ்சொற்பொருள்:-

பரல் = கல்
மருங்கு = பக்கம்
பதுக்கை = மேடு
மரல் = ஒருவகை நார் உள்ள மரம்
கண்ணி = மாலை
அணி = அழகு
பீலி = மயில் தோகை
இனி = இப்பொழுது
கறவை = பால் கொடுக்கும் பசு
நெடுந்தகை = பெரியோன் (தலைவன்)
கழிந்தமை = இறந்தது
கடும்பு சுற்றம்

இதன் பொருள்:-

கற்களுள்ள மேட்டுப்பக்கத்தின் அருகில், மரத்திலிருந்து பிரித்து எடுத்த நாரால் தொடுத்த சிவந்த பூக்களுடன் கூடிய மாலையையும் அழகிய மயில் தோகையையும் சூட்டி, அவன் பெயர் பொறித்துத் தலைவனுக்கு இப்பொழுது நடுகல் நட்டுவிட்டார்களே. கன்றுகளோடு பசுக்களையும் மீட்டு வந்த தலைவன் இறந்ததை அறியாது பாணர்கள் கூட்டம் இன்றும் அவனைக் காண வருமோ?

பாடலின் பின்னணி:-

ஒரு தலைவன், அவன் ஊரிலிருந்த பசுக்களைக் கவர்ந்து சென்ற பகைவர்களிடமிருந்து அவற்றை மீட்டு வரும்போது போரில் இறந்தான். அவன் பெயரையும் பெருமையையும் பொறித்த நடுகல்லை, மயில் தோகையையும் பூமாலையையும் சூட்டி அலங்கரித்தனர். அவன் உயிரோடிருந்த பொழுது, பாணர்களுக்குப் பெருமளவில் உதவி செய்தவன். “அவன் நடுகல்லாகியது பாணர்களுக்குத் தெரியுமோ? தெரியாதோ? அவன் இறந்த செய்தி தெரியாமல் பாணர் கூட்டம் இன்றும் அவனைக் காண வருமோ?” என்று இரங்கிப், புலவர் உறையூர் இளம்பொன் வாணிகனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #264 on: July 01, 2014, 08:49:34 PM »
புறநானூறு, 265. (வென்றியும் நின்னோடு செலவே!)
பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்.
திணை: கரந்தை.
துறை: கையறு நிலை.
==================================

ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை
ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
போந்தைஅம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்ஆ யினையே கடுமான் தோன்றல்!

வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும் விரிதார்க்
கடும்பகட்டு யானை வேந்தர்
ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே

அருஞ்சொற்பொருள்:-

நனி = மிக
இறந்த = கடந்த
பார் = நிலம், பாறை
முதிர்தல் = சூழ்தல்
பறந்தலை = பாலை நிலம், பாழிடம்
வேங்கை = வேங்கை மரம்
ஒள் = ஒளி
இணர் = பூங்கொத்து
நறுமை = மணம்
வீ = பூ
போந்தை = பனை
தோடு = இளம் குருத்து ஓலை
புனைதல் = அலங்கரித்தல், செய்தல்
பல்லான் = பல்+ஆன்
ஆன் = பசு
கோவலர் = இடையர்
படலை = மாலை
கல் = நடுகல்
கடு = விரைவு
மான் = குதிரை
தோன்றல் = தலைவன்
வான் = மழை, ஆகாயம்
ஏறு = இடி
புரை – ஓர் உவமை உருபு
தாள் = கால் அடி
தார் = மாலை
பகடு = வலிமை
கடு = விரைவு
வென்றி = வெற்றி
ஒடுங்கா வென்றி = குறையாத வெற்றி

இதன் பொருள்:-

ஊர்நனி=====> தோன்றல்

விரைந்து செல்லும் குதிரைகளையுடைய தலைவனே! ஊரிலிருந்து வெகு தொலைவில், பாறைகள் சூழ்ந்த பாழிடத்தில், ஓங்கி உயர்ந்த வேங்கை மரத்தின் ஒளிபொருந்திய பூங்கொத்துகளைப் பனங்குருத்துக்களோடு சேர்த்துத் தொடுத்த மாலையைப் பல பசுக்களையுடைய இடையர்கள் சூட்டி வழிபடும் நடுகல்லாயினாயே!

வான்ஏறு=====> செலவே

மழையுடன் தோன்றும் இடிபோன்ற வலிமையும், வண்மையும் உடைய உன் அடி நிழலில் வாழும் பரிசிலர்களின் செல்வம் மட்டுமல்லாமல் மலர்ந்த மலர்களாலாகிய மாலையணிந்த, விரைந்து செல்லும் வலிமையுடைய யானைகளையுடைய வேந்தர்களின் குறையாத வெற்றியும் உன் இறப்பால் உன்னுடன் மறைந்தனவே.

பாடலின் பின்னணி:-

தலைவன் ஒருவன் பரிசிலர்க்குப் பெருமளவில் உதவி செய்து அவர்களைப் பாதுகாத்துவந்தான். அவன், தன் வேந்தர்களுக்குத் துணையாகப் போர்புரிந்து அவர்களை வெற்றிபெறச் செய்தான். இவ்வாறு பரிசிலர்களைப் பாதுகாத்து, வேந்தர்களுக்கு உறுதுணையாக இருந்த, வண்மையும் வலிமையும் மிகுந்த தலைவன் இறந்து இப்பொழுது நடுகல்லாகிய நிலையைக் கண்டு மனங்கலங்கி சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #265 on: July 01, 2014, 08:50:30 PM »
புறநானூறு, 266. (அறிவுகெட நின்ற வறுமை!)
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடாநிலை.
==================================

பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்
கயங்களி முளியும் கோடை ஆயினும்,
புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
கதிர்கோட்டு நந்தின் சுரிமுக ஏற்றை
நாகுஇள வளையொடு பகல்மணம் புகூஉம்

நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்
வான்தோய் நீள்குடை, வயமான் சென்னி
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசாகு என்னும் பூசல்போல
வல்லே களைமதி அத்தை; உள்ளிய

விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
அறிவுகெட நின்ற நல்கூர் மையே

அருஞ்சொற்பொருள்:-

பயம் = பயன்
கெழு = பொருந்திய
மா = பெரிய
மழை = மேகம்
கயம் = குளம்
களி = குழைவு
முளிதல் = வேதல்
புழல் = துளை
அடை = இலை
கதிர் = ஒளிக்கதிர்
கோடு = கொம்பு
நத்து = நத்தை
சுரி = சுழற்சி (வளைவு)
ஏற்றை = ஏறு = ஆண் விலங்கு (ஆண் நத்தை)
நாகு = இளமை, பெண்மை
வளை = சங்கு
புகூஉம் = கூடும்
திகழ்தல் = விளங்குதல்
கழனி = வயல்
கெழு = பொருந்திய
விறல் = வெற்றி
வயம் = வலிமை
மான் = குதிரை
ஆசு = பற்றுக்கோடு
பூசல் = பலர் அறிகை
பெரிதொலித்தல்
வல் = விரைவு
மதி – அசை
அத்தை – அசை
உள்ளல் = நினைத்தல்
திருந்துதல் = ஒழுங்காதல்
புணர்தல் = சேர்தல்
நல்கூர்மை = வறுமை

இதன் பொருள்:-

பயங்கெழு=====> புகூஉம்

பயன் பொருந்திய பெரிய மேகம் மழை பெய்யாமல் இருப்பதால், குளங்களில் உள்ள குழம்பிய சேறு வெப்பமாய் இருக்கும் கோடைக் காலத்திலும் துளையுள்ள ஆம்பலின் அகன்ற இலையின் நிழலில் ஒளிக்கதிர் போன்ற கூர்மையான கொம்புகளையும் வளைந்த முகமும் உடைய ஆண் நத்தை இளம் பெண் சங்குடன் கூடும்

நீர்திகழ்=====> நல்கூர் மையே

நீர் விளங்கும் வயல்களுள்ள நாட்டையுடைய பெரிய வெற்றியுடையோய்! விண்ணைத் தொடும் நெடிய குடையும் வலிய குதிரையும் உடைய சென்னி! சான்றோர்கள் கூடியுள்ள அவையில் ஒருவன் சென்று, “ எனக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று ஆரவாரமாகக் கூறுவானாயின், அவர்கள் அவனுக்கு விரைந்து உதவி செய்வார்கள். அதைப் போல, என் வறுமையை நீ விரைவில் தீர்ப்பாயாக. என்னை நினைத்து வந்த விருந்தினரைக் கண்டதும் அவர்களுக்கு உதவ முடியாததால் ஒளிந்து வாழும் நன்மையில்லாத வாழ்க்கையையுடைய என் உடலில் ஐம்பொறிகளும் குறைவின்றி இருந்தாலும் என் வறுமை என் அறிவைக் கெடுக்கிறது.

பாடலின் பின்னணி:-

மிகவும் வறுமையில் வாடிய புலவர்களில் பெருங்குன்றூர் கிழாரும் ஒருவர். தன் வறுமைத் துன்பத்திலிருந்து விடுதலை பெற்று வளமான வாழ்க்கை வாழலாம் என்ற நோக்கத்தோடு அவர் சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைக் காணச் சென்றார். அவன் பெருங்குன்றூர் கிழாரின் புலமையைப் பாராட்டித் தன்னுடன் அவரைச் சிலகாலம் தங்க வைத்தான். அவர், தன் வறுமையை அவனுக்குப் பலமுறை குறிப்பாகக் கூறினார். ஆனால், சோழன் அவருக்குப் பரிசளிக்கவில்லை. முடிவாக, ஒருநாள், “அரசே, சான்றோர் அவையில் ஒருவன் சென்று தன் வறுமையைக் கூறி ஆதரவு கேட்டால், அவர்கள் அவனுக்கு விரைந்து உதவி செய்வார்கள். எனக்கு வேறு ஒரு குறையும் இல்லாவிட்டாலும், வறுமை மட்டும் என்னை வருத்துகிறது. விருந்தினரைக் கண்டால் அவர்களுக்கு ஒன்றும் அளிக்க முடியாததால் ஒளிந்து கொள்கிறேன். என் அறிவும் தடுமாற்றம் அடைகிறது.” என்று கூறினார். அதைக் கேட்ட சோழன் அவருக்குப் பரிசளித்து அவரை மகிழ்வித்தான். இப்பாடலில், பெருங்குன்றூர் கிழார் தன் வறுமையை சோழனுக்கு எடுத்துரைத்துத் தனக்குப் பரிசில் அளிக்குமாறு வேண்டுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #266 on: October 01, 2014, 10:24:31 PM »
புறநானூறு, 267/268 : கிடைக்கப்பெறவில்லை.

புறநானூறு, 269. (கருங்கை வாள் அதுவோ!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வெட்சி. வீரர் அரசனுடைய ஆணையைப் பெற்றும், பெறாமலும், பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து வருதல்.
துறை: உண்டாட்டு. வீரர் மதுவையுண்டு மனங்களித்தலைக் கூறுதல்.
==================================

குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்
பயிலாது அல்கிய பல்காழ் மாலை
மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்
புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்
ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை
உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்

பிழிமகிழ் வல்சி வேண்ட மற்றது
கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்திக்
கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின்
பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க்
கொடுஞ்சிறைக் குரூஉப்பருந்து ஆர்ப்பத்
தடிந்துமாறு பெயர்த்ததுஇக் கருங்கை வாளே

அருஞ்சொற்பொருள்:-

முகை = மலரும் பருவத்தரும்பு (மொட்டு)
அதிரல் = காட்டு மல்லிகைக் கொடி
பயில்தல் = நெருங்குதல்
அல்கிய = அமைந்த
காழ் = விதை
இரும் = பெரிய
மை = கரிய
பித்தை = குடுமி
புத்தகல் = புதிய அனன்ற கலம்
வெப்பர் = வெப்பமான மது (முதிர்ந்த மது)
பின்றை = பிறகு
உவலை = தழை
துடி = ஒரு வகைப் பறை
மகிழ் = மது
வல்சி = உணவு
கரந்தை = பசுக்களை மீட்டல்
பல்லான் = பல்+ஆன் = பல பசுக்கள்
தழீஇய = சூழ்ந்த
கொடுஞ்சிறை = வளைந்த சிறகு
குரூஉ = நிறம்
ஆர்த்தல் = ஒலித்தல்
தடிந்து = அழித்து
மை = வலிமை

இதன் பொருள்:-

குயில்வாய்=====> வந்தென

குயிலின் அலகு போன்ற கூர்மையான மொட்டுக்களையுடைய காட்டு மல்லிகைக் கொடியில் உள்ள பூக்களோடும், விதைகளோடும் நெருக்கமாகத் தொடுக்கப்படாத மாலையை கரிய பெரிய தலை முடியில் அழகுடன் சூடி, புதிய அகன்ற கலத்தில், புலியின் கண்போன்ற நிறத்தையுடைய மதுவை இரண்டுமுறை இங்கே இருந்து நீ உண்ட பின், பசிய இலைகளைக் கலந்து தொடுத்த மாலையை அணிந்த துடி கொட்டுபவன் அதைக் கொட்டி “போர் வந்தது” என்று அறிவித்தான். அதைக் கேட்டவுடன்

பிழிமகிழ்=====> வாளே

பிழிந்த மதுவாகிய உணவை உண்ணுமாறு உன்னை வேண்டியும், நீ அது வேண்டா என்று கூறி, மதுவை வாழ்த்தி, வாளை ஏந்திப், பசுக்களை மீட்பதற்கு வந்த வீரர்கள் மறைந்திருப்பதை அறிந்து, வளைந்த சிறகையும், ஒளிபொருந்திய நிறத்தையும் உடைய பருந்துகள் ஆரவாரிக்குமாறு அவர்களைக் கொன்றது வலிய உன் கையில் உள்ள இவ்வாள் தானே.

பாடலின் பின்னணி:-

ஒருதலைவன், பகைவருடைய ஆநிரைகளைக் கவர்வதற்குப் படை திரட்டினான். போருக்குப் போகுமுன் அங்கு ஒரு உண்டாட்டு நடைபெறுகிறது. அப்பொழுது, துடி என்னும் பறையை அடிப்பவன், அதை அடித்து, வீரர்களைப் போருக்குச் செல்லுமாறு அறிவிக்கிறான். வீரர்கள் அனைவர்க்கும் மீண்டும் மது வழங்கப்பட்டது. தலைவன் மது வேண்டாம் என்று கூறி, வாளைக் கொண்டு வருமாறு கூறினான். போரில் அவனை எதிர்த்தவர்களைக் கொன்று, தலைவன் ஆநிரைகளை வெற்றிகரமாகக் கவர்ந்து வந்தான். மீண்டும் உண்டாட்டு நடைபெற்றது. அதைக் கண்ட அவ்வையார், “முன்பு, நீ மது வேண்டா என்று கூறி வாளைக் கொண்டுவரச் சொல்லி, அந்த வாளோடு சென்று வெற்றி பெற்றாயே!” என்று அத்தலைவனை இப்பாடலில் பாராட்டுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #267 on: October 01, 2014, 10:29:49 PM »
புறநானூறு, 270. (ஆண்மையோன் திறன்!)
பாடியவர்: கழாத்தலையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: கரந்தை.
துறை: கையறு நிலை.

==================================

பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்
இரங்கு முரசின், இனம்சால் யானை
நிலந்தவ உருட்டிய நேமி யோரும்
சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே
நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச்

சிறுவர் தாயே! பேரிற் பெண்டே!
நோகோ யானே; நோக்குமதி நீயே;
மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை
இன்னிசை கேட்ட துன்னரும் மறவர்
வென்றிதரு வேட்கையர், மன்றம் கொண்மார்

பேரமர் உழந்த வெருவரு பறந்தலை
விழுநவி பாய்ந்த மரத்தின்
வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே

அருஞ்சொற்பொருள்:-

பன்மீன் = பல்+மீன்
மீன் = விண்மீன்
மாக = வானம், ஆகாயம், மேலிடம்
விசும்பு = ஆகாயம்
இமைக்கும் = ஒளிவிடும்
இரங்கல் = ஒலித்தல்
இனம் = கூட்டம்
சால் = நிறைவு, மிகுதி
தவ = மிக ( நீண்ட காலமாக)
நேமி = ஆட்சிச் சக்கரம்
சமம் = போர்
வேட்பு = விருப்பம்
நறுமை = நன்மை
விரை = மணம், மணமுள்ள பொருள்
ஓ, மதி – அசை நிலை
நுவலுதல் = சொல்லுதல்
துன்னுதல் = நெருங்குதல்
வெரு = அச்சம்
பறந்தலை = போர்க்களம்
நவி = கோடரி
மிசை = மேல்
திறம் = திறமை.

இதன் பொருள்:-

பன்மீன்=====> கொண்மார்

நறுமணப் பொருள்களைத் துறந்தமையால் நறுமணம் கமழாத, நரைத்த தலையையுடைய பெருங்குடிப் பெண்ணே! இளைய வீரனுக்குத் தாயே! பல விண்மீன்கள் ஒளிரும் உயர்ந்த வானத்தில் முழங்கும் முரசு கொட்டுவோரும், யானைக் கூட்டத்தைச் செலுத்துவோரும், நில உலகில் நெடுங்காலம் ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்தும் வேந்தரும் போர்க் களத்தில் ஒன்று கூடி அன்பால் வருந்தி நின்றனர். இங்கு நடந்ததை நினைத்து நான் வருந்துகிறேன். வீரர்களைப் போர்க்கழைக்கும் போர்ப்பறையின் இனிய ஓசையைக் கேட்ட, பகைவர்களால் நெருங்குதற்கரிய மறவர், வெற்றிபெறும் வேட்கையுடன் போர்க்களத்தைத் தமதாக்கிக் கொள்வதற்காகப்,

பேரமர்=====> திறத்தே

பெரும் போரைச் செய்த அச்சம்தரும் போர்க்களத்தில், பெரிய கோடரியால் வெட்டப்பட்டு விழுந்த மரம்போல் வாளின்மேல் விழுந்து கிடந்த, ஆண்மையுடைய உன் மகனின் ஆற்றலை நீயே பார்ப்பாயாக.

பாடலின் பின்னணி:-

ஓரூரில் இருந்த பசுக்களைப் பகைவர் கவர்ந்து சென்றனர். அதை மீட்பதற்கு அவ்வூர் வீரர்கள் கரந்தைப் பூச்சூடி போருக்குச் சென்றனர். அவ்வீரர்களில் ஒருவன் கோடரியால் வெட்டப்பட்டு வீழ்த்தப்பட்ட மரம் போல இறந்து விழுந்து கிடந்தான். அவன் விழுந்து கிடப்பதைச் சான்றோர் சூழ, வேந்தன் சென்று கண்டு வியந்து பாராட்டிக் கண்ணீர் வடித்தான். அதைக் கண்ட புலவர் கழாத்தலையார், அக்காட்சியை அவ்வீரனின் தாய்க்குக் கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

படைச் செருக்கு என்னும் அதிகாரத்தில், வேந்தனின் கண்களில் நீர் பெருகுமாறு வருந்துமளவுக்கு வீரத்தோடு போர் புரிந்து அப்போரில் இறக்கும் வாய்ப்பு ஒரு வீரனுக்குக் கிடைக்குமானால் அது கெஞ்சிக் கேட்டும் பெற்றுக் கொள்ளத் தக்க பெருமையுடையது என்ற கருத்தை,

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்க துடைத்து. (குறள் – 780)

என்ற குறளில் வள்ளுவர் கூறுகிறார். இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் வீரன் இறந்த பிறகு, வேந்தனும் அன்புடன் வருந்தினான் என்று புலவர் கழாத்தலைவர் கூறுவது வள்ளுவர் கருத்தோடு ஒப்பு நோக்கத் தக்கது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #268 on: October 01, 2014, 10:31:53 PM »
புறநானூறு, 271. (மைந்தன் மலைந்த மாறே!)
பாடியவர்: வெறிபாடிய காமக்காணியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: நொச்சி.
துறை: செருவிடை வீழ்தல்.
==================================

நீரறவு அறியா நிலமுதற் கலந்த
கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
மெல்இழை மகளிர் ஐதுஅகல் அல்குல்
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே
வெருவரு குருதியொடு மயங்கி உருவுகரந்து
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்
பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்,
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே

அருஞ்சொற்பொருள்:-

அறவு = அறுதல், தொலைதல்
குரல் = கொத்து
நொச்சி = ஒரு செடி
ஆர் = நிறைவு
குரூஉ = நிறம்
இழை = அணிகலன்கள்
ஐது = அழகிய
அல்குல் = இடை
தொடலை = மாலை
இனி = இப்பொழுது
வெரு = அச்சம்
குருதி = இரத்தம்
மயங்கி = கலந்து
கரத்தல் = மறைத்தல்
ஒறுவாய்ப்பட்டு = துண்டிக்கப்பட்டு
தெரியல் = மாலை
செத்து = கருதி
உகத்தல் = உயரப் பறத்தல்
புகல் = விருப்பம்
மைந்தன் = வீரன், ஆண்மகன்
மலைதல் = அணிதல்

இதன் பொருள்:-

முன்பு, நீர் குறையாத நிலத்தோடு ஒன்றி நிற்கும் கரிய பூங்கொத்துக்களையுடைய, கண்ணுக்கு இனிய நிறமுடைய நொச்சியின் தழையை, மெல்லிய அணிகலன்கள் அணிந்த அழகிய, பெண்கள் தம் அகன்ற இடையில் உடையாக அணிவதைக் கண்டோம். இப்பொழுது, நொச்சி மாலையை அணிந்து, மதிலைக் காக்கும், வீரத்தை விரும்பும் ஆண்மகன் ஒருவன் வெட்டப்பட்டுக் கிடக்கிறான். அவன் அணிந்திருந்த நொச்சி மாலை துண்டிக்கப்பட்டு, அச்சம்தரும் குருதியில் கலந்து, உருமாறிக் கிடக்கிறது. அதை ஊன்துண்டு என்று கருதிப் பருந்து ஒன்று கவர்ந்துகொண்டு உயரப் பறந்து சென்றதை இப்பொழுது யாம் கண்டோம்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், இரு அரசர்களிடையே போர் மூண்டது. ஒருவன் மற்றொருவனுடைய அரண்மனையை முற்றுகையிட்டான். முற்றுகையிடப்பட்ட அரண்மனையின் மதிலிடத்தே நின்று, நொச்சிப் பூவைச் சூடி வீரர்கள் அம்மதிலைக் காத்தனர். அப்பொழுது, ஒரு வீரனைப் பகைவர் வாளால் வெட்டி வீழ்த்தினர். வெட்டப்பட்டு வீழ்ந்த பொழுது, அவன் அணிந்திருந்த நொச்சி மாலை துண்டிக்கப்பட்டு அவனுடைய குருதியில் கலந்து உருமாறிக் கீழே கிடந்தது. அதை ஊன்துண்டு என்று கருதிப், பருந்து ஒன்று எடுத்துக்கொண்டு உயரப் பறந்து சென்றதைப் புலவர் வெறிபாடிய காமக்காணியார் கண்டார். அந்தக் காட்சியைக் கண்டதும், முன்பு ஒருமுறை இளம்பெண்கள் நொச்சித் தழையாலான உடையைத் தங்கள் இடையில் அணிந்திருந்ததைப் பார்த்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. இப்பாடலில், அவ்விரண்டு நிகழ்ச்சிகளையும் அவர் குறிப்பிடுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #269 on: October 01, 2014, 10:34:58 PM »


புறநானூறு, 272. (கிழமையும் நினதே!)
பாடியவர்: மோசி சாத்தனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: நொச்சி.
துறை: செருவிடை வீழ்தல்.
==================================

மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி,
போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
காதல் நன்மரம் நீமற் றிசினே;
கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;

காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்
ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே

அருஞ்சொற்பொருள்:-

துணர் = கொத்து
மா = கருமை
குரல் = கொத்து
போது = மலரும் பருவத்துள்ள அரும்பு
காதல் = அன்பு
கடி = காவல்
வியன்நகர் = பெரிய நகரம்
காண் = அழகு
தொடி = கைவளை,தோள்வலை
அல்குல் = இடை
புரிசை = மதில்
மாறு = பகை
பீடு = பெருமை
கெழு = பொருந்திய
சென்னி = தலை
கிழமை = உரிமை

இதன் பொருள்:-

மணிதுணர்=====> கிடத்தி

மணிகள் கொத்துக் கொத்தாய் அமைந்தாற் போன்ற கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியே! பூக்கள் மலரும் பலவிதமான மரங்களுள் நீதான் மிகுந்த அன்பிற்குரிய நல்ல மரம். காவலையுடைய பெரிய நகரில் அழகுடன் விளங்கிய வளையல் அணிந்த இளமகளிர் இடுப்பில் தழையுடையாக இருப்பாய்;

காப்புடை=====> நினதே

காவலுடைய மதிலில் நின்று பகைவர்களை அழிப்பதால், நகரைக் கைவிடாது காக்கும் வீரர்களின் பெருமைக்குரிய தலையில் மாலையாக அணியப்படும் உரிமையும் உன்னுடையதாகும்.

பாடலின் பின்னணி:-

பகைவர்களை எதிர்த்து, நொச்சிப் பூவைச் சூடிப் போரிட்ட வீரன் ஒருவன் அப்போரில் இறந்தான். அவன் அணிந்திருந்த நொச்சி மாலை அவனுடன் கிடந்தது. அதைக்கண்டு வருந்திய புலவர் சாத்தனார், நொச்சியின் தனிச் சிறப்பை நினைத்து இப்பாடலை இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

வீரர்களால் காக்கப்படுவது மட்டுமல்லாமல், வேறுபல பொறிகளும் காவலுக்காக மதில்களில் வைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பதற்காகப் புலவர் “காப்புடைப் புரிசை” என்று கூறுகிறார்.